இதயத்தில் நேசப்பூ மலரும் தருணம் அவ்வளவு அழகானது! அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது! அதை ஆராய மூளைக்கு வலு கிடையாது! ஒரு பார்வை, ஒரு அக்கறையான அன்புச்செய்கை, கொஞ்சம் கடிதலுடன் கூடிய ஒரு எச்சரிக்கும் பேச்சு இதில் கூட காதல் மலரும். இதைச் சொன்னால் உங்களில் சிலருக்குச் சிரிப்பு கூட வரலாம். Shall I compare thee to a summer’s day? என்று முதல் பார்வையில் உதிக்கும் காதலைப் பற்றி சொன்ன ஷேக்ஸ்பியர் கூட ‘As you like it’ நாடகத்தில் சொன்னது போல ‘Who ever loved that loved not at first sight?’ என்று அழுத்தமாகக் கூறியதையும் கவனித்தீர்கள் என்றால் பார்த்ததும் உருவாகும் காதலின் தீவிரம் பற்றி உங்களுக்கே புரியும்.
-வான்மதி
வான்மதியிடம் கடுமையாகப் பேசிய பிறகு மனதைத் திசை திருப்ப முயன்ற பூபாலனுக்குத் தோல்வியே கிட்டியது. சும்மா இருந்தவளின் மனதைச் சலனப்படுத்தியது அவன்தானே! பின்னர் அவளது குடும்பச்சூழல் பற்றி தெரிந்ததும் விலக்கி நிறுத்தினால் அவளுக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
அவளை அனுப்பி வைத்த பிற்பாடு அவனுக்குள் நிலவிய அமைதியின்மைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. எது தன்னை இந்தளவுக்குப் பாதிக்கிறது என யோசித்து அவனது இரவுகள் உறங்காத இரவுகளாக நீண்டதுதான் மிச்சம்.

‘அப்படி என்ன அவளிடம் என் மனம் சிக்கிக் கிடக்கிறது? நான் அவளைப் பற்றி யோசிப்பது போல அவளும் என்னை நினைப்பாளா? ஒருவரைப் பற்றி ஒருவர் யோசிக்குமளவுக்கு எங்களுக்கு இடையே எந்த உறவும் கிடையாது, ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர. ஆனாலும் நான் ஏன் இவ்வளவு அலைபாய்தலுடன் இருக்கிறேன்?’
இத்தகைய சிந்தனைகளோடு நாட்கள் நகர அதே நேரத்தில் முடிந்ததாக நினைத்த கோவிட்டின் பாசக்கயிறு இரண்டாம் அலையாய் உருவெடுத்து மீண்டும் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மீண்டுமொரு லாக்டவுனுக்கு வாய்ப்புள்ளதாக ஈடனில் பேசிக்கொண்டார்கள். முந்தைய லாக்டவுனிலேயே தொழில் நடத்துபவர்கள் நொடிந்து போனார்கள். மீண்டுமொரு முறை என்றால் கடையை இழுத்து மூடிவிட்டுக் கிளம்பவேண்டியதுதான் என்று உரிமையாளரும் பிரபல புகைப்பட கலைஞருமான ஹரிஹரன் வருத்தத்தோடு கூறினார்.
நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கையில் பேசாமல் ஊருக்கே சென்றுவிடலாமா என்று கூட யோசித்தான் பூபாலன்.
கடந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் முடங்கியதால் திருநெல்வேலி நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டிருந்த குணசேகரனின் தொழிலும் படுத்துவிட்டது.
உழைத்துப் பழகிய மனிதருக்கு வீட்டுக்குள் முடங்குவது மனவுளைச்சலைக் கொடுத்தது. அதைவிட பெரும் மனவுளைச்சலைக் கொடுத்தது தனது சம்பாத்தியம் நின்று போன கொடுமைதான்.
மணிவண்ணனுக்குச் செப்டம்பரில் அவனது நிறுவனம் திறக்கும்வரை மாமனார் மாமியார் தயவில் வாழும் சூழல். அவன் எங்கிருந்து குடும்பத்துக்கு உதவ முடியும்?
அந்நேரத்தில் பூபாலன் சில இணையதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றுவான். ப்ரீமியம் உறுப்பினர்கள் அந்தப் புகைப்படங்களைப் பணம் கட்டி தங்களது சொந்த உபயோகத்துக்குப் பதிவிறக்கம் செய்துகொள்வார்கள். அந்தப் பணத்தில் குறிப்பிட்ட பகுதியை இணையதளங்கள் எடுத்துக்கொள்ளும். மீதியை புகைப்படக் கலைஞர்களுக்குக் கொடுக்கும். அதைத் தனது பங்கு வருமானமாக வீட்டுக்குக் கொடுத்தான் அவன்.
குணசேகரனின் சேமிப்பு வங்கியில் நிரந்தரவைப்பு நிதியாகச் சேர்ந்திருந்ததால் அதிலிருந்து வட்டி வந்தது. சாப்பாட்டுக்கே வழியில்லாதச் சூழல் என்றெல்லாம் இல்லை.
ஆனால் உழைப்பது, பணம் சம்பாதிப்பது ஆண்களின் வேலை என்ற எண்ணத்தில் ஊறிப்போனவர் குணசேகரன். அவரது வளர்ப்பு பூபாலன். சும்மா வீட்டிலிருப்பது ஆண்மைக்கு இழுக்கு என்று எண்ணுபவர்கள் இருவரும்.
லாக்டவுன் எல்லாம் முடிந்த பிறகு காய்கறி வியாபரத்தை இன்னொருவரிடம் முழுவதுமாக ஒப்படைத்து குறிப்பிட்டத் தொகையை வாங்கிக்கொண்ட குணசேகரன் பின்னர் வீட்டிலேயே இருக்கும் சூழல்.
இப்போது பூபாலனும் அங்கே போய்விட்டால் அவரது மனவுளைச்சல் இன்னுமே அதிகமாகும். அவர் சொன்னபடி பொறியியலைப் படித்து ஏதேனும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்திருந்தால் கூட குடும்பம் நிமிர்ந்திருக்குமோ என்ற கலக்கம் அவனுக்குள் இப்போதெல்லாம் அதிகமாகிறது.
அந்தக் கலக்கத்தின் காரணமாக அவன் சொந்த ஊருக்குப் போகாமல் சென்னையில் இருக்கிறான்.
இந்நிலையில் ஒரு நாள் அவனோடு பணியாற்றும் தோழர்களில் ஒருவன் காவேரி மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றும் தன் தங்கையைப் பார்க்கப் போய்விட்டு வந்தபோது அங்கே வான்மதியைப் பார்த்ததாகக் கூறினான்.

“அவளையா? உனக்கு நல்லா தெரியுமா?”
“ப்ச்! எனக்கு நல்லா தெரியும் மச்சி. ஒரு தடவை ஃப்ரெண்டோட போட்டோவ வாங்க வந்துட்டு அதை வாங்காம உன் அட்ரஸை கேட்டுட்டுப் போச்சுல்ல அந்தப் பொண்ணு. உங்க ஊர்க்காரினு வேற நீ ஸ்பெஷலா கல்யாணத்துல அந்தப் பொண்ணைப் போட்டோ எடுத்தியே! மறக்க முடியுமா? போய் என்னனு விசாரி. ஆல்ரெடி அங்க நாலு கொரானா கேஸ் அட்மிட் ஆகிருக்குனு என் தங்கச்சி சொன்னா”
பூபாலனுக்குள் மெல்லிய அவஸ்தை ஆரம்பமானது.
அன்றைய தினம் சந்தித்தபோது கூட இதே கொரானாவைக் காரணம் காட்டிக் கூறினாளே! நீயோ நானோ போய்ச் சேர்ந்துவிடுவோம் என்று கூட சொன்னாளே!
உள்ளுக்குள் எழுந்த பதபதைப்பை மறைத்துக்கொண்டு ஹரிஹரனின் முன்னே போய் நின்றான்.
“தெரிஞ்சவங்க காவேரி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்காங்க சார். இப்ப தான் எனக்கு விவரம் தெரிஞ்சுது. நான் அங்க போய் பாத்துட்டு வந்துடட்டுமா?”
“போப்பா! நோ இஷ்யூஸ். ஆனா மாஸ்க் போட்டுட்டுப் போ”
அக்கறையோடு சொல்லியனுப்பிவைத்தார் அவர்.
பைக்கை விரட்டிக்கொண்டு கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவமனைக்குக் கிளம்பியவனுக்கு வான்மதிக்கு எந்த உபாதையும் இருக்கக்கூடாது என்ற கலக்கம்.
“நீங்களும் நானும் இன்னைக்கு உயிரோட இருக்குறோம். நாளைக்கு இருப்போமோ மாட்டோமோ?” என்று மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து பேசிவிட்டுப் போன வான்மதியை மானசீகமாகக் கடிந்துகொண்டான்
“ஏன்டி இப்பிடி சொன்ன? பாவி! கன்னி வாக்கு கழுதை வாக்குனு அம்மா சொல்லுவாங்களே! அப்பிடி எதுவும் பலிச்சிடக் கூடாது” என்று ஆயிரம் தெய்வங்களுக்கு வேண்டுதல் வேறு!

ஒருவழியாக எந்த வண்டி மீதும் மோதாமல் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவனுக்கு உதவுவதற்காக அங்கே காத்திருந்தாள் அவனது தோழனின் தங்கை.
“வாங்கண்ணா! இப்ப தான் அண்ணா வாட்சப்ல நீங்கவ் வரப்போறத மெசேஜ் பண்ணுனான். அவங்க அங்க இருக்காங்க”
தோழன் அவனது தங்கையிடம் வான்மதியைக் காட்டி “பாலுவோட ஆளு இவங்க! கொஞ்சம் பாத்துக்க” என்று சொல்லிவிட்டுப் போனதன் பலன்.
அவள் கைகாட்டிய இடத்தை நோக்கி ஓடினான் பூபாலன். என்ன பிரிவு, என்ன சிகிச்சை என்பதை எல்லாம் கவனிக்கவில்லை. வார்ட் வராண்டாவில் இருந்த இருக்கையில் சோர்வோடு அமர்ந்து மாஸ்கை மாட்டப்போன வான்மதி அவனது பார்வையில் விழுந்ததும் அவனது ஓட்டமும் பரபரப்பும் நின்றது.
சட்டென அவளது கையைப் பற்றி எழுப்பிவிட்டவன் “ஆர் யூ ஓ.கே மதி?” எனத் தவிப்புடன் கேட்டதும் வான்மதிக்குள் சலனத்தின் இரண்டாம் அலை.

“எதுக்கு வந்திருக்க? உனக்கு ஒன்னுமில்லையே? வேற எதுவும் சொல்லிடாத ப்ளீஸ்” என்று பரபரப்பிலும் பயத்திலும் நடுங்கிய அவனது குரல் இத்தனை நாட்கள் அவளுக்குள் இருந்த வெறுமையை நீக்கியது.
“கோவிட் வாக்சின் போட வந்தேன். வேற ஒன்னுமில்ல”
பூபாலன் நிம்மதி பெருமூச்சு விட்டான். அதைக் கவனித்தவளின் முகத்தில் குறுகுறுப்பு.
“அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்களோ?”
“இல்ல” வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் தருணம் இது என்று புரிந்தது அவளுக்கு.
“ஓடி வரல. அப்ப பைக்ல வந்திங்களா?” வேதாளத்தின் காலைப் பிடித்து இழுத்துத் தரையில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள்.
“ரொம்ப நேரம் நிக்காம இங்க இருந்து கிளம்பு” கட்டளை போல சொல்லிவிட்டுச் செல்ல எத்தனித்தவனின் குறுக்கே வந்து நின்றாள் வான்மதி.
“நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் பாலா”
“எனக்கு வேலை இருக்கு மதி”
“அந்த வேலைய எல்லாம் போட்டுட்டு ஓடி வந்தது எனக்காகத்தானே? இன்னும் கொஞ்சம் நேரம் அந்த வேலைய தள்ளி வைங்க”
“எனக்கு இவ்ளோ உரிமையா ஆர்டர் போடுற இடத்துல நீ இருக்குறதா நினைக்குறியா மதி?”
“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என் கையைப் பிடிச்சு ஆர் யூ ஓ.கேனு கேட்டிங்களே! அது எந்த உரிமைல பாலா? நீங்க செஞ்சது எந்த உரிமைலயோ அதே உரிமைலதான் நானும் பேசணும்னு சொல்லுறேன். வாங்க”
இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்கள்.
“ஆட்டோ புக் பண்ணட்டுமா?” என்றவனைப் பார்த்துப் பற்களைக் கடித்தாள் வான்மதி.
“உங்க கிட்ட பேசணும்னு சொன்னேன்” என்றாள் பிடிவாதமாக.
பூபாலன் வாதாடவில்லை. அவனது பைக்கை எடுத்துவந்தான்.
“ஏறு! நீ எங்க போகணும்னு சொல்லு! இறக்கிவிடுறேன்”
பைக்கில் ஏறி அமர்ந்தவள் “பாதில இறக்கி விடுறது உங்களுக்கு ஒன்னும் புதுசில்லையே” என்று சொல்லவும் சுருக்கென்றது அவனுக்கு.
திரும்பிப் பார்த்தவனின் மாஸ்கைச் சரி செய்தவள் தனது ஃப்ளாட் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு “வீட்டுல வச்சு உங்க கூட பேசணும் பாலா. பிக் அப் அண்ட் ட்ராப் சர்வீசோட முடிஞ்சுதுனு ஓடப் பாக்காதிங்க” என்றாள் முன்னெச்சரிக்கையோடு.
அப்பார்ட்மெண்ட் தரிப்பிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அவளோடு ஃப்ளாட்டுக்குள் வந்தவனுக்கு ‘இவள் என்னை இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கிறாள்’ என்ற எண்ணம் தோன்றியது. தொடர்ச்சியாய் சிறு முறுவல் அவன் இதழில்.
வான்மதி தடுப்பூச்சி போட்ட இடத்தில் உண்டான சுருக்கென்ற வலியில் முகம் சுழித்தபடி அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை அருந்தியவன் “கொஞ்சம் உடம்பு சுடுற மாதிரி இருந்தா பாராசிட்டமால் போட்டுக்க. தலைக்குக் குளிக்காம ஹாட்வாட்டர்ல மேல் கழுவிக்க” என்று அக்கறையாய்ச் சொல்ல
“புல்லரிக்குதுங்க எனக்கு” என்றாள் வான்மதி குத்தலாக.
“சோப்பு போட்டுத் தேய்ச்சுக் குளிக்கலனா இப்பிடித்தான் ஆகும்”
அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. உம்மென்று நின்றவளிடம் “என்ன பேசணும்?” என்று அவன் கேட்கவும் வான்மதியின் கண்களில் கண்ணீர் பளபளத்தது.
“என்ன நினைச்சிட்டிருக்கிங்க உங்க மனசுல? நானா உங்க கிட்ட வந்து பேசுனேனா? நீங்கதானே… ப்ச்! முதல் முதல்ல ஒரு புது மனுசன் கிட்ட இருந்து அன்பும், அக்கறையும் கிடைக்குறப்ப எப்பிடி இருக்கும் தெரியுமா? நீங்க பண்ணுன ஒவ்வொன்னும் எனக்குள்ள எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்திருக்கும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சிங்களா? வேண்டாம் போய்டுனு சொன்னிங்கல்ல. இப்ப எதுக்கு மறுபடி வந்து என் மனசைச் சலனப்படுத்துறிங்க? இந்தப் பரபரப்பு, பயம் இதெல்லாம் என்ன பாலா? எதுக்காக இவ்ளோ தூரம் ஓடி வந்திங்க? எதுக்கு என் மேல இவ்ளோ அக்கறை? ஒன்னு நீங்க என்னை விட்டு விலகி நில்லுங்க. இல்லனா என் கையைப் பிடிச்சுக்கிட்டு என் கூடவே இருங்க. ரெண்டுங்கெட்டானா இருந்து என்னை வேதனைப்படுத்தாதிங்க”
கண்ணீர் வழிய அவள் பேசிய விதம் இத்தனை நாட்கள் அவளுக்குள் இருந்த குழப்பத்தையும், தவிப்பையும் உணர்த்தியது அவனுக்கு.
“மதி…” அவனது குரலும் உடைந்தது.
“போதும்! என்னை விலக்கி நிறுத்த நான் பணக்காரிங்கிற காரணம் மட்டும் போதுமா பாலா? நீங்க என் மூளைய, என் மனசைக் குழப்பிட்டுப் போயிருக்கிங்க. என்னால எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய முடியல. நான் ப்ளாக் செயின் கோர்ஸ்ல சேர்ந்திருக்கேன். என்னால முழு கவனத்தோட படிக்கவும் முடியல. இவ்ளோ ஏன்? அன்னைக்கு உங்க ஸ்டூடியோக்கு ஜோதியோட போட்டோவ வாங்க போய் அதைக் கூட வாங்காம உங்க கிட்ட ஆர்கியூ பண்ணிட்டு வெறுங்கையோட வீட்டுக்கு வந்தேன். உண்டு இல்லனு ஏதாச்சும் ஒன்னைச் சொல்லிட்டுப் போங்க பாலா. திரிசங்கு சொர்க்கத்துல என்னால வாழ முடியாது”
ஒருவரைப் பற்றி இன்னொருவருக்குப் பெரிதாக எந்த விபரமும் தெரியாது. திருமணவீட்டில் ஆங்காங்கே பார்த்தார்கள். சில மணி நேர தனிமையில் ஏதேதோ பேசினார்கள். சந்தித்தார்கள். மொபைலில் உரையாடினார்கள். அதற்குள் இதென்ன மாயவுணர்வு இருவருக்குள்ளும்?
தனக்குள் இருந்து தன்னை முழுமையாக ஆட்கொண்ட உணர்வு அவளுக்குள்ளும் தவிப்பாக மாறி உழலுவதைக் கண்டுகொண்டான் பூபாலன்.
தனது பிடிவாதமும் அவளை விலக்கி வைத்த அசட்டுத்தனமும் அர்த்தமற்றவை என்று தோன்றியது இப்போது.
ஒரு பெண் உன்னை நேசிக்கிறேன் என்பதை இவ்வளவு தூரம் மறைமுகமாகக் கூறிய பிறகு அந்த நேசம் அவளுக்குள் உருவாகச் சூத்திரதாரியாக இருந்த ஆணால் எப்படி அவளை விலக்கிவைக்க முடியும்?
தன்னிடமிருந்து சில அடிகள் தொலைவில் நிற்பவளை நோக்கி கையை நீட்டினான் பூபாலன்.

வான்மதி யோசனையோடு தனது கரத்தை அவனிடம் கொடுக்கவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
மீண்டும் கண்ணீர் மழையை அவளது விழிகள் தூவவும் கரத்தை விடுத்துப் புஜத்தோடு இழுத்து அவளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டவன் “என்னை மன்னிச்சிடு மதி. உன்னைப் போனு சொல்லிட்டுக் குற்றவுணர்ச்சிலயும், தவிப்புலயும் நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். நீயும் என்னை மாதிரி வேதனைலயும் குழப்பத்துலயும் உழல நான் காரணமாயிட்டேன். ஐ அம் ரியலி சாரி” என்று சொல்லிவிட்டு அவளது தோளில் தனது தாடையைப் பதித்துக் கண்களை மூடிக்கொண்டான்.
அவனுக்குள் புதைந்து போன வான்மதிக்கு இத்தனை நாட்கள் அடைந்த வேதனைக்கானத் தீர்வாக அந்த அணைப்பு இருந்தது. வலி நீங்க இதம் கண்ட மனம் இன்னும் எதையோ பூபாலனிடம் எதிர்பார்த்தது.
டெலிபதி போல அதை உணர்ந்தவனாக “நான் உன் கையைப் பிடிச்சுக்கிட்டு உன் கூடவே நிக்க ஆசைப்படுறேன். இப்ப மட்டுமில்ல, வாழ்க்கை முழுக்கவும். இப்ப உனக்குச் சந்தோசம்தானே?” என்று தோள்வளைவில் பதிந்த தாடை அசையக் கேட்டான் பூபாலன்.
வான்மதி பதில் சொல்லவில்லை. புல்லரித்து அடங்கிய அவளது மேனியின் சிலிர்ப்பு அங்கே பூபாலனுக்குப் பதிலானது.
வெகு இயல்பாக அங்கே அழகானக் காதல் மலர்ந்தது இரு இதயங்களில். முதல் பார்வையில் இரு இதயங்களிலும் முகவுரை எழுதிய இந்தக் காதல் முகிழ்த்த விதம் கொஞ்சம் விசித்திரம்தான்! விசித்திரங்களும், அற்புதங்களும், அதிசயங்களும் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது?
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!