‘புகைப்படம் எடுக்கும் நேரங்களில் மனிதர்கள் இனிய தருணங்களைத் தவற விடுகிறார்கள்’ என எங்கோ படித்த ஞாபகம். என்னைக் கேட்டால் புகைப்படங்களே இனிய தருணங்களை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் அற்புதவிளக்குகளாக மாறியிருக்கின்றன என்பேன். ஏனெனில் நாம் யாருமே துக்கமானத் தருணங்களைப் புகைப்படங்களில் சேமிப்பதில்லையே! அந்தளவுக்கு நாகரிகம் முற்றிவிடவில்லை என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட தருணங்கள் அனேகம்! எளிதாகச் சொல்லிவிடலாம் வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்களின் கலவை என்று. ஆனால் அதை நடைமுறையில் அனுபவிக்கையில் உண்டாகும் வேதனையைத் தாங்குவது அத்துணை சுலபமில்லை.
-பூபாலன்
வீட்டு வாயிலில் ஸ்ப்ளெண்டரை நிறுத்திவிட்டு இறங்கினான் பூபாலன். அவன் மனம் குழப்பத்தில் கலங்கிப்போயிருந்தது.
இத்தனை ஆண்டுகள் இல்லாதக் கண்திறப்பு திடுமென ஏன் சிலருக்கு இப்போது நிகழ்ந்தது? பொன்விளைக்கும் அவனது வீடு இருக்கும் ரங்கநல்லூருக்கும் இடையே செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்குமானத் தூரம் எல்லாம் இல்லை.
வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவு மட்டுமே! அவனது ஸ்டூடியோ பாளையங்கோட்டையில் இருந்தாலும் ஜாகை என்னவோ ரங்கநல்லூரில் என்று நன்றாகத் தெரிந்திருக்கும்.
‘இத்தனை ஆண்டுகள் இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காத ஒருவரின் கவனத்தில் இப்போது மட்டும் நான் எப்படி முக்கியமானவன் ஆனேன்?’
குழப்பத்தோடு வீட்டுக்குள் வந்தவனின் செவிகளில் விழுந்தது அந்தக் காட்டமானக் குரல்.
“இதெல்லாம் செய்யணும்னு உன் பொண்டாட்டி கிட்ட நாங்க எதிர்பார்த்தோமா மணி? என் பொண்டாட்டிக்குக் கை கால்ல தெம்பு இருக்குற வரைக்கும் அவ என்னைப் பாத்துப்பா. கேரியரை எடுத்துட்டுப் போயிடு”

அந்தக் குரலுக்குரியவர் பூபாலனின் தந்தை குணசேகரன். அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பவன் பூபாலனின் தமையன் மணிகண்டன்.
“உங்களுக்கும் அம்மாக்கும் உடம்பு முடியலனுதான் அவ செஞ்சுக் குடுத்தாப்பா” தயக்கத்துடன் வந்த மணிகண்டனின் பதிலை வெட்டியது குணசேகரனின் அடுத்தக் கேள்வி.
“பணக்காரச்சீமாட்டிக்கு இந்த வீட்டுல வேலை செய்ய மட்டும்தான் கஷ்டம். அவ பிறந்தவீட்டுல மட்டும் சந்தோசமா செய்வா. அப்பிடித்தானே?”
இந்தப் புயலுக்கு நடுவே மெல்லிய தென்றலாக “நமக்காகச் சிரமப்பட்டுச் சமைச்சு அனுப்பிருக்கா. ஏன் வேண்டாம்னு சொல்லி அவ மனசை வருத்தப்பட வைக்கணும்ங்க?” எனக் கேட்டது வேறு யாருமில்லை, பூபாலனின் அப்பாவி அன்னையானச் சங்கரிதான் அவர்.
அப்பாவின் பேச்சை எதிர்த்து அன்னை பேசுவதா? உலகம் சுற்றும் போக்கு மாறிவிட்டதா? அல்லது அன்றைய தினம் சூரியோதயம் மேற்கில் நிகழ்ந்திருக்குமா? ஏனெனில் இந்த அற்புதங்கள் எல்லாம் சாத்தியம் என்றால் மட்டுமே சங்கரி குணசேகரனின் பேச்சை மீறி கேள்வி கேட்பது சாத்தியம்.
ஆச்சரியத்துடன் வீட்டுக்குள் பிரவேசித்தப் பூபாலன் நடுகூடத்தில் தலை குனிந்தபடி நின்ற தமையனைப் பரிதாபமாகப் பார்த்தான்.
பாவம்! மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பார்களே! அது மணிகண்டனுக்குப் பொருந்தும். அவனது மனைவி ப்ரீத்தி செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவள். மணிகண்டனுக்கு திருநெல்வேலி சிப்காட்டில் இருக்கும் வானொலி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளர் பணி, நல்ல சம்பளம், கூடவே மாப்பிள்ளை அதிர்ந்து கூட பேசாதவன் என்பதால் தேடி வந்த சம்பந்தம்.
குணசேகரன் முதலில் தயங்கினாலும், மணிகண்டனுக்கு ப்ரீத்தியைப் புகைப்படத்தில் பார்த்ததும் பிடித்துப்போனதால் சம்மதித்து மணமுடித்து வைத்தார்.
செல்வச்சீமாட்டியாக வளர்ந்த ப்ரீத்தியால் மணிகண்டனின் நடுத்தரக்குடும்பத்தனம் நிறைந்த பெற்றோரோடு ஒத்திசைந்து வாழ முடியவில்லை.
மூன்று மாதங்கள் பல்லைக் கடித்துப் பொறுத்தவள் பின்னர் கருவுற்றதைச் சாக்காக வைத்துப் பிறந்தகத்துக்குப் போனதோடு சரி! மீண்டும் புகுந்தவீட்டுப்பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.
தன்மீது கணவனுக்கு இருக்கும் காதலைத் தூண்டிலாக வைத்து அவனையும் வீட்டோடு மாப்பிள்ளையாகத் தங்கள் வீட்டில் சேர்த்துக்கொண்டாள்.
அவர்களின் புதல்வன் நிரஞ்சனுக்கு ஆறு வயது. அவனுக்கு அம்மாவின் பெற்றோரிடம் இருக்கும் ஒட்டுதல் குணசேகரன் – சங்கரியிடம் கிடையாது.
“விருந்துக்கு வர்ற மாதிரி பேரப்பிள்ளை வந்துட்டுப் போனா எப்பிடி நம்மளை ஆச்சி தாத்தானு ஞாபகம் இருக்கும்?”
சில நேரங்களில் குணசேகரன் இவ்வாறு ஆதங்கத்துடன் புலம்பியதுண்டு.
இதெல்லாம் சேர்ந்து பணக்காரர்கள் என்றாலே அவர் மனதில் ஒரு ஒவ்வாமையைத் தோற்றுவித்துவிட்டது. கூடவே தங்களின் நடுத்தர வகுப்பு வாழ்க்கையைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையும் அவர் மனதில் கூடாரமிட்டுவிட்டது.
பூபாலனுக்கு மதினி மீது வருத்தமும் கிடையாது. அதே நேரம் அவளது செய்கைகளை அவன் ஆதரித்ததும் இல்லை.
எப்போதாவது புகுந்தவீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்கையில் “என்ன கொழுந்தனாரே! எப்ப குடும்பஸ்தனா ஆகப்போறிங்க?” என்று சினேகமாகக் கேட்பவள் அவள்.
அவள் பிறந்தகத்தோடு போன பிறகு சுற்றத்தார் எல்லாம் குணசேகரன் – சங்கரியைக் கொடுமைக்காரர்களாகச் சித்தரித்தது எல்லாம் தனிக்கதை.
கடந்த இரு தினங்களாகக் குணசேகரனுக்கும் சங்கரிக்கும் உடல்நலமில்லை. பூபாலனுக்குச் சமையல் தெரியாது என்றாலும் முயன்று அரைகுறையாகச் சமைத்து வைத்தான். ஆனால் அவர்களுக்கு அதுவும் ஒத்துக்கொள்ளாமல் போய்விட தமையனிடம் வாய்விட்டுப் புலம்பியிருந்தான்.
அதைக் கேள்விப்பட்டு மதினி சமைத்து அனுப்பியிருக்கிறாள் போல என்று எண்ணியவன் அப்பாவின் பிடிவாதம் அவசியமற்றது எனச் சொல்ல வாயெடுத்தபோதே குணசேகரன் அடுத்த அம்பை எய்தார்.
“அவ அங்க கூப்பிட்டதும் பின்னாடியே ஓடுனவன்தானே நீ! இங்க நிக்குறான் பாருடா இவன்தான் என் மகன். எப்பவும் எங்களைத் தவிர வேற யாரையும் இவன் முக்கியமா நினைச்சது இல்ல. எங்களை அசிங்கப்படுத்துனவங்களை விலக்கி வச்சான். இவன் சமைச்சது விசமா இருந்தாலும் நானும் சங்கரியும் அதையே சாப்பிட்டு வயித்தை நிரப்பிக்கிறோம். நீ கேரியரை எடுத்துப் போயிடு”
சொல்லும்போதுதான் அவரது குரலில் எவ்வளவு கர்வம்!
மணிவண்ணன் குனிந்த தலையுடன் டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு வெளியேறியதை சங்கரி அழுகையை அடக்கிக்கொண்டு பார்த்தபடி நின்றார்.
குணசேகரன் இருமியபடி அங்கிருந்து போய்விட கண்களைத் துடைத்துகொண்டார் அவர். மூத்தவன் போனதும் இளையவனிடம் மனக்குறையைக் கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார்.
“ப்ரீத்தி ஒன்னும் பொல்லாதவ இல்ல பாலு. அவளுக்கு நம்ம மேல மரியாதை எல்லாம் உண்டு. வசதியான இடத்துல வளர்ந்ததால அவளால இங்க அட்ஜெஸ்ட் பண்ணி இருக்க முடியல. இன்னைக்கு வரைக்கும் மணி நம்ம வீட்டுச்செலவுக்குப் பணம் குடுக்குறதை அவ தடுத்திருப்பாளா? உங்கப்பாக்குத் தெரியாம இப்ப கூட ஹாஸ்பிட்டல்ல வச்சு இருபத்தஞ்சாயிரத்தை என் கையில குடுத்துட்டுப் போனவ. உங்கப்பா ஒருத்தரை வெறுத்தார்னா விஷமா வெறுத்துடுறார்யா. இதுல கிடந்து அல்லாடுறது எம்புள்ளைங்கதானே!”
சங்கரி புலம்பிவிட்டுப் போய்விட பூபாலனுக்கும் மனம் கனத்துப் போனது.
திடுமென பைக்கிலிருந்து சாவியை எடுக்காமல் வந்தது நினைவுக்கு வந்தது. அதை எடுக்கப் போனவன் வீட்டுத்திண்ணையில் சாப்பாடு கேரியருடன் அமர்ந்திருந்த மணிகண்டனைக் கண்டதும் “நீ இன்னும் போகலையா?” என்று கேட்டான்.
“மனசு வலிக்குதுடா பாலு”
சொல்லும்போதே கண்கள் கலங்கிப் போய்விட்டது அவனுக்கு.
பூபாலன் பெருமூச்சுவிட்டவாறு அவனருகே அமர்ந்தான்.
“மதினிக்கு அப்பா குணம் தெரியும்ல. ஏன் சமைச்சுக் குடுத்து விட்டாங்க?”
“அவளால அப்பிடி எல்லாரையும் ஒதுக்கிவச்சிட முடியாதுடா. உடம்புக்கு முடியாம பெரியவங்க இருக்குறப்ப நான் சும்மா இருக்கமுடியுமானு கேக்குறா. அவ கிட்ட நீ சமைச்சா எங்கப்பா சாப்பிட மாட்டார்னு எப்பிடி சொல்லுறது?” மனைவிக்காகப் பரிந்துகொண்டு வந்தான் மணிகண்டன்.
பூபாலனின் இதழில் நக்கல் சிரிப்பு!
“நியாயத்தைப் பேசு. அப்பா எதுக்காக இவ்ளோ பிடிவாதமா இருக்குறார்னு உனக்குத் தெரியாதா? நிரஞ்சன் பிறந்து ஆறு மாசம் கழிச்சு அவனையும் மதினியையும் அழைச்சுட்டு வர அப்பாவும் அம்மாவும் உன் மாமனார் வீட்டுக்குப் போனாங்க. அப்ப மதினி என்ன சொன்னாங்க?”
மணிகண்டனால் பதில் பேச முடியவில்லை. காரணம் ப்ரீத்தியின் பதில் அப்படிப்பட்டது!
“சாரி மாமா. என்னால அங்க வரமுடியாது. அங்க எனக்கு உதவிக்கு யாரு இருக்காங்க? நிரஞ்சனைக் குளிப்பாட்டுறது, தூங்க வைக்குறதுனு எல்லாமே என் அம்மா பாத்துப்பாங்க. அந்த வீட்டுல உங்களுக்கு உதவியா இருக்கவே அத்தைக்கு நேரமில்ல. அவங்களால எப்பிடி நிரஞ்சனைக் கவனிக்க முடியும்? நான் இங்கயே இருந்துக்குறேன். நானும் என் பிள்ளையும் வேணும்னா அவரும் எங்க கூட இருப்பார்”
அன்றைய தினம் குணசேகரனுக்கு வந்த கோபத்தை இதுவரை அவரது குடும்பத்தார் கண்டதில்லை.
“பணக்காரி புத்திய காமிச்சிட்டா. பிள்ளைய பெத்து வளத்து படிக்க வச்சு வேலை வாங்கி குடுத்து லட்டு மாதிரி தூக்கி இவங்க கையில குடுத்துட்டு நம்ம நடுத்தெருவுல நிக்கணுமா? மாமனார் வீட்டுக்குப் பொண்டாட்டி புள்ளைய பாக்க போனா உடனே கிளம்பி வந்துடு, அங்கயே தங்கிடாத, அப்புறம் உன்னை அவங்க பக்கமே இழுத்துப்பாங்கனு எத்தனை தடவை மணி பயலுக்குப் பாடம் எடுத்திருப்பேன்? கேட்டானா? இப்ப பாரு. அங்கயே இருக்கச் சொல்லுறா. மாமனார் வீட்டுல பழியா கிடக்குறதா ஆம்பளைக்கு அழகு? த்தூ! குடும்ப மானத்தை வாங்கிட்டான்”
மணிகண்டனும் மனைவி குழந்தையைக் காரணமாகக் காட்டி ப்ரீத்தியின் வீட்டோடு போய்விட்டான்.
ஆனாலும் அவனுக்குப் பெற்றோர் மீது பாசமுண்டு. ப்ரீத்திக்கும் தனது செயல் சுயநலமெனத் தெரியும். ஆனால் தான் ஒன்றும் அவனது பெற்றோருக்கு எதுவும் செய்யக்கூடாதென மணிகண்டனைக் கட்டாயப்படுத்தவில்லையே என்ற எண்ணம் இருந்தால் அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
மாமனாரின் பணக்காரர்கள் மீதான வெறுப்பு, ஆண்பிள்ளைத்தனம் பற்றிய அவரது எண்ணவோட்டம். இதையெல்லாம் தாண்டி கணவனைப் பெற்றவர் என்ற மரியாதை அவளுக்கு எப்போதுமே உண்டு.
இன்னும் மணிகண்டனின் சம்பளத்தில் ஒரு பகுதியை அவன் சங்கரியிடம் கொடுப்பதை அவள் தடுப்பதில்லை.
“உங்களைப் பெத்தவங்களுக்கு நீங்க குடுக்குறதை நான் எப்பிடி தடுக்க முடியும்?” என்ற கேள்வியோடு நிறுத்திக்கொள்வாள்.
அவளது சௌகரியம் அவளுக்கு முக்கியம். ஆனால் கொடுமைக்காரி இல்லை. அவ்வளவுதான் அவளைப் பற்றிய மணிகண்டனின் புரிதல்.
ஆனால் அது கூட நியாயமில்லை என்பது பூபாலனின் எண்ணம்.
“நம்ம வீடு எப்பிடிப்பட்டதுனு தெரிஞ்சுதானே உன்னைக் கல்யாணம் பண்ணுனாங்க? அப்ப நம்ம அவங்களை விட வசதில குறைஞ்சவங்கனு மறந்து போச்சா? இத்தனைக்கும் நாம ஒன்னும் குடிசைல வாழலையே. எல்லா வசதியும் இருக்கு இங்க” என்று அவனும் குதித்தான்.
பின்னர் மனிதர்களைச் சிறு பிழைக்காக ஒரேயடியாக ஒதுக்கிவைப்பதுதான் உலகில் மாபெரும் அநியாயம் என்பதை காலம் அவனுக்குப் புரிய வைத்தது.
அதனால் ஒரேயடியாகப் ப்ரீத்தியைக் குற்றம் சாட்டாமல் மணிகண்டனின் மனதைத் தந்தை வருத்தியதற்காக மட்டும் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான்.
“அப்பா அந்தக் காலத்து ஆளுண்ணா! மாமனார் வீட்டுல கை நனைக்குறது கௌரவக்குறைவு, அங்க தங்குனா பொண்டாட்டிதாசன்னு உலகம் பேசும்னு இப்பவும் நம்புறவர். லீவுக்கு ஆச்சி தாத்தா வீட்டுக்குப் போனா கூட அவர் தங்கமாட்டார். நம்மளை விட்டுட்டு வந்துடுவார். இப்ப திடீர்னு அவரை மாத்த முடியுமா? நீ அவரோட பேச்சை மனசுல வச்சுக்காத”

மணிகண்டன் கண்ணாடியைக் கழற்றித் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
“என்னை விடு. நீ போன காரியம் என்னாச்சு? அங்க போனியா? அவர் என்ன சொன்னார்?”
பூபாலன் அசட்டையாகத் தோளைக் குலுக்கிக்கொண்டான்.
“நான் போனப்ப வீட்டுல யாரும் இல்ல. கோவிலுக்குப் போயிருந்தாங்க. அதனால கிளம்பிட்டேன். ஆனா வீட்டுக்குக் கிளம்புனப்ப அவளைப் பாத்தேன்”
அந்நொடி அவனது முகத்தில் வந்து போனது மாபெரும் வேதனையால் உண்டான முகச்சுளிப்பு.
“பாலு”
மணிகண்டன் நம்ப முடியாமல் திகைத்தான்.
“ம்ம்! மதி!”
தலையை உலுக்கிக்கொண்டான். ஆயிற்று நான்கு வருடங்கள்! இடையில் அவளைப் பார்த்ததே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டான்.
அவள் சென்னையில் பணியாற்றுவது தெரியும். பொன்விளைக்கு வந்தாள் என்றால் ரங்கநல்லூர் நூலக வாயிலில், வாரச்சந்தையில் அவளும் பூமிகாவும் உலாவுதைப் பார்த்திருக்கிறான். பார்த்தும் பார்க்காதது போல நகர்ந்தும் இருக்கிறான். அதையேதான் அவளும் செய்தாள் எனலாம்.
கடந்த மாதம் ஒரு திருமணத்திற்கு போட்டோகிராபி ஆர்டர் கிடைத்தது எனச் சென்னைக்குச் சென்றவன் அங்கே அவளைச் சந்திக்கத்தான் செய்தான். சிறிய அதிர்ச்சி! பின்னர் யாரோ போலக் கடந்தார்கள்.
அங்கே அவளோடு மகேந்திரனும் இருந்தார் என்பது கூடுதல் தகவல்!
மணிகண்டன் அவனது தோளை அழுத்தவும் எரிச்சலில் உச்சு கொட்டினான்.
“என்னமோ எங்க வீட்டுப்பொண்ணை நாங்க மகாராணி மாதிரி பாத்துக்கிட்டோம், அவ கஷ்டப்படுறது பிடிக்கலனு பக்கம் பக்கமா டயலாக் பேசுனாங்க அந்தப் பகவதியம்மா. மதிக்கு ஹைபராகுசிஸ் உண்டு. அளவுக்கதிகமான சவுண்ட் வேவ்ஸ் ஒரு இடத்துல இருந்தா அவளால இயல்பா இருக்க முடியாது. பேனிக் அட்டாக் மாதிரி வந்து செஸ்ட் மசில்ஸ் எல்லாம் டைட் ஆகி நாசியாவால சிரமப்படுவா. இது கூடத் தெரியல. அங்க ஸ்பீக்கர் அலறுது. எனக்கே காது செவிடாகிடுமோனு பயம். அவ தடுமாறி விழவே போயிட்டா. நான் மட்டும் போய் அவ கையைப் பிடிக்கலனா அவ மயங்கி விழுந்து மண்டைய உடைச்சிருப்பா. சே! இதுதான் மகாராணியா பாத்துக்குற லெச்சணம் போல”
வெடித்துத் தீர்த்தான் பூபாலன்.
“அவ மேல இவ்ளோ அக்கறை வச்சிருக்கல்ல. அப்புறம் ஏன் இவ்ளோ வைராக்கியம் உனக்கு?”
மணிகண்டனின் கேள்வியில் பூபாலனின் உடல் இறுகியது.
“அவ எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி. சுயசிந்தனை இல்லாத ஒருத்தி எனக்குத் தேவையில்லண்ணா. முக்கியமா என்னை ரெண்டாம்பட்சமா நினைச்சவ அவ”
இன்னும் ஆதங்கமும் கோபமும் குறையவில்லை அவனது குரலில்.
“அப்ப நீ மட்டும்?”
மணிகண்டன் கேட்டதும் ஒரு நொடி புருவம் சுருக்கினான் பூபாலன். பின்னர் கோபத்தோடு அவனை முறைத்தான்.
“நான் அவளை என் மனசுல எவ்ளோ உயர்வா நினைச்சிருந்தேன்னு உனக்கே தெரியும். அவ மரியாதைய கெடுத்துக்கிட்டாண்ணா. இனி அந்த மரியாதை திரும்ப வரும்னு தோணல”
“அப்ப எதுக்கு மகேந்திரன் மாமா கூப்பிட்டார்னு அவங்க வீட்டுக்குப் போன?”
“அவர் மனசுல நினைக்குறது நடக்காதுனு சொல்லுறதுக்காகப் போனேன்” என்று பதிலளித்துவிட்டு எழுந்தான் பூபாலன்.
“ஒரு தடவை யோசி பாலு”
“என் அம்மா அப்பாவ மதிக்காதவளைப் பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்? அடுத்து அவர் என் கிட்ட பேசுனாலும் இதே பதிலைத்தான் சொல்லுவேன்”
இளையவனின் பிடிவாதக்குணத்தை அறிந்தவன் என்பதால் மேற்கொண்டு வாதிட விரும்பவில்லை மணிகண்டன்.
ஆனால் கிளம்புவதற்கு முன்னர் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுப் போனான்.
“எல்லா தப்பும் வானு மேலயும் இல்ல. சொல்லப்போனா உன் மேலயும் தப்பில்ல. தப்பு யார் மேலனு நீங்க ரெண்டு பேரும் யோசிக்காம விட்டுட்டிங்க. அதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்”
புதிர் போல பேசிவிட்டு மணிகண்டன் போய்விட யோசனையோடு வீட்டுக்குள் போன பூபாலன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான்.
அதே நேரம் முத்தரசி இல்லத்தில் வான்மதியிடம் குறுக்கு விசாரணை நடத்திக்கொண்டிருந்தார் பகவதி.

“அவர் சும்மா சொல்லிட்டுப் போறார்மா. எனக்குச் சவுண்ட் அதிகமா இருந்தா பேனிக் அட்டாக் மாதிரி வரும்னு உங்களுக்கு மறந்துடுச்சா? அவர் உங்களை டென்சன் ஆக்கணும்னு சொல்லிட்டுப் போயிருக்குறார். நான் என்ன குந்தி தேவியா, மந்திரம் சொல்லி குழந்தைய பெத்துக்குறதுக்கு?”
கடுப்புடன் காய்ந்துவிட்டு அவள் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டாள்.
கதவின் மீதே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டவளுக்கு இன்னுமே தலைவலி தீரவில்லை. தலைவலியை விட மனவலி அதிகம்.

ஒவ்வொரு முறையும் இந்த வலி எழுந்து அடங்குவதற்குள் அவள் பெரும்பாடு பட்டுப் போகிறாள்.
‘இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை என்னை வதைக்கும்?’
இதையேதான் பூபாலனும் யோசித்துக்கொண்டிருந்தான். இருவர் கொண்ட வேதனையும் தீரும் நாள் என்று வருமோ!