என் தவிப்பையும் பயத்தையும் தணிக்கும் ஒரே மருந்து அவனுடைய அணைப்பு மட்டுமே! எனது கண்ணீரும் கவலையும் காணாமல் போவது அவனது அண்மையில் மட்டுமே! என்னோடு சேர்த்து என் காதலையும் சுருட்டி மனதில் பூட்டிக்கொண்டவனே இனி என் சகலமும் என்று என் இதயச்சுவடியில் உயிரெனும் மை தொட்டு எழுதி வைத்திருக்கிறேன். காலத்துக்கும் அவனது பெயரைச் சொல்லிக்கொண்டே துடிக்கும் என் இதயத்துக்குத் தெரியும், அவனை நான் மறக்கும் நாளில் அது தனது துடிப்பை நிறுத்திக்கொள்ளும் என்பது!
-வான்மதி
“பணக்காரி ஒருத்தி வந்து நம்மளை அசிங்கப்படுத்திட்டுப் போனது பத்தாதுனு நீயும் உன் பங்குக்கு ஒருத்திய அழைச்சிட்டு வரப்போறியா பாலு?”
நெஞ்சில் புகைந்த கோபத்தை வார்த்தைகளில் கக்கினார் குணசேகரன்.
அவர் எதிரே அமர்ந்திருந்த பூபாலனுக்குத் தந்தையின் கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தது. மதினி அண்ணனை அழைத்துப்போனதால் அடைந்த காயம் இன்னும் அவருள் ஆறாமல் இருப்பதால்தான் இப்படி பேசுகிறார் என்பதால் அவரை அதட்டவோ மிரட்டிப் பணிய வைக்கவோ அவனுக்கு விருப்பமில்லை.
“எல்லா பணக்காரங்களும் ஒரே மாதிரி இருக்கணும்னு அவசியமில்லையேப்பா. மதி ரொம்ப சிம்பிள். அவங்க கிட்ட இருக்குற வசதிக்கு அவ வேலைக்குப் போகணும்னு அவசியமே இல்ல. ஆனாலும் சுயமா உழைச்சு வாழணும்னு நினைக்குறவ. நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ. ப்ளீஸ்பா! புரிஞ்சிக்கோங்க”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எனக்கு என்னமோ ஒட்டல பாலு. தேளுனா கொட்டும்னு அனுபவிச்சு தெரிஞ்சதுக்கு அப்புறம் இது வெள்ளைத்தேளு, பாக்க அழகா இருக்குனு சொன்னா நான் என்ன பண்ணுறது? எங்களுக்குனு இருக்குறது நீ மட்டும்தான்யா. உன்னையும் வர்றவ கிட்ட தாரை வார்த்துக் குடுத்துட்டு நாங்க வாழ்ந்து என்ன புண்ணியம்?”
சமையல்கட்டு வாசலில் நின்ற சங்கரி மெதுவாக “ஏன் அந்தப் பொண்ணைப் பாக்காமலே தப்பா நினைக்கணும்ங்க? நம்ம பாலுவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவன் என்ன இதெல்லாம் யோசிக்காமலா விரும்பியிருப்பான்? அதான் அவங்க வீட்டுல அவங்கப்பாக்குச் சம்மதம்னு சொல்லுறானே!” என்று சொல்ல
“நீ வாயை மூடு. அந்தப் பொண்ணோட அப்பாவா இங்க வந்து வாழப்போறார்? இந்த ஜில்லாவுல அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுனார்னா வரிசையா வந்து நிப்பானுங்க. அப்பிடிப்பட்டவர் ஏன் நம்ம வீட்டுப்பையனுக்குப் பொண்ணு தர ஒத்துக்கிட்டார்? என்னமோ தப்பா இருக்குனு உனக்குத் தோணல. அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே அவ தங்கியிருக்குற ஃப்ளாட்டுக்குப் பாலுவ கூப்பிட்டிருக்கானா, அவ எப்பிடிப்பட்ட…”
“அப்பாஆஆ”

அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்துவிட்டுப் பெருங்கோபத்துடன் எழுந்தான் பூபாலன். அவன் எழுந்த வேகத்திலும் கால்கள் உதைத்த வேகத்திலும் பெரும் சப்தத்தோடு விலகிப் போய் விழுந்தது நாற்காலி.
அதில் குணசேகரன் அரண்டுவிட சங்கரியோ மகனின் காலில் நாற்காலியை உதைத்ததால் காயம் பட்டிருக்குமோ எனக் கவலைகொண்டார்.
பூபாலன் கோபத்தை அடக்கியவனாக “மதியைப் பத்தி தப்பா பேசுறது என்னைத் தப்பா பேசுறதுக்குச் சமம்பா. கல்யாணம்னு ஒன்னு நடந்துச்சுனா அவ கூட மட்டும்தான். இல்லனா காலம் முழுக்க நான் இப்பிடியே இருந்து செத்துடுறேன்” என்று சொல்ல
“என்ன பாலு இப்பிடியெல்லாம் பேசுற?” என்று அழவே செய்துவிட்டார் சங்கரி.
கூடவே குணசேகரனைத் திட்டாதக்குறையாகப் புலம்பல் வேறு!
“இப்பிடி பிள்ளை ஆசைப்பட்ட வாழ்க்கைய வாழ விடாம நந்தி மாதிரி குறுக்க நிக்கணுமா?” என்று குத்தல் பேச்சும் கிடைத்தது.
அன்னையும் மகனும் காட்டிய ஒதுக்கத்தில் குணசேகரனின் பிடிவாதம் பலவீனமடைய, இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவர் முத்தரசி இல்லத்துக்குப் பெண் கேட்கச் செல்வதற்கு சம்மதித்தார்.
அதே நேரம் முத்தரசி இல்லத்தில் தனது அறையில் சுருண்டு படுத்து கடந்த மூன்று நாட்களில் நடந்த அனைத்தையும் அழுகையோடு அசை போட்டுக்கொண்டிருந்தாள் வான்மதி.
அவளும் பூபாலனும் திருநெல்வேலி சந்திப்பில் வந்து இறங்கியபோதே அவளுக்காகக் கார் காத்திருந்தது. அவளை மட்டும் அழைத்துச் செல்ல அல்ல!
“நீங்களும் வாங்க தம்பி. அண்ணன் உங்க கூட பேசணும்னு சொன்னாங்க” என்ற மகேந்திரனின் பேச்சைத் தட்டாமல் காரில் ஏறி அமர்ந்தவன் முத்தரசி இல்லத்தைப் பார்த்த பிற்பாடு வான்மதியை நரேந்திரன் எவ்வளவு நல்லவிதமாக வளர்த்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.
இதே போன்ற குடும்பத்தில் பிறந்த ப்ரீத்தியின் அலட்டலில் துளி கூட வான்மதியிடம் கிடையாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவனாயிற்றே!
“வாங்க தம்பி!” நரேந்திரன் கரம் கூப்பி வரவேற்க அவர் அருகே நின்ற பகவதியின் முகத்திலோ பார்க்கக்கூடாத ஏதோ ஒன்றை பார்த்த அருவருப்பு.
அதுதான் பூபாலனை எக்கச்சக்கமாக எரிச்சலூட்டியது.
“பாலா” மிரண்ட விழிகளோடு வான்மதி அவனது கையைப் பற்றியதும் இறுகிய உடல் இளக வீட்டுக்குள் வந்தான் அவளுடன்.
அவனை அமரச் சொன்ன நரேந்திரன் மகள் திகைத்து விழித்தபடி நிற்பதைப் பார்த்துவிட்டு “நீயும் உக்காரு வானும்மா. உன்னை விட்டுட்டுத் தனியா என்ன பேசுறது?” என்க
“எதுக்கு அவ இருக்கணும்? இதெல்லாம் பெரியவங்க விவகாரம்” என்றார் பகவதி கோபத்தோடு.
“நீ உக்காரு வானும்மா” நரேந்திரனின் குரல் கட்டளையாய் ஒலித்ததும் பகவதி அடங்கிப்போனார்.

“உங்க குடும்பத்தைப் பத்தி விசாரிச்சேன் தம்பி. எல்லாரும் நல்லவிதமாதான் சொன்னாங்க. உங்கப்பா ரொம்ப நேர்மையான மனுசன், உழைப்பாளினு நயினார்குளம் மார்க்கெட்ல யாரைக் கேட்டாலும் சொல்லுறாங்க. அவரோட வளர்ப்பு தப்பா இருக்காதுனு நான் நம்புறேன். என் மகளோட தேர்வு மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க கிட்ட இப்பிடி பேசிட்டுப் பின்னாடி வேற வேலை பார்ப்பேனோனு நீங்க யோசிக்க வேண்டாம். எனக்கு இருக்குற ஒரே ஒரு தயக்கம், உங்க அண்ணனும் அவர் ஒய்பும் அவங்க வீட்டோட போனச் சேதிதான்.”
பூபாலனுக்கு அந்த விவகாரம் தனது காதலில் பிரச்சனையை உண்டாக்கும் என்பது முன்னரே தெரிந்ததுதான்.
“அவங்க வசதியான வீட்டுல பிறந்தவங்க. நல்ல குணமான மாப்பிள்ளை வேணும்னு தேடி வந்து எங்கப்பா கிட்ட சம்பந்தம் பேசுனாங்க. மதினியும் நல்ல மாதிரிதான். அவங்களுக்கு எங்க வீடு சௌகரியப்படல. குழந்தை உண்டானதும் அங்க போனவங்களுக்குத் திரும்ப வர மனசில்ல. கொஞ்சநாளுக்கு அப்புறம் அண்ணனும் அவங்க கூட போயிட்டான். இதுல எந்தச் சண்டையும் எந்த வாக்குவாதமும் நடக்கல. அவங்கவங்க வசதிக்கு எங்க இருந்தா சரியா இருக்கும்னு தோணிச்சோ அங்க இருந்துக்கிட்டாங்க”
பூபாலனின் பதில் நரேந்திரனுக்குப் பிடித்திருந்தது. அவருக்குமே மகளுக்கு வரப்போகிறவன் கட்டு கட்டாய்ப் பணமும், மாடமாளிகையும் கட்டி வைத்திருக்கும் கோமானாக இருக்கவேண்டுமென எந்த எதிர்பார்ப்புமில்லை.
அவர்களின் குடும்பச்சொத்தில் மூன்றில் ஒரு பாகம் அவளுக்குத்தானே! வரப்போகிற மருமகன் மகளை நன்றாகப் பார்த்துக்கொண்டால் போதும்! அவளது மனதுக்குப் பிடித்தவனாக இருந்தால் இன்னும் சிறப்பு என்ற எண்ணம்.
பூபாலனின் குடும்பத்தைப் பற்றி ரங்கநல்லூரில் விசாரித்தவரையில் தவறாக யாரும் சொல்லவில்லை. அவனது தாயார் அமைதியானப் பெண்மணி, தந்தை கொஞ்சம் கடமுடா பேச்சுக்காரர்! ஆனால் வியாபாரம் செய்யும் போது இனிமையானப் பேச்சு எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை நரேந்திரனும் அறிவார் என்பதால் குணசேகரனின் கறார்க்குணம் அவருக்குப் பிரச்சனையாகத் தோன்றவில்லை.
தனது சம்மதத்தை அவர் சொல்லப்போன நொடியில் “எல்லாம் சரிதான்! மாப்பிள்ளை என்ன வேலை பாக்குறார்னு யாரும் எங்க கிட்ட கேட்டா என்ன சொல்லுறது?” என அபஸ்வரமாக ஒலித்தது பகவதியின் ஏளனக்குரல்.
பூபாலனுக்குள் மீண்டும் நெருப்பு பற்றியது. இப்போதும் வான்மதியின் கரம் தான் அவனை அமைதிப்படுத்தியது.
“நான் போட்டோகிராஃபர். கூடிய சீக்கிரமே சொந்தமா ஸ்டூயோ ஓப்பன் பண்ணப்போறேன். யாரும் கேட்டாங்கனா தைரியமா என் மருமகன் போட்டோகிராபர்னு நீங்க சொல்லலாம்”
கர்வத்தோடு அவன் சொல்ல பகவதிக்கோ உள்ளுக்குள் புகைந்தது. பாரீசில் இருக்கும் அண்ணன் மகனின் பதவிசும், அவன் நுனிநாக்கில் பேசும் ஆங்கிலமும் மனக்கண்ணில் வந்து போயின.
“நாங்க இன்னும் உங்க காதலை ஏத்துக்கல. அதுக்குள்ள மருமகன்னு சொல்லுறிங்க. ஒருவேளை இந்தப் ப்ளான் எல்லாம் முன்னாடியே போட்டுத்தான் என் மகளோட ஃப்ளாட்டுக்குப் போனிங்களோ?”
“பகவதிஈஈஈ…”
நரேந்திரன் கோபத்தோடு எழுந்திருக்க, பூபாலனும் எழுந்தான்.
வான்மதிக்கு உள்ளே உதறியது.
அவனோ நிதானமாக “விடுங்க சார்! அவங்க சந்தேகம் நியாயமானதுதான். இங்க பாருங்க மேடம், நான் எந்தப் ப்ளானும் போட்டு அங்க போகல. நான் குடும்பத்தைப் பிரிஞ்சு தனியா சென்னைல தங்கி வேலை பாக்குறவன். லாக்டவுன் என்னை மனசளவுல வீக் ஆக்கிடுச்சு. என் குடும்பத்தைப் பாக்க என்னால இங்க அடிக்கடி வர முடியாது. மதியும் என் குடும்பம்தான்! அதனால அவளைப் பாக்கப் போனேன்”
“இது எனக்குச் சப்பைக்கட்டா தெரியுது” நம்பாதப் பாவனை பகவதியிடம்.
“நீங்க உங்க ஹஸ்பெண்ட் கூட ஒன்னா ஒரே வீட்டுல இருக்கிங்க. உலகத்தோட பார்வைக்கு அது தப்பில்லனா நான் மதி கூட இருந்ததும் தப்பில்ல. எங்க ரெண்டு பேருக்கும் எங்களோட எல்லை தெரியும். ஒருவேளை நீங்க டேப்ல பாத்த காட்சியை வச்சு என்னைத் தப்பானவனா உருவக்கப்படுத்திருந்தா ஐ அம் சாரி! காதலிச்சப் பொண்ணை அணைச்சதோ, கிஸ் பண்ணுனதோ தப்புனு எனக்குத் தோணல. அவ மேல இருக்குற காதலை வேற எப்பிடி நான் வெளிப்படுத்த முடியும்னு நினைக்குறிங்க?”
இந்தப் பேச்சில்தான் பகவதி வாயடைத்துப் போனார். நரேந்திரனும் மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மிருதுளா நிலமையைச் சீராக்க காப்பியுடன் வந்துவிட்டார்.
“ஷப்பா நம்ம வீடு கோர்ட் மாதிரி ஆகிடுச்சு! உக்காருங்க எல்லாரும். முதல்ல காபி குடிங்க. அப்புறமா தெம்பா வாதாடலாம்” என்று விளையாட்டு போல பேசி சூழலை இலகுவாக்க முயன்றார் அவர்.
அவரது யுக்தியும் வேலை செய்தது. காபி குடித்த பிற்பாடு “ஒரு நல்ல நாளா பாத்து அப்பா அம்மாவ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க. பேசி முடிவெடுக்கலாம். உங்கப்பா போன் நம்பர் குடுத்திங்கனா அவர் கிட்ட பேச வசதியா இருக்கும்” என்று தனது சம்மதத்தை மறைமுகமாகச் சொல்லிவிட்டார் நரேந்திரன்.
அந்த நம்பிக்கையுடன் வீட்டுக்குப் போன பூபாலன் அன்னையிடம் தனது வருகைக்கானக் காரணத்தைச் சொல்லி வான்மதியின் புகைப்படத்தைக் காட்டினான். அவருக்கும் அவளைப் பிடித்திருந்தது.
தனது மொபைலில் இருந்து அவளது எண்ணுக்கு அழைப்பு விடுத்து அன்னையிடம் பேசவைத்தான். பின்னர்தான் குணசேகரனிடம் விவகாரத்தைக் கூறியதும், அவர் பொங்கியெழுந்ததும் நடந்தேறியது.
இரு நாட்களில் அவரும் சம்மதித்துவிட, நரேந்திரன் அவரிடம் மொபைலில் பேசிவிட்டார். முதலில் கொஞ்சம் பிகு செய்தாலும் அவ்வளவு பெரிய பணக்காரர் இறங்கி வந்ததில் குணசேகரனும் இளகினார்.
“இந்த வாரத்துலயே நல்ல நாள் இருக்குங்க. அவங்களுக்கு வசதிப்படுமானு கேளுங்க” என்று சங்கரி சொன்னதை நரேந்திரனிடம் கூறிய பிறகு முத்தரசி இல்லத்திற்கு செல்லவும் தயாரானார்.
“வெறுங்கையோட போகக்கூடாது. பழம், அந்தப் பொண்ணுக்குப் பூ வாங்கணும். முடிஞ்சா பாலுவ கூட்டிட்டுப் போய் பட்டுச்சேலை ஒன்னு வாங்கிடு”
“இது சும்மா பொண்ணு பாக்குற மாதிரிதானேப்பா?”
“எல்லாம் முறைப்படி செய்யணும் பாலு” என்று சொல்லிவிட்டார் குணசேகரன்.
அன்று மாலையே மணிவண்ணனும் ப்ரீத்தியும் வந்தார்கள்.
“வாழ்த்துகள் கொழுந்தனாரே” எனச் சிரித்த முகமாக வாழ்த்திய மதினியிடம் முகம் திருப்பாமல் நல்லதாகப் பேசினான் பூபாலன்.
“மதி வீட்டுக்குப் போறப்ப நீங்க கண்டிப்பா வரணும்” என்று அவன் கேட்டுக்கொள்ள
“நாங்க இல்லாமலா? காலையிலயே வந்துடுவோம்” என்றாள் ப்ரீத்தி.
அவளை எந்தக் கணக்கில் சேர்ப்பதெனத் தெரியாமல் குழம்பியவனுக்கு உடனே வான்மதியிடம் பேச வேண்டுமெனத் தோன்றியது.
அவன் அவளது எண்ணுக்கு அழைத்த நேரத்தில்தான் அவள் படுக்கையில் முடங்கிக் கிடந்தாள்.

கண்ணீர் கோடாய் வழிந்த கன்னத்தில் கைத்தடம் ஒன்று சிவந்து பதிந்திருந்தது.
மொபைல் சிணுங்கவும் எடுத்தவள் பூபாலனின் பெயர் வந்தவுடன் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க பாலா”
உற்சாகமாக அழைத்தவன் அவள் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து “ஆர் யூ ஓ.கே மதி?” என்று கேட்க
“ம்ம்! நீங்க சொல்லுங்க” என்றாள்.
“நீ பொய் சொல்லுற. என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி பேசுற? எதுவும் பிரச்சனையா?” என்று மடமடவெனக் கேள்விகளை அடுக்க வான்மதியோ தடுமாறினாள்.
அந்நேரத்தில் “ஐஸ் க்யூப் கொண்டு வந்திருக்கேன் வானுக்கா. எழுந்திருச்சு உக்காரு. ஒத்தடம் குடுக்குறேன்” என்று சொன்னபடி பூமிகா வர அவளுடையக் குரல் தெளிவாகப் பூபாலனின் காதில் விழுந்தது.
“பூமி கிட்ட போனைக் குடு”
“பாலா…”
“இப்ப நீ குடுக்கப்போறியா? இல்ல நான் நேர்ல வரட்டுமா?” அவனது அதட்டலில் மொபைல் பூமிகாவின் கைக்கு மாறியது.
“சொல்லுங்க மாமா”
“உன் அக்காவுக்கு என்னாச்சு? அவ குரல் சரியில்ல. என் கிட்ட எதையோ மறைக்குறா. எதுக்கு ஐஸ் க்யூப் ஒத்தடம்?”
“பெரியம்மா வானுக்காவ அறைஞ்சிட்டாங்க மாமா. அக்கா கன்னம் வீங்கி போயிடுச்சு. அதுக்குத்தான்…”
“என்ன? எதுக்கு அறைஞ்சாங்க?”
“பாரீஸ்ல இருக்குற மாமாவோட பையன் கூட அக்காக்குக் கல்யாணம் பண்ணனும்னு சின்ன வயசுல பேசி வச்சிருந்தாங்களாம். இப்ப அந்த மாமாக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சு பெரியம்மா கிட்ட வருத்தமா பேசிட்டாராம். அந்தக் கோவத்துல அக்காவ அறைஞ்சிட்டாங்க”
பூபாலனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.
தோளுக்கு மேல் வளர்ந்த பெண் மீது கை நீட்டுவது என்ன பழக்கம்? அதுவும் இனி நடக்கவே நடக்காது என்று தெரிந்த விசயத்துக்காகக் கை நீட்டுவது முட்டாள்தனமில்லையா?
அவன் அதிகம் யோசிக்கவில்லை. நேரே முத்தரசி இல்லத்துக்கு வந்து விட்டான்.
“சார்!” அவனது பெரும் கூச்சலில் முத்தரசி இல்லமே அதிர்ந்தது.
நரேந்திரனும் மகேந்திரனும் “வாங்க மாப்பிள்ளை! என்ன விசயம்?” என்ற கேள்வியோடு வரவேற்றார்கள்.
“நான் வந்தது இருக்கட்டும். இங்க என்ன நடக்குதுனு உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா?”
“இன்னைக்கு ஆடிட்டரைப் பாக்க வேண்டிய வேலை இருந்துச்சு மாப்பிள்ளை. அண்ணனும் நானும் இப்ப தான் வீட்டுக்கு வந்தோம்”
மகேந்திரன் சொல்லவும் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது புரிந்துவிட்டது.
“என்ன இது கூச்சல் குழப்பமா இருக்கு?” என்று எரிச்சலோடு கேட்டபடி வந்த பகவதியின் மீது அவனது முழு கவனமும் பதிந்தது.
“எதுக்காக மதியை அறைஞ்சிங்க?” அவன் நேரடியாகக் கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் அவர்.
மகேந்திரனும் நரேந்திரனும் பகவதியைப் பார்க்க மிருதுளாவோ கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார்.
பகவதி பதில் சொல்லப்போவதில்லை என்று தெரிந்ததால் பூபாலன் சம்பந்தப்பட்டவளை அங்கே அழைத்தான்.
“மதி! எங்க இருக்க?”
சில நிமிடங்கள் கழித்துப் பூமிகாவுடன் படியிறங்கி வந்தாள் வான்மதி. அவளது இடது கன்னம் வீங்கியிருப்பதைக் கண்டதும் கண்மண் தெரியாத ஆத்திரம் அவனுக்கு.
அதே உணர்வை நரேந்திரனும் பிரதிபலிக்க, பகவதியோ தலையைக் குனிந்தார்.
“இங்க வா” என்று பூபாலன் அவளை அழைக்கவும் வேகமாக ஓடிப்போய் அவனது கைவளைவுக்குள் நின்று கொண்டாள் வான்மதி. கண்களில் கண்ணீர் ததும்பியது.

“ஒன்னுமில்ல! அவங்க ஏதோ கோவத்துல அடிச்சிருப்பாங்க” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆறுதல் சொன்னவன் பகவதியை ஆற்றாமையோடு நோக்கினான்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்கலனு தெரியும். ஆனா மதி உங்க பொண்ணுதானே? கல்யாணமே ஆனாலும் அவ உங்க பொண்ணுங்கிறதை யாராலயும் மாத்த முடியாது. அப்பிடி இருக்குறப்ப என் மேல இருக்குற கோவத்தை எதுக்காக அவ கிட்ட காட்டுனிங்க?”
வெகு நிதானமாகவே கேட்டான் அவன். பெரியவர்களிடம் குரலை உயர்த்தக்கூடாது என்பது அவனுடைய தந்தையின் போதனைகளில் ஒன்று.
பகவதியோ இயலாமையில் வெடித்தார்.
“என் அண்ணன் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்குறார். இதுதான் நீ பொம்பளைப்புள்ளைய வளர்த்த லெச்சணமானு. நான் என்ன செய்யுறது? எனக்கு மட்டும் மகளைக் காயப்படுத்தணும்னு ஆசையா? நேசனை விட இவ மேல அளவுக்கதிகமா அன்பு வச்சிட்டேனே! இவளுக்கு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்ச என்னால இவளுக்கு ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடித் தர முடியாதா? என் ஆசை நிராசையா போச்சே. அந்த வேதனைல அறைஞ்சிட்டேன். அவளை அறைஞ்சதுக்கு அப்புறம் நான் மட்டும் நிம்மதியாவா இருக்கேன்?”
கையை வீசிப் பேசியவரின் உள்ளங்கை கன்றிச் சிவந்திருப்பதைக் கவனித்துவிட்டான் பூபாலன். மகளை அடித்தச் சோகத்தில் தன்னையே காயப்படுத்தியிருக்கிறார் இந்தப் பெண்மணி!
“என்னை நம்பி உங்க மகளைக் கல்யாணம் பண்ணி வைங்க. எப்பவும் நீங்க வருத்தப்படுற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன். உங்களவுக்கு எங்க வீட்டுல வசதி இல்லாம இருக்கலாம், எப்பவுமே இதே மாதிரி இருந்துடப்போறதில்ல. நான் மதியை மகாராணி மாதிரி வாழ வைப்பேன்”
இம்முறை பூபாலனின் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் பகவதியை அசைத்துவிட்டது.
“ரொம்ப சந்தோசம்” என்றவரின் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.
பூபாலன் வான்மதியை அவரிடம் தள்ளினான்.
“அம்மாவ சமாதானப்படுத்து. வெள்ளிக்கிழமை என் ஃபேமிலியோட வர்றேன். இப்ப கிளம்புறேன்” என்றவன் அனைவரிடமும் விடை பெற்றான்.
எங்கே மருமகன் கத்துவானோ, இரசாபாசம் ஆகிவிடுமோ என்று தவித்த நரேந்திரனும் மகேந்திரனும் பூபாலனின் பக்குவமான அணுகுமுறையில் நெகிழ்ந்து போனார்கள்.
அதே நேரம் பூபாலன் தன்னிடம் கூட சொல்லாமல் முத்தரசி இல்லத்துக்குச் சென்ற செய்தியைக் கேட்ட குணசேகரன் யோசனையில் ஆழ்ந்திருந்தார். மூத்தவனை மருமகளின் வீட்டுக்குத் தாரை வார்த்தது போல இளையவனையும் தாரை வார்க்கக்கூடாதென்ற உறுதி அவருக்குள் அப்போதே தோன்றிவிட்டது.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!