ரகுநந்தன் வெளிநாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி பெறும் முன் ஹர்சவர்தனுக்கு நாக்கு வெளியே வந்துவிட்டது. வேங்கடநாதனோ, கோதண்டராமனோ இதற்குப் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் சிறிது காலம் வீட்டை விட்டுப் பிரிந்திருந்தால்தான் அவனுக்கும் கால்பந்து, பைக்கைத் தவிர வெளியுலகமும் இருக்கிறது என்பது புரியவரும் என்பது வேங்கடநாதனின் கருத்து. அதனால் அவர் அவன் வெளிநாடு செல்வதற்குச் சுலபமாக அனுமதி கொடுத்துவிட்டார். அதற்கு முன் தந்தையிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்தார்.
ஆனால் பத்மாவதி ஒரேயடியாக மறுத்துவிட, ஹர்சவர்தன் பொறுமையிழந்தவனாய்,
“எத்தனை நாளுக்கு அவனை உங்க கூடவே வச்சிப்பீங்கம்மா? அவனுக்கும் வெளியுலகம் தெரிய வேண்டாமா? வயசு ஆகறது இருபது. இன்னும் ஆத்துக்குச் செல்லப் பிள்ளையா மட்டும் வளைய வந்தா மட்டும் போதுமா?” என்று கத்திவிட,
பத்மாவதி, “பார்த்தியா நோக்கு கோவம் வர்றது. நீ இங்கே என் கைப்பிடியில இருக்கறச்ச எவ்ளோ சாந்தச்சொரூபியா இருந்தேடா. அந்த கண்காணா தேசத்துக்குப் போய் கோவக்காரனாயிட்ட. அது மட்டுமா, உன் பாஷை கூட நம்மவாள்ள இருந்து ரொம்பவே மாறிடுத்துடா. நீயே இப்படின்னா உன் தம்பி இருக்கானே, அவனை இங்கேயே என்னால கட்டுப்பாடா வைக்க முடியறதில்ல. இதுல அவன் நம்ம விட்டுத் தூரமா போயிட்டான்னா கேக்கவே வேண்டாம்டா” என்றுச் சொல்ல, வேங்கடநாதன் மனைவிக்குப் பொறுமையாக விளக்கினார்.
“தோ பார் பத்மா, நீயும் நானுமா கடைசிவரை அவனோட இருக்கப் போறோம்? அவனோட வித்யை தானடி அவனோட இருக்கப் போறது. நீ இதைப் புரிஞ்சுண்டு அவனைச் சந்தோசமா வழியனுப்பி வைடி” என்று அவர் சொன்ன பிறகும் மனம் ஆறவில்லை அவருக்கு.
ஹர்சவர்தனைப் போல ரகுநந்தன் இல்லை. அவன் விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதே பத்மாவதியின் பயத்துக்குக் காரணம். ஆனால் ரகுநந்தன் அவனது முடிவில் தெளிவாக இருந்தான். மைத்ரேயியின் நிச்சயமும் முடிந்துவிட்ட நிலையில், ஸ்டூடண்ட் விசாவுக்காக எம்பஸிக்குச் சென்று வந்தவனிடம் பத்மாவதி எவ்வளவோ கெஞ்சியும் அவன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சரியாக மைத்ரேயியின் திருமணத்துக்கு அடுத்த நாள் அவனுக்கு லண்டனுக்கு ஃபிளைட். வீட்டின் ஒரு நபர் திருமணத்தின் மற்ற வைபவங்களுக்கு இல்லையென்றால் அவர்களுக்கும் மனக்கலக்கம் உண்டாகும் அல்லவா?
மைத்ரேயி அவனிடம், “கொஞ்ச நாள் தள்ளிப் போடக் கூடாதாடா? அட்லீஸ்ட் நான் அவராத்துக்குப் போற வரைக்காச்சும் இருப்பேனு நெனைச்சா நீ மேரேஜ் அன்னைக்கு ராத்திரியே ஃபிளைட்னு குண்டைத் தூக்கிப் போடுற” என்று வருத்தத்துடன் கூற,
ரகுநந்தன் அவளது கையைப் பிடித்தபடி, “நோக்கு தெரியாதது இல்ல மைத்திக்கா. நான் இப்போ போனா தான் அகாடெமிக் இயர் ஸ்டார்ட் பண்ணறச்ச என்னால டைரக்டா காலேஜ்ல போய் படிக்க முடியும். இல்லன்னா மத்த அரேஞ்ச்மெண்டுக்கே கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும்னு ஹர்சா தானே சொன்னான். மூணு வருஷம் தானேக்கா! கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஓடிப் போயிடும்” என்றுச் சொல்ல அவள் தம்பியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“எல்லா ஃபங்ஷனுக்கும் நம்ம ஒன்னாவே இருந்துட்டு இப்போ என்னோட மேரேஜ்ல நீ பாதியிலேயே போறேனு சொல்றது நேக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கறது தெரியுமா?” என்றுச் சொன்ன தமக்கையின் கண்ணீர் அவனது டி-சர்ட்டின் கைப்பகுதியை நனைக்க, அவளைச் சிரிக்க வைக்க முயன்றான் ரகுநந்தன்.
ஒரு வழியாக அவள் புன்னகையைப் பார்த்த பின் தான் அவனுக்கு நிம்மதியானது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி மைத்ரேயிக்கு மெஹந்தி வைப்பதற்கான புத்தகத்துடன் ஓடி வந்தவள், ரகுநந்தனைக் கண்டதும் யூ-டர்ன் அடிக்க எத்தனிக்க,
அவன் சத்தமாக, “யாரும் ஓடிப் போகத் தேவை இல்ல, நான் இடத்தைக் காலி பண்ணப் போறேன். வந்து உக்காந்துக்கோங்கோ” என்று பல்லைக் கடித்தபடிச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
அவன் சென்ற பிறகு மைத்ரேயியின் அருகில் வந்தவள் அவளுக்கு வைக்க வேண்டிய டிசைனைக் காட்டிவிட்டு மீண்டும் அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள். மைத்ரேயியின் பிளவுஸ் தைக்கக் கொடுத்திருந்த டிசைனரிடம் கிருஷ்ணஜாட்சி பேசிக் கொண்டிருக்க, அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் மெதுவாக,
“கிருஷ்ணா அந்த என்.கே நம்பர் டூ அப்ராட் போறானாம் எம்.பி.ஏ பண்ணுறதுக்கு. உனக்கு தெரியுமா?” என்று கேட்க,
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கிருஷ்ணஜாட்சி, “ம்ம்! தெரியுமே. சோ வாட் நீரு? உனக்கு என்ன திடீர்னு அம்மாஞ்சி மேல பாசம்?” என்று கேட்க,
அவள் முகத்தைச் சுழித்தபடி, “எனக்கு ஒன்னும் அவன் மேல பாசம் இல்ல. அவன் போறானு சித்தம்மால இருந்து மைத்திக்கா வரைக்கும் ஒரே அழுகை. பத்து மாமிக்கு பத்து நாளா தொண்டையில சாதம் இறங்கலையாம், சின்ன மாமி சொன்னாங்க. இப்பிடி எல்லாரையும் அழ வச்சிட்டு இவன் லண்டன் போய் என்ன சாதிக்கப் போறான்? பெரிய சஞ்சய் ராமசாமினு நெனைப்பு” என்று கேலி செய்தபடிப் பேச்சை மாற்றிய தங்கையைக் கண்டு மனதிற்குள் நகைத்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி.
அனைவரும் நாட்கள் மெதுவாக நகரக்கூடாதா என்று ஏங்க, காலம் யாருடைய கோரிக்கையையும் ஏற்காமல் வேகமாகக் கடந்தது. மைத்ரேயியின் திருமண நாளன்று மாலையில் ரகுநந்தனுக்கு ஃபிளைட். தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையம் செல்ல வந்தவனை வழியனுப்ப மொத்தக் குடும்பமும் வீட்டில் கூடிவிட்டது.
அவன் கனத்த மனதுடன் அனைவரிடமும் விடைபெற்றவன் கிருஷ்ணஜாட்சியிடம், “அத்தங்கா! மைத்திக்கா இருக்கற வரைக்கும் எல்லாரையும் பொறுப்பா கவனிச்சிண்டா. இனிமே நீ பார்த்துப்பல்ல. முக்கியமா தாத்தாவையும், பாட்டியையும் கவனிச்சுக்கோ. மூணு வருஷம் கழிச்சு நான் திரும்பி வர்றச்ச அவா இதே மாதிரி சிரிச்ச முகமா இருக்கணும்” என்க,
கிருஷ்ணஜாட்சி, “அம்மாஞ்சி உங்களுக்கு ஹாலிடேஸ் இருக்குமே. அதில வந்து எங்க எல்லாரையும் பார்த்துட்டுப் போகலாமே” என்று கேட்க, அவன் “ஹாலிடேஸ்ல இன்டர்நேஷனல் லெவல்ல செமினார் நடக்கும்னு ஹர்சா சொன்னான். என்னோட படிப்புல ஒரு சின்ன விஷயத்தைக்கூட மிஸ் பண்ணக் கூடாதுனு நெனைக்கிறேன் அத்தங்கா. மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்தியாவை மிதிக்கறதா இல்ல” என்று தீர்மானமாகச் சொல்ல, கிருஷ்ணஜாட்சிக்கே அவனது உறுதியைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்குத் தெரிந்தவரை அவன் ஹர்சவர்தனைப் போல அழுத்தமானவன் இல்லை. அதே சமயம் பத்மாவதியை, ஸ்ருதிகீர்த்தியைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவனும் இல்லை. அவன் இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும்.
அப்படிப்பட்டவன் இவ்வளவு உறுதியாக முடிவெடுத்திருக்கிறான் என்றால் அது கட்டாயம் சரியாகத் தான் இருக்கும் என்று அவள் நம்பினாள். ரகுநந்தனும் அனைவரிடமும் விடைபெற்றவன், வழக்கம் போல அவன் முன் வர விரும்பாத நீரஜாட்சியை நினைத்தவன் இதழில் புன்சிரிப்பு அரும்ப, பேக்கைத் தோளில் மாட்டிக் கொள்ள, ஹர்சவர்தன் அவன் அமர்ந்ததும் காரை ஸ்டார்ட் செய்தான்.
ரகுநந்தன் அனைவருக்கும் டாட்டா காட்டியவன் தோட்டத்தில் உள்ள நீருற்றிலிருக்கும் கிருஷ்ணன் சிலைக்கு யாரோ வெள்ளைத் தாவணி அணிந்த பெண் துளசி மாலை சாற்றுவதைக் கண்டவன், இருட்டில் முகம் தெரியாததால் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஹர்சவர்தனும் அவனை வழியனுப்பிவிட்டு வந்தவனுக்கு, மாடியின் வராண்டா ரகுநந்தன் இல்லாது வெறிச்சோடிப் போய்விட்டதாகத் தோன்றியது. பத்மாவதிக்கு நீரஜாட்சி சொன்னபடியே இளைய மகனது முகத்தைக் காணாது சாப்பாடு உள்ளே செல்லவில்லை. வேங்கடநாதன் பலவித சமாதானங்களைச் சொல்லி, நாளை மைத்ரேயி வீட்டுக்கு வரும் போது அழுமூஞ்சியாக இருப்பாயா என்றெல்லாம் கேலி செய்த பிறகு தான் ஒருவாறு அவர் சமாதானமானார்.
இவர்கள் நிலை இவ்வாறு இருக்க லண்டனில் இறங்கிய ரகுநந்தனுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்க, நல்ல வேளையாக ஹர்சவர்தனின் நண்பன் நிக் வந்து அவனை அழைத்துச் சென்றுவிட்டான். ஹர்சவர்தன் படிக்கும் போது தங்கியிருந்த அப்பார்ட்மெண்டிலேயே ரகுநந்தன் தங்கிக் கொள்ளலாம் என்றவன், மற்ற ஃபார்மாலிட்டிகள் அனைத்தையுமே தானே பார்த்துக் கொள்கிறேன் என்று நிக் சொல்லிவிட ரகுநந்தன் நிம்மதியானான்.
அதன் பின் வந்த நாட்களில் அவன் லண்டனின் வாழ்க்கை ஓட்டத்தில் கலக்க ஆரம்பித்தான். கல்லூரிக்குச் செல்வது, ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலை என்று இருந்தவன் வார விடுமுறையை நூலகத்தில் கழித்தான். அவ்வப்போது வீட்டின் நினைவு எழும் போதெல்லாம் போனில் பேசிக் கொள்வான்.
அதே நேரம் நீரஜாட்சியும் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள். கவிதாவும் அவளும் வணிகவியலைத் தேர்ந்தெடுத்தனர். நீரஜாட்சி அக்காவுக்கு அதிகச் சிரமம் தரக் கூடாதென்பதற்காகவே அதைத் தேர்வு செய்தாள் எனலாம். கவிதாவோ நீரஜாட்சியைப் பிரியக் கூடாது என்பதற்காக அவளுடன் சேர்ந்து அதைத் தேர்வு செய்தாள்.
கல்லூரி முதலாமாண்டில் சேர்ந்ததும் வேங்கடநாதன் இளைய மருமகளுக்கு ஸ்கூட்டியும், மொபைல் போனும் வாங்கிக் கொடுத்துவிட்டார். கிருஷ்ணஜாட்சி லைசென்ஸ் வாங்கிய பின் தான் ஸ்கூட்டியைத் தொட வேண்டும் என்றுச் சொல்லிவிட,
நீரஜாட்சி கடுப்புடன், “அந்தப் பத்து மாமி மூச்சுக்காத்து பட்டு வர வர நீயும் லேடி ஹிட்லர் ஆயிட்டு வர்ற கிருஷ்ணா! இது நல்லதுக்கு இல்ல” என்றுச் சொன்னதோடு சரி. அவளின் பேச்சை மீறி நீரஜாட்சி ஸ்கூட்டியைத் தொடவில்லை.
ஆனால் மொபைல் போனை வைத்துக் கொண்டு பத்மாவதியின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தாள் அடிக்கடி. அது சாம்சங்கின் கேலக்சி இந்தியாவில் அறிமுகமான சமயம். அதில் ‘டாக்கிங் டாம்’ என்ற ஆப் அவளுக்குப் பிடித்தமானது. பத்மாவதி பேசும் போது போனை அங்கே வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவள் போல் நின்று கொள்வாள்.
அவர் பேசியதைக் கேட்டு அதே ராகத்துடன் இழுவையுடன் அந்த பூனை திரையில் பேசுவதைத் தாத்தாவிடம் காட்டி, “பட்டு, டாம் கூட பிராமின் பாஷை பேசுது! அதுவும் பத்து மாமி ஸ்டைல்ல” என்று கேலி செய்வாள்.
சில நேரங்களில் பத்மாவதி கிருஷ்ணஜாட்சியின் மனம் கோணப் பேசினாலும் டாக்கிங் டாம் தான் அவளின் ஆயுதம். அதனிடம் பேசுவது போல மாமியைக் கழுவி ஊற்றுவாள் நீரஜாட்சி.
பத்மாவதி கோபம் வந்து கேட்டால், “மாமி நான் டாம் கூட தான் பேசிட்டிருக்கேன்” என்று அப்பாவியாய்ச் சொல்லிவிட்டு ஓடிவிடுவாள். சில நாட்களில் மைத்ரேயியும் பிரசவத்துக்காக அங்கே வந்துவிட இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் வீடே அதிரும்.
பத்மாவதி எரிச்சலாக, “அடியே மைத்தி, அது தான் அந்த பூனைக்குட்டி கிட்ட பேசிட்டே சுத்துதுனா நீயுமாடி?” என்று தலையிலடித்துக் கொள்வார்.
மைத்ரேயி, “பெரியம்மா அவ டாம் கிட்ட பேசுவா. நான் ஏஞ்சலா கிட்ட பேசுவேன்” என்றுச் சொல்லிக் காட்ட,
பத்மாவதி “பேசுடிம்மா பேசு! இன்னும் நாலு மாசத்துல நோக்கு குழந்தை பிறக்கப் போறது. ஆனா நீயே இங்க குழந்தையாட்டம் அந்தத் குட்டிச்சாத்தான் கூடச் சேர்ந்துண்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டுச் சுத்துடி. ரொம்ப அழகு” என்று மோவாயைத் தோளில் இடித்துவிட்டுச் செல்வார். ஆனால் பட்டாபிராமனும், சீதாலெட்சுமியும் அவர்களின் அந்த கலாட்டாக்களை வாய் விட்டுச் சிரித்து ரசிப்பர்.
கிருஷ்ணஜாட்சிக்கு அவளின் வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. காலையிலிருந்து மதியம் வரை ஹோட்டலிலும் மதியத்திலிருந்து இரவு வரை பேக்கரியிலுமாக அவளின் நாட்கள் மிகவும் பிஸியாக இருந்தன. ஹோட்டல் நிர்வாகம் ஹர்சவர்தனின் கைக்கு வந்ததும் வேங்கடநாதனும், கோதண்டராமனும் அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
ஹோட்டலுக்கு அவ்வப்போது வருபவனின் பார்வை அங்கே வேலையில் மூழ்கியிருக்கும் கிருஷ்ணஜாட்சியை வருடாமல் சென்றதில்லை. ஆனால் அவள் தான் அதை உணரவே இல்லை. ஹர்சவர்தனுக்கும் அவளைக் கண்டதும் தனக்குள் தோன்றும் உணர்வுக்கு என்ன பெயர் என்பது புரியவில்லை என்பதால் பார்ப்பதோடு சரி. அவளிடம் பேசவோ அதை வெளிப்படுத்தவோ அவன் முயலவில்லை.
இதற்கிடையில் மைத்ரேயியின் பிரசவமும் முடிந்து அவள் பிள்ளை அர்ஜுனுக்கு இரண்டு வயதாகும் போது ஸ்ருதிகீர்த்திக்கும் ஒரு நல்ல இடத்தில் விவாகம் முடிந்துவிட்டது. ஆனால் ரகுநந்தன் தான் அர்ஜுனின் பெயர் சூட்டு விழாவிலிருந்து ஸ்ருதிகீர்த்தியின் திருமணம் வரை அனைத்தையும் வீடியோ கால் மூலமாக மட்டுமே கண்டு கழித்தான்.
அவன் வராததில் அனைவருக்கும் வருத்தம் இருந்தாலும் பட்டாபிராமன் மட்டும், “அவனைப் பெத்தவா கிட்ட இருந்து தூரமா இருந்தா மட்டும் தான் மனுஷாளோட மனவோட்டம் எப்பிடினு அவனுக்கும் புரியும்டி சீதே! அவன் வர்றப்பொ வரட்டும். ஆனா கட்டாயம் பழையபடி விளையாட்டுப் பிள்ளையா திரும்பி வர மாட்டானு நேக்கு தோண்றது” என்று நம்பிக்கையுடன் பேரனின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்.
இவ்வாறு அவன் படிப்பு முடிந்து கடைசி வருடம் லண்டனின் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் அவன் பயிற்சிக்காகச் சென்றுவிட்டான். ஒரு ஆண்டு பயிற்சி முடிய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தினமும் தாத்தா பாட்டியிடம் பேசுபவன் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை, “உங்க ரெண்டு பேரையும் நான் நீரஜாட்சிக்கு விட்டுக் குடுக்க மாட்டேன்” என்பது தான்.
கிருஷ்ணஜாட்சியுமே ரகுநந்தனின் உறுதியை மெச்சியபடி ஹோட்டலில் அன்று சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவள், தலையில் மாட்டியிருக்கும் கேப்பையும் தாண்டி நெற்றியில் வந்து விழுந்த கூந்தல் சுருளை ஒதுக்கி ஒதுக்கி களைத்துப் போனவள், கையை கழுவிவிட்டு மீண்டும் கூந்தலை ஒழுங்குபடுத்தலாம் என்று எண்ணி நகரப் போனவள் ஹர்சவர்தனின் பார்வையில் விழ, அவள் கூந்தலை ஒதுக்கிய பாடுகளை ரசித்துக் கொண்டிருந்தான். கை கழுவச் சென்றவளிடம் “கிருஷ்ணா” என்ற அழைப்புடன் வந்தான் ஹர்சவர்தன். கிருஷ்ணஜாட்சிக்கு அதுவே மிகப்பெரிய ஆச்சரியம்.
அவள் அவர்களின் வீட்டில் கால் பதித்த தினத்திலிருந்து ஹர்சவர்தன் அவளிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு சொற்பம் தான். அதுவும் அவள் பெயரைச் சொல்லி அவன் இதுவரைக்கும் அழைத்ததே இல்லை. முதல் முறையாக அவன் வாயில் இருந்து தனது பெயரைக் கேட்ட அதிர்ச்சியில் அவள் நிற்க, அந்த அதிர்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் பத்மாவதியின் மூத்த புதல்வன்.
புன்னகையுடன் அவள் அருகில் வந்தவன், “உன் வேலையைப் பாதியில விட்டுட்டுப் போக வேண்டாம். நான் ஹெல்ப் பண்ணுறேன். வெயிட்” என்றவன் மெதுவாக அவளது கேப்பைக் கழற்ற, கிருஷ்ணஜாட்சி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க மட்டும் செய்தாள்.
அவளது சுருள் கூந்தலை ஒரு இழை பிரியாமல் பிசிறின்றி மடித்தவன் அவள் வைத்திருந்த கிளிப்பை மாட்டியபடியே “இந்த நூடுல்ஸ் ஹேரை எப்பிடி மேனேஜ் பண்ணுற?” என்றபடி கேப்பையும் மாட்டிவிட, கிருஷ்ணஜாட்சிக்கு அவன் இலகுவாகப் பேசிய அதிர்ச்சி வேறு வாயை அடைத்துவிட,
தொண்டையைச் செருமிக் கொண்டவள், “அம்மாஞ்சி நான் ஒர்க்கை கண்டினியூ பண்ணணும்” என்க,
அவன் கேலியாக “நான் உன்னோட கையை ஒன்னும் கட்டிப் போடலையே” என்றுச் சொல்லிவிட்டு குறும்புடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அவள் அவனது செய்கைக்கு அர்த்தம் புரியாமல் விழித்துவிட்டுத் தோளை குலுக்கியவள் எப்போதும் போல வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். ஆனால் அவளிடம் பேசிவிட்டு அவனது அலுவலக அறைக்குச் சென்ற ஹர்சவர்தனோ புன்னகையுடன் தன் கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னவென்று தெரியாத மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவன் அதே மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்ல, அங்கே அவனது அன்னை அவன் தலையில் இடியைத் தூக்கிப் போட்டார். அவன் வீட்டுக்குச் செல்லும் போது விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும் வந்திருக்க வீடே கலகலப்பாக இருந்தது.
அவனைக் கண்டதும் விஜயலெட்சுமி, “இதோ மாப்பிள்ளையாண்டானே வந்துட்டான்” என்றுச் சொல்ல,
ஹர்சவர்தனும் புன்னகையுடன், “வாங்க மாமி! வாங்க மாமா. எப்பிடி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்துவிட்டு தனது அறைக்குச் செல்ல முயன்றவனைத் தடுத்து நிறுத்தியது அன்னையின் குரல்.
“ஹர்சா! அண்ணாவும், மன்னியும் நோக்கும் வர்ஷாவுக்கு விவாகம் பேசத் தான் வந்திருக்காடா கண்ணா” என்க, ஹர்சவர்தனுக்கு இந்த பேச்சு முன்னரே தெரிந்தது தான் என்றாலும் இன்று அதைக் கேட்ட போது அவனுக்கு மனம் ஒப்பவில்லை.
அவனது முகச் சுருக்கம் யார் கண்ணில் பட்டதோ இல்லையோ விஜயலெட்சுமியின் கண்ணில் தெளிவாகப் பட்டது.
இதற்கு மேல் இவனை யோசிக்க விட்டால் அது தனக்கு பாதகமாக முடியும் என்பதால் அவசரமாக, “அது அவா குழந்தையா இருக்கறச்சவே பேசி முடிச்சது தானடி பத்மா. அவன் என்னைக்கு உன் பேச்சைத் தட்டியிருக்கான் சொல்லு” என்று ஹர்சவர்தனின் பலகீனமான அம்மா செண்டிமெண்டில் குத்திவிட அவன் அதற்கு மேல் பேச முடியாத ஊமையானான்.
வலுக்கட்டாயமாகப் பேச்சுவார்த்தை அனைத்தும் முடியும் வரை புன்னகைத்தவன் அனைவரும் கலையவே அறைக்குச் செல்ல எத்தனிக்கையில் பத்மாவதி, “ஹர்சா நேக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கறது தெரியுமோ? உன் விவாகம் என்னோட இருபத்தாறு வருச கனவுடா. நோக்கும் வர்ஷாக்கும் கல்யாணமாகப் போற நாளுக்காக நான் எவ்ளோ ஆவலா காத்திண்டிருக்கேன் தெரியுமோ? என் ராஜா” என்றபடி அவனுக்கு முகம் வழித்து திருஷ்டி கழித்தார்.
அவனும் அன்னையின் கனவுக்கு முன் தன்னுடைய மன உணர்வுகள் ஒன்றுமில்லை என்று ஒதுக்கியவன், அனைத்துக்கும் பூரணச் சம்மதம் என்றுச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தன்னைச் சிறை வைத்துக் கொண்டான்.
அதே நேரம் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையை நீரஜாட்சி கிருஷ்ணஜாட்சிக்கு போனில் சொல்லிவிட, அவள் உடனே வர்ஷாவுக்குப் போன் செய்து வாழ்த்து தெரிவித்தாள்.
“நீ எப்போ நம்மாத்துக்கு வருவேனு நானும் நீருவும் காத்திருக்கோம் தெரியுமா? சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு வந்துடு வர்ஷா! அப்புறம் நீ, நான், நீரு மூணு பேரும் ஜாலியா அரட்டை அடிக்கலாம், பேசிக்கலாம், ஊர் கூட சுத்தலாம்” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல, வர்ஷாவும் அந்தத் திருமண விஷயத்தில் உற்சாகமாகவே இருந்தாள்.
இவ்வாறு இருக்க அந்த வருட தீபாவளிக்கு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், ரகுநந்தனும் தன் பயிற்சிக்காலம் முடிந்து இந்தியா வருவதாகத் தெரிவித்துவிட, பத்மாவதி வீட்டை அல்லோகலப்படுத்தி விட்டார்.
நீரஜாட்சி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் பாட்டியிடம், “சித்தம்மா உன் மருமகளுக்கு இவ்வளவு அலம்பல் ஆகாது. அவரு பெரிய சீமராஜா பாரு! படிக்கப் போனவன் திரும்பி வர்றான். அதுக்கு இவ்வளவு அலப்பறையா? ஏதோ வனவாசம் போன ஸ்ரீராமசந்திரமூர்த்தி அயோத்தியா திரும்புன மாதிரி ஓவரா பண்ணுது பத்து மாமி” என்று கேலி செய்தாள்.
சீதாலெட்சுமியும் பேரனை விட்டுக் கொடுக்காமல், “ஏன்டி சொல்ல மாட்ட? குழந்தை போய் மூணு வருஷமாகறது. ஏதோ அந்த லேப்டாப்புல அவனைப் பார்த்தது. அவனை நேருல பாக்கறதுக்கு நானுமே ஆவலா தான்டி இருக்கேன். நீ சொன்னது என்னவோ சரி. ராமாயணத்துல ஸ்ரீராமர் வனவாசம், போர் முடிஞ்சு தீபாவளி அன்னைக்கு தான் அயோத்தியா திரும்புனார். அதே மாதிரி என் ரகுநந்தனும் அவ்ளோ பெரிய படிப்பைப் படிச்சு முடிச்சிண்டு வர்றான். குழந்தே எப்பிடி இருப்பானோ என்னவோ?” என்று பேரனை நினைத்து உருகத் தொடங்கிவிட்டார். பட்டாபிராமன் நீரஜாட்சியுடன் சேர்ந்து கலாய்த்தாலும் அவருக்குமே மூன்று வருடங்கள் அவனைப் பிரிந்திருந்த சோகம் மனதுக்குள் இருக்கத் தான் செய்தது.
இவ்வாறு வீட்டில் அனைவரும் அவனது வருகையை ஒவ்வொரு விதமாக எதிர்பார்த்து காத்திருக்க, ரகுநந்தனும் சொன்னபடியே தீபாவளியன்று அதிகாலை இந்தியா வந்துவிட்டான். தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்ய எழுந்த பத்மாவதி, தன் கண் முன் வந்து நின்ற மகனைக் கண்டு கட்டிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார்.
அவரது விசும்பல் ஒலி கேட்டு மைதிலி, கோதண்டராமன், வேங்கடநாதன் என்று அனைவரும் விழித்துவிட, ஹாலில் லக்கேஜுடன் நின்றவனைக் கண்டதும் அவனது தாத்தா பாட்டிக்கும் இன்ப அதிர்ச்சி.
அனைவரின் பாசமழையும் ஓயும் நேரத்தில் அவுட் ஹவுஸில் இருந்து வந்துச் சேர்ந்தாள் கிருஷ்ணஜாட்சி. அவனது ஷேமநலனை விசாரித்தவள் தாத்தாவைக் கைப்பிடித்துத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள். அனைவரும் கலைந்துவிட ரகுநந்தன் சத்தம் எழுப்பாமல் அண்ணனின் அறைக்குச் சென்றவன் அவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவே, ஹர்சவர்தனுக்கும் மூன்று ஆண்டுகள் கழித்து தன் கண் முன் நின்றவனைக் கண்டு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.
சகோதரர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த வேங்கடநாதன் மகன்களிடம், “இன்னைக்கும் ஜீன்ஸ் ஷர்ட்னு போட்டுடாதிங்கடா! உங்களுக்கு தான் இது” என்றபடி வேஷ்டி சட்டையை இருவர் கையிலும் திணித்துவிட்டுச் செல்ல, பின்னர் அவர்கள் முறைப்படி மணி ஆறை எட்டுவதற்குள் வெந்நீரில் நல்லெண்ணெய் குளியலை முடித்தவர்கள், வேஷ்டி சட்டையில் கீழே இறங்க,
கிருஷ்ணஜாட்சி ரகுநந்தனைக் கண்டு கிண்டலாக, “சின்ன அம்மாஞ்சி லண்டன் வெதர்ல இன்னும் ஃபேர் ஆயிட்டிங்க போல” என்றுச் சொல்ல அவன் வெட்கப்புன்னகையுடன் தோட்டத்தை நோக்கிச் சென்றான்.
திடீரென்று கொலுசின் சத்தம் கேட்கத் திரும்பி பார்த்த ரகுநந்தனுக்கு, இளஞ்சிவப்பு நிறத் தாவணி அணிந்த ஒரு பெண்ணின் முதுகுப்புறம் மட்டும் தெரிந்தது.
ஈரம் உலர விரித்து விட்டிருந்த கூந்தலின் நடுவில் கிளிப் மாட்டி மீதமுள்ள கூந்தலை விரித்து விட்டிருந்தவள், முதுகை மறைத்த அந்தக் கூந்தல் காட்டின் நடுவில் வெண்ணிற ஓடையாய் மல்லிகைச் சரத்தைச் சூடியிருக்க, காலை நேரக் குளிர்க்காற்றில் அதன் மணம் ரகுநந்தனின் நாசியை நிறைத்தது. அவள் துளசி மாடத்தைச் சுற்றி விளக்கேற்றிவிட்டுத் திரும்ப, அங்கே அழகு தேவதையாய் நின்ற நீரஜாட்சியைக் கண்டு சுற்றம் மறந்து நின்றான் ரகுநந்தன்.

அவளின் முகத்தில் முன்பு இருந்த குழந்தைத்தனம் போயிருக்க, வில்லினை ஒத்த வளைந்த புருவங்களுடன், கூரான எள்ளுப்பூ நாசியுடன், காதின் ஜிமிக்கி அவளின் கன்னங்களை உரசி விளையாட, செவ்விதழ்களில் புன்னகை மின்ன, கதிரவனின் காலைக்கதிர் அவள் மேனியில் பட்டு அவளை தேவலோக அப்ஸரஸாக மாற்றியிருக்க, வளைகரங்களால் தாவணியைப் பிடித்தவாறு நடந்து வந்தவள், ரகுநந்தனின் இதயச் சிம்மாசனத்தில் அப்போதே ஏறி அமர்ந்து கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

