ஹர்சவர்தனுடன் காரில் ஏறிய கிருஷ்ணஜாட்சி ஹோட்டலை அடையும் வரை அவனுடன் எதுவும் பேசவில்லை. காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவனுடன் இறங்கி நடந்து வரும் போது அவன் கீழே கவனிக்காமல் சென்றதில் கல் தடுக்கி விழப் போக அவனை விழாமல் கைப்பற்றி தடுத்தவள் “ஹர்சா பார்த்து நடக்க மாட்டிங்களா?” என்று அக்கறையுடன் கூற ஹர்சவர்தன் அவனது பெயரே அன்று அழகாக மாறிவிட்டது போல தோன்றியது.
கிருஷ்ணஜாட்சியை புருவம் உயர்த்தி நோக்கியபடி “கிருஷ்ணா நீ என் பேரை சொல்லி கூப்பிட்டியா?” என்று கேலியாகக் கேட்க அவளோ பதற்றத்தில் தவறு செய்த குழந்தை போல நாக்கைக் கடித்துக் கொண்டு செல்லமாய் அவள் தலையிலே குட்டிக் கொண்டாள். அவ்வாறு செய்யும் போது அவள் மிகவும் அழகாக இருப்பது போல் அவனுக்குத் தோன்ற “அது ஒன்னும் கொலைக்குத்தம் இல்ல. சோ நீ இவ்ளோ கியூட் ரியாக்சன்லாம் குடுக்க வேண்டாம்” என்று அவளை ரசித்தபடியே கூறினான்.
கிருஷ்ணஜாட்சி தலையை ஆட்டியபடி “அதுவும் சரி தான். கூப்பிடுறதுக்கு தானே பேர் வச்சிருக்காங்க. எனக்கும் அம்மாஞ்சி அம்மாஞ்சினு சொல்லி போர் அடிச்சுப் போச்சு. ரொம்ப ஓல்ட் டைப்பா இருக்கு” என்று அவனுடன் அவள் சாதாரணமாகப் பேசிக்கொண்டே வர
அவனும் அவள் பேச்சில் கலந்து கொண்டவனாய் “அப்போ ஏன் இத்தனை நாளா அப்பிடி கூப்பிட்டிங்க மேடம்?” என்று கேலி செய்ய அதற்கான உண்மைக்காரணத்தை நினைத்து அவள் சிரித்தபடி நடந்தாள்.
“அம்மா அடிக்கடி இந்த ரிலேசன்ஷிப் பத்தி சொல்லுவாங்க. அதுல அம்மாஞ்சிங்கிற வார்த்தையைக் கேட்டா எனக்கு ஏனோ காமெடியா இருக்கும். சிட்டிக்கு வந்த புதுசுல எனக்கு உங்களையும் சின்ன அம்மாஞ்சியையும் அவ்ளோவா பிடிக்காது. அதான் உங்களை கலாய்க்கிறதுக்காக அப்பிடி கூப்பிடுவோம்” என்று இத்தனை நாள் இரகசியத்தைப் போட்டு உடைக்க
அவனோ “வாட்? கூப்பிடுவோமா? அப்போ நீரஜாவும் உன்னை மாதிரி தானா? அப்போ அக்காவும் தங்கச்சியும் மனசாற எங்களை அம்மாஞ்சினு சொல்லலை? அப்பிடி சொல்லி எங்களை கலாய்ச்சிருக்கிங்க!” என்றுச் சொல்ல அவளும் ஆமாமென்று தலையாட்டியபடியே வந்தவள் அவனுக்கான அலுவலக அறை வந்தும் உள்ளே போகாமல் நின்றவனைக் கண்டு “உள்ளே போகலையா அம்மாஞ்சி?” என்று கேலி செய்ய ஹர்சவர்தன் ஆட்காட்டி விரலால் புருவத்தை நீவிவிட்டுக் கொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கையைக் கட்டி தன்னை கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி “கிருஷ்ணா! நீ என்னை ஹர்சானே கூப்பிடு” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல அவளுக்கோ அந்த குரல் உணர்த்தும் செய்தி புரியாதாதால் மாட்டேன் என்று மறுத்து தலையாட்டிவிட்டு கிச்சனை நோக்கி நகரப் போனவள் நகர இயலாமல் நின்றாள். ஏனெனில் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றி நிறுத்தியிருந்தவன் ஹர்சவர்தன்.
திகைப்புடன் திரும்பியவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கலவரத்துடன் “என்ன பண்ணுறிங்க? யாராச்சும் பார்த்துடப் போறாங்க. முதல்ல கையை விடுங்க” என்றுச் சொல்ல ஹர்சவர்தன் குறும்பாகப் பார்த்தபடி “நீ இனிமே என்னை ஹர்சானு கூப்பிடுவேனு சொல்லு. நான் கையை விடுறேன்” என்றான் பிடிவாதக் குரலில்.
அவள் வேறு வழியின்றி “சரி உங்களை இனிமே ஹர்சானு தான் கூப்பிடுவேன். போதுமா? லீவ் மை ஹேண்ட்” என்று தவிப்புடன் கூற அவன் மீண்டும் கேலியாக “எங்கே ஒரு தடவை என்னை ஹர்சானு கூப்பிடு பார்ப்போம்” என்றுச் சொல்லவும் கிருஷ்ணஜாட்சிக்கு தனது தலையை எங்கே சென்று முட்டிக் கொள்வது என்றே புரியவில்லை.
சொல்லாவிட்டால் அவன் தன் கையை விட மாட்டான் என்பதை அவனது முகபாவத்திலிருந்து அறிந்து கொண்டவள் “ஹர்சா பிளீஸ் கையை விடுங்க” என்றுச் சொல்ல அவனும் நல்லப்பிள்ளையாக கையை விடுவித்தான்.
“நீ இவ்ளோ நார்மலா என் கிட்ட பேசவே மாட்டியே? அது தான் எனக்கு கொஞ்சம் ஷாக்கா இருக்கு” என்று கிண்டலாக அவளைப் பார்க்க
அவளோ “இவ்ளோ நாள் நீங்க உங்க அம்மாக்கு பிள்ளையா இருந்திங்க. இப்போ அப்பிடி இல்லையே! நீங்க வர்ஷாவோட ஆத்துக்காரர் ஆகப் போறிங்க. அதனால நோ பிராப்ளம். நான் உங்க கிட்டவும் இனி சாதாரணமா பேசலாம்னு இருக்கேன்” என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டு “ஓகே எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன் அம்… ஹர்சா” என்றுச் சொல்லிவிட்டு கிச்சனை நோக்கிச் செல்ல அவளது வார்த்தை கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவனது அலுவலக அறையை நோக்கிச் சென்றான்.
அங்கே சென்று அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்தவனுக்கு தன் மனதில் கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் எழும் உணர்வுக்கு எதிர்காலமே இல்லையென்று அறிந்த பின்னும் அவளது ஒவ்வொரு செய்கையிலும் அவன் மீண்டும் மீண்டும் அவளிடம் மயங்குவது ஏன் என்று புரியவில்லை. அவனுக்கே தெரியும் அவன் தாயால் வர்ஷாவைத் தவிர வேறு யாரையும் தனது மனைவியாக எண்ண முடியாது என்று. அப்படியே வேறு ஒருத்தி என்று வந்தாலும் அவள் மதுரவாணி அத்தையின் மகளாக இருந்தால் நிச்சயமாக அவனது அன்னை சம்மதிக்க மாட்டார் என்பதும் அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்தாலும் அவனால் கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் அவள்பால் சரியும் அவனது மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் அதற்காக முயன்று முயன்று அந்த முயற்சிகளில் எல்லாம் அவன் தோல்வியையே கண்டான். தலையைப் பிடித்தபடி யோசனையில் இருந்தவனுக்கு வர்ஷாவிடம் இருந்து போன் வர இயந்திரம் போல் எடுத்து “ஹலோ” என்க அவளோ மறுமுனையில் கலகலப்பாக நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தைப் பற்றி பேச ஆரம்பிக்க சிறிது நேரத்தில் அவனும் அந்த கலகலப்பில் கலந்து கொண்டு பேச ஆரம்பித்தான்.
அதே நேரம் நீரஜாட்சியும் ரகுநந்தனும் டி.எம்.எஸ் மஹாலில் இறங்கி உள்ளே செல்ல மண்டபத்தின் மேனேஜர் அவர்களை வரவேற்றார்.
“வாங்க சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிருஷ்ணமூர்த்தி சார் கால் பண்ணி நீங்க வருவிங்கன்னு சொன்னார்” என்று அவர் சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்.
நீரஜாட்சி மண்டபத்தை தன் கண்களால் படம்பிடித்தவாறே அவர்களுடன் நடக்க ரகுநந்தனும் அவளுடன் சேர்ந்து உள்ளே சென்றான். நீரஜாட்சி மண்டபத்தின் பார்க்கிங் வசதி, டைனிங் ஹால் பற்றி எல்லாம் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே வர அவரும் பொறுமையுடன் பதிலளித்தபடி வந்தார்.
“குறைஞ்சது ஆயிரம் பேராச்சும் வருவாங்க சார். அதான் நான் அடிக்கடி கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன். இஃப் யூ டோண்ட் மைண்ட் நான் இந்த மண்டபத்தை போட்டோ எடுத்துக்கலாமா? கல்யாணப்பொண்ணோட ஆர்டர். என்னால மறுக்க முடியல” என்று அவள் கேட்ட பாணியில் சரியென்று அவர் அனுமதி அளிக்க நீரஜாட்சி ஹாலை வளைத்து வளைத்து போட்டோ எடுக்க ஆரம்பித்தாள்.
டைனிங் ஹால், பார்க்கிங், மணமகள் அறை என்று ஒன்றை கூட விடாமல் போட்டோ எடுத்தவள் மணமேடைக்குச் சென்று அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாள். அவள் பின்னூடே வந்த ரகுநந்தன் “வெறும் ஹோமகுண்டத்தை மட்டும் என்ன பண்ண போற?” என்று கேலி செய்ய அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் “வர்ஷாக்கா தான் போட்டோ எடுக்க சொன்னா” என்று கூறினாள் காரியத்திலேயே கண்ணாக.
ரகுநந்தன் அவள் போட்டோ எடுக்கும் அழகை ரசித்தபடியே “ஏன் நீரு நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறதா இருக்க?” என்று கேட்டு வைக்க
அவளோ “ப்ச்..இப்போ என்ன அவசரம்? கிருஷ்ணாக்கு கல்யாணம் ஆகி அவளோட பையன் கூட ஓடி பிடிச்சு விளையாண்டதுக்கு அப்புறம் தான் நான் என்னோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே ஆரம்பிப்பேன்” என்றாள் அலட்சியமாக.
ரகுநந்தன் “என்னது? அவளுக்கு கல்யாணம் ஆனதும்னு சொன்னா கூட ஓகே! ஆனா அவ பிள்ளை கூட ஓடி பிடிச்சு விளையாண்டதுக்கு அப்புறமானா ரொம்ப லேட் ஆயிடுமே. என்னால அவ்ளோ நாள் வெயிட் பண்ண முடியாது” என்றான் அவன் பிடிவாதமாக.
அவனை அற்பப்புழுவைப் போல் பார்த்துவிட்டு “உன்னை யாருடா வெயிட் பண்ண சொன்னது? உங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் உங்க அம்மா உனக்கும் ஒரு கீதாவையோ மாலாவையோ பிடிச்சு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அவங்கள்ல ஒருத்தியை கட்டிக்கிட்டு நீ உன் ரூட்ல போ மேன். என் கல்யாண விஷயத்துல நீ தலையிடாத” என்று நறுக்கு தெறித்தாற் போல் சொல்லிவிட்டு மண்டப நுழைவாயிலை போட்டோ எடுக்கச் செல்ல அவள் பேச்சு ஏற்படுத்திய கடுப்பில் அவள் பின்னே சென்றான் ரகுநந்தன்.
அவள் வெளியே சென்று போட்டோ எடுக்க திரும்பியவள் அவளை ஒட்டிக் கொண்டே பின்னே வந்தவன் மீது நன்றாகவே மோதிக்கொண்டாள். அவன் மீது முகம் மோதியதில் அவள் மூக்கு வலிக்கத் தொடங்கவே கடுப்புடன் “என் முந்தானையை பிடிச்சிட்டே வருவியா? கொஞ்சம் கேப் விட்டு வந்தா ஆகாதா?” என்றுக் கத்திவிட்டாள்.
அவனோ கடுப்புடன் “நான் எங்கேடி உன் முந்தானையை பிடிச்சேன்? விட்டா நீ பேசிட்டே போற. ஒரு மனுஷன் மேல பழி போடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு. நான் ஒரு விரல் அளவு கேப் விட்டுத் தான்டி வந்தேன்” என்றுச் சொல்ல நீரஜாட்சி இவனுக்கு உண்மையிலேயே தான் சொன்னது புரியவில்லையோ என்ற குழப்பம்.
அவன் கழுத்தை நெறிப்பது போல கைகளை உயர்த்தியவள் “முந்தானையை பிடிச்சிட்டே வர்றதுனா இப்பிடி பின்னாடியே சுத்துறியேனு அர்த்தம். இது கூட தெரியாம நீ லண்டன்ல என்னத்த படிச்சு கிழிச்சியோ” என்றுச் சொல்ல அவனுக்கு அப்போது தான் அவள் சொன்ன அர்த்தம் புரிந்தது.
நீரஜாட்சி கையை கட்டிக் கொண்டவள் “அங்கே போய் கல்லு, மண்ணையா சாப்பிட்ட? உன் மேல மோதி என் மூக்கு போச்சு” என்று குறைபட அவனோ சட்டையின் காலரைத் தூக்கிவிட்டபடி “இது ஜிம் பாடிம்மா! ஒரு வருசம் இல்ல மூனு வருச கடின உழைப்பு” என்று பெருமிதப்பட்டுக் கொண்டான்.
பின்னர் அவளை குறுகுறுவென்று பார்த்தவன் கேலியாக “நீரு கொஞ்சம் வேர்க்கிற மாதிரி இருக்கு. எனக்கு ஏ.சி இல்லாம இருந்து பழக்கம் இல்லையா? சோ இஃப் யூ டோண்ட் மைண்ட்…..” என்று அவன் இழுக்க
அவள் புருவத்தை மட்டும் உயர்த்தி முறைத்தவாறு “என்ன இழுவை?” என்றுக் கேட்க

அவன் நிஜமாகவே அவளது முந்தானையைப் பிடித்து “இது சும்மா தானே தொங்கிண்டு இருக்கு. கொஞ்சம் காத்து வீச யூஸ் பண்ணிக்கிறேன்” என்றுச் சொல்லி நீரஜாட்சியின் மூன்றாவது கண்ணை திறக்க வைத்தான்.
அவன் கையிலிருக்கும் புடவை முந்தானையைப் பிடுங்கிக் கொண்டபடி “இங்க பாரு மிஸ்டர் ரகுநந்தன் இந்த கிண்டல், கேலி எல்லாம் வேற ஆள் கிட்ட வச்சுக்கோ. என் பழைய கிரிக்கெட் பேட் இன்னும் என் கிட்ட இருக்கு. அதை மறந்துடாத” என்று விரல் நீட்டி மிரட்ட அவன் அவளது விரலைப் பிடித்துக் கொண்டான்.
“அப்பிடி நான் கிண்டல், கேலி பண்ணக் கூடாதுனா நீ இனிமே சாரி கட்டிக்காதடி. உன்னை சாரில பார்த்தா கேலி பண்ணனும்னு என் மனசு என்னைப் பிராண்டறது” என்று நெஞ்சில் கை வைத்து அபிநயம் பிடிக்க
அவள் கடுப்பாக “எனக்கு கூட தான் நீ இந்த மாதிரி பேசறப்போ, ஆளை முழுங்கிற மாதிரி பார்க்கிறப்போ உன்னை கொலை பண்ணனும்னு தோணுது” என்றுச் சொல்லிவிட்டு திரும்பி நின்று போட்டோ எடுக்க ஆரம்பித்தாள்.
ரகுநந்தன் அவளிடம் பார்வையை ஒட்டியபடி “அப்பிடி நீ என்னை கொல்லணும்னா இதோட கோடி முறை கொன்னுருக்கணும் நீருகுட்டி” என்றுச் சொல்ல அவள் மொபைலோடு திரும்பியவள் “இன்னொரு வாட்டி நீ என்னை நீருகுட்டினு சொன்னனனு வையேன், சத்தியமா சொல்லுறேன் நான் உன்னை கொன்னுடுவேன்” என்று மிரட்டிவிட்டு மேனேஜரை நோக்கிச் சென்றாள்.
அவனோ “ஆல்ரெடி உன் அழகைப் பார்த்து நான் செத்துண்டு தானே இருக்கேன் நீருகுட்டி. தனியா வேற என்னைக் கொல்ல போறியா? குழந்தைப் பொண்ணுங்கிறது சரியா தான் இருக்கு” என்றபடி அவளைத் தொடர்ந்தான்.
அங்கே மேனேஜரிடம் இன்முகத்துடன் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி “எல்லார் கிட்டவும் சிரிச்சு பேசு. என் கிட்ட வந்தா மட்டும் அந்த அக்மார்க் முறைப்பு வந்து இவ முகத்துல ஒட்டிக்கும். ஹே பகவான் இந்தப் பொண்ணு மனசுல எப்போ காதல் வரும்?” என்று புலம்பியபடி அவள் அருகில் சென்று நின்றான்.
அவள் மேனேஜரிடம் மண்டபவசதிகள் அனைத்தும் அருமையாக இருப்பதாகச் சொன்னவள் அவனை செக்கைக் கொடுக்கும் படி கண் காட்ட அவனோ “ஆமா நீ பெரிய கண்ணழகி. வாய் விட்டுச் சொல்லாம எதையும் செய்ய முடியாதுடி” என்றபடி நிற்க மேனேஜர் இருவரையும் குழப்பமாகப் பார்த்தபடி நின்றார்.
நீரஜாட்சி பொய்யாகச் சிரித்தபடி அவன் காதில் “மாமா உன் கிட்ட தானே செக் குடுத்து விட்டாரு. அதை மேனேஜர் கிட்ட குடு. அவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு பாரு” என்று பல்லைக் கடித்தபடி சொல்ல அவனோ “அஹான்! அப்போ மரியாதையா ‘நந்து செக்கை குடுங்கனு’ உன் வாயால சொல்லு. நான் அவரண்ட குடுக்கிறேன்” என்று தெளிவான குரலில் முணுமுணுத்தான்.
அவள் கோபத்தில் முறைக்க ரகுநந்தன் “நீ என்ன முறைச்சாலும் வேலைக்கு ஆகாது நீருகுட்டி. ஒழுங்கா நான் சொன்ன மாதிரி சொல்லு, நான் செக்கை குடுக்கிறேன்” என்றவனை வேறு நேரமாக இருந்திருந்தால் அவள் லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பாள்.
ஆனால் தானாகவே நிச்சய ஏற்பாட்டைப் பார்த்துக் கொள்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்ட பிறகு இவன் செய்யும் குரங்குச்சேட்டைக்காக அதிலிருந்து பின் வாங்க அவளுக்கு மனமில்லை. எனவே பொய்யாகவே அவனை நோக்கி புன்னகைத்தவள் “நந்து! செக்கை மேனேஜர் சார் கிட்ட குடுங்க” என்றுச் சொல்ல அவளை மெச்சுதலாகப் பார்த்தான் ரகுநந்தன்.
பாக்கெட்டிலிருந்து செக்கை எடுத்தவன் அதை நீரஜாட்சியிடம் நீட்டி “நீருகுட்டி நம்மாத்துல எல்லா நல்ல விஷயத்துக்கும் பொம்மனாட்டி கையால தான் பணம் குடுக்கிறது வழக்கம். சோ நீயே உன் கையால குடு” என்றுச் சொல்ல இம்முறை நீரஜாட்சியின் இதழில் நிஜமாகவே மனம் நிறைந்தப் புன்னகை எழ அவனிடம் இருந்து இன்முகத்துடன் செக்கை வாங்கியவள் மனதிற்குள் “பெருமாளே! இந்த நிச்சயம் உங்க அருளால நல்லபடியா நடக்கணும்” என்று வேண்டிவிட்டு மேனேஜரிடம் நீட்டினாள்.
அவர் அதை வாங்கிக் கொள்ளவும் அவரிடமிருந்து விடைபெற்று இருவரும் வாயிலை நோக்கிச் செல்ல அதற்குள் வர்ஷா போன் செய்யவே நீரஜாட்சி ரகுநந்தனின் லீலைகள் எல்லாவற்றிற்கும் அவனை ஒரு வழியாக்க வேண்டும் என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தவள் அதை மறந்தபடி வர்ஷாவுடன் பேசியபடி பைக்கில் அவன் பின்னே அமர்ந்தாள்.
ரகுநந்தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய அவள் பேச்சுவாக்கில் அவன் தோளில் கையை வைக்க அவனுக்குள் ஆயிரம் வயலின்கள் வாசிக்கத் தொடங்க இதே மண்டபவாயிலில் அவர்கள் இருவரும் மணமக்களாக வெளியே வரும் காட்சி அவன் மனக்கண்ணில் தோன்ற அதை நினைத்தபடியே பைக்கை உதைத்தான் ரகுநந்தன்.
நீரஜாட்சி வர்ஷாவிடம் “வர்ஷாக்கா நான் போட்டோஸ் எல்லாமே வாட்சப் பண்ணிட்டேன். செக் பண்ணிக்கோங்க. ஆமா, நாளைக்கு தான்……முடியாது முடியாது….கல்யாணப்பொண்ணும் வரணும்….நானும் கிருஷ்ணாவும் கரெக்ட் டைமுக்கு வந்துடுவோம்…….நோ லேடீஸ் ஒன்லி! ஆம்பிளைங்களை கூட்டிட்டுப் போனா நிம்மதியா ஷாப்பிங் பண்ண முடியாது……கரெக்டா சொன்னிங்க….ஓகே ஷார்ப்பா டென் ஓ கிளாக் நான், கிருஷ்ணா, சின்ன மாமி, பெரிய மாமியோட வந்துடுவோம்…..பட்டு சித்து இல்லாமலா…..ஓகே பை டேக் கேர் கல்யாணப்பொண்ணே” என்றபடி போனை வைக்க ரகுநந்தனின் மூளை வேகமாகச் சிந்திக்க ஆரம்பித்தது.
“டேய் நந்து எதாச்சும் பண்ணி நாளைக்கு குடும்பத்தோட சேர்ந்து நீயும் ஷாப்பிங் போயே தீரணும்டா. அப்போ தான் நீருகுட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியும்” என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டபடி வேகத்தை அதிகரிக்க பைக் சாலையில் சீறிப் பாயத் தொடங்கியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

