பிடித்ததைச் செய்யும் சுதந்திரம் என்றுமே எனக்கு மறுக்கப்பட்டதில்லை. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்ததால் கிடைத்த ‘ப்ரிவிலெட்ஜ்’ இது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். ஆனாலும் விரும்பியதைச் செய்ய அஞ்சுபவர்களைக் கண்டால் ஏனோ எரிச்சல் உண்டாகிறது. பிடித்தக் காரியத்தைச் செய்யும் முன்னர் சமூகத்தைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தினரைக் கருத்தில் கொண்டு, உடன்பிறந்தவர்களைக் கருத்தில் கொண்டு – இப்படி எத்தனை நபர்களைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது! ஒரு நேரம் அவ்வாறு தயங்குபவர்களை நினைத்தால் பரிதாபமும் தோன்றும். அவர்கள் இடத்தில் நீ இருந்தால் மட்டுமே அந்தத் தர்மசங்கடமான உணர்வை உன்னால் புரிந்துகொள்ள முடியுமென என் தந்தையும் அடிக்கடி கூறுவார். ஆனாலும் இத்தகைய தயக்கமும் தடுமாற்றமும் என்னளவில் கோழைத்தனமே!
-வான்மதி
வான்மதி கடுப்போடு வீட்டை விட்டு வெளியேறியவள் ரோலர் சூட்கேசையும் ஹேண்ட்பேக்கையும் திண்ணையில் வைத்துவிட்டுத் தமையனின் எண்ணுக்கு அழைத்தாள்.
அவன் பாதி தூரம் கூட போயிருக்கமாட்டான். நிச்சயம் தனது அழைப்பை ஏற்பான் என்ற நம்பிக்கையில் அவள் அழைப்பு விடுக்க ரிங் போனதேத் தவிர அழைப்பை ஏற்பாரில்லை.
சரி போகட்டும், தந்தையின் எண்ணுக்கு அழைத்து அவரது அருமை மருமகனின் திமிர்த்தனத்தைப் பற்றி சொல்லலாம் என்றாலோ அவரது மொபைலும் பிசியாகவே இருந்தது.
பின்னர்தான் பூமிகா – வெங்கடேஷின் மறுவீட்டு நிகழ்வு நினைவுக்கு வந்தது வான்மதிக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பூமிகாவும் வெங்கடேஷும் வீட்டுக்கு வந்திருப்பார்களோ? இந்நேரத்தில் முத்தரசி இல்லத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கும். அதனால்தான் தனது அழைப்புகளை ஏற்க ஆளில்லை போல!
சோர்ந்து போனவளாக நகம் கடிக்க ஆரம்பித்தவளின் பின்னே காலடி சத்தம் கேட்க “வீட்டு வாசல்ல நின்னு நகம் கடிச்சா வீட்டுக்கு ஆகாதாம்” என்று அழுத்தமாகப் பூபாலனின் குரலும் அதனோடு சேர்ந்து கேட்டது.
வான்மதி திரும்பிப் பார்க்கையில் கையில் ஆரத்தி கரைத்த தட்டின் நடுவே வெற்றிலையும் அதில் ஜொலிக்கும் கற்பூரமும் ஏந்தி நின்று கொண்டிருந்தான் பூபாலன்.

அவள் புதிராய் நோக்கினாள்.
“உன்னை இந்த வீட்டை விட்டுப் போகச் சொன்னது நான். நானே முறைப்படி அழைச்சாதானே அந்தத் தப்பைத் திருத்துனதா அர்த்தம்?” என்றவன் “லக்கேஜ் எடுத்துட்டு இப்பிடி வந்து நில்லு” என்று ஆணையிட வான்மதியும் அவனிடம் வாதாடாமல் தனது உடமைகளுடன் அவன் முன்னே நின்றாள்.
மகன் அருகே நின்று கொண்டிருந்த சங்கரியின் முகத்தில்தான் பூரிப்பு அடங்கவில்லை.
பூபாலன் வான்மதிக்கு ஆலம் சுற்றி நெற்றியில் திலகமிட்டவன் “இனிமே என் வாய்ல இருந்து இங்க இருந்து போங்கிற வார்த்தை வராது” என்க, வான்மதியின் கண்கள் அவளையறியாமல் கலங்கின.
அவர்களது பிரிவை விட அவளை நோகடித்தவை அவன் உதிர்த்த வார்த்தைகளே! அந்த வார்த்தைகள் உருவாக்கிய இரணத்தை அன்பான வார்த்தைகளாலும், அக்கறையானச் செயல்களாலும் ஆற்ற முயல்கிறான்! அவனது தவறையும் ஒப்புக்கொள்கிறான்!
“தட்டைக் குடு பாலு. நீ வானும்மாவ அழைச்சிட்டு உள்ள போ” என்றார் சங்கரி.
அதே நேரம் தெருவில் யாரோ “சங்கரி வீட்டுக்கு இளைய மருமவ வந்தாச்சு போல?” என்று கேட்க
“ஆமாக்கா! எங்க வீட்டுப்பொண்ணு திரும்பி வந்திருக்கா. மத்ததை அப்புறமா பேசலாம்” என்று பேச்சைக் கத்தரித்துக்கொண்டு ஆலம் கரைத்த நீரை தெருவில் கற்பூரத்தோடு சேர்த்துக் கொட்டிவிட்டுத் திரும்பினார்.
பூபாலனின் கரம் பற்றி வான்மதி வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதைக் கண்கள் கனிய பார்த்தவர் “இனிமே இவங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் வராம பாத்துக்க முருகா” என்று வேண்டிக்கொண்டு வீட்டுக்குள் வந்தார்.
வான்மதி போய்விடுவாள் என்ற குணசேகரனின் குதூகலத்தில் லாரி மண்ணை அள்ளிப் போட்டு அவரது மகனே அவளது கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வரவும் மனிதருக்கு அதிர்ச்சியில் மூச்சே நின்று போன உணர்வு.
“என்னப்பா பாலு இது?” என்று அதிருப்தியைக் காட்ட முயன்றவரை எவ்விதக் கனிவுமற்ற விழிகளால் அளவிட்டான் பூபாலன்.
“மகனும் மருமகளும் சேர்ந்து வாழப்போறாங்கனு நீங்க நியாயப்படி சந்தோசப்படணும்பா”
“இவ கூட உன்னால நிம்மதியா வாழமுடியாது பாலு. இவளோட அம்மா பணத்திமிர் பிடிச்சவங்க. அப்பப்ப அவங்க இவளுக்கு மந்திரம் ஓதுவாங்க. அதோட விளைவு நம்ம வீட்டுல உன் நிம்மதி கெட்டுப் போகும்”
“இனிமே அவங்களோ நீங்களோ எங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த விசயத்தையும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம்ங்கிறது என்னோட எண்ணம். எங்களுக்காக நாங்க யோசிச்சிக்குறோம்பா. எங்க சுமைய ரெண்டு வீட்டுப் பெரியவங்க தலையில இருந்து இறக்க நினைக்குறோம். சண்டையோ மனஸ்தாபமோ அதுக்கு யாரும் மத்தியஸ்தம் பேச வரவேண்டாம். நாங்களே பாத்துக்குறோம். அம்மாக்கு உடம்பு சரியில்ல. இன்னைக்கு நமக்கு மூனு வேளையும் மெஸ் சாப்பாடுதான். நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றவன் அன்னையை மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகுமாறு சொல்லிவிட்டு மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
வான்மதிக்கு அவனைப் போல இயல்பாக இருக்க முடியவில்லை.
அறைக்குள் வந்ததும் “ட்ரஸ்சை எடுத்து வச்சிடு. சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன்” என்று கிளம்ப எத்தனித்தவனை “ஒரு நிமிசம் பாலா” என்றவளின் குரல் தடுத்து நிறுத்தியது.
“எதுவுமே நடக்காதது மாதிரி எப்பிடி உங்களால இவ்ளோ இயல்பா இருக்க முடியுது?” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வினவினாள் வான்மதி.
பூபாலன் நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறிக்கொண்டான்.
“உனக்கு இப்ப சண்டை போடணுமா?” என்று நிதானமாகக் கேட்டான்.
இல்லையென்று தலையாட்டினாள் வான்மதி.
“அப்புறம் எதுக்கு?”
“என்னால இயல்பா இருக்க முடியல. மதிக்காதவங்க வீட்டுல வந்து உக்காந்திருக்குற மாதிரி அசௌகரியமா இருக்கு. இந்த ஃபீல் தொடர்ந்தா நல்லதுக்கு இல்ல. அதனாலதான் கேக்குறேன்”
“பழசை யோசிக்கிற மூளைக்குக் கொஞ்சநேரம் ரெஸ்ட் குடுத்தா இந்த ஃபீல் போயிடும்”
“பழசுனு எதைச் சொல்லுறிங்க? அப்பிடி பாத்தா நாம காதலிச்சது கூட பழசுதான்”
பூபாலனின் இதழ்க்கடையில் குட்டியாய் ஒரு முறுவல்.
“காதல் என்னைக்குமே பழசாகிறது இல்ல. அது எப்பவுமே இளமையோட புதுசா இருக்கும். உண்மையா காதலிச்சா மட்டும்!”
கடைசியில் குதர்க்கமாகப் புள்ளி வைத்துவிட்டு அவன் வெளியேற வான்மதியும் அவளது உடமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
அதற்கிடையே பலமான இருமல் சத்தம் கேட்கவும் யோசனையோடு சங்கரியைத் தேடிப் போனாள் அவள்.
சமையலறையில் எதையோ தேடிகொண்டிருந்தவர் மருமகள் வந்து நிற்கவும் பிரகாசமான முகத்துடன் “எதுவும் வேணுமா?” என்று கேட்க
“எனக்கு எதுவும் வேண்டாம். இவ்ளோ நேரம் விடாம இருமுறிங்க. டானிக் குடிச்சிங்களா?” என்று அக்கறையாய்க் கேட்டாள்.
சங்கரியின் கண்கள் அந்த அக்கறையில் கலங்கின.
“இங்க சினிமா ஷூட்டிங் எதுவும் நடக்குதா சங்கரி? அம்மா கூட சேர்ந்து உன்னைப் பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசுன வாய்ல இருந்து இவ்ளோ அக்கறையா வார்த்தை உதிருதே”
இந்தக் கேலிப்பேச்சுக்குச் சொந்தக்காரர் குணசேகரனன்றி வேறு யாராக இருக்க முடியும்!
சங்கரி தர்மசங்கடத்தில் தவிக்க வான்மதிக்கோ அவரது பேச்சு கேலியாக இருந்தாலும் அதிலிருந்த செய்தி உண்மை என்பதால் இதயம் கனத்துப்போனது.
பகவதியின் பேச்சைக் கேட்டுவிட்டு அவளும் ஆட்டம் போட்டிருக்கிறாளே! ஒவ்வொரு விசயத்துக்கும் ப்ரீத்தியைக் காரணம் காட்டி அவளும் சங்கரியை வார்த்தையால் வதைத்ததுண்டு. அந்த நினைவுகள் மனக்கண்ணில் எழுந்து அவளைப் பாடாய்ப்படுத்த அமைதியாய் அங்கிருந்து போய்விட்டாள்.
“வந்ததுமே என் அவளை வார்த்தையால கொல்லுறிங்க?”
மனம் பொறுக்காமல் கேட்ட சங்கரிக்கும் நாலு வார்த்தைகள் இலவசமாகக் கிடைக்க ஒருவழியாகப் பூபாலனும் சாப்பாட்டுடன் வந்துவிட்டான்.
அன்னைக்கும் தந்தைக்கும் சாப்பாடு பார்சல்களைப் பிரித்து வைத்தவன் தனக்கும் வான்மதிக்கும் வாங்கிய பார்சல்களைத் தங்களது அறைக்குள் எடுத்துச் சென்றான்.
பொருமலுடன் சாப்பிட ஆரம்பித்த குணசேகரனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
வான்மதிக்குப் பிடித்த இடியாப்பத்தைத் தட்டில் வைத்து தேங்காய் பாலை ஊற்றி சிறிது நாட்டுச்சர்க்கரை தூவிக் கொடுத்தான்.
அவனுக்காக வைத்திருந்த பார்சலில் மைதா பரோட்டாக்கள் சிரித்தன.
வான்மதி இடியாப்பத்தை அள்ளி விழுங்கப் போனவள் அந்தப் பரோட்டாக்களைப் பார்த்ததும் முகம் சுழித்தாள்.
“காலங்காத்தால எவன் புரோட்டா விக்குறான்?”
அவளது முணுமுணுப்பு காதில் விழுந்ததும் மெல்லிய புன்னகை அவனிடம்.

“மெஸ்ல கிடைக்கும்” என்றவனை முறைத்தபடியே சாப்பிட்டாள் வான்மதி.
அவர்கள் காதலித்தக் காலத்திலேயே மைதா பரோட்டாவைத் தவிர்க்குமாறு பல முறை அவனுக்கு அவள் அறிவுறுத்தியதுண்டு. அவன் தீவிர பரோட்டா பிரியனாய் இருந்ததால் அவனுக்காகக் கோதுமை பரோட்டா செய்யவும் கற்றுக்கொண்டாள்.
வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வீட்டு இரவுச்சமையல் மெனுவில் கோதுமை பரோட்டாவும், வெள்ளை குருமாவும் தவறாமல் இடம்பிடித்துவிடும்.
பழைய நினைவுகளின் வீரியத்தால் முகம் கனிந்தது வான்மதிக்கு. பூபாலனுக்கும் நெகிழ்ச்சியானத் தருணம்தான்.
மௌனமாய்ச் சாப்பிட்டு முடித்ததும் பூபாலனின் உதவியாளன் ஸ்டூடியோவிலிருந்து அவனை மொபைலில் அழைத்தான்.
“சொல்லுடா பிரபு… இப்பவா? ம்ம்… அம்மாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்டா… அந்தக் க்ளையண்ட் எவ்ளோ பெஸ்ட்னு எனக்கும் தெரியும்.. ஃப்ளைட்டா? ம்ம்ம்.. சரி! நான் வர்றேன்”
பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் வான்மதியிடம் வந்து நின்றான்.
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?”
“நீங்க குடுத்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டிருக்கேன். அதுக்காகப் பண்ணுவேன்”
இந்தப் பதில் அவனைச் சீண்டியது. இருப்பினும் நிதானம் காத்தவன் “அம்மாவ ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போகணும்” என்று சொல்லிவிட்டுச் சங்கரியின் மருத்துவ அறிக்கைகளை நீட்டினான்.
“சரி”
அறிக்கைகளை வாங்கிக்கொண்டவள் மருத்துவமனையின் பெயரைப் படித்ததும் புருவம் சுருக்கினாள்.
“நானும் இங்கதான் கவுன்சலிங்குக்குப் போனேன். நல்ல ஹாஸ்பிட்டல்”
அடி வாங்கியது போல் உணர்ந்தான் பூபாலன்.
“மதி” குரலில் சின்ன தடுமாற்றம்.
வான்மதி தனது ஹேண்ட்பேக்கில் அறிக்கைகளை வைத்தவள் “நம்மளோட பிரிவு என்னைப் பாதிச்ச விதம் ரொம்ப குரூரமானது. அதைச் சொல்லி உங்களைக் குற்றவுணர்ச்சில ஆழ்த்த விரும்பல பாலா. நான் உடலாலயும் மனசாலயும் நொந்து போய் மீண்டு வந்திருக்கேன். அதுக்கு ஒரு வகைல என்னோட முட்டாள்தனமும் காரணம். அதனால மட்டும்தான் வெளிய போனு என்னைத் துரத்துனவரோட வீட்டுல வந்து உக்காந்திருக்கேன். நான் அத்தைய ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போறேன். பை த வே, இந்த வீக்கெண்ட் நான் சென்னைக்குக் கிளம்பணும். என் வேலை அங்கதான். ஞாபகம் இருக்குல்ல?” என்று கேட்க அவனிடம் இருந்து வெறும் தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது.
சரியாக அந்நேரத்தில் “நான் ரெடி பாலு” என்று சங்கரி வந்து நிற்கவும்
“நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஹாஸ்பிட்டல் போகப்போறோம்” என்று அவரைத் தன்னோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் வான்மதி.
இருவரும் சென்ற பிற்பாடு பூபாலனும் பாளையங்கோட்டைக்குக் கிளம்பினான்.
மருத்துவமனையில் சங்கரியின் மருத்துவ அறிக்கைகளைப் பரிசோதித்துவிட்டு மார்பக எக்ஸ்ரே, நுரையீரல் சி.டி. ஸ்கேன் எல்லாம் எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.
“ஒரு மாசமா விடாம இருமல் இருந்திருக்கு. டி.பியா இருக்குறதுக்கான வாய்ப்பு அதிகம். எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் பாத்துட்டுத்தான் சொல்ல முடியும். ஸ்பியூட்டம் டெஸ்ட் (sputum test – சளி பரிசோதனை) கண்டிப்பா பண்ணியாகணும்”

மருத்துவர் சொன்ன எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எல்லாம் எடுத்துவிட்டு சளி பரிசோதனைக்காக சாம்பிளையும் கொடுத்துவிட்டு மாமியாரும் மருமகளும் வீட்டுக்குத் திரும்பியபோது மதியமாகிவிட்டது.
மெஸ்சில் இருந்து வந்த சாப்பாட்டை உண்டுவிட்டுக் குணசேகரன் உறக்கத்துக்குத் தாவியிருந்தார்.
“நீ உக்காரு மதி. நான் பரிமாறுறேன்” என்று சங்கரி சொல்ல
“இல்ல! நானே போட்டுச் சாப்பிட்டுக்குறேன்” என்று மறுத்தாள் வான்மதி.
உடனே சங்கரியின் கண்களில் கண்ணீர் மின்னியது.
“நீயும் அவரை மாதிரி எனக்கு எதுவும் நோய் இருக்கும்னு நினைக்குறியா?” என்று கேட்டே விட்டார்.
வான்மதி பதறிப்போய் “என்னத்தை இப்பிடிலாம் யோசிக்குறிங்க? நான் எங்கம்மா பேச்சைக் கேட்டு உங்களை நன்றிக்கெட்டத்தனமா பேசிருக்கேன். ஒத்துக்குறேன்! அதுக்காக இப்பிடியெல்லாம் நினைப்பேனா? இப்ப என்ன? எனக்குப் பரிமாறணுமா? உக்காந்து பரிமாறுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்று சொல்ல அடுத்தச் சில நிமிடங்களில் இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
மெல்லிய திரை ஒன்று விலகிய உணர்வு இருவருக்கும். செய்தது தவறென உணர்வதும், அதை ஒப்புக்கொள்வதும் எத்துணை ஆசுவாசத்தைக் கொடுக்கிறதென வான்மதி புரிந்துகொண்டாள்.
இடையே பூமிகாவிடமிருந்து வீடியோ அழைப்பு வந்தது. சந்தோசமாகப் பேசினாள் வான்மதி. அவள் சங்கரியையும் நலம் விசாரித்தாள்.
“நீ எப்ப சென்னை கிளம்புற?” என்று கேட்டுச் சங்கரியை அதிர வைத்தாள்.
“இந்த வீக்கெண்ட் ட்ரெயின்” வான்மதியும் அவளுடைய பங்குக்கு அதிர்ச்சியை அளித்தாள் அவருக்கு.
சகோதரிகள் பேசி முடித்ததும் சங்கரி மெதுவாகச் சென்னை செல்லும் விசயத்தைப் பற்றி வினவினார்.
“நான் போயே ஆகணும் அத்தை. முன்னாடி நான் ஜஸ்ட் ஒரு டீம் மெம்பர். இப்ப அப்பிடி இல்ல. எனக்கானப் பொறுப்பு அதிகம். வேலைய விடுற எண்ணமும் எனக்கு இல்ல”
“நீயும் பாலுவும் ஒன்னா இருக்கணும்னுதான் நாங்க உங்களைப் போராடி சேர்த்து வச்சோம் வானும்மா”
“ஒரே வீட்டுல இருந்துட்டா மட்டும் நாங்க பிரியமாட்டோம்னு அர்த்தமில்ல. பெரியவங்க ஆசைக்காக நாங்க சம்மதிச்சோம். பட் எங்களுக்குள்ள நிறைஞ்சிருக்குற கசப்பை மறக்க கொஞ்சம் கால அவகாசம் வேணும் அத்தை. அதே நேரம் எங்க வேலையும் எங்களுக்கு முக்கியம்”
வான்மதி இவ்வளவு தூரம் விளக்கம் கொடுத்ததும் சங்கரியும் அமைதியாகிப்போனார்.
இருவருக்குமிடையே இருக்கும் தூரம் அவர்களுக்கு நிறைய படிப்பினைகளைக் கற்று கொடுக்குமென அவரும் நம்பினார்.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!