ஒருவரது இலக்கு அல்லது அவர் விரும்பும் பொருள் அவரிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அவர் அடைய முடியாதளவுக்கு கடினமானதாக இருந்தாலும் உறுதியான மனதுடன் தீர்மானித்துவிட்டால் அந்த இலக்கையோ பொருளையோ அவரால் அடைய முடியும். உறுதியான மனம் கொண்ட மனிதரால் அடைய முடியாததென்று எதுவுமே இவ்வுலகில் இல்லை.
-சாணக்கியர்
ஜாய்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டி, கந்தசாமி நகர், போரூர்…
I was broken from a young age
Taking my sulking to the masses
Writing my poems for the few
That look at me, took to me, shook to me, feeling me
Singing from heartache from the pain
Taking my message from the veins
Speaking my lesson from the brain
Seeing the beauty through the…
Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down and build me up, believer, believer
Pain!
இமேஜின் ட்ராகன் பேண்டின் பிலீவர் பாடலை செவிக்குள் ஒலிபரப்பிய லெனோவோ நெக்பேண்ட் ப்ளூடூத் ஹெட்செட்டின் சத்தத்தை சற்றே அதிகரித்துவிட்டு காலை நேரத்தின் இனிமையை இசையோடு சேர்த்து அதிகரிக்கும் வல்லமை வாய்ந்த காபியை அருந்தியபடி அந்த 2 BHK அப்பார்ட்மெண்டின் பால்கனியில் நின்று ரெசிடென்சியல் கம்யூனிட்டிவாசிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பின்னிருபதுகளில் ஒன்றை தனது வயதாக கொண்ட அந்த யுவதியின் கண்கள் இப்போது ரசிப்பது நடுத்தரவயது ஆண் ஒருவர் அவரது மகளுடன் ஜாகிங் செல்லும் காட்சியைத் தான்!
தந்தையும் மகளுமாய் பேசி சிரித்தபடி ரெசிடென்சியல் கம்யூனிட்டியிலிருக்கும் சிறு பூங்காவின் வெளிப்புற நடைபாதையில் ஓடிக்கொண்டிருந்தனர்.
அக்காட்சியைக் கண்டவளின் இதழ்களில் முறுவல் பூத்தது. எல்லாம் ஒரு நொடி தான்!
“அ..ப்…ப்…ஆவ மன்னி..ச்ச்..சிடு குட்ட்.ட்டிம்மாஆ”
திடுதிடுப்பென அந்த வாக்கியமும் அதைச் சொன்னவர் இருந்த நிலையும் அன்றைய சூழலும் கண் முன் வந்து செல்ல சிரித்த உதடுகள் அழுந்தி இறுக்கமானது.
இமைகள் தானாய் மூடிக்கொள்ள வழக்கம் போல நெஞ்சுக்குள் நெருப்பு கனன்றது. இன்று நேற்றல்ல! கிட்டத்தட்ட எட்டாண்டுகளாய் எரியும் நெருப்பிது. அது அணைய வேண்டுமென்றால் அவள் எண்ணியது யாவும் ஈடேற வேண்டும். அதற்கான பாதையில் தான் எட்டு வருடங்களாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
இதோ அவளது இலக்கு கண் முன்னே இருக்கிறது. இனி அதை அவளது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் மட்டும் போதும்! அவள் வானதி.
அதிரா நடையும் வசீகரப்புன்னகையும் தான் பெண்டிருக்கு அழகு என இந்நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டிருக்கும் இளம்பெண்களின் மத்தியில் அவள் விதிவிலக்கு.
அதே போல பெண்கள் என்றாலே மலரினும் மெல்லிய மனம் படைத்தவர்கள் என்ற பொதுக்கருத்து எல்லாம் அவளுக்குக் கிஞ்சித்தும் பொருந்தாது.
அன்பு, இரக்கம் கொண்ட மெல்லிய மனம் அவளுக்குள்ளும் ஒரு காலத்தில் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் அந்த மெல்லிய மனதை கற்பாறையாக்கும் நிகழ்வுகள் வரிசையாய் நடந்தேற வானதி என்றோ கடுமையானவளாய் மாறிப்போனாள்.
காதில் கேட்டுக் கொண்டிருந்த பிலீவரின் மத்தியில் திடீரென அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவளிடம் மறுமுனை பரபரப்புடன் பேசத் துவங்கியது.
“வாட் ஆர் யூ டூயிங் நதி? ஆல்ரெடி டைம் ஆயிடுச்சு… நீ இன்னும் உன்னோட காபி டைமை முடிக்கலயா?”
மறுமுனையில் படபடத்த குரலுக்குச் சொந்தக்காரி வானதியின் இதழில் மறைந்த சிரிப்பை மீண்டும் முகிழ்க்க வைத்தாள்.
“ஓ.எம்.ஜி! உனக்கு தூரத்துல இருக்குறத லைவ் டெலிகாஸ்ட் போல பாக்குற திவ்ய திருஷ்டி இருக்குதுனு ஏன் சனா என் கிட்ட சொல்லவேல்ல?”
கேலியாய் கேட்டபடி காபி கோப்பையைக் கழுவுவதற்கு சமையலறைக்குள் நுழைந்தாள் வானதி.
“ஏன்டி கிண்டல் பண்ண மாட்ட? இன்னைக்கு பார்ட்டி ஹெட்டோட மருமகன் அதான் ஜர்னலிஸ்ட் அகத்தியன் சீஃபை மீட் பண்ணுறதுக்கு நம்ம ஹெட் ஆபிசுக்கு வர்றார்… முறைப்படி உனக்கு கேம்பெய்ன் மேனேஜரா பதவிப்பிரமாணம் பண்ணி வைக்கப் போறாங்க… நீ என்னடானா இவ்ளோ கூலா இருக்க? ஓ! நம்ம தமிழ்நாடுனதும் உனக்குப் பயம் விட்டுப் போச்சுல்ல” என்றாள் சனா என்று அழைக்கப்படும் நிதர்சனா.
அவளின் பால்யகாலத்திலிருந்து இன்று வரை அவளுடன் ஒன்றாய் பயணிக்கும் சினேகிதி. இருவரும் ஒன்றாய் பள்ளிப்படிப்பை முடித்தார்கள். கல்லூரியும் ஒரே இடத்தில் சேர்ந்தார்கள். இதோ பணியும் ஒரே இடத்தில் தான்! ஆம்! வானதியும் நிதர்சனாவும் பணிபுரிவது இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சில் நிறுவனத்தில் தான்!
இருவரும் பொலிட்டிக்கல் இண்டலிஜென்ஸ் எனப்படும் அரசியல் நுண்ணறிவு குழுவில் நான்காண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்களது இந்த நான்காண்டு கால ஐ.பி.சி பயணத்தில் எத்தனையோ மாநிலத் தேர்தல்களையும் நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்துவிட்டனர்.
அரசியலில் நடக்கும் காய் நகர்வுகளையும் முக்கிய நிகழ்வுகளையும் கவனித்து அவற்றை அறிக்கையாக்கி தேர்தல் வியூகம் வகுக்கும் கேம்பெய்ன் மேனேஜரிடம் ஒப்படைப்பது தான் அவர்களின் வேலை.
தமிழ்நாடு சட்டச்சபை தேர்தலுக்காக தாங்கள் வேலை செய்யப்போகிறோம் அதிலும் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்திற்காக தான் வேலை செய்யப்போகிறோம் என்றதுமே வானதிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதிலும் ஆகாஷ் கண்ணப்பன் அவளை த.மு.க கட்சியின் தேர்தல் வேலைக்கான கேம்பெய்ன் மேனேஜராக அறிவித்ததும் மிகவும் மகிழ்ந்து போனாள். இத்தனை நாட்கள் அவள் காத்திருந்த இலக்கு அருகில் வரப்போகிறதல்லவா?
நிதர்சனாவின் கேள்விக்கு நகைத்தவள் “எலெக்சன்னு வந்துட்டா தமிழ்நாடு, ஹரியானானு எல்லா ஸ்டேட்டுலயும் ஒரே மாதிரி தானே பார்ட்டிக்காரங்க நடந்துக்கிறாங்க… பட் மத்த இடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு… மத்த ஸ்டேட் மக்களோட நாடிய நம்மளால பிடிச்சு பாத்துட முடியும்… ஆனா தமிழ்நாட்டுக்காரங்க இருக்காங்களே, நம்மளோட கருத்துக்கணிப்பு எல்லாத்தையும் திருப்பி போடுறதுல ஜெகஜால கில்லாடிங்க… சோ இங்க நமக்கு வேலை கொஞ்சம் அதிகமா தான் இருக்கும் சனா… மீடியா இன்ஃபர்மேசன் டீம்ல எல்லா ஒர்க்கும் பக்காவா நடந்துடும்… பட் ஃபீல்ட் ஒர்க்கர்சை நினைச்சா தான் தலைவலியா இருக்கு” என்றாள் யோசனையுடன்.
“சீஃப் வேற வெஸ்ட் பெங்கால் எலக்சன்ல பிசியா இருக்கார்… டி.என்லயும் பெங்கால்லயும் ஒரே டைம்ல எலக்சன் வச்சது தான் நம்மளை ரொம்ப டென்சன் ஆகுது… இப்ப பாரேன் நம்மளோட ஹியூமன் ரிசோர்ஸ் ஹாஃபா பிரியுதுல்ல… பட் யூ கேன் ஃபினிஷ் திஸ் டீல் பெர்ஃபெக்ட்லி… ஐ ட்ரஸ்ட் யூ நதி” என்றாள் நிதர்சனா.
“ம்ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவளை சீக்கிரம் தயாராகி போரூர் கார்டன்சிலிருக்கும் ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும்படி கட்டளையிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் நிதர்சனா.
அதன் பின்னர் வானதியும் காலம் கடத்தாது கிளம்பியவள் ஓலா கேப் புக் செய்துவிட்டு காத்திருந்த சமயத்தில் யூடியூபில் டி.என் நியூஸ் செய்தி சேனலை ஓடவிட்டாள்.
அன்றாட செய்திகளைப் பார்த்து அரசியல் நிகழ்வுகளைக் குறித்துக் கொள்ளும் பழக்கம் அவளுடையது. வெறும் குழு உறுப்பினராக இருந்த போதே துண்டுச்செய்தியைக் கூட விட்டு வைக்காதவள் இப்போது கேம்பெய்ன் மேனேஜர் ஆன பிறகு மட்டும் அதை தவறவிடுவாளா என்ன?
யூடியூபில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. கீழே ஓடிய வரிகளில் கண் பதித்தவள் படித்ததும் அதிர்ந்து போனாள்.
“நல்லமலா காட்டுப்பகுதியில் மாயமான முன்னாள் முதல்வர் சுந்தரமூர்த்தியின் ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் தொய்வு”, “காட்டுப்பகுதியில் மழை தீவிரமடைந்ததால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படை ஹெலிகாப்டர்கள் திணறுகின்றன”
செய்தி வாசிப்பாளரோ வழக்கமாக ஒரே செய்தியை ஓராயிரமாவது முறை வாசிக்கும் அவரது பணியைத் திறம்பட செய்து சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் உதவியாளர் ராமநாதனுடன் ஆந்திர தேர்தல் பரப்புரைக்காக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டருடன் மாயமான செய்தியை வானதிக்குத் தெரியப்படுத்திவிட்டார்.
அடுத்து சுந்தரமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு, அவரது அரசியல் நகர்வுகள் என டாக்குமெண்ட்ரி போல செய்திகள் ஒளிபரப்பாக அனைத்தையும் பார்க்கும் போதே ஓலா கேப் வந்துவிட்டது. ஏறியமர்ந்த வானதி ஓ.டி.பியைச் சொல்லிவிட்டு மீண்டும் டி.என் நியூஸின் டாக்குமெண்ட்ரியில் ஆழ்ந்து போனாள்.
“தணிகாசலம் கங்கையம்மாள் தம்பதிக்குத் தஞ்சாவூரில் பிறந்த சுந்தரமூர்த்தி சிறுவயதிலேயே அரசியலார்வம் மிக்கவர். தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தவர் தனது அரசியலார்வத்தால் அதன் தலைவரான மாறன் வழுதிக்கு நெருக்கமானவரானார். அவரது மகளான மீனாட்சியையே மணமுடித்த சுந்தரமூர்த்திக்கு யாழினி, ஆதித்யன் மற்றும் அருள்மொழி என்ற மூன்று வாரிசுகள். இவர்களில் மூத்த மகளான யாழினி பிரபல பத்திரிக்கையாளரான அகத்தியனின் மனைவியும் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமாவார். ஆதித்யன் த.மு.க கட்சியின் இளைஞரணி தலைவராவார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக்கும் எண்ணம் கட்சியில் பெரும்பாலானோருக்கு இருந்தது. இவர்களில் கடைசி மகனான அருள்மொழி சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு சொந்தமான யூனிகார்ன் நெட்வொர்க் என்ற குழுமத்தின் மேலாண்மை இயக்குனராக செயல்பட்டு வருகிறார்”
செய்தியைக் கேட்டுக்கொண்டே வந்த வானதியின் உதடுகள் “அருள்மொழி” என்று உச்சரித்துக்கொண்டது. மனதில் என்னென்னவோ எண்ணங்கள் உதயமாக அவற்றை அதட்டி உட்கார வைத்தவள் தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பிக்கவிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டாமென அவள் மனம் யோசித்தது.
இது ஏ.கேவிற்கு தெரிந்தால் எப்படி எதிர்வினையாற்றுவார் என்ற கேள்வியுடன் ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள்.
லேப்டாப்கள், கணினி சகிதம் வரிசையாக நூற்றுக்கணக்கான இளைய தலைமுறையினர் தீவிரமாக வேலையில் ஆழ்ந்திருக்கும் அவ்விடம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஐ.டி கம்பெனி போல காட்சியளித்தது.
அந்த நான்கு மாடி கட்டிடத்தின் தரைத்தளமானது மீடியா இன்ஃபர்மேசன் குழுவுக்காக ஒதுக்கப்பட்டது. அதை ‘வார் ரூம்’ என்று சொல்வது வழக்கம். இப்போது அந்த வார் ரூமானது தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் முழக்கங்கள், ஆதித்யனது உருவப்படங்களுடன் கூடிய வால்பேப்பருடன் மிளிர்ந்தது.
தேர்தல் பரப்புரைக்கான ஸ்லோகனை உருவாக்கும் வேலை அங்கே தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
“ஹாய் நதி… சீஃப் வந்து ஹாப் அண்ட் ஹவர் ஆகுது… நீ ஏன் லேட்?”
கேள்வியுடன் எதிர்பட்டான் கிஷோர். மீடியா இன்ஃபர்மேசன் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவன்.
“ஹாய் கிஷோர்… நேத்து நான் கிளம்புனப்ப மிட்நைட் ஆயிடுச்சு யார்… அதான் தூக்கமில்லாம ஏர்லி மானிங் தூங்கி லேட்டா எழுந்திரிச்சேன்… லீவ் தட்… எலக்சனுக்கான ஸ்லோகனை உருவாக்கிட்டிங்களா இல்லையா?” என்று வினவினாள் வானதி.
“செவன்டி ஸ்லோகன்ஸ் ரெடி பண்ணி வச்சிட்டோம்… அதுல பெஸ்ட் ஃபோர் சொல்லட்டுமா? நம்பர் ஒன் ‘நாளை நமதே’, நம்பர் டூ ‘புதிய பாதையில் தமிழகம்’, நம்பர் த்ரீ ‘தஞ்சை விடிவெள்ளியின் எழுச்சி’, நம்பர் ஃபோர் ‘வெல்லட்டும் தமிழகம்’… எப்பிடி இருக்கு?” என்று அவளது கருத்தைக் கேட்க
“ஆல் ஆர் ஆசம் யார்… ஓகே! பார்ட்டி தரப்புல இருந்து யார் வந்திருக்காங்க?” என்று அவனிடம் கேட்டாள் அவள்.
“நான் கவனிக்கல நதி… எனி ஹவ் ஆல் த பெஸ்ட்… இந்த எலக்சன் வேலைய உன்னோட சேர்ந்த் பாக்குறதுல எங்க எல்லாருக்கும் எவ்ளோ சந்தோசம் தெரியுமா?” என்று கைகுலுக்கியவன் தோளமையுடன் அவளைத் தோளணைத்துக் கொண்டான்.
வானதி புன்னகையுடன் அவன் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு கிளம்பியவள் மீட்டிங்குகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியை மின் தூக்கியின் உதவியால் அடைந்தாள்.
ஆகாஷ் கண்ணப்பன் வழக்கமாக கட்சியினரைச் சந்திக்கும் மீட்டிங் அறையை அடைந்தவள் நாசூக்காக கதவைத் தட்ட “யெஸ் கம் இன்” என்ற கம்பீரமான குரல் அவளது செவிகளில் விழுந்தது.
கதவைத் திறந்து “குட் மானிங் சீஃப்” என்றபடி உள்ளே நுழைந்தவள் அங்கே அவருக்கு சமமாய் அமர்ந்திருந்த அருள்மொழியைக் கண்டதும் ஒரு கணம் திகைத்தாள்.
அருள்மொழியும் கேம்பெய்ன் மேனேஜருக்காகக் காத்திருந்தவன் வந்து நின்றவளைக் கண்டதும் வியப்பில் புருவம் உயர்த்தினான்.
இருவர் மனதிலும் ஒரே கேள்வி தான்.
“இவன்(ள்) இங்கே என்ன செய்கிறான்(ள்)?”
ஆனால் அதற்கிடையே சத்தமாக ஒலித்தது ஆகாஷ் கண்ணப்பன் எனும் ஏ.கேவின் “குட்மானிங் வானதி” என்ற கம்பீரமான குரல்.
அதில் இருவரும் சுதாரித்து அவரவரது நிலைக்கேற்ற உணர்வை முகத்தில் வரவழைத்துக் கொண்டனர்.
வானதி மரியாதைநிமித்தம் அருள்மொழியை நோக்கி புன்னகைத்தபடி வந்தவள் ஏ.கே காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
“மீட் மிஸ் வானதி மகேந்திரன்… பொலிட்டிக்கல் இண்டலிஜென்ஸ் டீமோட சீஃப்… இவங்க தான் இந்த எலெக்சன்ல கேம்பெய்ன் மேனேஜரா ஒர்க் பண்ணப் போறாங்க” என்று அவளை அருள்மொழியிடம் அறிமுகப்படுத்தினார் ஏ.கே.
அவன் புன்னகையை சிந்திவிட்டு “அண்ட் ஐ அம் அருள்மொழி சுந்தரமூர்த்தி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
தன்னை நோக்கி நீட்டப்பட்ட கரத்தை அந்தரத்திலேயே விட்டு விட்டால் நலமென்பது வானதியின் எண்ணம்! ஆனால் நாகரிகம் என்ற ஒற்றை வார்த்தை அவ்வாறெல்லாம் செய்ய அவளை அனுமதிக்கவில்லை.
அவனது கரத்தைக் குலுக்கியவள் “நைஸ் டூ மீட் யூ” என்று சொல்ல அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
அத்தோடு அவன் பக்கம் திரும்பாதவள் செய்தியில் பார்த்ததை பற்றி கேட்க ஏ.கேவோ “இது ஒரு சிக்கலான நிலமை தான்… ஆனா எனக்கு யூனியன் கவர்மெண்ட் மேல நம்பிக்கை இருக்கு… சுந்தரமூர்த்தி சாரும் ஆதித்யனும் பத்திரமா திரும்பிடுவாங்க… அவங்க வர்றப்ப ஸ்லோகன் அண்ட் கேம்பெய்ன் சாங் ஒர்க் கம்ப்ளீட் ஆகிருக்கணும் வானதி” என்று வேலை விசயமாகப் பேச
“ஓகே சீஃப்” என்று தலையாட்டினாள் அவள்.
பின்னர் அரசியல் விவகாரங்கள் அலசப்பட்டு அந்த மூவர் மீட்டிங் முடிவுக்கு வந்தது.
அருள்மொழி கிளம்ப எழுந்தவன் “ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் டீம்” என்று ஏ.கேவிடம் கூற அவரும் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அவனைத் தொடர்ந்து வெளியேறிய வானதி கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிய போது அருள்மொழி மீது இடித்துக் கொண்டாள்.
“இன்னும் கவனமில்லாம இடிக்குற பழக்கம் மாறல போல”
சுதாரித்து விலகியவள் கேட்டவனை வெட்டுவது போல முறைத்தாள். அவனது கேள்வியிலிருந்தது ஏளனமா? எகத்தாளமா? இரண்டும் இல்லையென்றது அவளது மனம்.
“திமிரு… பணத்திமிரு… பான் வித் சில்வர் ஸ்பூன்னு மார் தட்டிக்கிட்டு எகனாமிக்கலா கீழ இருக்குறவங்கள கேலி செய்யுற எலைட் கிளாஸ் மெண்டாலிட்டி… எதுவுமே இன்னும் மாறல போல” என்று அவனிடம் கேள்வியைத் திருப்பினாள் வானதி.
அருள்மொழியின் விழிகளில் சுவாரசியம் ஏறியது.
“நாட் பேட்… பேச்சு, நடை, ட்ரஸ்சிங் சென்ஸ், ஹேர்ஸ்டைல்னு எல்லாத்துலயும் பயங்கரமான சேஞ்ச் ஓவர்… பட் எங்க பார்ட்டிய நினைச்சா தான் கவலையா இருக்கு… உன்னை மாதிரி ஒரு காலேஜ் ட்ராப் அவுட் போடப்போற எலெக்சன் ஸ்ட்ராடஜிய நம்பி களத்துல இறங்க போறாங்க பாரேன்”

வானதி அவன் கூறிய ‘காலேஜ் ட்ராப் அவுட்’ என்ற வார்த்தையில் சவுக்கால் அடித்தது போல நிமிர்ந்தாள். அருள்மொழிக்கு அவளது இந்த முகமாற்றம் வித்தியாசமாகத் தோற்றமளித்தாலும் சிக்கிய எலியை நகத்தால் பிராண்டி விளையாடும் பூனையின் நிலையில் இருந்தவனுக்கு அவளது உணர்வுகள் பற்றியெல்லாம் கவலை இல்லை.
வானதி அவன் முன்னே உணர்ச்சிவசப்படக்கூடாது என உருப்போட்டுக் கொண்டவள் நிமிர்ந்து சற்றே கர்வத்துடன் அவனை நோக்கினாள்.
“இந்த காலேஜ் ட்ராப்-அவுட் தான் ஹரியானா எலெக்சனுக்கு டிராப்ட் கேம்பெய்ன் ப்ளான் போட்டுக் குடுத்தது சார்… இதே காலேஜ் ட்ராப்-அவுட் ஆட்டி வைக்கிற மாதிரி தான் இனிமே உங்க மொத்த பார்ட்டியும் ஆடப்போகுது… அதை மறந்துடாதீங்க… பை த வே, இது பாலிடிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலை… இதுல உங்களை மாதிரி பிசினஸ்மேனுக்குப் புரியாத நிறைய சூட்சுமங்கள் இருக்கும்… அது எல்லாத்தையும் ஃபோர் இயர்ஸ் கத்துக்கிட்டுத் தான் இன்னைக்கு உங்க முன்னாடி கேம்பெய்ன் மேனேஜரா நிக்கிறேன்… பட் உங்களுக்குத் தான் யாரையும் மதிச்சு பழக்கம் இல்லையே… சோ உங்க கிட்ட என் புரொபசனுக்கான மரியாதைய நான் எதிர்பாக்கல… அண்ட் ஒன் மோர் திங், தலையில இருக்குற வெயிட்டை அப்பப்போ இறக்கி வைங்க… இல்லனா கழுத்துக்கு பெல்ட் போட்டுட்டு நடமாடுற நிலமை வந்துடப் போகுது” என்று எள்ளலுடன் கூறிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் இடத்தைக் காலி செய்தாள்.
தன்னை தலைக்கனம் பிடித்தவன் என மறைமுகமாகக் குத்திவிட்டுச் செல்பவளை கடுஞ்சினத்துடன் ஏறிட்டான் அவன். இன்னும் இவளது அலட்சியம் குறையவில்லை என்ற குமுறல் அருள்மொழிக்குள் எழுந்த நேரத்தில் அவனது மனசாட்சி அவனுக்கு அறிவுரை கூறத் துவங்கியது.
“இந்த எட்டு வருசத்துல நீ கொஞ்சமும் மாறல அருள்… அப்போ அவ மட்டும் மாறிருப்பாளா என்ன? எனி ஹவ், உங்க பார்ட்டிக்கு வேலை செய்யப் போற சர்வெண்ட் பத்தி ஏன் நீ இவ்ளோ தூரம் யோசிக்கிற? உன் அப்பாவும் அண்ணனும் என்ன நிலமைல இருக்காங்கனு தெரியாம வீட்டுல உன் அம்மா கலங்கி போயிருப்பாங்க… பார்ட்டிய யாழினி பாத்துக்கிட்டாலும் அம்மாவ நீ தான் பாத்துக்கணும்… உடனே வீட்டுக்குக் கிளம்புடா”
மனசாட்சியின் அறிவுரையை ஏற்றவன் வானதியை மறந்தவனாய் ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்திலிருந்து கிளம்பினான். விதி எனும் மந்திரக்காரன் எப்போது யாரை நமது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவான், யாரை நமது வாழ்க்கை பாதைக்குள் நுழைய செய்வான் என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு மானிடர்களாகிய நமக்கு சாமர்த்தியம் இருப்பதில்லை. அதனாலேயே என்னவோ பல சமயங்களில் நமது வாழ்க்கையில் வந்து செல்லும் மனிதர்களை ஒரு பொருட்டாவே நாம் கருதுவதில்லை. கூடவே காலமாற்றத்தால் அவர்களது இன்னொரு பரிமாணம் வெளிப்படும் போது நமது மனம் அதை ஏற்க மறுத்து வீண் விவாதம் செய்வதை ஊக்குவிக்கவும் செய்கிறோம்.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!