அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு போரைப் போல உற்சாகமானது, அதே சமயம் ஆபத்தும் கொண்டது. போரில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொல்லப்படுவீர்கள், ஆனால் அரசியலில் பலமுறை அந்நிகழ்வு நடந்தேறும்.
-வின்ஸ்டன் சர்ச்சில்
ராஜா அண்ணாமலைபுரம்…
‘நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற பெயரைத் தாங்கிய எட்டு மாடிக் கட்டிடம் காலை பத்து மணிக்கே உரித்தான பரபரப்புடன் செய்தி தொலைக்காட்சிகளுக்கே உரித்தான சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது.
நியூஸ் டி.என் செய்தி சேனலின் நியூஸ் ரூமில் செய்தியாளர் அழகிய தமிழ் உச்சரிப்பில் ‘ஒரு மணி நேர செய்திகளை’ வாசித்துக் கொண்டிருந்தார்.
“தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான திரு. சுந்தரமூர்த்தியும் அவரது மகன் ஆதித்யனும் ஆந்திர தேர்தல் பரப்புரைக்காக கிளம்பிச் சென்ற பெல் 222 என்ற ஹெலிகாப்டர் கடந்த அரைமணி நேரமாக ஷாம்ஷபாத் ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோலர்களின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதென செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நல்லமலா காட்டுப்பகுதியை ஹெலிகாப்டர் கடந்த சமயத்தில் இந்நிகழ்வு நடந்ததாக ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் வட்டாரம் தெரிவிக்கிறது. ஹெலிகாப்டரில் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆதித்யனுடன் சுந்தரமூர்த்தியின் உதவியாளர் ராமநாதன், மற்றும் இரு பைலட்கள் சென்றிருப்பதாக த.மு.க கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி யாழினி அகத்தியன் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் மாயமான நல்லமலா காட்டுப்பகுதி நக்சல்கள் நிறைந்த பகுதி என்பதால் இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதே நேரம் ‘நிறுவனர், சேர்மன் மற்றும் மேலாளர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட அலுவலக அறைக்குள் சுழல் நாற்காலியில் அமர்ந்து மொபைலில் தீவிரக்குரலில் பேசிக்கொண்டிருந்தான் ஒரு ஆடவன். வயது முப்பத்தைந்துக்குள் இருக்கலாம்.
ஃபார்மல் உடையும் மூக்குக்கண்ணாடியும் அவனது கம்பீரத்தைக் கூட்டிக் காட்ட வழக்கமாய் இல்லாத ஒன்றாய் பதற்றம் அவனது முகத்தில் கூடாரமிட்டிருந்தது.
அவன் முன்னே கிடந்த மேஜையில் ‘மிஸ்டர் அகத்தியன், மேனேஜிங் டைரக்டர் ஆப் நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற எழுத்துக்களுடன் கூடிய சிறிய பெயர்ப்பலகை அமர்ந்திருந்தது.
“லுக் யாழ்! எனக்கும் டென்சனா தான் இருக்கு… இந்நேரத்துக்கு அவங்க சம்பந்தப்பட்ட ப்ளேஸை ரீச் ஆகிருக்கணும்… பட் ஹெலிகாப்டர்ல சடன்னா ஏதோ டெக்னிக்கல் ப்ராப்ளம்.. அதான் ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோலர்சுக்கு சிக்னல் கிடைக்காம போயிடுச்சு… லிசன், இப்போ தான் நீ நிதானமா நடந்துக்கணும்… பார்ட்டி மெம்பர்ஸ், தொண்டர்கள்னு எல்லாரும் இந்நேரம் கலங்கி போயிருப்பாங்க… நீ தான் அவங்களுக்கு தைரியம் குடுக்கணும்… உடனே ப்ரஸ் மீட் அரேஞ்ச் பண்ணி பயப்படுறதுக்கு ஒன்னுமில்லனு ஸ்டேட்மெண்ட் குடு”
மறுமுனையிலோ “எவ்ளோ ஈசியா ஸ்டேட்மெண்ட் குடுக்கச் சொல்லிட்டீங்க அகத்தியன்! காணாம போன ஹெலிகாப்டர்ல இருக்குறது என் அப்பாவும் தம்பியும்… ராமநாதன் அங்கிளோட பொண்ணுக்கு அடுத்த மாசம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு… அவங்க ஃபேமிலியும் பயப்படுறாங்க அகத்தியன்… இந்த நிலமைல நான் எப்பிடி கூலா ஸ்டேட்மெண்ட் விட முடியும்?” என்று பரிதவிப்புடன் கேட்டது ஒரு பெண் குரல்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அமர்ந்திருந்தது தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில். அவள் வேறு யாருமல்ல இதோ இப்போது போனில் பேசிக் கொண்டிருக்கும் அகத்தியனின் மனைவி தான்!
ஆம்! சுந்தரமூர்த்தியின் மூத்தமகளான யாழினி தான் அகத்தியனின் மனைவி. தனக்குப் பின்னர் அரசியல் வாரிசாக சுந்தரமூர்த்தி உருவாக்க எண்ணியது என்னவோ யாழினியையும் ஆதித்யனையும் தான்!
அதில் முதற்கட்டமாக அவர் களமிறக்கியது யாழினியை. முதலில் செயற்குழு உறுப்பினராக கட்சியில் இணைந்தவள் பின்னர் கட்சிக்காக ஏழாண்டுகள் அயராது உழைத்தவளுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளும் மும்முரமாகத் தேர்தல்களத்தில் இறங்கினாள். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொண்ட தேசியக்கட்சி மாபெரும் வெற்றி பெற்றதோடு யாழினியும் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டாள்.
அதன் பின்னர் முழுநேர அரசியல்வாதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிக் கொண்டிருப்பவள் தான் ஆதித்யனின் அரசியல் பிரவேசத்திற்கான முதல் விதையைப் போட்டது!
ஏனெனில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் தற்போதைய ஆளுங்கட்சியான முற்போக்கு தமிழக விடுதலை கட்சியிடம் சொற்ப இடங்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது என்னவோ கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதே!
எனவே தான் ஆதித்யன் இளைஞரணி தலைவனாக உள்ளே நுழைந்தான். இதோ இந்த ஐந்தாண்டுகளில் அவர்களது கட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, கட்சியின் ஐ.டி விங்கை பலப்படுத்தியது, சமூக ஊடகங்களின் பார்வைக்குக் கொண்டு வந்தது என மாபெரும் பணிகளை ஆற்றியவன் அவன் தான்!
நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்ட ஆந்திரமாநிலத்தின் பிரபல கட்சிக்காக அங்கே நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைக்காக தான் சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் அங்கே சென்றிருந்தனர்.
அப்படி சென்றவர்களின் ஹெலிகாப்டர் மாயமான தகவலில் தான் யாழினி கதிகலங்கியிருந்தாள். அவளை போய் அறிக்கை விடும்படி கூறினால் தவிக்கத் தானே செய்வாள்!
அகத்தியனும் அவள் நிலையைப் புரிந்து கொண்டவனாய் “ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் சிச்சுவேசன் யாழ்… பட் வீ ஹேவ் நோ ஆப்சன்மா… நீ இவ்ளோ கலங்கியிருக்குறது வெளிய தெரிஞ்சா கட்சி தொண்டர்களோட நிலமைய யோசிச்சு பாரு… சோ ஸ்டே ஸ்ட்ராங் யாழ்… சீக்கிரம் உன் அசிஸ்டெண்ட் கிட்ட ப்ரஸ் மீட்டுக்கு அரேஞ்ச் பண்ணச் சொல்லு… யாழ்! வாட் அபவுட் அருள்? அவன் கால் பண்ணுனானா?” என்று வினவ
“அவன் போன் அப்போ இருந்து எங்கேஜ்டா இருக்கு அகத்தியன்… அவனை நினைச்சா எனக்குப் பயமா இருக்கு… நீங்க உங்க அசிஸ்டெண்டை வச்சு என்னனு பாருங்க… ஹீ இஸ் எமோஷ்னலி அன்ஸ்டேபிள்… அப்பானா அவனுக்கு உயிர்… ஆதி தான் அவனுக்கு ஹீரோ… இந்த விசயம் தெரிஞ்சதும் நான் அவனுக்குத் தான் கால் பண்ணுனேன்… பட் ஹீ டிண்ட் அட்டெண்ட் மை கால்ஸ்” என்றாள் யாழினி.
“ஓகே! டோண்ட் வொரி… ஐ வில் மேனேஜ் ஹிம்… நீ பார்ட்டி மெம்பர்சை ஹேண்டில் பண்ணு யாழ்” என்ற அகத்தியன் அழைப்பை முடித்துவிட்டு அழைத்தது என்னவோ அவனது உதவியாளனான சுரேஷை தான்
அவன் வந்ததும் “சுரேஷ் நீங்க உடனே யூனிகார்ன் நெட்வொர்க்குக்குப் போய் அருளோட நிலமை என்னனு பாத்து எனக்கு அப்டேட் பண்ணுங்க… நான் யூனியன் கவர்மெண்ட் சைட்ல என்ன ஆக்சன் எடுக்கப்போறாங்கனு கவனிக்கிறேன்” என்றான் அகத்தியன்.
உதவியாளன் சென்ற சில நிமிடங்களில் அகத்தியனுக்கு எண்ணற்ற அழைப்புகள் வர அனைத்தையும் திறமையாகப் பேசி முடித்தவன் களைத்துப் போய் போனை மேஜையில் வீசினான்.
அதே நேரம் ஆளுங்கட்சி தலைமை அலுவலகமும் பரபரப்புடன் தான் இருந்தது. காரணம் எதிர்கட்சித் தலைவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் மொத்தப்பழியும் ஆளுங்கட்சி மீதே சுமத்தப்படும் என்ற பதற்றம் தான்!
கட்சித்தலைவரும் தமிழக முதலமைச்சருமான வீரபாண்டியனுக்கு என்னவோ உள்ளுக்குள் கொண்டாட்டம் தான்! ஏனெனில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கெதிராகப் போட்டியிடப்போவது சுந்தரமூர்த்தி மட்டும் அல்லவே! ஆதித்யனும் இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதாக அவருக்கும் உளவுத்துறை வாயிலாக விசயம் கசிந்திருந்தது.
கட்சியின் பொதுச்செயலாளரை அழைத்தவர் “என்னய்யா நடக்குது இங்க? வானத்துல பறந்த ஹெலிகாப்டர் எப்பிடி மாயமா போயிருக்கும்? ஜூபூம்பானு மந்திரம் போட்டா மறைய வச்சிருப்பாங்க? இது நமக்கு புது தலைவலியா இருக்கும் போலயே” என்று யோசனையில் ஆழ
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி அப்பாவும் மகனும் போய் சேர்ந்துட்டாங்கனு நினைச்சு சந்தோசப்படுங்க தலைவரே” என்று உற்சாகப்படுத்தினார் பொதுச்செயலாளர் செங்குட்டுவன்.
வீரபாண்டியன் அவரை முறைக்கவும் “முறைக்காதீங்க தலைவரே… சுந்தரமூர்த்தியோட மகன் ஆதித்யன் கட்சிய இளவட்ட பசங்க மத்தியில கொண்டு போய் சேர்த்தான்… அவனைத் தான் கட்சியோட எதிர்காலம்னு எங்க பாத்தாலும் கொண்டாடுறாங்க… இந்த எலக்சன்ல அவனைத் தான் சி.எம் கேண்டிட்டேட்டா நிறுத்தப் போறதா கேள்வி… கூடவே ஒரு கம்பெனி கூட…” என்று இழுத்தவர் திடீரென முதலமைச்சரின் செயலாளர் உள்ளே வரவும் பேச்சை நிறுத்தினார்.
செயலாளர் வந்ததும் வீரபாண்டியனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு “இன்னும் அவங்க போன ஹெலிகாப்டரை ட்ரேஷ் பண்ண முடியலனு சொல்லுறாங்க சார்… சென்ட்ரல் கவர்மெண்ட்டும் மும்முரமா தேடுறாங்க… வெதர் கண்டிசன் வேற இப்போ நல்லமலா ஃபாரஸ்ட் ஏரியால சரியில்ல… ஆந்திரா கவர்மெண்ட் கிட்ட இருந்து டீடெய்ல்ஸ் கிடைக்குறதுக்கு தான் வெயிட் பண்ணுறோம்… ஏர் ஃபோர்ஷ் ஹெலிகாப்டர்ஸ் வச்சு மாயமான ஹெலிகாப்டரை தேடுற வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சுனு பி.எம் ஆபிஸ்ல இருந்து அபிஷியல் ஸ்டேட்மெண்ட் வந்திருக்கு சார்… இத பிரஸ் பீபிளுக்கு இன்ஃபார்ம் பண்ணி நீங்க அறிக்கை குடுக்கணும்” என்றார்.
வீரபாண்டியன் அவரை பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஏற்பாட்டைச் செய்ய சொல்லி அனுப்பி வைத்தவர் பொதுச்செயலாளரிடம் “எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லய்யா… எதுக்கும் கமிஷ்னரோட மீட்டிங் ஒன்னை அரேஞ்ச் பண்ணணும்… நாளைக்கு எதுவும் துக்கச்செய்தி வந்தா மாவட்டவாரியா கண்டிப்பா வன்முறை வெடிக்கும்… அதுக்கு முன்னாடி பாதுகாப்ப அதிகப்படுத்தணும்” என்றார்.
கூடவே மர்மமான சிரிப்பொன்று முகிழ்த்தது அவரது இதழில். மனமோ தான் எண்ணியது ஈடேறும் நாள் தூரமில்லை என்று களிப்பில் ஆழ்ந்தது.
அதே நேரம் தமிழக முன்னேற்ற கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழினியின் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“பிரதமர் அலுவலகத்துல இருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் நல்லமலா காட்டுப்பகுதிகள்ல தேடுதல் வேட்டைய ஆரம்பிச்சிட்டாங்க… அதனால கட்சித்தொண்டர்களோ உறுப்பினர்களோ பதற்றமடைய வேண்டாம்… தலைவரும் இளைஞரணி தலைவரும் எந்த ஆபத்துமில்லாம நமக்கு கிடைச்சிடுவாங்க”
தன் முன்னே வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண ஒலிவாங்கிகளில் கட்சி சார்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுக் கொண்டிருந்தாள் யாழினி.
“மேம் அது நக்சலைட் ஏரியானு சொல்லுறாங்களே? நேஷ்னல் செக்யூரிட்டி அட்வைசர் சுந்தரமூர்த்தி சார் போன ஹெலிகாப்டர் நக்சல்களால சுடப்பட்டிருக்க வாய்ப்பிருக்குனு சொல்லிருக்காரே? அதை பத்தி உங்க கருத்து என்ன?”
நிருபர் ஒருவர் கேட்க யாழினியின் நெஞ்சம் ஒரு முறை நின்று துடித்தது. இரத்தப்பாசம் ஒரு நொடி வென்று விட அவள் கண்கள் கலங்கிவிட்டது. ஆனால் ஊடகம் முன்னே அழுவது வலிமையான அரசியல்வாதிக்கு அடையாளம் அல்ல! கண்ணீரை யாருமறியா வண்ணம் உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்வோடு
“வாய்ப்பிருக்குனு தானே சொல்லிருக்கார்… அது உறுதியான தகவல் இல்லையே! எங்களோட எங்க தொண்டர்களோட ஆத்மபலமும் தமிழ்நாட்டு மக்களோட நம்பிக்கையும் துணையா இருக்கு… நல்ல செய்தி வரும்னு நாங்க காத்திருக்கோம்” என்று நிதானமாக உரைத்தவள் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு அழுகையை அடக்கியவளாய் தந்தையின் அலுவலக அறையை நோக்கி விரைந்தாள்.
பின் தொடர்ந்த உதவியாளரிடம் வரவேண்டாமென சைகை காட்டிவிட்டு கதவில் கைவைத்தவளுக்குக் கதவு ஏற்கெனவே திறந்திருப்பது தெரிந்ததும் உள்ளே யார் நுழைந்தது என்ற கேள்வியுடன் அவ்வறைக்குள் பிரவேசித்தாள்.
அங்கே அவளது தந்தையின் நாற்காலியின் மீது கைவைத்தபடி நின்றிருந்தார் ஒரு மனிதர். சால்ட் அண்ட் பெப்பர் என்ற பதத்திற்கிணங்க வெள்ளையும் கருப்புமாய் அடர்சிகை மின்ன நெற்றியில் விபூதி துலங்கியது. கண்களோ ஆசையுடன் அந்த நாற்காலியைத் தழுவியது.
“எப்போ வந்தீங்க சித்தப்பா?” என்ற யாழியின் கேள்வியில் திடுக்கிட்டுத் தலையுயர்த்திய அவர் தான் ராமமூர்த்தி, த.மு.க கட்சியின் தலைவர் சுந்தரமூர்த்தியின் இளைய சகோதரர். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் பொருளாளரும் கூட.
யாழினி அழுத்தமான காலடிகளுடன் அவரை நெருங்கியவள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு
“இந்நேரம் நீங்க தஞ்சாவூர்ல இருக்கணும் சித்தப்பா… அங்க நிலமை கைமீறிப் போக வாய்ப்பிருக்கு… அப்பாவும் ஆதியும் பத்திரமா திரும்புற வரைக்கும் அந்த பகுதி மக்களுக்கு நீங்க தான் தைரியம் சொல்லணும்” என்று கூற அம்மனிதரின் இதழ்கள் இறுகி பின்னர் இளகியது.
கண்களில் குயுக்தியும், மனதில் தந்திரமுமாய் புன்னகைத்தவர் “தஞ்சாவூர் அண்ணனோட கோட்டைனு தெரியும் யாழிம்மா… இப்போ நான் அங்க போனா மக்கள் கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவேன்? என்னோட அண்ணன் போன ஹெலிகாப்டர் வெடிச்சு காட்டுக்குள்ள விழுந்துடுச்சினா?” என்று கேட்க
“ஹெலிகாப்டர் எங்கயும் வெடிக்கல சித்தப்பா… இன்னும் அப்பிடி எந்த தகவலும் வரல” என்றாள் யாழினி சுள்ளென்று.
அந்த மனிதர் முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு “கர்னூல் டி.எஸ்.பி குடுத்த ஸ்டேட்மெண்டை நியூஸ்ல பாக்கலயா யாழி? அண்ணனும் ஆதியும் போன ஹெலிகாப்டர் ஒன்பதே முக்காலுக்கு ரேடியோ சிக்னலை இழந்துருக்கு… அதுக்கு அப்புறம் ஒரு தகவலும் இல்ல… ஏவியேசன் தரப்புல அந்த ஸ்பாட்ல இப்போ பலமா மழை பெய்யுதுனு நியூஸ் வந்திருக்கு… இது எதாவது உனக்குத் தெரியுமா?” என்று எள்ளலை மறைத்துக் கொண்டு வினவ
“என்ன சித்தப்பா? அரசியல்ல என்னை விட உங்களுக்குச் செல்வாக்கு அதிகம்னு குத்தி காட்டுறீங்களா?” என்று சினந்தாள் யாழினி.
உடனே பவ்வியமாய் “நான் உன்னை அப்பிடி சொல்லுவேனா யாழி? அரசியல்லயும் சரி, சொந்த வாழ்க்கைலயும் சரி, நான் பாத்து வளந்த பொண்ணு நீ… இங்க இருக்குற சூட்சுமம் உனக்குப் புரியுறதுக்கு இன்னும் டைம் எடுக்கும்னு சொல்ல வர்றேன்… நீ எம்.பியா இருக்கலாம்… கட்சித்தலைவரோட மகளாவும் இருக்கலாம்… ஆனா நீ ஒரு பொண்ணுடா… உன்னால இந்த மாதிரி அழுத்தமான சூழல தனியா சமாளிக்க முடியாதுனு சொல்ல வர்றேன்… இந்த ஸ்டேட்மெண்ட் குடுக்குறது, சி.எம் கூட பேசுறது, தொண்டர்களுக்கு தைரியம் சொல்லுறது இதைலாம் என் கிட்ட விட்டுடுங்கிறேன்… அண்ணனுக்கு அடுத்து இந்தக் கட்சில எல்லாரும் கட்டுப்படுறது எனக்குத் தானேம்மா” என்று அவளை மறைமுகமாக ஒதுங்கும் படி கூறினார் அம்மனிதர்.
யாழினியின் கண்கள் ஒரு கணம் சீறியது.
“சரியா சொன்னீங்க… எங்கப்பாவுக்கு அடுத்து தான் நீங்க… அவர் உயிரோட இருக்குற வரைக்கும் இந்த ‘அடுத்து’ இருக்குற பெர்சனுக்கு எந்த வேலையும் இல்லங்கிறேன் நான்… சோ நீங்க என்ன பண்ணுறிங்க, தஞ்சாவூருக்கு கிளம்புறீங்க.. அங்க மக்கள் கலங்கி போயிருக்காங்க… அவங்களுக்குத் தைரியம் சொல்லுறிங்க… அப்பாவும் ஆதியும் பத்திரமா சித்தூர் போன தகவல் கிடைச்சதும் நீங்க சென்னைக்குத் திரும்பி வந்துடுங்க… சரியா?” என்று கட்டளையிட அவரது முகம் கறுத்தது.
உதடுகள் ஏளனமாய் வளைய உள்ளமோ எரிமலையாய் கொதிக்க அவரது விழிகள் சுந்தரமூர்த்தியின் நாற்காலியை ஒருவித வெறியுடன் ஏறிட்டுவிட்டு அவள் புறம் திரும்பியது.
திடீரென அவற்றில் அன்பு குடியேறிவிட “நீ எப்பிடிமா தனியாளா இவ்ளோ பெரிய கட்சி ஆபிசையும் பத்திரிக்கைக்காரங்களையும் சமாளிப்ப? உனக்குத் துணையா யாரும் வேண்டாமா?” என்று நைச்சியமாய் கேட்க
“எனக்குத் துணையா அகத்தியன் இருக்கார்… அவரும் ஜர்னலிஸ்ட் தான்… இன்னைக்கு இருக்குற அரசியல் நிலவரம் அவருக்கு அத்துப்படி… அதோட அருள்மொழியும் இங்க தான் இருக்கான்… அதனால நீங்க கவலைப்படாம கிளம்புங்க சித்தப்பா” என்று சொல்லிவிட்டு கரம் குவித்தாள் யாழினி.
இதற்கு மேல் அங்கே நின்றால் அவமானமென கருதி வெளியேறியவரது உள்ளம் கொதித்தது.
கொதித்த உள்ளத்தில் உதயமாயின சில நக்கலும் ஏளனமும் கலந்த வார்த்தைகள்.
“அகத்தியன் இருக்கானா? அவன் ஒரு அரைவேக்காட்டு பத்திரிக்கைக்காரன்… அரசியல்ல பாலபாடம் கூட தெரியாம எலக்சன் வேலைய செய்யுறதுக்காக ஒரு கார்பரேட் கம்பெனிக்கு கோடி கணக்குல பணம் குடுத்து அவங்க சொல்லுற ஐடியா படி தேர்தலை சந்திக்கலாம்னு ஐடியா குடுத்த முட்டாள் அவன்…
அடுத்தவன் அருள்மொழி… ஹூம்! யூனிகார்ன் டிவி நெட்வொர்க், ஐ.பி.எல் டீம், நியூஸ் பேப்பர், மேகசின்னு யூனிகார்ன் குரூப் தவிர வேற எத பத்தியும் யோசிக்காத பக்கா பிசினஸ்மேன்… அரசியலறிவு சுத்தமா இல்லாத தத்தி… இவங்க ரெண்டு பேரும் உனக்குத் துணையா? என்ன ஆட்டம் போடணுமோ அதெல்லாம் இப்போவே போட்டுக்கோ யாழி… இனி வர்ற காலம் எனக்கானது… இந்த ராமமூர்த்தி சொல்லுறத கேட்டு மொத்த தமிழ்நாடும் ஆடப் போற காலம் வரப்போகுது… அது வரைக்கும் அரைவேக்காடும் தத்தியும் உனக்குத் துணையா இருக்கட்டும்… உங்க கோமாளிக்கூத்தை நான் ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன்”
அதே நேரம் ராமமூர்த்தியால் தத்தி என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டவன் அதே ராஜா அண்ணாமலைபுரத்தில் நியூஸ் டி.என் அலுவலக வளாகத்திலிருந்து சில நிமிட தொலைவிலிருந்த தமிழகத்தின் சிறந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்ற பெயரைச் சம்பாதிது வைத்திருக்கும் ‘யூனிகார்ன் நெட்வொர்க்’கின் தலைமை அலுவலகத்தில் அமர மனமின்றி தவிப்புடன் நின்றான்.
வயது முப்பதிற்குள் இருக்கலாம்! ஆகிருதியும் உயரமுமாய் இருந்தவனது முகத்தில் தனது ரோம சாம்ராஜ்ஜியத்தை வளர்த்திருந்தது ஸ்டபிள் லுக் தாடி. கூரிய நாசிக்கு மேலே அதை விட கூர்மையான விழிகள்! இறுகிய மோவாயுடன் கூடிய அழுத்தமான இதழ்கள்!
விழிகளின் மீது பாதுகாப்பு அரணாய் நின்ற கருப்பு காவலர்களான புருவங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் வண்ணம் நெறிந்திருந்தது.

கண்களோ மேஜை மீதிருந்த புகைப்படத்தை கலக்கத்துடன் வெறித்தது. அதில் அவனுடன் தோளணைத்தபடி நின்றிருந்தவன் ஆதித்யன். யூனிகார்ன் நெட்வொர்க் குழுமத்தை கடந்த ஐந்தாண்டுகளாக அருள்மொழி நிர்வகிக்கிறான் என்றால் அது அவனது தமையனிடமிருந்து அவன் பெற்ற வணிக அறிவின் அடிப்படையில் தான்!
ஆதித்யன் அரசியல் பக்கம் கரை ஒதுங்கியதும் முழு நேர வியாபார காந்தமாக தன்னை மாற்றிக்கொண்டவன் அவன்! இத்தனை பெரிய குழுமத்தின் தலைமைப்பதவியை அவனிடம் கொடுத்த போது முதலில் திகைத்துத் தான் போனான் அருள்மொழி.
“பாலிடிக்சும் பிசினஸ்சும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி… பாலிடிக்சை ஆதித்யன் பாத்துப்பான்ங்கிற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு… அதே மாதிரி நம்மளோட யூனிகார்ன் நெட்வொர்கை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது அருள்… இவ்ளோ நாள் விளையாட்டுப்பையனா ஜாலியா இருந்தது போதும்… யாழினி ஆதிய பாத்து நீயும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க”
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சுந்தரமூர்த்தி கொடுத்த அறிவுரையின் பேரில் யூனிகார்ன் நெட்வொர்க்கில் காலடி எடுத்து வைத்தவன் இன்று அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கு உழைப்பதிலும் வளர்ச்சியின் பலனை அனுபவிப்பதிலும் ஆழ்ந்து போனான்.
அப்படிப்பட்டவனுக்கு இருந்த ஒரே ஒரு ஆசை தமையனின் அரசியல் பிரவேசத்தில் அவன் பெரிய இடத்திற்கு செல்லவேண்டுமென்பதே! அதை வரவிருக்கும் சட்டச்சபை தேர்தல் உறுதியாக்கிவிடுமென நம்பியிருந்த வேளையில் இப்படி அவர்கள் பரப்புரை நடத்த போன இடத்தில் மாயமாகி போனது அவனைக் கலக்கத்தில் ஆழ்த்தியது.
அவர்களது யூனிகார்ன் நியூஸ் சேனலில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஓடும் செய்தியே அவனது தந்தையும் தமையனும் ஆந்திராவிற்கு சென்ற விமானம் மாயமாகிவிட்டது என்பது தானே!
யோசனையில் மூழ்கியிருந்தவனது கவனத்தைக் களைத்தது அவனது அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம்.
“யெஸ் கம் இன்” என்று உத்தரவிட்டவன் உள்ளே வந்தது அகத்தியனின் உதவியாளன் என்றதும் கண்களில் கவனம் கூட
“எனி புராகிரஷன்?” என்று வினவ
“பி.எம் ஆபிஸ்ல இருந்து அபிஷியல் ஸ்டேட்மெண்ட் வந்திருக்கு சார்… ஏர் ஃபோர்ஷ் ஹெலிகாப்டர்ஸை வச்சு நல்லமலா ஹில் ஏரியால தேட ஆரம்பிச்சிருக்காங்க” என்றான் அகத்தியனின் உதவியாளன் சுரேஷ்.
“டூ ஹவர்சா இதே தான் சொல்லுறாங்க சுரேஷ்… பட் எந்த கன்ஃபார்ம் நியூஸும் வரல… என்ன தான் நடக்குது அங்க? ஒரு பக்கம் என்னனா நக்சலைட் சாப்பரை சுட்டுத் தள்ளிருக்கலாம்னு ஸ்டேட்மெண்ட் வருது… இன்னொரு பக்கம் என்னனா டாடியும் அண்ணனும் ஃபாரஸ்ட்டோட சேஃபான ஸ்பாட்ல இறங்கி ஆந்திரா சி.எம்மோட பாதுகாப்புல சித்தூருக்குக் கிளம்பிட்டாங்கனு நியூஸ் வருது… நியூஸ் சானலை நடத்துற நானே குழம்பிப் போய் நிக்குறேன்… எது தான் உண்மைனு புரியல… ஆனா ஒன்னு மட்டும் புரியுது, யாரோ ரொம்ப க்ளியரா ப்ளே பண்ணுறாங்க… டாடியும் அண்ணாவும் திரும்பி வரட்டும்… அப்போ தான் இந்த அரசியல் சித்து விளையாட்டுக்கு என்ன காரணம்னு முழுசா தெரியும்” என்றவனிடம் சுரேஷ் எதையோ சொல்ல தயங்கினான்.
“அருள் சார்…”
“ஏன் தயங்குறீங்க சுரேஷ்? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுங்க” என்றவன் தனது சிகையைக் கோதிக்கோள்ள
“இன்னைக்கு ஐ.பி.சி ஹெட் ஏ.கேவ அகத்தியன் சார் மீட் பண்ணுறதா இருந்தார்… இப்போ யாழினி மேடம்கு அவரோட துணை தேவை… சோ நீங்க போய் அவரை மீட் பண்ணணும்ங்கிறது சாரோட ஆர்டர்” என்றான் அவன்.
அதை கேட்டதும் அந்தக் குழப்பமான சமயத்திலும் அருள்மொழிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
பின்னே என்னவாம்! ஐ.பி.சி அதாவது பொலிட்டிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனம் அரசியல் சூத்திரதாரியான ஆகாஷ் கண்ணப்பனால் நடத்தப்படும் அரசியல் ஆலோசனை நிறுவனமாகும்.
அவர்களின் வேலையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் ஜெயிப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுப்பது தான்! இது வரை அவர்கள் எந்தக் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்கிறார்களோ அந்தக் கட்சி தான் தேர்தலில் ஜெயித்திருக்கிறது!
அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் விட்ட ஆட்சியை மாமனார் பிடிக்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் ஐ.பி.சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் வரவிருக்கும் சட்டச்சபை தேர்தலில் த.மு.க கட்சிக்கான தேர்தல் வேலைகளைச் செய்வதற்கான ஒப்பந்தத்தை பேசி முடித்தான் அகத்தியன்.
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களும் ஆரம்பக்கட்ட களப்பணிகளை ஆரம்பித்துவிட்டனர். ஐ.பி.சிக்கான தமிழக் சட்டச்சபை தேர்தல் மேலாளர் அதாவது கேம்பெய்ன் மேனேஜரை அறிமுகப்படுத்துவதற்கான சந்திப்பு தான் அன்று நடக்கவிருந்தது. அதில் அகத்தியனிடமும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களிடமும் கேம்பெய்ன் மேனேஜரை அறிமுகப்படுத்தி அவரது பணி பற்றி விளக்கத்தைக் கொடுத்துவிட்டால் தன் பணி முடிந்தது என்பது ஆகாஷ் கண்ணப்பன் என்ற ஏ.கேவின் கணக்கு.
ஆனால் நடந்த திடீர் சம்பவங்களால் அச்சந்திப்பில் தனக்குப் பதிலாக அருள்மொழியை கலந்து கொள்ள அகத்தியன் பணித்திருந்தான். அரசியலில் அரிச்சுவடி கூட அறியாதவனை தேர்தல் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுத்தினால் அவன் சிரிக்காமல் என்ன செய்வான்?
அருள்மொழி சிரித்து முடித்தவன் “பாலிடிக்ஸ், எலக்சன், கேம்பெய்ன், இதெல்லாம் என் டிக்ஸ்னரில இல்லாத வேர்ட்ஸ் சுரேஷ்… பட் மாமா சொல்லிட்டாரே, என்னால முடியாதுனு சொல்ல முடியாது… சோ ஐ வில் மீட் மிஸ்டர் ஏ.கே அட் போரூர் கார்டன்ஸ்… யாழியயும் மாமாவயும் டென்சன் ஆக வேண்டானு சொல்லிடுங்க” என்று சொல்லி சுரேஷை அனுப்பி வைத்தான் அவன். அரிச்சுவடி கூட அறியாதவனை விதியானது அரசியல் சதுரங்கத்தில் இறக்கி போராட வைக்கவிருப்பதை அவன் அறியவில்லை! அதற்கு சூத்திரதாரியாக இருக்கப் போகிற நபரைச் சந்திக்கவிருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது அருள்மொழி தந்தையும் தமையனும் திரும்பி வரும் சமயத்திற்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
PDF திருடாதீர்கள்!