எங்கோ வீசும் தென்றல் என் மேனியைத் தீண்டுகையில் சிலிர்த்தெழும் தேகத்தில் அவன் ஸ்பரிசத்துக்கான ஏக்கம் என்னுள் எழுகிறது. வீட்டின் பின்வாயில் தோட்டத்தில் நான் வைக்கும் சாதத்தை உண்டு முடித்து என்னை உரசிவிட்டுப் போகும் பூனையின் ஸ்பரிசத்தில் கழுத்து வளைவில் வாகாய்ப் பொருந்தி என்னை குறுகுறுக்க வைக்கும் அவனது தாடை முடியின் குறுகுறுப்பு பற்றிய நினைவு கிளர்வதை என்னால் தடுக்கவே முடிவதில்லை. எங்கோ ஒரு ஜோடி கை கோர்த்து, சினேகமாய்ச் சிரித்து நடந்து போவதைப் பார்த்துவிட்டால் உன் புஜத்தில் தலை சாய்த்து வேடிக்கை பார்த்த நாட்களுக்குப் பயணப்பட்டுவிடுகிறது என் இதயம்! கால பயணத்தில் நினைவுகளாய் மாறி உறைந்திருக்கும் காதலை அசை போட்டு என்னை நான் சமாதானம் செய்கிறேன்!
-வான்மதி
பகவதியின் மனம் கொதித்துப் போயிருந்தது. யாராவது பெற்ற மகள் கஷ்டப்படட்டுமென எண்ணுவார்களா? ஆனால் அவரது கணவர் நினைக்கிறாரே!
வான்மதியின் கெட்டநேரம், பூபாலனைக் காதலித்து மணமுடித்துக்கொண்டாள். அந்தப் பாவத்துக்காக அவனுடைய குடும்பத்தில் குப்பை கொட்டவும் செய்தாள். அவர்களுக்கு வான்மதியின் அருமை தெரியாமல் செய்த கொடுமையை ஒரு தாயால் தாங்க முடியுமா?
மகளின் திருமணவாழ்க்கை உடைந்ததற்கானக் காரணம் பூபாலனின் குடும்பம் தங்களை விடச் செல்வத்தில் குறைந்தவர்கள் என்பது மட்டுமே என்று எண்ணும் பகவதியின் மனப்போக்கு இவ்வாறு இருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே!
நான்காண்டுகளில் மகளின் மனம் மாறவில்லை என்பதால் அவளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுப்பது சுலபமென இறுமாப்பில் இருந்தவருக்கு இடியாய் வந்து இறங்கியிருக்கிறான் பூபாலன். ஆம்! பூமிகா – வெங்கடேஷ் திருமண வரவேற்பு மற்றும் திருமணத்துக்கு அவனது ‘க்ளிக்வெர்ஸ் ஸ்டூடியோ’ பொறுப்பில் புகைப்படங்கள் எடுக்கப்படவுள்ளதால் அவன் இரு தினங்களாக அவரது பார்வை வட்டத்திற்குள் வந்து கொண்டே இருக்கிறான்.
இதெல்லாம் யாருடைய திட்டம் என்பது தெரிந்தாலும் பகவதியால் எதுவும் செய்ய முடியாத நிலை. நல்லவேளையாக நரேந்திரனும் மகேந்திரனும் அவனைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்த தினத்தன்று வான்மதி வீட்டில் இல்லை. அவளுடன் பணியாற்றும் தோழி ஒருத்தியின் நிச்சயதார்த்தம் திருசெந்தூரில் நடைபெற்ற காரணத்தால் அங்கே போயிருந்தாள்.
சரியாக வரவேற்பன்று இரவில்தான் அவள் மண்டபத்துக்கு வருவதாகக் கூறியிருந்தாள் அன்னையிடம். அவளிடம் பூபாலன் வீட்டுக்கு வந்தது, விவாகரத்து பற்றிய அவனது திமிரானப் பேச்சு என எதையும் அவர் கூறவில்லை.
என்னவொரு ஆச்சரியம்! நரேந்திரனும் மகேந்திரனும் கூட மூச்சுவிடவில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஏதோ திட்டம் ஓடுகிறது என்பதை மட்டும் கண்டுகொண்டார் பகவதி.
திருமண வரவேற்பு மாலையில்தான். மதியமே வீட்டிலிருந்து மண்டபத்துக்கு வந்தாயிற்று.
ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் எல்லாம் நிச்சயதார்த்தமானச் சில வாரங்களில் முடிந்தாலும் இன்னும் மணமக்களை வைத்து இளசுகள் விதவிதமாகப் புகைப்படம் எடுக்குமாறு பூபாலனிடம் கூறிவிட அவனும் அவனது இரண்டு உதவியாளர்களும் பிசியோ பிசி.
போதாக்குறைக்குப் பூமிகா வேறு அவனை மாமா என்று உரிமையாக அழைத்துப் பச்சை மிளகாயை அரைத்துக் காதில் பூசிய உணர்வைப் பகவதிக்கு உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.
கல்யாணப்பெண்ணை எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர்களின் உறவுக்காரர்களில் பலருக்கு வான்மதி – பூபாலனின் பிரிவு பற்றி இன்னும் தெரியாது. அவர்கள் முன்னிலையில் அவனைக் கடிந்துகொள்ள முடியாமல் பற்களை மட்டும் காட்டியபடி நடமாடினார் பகவதி.
இதோ இன்னும் சில மணி நேரத்தில் வான்மதியும் அவளது தோழியும் திருச்செந்தூரிலிருந்து வந்துவிடுவார்கள். அவள் கண்ணில் பூபாலன் பட்டுவிட்டால்?
தன்னிடம் பேசியதைப் போல அவளிடமும் திமிர்த்தனமாகப் பேசி அவள் மனதை அவன் நோகடித்தால்?

பயத்துடனே நடமாடிக்கொண்டிருந்தவருக்கு வான்மதியும் அவளது தோழியும் மண்டப வாயிலில் காரில் வந்திறங்கியதும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“வானுமா!”
அவசரமாக ஓடிய பகவதி அங்கே நின்று கொண்டிருந்த பூபாலனின் கருத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.
தலையைச் சரித்துப் பார்த்தவனின் பார்வையில் பதற்றத்தோடு தெரிந்த மாமியாரும் அவரது பதற்றத்துக்குக் காரணம் புரியாமல் குழம்பிய வான்மதியும் தென்பட்டார்கள்.
‘இந்தப் பதற்றம், இந்தக் குழப்பம் எல்லாம் ஒரு காலத்தில் என் அன்னைக்கு இவர்கள் கொடுத்த பரிசு! அதை இப்போது இவர்கள் அனுபவிக்கிறார்கள்’
அவனது மனதின் குரல் இது.
எங்கே வான்மதி தன்னைப் பார்த்துவிடுவாளோ என்று பகவதி பதறுவது அவனுக்குக் குதூகலகமாக இருந்தது. இந்தப் பதற்றம் எப்போதுமே அவருக்கு இருக்கவேண்டும். அதுதான் தன் குடும்பத்தைப் பற்றி வான்மதியின் மனதில் விஷத்தைக் கலந்ததற்கான தண்டனை.
அவன் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு நிற்க அன்னையோடு பேசிக்கொண்டே வந்த வான்மதி அவனைக் கண்டதும் திகைத்து நடப்பதை நிறுத்திவிட்டாள்.
அவளது பார்வையில் தெரிந்த அதிர்ச்சியை விட பகவதியின் கண்களில் வந்து போன கலக்கம் இன்னும் சுவாரசியத்தைக் கொடுத்தது பூபாலனுக்கு.
ஒரு காலத்தில் அனைவரையும் கலங்க வைத்து அந்தக் கலக்கத்தை ரசித்த விழிகளில் இன்று அதே கலக்கம்! வாழ்க்கை ஒரு வட்டம் எனச் சும்மாவா சொன்னார்கள்!
“வானுமா”
பகவதி மகளின் கையைப் பற்றி உலுக்க அவளோ தனது அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு “நீங்க போங்கம்மா. நான் வர்றேன்” என்றாள்.
அவளோடு வந்திருந்த வந்தனாவுக்கு வான்மதியின் வாழ்க்கை வரலாறு பற்றி நன்கு தெரியும். கூடவே அவளுக்குப் பூபாலன் யார் என்பதும் தெரியும்.
“நான் பூமிய பாக்கணும் ஆன்ட்டி. என்னை அவ ரூமுக்குக் கூட்டிட்டுப் போறிங்களா?” என்று பகவதியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டாள் அவள்.
வான்மதிக்கு ஏனோ அந்தத் திருமண மண்டபத்தில் தானும் பூபாலனும் மட்டுமே இருப்பது போன்ற பிரமை! ஒருவித அசௌகரியம்!
சாலையில், சந்தையில், நூலக வளாகத்தில், சில சமயம் கோவிலில் அவனைச் சந்திக்க நேர்ந்த பொழுதுகளில் உண்டாகும் அதே உணர்வு இப்போதும்!
ஒருவேளை ஈருடல் ஓருயிராக வாழ்ந்துவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் இப்படித்தான் இருக்குமோ?
இந்நபர் எனக்கு நெருக்கமானவரா? அல்லது மூன்றாவது மனிதரா? இவரை நான் எப்படி அணுகுவது?
இந்தவிதமான மனநிலையில் சூழலும், சுற்றியுள்ளவர்களும் கூட மறந்து போவதுண்டு வான்மதிக்கு.
அவளது கால்களுக்கு வேலை வைக்காமல் பூபாலனே அவளிடம் வந்து நின்றான்.
“இங்க உங்களுக்கு என்ன வேலை?” சாதாரணமாகக் கேட்க முயன்றாலும் அவளை மீறி குரல் நடுங்கிவிட
“என் வேலை என்னனு கூடவா உனக்கு மறந்து போச்சு?” என்று புருவம் உயர்த்தி போலி ஆச்சரியத்துடன் கேட்டான் அவன்.
“இங்க எதுக்காக வந்திருக்கிங்கனு கேட்டேன்”
“ஃபோட்டோகிராபிக்கு ஆர்டர் வந்துச்சு”
வான்மதியால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. அன்றொரு நாள் வீட்டுக்கும் வந்தான் அல்லவா! தனக்குத் தெரியாமல் வீட்டில் எதுவும் நடக்கிறதோ என்ற கேள்வி அவளுக்குள் உதயமானது.
முதலில் யார் இவனை புகைப்படம் எடுக்க புக் செய்தது என்று கேட்கத் தீர்மானித்தவள் விலகி நடந்தாள்.
பூபாலனைக் கடந்து போக முயன்றவளின் கை அவனிடம் சிக்கிக்கொண்டது.

வான்மதியால் கையை உதற முடியாத நிலை.
“கையை விடுங்க. யாராச்சும் பாத்துடப் போறாங்க” என்றாள் பல்லைக் கடித்தவளாக.
“என்னமோ நீ டீனேஜ் கேர்ள் மாதிரியும், நான் உன் பின்னாடி சுத்துற ரோமியோ மாதிரியும் பேசுற? இன்னும் நீ ஃப்ளாஸ்பேக்ல இருந்து வெளிய வரல போலயே”
“விடுங்க கையை! என்ன பண்ணுறிங்க நீங்க?” என அவள் திமிற திமிற அவனது பிடி அழுத்தமாகிக் கொண்டே போனது.
“இதை பி.டி.ஏனு (P.D.A) சொல்லுவாங்க. Public Display of Affection” என்று கேலியாகப் பூபாலன் சொல்ல
“நமக்குள்ள அர்த்தமுள்ளதா ஏதாச்சும் உறவு இருந்தா மட்டும்தான் அதுக்கு நீங்க சொல்லுற பேர் பொருந்தும். இப்ப நீங்க பண்ணுறது பொறுக்கித்தனம். இது Public Display of Arrogance” என்று பதிலடி கொடுத்தாள்.
“தாலி கட்டுன புருசனைப் பொறுக்கினு சொல்லுறது பெரிய பாவம் வானுமா”
அவர்கள் வீட்டார் அழைக்கும் பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லி அவன் கேலி செய்யவும் தன் சக்தி அனைத்தையும் திரட்டி பூபாலனின் கரத்தை உதறித் தள்ளினாள் வான்மதி.
பூபாலன் அவளை எரிச்சலூட்டும் சிரிப்போடு உதவியாளனைத் தேடிச் செல்ல வான்மதியும் படபடத்த இதயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் பூமிகா தயாராகிக்கொண்டிருக்கும் மணப்பெண் அறையை நோக்கி சென்றுவிட்டாள்.
அங்கே அவளுக்காகக் காத்திருந்த மிருதுளா புடவை, நகையைக் கையில் திணித்தார்.
“சீக்கிரமா ரெடியாகு”
“ரிசப்சன் பூமிக்கும் வெங்கிக்கும். எனக்கு இவ்ளோ கிராண்டா எதுக்குச் சித்தி?”
“ப்ச்! முதல்ல என்ன குடுத்தாலும் எனக்கு எதுக்குனு கேக்குறதை நிறுத்து. எத்தனை வயசு ஆனாலும் பொண்குழந்தைங்களை ஜோடிச்சுப் பாக்குறதுல எங்களுக்கு ஒரு சந்தோசம். போ! சீக்கிரமா ரெடியாகு”
மிருதுளா கொடுத்தப் புடவை, நகைகளை அணிந்து வந்தவளிடம் ஒப்பனை செய்துவிடவா என்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வினவ “இட்ஸ் ஓ.கே. இன்னும் ரெண்டு நாளுக்குப் பூமிதான் ஹீரோயின். அவளுக்கு மெயின் கேரக்டர் வைபை உண்டாக்குனா போதும் என்று சிரித்தபடி சொன்னவளின் மணிக்கட்டில் வளையல் உரசியதும் எரிச்சல் எடுத்தது.
அந்தக் கரத்தில் மட்டும் வளையலைக் கழற்றிவிட்டு மெல்லிய ப்ரேஸ்லெட் ஒன்றைப் போட்டுக்கொண்டாள் வான்மதி.
மிருதுளாவின் தூரத்து உறவு முதியப்பெண்மணி ஒருவர் வான்மதியைப் பார்க்கவேண்டுமெனச் சொல்லவும் அவரிடம் அழைத்துச் சென்று நிறுத்தினார்.
அவளது முகம் வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்த அந்த மூதாட்டி “நாலு வருசம் போயாச்சு. சட்டுபுட்டுனு ஒரு புள்ளைய பெத்துக்க தங்கம். உன் வீட்டுக்காரர் எங்க?” என்று வாழ்த்திய கையோடு பூபாலனைப் பற்றி விசாரிக்க என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் வான்மதி.
இன்னும் அவர்கள் உறவினரில் பெரும்பான்மையானவர்களுக்குப் பூபாலனும் அவளும் பிரிந்து வாழ்வது தெரியாது அல்லவா!
“மாப்பிள்ளை போட்டோ எடுக்குறதுல பிசியா இருக்கார் அத்தை. உங்க வாய் முகூர்த்தம் உண்மையாகி வானுமாக்கு நல்லது நடக்கட்டும். பெரியவங்க ஆசிர்வாதம் அவளுக்கு இருந்தா போதும்” என்று மிருதுளா சமாளித்தார்.
சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு சித்தப்பாவைத் தேடிச் சென்றாள் வான்மதி.
எதுவோ நடக்கிறது! இத்தனை நாட்கள் எப்போதேனும் பார்க்க நேர்ந்தால் கூட யாரோ ஒருவனைப் போல் கடக்கும் பூபாலனிடம் ஏதோ வித்தியாசம் தென்படுகிறது! காரணத்தைக் கண்டறியும் நோக்கத்தோடு மகேந்திரனிடம் போய் நின்றாள் அவள்.
“உங்களுக்கு வேற ஃபோட்டோகிராபரே கிடைக்கலையா சித்தப்பா?”
மகேந்திரனிடம் இறுகியக் குரலில் பேசிக்கொண்டிருந்தவளின் பார்வை என்னவோ பூபாலனைத்தான் தழுவியிருந்தது. பார்த்தாள் என்று சொல்வது அநியாயம். தனது பெரிய கருவிழிகளை அவன்மீது நிலை குத்தி முறைத்தாள் என்று சொல்வதே பொருத்தம்.
புகைப்படக்கருவியைக் கையில் சுமந்தபடி நின்றவனின் இதழ்க்கடையில் மெல்லிய புன்னகை உதயமானது. பார்வையில் விசமம் கூட அவன் கண் சிமிட்டி முத்தமிடுவது போல உதடு குவித்துச் சைகை காட்டவும் அவளது விழிகள் பதற்றத்தில் இமை கொட்டின.
சுற்றியிருப்பவர்கள் கவனித்திருப்பார்களோ என்று அவசரமாகக் கண்களை அலைபாயவிட்டவள் யாரும் கவனிக்கவில்லையென உறுதியானதும் பூபாலனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தாள்.
அவர்களிடையே நடந்த இந்தப் பார்வை பரிமாற்ற விளையாட்டை யாரும் கவனிக்கவில்லை, மகேந்திரன் உட்பட.
“நம்ம ஊருல இருக்குற போட்டோகிராபர் யாருக்கும் சரியா போட்டோ பிடிக்க வரலனு உன் தங்கச்சிதான் பாலு தம்பிய புக் பண்ணுனா வானுமா” என்றார் அவர். மாப்பிள்ளை என்று சொல்லி அவளிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் எண்ணமில்லை அவருக்கு.
வான்மதி மானசீகமாகப் பூமிகாவைக் கடிந்துகொண்டாள்.
‘பொன்விளையில் போட்டோகிராபர் சரியில்லை என்றால் திருநெல்வேலி அல்லது பாளையங்கோட்டையில் வேறு யாரையாவது புக் செய்திருக்கலாமே! தேடி தேடி இவனையேதான் புக் செய்ய வேண்டுமா? கஷ்டகாலமே!’
தலையிலடிக்காதக் குறையாக அவள் யோசிக்கையிலேயே “பூமி தயாராகிட்டாளானு பாத்துச் சொல்லுறிங்களா மாமா?” என்ற பூபாலனின் குரல் காதில் விழுந்து வான்மதியின் யோசனையைக் கலைத்தது.
உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. ‘எந்த உரிமையில் என் சித்தப்பாவை இவன் மாமா என அழைக்கிறான்?’
மனதுக்குள் அவனைக் கரித்துக்கொட்ட, மகேந்திரன் பூமிகாவை அழைக்கப் போய்விட்டார்.
புகைச்சலை அடக்கச் சிரமப்பட்டுக்கொண்டு நின்றவளை நெருங்கிய பூபாலனின் பார்வையில் அவளைச் சீண்டும் பாவனை உறைந்திருந்தது.

“கல்யாண மண்டபத்துல சென்ட்ரல் ஏ.சினு கேள்விப்பட்டேன். ஆனா இப்பிடி கொதிக்குதே”
கையைக் காற்றில் அலைந்தபடி அவன் சொல்லவும் சீற்றத்தோடு முறைத்தாள் வான்மதி.
சட்டென இதயம் வலிப்பது போன்ற பாவனையைக் கொடுத்தவன் “என்னோட நிலா இப்பிடி தணலா கொதிக்குறது இங்க வலிக்குது” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டவும்
“இந்த மாதிரி என் கிட்ட நக்கல் நையாண்டியா பேசுற வேலை வச்சுக்காதிங்க பாலா” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி எச்சரித்தாள் அவள்.
அவளது விரலைச் சட்டெனத் தட்டிவிட்டவன் “நான் என்ன பேசணும் எப்பிடி பேசணும்ங்கிறதை நீ எனக்குச் சொல்லித் தரவேண்டாம்” என்று சொல்ல
“எதுக்கு வந்திங்களோ அந்த வேலைய மட்டும் பாத்தா நல்லது. வாங்குற காசுக்கு உழைக்கணும்னு நினைங்க. பொண்ணுங்க கூட வெட்டிப்பேச்சு பேசுறதுக்கு உங்களை நாங்க புக் பண்ணல. வேலையில சுத்தம் இல்லனா பத்து பைசா கூட குடுக்கவிடமாட்டேன் நான்” என்று பதிலடி கொடுத்துவிட்டு அவனது பேச்சைச் செவிமடுக்க விரும்பாதவளாக அங்கிருந்து வெளியறியபோதே பூபாலன் தொட்ட ஆட்காட்டிவிரலை நீவிக்கொண்டாள் வான்மதி.
அவனுடைய விசமப்பார்வையும், குறும்பானப் பேச்சும், இதமான ஸ்பரிசமும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவளை விதிர்விதிக்க வைக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியபடி அவன் பார்வையிலிருந்து மறைந்தவளுக்குப் பூபாலனின் முகம் கறுத்து இறுகியதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
அவள் சென்றதும் தாடை இறுக நின்றவன் “இன்னும் பணத்திமிரு குறையல இவளுக்கு. கூடவே பிறந்த குணத்தை யாரால மாத்த முடியும்?” என்று எரிச்சலோடு முணுமுணுத்துக்கொண்டான்.
மகளுக்கும் பூபாலனுக்கும் நடந்து கொண்டிருந்த உரையாடல்களைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பகவதியின் மனம் கொதித்தது.
அது என்னவோ வான்மதி அவனைத் தனது காதலனாக அறிமுகம் செய்தபோதே அவருக்குப் பூபாலனைப் பிடிக்கவில்லை. தனது பிடித்தமின்மையைத் தூர ஒதுக்கிவிட்டுத்தான் திருமணத்துக்குச் சம்மதித்தார்.
மகளை அவன் சந்தோசமாக வைத்துக்கொண்ட காலத்திலேயே பெரிதாக அவன் மீது நல்லெண்ணம் இருந்ததில்லை.
“நானும் என் புருசனும் வானுமாக்கு எப்பிடியும் சொத்துல பங்கு குடுப்போம். அதுவரை இவன் அவளை நல்லா பாத்துப்பான். இவனை மாதிரி வசதியில்லாதக் குடும்பத்துப் பசங்களுக்கு வசதியான வீட்டுப்பொண்ணுங்க மேல காதல் வர்றதுக்குக் காரணம் பணம் மட்டும்தான்” என்று எண்ணிக்கொள்வார்.
அப்படிப்பட்டவர் பிரிந்த பிறகு அவனைப் பற்றி நல்லவிதமாகவா எண்ணுவார்?
“எல்லாம் இந்த மனுசனால. என் பொண்ணைப் படுகுழில இருந்து கஷ்டப்பட்டுக் காப்பாத்துனேன். மறுபடி அங்க தள்ளிவிடப் பாக்குறார். உலகத்துல எந்தப் பொண்ணுக்கும் இப்பிடி ஒரு தகப்பன் வாய்க்கக்கூடாது” என்று கணவரை மானசீகமாக மனதுக்குள் காய்ச்சி எடுத்தவருக்கு அடுத்தடுத்து உறவினர்கள் வந்துவிடவே பூபாலன் மறைந்து போனான் அவரது நினைவிலிருந்து.
பூமிகா வரவேற்பு மேடைக்கு வந்ததும் பூபாலன் அவளையும் வெங்கடேஷையும் புகைப்படம் எடுப்பதில் பிசியாகிப்போனான்.
உறவுக்காரர்கள் பரிசு கொடுக்க வந்து வரிசையாகப் புகைப்படம் எடுத்து முடித்ததும் வான்மதியும் அவளது தோழியும் தங்களது பரிசைக் கொடுத்தார்கள்.
“மதினி இங்க வாங்க”
சாத்விகாவை அழைத்தாள் பூமிகா.
“என்ன பூமி?”
“பாலா மாமாவ மேடைக்கு அழைச்சிட்டு வாங்க”
“அந்தத் தம்பி வருவாரா?” சந்தேகமாக வினவினாள் அவள்.
“நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க. கண்டிப்பா வருவார். இல்ல சமி குட்டிய வச்சு கூப்பிடுங்க. மறுக்கமாட்டார்”
பூமிகா சொன்ன யுக்தி வேலை செய்தது. சாத்விகா அழைத்தும் மேடை ஏறாதவன் “மாமா” என்று மழலையில் கொஞ்சி சமிக்ஷா மேடையைக் காட்டவும் உருகிப்போனான்.
“எதுக்கும் உங்க மாமியார் கிட்ட திட்டு வாங்க ரெடியா இருங்க அக்கா”
சாத்விகாவைக் கேலியாக எச்சரித்து அவளை எரிப்பது போல முறைத்துக்கொண்டிருந்த பகவதியைக் காட்டினான் பூபாலன்.
“அவங்களை எப்பிடி டீல் பண்ணனும்னு என் புருசனுக்குத் தெரியும் தம்பி. நீங்க மேடைக்கு வாங்க. இல்லனா பூமி வருத்தப்படுவா”
கையோடு அவனை மேடையில் கொண்டு போய் விட்டாள் சாத்விகா.
“வெங்கிக்கு உங்களை பெர்சனலா அறிமுகப்படுத்தலனு வருத்தம்” என்ற பூமிகா வெங்கடேஷிடம் “இவர்தான் எங்க பாலா மாமா. வானுக்காவோட ஹஸ்பெண்ட்” என்று உரிமையாக அறிமுகம் செய்து வைத்தாள்.
பூபாலனும் புன்னகையோடு வெங்கடேஷிடம் அறிமுகமானான்.
“அண்ணிய கூப்பிடு பூமி. போட்டோ எடுத்துக்கலாம்”
வெங்கடேஷின் கோரிக்கையை யாராலும் மறுக்க முடியுமா? வாதம் செய்யாமல் மேடைக்கு வந்தாள் வான்மதி.
பூமிகாவோடு அவள் நிற்க, அவளது வலது புறத்தில் பூபாலனை நிறுத்தி வைத்தாள் சாத்விகா.
“மதினி! சீரியஸ்லி?”
வான்மதி உருட்டி விழித்தது எல்லாம் வீணாயிற்று!
“உன் அம்மாவையே சமாளிக்கிறவ நானு. ஒழுங்கா ஃபோட்டோக்குப் போஸ் குடு” என்று அவளை மிரட்டிவிட்டு சமிக்ஷாவோடு கீழே இறங்கியவளை நேசமித்ரன் முறைத்தான்.
“ஏன் வேண்டாத வேலை பாக்குறடி?” என்று அவன் கடிய
“பொண்டாட்டி, பிள்ளைனு நீங்க மட்டும் குடும்பமா எல்லா இடத்துக்கும் போகணும். வரணும். உங்க தங்கச்சி மட்டும் தனியா நிக்கணுமா? உங்கம்மாவோட ஈகோ அவளை இந்த நிலமைக்கு ஆளாக்கிருக்கு. இதெல்லாம் ஒரு அண்ணனா நீங்க செஞ்சிருக்கணும். வீட்டு கடைக்குட்டிக்கும் அவளுக்குப் புருசனா வரப்போறவருக்கும் இருக்குற அக்கறை உங்களுக்கோ எனக்கோ இருந்திருந்தா இன்னைக்கு வானுமாவும் பாலா தம்பியும் புருசன் பொண்டாட்டியா ஒன்னா வாழ்ந்துட்டிருப்பாங்க. நம்மளால முடியாதைப் பூமி செஞ்சிருக்கா. அதை வேடிக்கை பாக்குறதோட நிறுத்திக்கோங்க. உங்க அம்மா பாசத்தைக் காட்டுறதுக்கான நேரம் இது இல்ல” என்று விளையாட்டாக மிரட்டுவது போல அவனுக்கு ஊசி ஏற்றினாள்.
நேசமித்ரன் அதோடு வாயை மூடிக்கொள்ள, பகவதியின் வயிற்றுக்குள் நெருப்பு எரிந்தது.
மகளும் மருமகனும் ஜோடியாக நிற்கும் காட்சியைப் பார்த்துக் கண் கலங்கி நின்ற நரேந்திரனுக்கு அவர்கள் வெகு விரைவில் முன்பு போல ஒன்றாக வாழ ஆரம்பிப்பார்கள் என்ற நம்பிக்கை வேர் பிடிக்க ஆரம்பித்தது மனதில்.