நடுத்தர வர்க்கத்துக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்து தன்மானமும், கௌரவமும் மட்டுமே என்பார் என் தந்தை. அதை எக்காரணத்தைக் கொண்டும் இழந்துவிடக்கூடாதெனச் சிறுவயதிலிருந்தே எனக்கும் அண்ணனுக்கும் போதிக்கவும் செய்தார். ஆனால் அவர் போதிக்க மறந்த ஒன்று, இந்த இரண்டையும் யாரிடம் காட்டவேண்டும் என்பதையே! தன்னை உயிராக நேசிக்கும், தனக்காக எதையும் தாங்கிக்கொள்ளும் என் அன்னையிடம் கூட அவர் அதிக கௌரவம் பார்ப்பதை நான் கண்டதுண்டு. எனக்கு அதில் உடன்பாடு இல்லாத போதும் எங்கள் வீட்டில் அதுவே பழக்கமானக் காரணத்தால் அமைதியாகக் கடந்து போனதும் உண்டு. அதனால்தானோ என்னவோ அவரது தேவையற்ற பழக்கங்களின் சாயல் என்மீது விழும் போது அது தவறு என்று எனக்குத் தோன்றியதே இல்லை.
-பூபாலன்
“அப்ப நான் கிளம்புறேன் மாமா. இனிமே முடிவெடுக்க வேண்டியது மதி. என்னால முடிஞ்சவரைக்கும் எங்க உறவைக் காப்பாத்துறதுக்கான முயற்சிய நான் பண்ணிட்டேன்”
நரேந்திரனிடம் விடைபெற்றான் பூபாலன். திருமண மண்டபத்தில் பலகார பந்தி எனப்படும் திருமணத்தின் மாலை நேரத்தில் நடைபெறும் சடங்கு முடிந்துவிட்டது.
மிருதுளா தாம்பூலப்பையில் போட்டுக் கொடுத்த இனிப்புகளை வாங்கிக்கொண்டவன் மாமனாரிடம் விடைபெற்றான்.
“அதுக்குள்ள என்ன அவசரம் மாப்பிள்ளை?” என்ற மகேந்திரனிடம்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“அம்மா எனக்காகத் தூங்காம காத்திருப்பாங்க மாமா. மதியோட முடிவைத் தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவங்களுக்கு. இப்பத்தான் காய்ச்சல் சரியாகிருக்கு. சரியான டைமுக்குச் சாப்பிடலனா மறுபடி அவங்க உடம்புக்கு எதுவும் ஆகிடுமோனு பயம்” என்றான்.
“சரி மாப்பிள்ளை! போயிட்டு வாங்க. நாளைக்கு வானும்மா உங்க வீட்டுல இருப்பா. என் மகளுக்குப் புத்தி சொல்லி அனுப்புறேன்” என்று கரம் கூப்பி அவனை வழியனுப்பி வைத்தார் நரேந்திரன்.
மணமக்கள் இரவைக் கழிக்க ஹோட்டலில் ஏற்கெனவே ஏற்பாடு செய்யபட்டிருந்ததால் மற்ற அனைவரும் வீட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
மணமகன் குடும்பத்தாருக்கு அதே ஹோட்டலில் அறை புக் செய்யப்பட்டிருந்ததால் அவர்களும் அங்கே கிளம்பிவிட்டார்கள்.
அதன் பிறகே நரேந்திரனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான் பூபாலன்.
பைக்கில் வீட்டுக்கு வந்தவன் தனக்காகத் திண்ணையில் காத்திருந்த அன்னையிடம் புன்சிரிப்புடன் தாம்பூலப்பையை நீட்டினான்.
“சின்ன மாமியார் உங்களுக்காகக் குடுத்தது”
அதை வாங்கிக்கொண்ட சங்கரி புன்னகைத்தபோதே இருமல் விடாமல் வந்து தொலைத்தது. காய்ச்சல் விட்ட தினத்திலிருந்து இப்படித்தான்! விடாமல் இருமல் வந்துகொண்டே இருக்கிறது. மருத்துவர் கொடுத்த டானிக், பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய டானிக், மிளகு சுக்கு தூதுவளை போட்ட கசாயம் என எதற்கும் இந்த இருமல் அடங்கவில்லை.
“நாளைக்கும் இருமல் நிக்கலனா டாக்டரைப் பாத்துட்டு வருவோம்மா”
அன்னையிடம் பேசியபடி வீட்டுக்குள் வந்தவன் அப்போதுதான் கண்களைக் கசக்கிக்கொண்டு அவரது அறையிலிருந்து வெளியே வந்த குணசேகரனைப் பார்த்தான். எரிச்சல் மண்டிய முகத்தோடு மனைவியை உறுத்து விழித்தார் அவர்.
“இருமலுக்கு மருந்து வாங்கி அடுக்கி வச்சிருக்கியே! அதைக் குடிச்சு தொலையேன். ஏன் க்ஷயரோகக்காரி மாதிரி இருமிக்கிட்டே இருக்க? சை! இந்த வீட்டுல நிம்மதியா தூங்க கூட முடியல”
சங்கரியின் முகம் சுருங்கிவிட பூபாலனோ ஆற்றாமையோடு தந்தையை நோக்கினான்.
“வெறும் இருமலுக்கு இவ்ளோ பெரிய வார்த்தை சொல்லணுமாப்பா?”
“நாள் முழுக்க இருமிக்கிட்டே இருந்தா மனுசன் எப்பிடி வீட்டுல நிம்மதியா இருக்க முடியும்? ரெண்டு நிமிசம் கண்ணசர முடியல”
பூபாலன் ஏதோ சொல்ல வரவும் அவனது கையைப் பிடித்தார் சங்கரி. ‘எதுவும் பேசாதே’ என்ற கட்டளை அவரது விழிகளில். அவனும் அமைதியானான்.
“இன்னைக்கு நீ கூடத்துல படுத்துக்க. ரூமுல படுத்தா மிச்சமுள்ள தூக்கத்தையும் இருமியே கெடுத்துடுவ” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனவர் கதவை அடைத்துக்கொள்ள பூபாலனின் முகத்தில் கவலை கப்பியது.
கோபமும், ஆணவமும் ஆண்பிள்ளையின் குணநலன்கள் என்று கற்றுக்கொடுத்த தந்தை ஆணாக ஜெயித்தாலும் கணவனாகச் சோபிக்கவில்லையோ என்ற சந்தேகம் முதல் முறை அவனிடம் எட்டிப் பார்த்தது.
அதே நேரத்தில் முத்தரசி இல்லத்தில் மகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் நரேந்திரன். அவள் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது அவருக்கு எரிச்சலை மூட்டியிருந்தது.
“நான் சொன்னதை நீ மறந்துட்டியா? நீ மாப்பிள்ளையோட போகலனா உன் அம்மாவ விலக்கி வைக்குறதைத் தவிர எனக்கு வேற வழியில்ல”
தந்தையின் கறார் ரூபத்தைத் தடுமாற்றத்துடன் பார்த்த வான்மதியால் இன்னுமே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“மாப்பிள்ளை இவ்ளோ தூரம் இறங்கி வந்தும் உன் மனசு மாறலையா? உன் அம்மா இன்னும் வேப்பிலை அடிக்குறாளா உனக்கு?”
தந்தையின் கோபம் அன்னையின் புறம் திரும்பவும் பதறினாள் அவள்.
“அவங்க எதுவும் சொல்லலைப்பா” என்றவளிடம் இறுதியாக ஒரு முறை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார் நரேந்திரன்.
பின்னர் அவரது அறைக்கு வந்தவர் அங்கே வெறிக்க வெறிக்க விழித்தபடி அமர்ந்திருந்த மனைவியைக் கண்டும் காணாதவராக தலையணை போர்வையை எடுத்துக்கொண்டு வெளியேற எத்தனிக்க “நில்லுங்க” என்று அவரை நிறுத்தியது பகவதியின் குரல்.
நரேந்திரனும் நின்றார்.
“இந்தத் தடவை என் பொண்ணுக்கு அந்த வீட்டுல மரியாதைக்குறைவு நடக்கக்கூடாதுனு உங்க மருமகன் கிட்ட சொல்லிடுங்க”
ஆச்சரியத்தில் கண்ணிமைக்கவில்லை நரேந்திரனுக்கு. பகவதியை நோக்கி திரும்பியவர் மனைவிக்குத் தன்னுடைய முடிவில் சம்மதமில்லை என்பதைக் கண்டுக்கொண்டார் அவரது வெறித்தப் பார்வையில். இருப்பினும் வான்மதியிடம் சென்று கலகம் மூட்டாமல் அரைமனதோடு சம்மதிப்பதைப் பார்த்தால் பகவதிக்கே இனி வான்மதியையும் பூபாலனையும் பிரிக்க முடியாதென்ற உண்மை மண்டையில் உறைத்திருக்க வேண்டும்.
காலதாமதமாகப் புத்தி வந்தாலும் இப்போதாவது வந்ததே என்ற நிம்மதி அவருக்கு.
“அதெல்லாம் என் மருமகன் பாத்துப்பார்” எனக் கர்வமாகப் பதிலளித்தார்.
“க்கும்! அவர் பாத்துக்கிட்டதைதான் நம்மளும் பாத்தோமே! இந்தத் தடவையாவது அவங்கப்பா வாயை அவர் அடக்குறாரானு பாப்போம்” என்று குத்தலாகச் சொல்லிவிட்டுப் போர்வையை மூடிப் படுத்துக்கொண்டார் பகவதி.
மறுநாள் விடியலில் முத்தரசி இல்லம் வெங்கடேஷ் – பூமிகாவின் மறுவீட்டு நிகழ்வுக்காகத் தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்க, பெருமூச்சுடன் ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டாள் வான்மதி. கையில் ஒரு ரோலர் சூட்கேஸ்.
அவள் பூபாலனின் வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள். நான்காண்டுகளில் யாருக்குமே வராத ஞானோதயம் இப்போது திடுதிடுப்பென வந்து ஆளாளுக்கு அவளைக் கார்னர் செய்ததால் வேறு வழியின்றி அவள் எடுத்த முடிவு இது.
அதோடு தந்தை சொன்னது போல பூபாலன் இறங்கி வந்தும் அவள் முறுக்கிக்கொண்டு நின்றால் தவறு அனைத்தும் அவள்மீது என்றாகிவிடும் என்பதால் இம்முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருந்தாள் வான்மதி.
இல்லை என்றால் காதலையும், திருமண உறவையும் பிடிவாதத்துக்காக இழந்தவள் என்ற பட்டம் அல்லவா வழங்கப்படும் அவளுக்கு.
சூட்கேசும் கையுமாக நடுகூடத்திற்கு வந்து நின்றவளைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு மனம் நெகிழ்ந்து போனது.
“இப்பவே போகணுமா வானும்மா? இன்னும் கொஞ்சநேரத்துல சின்ன மாப்பிள்ளையும் பூமியும் வந்துடுவாங்க. அவங்க கூட இருந்துட்டு…”
“நல்ல முடிவு எடுத்ததுக்கு அப்புறம் ஏன் காலம் தாழ்த்தணும்? வானும்மா கிளம்பட்டும். மாப்பிள்ளை கூட ஜோடியா மறுபடி இங்க வந்தா பூமி இன்னும் சந்தோசப்படுவா” என்றார் மகேந்திரன்.
சாத்விகா சமையலறையில் மேற்பார்வை செய்தபடி அவர்களின் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்தவள் கணவனிடம் ஓடினாள்.
நேசமித்ரன் அப்போதுதான் குளித்து புது மாப்பிள்ளையை வரவேற்க வேஷ்டி சட்டையில் மினுமினுத்தான்.
“வானும்மாவ பாலு தம்பி வீட்டுல விட்டுட்டு வாங்க”
அவனது கையைப் பிடித்து இழுத்து வந்தாள் அவள்.
“நான் ஏன்டி அவன் வீட்டுக்குப் போகணும்? அங்க அந்தக் கிழவன் குணசேகரன் இருப்பான்”
சாத்விகா படீரென அவனது கன்னத்தில் அறைந்தாள், விளையாட்டாகத் தான்.
“என்னடி அடிச்சிட்ட?”
“வயசுல பெரியவரை மரியாதையா பேசுங்க. இல்லனா இன்னும் ரெண்டு அடி அடிப்பேன்”
அவனை மிரட்டி நடுக்கூடத்துக்கு அழைத்து வந்தவள் ‘அழைத்துப் போ’ என்று கண்களால் ஆணையிட தொண்டையைச் செருமிக்கொண்டான் அவன்.
“நானே வானுவ கொண்டு போய் விடுறேன்பா”
அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம்! இக்காட்சியைக் காணப் பிடிக்காமல் அறைக்குள் முடங்கியிருந்த பகவதி ஓடோடி வந்தார் மகனின் பேச்சைக் கேட்ட அதிர்ச்சியில்!
வந்தவர் “நீயும் மாறிட்டியா?” என்க
“அவர் என்னைக்குமே உங்க மகன்தான் அத்தை. வானுமாவ தனியா அனுப்பி வைச்சா அவளுக்கு ஏந்து பேச ஆளில்லங்கிற நினைப்பு அந்த வீட்டுல உள்ளவங்களுக்கு வந்துடும். வீட்டு ஆம்பளைங்கள்ல ஒருத்தர் போய் விட்டுட்டு வந்தாதானே அவளுக்கும் கௌரவம்?” என்று சாமர்த்தியமாக மாமியாரை ஆஃப் செய்தாள் சாத்விகா.
பகவதிக்கு மகள் நின்ற கோலத்தில் கண்ணீர் வந்தது. அருகில் நின்ற கணவரைக் கருத்தில்கொண்டு அதை அடக்கிக்கொண்டவர் அவளிடம் பர்ச் ஒன்றை நீட்டினார்.
“என்னம்மா இது?”
“உன் அக்கவுண்ட்ல பணம் இருக்கும்னு தெரியும். ஆனா எல்லா இடத்துலயும் ஜிபே யூஸ் பண்ண முடியாதே! பத்து ரூபாக்காகக் கூட நீ யார் கிட்டவும் போய் நிக்கக்கூடாது! வச்சுக்க”
காதல் என்று வந்துவிட்டால் சுயமரியாதையை எல்லாம் ஓரங்கட்டிவிடும் மகளின் குணமறிந்து பணத்தை பர்சுக்குள் வைத்துக் கொடுத்திருந்தார் பகவதி.
“சரிம்மா! நான் போயிட்டு வர்றேன்”
நரேந்திரன் மகளின் சிகையை வருடிக்கொடுத்தவர் “மருமகனுக்கு உன் மேல கோவம் இருந்தாலும் பிரியமும் அதிகம் வானும்மா. இந்தப் பிரிவு அவரை நிறைய மாத்திருக்கு. இனிமே உங்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் அது பிரிவுக்குக் காரணமா ஆகாது” என்று நம்பிக்கையுடன் சொல்ல வான்மதிக்கே அது ஆச்சரியம்தான்.
பூபாலன் மாறிவிட்டான் எனத் தந்தைக்கு எப்படி தெரியுமென யோசித்தபடியே அண்ணனுடன் காரில் ஏறிக்கொண்டவள் ரங்கநல்லூரில் பூபாலனின் வீட்டின் முன்னே வந்திறங்கினாள்.
“அந்தக் கிழவன் எதுவும் பிரச்சனை பண்ணுனான்னா வரதட்சணை கேசுல உள்ள பிடிச்சுப் போட்டுருவேன்னு சொல்லு” என்றான் நேசமித்ரன் கடுப்போடு.
வான்மதி அண்ணனை முறைத்தாள்.
“அந்தச் சட்டம் பொண்ணுங்களோட பாதுகாப்புக்காக உருவானது அண்ணா! அதைச் சொந்தப்பகைக்காகப் பயன்படுத்துறது அசிங்கம்”
“நீயும் சாத்வியும் ரூல்ஸ் பேசுறதுல ஒரே மாதிரி. என்னமோ பண்ணு! அதுக்காக அந்தாளு என்ன சொன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணணும்னு அவசியமில்ல. முக்கியமா உன் அருமை புருசனை நம்பி வேலைய விட்டுடாத. நீ விடமாட்டனு தெரியும். ஆனா பிள்ளை குட்டினு காரணம் காட்டி வேலைய விடச் சொல்லுவான் அந்தக் கிழவன். கவனமா இரு”
“சரிண்ணா! நான் கவனமா இருப்பேன்”
கலங்கிய விழிகளை மறைத்துக்கொண்டு காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான் நேசமித்ரன்.
வான்மதி சூட்கேசுடன் பூபாலனின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
சரியாக அந்நேரத்தில் அவள் காலடியில் உருண்டு வந்தது காபி தம்ளர் ஒன்று.
கூடவே “மருந்தைக் குடிச்சுத் தொலைச்சா என்ன? சதாசர்வகாலமும் இருமி இருமி நீ போடுற காபி, சமைக்கிற சோத்தை தின்னு எனக்கும் என் மகனுக்கும் நோய் வரணுமா?” என்று கடுமையாய் இரைந்த குணசேகரனின் குரலும் அவளது செவியில் விழுந்தது.
அவள் கண்ணெதிரே நெஞ்சு வெடிக்க இருமிக்கொண்டிருந்த சங்கரி நின்றுகொண்டிருந்தார். குணசேகரன் அவரை அருவருப்போடு பார்ப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
அன்றும் இன்றும் இந்த வீட்டில் இவர்களது இயல்பு மட்டும் மாறவேயில்லை.
குணசேகரன் மீது கோபமும், அவர் என்ன சொன்னாலும் பொறுத்துப் போகும் சங்கரி மீது எரிச்சலும் வந்தது அவளுக்கு.
“மனுசனா பிறந்த இரும்மல், தும்மல் எல்லாம் வரும். நோயே வராத மனுசன்னு யார் இருக்கா?” என்று எரிச்சலோடு சத்தமாக அவள் கேட்க, குணசேகரனும் சங்கரியும் அங்கே ஒருத்தி நிற்பதை அப்போதுதான் கவனித்தார்கள்.
சங்கரியின் விழிகளில் அத்துணை சந்தோசம்! குணசேகரனோ அலட்சியமாகச் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தார்.

வான்மதியின் எரிச்சலைக் கவனியாது அவளிடம் வந்த சங்கரி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
“வந்துட்டியா வானும்மா? இப்பத்தான் என் மனசு நிறைஞ்சிருக்கு” என்றார் கண்ணீருடன்.
“புகுந்தவீட்டுல மகளைக் கொண்டு வந்து விடுற மகாராசன் வாசலோட ஓடிட்டார். சம்பந்திகள்னு ரெண்டு பேர் இருக்கோமே, நம்ம கிட்ட மரியாதைக்குக் கூட பேசல. இதுதான் இந்தக் குடும்பம் உன்னையும் என்னையும் வச்சிருக்குற இடம் சங்கரி. காசு இருக்குற திமிரு” என்று ஆரம்பித்தார் குணசேகரன்.
வான்மதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இந்த மனிதரின் தாழ்வு மனப்பான்மை ஒழிந்தால் மட்டுமே இந்த வீட்டில் அவள் நிம்மதியாக இருக்க முடியும்!
சூடாகப் பதிலடி கொடுக்க வாயெடுத்தாள் அவள். வேண்டாம் என்பது போல அவளது கையை அழுத்தினார் சங்கரி.
“நீங்க குடுக்குற இடத்துலதான் இவர் இப்பிடி ஆடுறார் அத்தை. இவருக்கு உங்களையும் உங்க மகனையும் பேச உரிமை இருக்கு. என்னைப் பத்தி பேசக்கூடாது. பேசுனா நான் எதிர்த்துக் கேள்வி கேப்பேன். இன்னொரு தடவை என் குடும்பத்தை இழுத்தார்னா நல்லா இருக்காது”
அவள் காட்டமாகப் பதிலளிக்க அதைப் பிடித்துக்கொண்டார் குணசேகரன்.
“இதுவே உன் வீடு மாதிரி வசதியான வீட்டுக்கு நீ மருமகளா போயிருந்தனா அங்க மாமனாரை மதிச்சிருப்பல்ல? நான் பணங்காசு இல்லாதவன்ங்கிறதால என்னை அவமானப்படுத்துற” என்று குதிக்க ஆரம்பித்தார்.
“தேவையில்லாம பேச்சை மாத்தாதிங்க. அத்தைய திட்டுனது நீங்க. அது தாங்காம நான் பேசுனதும் என் குடும்பத்தை இழுத்ததும் நீங்க. உங்களுக்கு நான் பதிலடி குடுத்தா அது மரியாதைக்குறைவு. ஆனா நீங்க மட்டும் கட்டுன பொண்டாட்டில இருந்து சம்பந்தம் பண்ணுன சம்பந்திங்க வரைக்கும் எல்லாரையும் இடக்கு பேசி அசிங்கப்படுத்தலாம். அது மரியாதைக்குறைவு இல்ல. அப்பிடித்தானே?”
வான்மதி கத்தவும் பூபாலன் அவனது அறைக்குள் இருந்து வரவும் சரியாக இருந்தது.
“என்ன சத்தம்? நீ ஏன் கத்துற?” என்றபடி வந்தவனிடம் ஒன்றுக்கு இரண்டாக மருமகள் தன்னை அவமதித்துவிட்டாள் என்று போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார் குணசேகரன்.
அவன் முகம் மாற மாற வான்மதியின் மனம் கசந்து வழிய ஆரம்பித்தது. வந்ததும் ஆரம்பித்துவிட்டார். இனி இவன் அவரது தவறை ஓரங்கட்டிவிட்டுத் தன்னை மட்டும் குறை சொல்ல வருவானே!
“முறைனா என்னனு தெரியாம பொண்ணை இப்பிடி தனியா அனுப்பி வச்சிருக்காங்கனு சொன்னது ஒரு குத்தமா பாலு?”
தந்தை சொன்ன அனைத்தையும் கேட்ட பூபாலனின் முகம் கடுகடுவென ஆனது.
வான்மதியை நோக்கி வந்தவன் “உன் சூட்கேசை எடுத்துட்டு வெளிய போ” என்றான்.

வான்மதியின் முகம் கறுக்க, சங்கரியின் மனம் பதபதைக்க குணசேகரனோ மனதுக்குள் குதூகலித்தார்.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!