கோபம் அறிவின் சத்துரு என்பார்கள். பல நேரங்களில் அது உறவுகளுக்கும் சத்துருவாகிவிடுகிறது. கோபத்திற்கான காரணம் வலுவாக இருந்தாலும் அது உருவாக்கும் காயத்தின் வலியோடு ஒப்பிடுகையில் அந்தக் காரணத்தைப் பெரிதாகக் கருதுவதில்லை மனிதர்கள். நியாயம் கூட கோபத்தோடு வெளிப்பட்டு எதிரிலிருப்பவரைக் காயப்படுத்துமாயின் அது அநியாயமாகிவிடுகிறது.
-பூபாலன்
“இதுக்குப் பேர் தோசையா? எவன் விக்கிச் செத்தா என்ன, என் வேலை சீக்கிரமா முடியணும்னு இப்பிடி தடிமனா சுட்டு வச்சிருக்கியா?” என்று சுள்ளென்று விழுந்தபடி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தார் குணசேகரன்.
அவருக்காகச் சமையலறை வெக்கையில் நின்று தோசை சுட்டுக்கொண்டிருந்த சங்கரிக்கு ஆயாசமாக இருந்தது. அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லியே இதோடு நான்காவது தோசை உள்ளே போகிறது. பாராட்ட வேண்டாம்! அவரைப் போலவே வைரல் காய்ச்சலில் விழுந்து உடல்நிலை தேறிய மனைவியின் சமையலைக் குறை சொல்லாமல் இருக்கலாமே!

வக்கணையாக ஐந்து தோசைகளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டவர் திண்ணையில் போய் அமர்ந்துகொள்ள தனக்கும் பூபாலனுக்கும் சுட ஆரம்பித்தார் சங்கரி.
கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியதிலிருந்து அவர் மனம் சங்கல்பம் போல ஒரே விசயத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.
‘மைந்தனை எப்படியாவது மனம் மாற்றி வான்மதியுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ வைத்துவிடவேண்டும்!’
அதீத யோசனையில் இரு முறை கையைச் சுட்டுக்கொண்டது கூட பெரிதாக வலியைக் கொடுக்கவில்லை அவருக்கு.
பைக் வரும் சத்தம் கேட்டபோது தோசைகள் ஹாட்பாக்சில் அமர்ந்திருந்தன. தோசை மாவு பாத்திரம், கரண்டியை அவர் கழுவும்போது பூபாலன் சமையலறைக்குள் வந்துவிட்டான்.
சற்று முன்னர்தான் அவனது எண்ணுக்கு அழைத்துக் காலையில் காபி போட பால் வாங்கி வரச் சொல்லியிருந்தார் சங்கரி.
பால் பாக்கெட்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டுத் திரும்பியவன் வழிந்த வியர்வையைப் புடவை முந்தானையால் துடைத்த அன்னையை ஆதுரமாகப் பார்த்தான்.
அவன் புகைப்படக்கலையைப் படித்தக் காலங்களில் அவனுக்குத் தோழி ஒருத்தி உண்டு. பெண்ணியம், புரட்சி என்று பேசினாலும் அவளோடு நல்ல நட்பை அவனால் பேண முடிந்தது. ஏனெனில் அவள் பேசும் பெண்ணியத்தில் சுயநலமோ, வெட்டி வீறாப்போ இருக்காது. அடிப்படை மனிதநேயம் அதில் தென்படும்.
பெண்களின் அடிப்படை தேவைகள் கூட எப்படி எல்லாம் வீண்செலவாகக் கருதப்படுகின்றன என்பதைப் பற்றி அடிக்கடி பூபாலனிடம் அவள் பகிர்வதுண்டு.
அதில் முக்கியமானது சமையலறை வெப்பத்தைத் தணிக்க போதுமானக் கருவிகள் இல்லாமை. இல்லத்தரசிகள் நாளில் முக்கால்வாசி பொழுது அங்கேயேதான் இருப்பார்கள்.
ஒரு சிம்னியோ, எக்சாஸ்ட் ஃபேனோ வாங்கி அங்கே மாட்டுவது குடும்பத்தலைவர்களாகிய ஆண்களுக்கு வீண்செலவாகத் தெரியும். ஆனால் வீட்டுக்கு வந்ததும் உடலைச் சாய்க்கச் செல்லும் படுக்கையறையில் ஏ.சி போடுவதற்கு செலவுக்கணக்கு பார்க்க மாட்டார்கள் என்பாள் அவள்.
அந்த ஏ.சியைப் பெண்களும்தானே அனுபவிக்கிறார்கள் என்று பூபாலன் வாதம் செய்வான்.
“நேத்து நீயும் நானும் ஒரு டிபன் செண்டர்ல பரோட்டா சாப்பிட்டோம். ஞாபகம் இருக்கா?”
“ஆமா! அதுக்கென்ன?”
“பரோட்டா, தோசை, சப்பாத்தி எல்லாம் போடுற அடுப்புக்கு மேல என்ன இருந்துச்சு?”
“எக்ஸாஸ்ட் ஃபேன்”
“அவ்ளோதான்! விசயம் முடிஞ்சுது”
முதலில் அவள் சொன்னது பூபாலனுக்குப் புரியவில்லை. பின்னர் நீண்டதொரு விளக்கம் கொடுத்தாள் அந்தத் தோழி.
“ஹோட்டல்ல வேலை பாக்குற மாஸ்டர் அளவுக்குச் சமைக்கலனாலும் வீட்டுல லேடீஸ் மூனு வேளைக்குச் சமைக்கணும். அவங்க சமைக்குறப்ப மட்டும் ஸ்னோ ஃபாலா வருது? அங்கயும் ஹீட்தானே? வேற வழியில்லாம சமைக்குற வேலை ஆம்பளைங்க தலையில விழுறப்ப சமையல்கட்டுல ஃபேனோ, சிம்னியோ மாட்டத் தயங்கமாட்டாங்கனு சொல்ல வர்றேன் பாலு. ஹியூமன் டு ஹியூமன் ஃபீலிங்ஸ் இதெல்லாம். நிறைய வீடுகள்ல கிச்சன்ல ஃபேன் இருந்தாலும் கேஸ் அதிகமா செலவாகிடும்னு சமைக்குறப்ப லேடீஸ் போடமாட்டாங்க. இதெல்லாம் நான் பேசுறப்ப உனக்கு வறட்டு வாதமா தோணலாம். ஆனா இதுல ஒழிஞ்சிருக்குற ஜெண்டர் பாலிடிக்ஸ் தெரியாது. காலங்காலமா லேடீசோட வசதிக்காக செய்யப்படுற ஒவ்வொரு வசதியையும் ஆம்பளைங்க சோம்பேறித்தனம், வீண்செலவுனுதான் முத்திரை குத்துறாங்க. இப்ப நிறைய வீடுகள்ல எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கு. ஆனா ஏ.சி ரிப்பேர் ஆனா வர்ற டென்சனும் எரிச்சலும் எக்ஸாஸ்ட் ஃபேன் ரிப்பேர் ஆனாலோ, சிம்னி சரியா வேலை செய்யலைனாலோ வராது. இப்ப புரியுதா?”
காய்ச்சல் கண்டு வதங்கிய உடலோடு வேர்க்க விறுவிறுக்க நின்ற அன்னையைப் பார்த்ததும் பூபாலனுக்கு அந்தத் தோழியோடு நிகழ்த்திய அந்த விவாதம் நினைவுக்கு வந்துவிட்டது.
சீக்கிரமாகச் சமையலறையில் எக்ஸாஸ்ட் மாட்டவேண்டும்! இல்லையென்றால் ஒரு மின்விசிறியாவது மாட்டிவிடவேண்டுமெனத் தீர்மானித்தவன் அன்னையின் முகத்தில் இருக்கும் இறுக்கத்தைக் கண்டறிய நேரம் பிடித்தது.
நான்கு பேர் அமரக்கூடிய டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது சங்கரியின் கவனம் சாப்பாட்டில் இல்லையெனக் கண்டுகொண்டவன் “என்ன யோசனைல இருக்கிங்கம்மா?” என வினவ
“அது… ஒன்னுமில்ல. நீ சாப்பிடு” என்றவர் சாப்பாட்டிற்கு பிறகு மகனைத் தன்னோடு வந்து அமருமாறு அழைத்தார்.
“என்னம்மா?”
முன்னெச்சரிக்கையுடன்தான் கேட்டான் பூபாலன். பேச்சு மட்டும் வான்மதியைப் பற்றி மாறுமாயின் எழுந்து போய்விடுவோம் என்று தீர்மானித்தப் பிறகே அன்னையின் பேச்சைச் செவிமடுக்கவே செய்தான்.
“என்ன முடிவு பண்ணிருக்க பாலு?”
“தூங்குங்கம்மா” என்று எழப்போனவனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிய சங்கரியின் விழிகளில் கோபத்தின் ஜ்வாலை.
“இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பாலு. நீயும் அவளும் ஆளுக்கொரு திக்குல நிக்கவா கல்யாணம் பண்ணி வச்சோம்? கொஞ்சம் இறங்கி வாய்யா”
பூபாலனின் தாடை கோபத்தில் இறுகியது.
“அதைப் பத்தி அவளுக்கே கவலையில்ல. நீங்க ஏன்மா தேவையில்லாம உடம்பைக் கெடுத்துக்குறிங்க?”
“அவளுக்குக் கவலை இல்லனா இந்நேரம் உன்னை விவாகரத்து பண்ணிட்டு அவ அந்தஸ்துக்குச் சமமான இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிருப்பா பாலு. வானுமா மனசுல நீயும், உன் மனசுல அவளும் இருக்குறப்ப முடிஞ்சு போனதைப் பேசி ஏன்யா வாழ்க்கையைக் கெடுத்துக்குற? நீ ஒரு வார்த்தை ‘நம்ம வீட்டுக்கு வா மதி’னு கூப்பிடு. அவ வந்துடுவாய்யா”
பூபாலனுக்கு அப்போதும் சிரிப்பு வந்தது. சற்று சத்தமாகவே சிரித்துவிட்டான். அவன் சிரித்த சத்தத்தில் திண்ணையில் அமர்ந்திருந்த குணசேகரன் எழுந்து நடுகூடத்துக்கு வந்துவிட்டார்.
தந்தையைப் பார்த்ததும் அன்னை கப்சிப்பாகிவிடுவார் என்ற அவனது கற்பனையைத் தவிடுபொடியாக்கினார் சங்கரி.
“அவ செஞ்சது தப்புனா நம்ம வீட்டுல அவளைப் புறக்கணிச்சது மட்டும் சரியா பாலு?”
சங்கரி யாரைப் பற்றி பேசுகிறார் என்று தெரிய குணசேகரன் வெற்றிலையில் கருப்பு மை தடவி பார்க்கவெல்லாம் அவசியமில்லையே!
சுருசுருவெனக் கோபம் ஏறியது அந்த மனிதருக்கு.
“வாயை மூடு சங்கரி. என்னை அசிங்கப்படுத்திட்டுப் போனவ இன்னொரு தடவை இந்த வீட்டுப்படிய மிதிச்சா நான் ஃபேனுல தூக்கு மாட்டித் தொங்கிடுவேன். நான் உயிரோட இருக்கணும்னா அவ இந்த வீட்டுக்கு வரக்கூடாது”
ஆவேசமாகக் கத்தினார் குணசேகரன். சங்கரிக்கு அந்நேரத்தில் எங்கிருந்து வெறி வந்ததெனத் தெரியவில்லை. கலைந்து கிடந்த கூந்தலைக் கொண்டையாக அள்ளி முடிந்தபடி எழுந்தவர்
“ரெண்டு பிள்ளைகளைப் பெத்து ரெண்டு பேரையும் நிம்மதியா வாழவிடாம செய்யுற நீங்க இருந்தா என்ன? போனா என்ன? அப்பிடி ஒரு முடிவு எடுத்திங்கனா சீக்கிரமா எடுங்க. எம்புள்ளைங்களாச்சும் குற்றவுணர்ச்சி இல்லாம அவங்கவங்க குடும்பத்தோட சந்தோசமா வாழுவாங்க” என்று அலற ஆண்கள் இருவருக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

இதுநாள் வரை தந்தை கிழித்தக் கோட்டைத் தாண்டாத அன்னையா அவரைச் சாகச் சொன்னது? அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
குணசேகரனுக்கோ வெறித்த விழி மூடவில்லை. இத்தனை நாட்கள் அதட்டியே பழக்கப்பட்டவர் அல்லவா! அவரது அதிர்ச்சி வடியட்டும் என்றெல்லாம் சங்கரி காத்திருக்கவில்லை.
“நீங்களும் நானும் சிரஞ்சீவி வரம் வாங்கிட்டுப் பிறக்கல. என்னைக்காவது ஒருநாள் போய்ச் சேரத்தான் போறோம். அப்ப என் பிள்ளை தனிமரமா நிப்பான். காய்ச்சல்ல கிடந்தப்ப நமக்குக் கஞ்சி வச்சுக் குடுக்க அவன் இருந்தான். அவனுக்கு ஒன்னு வந்தா யாரு இருக்கா? உங்க மனசுல என்ன கணக்கு ஓடுதுனு எனக்குத் தெரியும். அதுக்குப் பாலு என்னைக்குமே சம்மதிக்கமாட்டான். உங்களுக்காக மட்டும்தான் அவன் வானுமாவை இங்க கூப்பிட யோசிக்குறான். இன்னும் எத்தனை வருசத்துக்கு உங்க தாழ்வு மனப்பான்மையையும் ஈகோவையும் திருப்திப்படுத்த என் பிள்ளை தனிமரமா நிக்கணும்? நல்ல தகப்பனா இருந்தா மகன் குடும்பத்தோட வாழுறதைப் பாத்து சந்தோசப்படணும். அவன் விரும்பி கல்யாணம் பண்ணுன பொண்ணைப் பிரிஞ்சு நிக்குறப்ப ‘என் மகன் என்னோட கௌரவத்தைக் காப்பாத்திட்டான்னு’ கொக்கரிக்கக் கூடாது”
குணசேகரன் தடுமாற்றத்துடன் மகனை நோக்கினார். அவனது முகத்திலும் திகைப்பு மட்டுமே!
அவர் மனதில் இத்தனை நாட்கள் போட்டு வைத்தக் கணக்கோ வேறு! தடுமாறியபடியே “நீ அப்பா மேல மரியாதை வச்சிருக்கல்ல பாலு?” என்று கேட்டார்.
“ஆமாப்பா” எனத் தாமதிக்காமல் பதிலளித்தான் அவன்.
“அப்ப அந்தப் பொண்ணை விவாகரத்து பண்ணிடலாம்பா. ஏழைக்கேத்த எள்ளுருண்டைனு எழுதியே வச்சிருக்காங்க. நமக்கு ஏத்த மாதிரி நடுத்தரக்குடும்பத்துப் பொண்ணு ஒருத்திய நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்குறேன். நீ தனியா வாழ்ந்தது போதும் பாலு”
மகனிடம் சொல்லிவிட்டு மனைவியைக் கர்வத்தோடு நோக்கினார். அந்தப் பார்வையில் ‘என் மகனின் வாழ்க்கையை நான் சீரமைத்துவிடுவேன்’ என்ற கர்வம் தெரிந்தது.
அதை அடியோடு நொறுக்கும் விதமாக “அது மட்டும் வேண்டாம்பா. என்னால மதியோட இடத்துல வேற யாரையும் வச்சு பாக்க முடியாது. இந்த ஜென்மத்துல எனக்கு விதிச்சது இவ்ளோதான்” என்றான் பூபாலன்.
குணசேகரனின் கர்வம் அங்கே வீழ்ந்தது. பூபாலன் – வான்மதியின் கோபம் அவர்களைப் பிரிக்கத்தான் செய்திருக்கிறதே தவிர வெறுக்க வைத்துவிடவில்லை என்ற நிதர்சனத்தைக் காலதாமதமாகத் தெரிந்துகொண்டவரால் என்ன செய்ய முடியும்?
சினிமாவில் ஒரே காட்சியில் மனம் மாறுவது போல அவரால் மாற முடியவில்லை. அதற்கு பதிலாக மகனை வளர்ப்பதில் தவறிவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டார்.
“அவ போனா என்ன? நான் ஆம்பிள்ளை” என்று அவன் மார் தட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதே!
சங்கரி மகனைத் தீர்மானத்தோடு பார்த்தவர் “உன் அண்ணனை ப்ரீத்தி கூட்டிட்டுப் போனது அநியாயம்னு சொல்லுவியே! நீ உன் பொண்டாட்டிக்குப் பண்ணுனதும் அநியாயம்தானே? இந்த வீட்டுல சௌகரியமா வாழ முடியலனு ப்ரீத்தி அவங்கம்மா வீட்டோட போயிட்டா. அவ மேல எனக்கு வருத்தம் இல்ல. ஆனா வானுமா உனக்காக இந்த வீட்டுல அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்ந்தாளே! அதை நீ எவ்ளோ சீக்கிரம் மறந்துட்ட பாலு? ஒரு சின்ன தப்பு அவ பண்ணுன நிறைய நல்ல விசயத்தை மறக்கடிச்சிட்டுல்ல. குணத்துல என் ரெண்டு பிள்ளைங்களும் அவங்கப்பாவ மாதிரி இல்லனு சந்தோசப்பட்டேன். மணி நிச்சயமா உங்கப்பாவ மாதிரி இல்ல. ஆனா நீ இவரேதான் பாலு. பொண்டாட்டி மனசைப் புரிஞ்சிக்காம நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலுனு யோசிக்குற அதே இரக்கமில்லாதக் குணம் உனக்கும் வாய்ச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு அழுதபடியே போய்விட்டார்.
குணசேகரனுக்குச் சங்கரி தன்னை இழிவுபடுத்திய கோபம் உச்சந்தலையில் சுர்ரென ஏறியிருந்தது. தனக்குப் பிடிக்காதவளை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்வது வேறு எரிச்சல்.
மகனோ மடச்சாம்பிராணியாக விவாகரத்து, மறுமணப்பேச்சைத் தவிர்க்கிறான். எரிச்சலோடு மீண்டும் திண்ணைக்குப் போய்விட்டார் மனிதர்.
தனித்துவிடப்பட்ட பூபாலனை அவனது அன்னையின் பேச்சு பூகம்பம் வந்த நிலம் போல உலுக்கியிருந்தது.
‘ஒரு சிறிய தவறுக்காக அவள் செய்த அனைத்து நல்ல விசயங்களையும் மறந்துவிட்டாயே’ என்றல்லவா கூறிவிட்டார்.
‘நான் எப்படி மறக்க முடியும்? அவள் செய்த நல்லதை நினைக்குமாறு சொன்ன என் அன்னையையே அன்றொரு நாள் அவள் வார்த்தையால் வதைத்தாளே! என் தந்தையை மதிப்புக்குறைவாக அவளது அன்னை பேசுகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாளே! அதெல்லாம் மறக்ககூடியதா?’
சோர்வோடு போய் அவனது அறைக்குப் போய் படுக்கையில் விழுந்தான்.
தனது செயலால் தந்தையின் காயப்பட்ட ஈகோ திருப்தியானதைக் கண்டுகொண்டவனுக்கு, அன்னையின் மனம் தனது தனிமையை எண்ணித் தவிப்பதை ஏன் கண்டுகொள்ள முடியாமல் போனது?
இதுவரை சங்கரி அவனால் கண்ணீர் வடித்ததில்லை. இவ்வளவு ஏன், அவர் அன்பாக நடத்திய இளைய மருமகள் அவரைக் காயப்படுத்தியபோது கூட சங்கரியின் கண்கள் கலங்கவில்லை. ஆனால் இன்று அவனால் இரண்டு முறை கண்ணீர் வடித்துவிட்டார்.
சொல்லப்போனால் அவனால் சங்கரி ஏமாற்றமடைந்து இருக்கிறார். ஏனோ இதை இலகுவாகக் கடக்க முடியுமெனத் தோன்றவில்லை பூபாலனுக்கு.
அவன் என்ன செய்தாலும் வான்மதி திரும்பி வரப்போவதில்ல எனப் பாவம், அவளது சிறிய தந்தைக்கும் தனது அன்னைக்கும் தெரியவில்லை. அவள்மீது அவனுக்கு வராத நம்பிக்கை அவர்களுக்கு எப்படி வந்ததோ?
நான்கு வருடங்கள் சின்ன சின்ன சலசலப்புகளுடன் பயணித்தது போல இனிவரும் நாட்கள் பயணிக்கப்போவதில்லை என்பதைச் சங்கரியின் கோபம் அவனுக்குப் புரியவைத்துவிட்டது.
மறுநாள் காலையில் கண் விழித்ததும் எதையோ தீர்மானித்தவன் வேகமாகக் கிளம்பினான். சங்கரி அவனிடம் பேசாமல் காபி கொடுப்பது, காலையுணவைப் பரிமாறுவது என அனைத்தையும் முடித்தார்.
அதுவே பூபாலனுக்குத் தாங்கவில்லை.
பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியேறியபோது எதிர்பார்ப்புடன் அவருடைய முகம் தென்படவும் பெருமூச்சுவிட்டவன்
“நான் அநியாயம் பண்ணி உங்களுக்கு ஏமாற்றத்தைக் குடுத்துட்டேன்னு நீங்க வருத்தப்படுறிங்க. அதுக்காக, அந்த ஒரு காரணத்துக்காக இன்னைக்குச் சின்னமாமாவ பாக்கப்போறேன். உங்க மகன் அநியாயமா யோசிக்கிறவன் இல்லம்மா. இனிமே என்னால நீங்க கண்ணீர் வடிக்கக்கூடாது” என்றான் நிதானமாக.
சங்கரியின் முகமெல்லாம் பூரித்துப்போனது. தன் மகன் இறங்கி வந்தாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும் என்று எண்ணியவராகப் பூஜையறைக்குள் சென்றவர் திரும்பி வருகையில் திருநீறு நிரம்பிய மரவையுடன் வந்தார்.
“எந்தப் பிரச்சனையும் இல்லாம என் மகனும் மருமகளும் ஒன்னு சேர்ந்தா போதும் முருகா”
வேண்டிக்கொண்டே அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்.
“நான் போயிட்டு வர்றேன்மா”
மகன் செல்வதைச் சங்கரி திருப்தியோடு பார்த்த அதே நேரத்தில் குணசேகரன் ஏமாற்றத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
இனி அவர் செய்வதற்கு எதுவுமில்லை என்ற இயலாமை உண்டாக்கிய கடுப்பைக் கொட்டியே தீரவேண்டும். அதற்கு மனைவி என்ற ஒருத்தி இருக்கிறாளே!
“அதான் உன் மகன் போறான்ல! இன்னும் என்ன வாசல்ல நின்னு வேடிக்கை பாக்குற? எனக்குத் தலை வலிக்குற மாதிரி இருக்கு. காபி போடு. அதைக் குடிச்சிட்டு மாத்திரை போடணும்” எனச் சிடுசிடுத்தார்.
சங்கரிக்கு நேற்றிரவு இருந்த தைரியம் எல்லாம் காற்றோடு போய்விட்டது.
“இதோ போறேன்ங்க” என்று உள்ளே ஓடினார்.
அதே நேரத்தில் முத்தரசி இல்லத்தின் முன்னே ஸ்ப்ளெண்டரை நிறுத்தினான் பூபாலன்.
முதலில் அவன் வந்ததைக் கவனித்தவர் மகேந்திரன். ஓடோடிப்போய் “வாங்க மாப்பிள்ளை!” என்று வரவேற்றவர் வீட்டுக்குள் அழைத்துப் போனார்.
நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த நரேந்திரன் பூபாலனின் இந்தத் திடீர் வருகையை எதிர்பார்க்கவில்லை. மகேந்திரன் முந்தைய தினம் கோவிலில் நடந்ததைச் சொன்னதும் இனி அவன் இறங்கி வருவான் என்ற நம்பிக்கையே சுத்தமாகப் போயிருந்த நிலையில் அவனைக் கண்டதும் தடுமாறினார்.
நடுக்கூடத்தில் இருந்த உறவுக்காரக்கூட்டம் அவர்களுக்குள் பேசிக்கொண்டதை எல்லாம் மூவரும் கவனிக்கவில்லை.
“மாப்பிள்ளை…” கண் கலங்க தடுமாறியவரின் நிலை பூபாலனுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது.
“உள்ள போய் பேசலாமா மாமா?”
உறவினர்களைக் கண்ணால் காட்டிவிட்டுக் கேட்டான் அவன்.
“வாங்க! மகேந்திரா நீயும் வாடா”
நரேந்திரனின் உடல் அதீதச் சந்தோசத்தால் அதிர்ச்சியில் இருந்தது. கீழ்த்தளத்தில் இருக்கும் தனது அறைக்குள் மருமகனை அழைத்து வந்தவருக்கு நல்லவேளையாக வான்மதி இல்லை என்ற திருப்தி ஒரு புறம். குட்டையைக் குழப்பக்கூடியவளான மனைவி வந்துவிடக்கூடாதென்ற பதற்றம் ஒரு புறம்.
“உக்காருங்க மாப்பிள்ளை” நாற்காலியைத் தூக்கப் போனவரின் கையைப் பற்றினான் பூபாலன்.

அவர் திகைக்க “நானே எடுத்துக்குறேன் மாமா” என்று அமைதியாகச் சொன்னவன் இரு சகோதரர்கள் அமர இருக்கையை எடுத்துப் போட்டுவிட்டுத் தானும் அமர்ந்தான்.
அந்தச் செய்கையே அவன் இன்னும் பழைய பூபாலன்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது நரேந்திரனுக்கு.
சில நிமிடங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பின்னர் மகேந்திரனை அவனிடம் பேச வைத்தது தானே என்று ஆரம்பித்தார் நரேந்திரன்.
“என் மக அவங்கம்மாவ கண்மூடித்தனமா நம்புறா மாப்பிள்ளை. தப்பு எல்லாம் உங்க மேலனு நினைக்குறா. என்னைக் கேட்டா ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. சின்னவங்க மேல மட்டுமில்ல, பெரியவங்க மேலயும்”
பூபாலன் எந்த உணர்வையும் முகத்தில் காட்டவில்லை. இனியொரு முறை வான்மதியுடன் வாழமுடியுமென்ற எண்ணத்தோடு அவன் வரவில்லை. அன்னைக்குத் தன்மீது வந்த வருத்தத்தைப் போக்கவே வந்திருக்கிறான்.
‘பாருங்கள்! என்னால் இயன்றதைச் செய்துவிட்டேன்! அவள்தான் பிடிவாதக்காரி’ எனச் சொல்லி ஒதுங்கிவிடலாம் என்ற நோக்கமே அவனுள் நிறைந்திருந்தது.
அதனால் அவர்கள் என்ன சொன்னாலும் சரிசரியெனத் தலையாட்டிவிட்டால் போதும் எனத் தீர்மானித்தவனுக்கு நரேந்திரனின் உணர்ச்சிவசப்பட்டக் குரலின் வீரியத்தால் மனம் இளகத் துவங்கியது.
ஒரேயடியாக அவன் இளகும் முன்னர் “இவர் ஏன் இங்க வந்திருக்குறார்?” என வெறுப்பாக ஒலித்தது பகவதியின் குரல்.
நரேந்திரன் வந்த கோபத்தை அடக்கியவராக “அவளை இங்க இருந்து போகச் சொல்லு மகேந்திரா. வெண்ணை திரண்டு வர்றப்ப தாழி உடைஞ்ச கதையா என் பொண்ணு வாழ்க்கை மாறிடக்கூடாது” என்றார்.
ஆனால் பகவதி அதைக் கேட்கவேண்டுமே!
“நான் ஏன் போகனும்? ஒன்னுமில்லாதக் குடும்பத்துக்கு ஒரு தடவை என் மகளை அனுப்பி அவ கஷ்டப்பட்டது போதும். இன்னொரு தடவை அப்பிடி எதுவும் நடக்க நான் விடமாட்டேன். நான் டைவர்ஸ் விசயமா லாயர் கிட்ட பேசிட்டேன். வெங்கடேஷுக்கு ஒன்னுவிட்ட அண்ணா யூ.எஸ்ல இருக்கானாம். அவனுக்கும் வானும்மாக்கும் கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு இருக்குறேன். அந்தப் பையனுக்கும் நம்ம வானுமாவ பிடிச்சிடுச்சு. இந்நேரத்துல இவரை வரவச்சு காரியத்தைக் கெடுக்கப் பாக்குறிங்களா?” என்று படபடவென அவர் பேச பேச நரேந்திரனுக்குக் கோபம் தலைக்கேறியதோ இல்லையோ பூபாலனுக்கு ஏறியது.
‘விவாகரத்தா? இன்னொரு திருமணமா? அதுவும் நான் உயிருடன் நடமாடுகையில்?’
அவனால் வான்மதியைப் பிரிந்து வாழ்ந்துவிட முடியும். ஆனால் அவனுடைய கண் முன்னே இன்னொருவனுக்கு அவள் சொந்தமாவதைப் பார்க்க முடியாது. இவ்வளவு ஏன்? விவாகரத்து என்ற எண்ணமே அவன் மனதில் இல்லை.
பகவதியின் திட்டத்தை அவர் வாய்வழியாகக் கேட்டதும் இவ்வளவு நேரம் அன்னையிடம் தன்னை நிரூபித்தால் போதுமென எண்ணியவனின் மனம் மெதுவாக மாறத் தொடங்கியது.
நரேந்திரன் – பகவதியின் வாக்குவாதம் தீவிரமாக தீவிரமாக, பகவதியின் திட்டத்தை நொறுக்கித் தள்ளும் எண்ணமும் அவனுக்குள் தீவிரமானது.
சட்டென நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான் பூபாலன்.
நாற்காலி பின்னே இருந்த சுவரில் மோதி உண்டாக்கிய சத்தத்தால் அவனுடைய மாமனாரும் மாமியாரும் திடுக்கிட்டுச் சிலையாயினர்.
இருவரையும் கூர்ந்து நோக்கியபடியே “மதியும் நானும் பிரிஞ்சிருக்குறோம். ஆனா இன்னும் அவ எனக்குப் பொண்டாட்டிதான். டிவோர்ஸ் நாங்க ரெண்டு பேரும் மட்டும் சம்பந்தப்பட்ட விசயம். அதுக்கான அவசியம் இருக்கா இல்லையானு நாங்க பேசிக்குறோம். அதுக்கு முன்னாடி அவளுக்கு இன்னொரு கல்யாணம்ங்கிற பேச்சுக்கே இடமில்ல” என அவன் சொல்ல பகவதி அதிர்ச்சியில் உறைந்தார்.
நரேந்திரனும் மகேந்திரனும் ஒருவரையொருவர் திருப்தியோடு பார்த்துக்கொண்டார்கள், இனி வான்மதியின் வாழ்க்கை சீராகிவிடுமென்ற நம்பிக்கையோடு.