கபூர் பேலஸ்…
திருமணம் முடிந்து வருணும் பிரதியுஷாவும் புதுமணக்கோலத்தில் கிரகபிரவேசம் முடிந்து வீட்டுக்குள் வந்துவிட்டனர். இளையவர்கள் அவர்களுக்கே உரிய உற்சாகத்துடன் கேளிக்கை விளையாட்டுகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்களில் மணமக்களைக் கலந்துகொள்ள வைத்து அவர்களை வெட்கப்பட வைத்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் அதைக் கண்ணாறக் கண்டு ரசித்தனர்.
மிச்சமீதியிருந்த சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு மணமக்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்பிவிட்டனர். ராகவ் தனது அறைக்குள் சென்றவன் சோபாவில் அக்கடாவென்று சரிந்தான். கண்ணை மூடி யோசித்தவனின் நினைவலைகளில் அவந்திகா வந்து செல்ல, அவளைப் பற்றி எண்ணும் போதே அவன் இதழ்களில் குறுநகை ஒன்று விளையாடியது.
அவளைக் காணும் முன்னர் யாரேனும் இன்னும் சில நாட்களில் அவன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறெல்லாம் எண்ணிச் சிரிப்பான் என்று சொல்லியிருந்தால் ராகவ் அதை நம்பிருப்பானோ என்னவோ! ஆனால் அவனை அறியாமல் இப்போதெல்லாம் அவன் மனம் அடிக்கடி அவந்திகாவைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது. அவளை நேரில் கண்டால் அவளைத் தவிர வேறு யாருமே கண்ணில் தெரிவதில்லை அவனுக்கு. அவளுடன் கேலி பேசி, அவளைக் கோபப்படுத்திப் பார்ப்பது அவனுக்கு விருப்பமானப் பொழுதுபோக்காகி விட்டது என்பதே உண்மை.
நாளைக்கு மாலை நேரத்தில் வருண் மற்றும் பிரதியுஷாவின் வரவேற்பு இருந்தது. அதில் அவள் கட்டாயம் கலந்துகொள்வாள் என்று எண்ணும் போதே, நாளை அவளை என்ன சொல்லி கோபப்படுத்தலாம் என்று விசித்திரமாகச் சிந்திக்க ஆரம்பித்தது அவனது மூளை.
அவனது எண்ணங்களின் நாயகியோ பிரதியுஷாவின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கௌசல்யாவுடன் வீடு திரும்பியவள் முதலில் பட்டுப்புடவையை மாற்றிவிட்டு இரவுடையை அணிந்து கொண்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவள் மனம் முழுவதும் சோகம் கப்பிய மைதிலி மற்றும் ராஜ்வர்தனின் முகமே நினைவுக்கு வந்தது. இன்னும் ஆறே மாதங்கள் தான். அதன் பின்னர் ஏதோ ஒரு நாளில் அவளும் இப்படி இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும். அன்றைக்கு கௌசல்யாவும் ரகுவரனும் கூட இப்படித் தானே வருந்துவார்கள் என்று சிந்தித்தபடி ஜன்னலருகே வந்து அமர்ந்தாள் அவள்.
அவர்கள் வருந்துவது ஒரு புறம் இருக்கட்டும்; முதலில் தான் எப்படி கௌசல்யா, ரகுவரன், அம்புஜா மற்றும் அர்ஜூன் இவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்திருக்கப் போகிறோம் என்று திகைத்துப் போனாள். என்ன தான் ராகவும் அவனது குடும்பத்தினரும் இப்போது அவளது விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும் அங்கே அவளால் இங்கிருப்பது போன்ற சுதந்திரத்துடன் இருக்க முடியுமா என்ற கேள்வி அவளுக்குள் பூதாகரமாக உருவெடுத்தது.
அங்கே ஒருவன் அவளை எண்ணிக் கனவு கண்டுகொண்டிருப்பதை அறியாதவளாய் வருங்காலம் குறித்தக் கலக்கத்துடன் சிறிது நேரத்தில் நித்திராதேவியின் பிடியில் ஆட்கொள்ளப்பட்டாள் அவந்திகா.
மறுநாளின் பொன்மாலைப் பொழுதில் வருண், பிரதியுஷாவின் வரவேற்பு இனிதே ஆரம்பித்தது. திருமணம் எளிமையாக நடைபெற்றதால் வரவேற்பு பிரம்மாண்டமாகவே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் திருமண ஏற்பாடுகளோடு சேர்த்து ரித்திமாவும் அவந்திகாவும் சிறப்பாகவே செய்துவிட்டிருந்தனர்.
இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள், கிளையண்ட்கள் என்று அன்றைக்கு அந்த வரவேற்பால் மெரிடியன் ஹோட்டல் நிரம்பி வழிந்தது.
வந்தவர்கள் அனைவரும் வரவேற்பு ஏற்பாட்டைப் புகழ்ந்து தள்ள மோகனும் குணாலும் அவந்திகா மற்றும் ரித்திமாவை அழைத்து அவர்கள் தான் இவ்வளவையும் தனியாய் செய்து முடித்தவர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தனர்.
மேடையில் பிரதியுஷாவும் வருணும் சந்தோசத்தில் முகம் ஜொலிக்க அழகான அரியாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்து கலகவென்று இல்வாழ்க்கையின் இனிமையையும் உணரத் தொடங்கிவிட்ட ஆனந்தம் அவர்கள் இருவருக்கும் தனியழகைக் கொடுத்தது.
அவர்கள் இருவரிடமும் இளையவர்கள் வம்பிழுத்துக் கொண்டிருக்க மேடையில் வருணை மற்றவர்களின் கிண்டலில் இருந்து காக்கும் அரணாக இருந்த ராகவ் சிரித்தபடி கீழே தனது தந்தையுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவந்திகாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மோகனிடம் அவள் தங்குதடையின்றி பேசுவதைக் கண்டவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்தால் என்ன என்று யோசித்தபடி கிஷோரிடம்
“நீ வருண் பய்யா கிட்ட பேசிகிட்டிரு…. நான் டாட் கிட்ட ஒரு இம்ப்பார்ட்டெண்ட் மேட்டர் டிஸ்கஸ் பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையிலிருந்து எழ
“டிஸ்கஸ் பண்ணப் போறது பெரியப்பா கிட்டவா? அவந்திகா கிட்டவா?” என்று கண்சிமிட்டியவனின் தோளில் தட்டிக் கொடுத்த ராகவ்
“நீ ரொம்ப புத்திசாலிடா… யார் கிட்ட டிஸ்கஸ் பண்ணப் போறேனு தெரிஞ்சும் கேள்வி கேக்கிற பாரு, அங்கே நிக்கிற நீ… டோண்ட் ஒரி… பாபி கூப்பிட்டாங்கனு சொல்லி ரித்திமாவை இங்கே அனுப்பி வைக்கிறேன்” என்று பதிலுக்குக் கண்ணைச் சிமிட்ட
“தெய்வமே! நீங்க நல்லா இருக்கணும்” என்று சொன்ன கிஷோரின் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்கி அவந்திகாவும் மோகனும் அமர்ந்திருந்த மேஜையில் கிடந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான்.
மோகன் மகனைக் கண்டதும் “என்னாச்சு மை சன்? ஏன் உன் அண்ணனை விட்டுட்டு இங்கே வந்துட்ட? எனிதிங் சீரியஸ்?” என்று கேட்க ஆமென்று தலையச்சைத்தான் ராகவ்.
அப்படி என்ன விஷயம் என்று மோகனுடன் அவந்திகாவும் புருவம் சுருக்கி தீவிரமான முகபாவத்துடன் அவனை நோக்க, ராகவ் இலகுவான குரலில்
“போர் அடிச்சுது டாட்.. அதான் இந்த ஜான்சிராணியைக் கொஞ்சம் கோவப்படுத்திப் பார்ப்போமேனு வந்தேன்” என்று சொன்னபடி கால் மேல் கால் போட்டுச் சட்டமாக அமர்ந்து கொண்டவன் தங்களைக் கடந்து சென்ற ரித்திமாவிடம்
“ரித்தி! உன்னை பாபி ஸ்டேஜுக்குக் கூப்பிட்டாங்க… போய் கொஞ்சம் என்னனு கேளு” என்று கட்டளையிடும் குரலில் சொல்ல அவளும் பிரதியுஷா எதற்கு அழைத்திருப்பாள் என்ற யோசனையுடன் மேடையை நோக்கிச் சென்றாள்.
அதே நேரம் மோகனுடன் அமர்ந்திருந்த அமந்திகா ராகவின் தோரணையில் கடுப்புற்றவள் “அங்கிள் வருங்காலத்துல எனக்கு பிரஷர், சுகர் வந்துச்சுனா உங்க மகன் தான் காரணமா இருப்பான்… எப்போ பார்த்தாலும் என்னை இரிட்டேட் பண்ணுறதையே வேலையா வச்சிருக்கான்” என்று சொல்லிவிட்டு ராகவை முறைக்க அவனோ நான் அப்படி தான்; உன்னால் என்ன செய்துவிட முடியும் என்ற ரீதியில் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மோகனிடம்
“டாட்! அம்மா உங்களைக் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு… என்னனு கொஞ்சம் பாருங்களேன்” என்று சொல்ல
மோகன் மகனின் குறிப்பை உணர்ந்து கொண்டவர் “புரியுதுடா மகனே! நான் இடத்தைக் காலி பண்ணுறேன்… அவந்திகா பேசிட்டிரும்மா” என்று சொல்லிவிட்டு ராதிகா அமர்ந்திருந்த மேஜைக்கு நழுவினார்.
அவர் சென்றதும் அவந்திகா “அப்பிடி என்ன தலை போற விஷயத்தைப் பேசணும்னு நீ அங்கிளைப் போகச் சொன்ன ராகவ்?” என்று புரியாமல் விழிக்கவும் ராகவ் இவ்வளவு நேரம் இருந்த அலட்சியபாவம் நீங்கி நேராய் அமர்ந்து கொண்டான்.
“தலை போற விஷயமா இருந்தா தான் பேசணுமா ஜான்சி ராணி? யூ ஆர் மை ஃபியான்ஸி… வருங்காலத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ண நமக்குள்ள எவ்ளோவோ விஷயம் இருக்கு”
“அஹான்! அந்த வருங்காலம் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு… சாருக்கு மறந்து போச்சா?” என்று சொல்லிவிட்டு தன் முன்னே வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளரில் இருந்த ஜூசை அருந்த தொடங்கினாள் அவந்திகா.
“சே சே! மறக்கக் கூடிய விஷயமா அது? இன் ஃபேக்ட் ஐ யாம் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் தட் மொமண்ட்… நினைச்சுப் பார்த்தா கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு… சரி அதை விடு! நம்ம ஹனிமூனுக்கு எங்கே போகலாம்?” என்று ராகவ் சாதாரணமாகக் கேட்டுவைக்க ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தவளுக்கு புரையேறிவிட்டது.
தலையில் தட்டிக்கொண்டபடி இருமி முடித்தவள் தனது துப்பட்டாவால் மூக்கை அழுந்த துடைத்துக் கொண்டாள். ராகவுக்கு அவளது செய்கைகள் சிரிப்பை வரவழைக்க அவன் நமட்டுச்சிரிப்புடன்
“ஹனிமூன்னு சொன்னதுக்கே புரையேறுது ஜான்சி ராணிக்கு… ப்ச்! நான் உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுனு நினைச்சேனே” என்று அவளைச் சீண்ட
“ஷட் அப்! இன்னும் மேரேஜ் டேட்டே ஃபிக்ஸ் பண்ணலை… அதுக்குள்ள ஹனிமூன் வரைக்கும் போயிட்டியா நீ?” என்று சீறியவளைச் சுவாரசியத்துடன் பார்த்தவன்
“இதுக்கே கோவப்பட்டா என்ன அர்த்தம்? நான் நம்ம பையனுக்கு நேம் கூடச் செலக்ட் பண்ணிட்டேன் தெரியுமா?” என்று சொல்லி அவந்திகாவைத் திகைப்பில் ஆழ்த்தினான் அவன்.
ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவளின் தலையில் செல்லமாகத் தட்டியவன் “ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற? பையனோட நேம் சொல்லணுமா?” என்று குறும்பாகக் கேட்க அவந்திகா இல்லையென்று வேகமாகத் தலையாட்டி மறுத்தாள்.
“போதும் ஜான்சி ராணி! ரொம்ப ஷாக் ஆகாதே! மேரேஜ், ஹனிமூன், பேபிஸ் எல்லாமே லைஃபோட ஒரு பார்ட்.. அதுக்கு இவ்ளோ ஷாக் ஆக வேண்டிய அவசியமே இல்லை” என்று ராகவ் சொல்லவே
“அதுல்லாம் கரெக்ட் தான்… ஆனா அந்த மேரேஜ் லைஃபோட அடிப்படை காதல் தான்… அது இல்லாம எப்பிடி ஹனிமூன், பேபினு நீ பாட்டுக்கு யோசிக்கிற?” என்று கண்ணை ஆச்சரியத்துடன் விரித்தாள் அவந்திகா.
ஆனால் ராகவ் உனக்கென்ன பைத்தியமா என்பது போல அவளைப் பார்த்தபடி மேஜையின் மீது இரு கரங்களையும் கோர்த்து வைத்தவன் “லவ் இல்லாம கல்யாணமே பண்ணக்கூடாதுனா இந்தியாவுல முக்கால்வாசி பேரு சாமியாரா தான் சுத்தணும் ஜான்சிராணி… பிராக்டிக்கலா திங் பண்ணு” என்று அவளுக்கு அறிவுறுத்த
அவந்திகா தலையைச் சிலுப்பியவள் “அஹான்! அப்போ நீ கனவுல கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கோ மைதாமாவு… லவ் இல்லாத ஒரு மேரேஜ் லைஃபை நான் யோசிச்சுக் கூடப்பார்க்க மாட்டேன்” என்று பிடிவாதமாக உரைக்க
“உன்னோட பிடிவாதத்தை நீயே வச்சுக்கோ… அதை இங்கே யாரும் காது குடுத்துக் கேக்கப் போறதில்லையே” என்று அவன் தோளைக் குலுக்கி விட்டு அசட்டையாக மொழிய அதில் எரிச்சலுற்ற அவந்திகா சட்டென்று அங்கிருந்து எழுந்தாள்.
“போடா! இனிமே என் கூடப் பேசாதே நீ.. ஐ ஹேட் யூ” என்று கோபத்துடன் உரைத்துவிட்டுச் செல்பவளைக் கண்டால் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
எப்போது இந்தப்பெண் நிதர்சனத்தைப் பற்றி யோசிப்பாள் என்று எண்ணியவனுக்கு அவளது காதல் இல்லாத கல்யாணவாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ற அவளது பிடிவாதம் இப்போதும் பிடிபடவில்லை.
அதே நேரம் அவந்திகாவுக்கோ ராகவை எந்த வகையறாவில் சேர்ப்பது என்றே புரியவில்லை. அவளுடன் இருக்கையில் அவன் காட்டும் அக்கறை, அவனது புன்சிரிப்பு இதெல்லாம் வேறு ஏதோ எண்ண வைக்க அந்தப் பிடிவாதக்காரனோ இதெல்லாம் காதல் என்ற அர்த்தத்தில் சேராது என்றும், இந்த ஜென்மத்தில் காதலிக்கும் முட்டாள்தனத்தைத் தான் செய்யப்போவதில்லை என்றும் சொல்லி சொல்லியே அவந்திகாவுக்கு எரிச்சலை மூட்டினான்.
அன்றைய வரவேற்பில் அவந்திகா முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சுற்றவும் இரு குடும்பத்தினரும் ராகவிற்கும் அவளுக்குமிடையே ஏதோ பிணக்கு போல என்று எண்ணத் தொடங்கினர். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதைப் போல ராகவ் சாதாரணமாகத் தான் நடந்து கொண்டான் பின் வந்த நாட்களில். ஆனால் அவந்திகாவோ அவளது பிடிவாதத்தை விட்டு இறங்கிவருவதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
தான் ஒன்றும் அவனிடம் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சவில்லையே என்ற எண்ணம் அவளுக்கு. தன்னைக் காதலிக்காத ஒருவனுடன் எப்படி ஒரு பெண்ணால் மனமொத்து வாழ முடியும் என்பது அவளது வாதம்.
ஆனால் ராகவ், தான் அவள் மீது இவ்வளவு அக்கறையாக இருந்தும் தனது அக்கறையைப் புரிந்து கொள்ளாமல் இந்தப்பெண் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாளே என்று சலிப்படைந்துவிட்டான். அவனது மனம் அவந்திகாவின் அருகாமையை நாட அவளோ தன்னைக் காதலிக்காமல் சும்மா சும்மா தன்னைச் சீண்டுபவனை தன் அருகில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை.
அதிலும் அவளது பயமே அவனது அருகாமையில், தான் மெய்மறந்துவிடுவோமோ என்பது தான். காதலிக்கவே மாட்டேன் என்று அவளிடமே சவால் விடுபவனிடம் மயங்கிவிட அவள் விரும்பவில்லை. எனவே வரவேற்பு நிகழ்வுக்குப் பின்னர் அவனை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டாள். இது எவ்வளவு நாளுக்கு என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் ராகவ் என்பவனுக்குக் காதலின் மகத்துவம் புரியும் வரை தான் அவனை விட்டு விலகியிருப்பதே தனக்கு நல்லது என்று மனதிற்குள் தனக்கு அறிவுறுத்திக் கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


