கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை சீராகப் பராமரிக்கப்படும் இயந்திரம் பழுதின்றி ஓடுவது போல எந்தவிதத் தடையுமின்றி ஒழுங்கானப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
அவளது நான்கு மாத பயிற்சி நல்ல முறையில் முடிய, அவளது தோழி கரோலின் ஒரு மாத சிறப்புப் பயிற்சியிலும் கிருஷ்ணஜாட்சியைக் கலந்துகொள்ளுமாறு கூற, அவளும் சந்தோஷமாகவே அதையும் முடித்தாள். இதற்கு இடையில் மாமாவின் ஹோட்டலிலும் அனைத்து ஊழியர்களிடமும் அன்போடு பழகுவதாகட்டும், தலைமை செஃபிடம் பணிந்து நின்று அவரது கட்டளைப்படி வேலையை முடிப்பதாகட்டும், அவளுக்கு நிகர் அவளே என்று நிரூபித்தாள்.
ஐந்து மாத காலப் பயிற்சியின் முடிவில் கரோலின் சொந்தமாகப் பேக்கரி ஆரம்பிக்க முடிவு செய்தவள், கிருஷ்ணஜாட்சியும் தனக்கு இதில் உதவியாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்ள, அவளும் சம்மதித்தாள். கரோலினின் தந்தை தாமஸ் திடீரென்று ஏற்பட்ட முடக்குவாதத்தால் கை கால் செயலிழந்து வீல்சேரே வாழ்க்கை என்றாகிவிட, அவளது அன்னை மெர்லின் அவர்களின் பொக்கே ஷாப் வருவாய் மூலமாகத் தான் அவளைப் படிக்க வைத்தார்.
இப்போது மகளின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவளுக்குப் பேக்கரி ஆரம்பிக்க, வங்கியில் தனது பொக்கே ஷாப் மீது தான் தொழிற்கடன் வாங்கியிருந்தார்.
அவளது குடும்ப நிலையே கிருஷ்ணஜாட்சிக்கு அவள் மீது பிரியம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைய, மெர்லினுமே அவ்வப்போது வீட்டுக்கு வந்து தன்னிடமும் கணவரிடமும் இன்முகமாகப் பேசிவிட்டுச் செல்லும் கிருஷ்ணஜாட்சியைத் தனது சொந்த மகளாகவே கருதுவார்.
கரோலினின் பேக்கரி விஷயத்தைத் தாத்தாவிடமும், மாமாக்களிடமும் தெரிவித்த கிருஷ்ணஜாட்சி, இனி காலையிலிருந்து மதியம் வரை அவர்களின் ஹோட்டலிலும், மதியத்திலிருந்து இரவு வரை கரோலினின் பேக்கரியிலும் தான் வேலை செய்யப் போவதாகச் சொல்ல, அவர்களும் கரோலின் மீது வைத்த நம்பிக்கையில் மறுப்புச் சொல்லவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஏனெனில், அப்பாவிப் பெண்ணாக இருந்த கிருஷ்ணஜாட்சி இன்று ஓரளவுக்கு நிமிர்வுடனும், தெளிவுடனும் இருக்கிறாளென்றால் அதில் கரோலினின் பங்கு மிகவும் அதிகம். அவளுடன் பேசிப் பேசி கிருஷ்ணஜாட்சியின் ஆங்கிலப் புலமையும் தெளிவாகிவிட்டது என்பது வேறு விஷயம்.
வங்கிக் கடனும் கிடைத்து, மெர்லினின் பொக்கே ஷாப்புக்கு அருகிலேயே சிறிய கைக்கு அடக்கமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தவர்கள், அதன் உள்கட்டமைப்புப் பணிகளை முடித்துவிட்டு ஒரு நாள் பட்டாபிராமன், வேங்கடநாதன் மற்றும் கோதண்டராமனை அழைத்துவந்து காட்ட, மூவருமே ‘இந்த பதினெட்டு வயது பெண்களுக்குள் சொந்தமாக உழைக்க வேண்டும் என்று இவ்வளவு வெறியா?’ என்று ஆச்சரியப்பட்டவர்கள், உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரங்களுக்காக மெர்லின் தாமஸைப் பாராட்டத் தவறவில்லை.
கடைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று கேட்க, கரோலின் தயக்கமின்றி “கிராண்ட்பா, அவர் பேக்கரிஸ் நேம் இஸ் மது’ஸ் கேக் வேர்ல்ட், ஹவ் இஸ் இட்?” என்று கேட்க, கிருஷ்ணஜாட்சியோடு சேர்ந்து தாத்தா மற்றும் மாமாக்களும் கண் கலங்கிவிட,
கரோலின் தயக்கமின்றி “கிரிஷ் என்னோட பேக்கரியில எம்ப்ளாயியா வொர்க் பண்ண மட்டும் நான் கூப்பிடல கிராண்ட்பா. ஷீ இஸ் ஆல்சோ அ வொர்க்கிங் பார்ட்னர். இது நான் அவளுக்குக் குடுக்கிற மரியாதைன்னா, இந்த நேம் வச்சது அவளோட மாம்க்கு குடுக்கிற மரியாதை. பிளீஸ் வேண்டான்னு சொல்லாதீங்க” என்று கொஞ்சும் தமிழில் அன்போடு கேட்டப்பின் யாருமே அதை மறுக்கவில்லை.
ஒரு நல்ல நாளில் அவர்களின் எட்டு மாத உழைப்பின் பலனாக அந்தப் பேக்கரியும் தாமஸ் கையால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்குப் பத்மாவதியும், ஸ்ருதிகீர்த்தியும் வர மறுத்துவிட, அவர்களை யாரும் சட்டை செய்யவில்லை. மைதிலி தனது மகள் மைத்ரேயி மற்றும் நீரஜாட்சியுடன் தனிக் காரில் வந்துவிட, பட்டாபிராமன் அவரது புத்திரர்கள் மற்றும் மணையாளுடன் வந்துச் சேர்ந்தார். மெர்லின் அவரது வாடிக்கையாளர்களையும் அழைத்திருக்க, கடைத் திறப்புக்கு வந்தவர்களுக்குக் கிருஷ்ணஜாட்சியும், கரோலினும் கேக் வழங்க, அனைவரும் அதன் ருசியைச் சிலாகித்துவிட்டுச் சென்றனர்.

பட்டாபிராமன் குடும்பத்துக்குக் கேக் கொண்டு வந்த கரோலின், “கிராண்ட்பா, திஸ் இஸ் எக்லெஸ் கேக் ஸ்பெஷலி மேட் ஃபார் யுவர் ஃபேமிலி” என்று நீட்ட, அவர்களும் தயக்கமின்றி எடுத்துக் கொண்டனர்.
மைத்ரேயி கரோலினிடம், “லின், இன்டீரியர் டெக்கரேஷன் இஸ் ஆசம் பேபி. யார் ஐடியா குடுத்தது?” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட, மெர்லினின் ஐடியா என்றதும் அவரிடம் சென்று பேச ஆரம்பித்தாள் அவள்.
இந்தக் காட்சிகளைக் கண்ட தாமஸிற்குத் தன் மகள் இந்த உலகில் இனி யாருடைய தயவும் இன்றிச் சொந்தக் காலில் நின்று விடுவாள் என்ற நம்பிக்கை பிறக்க, அந்த நம்பிக்கையுடன் அவர்களின் வளர்ச்சியை ஒரு மாத காலம் உடனிருந்து கண்டு மகிழ்ந்தவர், மனநிறைவுடன் ஒரு நாள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
கரோலினுக்குமே தந்தையின் உடல்நிலை பற்றி முன்னரே ஓரளவுக்குத் தெரிந்திருந்ததால், அவர் இன்னும் கஷ்டப்படாமல் இருக்கக் கடவுளே அவரை அழைத்துக் கொண்டார் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள். கிருஷ்ணஜாட்சி அவள் மனம் தேறும் வரை மைத்ரேயியின் உதவியுடன் பேக்கரியைப் பார்த்துக் கொள்ள, இரண்டு வாரங்களில் கரோலினும் இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள்.
கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் சென்னை வந்து ஓராண்டு கடந்துவிட்டது. கிருஷ்ணஜாட்சி அவளது வேலையிலும் தங்கையைக் கவனித்துக் கொள்வதிலும் நாட்களைக் கடத்த, நீரஜாட்சி அவள் விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொதுத் தேர்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்த ஆரம்பித்தாள்.
அவ்வாறு இருக்க, ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் அந்த வீட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப் பத்மாவதி தன்னுடைய அண்ணன் குடும்பத்தையும் வரவழைத்திருந்தார். மாலையில் பூஜைக்குப் பலகாரங்கள் செய்யப்பட, வீடே ஜெகஜோதியாக இருந்தது.
குழந்தைகளும் வந்திருக்க, மைத்ரேயி ஒரு குழந்தையின் காலை மாவில் முக்கி கிருஷ்ணரின் பாதத்தை வீட்டின் வாயிலில் இருந்து பூஜையறை வரைக்கும் வைத்துவிட்டு, வாயிலில் அழகான ரங்கோலி போட அமர்ந்துவிட, நீரஜாட்சி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

இருவரும் கோலம் போடும் ஆர்வத்தில் கோலமாவை முகத்தில் ஆங்காங்கே ஈசிக் கொண்டிருக்க, அப்போது வாயிலில் நின்ற காரிலிருந்து இறங்கினாள் வானிலிருந்து வந்த வெண்ணிலவு போன்ற அழகுடன் பெண் ஒருத்தி.
அவள் அணிந்திருந்த தாவணி அவள் அழகுக்கு அழகு சேர்க்க, அந்த முகமே சாந்த சொரூபமாகப் பார்ப்பவரைக் கொக்கி போட்டு இழுக்கும் விதமாகக் கொள்ளை அழகுடன் இருக்க, அவளுக்குப் பின்னே இறங்கினர் விஜயலெட்சுமியும் ஆதிவராஹனும்.
வாசலில் சம்மணக்காலிட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்த மருமகளையும், அவளுக்கு உதவிச் செய்து கொண்டிருந்த பெண்ணையும் பார்த்தவர் “மைத்திம்மா” என்று அன்போடு அழைக்க, மைத்ரேயி “ஆதி மாமா” என்ற கூவலுடன் அவரை அணைத்துக் கொண்டாள்.
அடுத்து நின்ற அழகியை “வர்ஷா, எப்பிடிடி இருக்க அழகி?” என்றவாறு அணைத்துக் கொள்ள, அவளும் “நல்லா இருக்கேன் மைத்தி” என்றுச் சொல்ல,
மைத்ரேயி நீரஜாட்சியை இழுத்து வைத்து “இது நீரு! எங்க மதுரா அத்தையோட இளைய பொண்ணு. மூத்தவா இப்போ வர்ற நேரம் தான்” என்று சொல்ல, அந்த வர்ஷா சிரித்தபடி தன்னுடைய தாவணி முனையை எடுத்து நீரஜாட்சியின் முகத்தில் ஒட்டியிருக்கும் வண்ணப்பொடியைத் துடைத்துவிட, அவளோ “பரவால்ல அக்கா! எப்பிடியும் மறுபடியும் வந்துடும்” என்றுச் சொல்லிவிட்டு மைத்ரேயி, வர்ஷாவுடன் சேர்ந்து மீண்டும் கோலத்தில் கவனம் செலுத்த தொடங்கினாள்.
அவள் தான் வர்ஷா. ஹர்சவர்தனுக்காகப் பிறந்தவள். அவளைத் தனது மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் அவள் பிறந்த சமயத்திலேயே பத்மாவதியின் மனதில் தோன்றிவிட, விஜயலெட்சுமியும் அந்த எண்ணத்துக்கு நீருற்றி வளர்த்துவிட்டார்.
ஆனால் வர்ஷா குணத்தில் அவரைக் கொள்ளவில்லை என்ற வருத்தம் என்றுமே அவருக்கு உண்டு. இப்போது கூட கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைக் கைப்பற்றி எழுப்பியவர்,
“அந்தக் கழுதை கிட்ட நோக்கு என்னடி பேச்சு? அது பொல்லாததுடி. அதோட சினேகிதம் நோக்கு தேவை இல்ல” என்று கடிந்து கொள்ள,
வர்ஷா எரிச்சலுடன் “மா, நோக்கு பிடிக்கலன்னா அது உன்னோடது. அதை என் மேல திணிக்கப் பார்க்காதே. ஒரு சின்னப் பொண்ணு மேல ஏன்மா நோக்கும் அத்தைக்கும் இவ்ளோ வன்மம்? கொஞ்சமாச்சும் பெரியவாளாட்டம் நடந்துக்கோங்கோ ரெண்டு பேரும். இனிமேல் என்னண்ட வந்து அவா கூடப் பேசாதே, இவா கூடப் பழகாதேனு சொன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்! சொல்லிட்டேன்” என்றுக் கடுப்புடன் உரைத்துவிட்டுச் சென்றாள். அவள் முகத்தைப் போலவே அகமும் அவ்வளவு அழகு.

தூரத்தில் நின்ற ஆதிவராஹன் கலங்கிய கண்களுடன் நீரஜாட்சியைக் கண்டவர், மனைவியின் முறைப்பைப் புரிந்து கொண்டவராய் அவருடன் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பூஜையை ஆரம்பித்துவிடலாம் என்று பத்மாவதி கூற,
மைதிலி “அக்கா கொஞ்சம் வெயிட் பண்ணு. இன்னும் கிருஷ்ணா வரல்லயோன்னோ” என்க, பத்மாவதிக்கு எரிச்சலாகி விட்டது.
“ஏன்டி நோக்கு அறிவு கிறிவு இருக்கறதா இல்லையா? மனுஷாள் பகவானுக்காகக் காத்திருக்கறதா, இல்ல பகவான் மனுஷாளுக்காகக் காத்திருக்கறதா? கலி முத்திப் போயிடுச்சுடி! உன் செல்ல மருமாள் எப்போ வருவாள்னு ஸ்ரீகிருஷ்ணர் காத்திண்டிருக்கணுமா? நந்தனும் தான் ஆத்துல இல்ல! அதுக்காக அவன் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியுமோ” என்று அவர் ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் போய்விட்டது.
மின்சாரம் போனதும் சளசளப்பு எழ, அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு தீபத்தின் ஒளி தெரியவே, அனைவரும் ஒளி வந்த திசையைத் திரும்பிப் பார்க்க, அந்த இருளின் இடையே வெள்ளை நிறச் சுடிதாரில் கையில் தீபத்துடன் வந்துச் சேர்ந்தாள் கிருஷ்ணஜாட்சி. வர்ஷாவுக்கு இருளைக் கிழித்து வந்த மின்னல் கீற்று போல வந்த அந்தப் பெண்ணை முதல் முறை பார்த்ததும் பிடித்துவிட்டது.
அவள் நேரே சீதாலெட்சுமியிடம் சென்றவள் “சித்தம்மா, நான் ரெடியாயிட்டு வர்றப்போ கரண்ட் போயிடுச்சு. இருட்டுல வர பயமா இருந்துச்சா, அதான் வாசல்ல இருந்த தீபத்தை எடுத்துட்டு வந்தேன்” என்றுச் சொல்ல, அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்சாரமும் வந்துவிட்டது.

அவள் தீபத்துடன் நின்ற காட்சியைப் புகைப்படக் கலைஞர் மறக்காமல் படம் பிடிக்க, அந்த வருட ஜென்மாஷ்டமி புகைப்படத் தொகுப்பில் அந்தப் புகைப்படம் மட்டும் தனித்த அழகுடன் இருந்தது என்றுச் சொன்னால் மிகையாகாது. அதன்பின் பூஜை சிறப்பாக நடைபெற, மகிழ்ச்சியுடன் அன்றைய நாளும் கடந்தது.
ஒரு வாரத்துக்குப் பின் அந்தப் புகைப்படங்களை ஸ்டூடியோவில் இருந்து சிடியிலும் ஆல்பமாகவும் வாங்கி வந்த ரகுநந்தன், மறக்காமல் அதை ஹர்சவர்தனுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தான். ஹர்சவர்தன் வழக்கம் போலத் தம்பியிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் பார்த்தவன், அதில் இருக்கும் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வர்ஷாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் அவனை அறியாமல் அவன் இதழில் வந்து ஒட்டிக் கொண்டது ஒரு அழகிய புன்னகை. அவளை ரசித்துக் கொண்டு அடுத்தடுத்துப் புகைப்படங்களைப் பார்த்தவன், கிருஷ்ணஜாட்சியின் தீபத்துடன் கூடிய புகைப்படத்தைக் கண்டதும் கண் இமைக்க மறந்தவனாய் சிலையாகி விட்டான்.
எப்போதும் போல அவளது விரித்த கூந்தலுடன் தோகை விரித்த மயிலைப் போல வெள்ளைச் சுடிதாரில் அழகு தேவதையாக நின்றவள், அவன் அறியாமல் அவனது இதயத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாள். ஹர்சவர்தனின் கைவிரல்கள் அவன் அறியாமல் மானிட்டரில் இருந்த கிருஷ்ணஜாட்சியின் புகைப்படத்தை வருடிக் கொடுத்தன.
சில நிமிடம் தான். அதற்குள் பழைய ஆல்பத்தில் தந்தை மற்றும் தாத்தாவுடன் நிற்கும் அத்தை மதுரவாணியின் நினைவு சுனாமியாய் அவனது மூளையைத் தாக்க, மின்சாரத்தைத் தீண்டியது போல விரல்களை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவனின் காதில் அன்னையின் வார்த்தைகளான,
“ஹர்சா, உன் அத்தை நம்ம குடும்பத்தை அழிக்க வந்த கோடரிக்கொம்புடா. எல்லாரும் அவளை எவ்ளோ நம்புனாங்க தெரியுமா? அன்னைக்கு மணவறையில என் அண்ணாவை விட்டுட்டு எவனோ ஊர் பேர் தெரியாதவனோட அவ ஓடிப் போன அவமானம் தாங்காம தான்டா என்னோட தோப்பனாருக்கு முடியாம போச்சு. அவளை நான் என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்டா” என்பது காதில் ரீங்காரமிட, அவன் முகம் தீவிரமான பாவத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
அவன் மூளை, “டேய் ஹர்சா! அந்தப் பொண்ணு உன் மனசைக் கொழப்பிட்டா. ஆனா உன் அம்மாவைப் பத்தி யோசி. என்னைக்குமே அவளை அம்மா ஏத்துக்க மாட்டாடா. அதுவுமில்லாம வர்ஷா உனக்காகவே பிறந்தவடா. அவளை விட்டுட்டு நேத்து வந்த ஒருத்தியை நினைச்சதே பாவம்டா” என்க,
அவனது மனம், “ஹர்சா! நோக்கு யாரு பொருத்தமா இருப்பானு நீ தான் தீர்மானிக்கணும்டா. அதை விட்டுட்டுப் பழையப் பேச்சைப் பிடிச்சுத் தொங்கிண்டு இருக்காதேடா அசடு” என்று அவனுக்கு மாறி மாறி அறிவுறுத்தி அவனைக் குழப்ப, செய்வதறியாது திகைத்த ஹர்சவர்தன் மீண்டும் ஒருமுறை மானிட்டர் திரையில் தெரிந்த கிருஷ்ணஜாட்சியின் புகைப்படத்தைப் பெருமூச்சுடன் பார்த்தான்.
எப்போதும் போலக் கொள்ளை அழகு தான். ஆனால் முன் போல் முகத்தில் அப்பாவித்தனம் இல்லை. பதினெட்டு வயதிலேயே ஒரு தொழிலைத் திறம்பட நடத்தும் நிமிர்வும் தன்னம்பிக்கையும் அவளின் அழகை இன்னும் பேரழகாகக் காட்ட, அவளை ரசிக்கத் துடிக்கும் மனதுக்குக் கடிவாளம் போட இயலாதவனாய் தவித்துப்போனான் ஹர்சவர்தன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

