“வாழ்க்கையை நியாயங்களாலும் தர்க்கங்களாலும் மட்டுமே அளந்து பழகியவள் நான்; ஆனால், அவனது வசீகரப் புன்னகைக்கு முன் என் தர்க்கங்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன.”
-வெண்பா
ஹோட்டல் லீலா பேலஸின் முகூர்த்தக் கூடம் அதிகாலை முதலே மங்கள வாத்தியங்களின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. வேத மந்திரங்களும், கெட்டிமேளச் சத்தமும் முழங்க, ஜானவியின் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய அந்தப் புனிதமான தருணம் அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் அரங்கேறியது.
தனது பால்ய தோழியின் திருமணத்துக்காக வந்திருந்த வெண்பா, அவளது அன்னைக்கு உதவியாகக் காலையிலிருந்தே பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தாள். பட்டுப் புடவையும், மல்லிகைச் சரமுமாக அவள் மண்டபத்தில் வளைய வந்த விதம் அனைவரின் கண்களையும் கவர்ந்தது.
முகூர்த்தம் முடிந்து பந்திப் பரிமாறல்கள் தொடங்கிய வேளையில், ஜானவியின் தந்தை சின்னதுரை சற்றுத் தயக்கத்தோடு வெண்பாவை நெருங்கினார்.
“வெண்பாமா… கொஞ்சம் ஃப்ரீயா இருக்கியா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சொல்லுங்க அங்கிள்! என்ன வேணும்? கேட்டரிங் பீபிள் நம்ம கெஸ்ட் எல்லாரையும் சரியா கவனிக்குறாங்களானு பாத்துட்டேன். பெர்ஃபெக்டா பந்தி போகுது. வேற ஏதும் அரேஞ்ச் பண்ணணுமா?” என்று அக்கறையோடு கேட்டாள்.
“அதெல்லாம் எந்தக் குறையுமில்லாம நடக்கும்மா. சின்னதா ஒரு வேண்டுகோள். நம்ம மாப்பிள்ளை தம்பி நேத்ரன் இப்ப எம்.எல்.ஏ ஆகிட்டார். அவரோட ஷெட்யூல் பிஸியா இருக்கும்னு எனக்குப் புரியுது. ஆனா, ஈவினிங் நடக்கப்போற ரிசப்ஷனுக்கு அவர் வந்தா நல்லா இருக்கும்னு உன் ஆன்ட்டி சொன்னாடா. ஆனா பத்திரிகை வச்சு முறையா அவரை நான் கூப்பிடாம இதுக்கு மட்டும் அழைக்குறது நாகரிகமா இருக்குமானு மனசுக்குள்ள ஒரு உறுத்தல். நீ கொஞ்சம் அவருக்குக் கால் பண்ணிக் குடுக்குறியா? நான் பேசிக்கிறேன்,” என்றார்.
வெண்பாவின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது. மொபைலை எடுத்து நேத்ரனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். இரண்டு ரிங்குகளிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.
“சொல்லுங்க டீச்சரம்மா…” வழக்கமான சீண்டலோடு அவனது காந்தக் குரல் அவளது செவியை வருடியது.
“சின்னதுரை அங்கிள் உங்ககிட்ட பேசணுமாம், போனைக் குடுக்குறேன்” என்று கூறிவிட்டு மொபைலைச் சின்னதுரையிடம் நீட்டினாள் வெண்பா.
“ஹலோ! மாப்பிள்ளை தம்பி! நான் சின்னதுரை பேசுறேன்.”
“சொல்லுங்க அங்கிள். கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று இயல்பாக விசாரித்தான் நேத்ரன்.
“ரொம்பச் சிறப்பா முடிஞ்சுது தம்பி. ஈவினிங் ரிசப்ஷனுக்கு நீங்க கண்டிப்பா வரணும். ஒரு எம்.எல்.ஏவா இப்போ நீங்க பெரிய இடத்துல இருக்கீங்க. என் சினேகிதனோட வருங்கால மருமகன் வேற. நீங்க ரிசப்ஷனுக்கு வந்தா நல்லா இருக்கும்னு என் சம்சாரம் பிரியப்படுறா. உங்களுக்கு நேர்ல வந்து முறையா பத்திரிகை வச்சுக் கூப்பிடாம போன்ல சொல்லுறது எனக்கு உறுத்தலா இருந்துச்சு. முறையில்லாம கூப்பிடுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி…” என்று அவர் தயங்கித் தயங்கிச் சொல்ல, நேத்ரன் சத்தமாகச் சிரித்தான்.
“என்ன அங்கிள் நீங்க? நாமெல்லாம் நம்ம ஊர்க்காரங்க. நீங்க நம்ம பக்கத்து ஆளுங்க. இதுக்குப் போய் இவ்ளோ ஃபார்மாலிட்டியாப் பேசணுமா? ராமன் மாமாவுக்கு ரொம்ப நெருக்கமானவங்க நீங்க. எனக்கும் அப்படித்தான். நீங்க கூப்பிடாட்டியும் நானே உரிமையா வந்து நின்றிருப்பேன். ஈவினிங் கண்டிப்பா வந்துடுறேன், நீங்க எதையும் நினைச்சுக் குழப்பிக்காதீங்க,” என்று எதார்த்தமாக, எந்தவிதப் பந்தாவும் இன்றி அவன் பதிலளித்ததைக் கேட்டுச் சின்னதுரைக்கு நெகிழ்ந்துபோனது.
“ரொம்ப சந்தோஷம் தம்பி. கண்டிப்பா வந்துடுங்க,” என்று கூறிவிட்டு வெண்பாவிடம் மொபைலைக் கொடுத்தார்.
“கேட்டீங்களா அங்கிள்? வர்றேன்னு சொல்லிட்டாரா?”
“ஆமாடா! நம்ம புள்ளை அவர். உன் ஆன்ட்டிகிட்ட சொல்லிடுறேன்”
வெண்பாவிடம் மனநிறைவோடு தலையசைத்துவிட்டுச் சென்றார் சின்னதுரை.
மாலை நேரம். லீலா பேலஸின் பிரம்மாண்டமான பேங்க்வெட் ஹாலானது, வண்ண விளக்குகளாலும், ஆர்க்கிட் மலர்களாலும் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெண்பா தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தயாராகி வெளியே வந்தாள். அவள் அணிந்திருந்தது ஒரு அற்புதமான காஞ்சிபுரம் பட்டு லெஹங்கா. ஆலிவ் பச்சை வண்ணத்தில் பட்டு இழைகளோடிய பாவாடையும் அதே வண்ணத்தில் ஜரிகை பார்டர் கொண்ட ப்ளவுஸும் அதற்குப் பொருத்தமான டீப் பர்பிள் வண்ணப் பட்டுத் தாவணியுமாக விண்டேஜ் பாணியில் நவீனம் கலந்த உடை அது. கழுத்தை ஒட்டிய ஆன்டிக் சோக்கர், காதுகளில் அதே மாடல் கம்மல், அலையான நீண்ட கருங்கூந்தலில் மல்லிகைச் சரமென ராஜகுமாரி போல வளைய வந்தாள் அவள். சொல்லப்போனால் அந்த மொத்தக் கூட்டத்திலும் மல்லிகைச் சரம் சூடி நடமாடியவள் அவள் ஒருத்தி மட்டுமே!
மண்டபத்தின் நுழைவாயிலில் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டிருந்த வெண்பாவின் விழிகள், தன்னிச்சையாக வாசலையே தேடிக்கொண்டிருந்தன.
சின்னதுரையிடம் வருவதாக வாக்கு கொடுத்திருந்தானே! ஒருவேளை கடைசி நேரத்தில் அவனது அலுவலில் ஏதேனும் மாற்றம் வந்துவிட்டால்?
உடனே உச்சுக் கொட்டியது வெண்பாவின் மனம். நேத்ரன் வருவான் என்று தான் ஸ்ரதை எடுத்துத் தன்னை அலங்கரித்திருந்தாள் அவள். அவன் வரத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் சூரியவொளியின் வெம்மையால் நீர்ச்சத்தை இழக்கும் இளஞ்செடி போல முகமும் அகமும் ஒருசேர சோர்வுக்குள்ளானது அவளுக்கு.
தனது மனதின் ஆசைக்காக அவன் வந்து நின்றால் சந்தோசம்தான்! ஆனால் அவனுக்கு இருக்கும் பொறுப்பு அதீதமானதாயிற்றே! ஒரேயடியாகச் சுயநலமாக யோசிக்கவும் பிடிக்கவில்லை.
நேத்ரன் என்ற ஒருவனின் வருகைக்குக் காத்திருக்கும் சில மணி நேரங்களில் வெண்பாவின் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடி அவளையே குற்றம் சாட்டி முடித்தன. ஆச்சரியம்தான்! இவனுக்காக அவள் தன்னைத்தானே திட்டிக்கொள்வாள் என்று சில மாதங்களுக்கு முன்னர் யாரேனும் சொல்லியிருநதால் வெண்பா வயிறு வலிக்கச் சிரித்திருப்பாள்.
காலமும் காதலும் அவளை இழுத்து வந்து நேத்ரனுடன் முடிச்சு போட்டுவிட்டனவே!
அவளது எண்ணங்களின் வலிமையோ என்னவோ, மெரூன் வண்ண லினன் சட்டையும் கருப்பு வண்ண சினோஸும் அணிந்து பரிசோடு வந்து சேர்ந்தான் நேத்ரன். வாடப்போன மனம் துளிர் விட்ட இளங்குருத்தாய் புத்துணர்ச்சியாய் உணர்ந்தது. அவனது கச்சிதமான நேர்த்தியான தோற்றம் அங்கிருந்த இளம்பெண்களின் பார்வைகளைக் காந்தமென ஈர்த்தது.
ஆனால் நேத்ரனின் கண்களோ, அந்தப் பிரம்மாண்டமான கூட்டத்திலும் தன் தேவதையை மட்டுமே தேடிப் பிடித்தன. அவளைப் பார்த்த மறுகணமே அவனது முகத்தில் காதல் ததும்பும் புன்னகை. அவளருகே வந்தவன், பார்வையாலேயே அவளை உச்சி முதல் பாதம் வரை அணு அணுவாக ரசிக்கத் தவறவில்லை.
“டீச்சரம்மாக்கு எல்லா ட்ரெஸ்ஸும் அட்டகாசமா பொருந்துதே! இன்னைக்கு நான் அப்பார்ட்மெண்டுக்குத் திரும்பிப் போக முடியுமானு தெரியலையே! இப்பிடி அழகா வந்து என்னை மயக்கத்துலயே வச்சுக்குறது நியாயமா?” என்று கிசுகிசுத்தபடியே, சற்றும் தயக்கமின்றி அவளது இடையோடு தன் கையை வளைத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான் நேத்ரன்.

அவனது அந்தத் திடீர் அணைப்பில் லேசாகச் சிலிர்த்த வெண்பா, கூட்டத்தைப் பார்த்து ஒரு கணம் தயங்கினாலும், அடுத்த கணமே அவனது உரிமையான ஸ்பரிசத்தில் கரைந்து, தானும் தன் கையை அவனது இடுப்போடு வளைத்து அணைத்துக்கொண்டாள்.
இருவரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி, அந்தப் பிரம்மாண்டமான மண்டபத்தின் சிவப்புக் கம்பளத்தில் ஒன்றாக நடந்து வந்த காட்சி, பார்க்கிறவர்களின் கண்களுக்குக் கவிதையாகவே தெரிந்தது.
அந்த மண்டபத்தின் ஒரு புறத்தில் நன்கு அறிமுகமான திருநெல்வேலி சொந்தங்களும், நெருக்கமானவர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரின் பார்வையும் இப்போது இந்த ஜோடியின் மீதுதான் பதிந்திருந்தது.
“பார்த்தியா? நம்ம செண்பகராமன் பொண்ணு வெண்பாதானே அது? இந்தத் தம்பிகூடத்தானே கல்யாணம் பேசி முடிச்சாங்க? ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமா இருக்குதுல்ல!” என்று தங்களுக்குள் ஆச்சரியமாகவும், பெருமையாகவும் கிசுகிசுத்துக்கொண்டனர்.
நேத்ரனும் வெண்பாவும் மணமேடைக்குச் சென்று, தாங்கள் இணைந்து வாங்கி வந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான பரிசினை ஜானவிக்கும் அவளது கணவனுக்கும் ஒன்றாகக் கொடுத்தனர். ஜானவி கேலியாகக் கண்களைச் சிமிட்டி,
“என்ன வெண்பா… எம்.எல்.ஏ சார் வந்ததும் என்னைக் கழட்டிவிட்டுட்டியா?” என்று கிண்டல் செய்ய, வெண்பாவின் முகம் செம்பருத்தியாகச் சிவந்தது.
புகைப்படங்கள் எடுத்துவிட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கிய இருவரும் மண்டபத்தின் சற்றே ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தனியான இடத்திற்கு வந்தனர்.
“நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே டீச்சரம்மா?” என்றான் நேத்ரன் அவளைச் சீண்டும் தொனியில்.
“என்ன கேள்வி?”
“இந்த அளவுக்கு அழகா ரெடியாகி வந்து என்னை மயக்கத்துல வச்சுக்கிறது எந்த விதத்துல நியாயம்னு கேட்டேன். உன்னோட அழகு என் நிதானத்தைக் காத்துல பறக்கவிடுது. யூ லுக் பிரெத் டேக்கிங்லி பியூட்டிஃபுல் செல்லம்,” என்றான் காதலும் போதையும் கலந்த குரலில்.
அவனது அந்தச் சொற்களின் சூட்டில் தாள முடியாத வெட்கம் வெண்பாவை ஆட்கொள்ள, சட்டெனத் தன் ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டாள். அவளது விரல்களுக்கிடையே தெரிந்த அவளது சிவந்த கன்னங்களும், சிரிக்கும் கண்களும் நேத்ரனைப் பைத்தியமாக்கின.
“போதும் எம்.எல்.ஏ சார். ஓவரா ஐஸ் வைக்காதீங்க,” என்று சிரிப்பையும் வெட்கத்தையும் கட்டுப்படுத்த முயன்றவளாய் அவள் சொல்ல
“ஐஸா? சத்தியமா சொல்றேன், உன்னைப் பாத்ததும் எனக்குள்ள வந்த மயக்கம் இன்னும் போகல. பாரேன், என் கால்கூடத் தள்ளாடுது,” என்று அவன் விளையாட்டாய்ப் பதிலளிக்கவும் இருவரும் சிரித்தார்கள் மனம் நிறைந்தவர்களாய்!
ரிசப்ஷன் முடிந்து வி.ஐ.பி.களுக்கான தனியான டைனிங் பகுதியில் இருவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பல்வேறு வகையான உணவுகள் அடுக்கப்பட்டிருந்தாலும், இருவரின் கவனமும் உணவில் இல்லை. ஒருவரையொருவர் ரசிப்பதிலேயே அவர்களின் பசி தீர்ந்துபோனது போலிருந்தது.
வெண்பா தன் பிளேட்டிலிருந்த ஒரு இனிப்பை எடுத்து, நேத்ரனின் வாயருகே நீட்ட, அவன் அதைத் தன் இதழ்களால் மென்மையாகக் கவ்விக்கொண்டான். அவளது விரல்களைப் பார்த்துச் சிரித்தபடியே, அவனும் ஒரு ரோஸ்டட் முந்திரியை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான். கூட்டத்திற்கு நடுவே இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத காதல் உலகம் இயங்கிக்கொண்டிருந்தது.
கிளம்பும் முன்னர் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டுவிட்டு “போயிட்டு வர்றேன். ஆனா உன் கனவுல வருவேன். பை” என்று குறும்பாய் விடைபெற்றான் நேத்ரன். அந்த அழகிய இரவு, இனிமையாக, காதலோடு நகர்ந்துகொண்டிருந்தது.
திருமண வைபவங்கள் அனைத்தும் முடிந்து, நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் வெண்பா தன் அறைக்குத் திரும்பினாள். நேத்ரன் விடைபெற்றுச் செல்லும்போது அவளது நெற்றியில் பதித்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயாமல் இருப்பது போன்ற உணர்வோடு, அந்த நினைவுகளுடன் படுக்கையில் சாய்ந்தாள்.
மனம் முழுவதும் நேத்ரனின் நினைவுகளும், அவனது காதலும் நிறைந்திருக்க, ஓர் அழகான கனவுக்குள் நுழையக் கண்கள் செருகின.
சரியாக அந்த நேரத்தில் அவளது அலைபேசி அலறியது.
இந்த நள்ளிரவில் யார் அழைப்பது என்று கண்களைக் கசக்கியபடியே திரையைப் பார்த்தாள். பள்ளியில் அவளுடன் பணியாற்றும் ஆசிரியை அமுதா அழைத்துக்கொண்டிருந்தாள்.
சற்றுப் பதற்றத்துடன் அழைப்பை ஏற்றாள் வெண்பா.
“ஹலோ அமுதா! என்னாச்சு? இவ்வளவு லேட்டா கூப்பிடுறீங்க?”
மறுமுனையில் அமுதாவின் குரல் மிகவும் படபடப்பாகவும், கோபமாகவும் ஒலித்தது.
“வெண்பா, நீ ஊருக்கு வந்தாச்சா? நாளைக்குக் காலையில நீ கண்டிப்பா ஸ்கூலுக்கு வந்தாகணும்.”
“ஏன் அமுதா? ஸ்கூல் லீவுதானே. என்னாச்சு திடீர்னு?”
“லீவுதான். ஆனா நாளைக்கு நம்ம ஸ்கூல் ஸ்டாஃப் எல்லாரும் சேர்ந்து ஒரு பெரிய போராட்டம் நடத்தப்போறோம். சி.இ.ஓ ஆபீஸ் வரைக்கும் விஷயத்தைக் கொண்டு போகப்போறோம். நீயும் கண்டிப்பா இதுல கலந்துக்கணும் வெண்பா.”
போராட்டமா? வெண்பாவுக்குத் தூக்கம் முற்றிலுமாகத் தெளிந்தது. அவள் பணியாற்றும் பள்ளி நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது. அங்குப் போராட்டம் நடக்கும் அளவுக்கு என்ன பூகம்பம் வெடித்தது என்று அவளுக்குப் புரியவில்லை.
“போராட்டமா? அதுவும் நம்ம ஸ்கூல் ஸ்டாஃப்ஸ் பண்ணப்போறோமா? திடீர்னு என்ன பிரச்சனை நம்ம ஸ்கூல்ல?” என்று பதற்றமாகக் கேட்டாள்.
“நீ நியூஸ் பாக்கலையா? எல்லாம் நம்ம ஹேமாவால வந்த பிரச்சனைதான் வெண்பா. போராட்டத்துக்கான முழு காரணமும் ஹேமாதான். நீ காலையில சீக்கிரம் ஸ்கூலுக்கு வந்துடு, நான் எல்லாத்தையும் விளக்கமாச் சொல்றேன்,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அமுதா.
அலைபேசியைக் கையில் பிடித்தபடி திகைத்து அமர்ந்திருந்தாள் வெண்பா. ‘ஹேமாவா? ஹேமாவால் என்ன பிரச்சனை வந்திருக்க முடியும்? ஏன் ஒட்டுமொத்தப் பள்ளியும் அவளுக்காகப் போராட வேண்டும்?’
ஆயிரம் கேள்விகள் அவளது மூளைக்குள் குடைய, அதுவரை அவளுக்குள் வீசிக்கொண்டிருந்த காதலின் இதமான தென்றல் சட்டென மறைந்து, ஏதோ ஒரு பெரும் புயல் உருவாகப்போவதற்கான அறிகுறி!
உடனடியாக மொபைலில் யூடியூப் செயலியைத் திறந்தவள் இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட மாவட்டச் செய்திகளைப் பார்க்கத் தொடங்கினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


