எதையும் உணர்வுப்பூர்வமாகச் சிந்திக்கும் மனம் பெண்களுடையது. தர்க்கரீதியான வாதங்களை விட உணர்வுப்பூர்வமான உரையாடல்களைத்தான் அவர்கள் விரும்புவார்கள். அதிலும் நேசித்தவர்களிடம் அவர்கள் வைக்கும் அன்புக்கும் பரிவுக்கும் காரணமே தேவையில்லை. ஆனால் ஏனோ ஆண்களின் மனமும் மூளையும் அப்படி கட்டமைக்கப்படவில்லை என்பேன் நான். அனைத்து ஆண்களும் தவறும் இடம் உறவுகளைப் பேலன்ஸ் செய்வது. எந்தப் பக்கத்துக்கும் பாதிப்பு வராமல் யாருடைய மனமும் வருந்தாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் யுக்தி அவ்வளவு எளிதில் எந்த ஆணுக்கும் தெரிவதில்லை.
-பூபாலன்
“உன்னைத் தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே!”
மெதுவானச் சப்தத்தில் ஒலித்தத் திரைப்படப் பாடலுக்கு வரவேற்புக்காக வாங்கிய பேபி பிங் வண்ண கவுன் அணிந்து அதற்கேற்ற கூந்தல் அலங்காரத்தில் பார்பி டால் போல மின்னிய வான்மதி மருமகனோடு இலாவகமாக நடனமாடுவதை ரசித்துகொண்டிருந்தார் பகவதி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

அனிச்சையாக அவரது விழிகள் மேடையிலிருந்து தன்னைச் சுற்றியிருந்தவர்களை நோட்டமிட்டன. எண்ணி ஐம்பதே நபர்கள்! அதுவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.
காலையிலிருந்து பிரவாகமாகப் பெருகிய ஏமாற்றம் இப்போதும் அவரை ஆட்கொள்ள மகள் – மருமகனின் நடனமெல்லாம் மறந்து போனது.
எவ்வளவோ முறை நவம்பரில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என குணசேகரனிடம் வாதாடியிருந்தும் அந்த மனிதர் இப்போது வைத்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடித்தக் காரணத்தால் உற்றார் உறவினர் சூழ, பொன்விளையே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு அமர்க்களமாக நடைபெற வேண்டிய அவரது மகளின் திருமணம் இதோ அன்றைய தினம் காலையில் வெகு எளிமையாக ஐம்பதே பேர் முன்னிலையில் நடந்தேறியிருந்தது.
பூபாலனின் ஈடன் தோழமைகள், உரிமையாளர் ஹரிஹரன், வான்மதியின் தோழியான ஜோதிர்மயி – அனிருத் போன்றோரும் அந்த ஐம்பதில் அடக்கம். இதைத் தவிர வேறு யாரையும் அழைக்க முடியாதக் கட்டாயத்தில் சிக்கிக்கொண்டார்கள் இரு வீட்டாரும்.
அப்போது ஆரம்பித்தப் புகைச்சல் இன்னும் அடங்கவில்லை பகவதிக்கு. எப்படியும் நவம்பரில் முழு லாக்டவுனை விலக்கி விடுவார்கள் என்று சொன்னால் கேட்டாரா குணசேகரன்? ஜாதகம் அது இதுவெனச் சொல்லி அடம்பிடித்து நினைத்ததைச் சாதித்துவிட்டாரே! மனம் காந்தியது பகவதிக்கு.
அவரைத் தவிர வேறு யாருக்கும் இது ஒரு குறையாகத் தெரியவில்லை.
“மதினி கடைசி நேரத்துல ஈ பாஸ் கிடைக்கல பாத்துக்கிடுங்க. என்ன பண்ண? லாக் டவுன் முடிஞ்சதும் நம்ம வானும்மாவ விருந்துக்கு அழைச்சுக் கல்யாணத்துக்கு வர முடியாதக் குறைய தீர்த்துக்குறோம்” இது பெரியதாழையில் இருக்கும் அவரது ஒன்றுவிட்ட அண்ணன் மனைவி கூறிய காரணம்.
சொல்லப்போனால் அதுதான் உண்மையும் கூட. அனேக உறவுகள் ஈ பாஸ் கிடைக்காதக் காரணத்தால் மாவட்ட எல்லையைத் தாண்டி வர முடியவில்லை.
ஆனால் வான்மதிக்கும் பூபாலனுக்கும் இதெல்லாம் பெரிய கவலையாகத் தோன்றவில்லை.
அவன் கட்டிய தாலி நெஞ்சில் மோதுவதே பெரும் பேறாக எண்ணுபவளுக்கு இக்குறைகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தனது தேவதைப்பெண்ணைத் தன்னவளாக்கிக் கொண்ட மகிழ்ச்சியில் திளைத்தவனுக்கோ இன்பக்கனவுகள் ஆயிரம்! இதற்கிடையே யார் வரவில்லை, யார் வந்தார்கள் என்றெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவுக்கு அவனது கவனம் சிதறவில்லை.
மொத்தக் கவனத்தையும் மனையாளிடம் அல்லவா அவன் குவித்திருந்தான்.
வரவேற்பும் இனிதே நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்த சடங்குகள் பெண் வீட்டில் நடப்பதே அவர்கள் பக்கத்தில் வழக்கம். அதையும் குணசேகரன் மாற்றிவிட்டார்.
முத்தரசி இல்லத்திற்கு மறுவீட்டுக்குப் போனால் போதுமென அவர் சொல்லிவிட பகவதியோ கடுகடுத்தார்.
“எல்லாத்தையும் அவர்தான் முடிவு பண்ணுவாரா? நம்ம பொண்ணுக்கு என்ன செய்யணும்ங்கிறதைக் கலந்தாலோசிக்கக் கூட நம்மளைக் கூப்பிட மாட்டாரா? இத்தனைக்கும் அவர் மகனுக்குச் சொல்லிக்கும்படி இப்ப வேலை கூட இல்ல. இன்னும் ரெண்டு வாரத்துல ஸ்டூடியோ ஓப்பன் பண்ணி அது நல்லா ஓடி அதுக்கு அப்புறம்தான் ஒரு நிலைக்கே வருவார். மகன் இப்பிடி இருக்குறப்பவே இந்த மனுசனுக்கு இவ்ளோ தலைக்கனம் ஆகாது” என நரேந்திரனின் காது தீயுமளவுக்குப் பேசிவிட்டார்.
நரேந்திரனுக்கோ இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்களை விட மனிதர்கள் முக்கியம். எனவே சம்பந்தி என்ன விரும்புகிறாரோ அதைச் செய்துகொள்ளட்டுமெனக் கூறிவிட்டார்.
மணிவண்ணனும் ப்ரீத்தியும் மெதுவாகக் கழன்று கொள்ள, மற்ற அனைவருடனும் திருமணமான இரவே பூபாலனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வான்மதி.
ஆலம் கரைத்து ஆரத்தி சுற்றி மருமகளை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டார் சங்கரி.
வான்மதி முதல் முதலாக அப்போதுதான் பூபாலனின் வீட்டைப் பார்க்கிறாள். அந்தக் காலத்துச் சுண்ணாம்புக் காரை போட்ட மச்சு வீடு ஒன்றும் அவ்வளவு வசதி குறைவாக அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் பகவதிக்கு ஒன்றும் திருப்தியாக இல்லை.
மரத்தூண்களோடு இரண்டு திண்ணைகள், நடுக்கூடம், அதன் வலது பக்கம் சமையலறை, இடதுபக்கம் பெரியவர்களின் அறை, அதை ஒட்டி மாடிக்குச் செல்லும் படிகட்டு என்று ஒவ்வொன்றாகப் பார்த்தவருக்கு ஏ.சி இல்லாமல் வெறும் மின்விசிறியில் அந்த வீடு கொடுக்கும் ஜில்லென்ற உணர்வு ஒரு கணம் இதமாக இருந்தாலும் அவரது அதிருப்தியை அந்த இதம் குறையவில்லை.
சங்கரி மருமகள் வீட்டாரை உபசரிக்க வான்மதியைத் தனியே அழைத்துக்கொண்டார் அவர்.
“வீடு உனக்குச் சௌகரியமா இருக்குமா வானும்மா? சென்னை ஃப்ளாட்டையும் வெகேட் பண்ணிட்ட. இனிமே ஒர்க் ஃப்ரம் ஹோம் மட்டும் பாத்துக்குறேன்னு சொல்லிட்ட”

அன்னையின் குரலில் இருந்த கவலை தேவையற்றது என்று தோன்றியது வான்மதிக்கு.
“பாலா எங்க இருக்குறாரோ அந்த இடம் எனக்குச் சொர்க்கம்மா” என்று முடித்துக்கொண்டாள்.
அதே நேரம் மகனைத் தனியே அழைத்து வருத்தம் கப்பிய குரலில் பேசிக்கொண்டிருந்தார் குணசேகரன்.
“கல்யாணம் நிச்சயமானதுல இருந்து உன் கவனம் எல்லாம் மாமனார் வீட்டுப் பக்கம் குவிஞ்சு கிடக்குது பாலு. வசதியான மாமனார் வந்துட்டதால இந்தக் கையாலாகாத தகப்பன் உனக்குப் பெருசா தெரியலையா?”

“ஏன்பா இப்பிடி பேசுறிங்க?” ஆதங்கத்தோடு வினவினான் அவன்.
“நீ அவங்க வீட்டுக்குப் போறது எல்லாம் சரி. ஆனா ஒரேயடியா அங்கயே சாய்ஞ்சிடாத பாலு. ஒருத்தனை இப்பிடித்தான் இழந்துட்டோம். உன்னையும் இழந்துட்டோம்னா எனக்கும் சங்கரிக்கும் யார் இருக்காங்க?”
பூபாலன் மௌனம் சாதித்தான்.
“மாமனார் வீட்டுல ஒரு லிமிட்டோட இரு பாலு. அவங்க பணத்தைக் காட்டி உன்னை அங்க இழுத்துப்பாங்களோனு பயமா இருக்கு”
பூபாலனின் மனதில் சுருக்கென்ற வலி. தந்தை இவ்வாறு எண்ணும்படி நடந்துகொண்டது தனது தவறுதானே என்று தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொண்டான். அந்த நொடியில் அவன் ஒரு தவறானத் தீர்மானத்தை எடுத்தான்.
இனி தந்தையின் மனதில் சலனமுண்டாகும் அளவுக்கு மாமனார் வீட்டோடு நெருங்கவேண்டாம் என்பதே அது. தந்தைக்கு நிகரானப் பாசத்தோடு அவனைத் தோளணைக்கும் நரேந்திரனைப் பற்றி கூட அந்த நேரம் அவன் யோசிக்கவில்லை. பெரும்பான்மை ஆண்கள் செய்யும் தவறை அவனும் செய்யத் தீர்மானித்தது அந்நொடியில்தான்.
மகனது மூளையைக் குழப்பிவிட்டத் திருப்தியில் குணசேகரனும், மகளைத் தன் இஷ்டத்துக்கு இனி ஆட்டிப்படைக்க முடியாது என்ற ஆதங்கத்தில் பகவதியும் இருக்க, இளையவர்களோ தங்களது தனிமை பொழுதைப் பற்றிய கற்பனைகளோடு ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிய வண்ணம் இருந்தார்கள்.
நரேந்திரனின் குடும்பத்தார் கிளம்பும் தருணத்தில் வான்மதிக்குக் கண்ணீர் முட்டியது.
“நாங்க கிளம்புறோம் சம்பந்தி. செல்லமா வளர்ந்த பொண்ணு. கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. வர்றோம் மாப்பிள்ளை” என்று விடைபெற்ற நரேந்திரனிடம் பூபாலன் கடைபிடித்த விலகலை மற்ற அனைவருக்கும் முன்னர் குணசேகரன் கண்டுகொண்டார்.
மெல்லிய விசும்பலுடன் இருந்த வான்மதிக்குச் சமாதானம் சொல்லி அவளை மகனது அறைக்கு அனுப்பிவைத்தார் சங்கரி.
வாடிய முகத்துடன் வந்தவளைக் கண்டதும் பூபாலனுக்கு இவ்வளவு நேரம் இருந்த பரபரப்பு அடங்கியது. ஏன் இந்த வாட்டம்? நான் என்ன பேயா பிசாசா என்று எண்ணிய அவனது மனம் விசுக்கெனக் கோபம் கொண்டது. சற்று முன்னர் குணசேகரன் செய்த சித்துவேலை வேறு அவன் மனதை ஒரு பக்கம் அரித்துக்கொண்டிருந்ததன் விளைவே இந்தக் கோபம்.
இத்தனை ஆண்டுகள் பெற்றவர்களுடன் இருந்த ஒரு பெண் அவர்களைப் பிரியும் தருணத்தில் கூட வாடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? கணவன் என்பவன் அன்பைப் பொழிபவனாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் மனம் பெற்றோரைப் பிரிந்ததை எண்ணி வருந்தத்தானே செய்யும்.
தனது கோபத்தை அடக்கிக்கொண்டவன் “இப்ப எதுக்கு உம்முனு இருக்குற மதி? உனக்கு எங்க வீட்டைப் பிடிக்கலையா?” என்று அதட்டலாகக் கேட்க
“அப்பிடி எல்லாம் இல்ல” என அவசரமாகப் பதில் வந்தது அவளிடமிருந்து.
“அப்ப எதுக்கு முகத்தை உம்முனு வச்சிருக்க? நீயும் நானும் காதலிச்சோம். இப்ப கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். நியாயப்படி நீ சந்தோசமாதானே இருக்கணும்?”
“நான் என் பேரண்ட்சை விட்டு இங்க வந்திருக்கேன். எனக்கு அந்த வருத்தம் இருக்காதா?”

“ஏன் வருத்தம்? காலங்காலமா இதானே நடக்குது? அரேஞ்ச்ட் மேரேஜா இருந்தா கூட பரவால்ல. நாம லவ் மேரேஜ்ல இணைஞ்சிருக்கோம். உனக்கு என்னை நினைச்சுப் பயமோ அவநம்பிக்கையோ இருந்தாதான் உன் கண்ணு கலங்கும்.”
அவனது பேச்சு இன்னும் அவளை வாட வைக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ளவில்லை பூபாலன்.
வான்மதியின் திகைத்தப் பார்வையைக் கூட “பதில் சொல்லாம நிக்குறதுலயே நீ என் மேல வச்சிருக்குற அன்பு தெரியுது” என்று குதர்க்கமாகத்தான் எடுத்துக்கொண்டான்.
அவனுக்குள் இருந்த இனிய மனநிலையைக் கெடுத்துவிட்டது குணசேகரன் விடுத்த கோரிக்கை.
மாமனார் வீட்டுடன் கொஞ்சம் ஒதுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றால் மனைவியும் தன் வீட்டாருடன் ஒட்ட வேண்டும். இனி தனது குடும்பம் இதுதான் என்ற எண்ணம் அவளுக்கு வரவேண்டும். பிறந்த வீட்டையே நினைத்துக் கொண்டிருந்தால் எங்கிருந்து புகுந்தவீட்டைத் தன் வீடாக எண்ணத் தோன்றும்?
எல்லாம் ஒரே நாளில் நடக்காது என்பது அவனுக்கும் புரிந்தது. ஆனாலும் ஒரு வெட்டிப் பிடிவாதம்.
ஏனோ அன்றைய இரவு எந்தக் கனவுக்கான முகாந்திரமும் இல்லாமல் வெறுமையாகக் கழிந்தது இருவருக்கும்.
காலையில் கண் விழித்ததும் வான்மதியின் செவியில் விழுந்தது குணசேகரனின் குரல்.
“வாசல்ல போட்டிருந்த செருப்பு மேல தண்ணி தெளிக்காதனு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன். அறிவில்ல?”
நாராசமாக ஒலித்த அவரது அலறலில் கண் விழித்தவளின் செவிக்குச் சங்கரியின் அமைதியான பதிலும் தப்பவில்லை.
“பாலுவும் வானும்மாவும் மறுவீட்டுக்குப் போகணுமில்லங்க. இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்திரிச்சேன். அவசரமா தெளிச்சதால…”
“எல்லாத்துக்கும் ஒரு காரணத்தை எடுத்து வை. போ! போய் காபி போடு”
ஏன் இந்தக் கூப்பாடு? செருப்பு ஈரமாவது எல்லாம் ஒரு விசயம் என்று அதற்காக இத்தனை களேபரமா? முகச்சுழிப்புடன் எழுந்து அமர்ந்தவளுக்கு இரவின் நிகழ்வுகள் நினைவுக்கு வர பூபாலன் இரவில் பேசிய தொனியும் குணசேகரனின் அலறலுக்குச் சிறிதும் குறைவில்லாதது என்ற எண்ணம் உருவானது.
அப்படியே அமர்ந்திருந்தவள் மாமியார் காபியோடு வரவும் அவரை நோக்கிப் புன்னகைத்தாள்.
“குட்மானிங் அத்தை! நான் இன்னும் ப்ரஷ் பண்ணல”

“அதுக்கென்ன? இப்ப இந்தக் காபிய குடி. ப்ரஷ் பண்ணுனதும் இன்னொரு கப் குடிக்கலாம்” என்றபடி களைந்து கிடந்த போர்வையை மடித்து வைக்க ஆரம்பித்தார் சங்கரி.
“நிஜமாவா?” என்று கண்களை விரித்தவள் மடமடவெனக் காபியைக் காலி செய்தாள்.
“நீ போய் குளிச்சிட்டு வா வானும்மா. உனக்குப் பூரிக்குக் கிழங்கு வச்சா பிடிக்குமாமே! பாலு சொன்னான். குளிச்சிட்டுச் சாப்பிடலாம். இன்னைக்கு மறுவீடு வேற போகணும். உங்க வீட்டுல எல்லாரும் நீ எப்ப வருவனு ஆசையா காத்திருப்பாங்க”
சங்கரியின் பேச்சு வான்மதிக்கு அவளுடைய சித்தி மிருதுளாவை நினைவுறுத்தியது. என்ன கலவரம் நடந்தாலும் பிள்ளைகளிடம் இன்முகத்தோடு பேசுபவர் அவர்.
அதைச் சங்கரியிடம் சொன்னதும் அவரது முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
“பாலா எங்க அத்தை?”
“நேத்து ரிசப்சனுக்கு அவனோட ஓனர் வந்தார்ல. அவர் கிட்ட பாளையங்கோட்டைல ஸ்டூடியோ திறக்குறது பத்தி பேசப் போயிருக்கான். ரெண்டு வாரத்துலயே வேலை எல்லாம் முடிக்கணுமே”
கணவனின் தொழிலைப் பற்றி சொன்னதும் வான்மதியின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள்.
அவள் குளித்து உடை மாற்றி மாமியார் கைமணத்தில் தயாரான பூரிக்கிழங்கைச் சுவைக்கையில் பூபாலன் வந்து சேர்ந்தான்.
“பாலா” என்று அவள் அழைப்பதைக் கவனித்து அங்கே வருவதற்குள் குணசேகரன் தனது அறைக்கு அவனை அழைத்துப் போய்விட்டார்.
தந்தையும் மகனும் என்னவோ பேசட்டுமெனப் பூரிக்கிழங்கில் கண்ணானாள் வான்மதி.
“நீங்க சாப்பிடலையா அத்தை?”
“எல்லாரும் சாப்பிட்ட அப்புறம் சாப்பிட்டுக்குறேன்மா”
“இதென்ன பழக்கம்? நீங்க நேத்து நைட் மண்டபத்துல சாப்பிட்டது. இன்னுமா வயிறு பசிக்கல?”

“காபி குடிச்சேனே வானும்மா”
“ப்ச்! ஒன்னுக்கு ரெண்டு காபி குடிச்ச எனக்கே பசி. உங்களுக்கு எப்பிடி இல்லாம போகும்?”
மாமியாரிடம் அவள் ஆதுரமாகப் பேசிக்கொண்டிருக்கையில் குணசேகரனின் குரல் ஒலித்தது.
“என்ன பண்ணுறதும்மா, அந்தக் காலத்துல வீட்டுக்கு மருமக வந்ததும் மாமியாருக்கு ஓய்வு கிடைக்கும். இப்ப மருமகளுக்கும் சேர்த்துல்ல மாமியார் சமைக்க வேண்டியதா இருக்கு?”
அவரது குரலில் இருந்த நக்கல் வான்மதிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சங்கரி பசியோடு இருப்பது மட்டுமே கருத்தில் பதிய மடமடவென அவளது தட்டில இருந்த பூரி காலியானது.
சங்கரியை சமையல்கட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு “நீங்க உக்காருங்க. நான் பூரி சுட்டுக் கொண்டு வர்றேன்” என்று அவள் சொல்ல
“இன்னைக்கே நீ செய்யணும்னு என்ன அவசியம் வானும்மா?” என்று கேட்டபடி கையைப் பிசைந்தார் சங்கரி.
அவரது பேச்சை அவள் கேட்கவில்லை. புசுபுசுவென உப்பலானப் பூரிகளும், மணக்க மணக்க கிழங்கும் வைத்து மாமியாரிடம் தட்டைக் கொடுத்தாள்.
“சாப்பிடுங்க”
சங்கரிக்குக் கண்கள் கலங்கின. அன்பாக இப்படி தட்டில் சாப்பாடு வைத்து ஒருவர் கொடுத்து அவர் சாப்பிட்ட தருணம் ஏதோ போன ஜென்மத்தில் நடந்தது போலிருந்தது.
கண்ணீர் மின்னிய விழிகளை மறைத்துக்கொண்டு சங்கரி பூரியைச் சாப்பிட மாமனாருக்கும் பரிமாறினாள் வான்மதி.
இதெல்லாம் பூபாலனின் விழிகளுக்குத் தப்பவில்லை. நேற்றைய இரவில் தான் பேசியது அதிகப்படி என்று தோன்றியது. அதே நேரம் அந்த அதிகப்படியான பேச்சினால்தான் தனது அன்னை மற்றும் தந்தையிடம் வான்மதி அன்பாக நடந்துகொள்கிறாள் என்று எண்ணிக்கொண்டது அவனது மட்டி மனம்.
வியர்க்க விறுவிறுக்க அவள் மாடியறைக்கு வந்தபோது குளித்து உடைமாற்றி முடித்திருந்தான் பூபாலன்.
அவள் அவனிடம் பேசாமல் குளியறைக்குச் செல்லவும் துரைக்குக் கோபம் வந்துவிட்டது.
வெளியே வந்தவளைச் சுவரோடு சேர்த்துச் சிறை பிடித்தவன் “என்ன கோவமா இருந்தாலும் என் முகத்தைப் பாத்துப் பேசிடு மதி. இந்த மாதிரி முகம் திருப்பாத” என்று சொல்ல அதுவும் அதிகாரமாகவே தோன்றியது வான்மதிக்கு.

பதில் பேசத் தோன்றாமல் அமைதியாக நின்றாள்.
“என் அம்மாவையும் அப்பாவையும் இன்னைக்குக் காலையில நீ நடத்துன விதத்துல நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டி. இந்தக் காட்சி எல்லாம் எங்க வீட்டுல முதல் தடவை நான் பாக்குறேன். முகத்தைத் திருப்பி அந்தச் சந்தோசத்தைக் குறைக்குற நீ”
“சோ என் மேல தான் தப்பு|”
சீறிக்கொண்டு வந்து விழுந்தன வார்த்தைகள்.
“நீ என் ஃபேமிலி கூட மிங்கில் ஆகணும்ங்கிற எதிர்பார்ப்பு ஒன்னும் தப்பில்லயே! எப்பவும் உன் குடும்பத்தை நினைச்சு நீ கண்ணீர் வடிச்சா எப்பிடி எங்களோட உன்னால சந்தோசமா இருக்க முடியும்?”
“நான் ஒன்னும் ரோபோ இல்ல, ப்ரோக்ராமை மாத்துனதும் அதுக்கேத்த மாதிரி நடந்துக்க. எனக்கு எல்லாத்தையும் ஏத்துக்க டைம் ஆகும் பாலா. இன்னைக்குக் காலைல நான் அத்தைக்கும் மாமாவுக்கும் பரிமாறுனது உங்க மனசைக் குளிரவைக்கணும்ங்கிற எண்ணத்துல இல்ல. பெரியவங்க சமையல்கட்டு வெக்கைல சமைச்சுப் பசியோட பரிமாறுறப்ப நான் மட்டும் உக்காந்து வயித்தை நிரப்புறேனேங்கிற குற்றவுணர்ச்சில. என் கிட்ட அதிகாரமா, கோவமா பேசி எந்தக் காரியத்தையும் யாராலயும் சாதிக்க முடியாது”
மணமான முதல் நாளில் இந்தத் தொனியில் பேசிக்கொண்ட புதுமணத் தம்பதி அவர்களாகத்தான் இருப்பார்கள்.
அவளது வெறித்தப் பார்வையில் பூபாலன் விலகிக்கொள்ள “வெளிய போங்க” என்றாள்.
“எதுக்கு?”
“ப்ச்! நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்”
பூபாலன் அதிகம் யோசிக்கவில்லை. அவளை அணைத்து மீண்டும் சுவரோடு சிறை செய்தான்.
“என்ன பண்ணுறிங்க?” என்று திமிறி அவனது புஜத்தைத் தாக்கிய அவளது தளிர்க்கரத்தைச் சிரிப்போடு பார்த்தவன்
“உன்னை எதுக்காகவும் விலகமாட்டேன்னு சொல்லிட்டு ஆப்டர் ஆல் ட்ரஸ் சேஞ்ச் பண்ணுறதுக்காக விலகி வெளிய போனா நல்லாவா இருக்கும்?” என்று புருவம் உயர்த்திக் கேட்க
“இந்த ரோமியோ அவதாரத்துக்குக் குறைச்சலே இல்லங்க. இதை ரசிக்குற மூட் எனக்கு இல்ல. வெளிய போங்க”
“போகமாட்டேன்! இது என் ரூம்”
“இன்னையில இருந்து இது என் ரூம்”
“இது உன் ரூம் ஆனதுக்குக் காரணம் நான்”
“அப்ப நீங்களே உங்க ரூம்ல தனியா உக்காந்து பூஜை பண்ணுங்க. நான் வெளிய போறேன்”
“நோ! இனிமே பூஜை புனஸ்காரம்னு எதுவா இருந்தாலும் அது உன் கூட மட்டும்தான். தனியா எதையும் செய்யுறதா உத்தேசம் இல்ல”
“பாலா” கோபத்தின் உஷ்ணம் அவளது குரலில்.
“மதி” கொஞ்சலும் தாபமும் அவனது குரலில்.
இறுதியில் கோபமானது கொஞ்சலுக்கு முன்னே அடிபணிந்து போனது.
வேறு உடை அணிந்து இருவரும் அறையை விட்டுக் கிளம்பியபோது பூபாலனுக்கு மனைவி கையால் சில பல அடிகள் அவன் செய்த விசமத்தனத்துக்குப் பரிசாகக் கிடைத்தன.
பெற்றோரிடம் சொல்லிவிட்டு இருவரும் வெளியேற எத்தனிக்கையில் “நான் சொன்னதை மனசுல வச்சுக்க பாலு” என்று பூடகமாகப் பேசி வழியனுப்பி வைத்தார் குணசேகரன். அவரைக் காட்டிலும் மாபெரும் அதிருப்தியோடு முத்தரசி இல்லத்தில் பகவதி காத்திருக்கிறாரே!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!