“நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க அருள். நடந்த பிரச்சனைல இன்னைக்கு உனக்கும் வானதிக்கும் நிறைய அழுத்தம். போப்பா” என ராஜேஸ்வரி அவனை அனுப்பி வைத்தார் அவனது அறைக்கு.
இடையே வழிமறித்த ரமா வேறு இன்று அவன் வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டிய நாள் என்று சொல்ல, “இங்க இவ்ளோ கலவரம் நடந்திருக்கு பெரியம்மா. வானதி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிருப்பா. அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மெதுவா பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டான்.
அறைக்கு வந்து பார்த்தவனுக்கு அதன் அலங்காரத்தில் எரிச்சல் வந்தது. மடமடவென உடை மாற்றியவன் நண்பனின் வாழ்க்கையில் நடந்த அவசரக் கல்யாணத்தை எண்ணிச் சோர்வாய் உணர்ந்தான்.
“ஸ்பீடா டிரைவ் பண்ணாத அச்சு. சென்னைக்கு வந்ததும் பேசிக்கலாம்” அட்சரனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டுப் படுக்கையில் அமர்ந்தான்.
மடிக்கணினியை உயிர்ப்பித்தவனுக்கு அதில் வந்த மின்னஞ்சலைப் படித்ததும் இவ்வளவு நேரமிருந்த சோர்வு பறந்தோடியது. மடமடவெனத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தான்.
“பேமெண்ட் கிரிப்டோல வந்திருக்கும். செக் பண்ணிக்க. பி கேர்ஃபுல்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ரிசீவ்ட் த பேமெண்ட். ஹேவ் அ ஹேப்பி மேரீட் லைஃப்”
பதிலைப் பார்த்தவனுக்குப் பெருமூச்சுதான் வந்தது. சூழ்நிலை சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு உகந்ததாகவா இருக்கிறது? இந்நேரத்தில் அவன் வெற்றியில் துள்ளிக்குதிக்க வேண்டும். காலையிலிருந்தே பெரும் கடமையொன்றை முடித்துவிடும் உற்சாகத்தோடு இருந்தவனுக்கு மாலையில் ஆரம்பித்த தலைவலி இப்போது வரை விடவில்லை.
“தேங்க்யூ டியூட்” என்று பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டான். தொடர்ந்து சில வேலைகளை அவன் மடிக்கணினியில் செய்ய ஆரம்பித்தான்.
அந்நேரத்தில் அவ்வறைக்குள் நுழைந்தாள் வானதி. அன்று அவள் மனம் குழப்பத்திலும் போராட்டத்திலும் களைத்துப் போயிருந்தது. அந்த அறையின் அலங்காரங்களும், அங்கிருந்த மோனநிலையும் வானதிக்கு அமைதியை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணமே வரவில்லை.
காரணம், சாவகாசமாக மெத்தையில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ தட்டச்சு செய்துகொண்டிருந்த அருள்மொழியின் மீது அவளுக்கு இருக்கும் ஐயம்.
மடிக்கணினியின் திரையின் மீது பதிந்திருந்த விழிகளை விலக்காமல், தன்னருகே மெத்தையில் கையை வைத்துத் தட்டிக் காட்டினான் அவன். அதாவது அங்கே அமர வேண்டுமாம். வானதிக்குச் சுரீரெனக் கோபம் ஏறியது. வேண்டுமென்றே பீன்பேக் ஒன்றைத் தேடி எடுத்து அவனெதிரே அமர்ந்தாள்.

“சொல்லுற பேச்சைக் கேக்குற எண்ணமே இல்ல போல” – இப்போதும் அவனது குரல் மட்டுமே அவளை நோக்கி வந்தது. பார்வையும் கவனமும் என்னவோ மடிக்கணினியின் மீதுதான்.
வானதி புகைச்சலோடு கைகளைக் கோத்துக்கொண்டாள்.
“ஒருத்தர் நம்ம கிட்ட பேசுறப்ப அவங்க முகத்தைப் பாத்து பேசுறதுதான் மரியாதை. நீ எனக்கு மரியாதை குடுக்கல. அப்ப ஏன் உன் பேச்சை நான் கேக்கணும்?”
அருள்மொழியின் கண்கள் மேலெழும்பி அவளைப் பார்த்தன. அழகான சாம்பெய்ன் தங்க நிறத்தில் கலம்காரி வேலைப்பாடுகள் கொண்ட ஜார்ஜெட் புடவை, எளிமையாய் சில ஆபரணங்கள், கூந்தலை இன்னும் அழகாக்கும் மல்லிகைச் சரம் – பார்க்க என்னவோ அள்ளிக்கொள்ள வேண்டுமெனத்தான் தோன்றியது. ஆனால், எதிரிலிருப்பவளுடைய மனநிலை இப்போது சுத்தமாக இந்தச் சூழலோடு பொருந்தாமல் தாமரை இலைத் தண்ணீராக இருக்கிறதே!
“பார்த்தா மட்டும் போதாது” சுள்ளென்று வார்த்தையால் விளாசினாள் வானதி.
“வேற என்ன எதிர்பாக்குற நீ?” நேரடித் தாக்குதல் அவனிடமிருந்து. சூழலுக்கு ஒவ்வாதக் கேள்வியாக அவளுக்குத் தோன்றிவிட, வானதியின் முகத்தில் சந்தேகத்தின் சாயல்.
“என்ன திட்டத்தோட நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச அருள்?”
அருள்மொழி ஒரு பக்கம் மட்டும் உதட்டை இழுத்துச் சிரித்தவன் கண்களில் மையல் மின்ன, “உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உன்னைத் தவிர வேற காரணம் எனக்கு வேணுமா என்ன?” என்று கேட்க, எதிரிலிருந்தவளோ கண்களை அவனிடமிருந்து திருப்பிக்கொண்டாள். மனம் படபடவென அடித்துக்கொண்டது.
‘இல்லை! இவன் பேச்சை மாற்றுகிறான். அதற்கு நான் இடமளிக்கக் கூடாது’ வீம்பாய் மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள், “இந்தக் கதைய நீ யார் கிட்ட சொன்னாலும் நம்பமாட்டாங்க” என்றாள்.
“எதை கதைனு சொல்லுற? உன்னை உனக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னேனே. அதையா? அது நிஜம்.”
“மறுபடி மறுபடி சொல்லுறதால பொய் உண்மையாகிடாது அருள். நீயும் அப்பாவும் பேசுனதை நான் கேட்டேன். உன்கிட்ட ஏதோ துருப்புச்சீட்டு இருக்குறதா சொன்னல்ல. அது என்னனு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.”
பிடிவாதமாய் மொழிந்தவளிடம் பதிந்திருந்த அருள்மொழியின் பார்வையில் கனிவு மெல்ல மெல்லக் குறைந்து, விலகல் குடியேறியது. பட்டென மடிக்கணினியை அறைந்து பூட்டியவன்,
“சொந்த வீட்டுலயே ஒட்டு கேட்டவளுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்ல” என்றான் வெட்டும் குரலில்.
வானதி பீன்பேக்கில் இருந்து எழுந்தாள். மெல்லிய வேதனை அவளது விழிகளில்! நினைவுகள் பழைய நாட்களுக்குப் பயணிக்க, அவளது குரலுமே தழைந்து போயிருந்தது.
“நீ என்னை விலக்கி வச்ச. அப்புறம் ஏன் நீ என்னைக் கல்யாணம் பண்ணுன? எதுவுமே புரியல.”
அருள்மொழியின் கண்களில் இளக்கமில்லை. மாறாக, உணர்வற்று கடினமுற்றிருந்தது அவனது விழிகளின் வெண்படலம்.

“உனக்கு எதையும் புரியவைக்கணும்னு எனக்கு அவசியமில்ல வானதி. நான் உன்னை என்னோட எதிர்ல வச்சுப் பார்க்க விரும்புறேன். அப்பிடியே இருந்துடு. அதுதான் உனக்கு நல்லது.”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே பக்கத்துல உக்காரச் சொன்ன?”
“நான் சொன்னது ஒரு மெட்டஃபர். வாழ்க்கை முழுக்க நீயும் நானும் எதிரெதிரா தான் நிக்கப்போறோம். எனக்குனு சில கடமைகள் இருக்கு. உன்னால அது காம்ப்ளிக்கேட் ஆகிடும் வானதி. என்னைப் புரிஞ்சிக்கணும், தெரிஞ்சிக்கணும்னு நினைக்காத. அதுக்கான உரிமையை என்னைக்குமே உனக்கு நான் தரப்போறதில்ல. யூ ஆர் ஜஸ்ட் அ ட்ரம்ப் கார்ட். என் நட்பு வட்டத்துல கூட நீ இல்ல.”
எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சொன்னவன், மீண்டும் மடிக்கணினியைத் திறந்து எதையோ வேகமாகத் தட்டச்சு செய்ய, அவனது பேச்சினால் குழப்பத்திலும் வேதனையிலும் ஆழ்ந்த வானதி பனிச்சிற்பமாய் உறைந்து நின்றாள்.
அருள்மொழி ஒரு பக்கம் மடிக்கணினியில் கவனமாகிவிட, திருமண வாழ்வில் அவர்களது முதலிரவு முழுமையற்ற இரவாக நகரத் தொடங்கியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

