பொது முடக்கம் எனப்படும் லாக்டவுன் நாட்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்! தொழில்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் முடங்கிப் போய் அடுத்து என்ன என்றே புரியாமல் நாட்கள் நகர்ந்ததெல்லாம் கொடுமை. குழந்தைகளுக்கு விடுமுறை கிடைத்த மகிழ்ச்சி. ஆனால் அவர்களின் தேர்வு பற்றி பெற்றோர்களுக்குப் பயம். வீட்டின் தலைமகன்களுக்கு இன்னும் எவ்வளவு நாள் கையிருப்பை வைத்தே சமாளிக்கவேண்டும் என்ற கலக்கம். பெண்டிருக்கோ என்ன சிக்கனம் பிடித்தாலும் வேலைக்குச் செல்லாவிட்டால் வரும்படிக்கு என்ன செய்வது என்ற கவலை. அந்தச் சமயத்தில் மனவுளைச்சலுக்கு ஆளாகாத நபர்கள் மிகவும் குறைவு.
-பூபாலன்
நீண்டநேரம் மொபைல் அடிக்கவும் என்னவென எடுத்துப் பார்த்தாள் வான்மதி. பூபாலனின் பெயர் தொடுதிரையில். அவனது கார்ட் கைக்கு வந்ததுமே மொபைல் நம்பருடன் சேர்ந்து அவனது பெயர் அவளுடைய மொபைலுக்குக் குடிபெயர்ந்தது.
தாமதிக்காமல் அவனது அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க பாலா”
‘பாலா’ என்ற அவளது அழைப்பில் மறுமுனையில் இருந்தவனுக்கு இறக்கை முளைத்து வானத்தில் பறக்காதக் குறை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஆர் யூ ஓ.கே மதி?” என அக்கறையோடு வினவினான்.
இந்த ‘ஆர் யூ ஓ.கே’வை ஜோதிர்மயி எத்தனையோ முறை கேட்டதுண்டு. அப்போதெல்லாம் தோன்றாத ஜிவ்வென்ற உணர்வு இப்போது மட்டும் ஏன் என்ற கேள்வி வான்மதிக்குள்.
இளமையின் கனவுகளில் மூழ்கிக் கிடந்தவளின் இதயத்தில் முதல் மொட்டு மலர்ந்தது அந்தத் தருணத்தில்.
‘அட ஒரு தடவை பாத்து பேசுனதுக்கு இவ்ளோ கேர் எடுத்துக்கிறானே!’ என்ற பூரிப்பு.
‘இவனுக்கு அப்பிடி என்ன நான் ஸ்பெஷல்?’ என்ற குறுகுறுப்பு.

“ஐ அம் ஆல்ரைட் நவ். சாரி! அங்க வச்சு அழுது சீன் கிரியேட் பண்ணி உங்க ஒர்க்கிங் என்விராண்மெண்டை ஸ்பாயில் பண்ணிட்டேன்”
“மனுசங்களோட உணர்வுகளை விட எந்த ஒர்க்கிங் என்விராண்மெண்டும் பெருசில்ல மதி”
இப்போதுதான் அவனுடைய ‘மதி’ அவளது மதியில் உரைத்தது.
இதுவரை ஜோதிர்மயிக்கு மட்டுமே அவள் மதியாக இருந்தாள். இப்போது பூபாலன் அழைத்தது வேறு விதமாகப் பிடித்திருந்தது. அதை விட அவன் சொன்ன கருத்து பிடித்திருந்தது.
மனிதர்கள் அந்தந்த நேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கூட ‘ஓவர் ஆக்டிங்’ என்று எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவனைச் சந்தித்திருக்கிறாள் அவள்.
“வேலு சார் எனக்கும் பூமிக்கும் ஃப்ரெண்ட் மாதிரி. அவர் இறந்துட்டார்ங்கிற நியூஸைக்கூட மறைச்சிட்டா அவ” என்று சிறுபிள்ளையாய்த் தங்கையைக் குறை கூறினாள் பூபாலனிடம்.
“அக்கா அழுது அழுது உடம்பைக் கெடுத்துப்பாங்கிற அக்கறைல மறைச்சிருப்பாங்க. எனிவே, எங்கம்மா என்னை மடையன்னு சொல்லுறது நூறு சதவிகிதம் சரினு புரிஞ்சிக்கிட்டேன். எங்க எதைப் பேசணும்ங்கிற அறிவு எனக்கு இல்லனு சொல்லுவாங்க. உண்மைதான்ல?”
வான்மதி சட்டெனச் சிரித்துவிட்டாள் அவன் சொன்ன விதத்தில்.
“நீ சிரிக்குற. அப்ப நீயும் அப்பிடித்தான் நினைச்சியோ?”
“இல்ல! நான் ரொம்ப ஈசியா உணர்ச்சிவசப்படுறேன்னு எங்கப்பா சொல்லுவார். மனுசங்க எல்லாவித உணர்ச்சிகளையும் சரியான விகிதத்துல கையாளணும்னு அடிக்கடி அட்வைஸ் பண்ணுவார். என்னால அப்பிடி நடந்துக்க முடியறதேயில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமானக் குணம்”
தங்களுடைய இந்தக் குணாதிசயங்கள் பிற்காலத்தில் தங்களுடைய மணவாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுமென்பதைப் பற்றி அறியாமல் தங்களது உரையாடலை வளர்த்தார்கள் இருவரும்.
“உனக்கு அப்பானா ரொம்ப பிடிக்குமோ?” பேச்சின் திசையை மாற்ற விரும்பி கேட்டான் அவன்.
“ரொம்ப பிடிக்கும். ஆனா அம்மாவ கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிடிக்கும். எனக்குனு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்வாங்க. அண்ணாவ விட நான்தான் அவங்களுக்குச் செல்லம். எங்களோட சூப்பர் மார்க்கெட்டுக்கு என் பேரை வைக்கணும்னு அடம்பிடிச்சதே அவங்கதான்”
“சூப்பர் மார்க்கெட்?”
“ம்ம்! எங்கப்பாவும் சித்தப்பாவும் திருநெல்வேலி டவுண்ல வச்சிருக்காங்க. வானம் சூப்பர் மார்க்கெட். ரொம்ப ஃபேமஸ் அங்க”
இந்த இடத்தில் பூபாலன் கொஞ்சம் நிதானித்தான்.
அவனுமே அந்தச் சூப்பர் மார்க்கெட்டைப் பார்த்திருக்கிறான். திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் சேர்த்து மூன்று கிளைகள் உண்டு. அதன் உரிமையாளருக்குப் பொன்விளை என்று குணசேகரன் சொன்னதுண்டு.
அவர்களுக்கு நிலபுலன்கள் அதிகம். சொந்தமாக அரிசி மண்டி கூட உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறான். அவர்களது ப்ராண்டில் விரைவில் மசாலா பொருட்கள் உற்பத்தியும் ஆரம்பிக்கப் போவதாகப் பேச்சு. அந்த வீட்டுப்பெண்ணா இவள்?
ஏனோ முன்பு போல அவனால் அவளோடு இயல்பான உரையாடலை மேற்கொள்ள முடியவில்லை. பணக்காரர்கள் என்றாலே அலர்ஜி வரும் அளவுக்கு அவனது தந்தையின் போதனைகள் அவனை மயக்கியிருந்த காலகட்டம் அது.
ப்ரீத்தியின் அலட்டல்களும் கொஞ்சம் அதிகமாக இருந்த சமயம் அது. அவளை வைத்து வான்மதியை எடை போடக்கூடாதுதான். ஆனாலும் ஒருவித ஒதுக்கம் தன்னையறியாது வருவதைப் பூபாலனால் தவிர்க்க முடியவில்லை.
“பாலா?”
மொபைலில் அவள் அழைக்கவும் “ஹான்! அது நீங்க அழுதிங்க. அதான் எப்பிடி இருக்கிங்கனு விசாரிக்க கால் பண்ணுனேன். மத்தபடி ஒன்னுமில்ல. நான் சாப்பிடப் போகணும். போனை வச்சிடவா?” என்று சுரத்தின்றி அவன் கேட்டான்.
வான்மதிக்கோ அவனது இந்த மரியாதைப் பன்மை உறுத்தியது. சற்று முன்னர் வரை சகஜமாகப் பேசியவனுக்கு இப்போது என்னவாயிற்று? இருப்பினும் இதை அவனிடம் கேட்க அவளுக்கு உரிமை இல்லையே!
“சரிங்க! நீங்க சாப்பிடுங்க. குட் நைட். தேங்க்ஸ் ஃபார்….”
அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
வான்மதிக்கு இன்னும் திகைப்பும் குழப்பமும் அதிகமானது. யோசனையோடு படுக்கையில் கிடந்த பூபாலனின் கைக்குட்டையைப் பார்த்தவளுக்கு அவனது பேச்சுத்தொனி மாறியது ஏன் என்ற கேள்வியில் ஒரு வாரம் கழிந்தது.
வாரயிறுதியில் தேனிலவுக்குக்காக உதகமண்டலம் சென்றிருந்த ஜோதிர்மயியிடம் இருந்து திடீர் அழைப்பு.
என்னவென விசாரித்தால் அனிருத்தும் அவளும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தைப் பெரிதாக ப்ரேம் செய்ய சொல்லியிருந்தாளாம் ஈடன் ஸ்டூடியோவில். அனிருத்துக்கு அந்தப் புகைப்படத்தைச் சர்ப்ரைஸ் பரிசாகக் கொடுக்கப் போகிறாளாம். அதனால் வீட்டினருக்குத் தெரியாமல் ஸ்டூடியோவிலிருந்து அதை வாங்கி வருமாறு தோழியிடம் கோரிக்கை விடுத்தாள்.
“போடி எனக்கு டயர்டா இருக்கு”

“ப்ளீஸ் மதி! நானே ஆசைப்பட்ட இடத்துக்கு ஹனிமூன் போகமுடியலங்கிற கவலைல இங்க இருக்கேன். அட்லீஸ்ட் இதாச்சும் நான் ஆசைப்பட்ட மாதிரி இருக்கட்டுமே”
அவள் ஆசைப்பட்டது போல சிம்லா செல்ல இருவீட்டாரும் அனுமதிக்கவில்லை. கொரானா பரவல் பற்றிய பயம் அனைவருக்கும். இந்த அமளி துமளி எல்லாம் அடங்கி நோய்ப்பரவல் முழுவதுமாகக் குறைந்த பிறகு எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள்ளும்படி கூறிவிட்டார்கள்.
முதலில் செல்லவேண்டுமா என யோசித்த வான்மதி பின்னர் பூபாலனோடு பேச வேண்டிய விசயம் நினைவுக்கு வரவும் சம்மதித்தாள்.
லாக்டவுன் காலத்திய நட்டத்தை ஈடு கட்டவேண்டும் என்பதால் ஈடன் ஸ்டூடியோவுக்கு ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. போட்டோகிராபர்கள் சுழற்சி முறையில் விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். அரசாங்கம் சொன்ன விதிகளைக் கடைபிடித்து இயங்கிவந்தார்கள் அங்கிருந்த அனைவரும்.
வான்மதி அங்கே சென்றபோது பூபாலன் இல்லை. அன்று அவனது விடுமுறை நாள் என்றார் மாஸ்க் அணிந்த ரிசப்சனிஷ்ட் பெண்மணி.
“எனக்கு அவரோட அட்ரஸ் கிடைக்குமா?” வான்மதி கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு ஐயம்.
“அவர் எனக்குப் பக்கத்து ஊர்க்காரர். கொஞ்சம் பேசணும். அதனாலதான்..” எனக் காரணத்தைச் சொன்னதும் அப்போது பூபாலன் தங்கியிருந்த பி.ஜியின் முகவரியைக் கொடுத்தார்கள்.
தனது ஸ்கூட்டியில் அவனது பி.ஜியை அடைந்தவள் அது ஆண்கள் மட்டும் தங்கும் பி.ஜி என்பதால் கொஞ்சம் தயங்கி கீழ்த்தளத்தில் நின்றபடி பூபாலனின் எண்ணுக்கு அழைத்தாள்.
முதலிரண்டு அழைப்புகள் தவறிவிட வேறு வழியின்றி பி.ஜியை நிர்வகிப்பவரிடம் அவனைப் பற்றி விசாரித்துத் தான் வந்திருப்பதாகக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள்.
அவரும் அவனிடம் மொபைல் மூலம் விபரம் தெரிவிக்க, அடுத்தச் சில நிமிடங்களில் அவள் கண் முன்னே வந்து நின்றான் பூபாலன்.
சட்டையை அவசரமாக அணிந்து வந்திருப்பான் போல. பட்டன்கள் சரியாக மாட்டாமல் கிடந்தன.
ஜோதிர்மயியின் திருமணத்தில் அவளுடன் உரையாடிய பூபாலன் இல்லை இவன். அவன் கண்களில் குறும்பும், ரசனையும், விசமத்தனமும் கொட்டிக் கிடந்தன. இப்போதோ ‘விலகி நில்’ என்று அல்லவா அந்த விழிகள் வான்மதியிடம் கூறுகின்றன.
“பாலா”
“சொல்லுங்க” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டவன் தன்னை விலக்கி நிறுத்துவது போன்ற மாயை. ஏன் என்று புரியாமல் அவனுடைய கைக்குட்டையை நீட்டினாள்.
“இதைக் குடுக்கவா வந்திங்க?” கேட்டபடியே வாங்கிக்கொண்டான்.
“இங்க வர்றதுக்கு எனக்குக் கிடைச்ச காரணம் இது மட்டும்தான்” என்றாள் வான்மதி நிதானமாக.
“சரி! கிளம்புங்க” என்னைச் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம் என்னவென விசாரிக்கக் கூட செய்யாமல் விரட்டுபவனிடம் மேற்கொண்டு பேச வான்மதிக்கும் மனமில்லை.
அதே நேரம் காரணம் தெரியாமல் கிளம்பவும் அவளது குழப்பம் அவளை அனுமதிக்கவில்லை.
“நான் போகத்தான் போறேன். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன? சுருக்கமா சொல்லிட்டுப் போங்க”
இதென்ன முகத்திலடித்தாற்போல பேசுவது? அதுவும் என்ன காரணமெனக் கூறாமல் விலக்குவது? முகமும் மனமும் ஒரு சேர வாடியது வான்மதிக்கு.
“நான் இங்க நிக்குறேன் பாலா. நீங்க ரொம்ப நேரமா அந்தக் கேட்டைப் பாத்துப் பேசிட்டிருக்கிங்க”
சட்டெனத் திரும்பியவனின் விழிகளில் க்ஷணப்பொழுதில் வந்து போனது பிரகாசம்.
“இப்ப சொல்லுங்க”
“எதுக்காக உங்க பேச்சு, பிஹேவியர்ல மாற்றம்? இந்த மாற்றம் ரொம்ப உறுத்தலா தெரியுது பாலா”

“உறுத்துற அளவுக்கு நமக்குள்ள என்ன பழக்கம்? கல்யாணத்துல பாத்துக்கிட்டோம். உங்களுக்கு முடியாம இருந்தப்ப நான் கூட இருந்தேன். அவ்ளோதான்! மனிதாபிமான அடிப்படைல நான் நிறைய பேருக்கு உதவியிருக்கேன்ங்க. அவங்க எல்லார் கூடவும் ஃப்ரெண்டா இருக்கணும்னு அவசியமில்லையே!”
“அவசியமில்லைங்க. ஆனா என் கிட்ட ஜோவியலா பேசுன நீங்க திடீர்னு விலகி நிக்க காரணம் என்னனு தெரிஞ்சிக்கிற உரிமை எனக்கு இருக்குல்ல? சொல்லுங்க! நான் ஏதாச்சும் உங்களைக் காயப்படுத்துற மாதிரி பேசிட்டேனா?”
பூபாலனிடமிருந்து மெல்லிய முறுவல் வரவும் வான்மதியின் இதழ்களும் மலரத் துடித்தன. ஆனால் அவள் சிரிக்கவில்லை. அவளது குழப்பத்திற்கானத் தீர்வும், அதை ஏற்படுத்தியவன் சொல்லப்போகிற காரணமும் தெரியவரும்வரை அவள் சிரிக்கப்போவதேயில்லை.
தனது சிரிப்பை அவள் பிரதிபலிக்கவில்லை என்றதும் பூபாலனின் முறுவல் மறைந்து போனது.
சுற்றியுள்ள ஆண்கள் அனைவரும் தங்களை மட்டுமே பார்ப்பது போல உணர்ந்தவன் “இங்க வச்சு பேசவேண்டாம். அப்பிடியே நடந்துக்கிட்டே பேசலாம்” என்க சரியெனத் தலையாட்டியவள் அவனோடு நடந்தாள்.
ஜே.சி.கே நகர் பூங்காவின் வழியே நடந்தவர்கள் பூட்டிக் கிடந்த பூங்காவைக் கவனித்தார்கள். அடங்கியிருந்த கொரானா மீண்டும் பரவுவதைப் பற்றிய செய்திகளைத் தொலைகாட்சியில் பார்க்கிறார்களே!
சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது எல்லாம் தீவிரமாகக் கடைபிடித்த காலம் மலையேறிவிட்டது என்றாலும் இரண்டாம் அலை பற்றிய பயத்தில் மக்கள் நடமாட்டம் தெருவில் குறைந்திருந்தது.
பூபாலன் தன்னிடமுள்ள மாஸ்க் ஒன்றை கொடுத்து அவளை அணிய வைத்தான்.
“எதுக்காக உங்க பேச்சு, பிஹேவியர் எல்லாம் மாறுச்சுனு தெரிஞ்சிக்கலாமா?”
வான்மதியே ஆரம்பித்துவைத்தாள்.
பூபாலனுக்கு அதற்கானக் காரணத்தைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தன்னை பத்தாம்பசலி என எண்ணுவாளோ? பணக்காரர்களை வெறுக்கும் ஆளாக நினைத்துவிடுவாளோ? இந்தக் கேள்விகள் எல்லாம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
“உங்களை ஃபர்ஸ்ட் பாத்ததும் ரொம்ப சிம்பிளா, அலட்டல் இல்லாம, சகஜமா பழகுற பொண்ணா தெரிஞ்சிங்க. எனக்கும் உங்க கிட்ட பேச எந்தத் தடையும் இல்ல. ஆனா… ப்ச்! நீங்க ரொம்ப பெரிய இடம் வான்மதி. எனக்கும் பணக்காரங்களுக்கும் எப்பவும் செட் ஆகாது. சோ…”
தோளைக் குலுக்கியபடி சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வான்மதி. இதெல்லாம் ஒரு காரணமா என்ற ஆச்சரியத்துடனான கேள்வியை அவளது விழிகள் விரிந்த விதத்தில் படித்துத் தெரிந்துகொண்டான் பூபாலன்.
“தகுதிக்கு மிஞ்சுன இடத்துல ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்குறது இல்ல. அதுக்காக உங்களை நான் தப்பா சொல்லலை. என்னவோ எனக்கு ஒட்டலங்க”
“இதெல்லாமே நான் எந்த வீட்டுப்பொண்ணுனு தெரியுறதுக்கு முன்னாடி இல்லையே! ஏன் நீங்க இந்த மாதிரி யோசிக்குறிங்க பாலா? பணக்காரங்க எல்லாருமே டாம்பீகமா திமிராதான் இருக்கணும்னு ஏதாச்சும் கட்டாயம் இருக்குதா? பணம் அதிகமாக அதிகமாக எளிமை வரணும்னு சொல்லி வளர்த்தவர் எங்கப்பா. பணம் இருக்குங்குற காரணத்துக்காக திமிரா நடந்துக்குறது பெரிய முட்டாள்தனம்னு அவர் சொல்லுவார். ஏன்னா பணமோ வசதி வாய்ப்போ நிரந்தரமானது இல்லனு அவருக்குத் தெரியும். இன்னைக்கு எங்க கிட்ட இருக்குற பணம் நாளைக்கே உங்க கைக்கு வரலாம். உங்க வாழ்க்கை நான் கற்பனை பண்ணிக்கூட பாக்க முடியாத அளவுக்கு உயரலாம். நிரந்தரமில்லாத பணத்துக்காக நீங்க என்னை அவாய்ட் பண்ணுறிங்க பாருங்க”
வருத்தத்தோடு அவள் முடிக்க பூபாலனுக்குத் தர்மச்சங்கடமாகிப் போனது. அவன் பதில் பேசாமல் நிற்கவும் இத்துணை தூரம் விளக்கியும் அவனது நிலை மாறவில்லை என்றதும் அவளுக்கே வெறுத்துப் போனது.
“இங்க பாருங்க! அங்கங்க மறுபடி கொரானா பரவுதுனு பேசுறாங்க. தமிழ்நாட்டுல கூட கேஸ் அதிகமாகுதாம். நீங்களும் நானும் இன்னைக்கு உயிரோட இருக்குறோம். நாளைக்கு இருப்போமோ மாட்டோமோ? இந்த மாதிரி நேரத்துல கூட இப்பிடி பேசுறிங்களே., உங்களை என்ன சொல்லுறது? எனிவே உங்க கர்சீப்பைக் குடுக்க வந்தேன். கிளம்புறேன்”
அவனது கைக்குட்டையைக் கொடுத்தவள் அவன் கொடுத்த மாஸ்கோடு கிளம்பினாள். இன்னும் சில நாட்களில் அவனேத் தன்னைத் தேடி வந்து பேசுவான் என யாரும் சொல்லியிருந்தால் கூட அப்போது வான்மதி நம்பியிருக்கமாட்டாள்.
PDF திருடாதீர்கள்!