கையில் இதமானச் சூட்டுடன் ஒரு கோப்பை காபி, என் தோள் மீது சாய்ந்திருக்கும் நீ, நாம் இருவரும் கண்டு ரசிக்க மேகம் மிதக்கும் நீலவானம்! இதைத் தாண்டி என் மனம் இப்போதெல்லாம் வேறு எந்த பெரிய விசயங்களுக்கும் ஆசைப்படுவதில்லை. என் நாட்களை இனிமையாக்கவும் இதமாக்கவும் நீ மட்டுமே போதும் என்று எண்ணுமளவுக்கு என்னை மயக்கி வைத்திருக்கிறாய் நீ! போலித்தனம் இல்லாத இயல்பான உன் அன்பில் மூழ்கிக் கரைய ஒவ்வொரு நாளும் ஆவல் கொள்கிறது என் இதயம்.
-பூபாலன்
காதலின் நீட்சியில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன பூபாலனுக்கும் வான்மதிக்கும். இந்நிலையில்தான் மீண்டும் லாக்டவுன் என்ற அறிவிப்பு வந்தது.
புலி வந்தேவிட்டது. இனி என்ன செய்வது எனப் பூபாலன் திகைத்துப் போனான். வான்மதிக்கு எந்தக் கவலையும் இல்லை. அவள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலையையும் ஆன்லைனில் படிப்பையும் தொடர்ந்தாள்.
“என்ன பண்ணுறதுனு தெரியல மதி. மார்ச் முழுக்க லாக் டவுன் இருக்கும்னு பேசிக்கிறாங்க. ஏப்ரல்ல எலக்சன் இருக்குறதால தளர்த்துவாங்கனு தோணுது. ஆனா அதுவரைக்கும் நான் என்ன பண்ணுறது?” என்றவனை எப்படி சமாதானம் செய்வதென அவளுக்கும் தெரியவில்லை.
அந்த பி.ஜி அறைக்குள்ளே அறைத்தோழர்களுடன் அடைந்து கிடப்பது அவனுக்கு நரகமாக இருந்தது. ஓடியே பழக்கப்பட்ட கால்களும், உழைத்தே பழக்கப்பட்ட உடலும் ஓய்வை வெறுத்தன. கேமராவோ தூசி படிந்து கிடந்தது. முன்பு போல இணையதளங்களில் புகைப்படம் விற்பனையாவதை வைத்து அவன் பி.ஜிக்குப் பணம் கட்டிக்கொண்டிருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கூடவே பிரபல தேசிய நாளிதழ் நடத்திய புகைப்படம் எடுக்கும் போட்டியில் வெற்றி பெற்றதற்காகக் கிடைத்த பரிசு தொகை கொஞ்சம் அதிகம். அதை ஸ்டூடியோ ஆரம்பிப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்தான் பூபாலன். இப்போது அதைச் செலவு செய்ய வேண்டிய சூழல்.
கடுமையான விதிமுறைகளின் காரணமாக அவனால் வான்மதியைச் சந்திக்கவும் முடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஏப்ரல் வரை பொறுத்துக்கொண்டவன் தேர்தலில் வாக்களிக்கக்கூட ஊருக்குச் செல்லவில்லை. அதன் பின்னர் தளர்வுகளுடனான லாக் டவுன் அமலுக்கு வந்ததும் ஈடன் மீண்டும் உற்சாகமானது.
அரசாங்கத்தின் விதிகளுட்பட்டுத் திருமணங்கள் குறைந்த உறவினர்களுடன் நடைபெற பூபாலனும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான். இருப்பினும் முன்பு போல அதிகளவுக்கு ஆஃபர்கள் வருவதில்லை.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல கிடைத்த வாய்ப்பை வைத்துச் சமாளித்தார்கள் ஈடனும் அதன் ஊழியர்களான புகைப்படக் கலைஞர்களும்.
இருப்பினும் இரண்டு மாதங்களாக பூபாலனின் சேமிப்பு கரைந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த அழுத்தமானச் சூழலுக்கு நடுவே அவனுக்குக் கிடைத்த ஒரே ஒரு இதமான ஆறுதல் வான்மதி மட்டுமே! அவளையும் பார்த்து நாட்களாகிவிட்டது. படிப்பு, வேலை என்று பிசியாக இருப்பவளோடு மொபைலில் வீடியோ மூலமாக உரையாடுவதோடு சரி.
அது என்னவோ அன்று அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது பூபாலனுக்கு. அதே நேரம் வான்மதிக்குமே அவனை நேரில் சந்தித்தால் தேவலை என்ற எண்ணமே.
ஆனால் தேவையில்லாமல் எங்கும் செல்லவும் முடியாது. போக்குவரத்து காவலர்களுக்குப் பதில் சொல்லி மாளாது.
யோசனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு காய்கறி ட்ரக் வரும் சத்தம் கேட்டதும் பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள்.
காய்கறிகள் சுத்தமாகக் காலி. அவள் ஒருத்திக்குத்தான் என்பதால் குறைவாகவே வாங்குவாள் வான்மதி. அவசரமாகக் காய்கறி கூடையை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கினாள்.
தெருவில் மக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள். வரிசை நகர்ந்து அவளது முறை வந்தது.
“தக்காளி, கேரட், பீன்ஸ் மட்டும் போதும்ணா”
ட்ரக்கில் இருந்த நபரிடம் கூறிவிட்டு ஜிபே மூலம் பணம் செலுத்தினாள் வான்மதி.
மாஸ்க் அணிந்திருந்ததால் கண்கள் மட்டுமே முகத்தின் அடையாளமாகத் தெரிந்தன. பெருந்தொற்று பயத்தால் எங்கு நோக்கினும் மாஸ்க் அணிந்த முகங்களே!
ஒரு வாரத்துக்கானக் காய்கறிகளை வாங்கிக்கொண்டவள் கிளம்ப எத்தனிக்கையில் யாரோ அவளது கூடையில் உருளைக்கிழங்கு நிரம்பிய ப்ளாஸ்டிக் பாக்கெட்டை வைத்தார்கள்.
“நான் உருளைக்கிழங்கு வாங்கலங்க” என்று மறுத்தவளின் கையை அந்நபர் பற்றவும் எரிச்சலுடன் நிமிர்ந்தவள் அந்நபர் யாரென்பதை மாஸ்க் அணிந்திருந்தபோதும் கண்டுகொண்டாள்.
“நீங்க எப்பிடி இங்க வந்திங்க?” என்று ஆச்சரியமாய்க் கேட்டாள்.

“காய்கறி கொண்டு வர்ற வண்டி என்னோட பி.ஜி இருக்குற ஏரியால இருந்துதான் கிளம்புச்சு. எங்க போகுதுனு கேட்டப்ப இந்த ஏரியானு சொன்னாங்க. உன்னைப் பாத்து நாளாச்சுல்ல. அதான் இவங்க கூட வண்டில தொத்திக்கிட்டு வந்தேன்” என்றவாறு காய்கறிகள் வைத்திருந்த பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான் பூபாலன்.
பெருந்தொற்றினால் முழு அடைப்பில் நாடே முடங்கியிருந்த நேரம். மக்களுக்குத் தேவையான அன்றாடப் பொருட்களானக் காய்கறிகள், பால் போன்றவற்றை சின்ன சின்ன வண்டிகள் மூலம் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதற்காக சம்பந்தப்பட்ட கடைக்காரர்/வியாபாரி உள்ளாட்சி அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும். இந்த வண்டிகள் குறிப்பிட்ட மணி நேரத்தில் மட்டுமே வரும்.
அதில் ஒரு வண்டியில்தான் பூபாலன் கெஞ்சிக் கூத்தாடி ஏறி வந்திருந்தான் வான்மதியைப் பார்ப்பதற்காக. தன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்தவனுக்கு உருளைக்கிழங்கு வாங்கியதால் தேவையற்ற பணச்செலவு என்று யோசித்தாள் வான்மதி.
“எதுக்கு வீண்செலவு செய்றிங்க பாலா? உருளைக்கிழங்கு வேண்டாம்” என்றவளுக்குப் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களில் புகைப்படக்கலையும் ஒன்று என்பது தெரியாதா என்ன?
“உனக்குப் பிடிக்கும்ல. உருளைக்கிழங்கு பொடிமாஸ், ஆலு பராத்தா எல்லாம் உன் ஃபேவரைட்ல. வாங்கிக்க”
“அதில்ல… நீங்க செலவுக்கு…”
“ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னைக்கு நீ எனக்குச் சமைச்சுப் போட்டு இந்த அமவுண்டை டேலி பண்ணிடு”
அவளுக்கும் இதில் சம்மதமே!
அவள் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்ததுமே நல்லதொரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு ஃப்ளாட் தேடித் தங்கிக்கொண்டது எவ்வளவு நல்லதென இப்போது புரிந்தது. பகவதிக்கு மானசீகமாக நன்றி கூறினாள்.
பூபாலன் அங்கே வருவதிலோ அவள் சமைத்துக் கொடுப்பதிலோ எந்தச் சிக்கலுமில்லை. ஆட்சேபனை தெரிவிக்க ஆளில்லாத ஊர் என்பதால் இருவருக்கும் கூடுதல் தைரியம் வேறு.
“தம்பி வர்றிங்களா?”
காய்கறி வைத்திருந்த ட்ரக் வண்டிக்காரர் பூபாலனிடம் கேட்டார்.
“நீங்க கிளம்புங்கண்ணா! என்னை உங்க கூட கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ்” என்று அவரிடம் கையசைத்து விடைபெற்றான்.
இருவரும் சமூக இடைவெளி விட்டுப் பொருட்கள் வாங்க நிற்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து அப்பார்ட்மெண்டுக்குக் கிளம்பினார்கள்.
“லாக் டவுன் எப்ப முடியும்னு இருக்கு மதி. போட்டோகிராஃபி ஆபர் குறைஞ்சிக்கிட்டே வருது”
“அச்சோ! அப்ப வீட்டுக்கு எப்பிடி பணம் அனுப்புறிங்க?”
“சேவிங்ஸ்ல இருந்து எடுத்துக்கச் சொல்லிருக்கேன்”
“உங்க செலவுக்கு?”
“ப்ச்”
அலட்சியமாய் உச்சுக் கொட்டியவனின் நிலை அந்நேரத்தில் வான்மதியை வருத்தத்தில் ஆழ்த்தியது என்னவோ உண்மை!
இருவரும் ஃப்ளாட்டுக்குள் வந்ததும் காய்கறிப்பையை டீபாயில் வைத்துவிட்டு ஆசுவாசமாகச் சோபாவில் சரிந்து அமர்ந்தான் அவன். வான்மதிக்கு அவன் உரிமையாக அங்கே இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.
“இருங்க காபி கொண்டு வர்றேன்” என்று கிளம்ப எத்தனித்தவளின் கையைப் பற்றி இழுத்துத் தன்னருகே அமர வைத்துக்கொண்டான்.
“காபி குடிக்கவா நான் இங்க வந்தேன்?” மந்தகாசப்புன்னகையோடு அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு அனைத்துமே மறந்து போகுமளவுக்கு மயக்கம்.

இரு முகங்களின் அண்மை அடுத்து நடைபெறப்போவதென்ன என்பதை இருவருக்கும் புரியவைத்தது. நாசிகள் இடித்தப் பிற்பாடு சுதாரித்து விலகிவிட்டாள் வான்மதி.
தன்னிடம் கொடுத்தச் சாக்லேட்டைப் பிடுங்கிய குழந்தை போல் முகம் சுருக்கினான் பூபாலன்.
“கொன்னுடுவேன் உங்களை” என்றவள் காய்கறிக்கூடையை அவன் கையில் திணித்தாள்.
“என் கூட வந்து ஃப்ரிட்ஜ்ல அடுக்கி வைங்க. நான் நம்ம ரெண்டு பேருக்கும் காபி போடுறேன்”
“நல்ல ரொமாண்டிக் மொமண்டை மிஸ் பண்ணிட்டோமேனு அப்புறமா வருத்தப்படக்கூடாது மதி” காரியக்காரனாகச் சொன்னவனின் முதுகில் கை வைத்துச் சமையலறை நோக்கி தள்ளிச் சென்றாள் வான்மதி.
காய்கறிகள் அதிகமில்லை. அவன் அடுக்கி வைக்கவும் பால் காயவும் சரியாக இருந்தது.
“இன்ஸ்டென்ட் காபிதான் பாலா” என்றபடி கோப்பையை அவன் கையில் கொடுத்தவள் தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
பின்னர் என்ன? வெகு எளிமையாக ஒரு ‘காபி டேட்’ அந்த ஃப்ளாட் பால்கனியில் நடந்தேறியது.

காதலிப்பவர்களுடன் நேரத்தைச் செலவளிப்பதற்காகப் பணம் செலவளிக்கவேண்டும், ஆடம்பரமான இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.
இது போல சின்ன சின்ன சந்தோசங்கள் சாதாரணத் தருணங்களைக் கூட அற்புதமாக்கிவிடுகின்றன!
“நீங்க குளிச்சிட்டு வாங்க!”
“எதே? நான் வேற ட்ரஸ் கொண்டு வரல”
“அதெல்லாம் நான் வாங்கி வச்சிருக்கேன். நீங்க குளிங்க”
“எப்பிடிடி?” ஆச்சரியமாகக் கேட்டவனிடம் அமர்த்தலாகப் புன்னகைத்தாள் வான்மதி.
அவனுக்காக வாங்கிய உடைகளை எடுத்துக்கொடுத்தாள்.
பூபாலன் குளியலறைக்குள் போனதும் வான்மதி காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். இந்நேரத்தில் அவளது அன்னையிடமிருந்து வீடியோ கால் வந்தது.
சமையல் மேடை மீது டேபை வைத்துக்கொண்டு அன்னையிடம் பேசிக்கொண்டே காய்கறியை வெட்ட ஆரம்பித்தாள்.
“ட்ரெயின் எல்லாம் ஓடுதே வானும்மா. நீ ஒரு தடவை இங்க வந்தா என்ன?”
“ப்ச்! எனக்குப் பயமா இருக்குமா” சிணுங்கியவளுக்குப் பயம் கொரானாவைப் பற்றி அல்ல. எங்கே ஊருக்குப் போனால், அன்னை மீண்டும் சென்னைக்கு அனுப்பமாட்டாரோ என்பதில்தான். அப்படி நடந்துவிட்டால் அவள் எப்படி பூபாலனைச் சந்திக்க முடியும்? அவர்களின் காதல் என்னவாகும்?
“என்ன பயம்? நான் சொன்ன மாதிரி வேக்சின் போட்டுட்டல்ல? அப்புறம் என்ன?”
“போட்டேன்! இருந்தாலும்…”
அன்னையும் மகளும் உரையாடிக்கொண்டிருக்கையில் நரேந்திரனும் வந்து சேர, தொடுதிரையில் தந்தையைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
“வானும்மா என்ன பண்ணிட்டிருக்க?”
“சமையலுக்குக் காய்கறி கட் பண்ணிட்டிருக்கேன்பா”
பேச்சு சுவாரசியத்தில் பூபாலன் குளிக்கப் போனதை அவள் மறந்துவிட குளித்து அவள் தனக்காக எடுத்துக் கொடுத்த ஆடையை அணிந்து சமையலறைக்கு வந்தவனோ வெறுமெனே உம் கொட்டிப் பேசிக்கொண்டிருந்தவள் யாரிடம் பேசுகிறாள் என அறியாமல் பின்னே இருந்து அணைத்துக்கொண்டான்.

திடுமென யரோ ஒரு ஆடவன் மகளை அணைப்பதை தொடுதிரையில் பார்த்தால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்? அதைவிட மோசமான நிலை வான்மதியுடையது.
பூபாலன் அணைத்ததோடு விடாமல் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட கண்களை இறுக மூடிக்கொண்டாள் பயத்தில்.
“இந்த ட்ரஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவன் அப்போதுதான் சமையல் மேடை மீது அமர்ந்திருந்த டேபைக் கண்டான். அதில் அதிர்ச்சியோடு தெரிந்த நரேந்திரன் பகவதியின் முகங்களைப் பார்த்த பின்னர் சட்டென வான்மதியிடமிருந்து விலகி நின்றான் அவன்.
வான்மதி திக்கித் திணறி “ப்பா!” என்று பேச்சை ஆரம்பிக்க திரையிலோ பகவதிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கியது.
‘இவளைச் சென்னைக்கு வேலை செய்ய அனுப்பிவைத்தால் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறாள்? பெண்பிள்ளைக்கு அதிகமாகச் செல்லம் கொடுக்காதே என்று அனைவரும் சொல்ல சொல்ல அதைக் காதில் கேட்காமல் தங்கத்தட்டில் வைத்து தாங்கியதற்கானப் பலன் இதுதானா? என் வளர்ப்பு தவறாகிப் போனதா?’
நரேந்திரனுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. மனைவி இப்போது ஆத்திரத்தில் எதையும் பேசிவைத்தால் உடையப்போவது மகளின் மனம் என்பதால் “அப்புறமா பேசிக்கலாம் வானும்மா” என்று அழைப்பைத் துண்டித்தார்.
வான்மதி பயத்தில் காய்கறி நறுக்க கையில் வைத்திருந்த கத்தியைக் கீழே போட்டுவிட்டாள்.
பூபாலனோ “ஐ அம் சாரி மதி. நீ பேசிட்டிருந்தது கேட்டுச்சு. ஆனா உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசுறனு தெரியாம…”
“எல்லாம் போச்சு பாலா. அம்மா என்னைத் தொலைச்சுக் கட்டிருவாங்க. அவங்க முகத்துல தெரிஞ்ச கோவத்தைப் பாத்தா, எனக்குப் பயமா இருக்கு”
வான்மதி அழாதக் குறையாகப் புலம்ப பூபாலன் அவளுக்கு ஆறுதல் கூறினான். அவனுக்குத் தன்மீதே கோபம் வந்தது. பின்னர் யோசித்துப் பார்த்தால் வான்மதியின் பெற்றோருக்குத் தங்களது காதல் விவகாரம் தெரிந்தது சரியே எனத் தோன்றியது.
என்றோ ஒருநாள் அவர்களிடம் தெரிவிக்கப்போகிற விசயம்தானே! இப்போது தெரிந்ததால் அவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அவர்களது அதிர்ச்சியைப் போக்கித் தங்களது காதலைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது தனது கடமையெனத் தோன்றியது.
விசும்பிய வான்மதியைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டவன் “நான் உன் கூட இருக்குறப்ப என்ன பயம்? நான் அவங்க கிட்ட பேசிப் புரியவைக்குறேன் மதி” என்றான் அமைதியாக.
“ஆனா… அம்மா.. அவங்க கண்ணுல தெரிஞ்ச கோவம்… நான் அவங்களை ஏமாத்திட்டேன்… அவங்க வளர்ப்பை…”

இந்த இடத்தில் பூபாலனின் முகம் இறுகியது. காதல் திருமணத்தைத் திறந்து மனதுடன் வரவேற்கும் அளவுக்கு இன்னும் தங்களது வட்டாரத்தில் நாகரிகம் முற்றிவிடவில்லை என்பதால் வான்மதி பயந்திருக்கிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது. அதனால் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டான்.
“நாம ரெண்டு பேரும் நம்ம வீட்டுப் பெரியவங்க கிட்ட பேசி நம்ம காதலைப் புரியவைக்கணும் மதி. நீ எனக்குத் துணையா இருப்பல்ல?”
தலையை நிமிர்த்திப் பார்த்தவள் “எப்பவும் இருப்பேன்” என்று சொன்னவளாக அவனை அணைத்துக்கொண்டாள். அவளது மனம் கொண்ட பயத்துக்குப் பூபாலனின் மார்புக்கூடு ஒன்றே பாதுகாப்பாகத் தோன்றியது.
அதே நேரம் முத்தரசி இல்லத்தில் பகவதி கொதித்துப் போயிருந்தார்.
“எவ்ளோ அருமை பெருமையா வளத்தேன்? எந்த இடத்துல நான் தப்பு பண்ணுனேன்? கண்டவனை ஃப்ளாட்டுக்குக் கூப்பிடுற அளவுக்கு மெட்ராஸ் அவளை மாத்திடுச்சு பாருங்க. இனியும் லேட் பண்ணக்கூடாது. என் ஒன்னுவிட்ட அண்ணா பாரீஸ்ல இருக்கார்ல. இப்பவே அவர் கிட்ட பேசுவோம். அவர் மகனுக்கும் வானுக்கும் கல்யாணத்தைப் பேசி முடிச்சிடுவோம். இல்லனா நம்ம மானம் போயிடும்”

நரேந்திரன்தான் அவரை அமைதிப்படுத்தினார். இது தாங்கள் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவல்ல என்று மனைவியிடம் பொறுமையாகச் சொல்லி புரியவைக்க முயன்றார்.
பகவதி அவரது பேச்சைக் காதில் போட்டுக்கொண்டால்தானே?
“கல்யாணம் பத்தி முடிவெடுக்குற உரிமை நமக்குத்தான் இருக்கு. அவளுக்கு இப்ப கண்ணுக்குக் குளிர்ச்சியா தெரியுறது எல்லாம் நல்லதா தோணுற வயசு”
“கொஞ்சம் அமைதியா இரு பகவதி. வானும்மா கால் பண்ணுறா”
நரேந்திரனின் மொபைல் சிணுங்கலுடன் வான்மதியின் பெயரைக் காட்டியது.
“நான் பேசுறேன் அவ கிட்ட. செய்யுறதையும் செஞ்சுட்டு உங்க மூலமா காரியம் சாதிக்கக் கால் பண்ணுறா”
பகவதியை அமைதியாக்கிவிட்டு மகளிடம் பேச ஆரம்பித்தார் நரேந்திரன். ஆனால் இணைப்பில் இருந்தவனோ பூபாலன்.
“மதியைப் பத்தி தப்பா எதுவும் யோசிக்காதிங்க சார். நாங்க எல்லா விசயத்தையும் உங்க கிட்ட நேர்ல வந்து சொல்லுறோம். இப்போதைக்கு என்னால உங்க கிட்ட சொல்ல முடிஞ்ச ஒரே விசயம்., நான் மதியைக் காதலிக்குறேன். எனக்கு வேற எந்தத் தப்பான எண்ணமும் இல்ல”
அந்தப் பேச்சு அலைபாய்ந்த நரேந்திரனை அமைதிக்குள்ளாக்கியது. இருப்பினும் பெண்ணைப் பெற்றவராயிற்றே! அவனது குடும்பம் பற்றி விசாரித்தார். பூபாலனும் பதில் சொல்ல ஓரளவுக்குத் தெளிந்த நரேந்திரன் அவனிடம் பேசிய பிற்பாடு மகேந்திரனிடம் ரங்கநல்லூரிலிருக்கும் குணசேகரனின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும்படி கூறிவிட்டார்.
அங்கே கனன்று கொண்டே இருந்தவர் பகவதி மட்டுமே! அவரது கனன்ற இதயத்தின் தீப்பொறிதான் பின்னாட்களில் வான்மதி – பூபாலனின் திருமண வாழ்க்கையைப் பற்றி எரியவைக்கப் போகிறது.
PDF திருடாதீர்கள்!