எப்படியாவது வருங்கால மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி மதுமதியையும் தன் பார்வைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாகவே உருப்பெற்றுவிட்டது மாணிக்கவேலுவின் மனதில். தந்தையின் பிடிவாதப் பேச்சைக் கேட்ட பவிதரனுக்கு அதற்கு மேல் வீட்டிலிருக்க பிடிக்கவில்லை. இவ்வளவு நடந்தும் தந்தை மாறவில்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர் மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவும் இல்லை. சில காரணங்கள்! சில பிடிவாதங்கள்! சில தவறான புரிதல்கள்! இவைதான் தங்கள் குடும்பத்தினரின் நடுவே கண்ணுக்குத் தெரியாத வேலியை அமைத்திருப்பதைப் பவிதரன் அறிந்திருந்தான். […]
Share your Reaction

