எங்கிருந்து வந்தது அந்நேரத்துக் கோபம்? இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்காத நாளே இல்லை. நேசிப்பவர்களின் கோபமும் உதாசீனமும் தற்காலிகமானது என்ற பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத காலம் அது. கூடவே என்னை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிறாரோ என்ற கோபமும் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று ஆட்டிவைத்துக்கொண்டிருந்த நேரம் அது. என்னை ஒருவர் வேண்டாமெனச் சொல்லும் முன்னர் நான் அந்த வார்த்தையைச் சொல்லிவிடவேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்த சமயம் அது. இப்போதும் நான் செய்த செயல்கள் தவறென எண்ணி வருந்தவில்லை. அந்த நேரத்தில் அதீதமான எனது கோபத்தை மட்டுமே தவறாகக் கருதுகிறேன்.
-வான்மதி
“கடவுள் கிட்ட என்ன பெட்டிசன் போடணுமோ அதைச் சீக்கிரமா போடும்மா. நான் இன்னைக்குச் சீக்கிரமா ஸ்டூடியோக்குப் போகணும்”
அன்னையை அவசரப்படுத்தியபடியே கைகூப்பி நின்ற பூபாலனின் நெற்றியில் விபூதியைப் பட்டையாகப் பூசிவிட்டார் பூசாரி.
அவன் திடுக்கிட்டு விழிக்கையில் “திருவரங்கச்செல்வியோட அருளால எல்லா பிரச்சனையும் நல்லபடியா முடிவுக்கு வந்துடும்” என்று சங்கரியிடம் சொன்னவர் அவர் கையிலும் விபூதியைக் கொடுத்தார்.
அவர் சென்றதும் “கிளம்பலாமா? என்றவனிடம்
“கொஞ்சநேரம் பிரகாரத்துல உக்காந்துட்டு அப்புறமா போகலாம் பாலு” என்ற சங்கரி அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்று அமர வைத்தார்.
கால்களை மடித்து அமரச் சிரமப்பட்டவன் அன்னையை முறைக்க அவரோ பட்டையாய்ப் போடப்பட்ட திருநீறைக் கீற்றாகத் துடைத்து கொஞ்சம் போல குங்குமத்தை வைத்துவிட்டார்.
அவரது பார்வை கோவில் வாசம் பக்கம் அடிக்கடி போகவும் “யாரைத் தேடுறிங்க?” என்று ஆராய்ச்சிப்பார்வையோடு கேட்டான்.
“முக்கியமான ஒருத்தர்”
சுருக்கமானப் பதில் வந்ததும் அவனுமே ஆள் வரட்டுமெனக் காத்திருக்க ஆரம்பித்தான். ஆனால் அந்நபர் வந்ததும் அவனது முகம் போன போக்கே சொன்னது, அவரிடம் அவன் பேச விரும்பவில்லை என்பதை.
“வணக்கம்மா! வணக்கம் மாப்பிள்ளை!”
கரம் கூப்பியபடி நின்றவர் மகேந்திரன்.
“நாலு வருசம் கழிச்சு மாப்பிள்ளை ஞாபகம் வந்திருக்கு போலயே, இப்பிடிப்பட்ட மாமனார் யாருக்கு வாய்ப்பாங்க?”
கிண்டலாய்ச் சொன்னவன் எழுந்திருக்கப் போக, அவனது கையைப் பற்றிக்கொண்டு தானும் எழுந்தார் சங்கரி.
“என் மேல சத்தியம், நீ ஒரு அடி கூட நகரக்கூடாது பாலு”
இதற்கு மேல் அவனால் எப்படி எட்டு எடுத்துவைக்க முடியும்? மனதுக்குள் பொங்கிய சீற்றத்தை மறைத்துக்கொண்டு அங்கேயே நின்றான்.
“மாப்பிள்ளையோட கோவம் நியாயமானது. நீங்க எப்பிடி இருக்குறிங்க? சம்பந்தி எப்பிடி இருக்குறார்?”
“அவருக்கென்னண்ணா? உடம்பு சரியாகிடுச்சு” என்றவர் “ரொம்ப நேரத்தை வீணாக்க வேண்டாம் பாலு. அவருக்குப் பொண்ணு கல்யாணத்துக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கும். பேசி முடிச்சிட்டுப் போய்டுவோம்” என்றார்.
“பேசுறதுக்குத்தானே அவரோட வீட்டுக்குப் போனேன். அங்க யாரும் இல்ல. நான் திரும்ப திரும்ப போனா காசுக்காக வர்றதா சொல்லி பகவதியம்மா அசிங்கப்படுத்துவாங்கனு போகல”
வெட்டினாற்போல அவன் பேசவும் சங்கரியின் பார்வையில் கண்டிப்பு குடியேறியது.
“விடுங்க சம்பந்தியம்மா! அவர் சொல்லுறதுதானே நிதர்சனம்? இங்க பாருங்க மாப்பிள்ளை…”
“மாப்பிள்ளை மாப்பிள்ளைனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுறதுக்கு முன்னாடி உங்க மக கிட்ட இப்பிடி என்னைக் கூப்பிடலாமானு கேட்டுக்கோங்க. இல்லனா அவங்க அம்மாக்கு மேல அவ பேசுவா”
“பாலு…”
அன்னையின் குரல் உயர்ந்ததும் பூபாலனின் குரல் அடங்கியது.
மகேந்திரன் கசப்பாகப் புன்னகைத்தவர் “அவ எதுக்காக அப்பிடி சொன்னானு மறந்துட்டிங்களே மாப்பிள்ளை” என்று சொன்னதும் அவனது விழிகளிலும் வேதனை வந்து போனது.

கண்களைத் தாழ்த்திக்கொண்டு சிகையைக் கோதினான். தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான்.
“என்ன பேசணுமோ அதைப் பேசுங்க. உங்களுக்கும் வேலை இருக்கு. எனக்கும் வேலை இருக்கு”
விட்டேற்றியாகப் பேசியவனை வேதனையானப் புன்னகையோடு ஏறிட்டார் மகேந்திரன்.
“நாலு வருசமா உங்க மனசுல சின்ன மாற்றம் கூட வரலையா மாப்பிள்ளை?”
“இதை நீங்க உங்க அண்ணன் மக கிட்ட கேக்கணும் மா…”
‘மாமா’ என்று சொல்ல வந்து சொல்லாமல் தவிர்த்தான் பூபாலன்.
“அவ உங்க வாழ்க்கையை விட்டு வெளிய போகல மாப்பிள்ளை. நீங்கதான் அந்த முடிவை எடுத்திங்க. அவ உங்க மேல உயிரா இருந்தா”
“அந்த முடிவை எடுக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்குத் தெரியுமா? நாம் மதிய காதலிச்சுக் கல்யாணம் பண்ணுனவன். அவளை விலக்கி வைக்குற முடிவை எடுக்குறதுக்கானச் சூழ்நிலைய யாரு உருவாக்குனாங்க? நான் ரொம்ப பொறுமையா இருந்தேன்னு பெரிய மாமாக்குத் தெரியும். அதனாலதான் அவர் மகளுக்குக்காக இப்ப வரைக்கும் என் கிட்ட பேச வரல. அவர் பெரிய மனுசன்”
“பாலு”
இம்முறை சங்கரியின் குரலில் கோபத்தோடு அதிர்ச்சியும் கலந்திருந்தது. பெரியவர்களை இவ்வாறு எடுத்தெறிந்து பேசுபவன் இல்லை அவன். எத்துணை கசப்பு அவனுக்குள் இருந்தால் இப்படி இயல்பை மீறி பேசுவான் என்ற அதிர்ச்சி அவருக்கு.
“சாரி” என்று தலை குனிந்தவன் பின்னர் நிமிர்ந்து மகேந்திரனை வேதனை படர்ந்த விழிகளால் ஏறிட்டான்.
“நீங்க பூமியையும் மதியையும் பிரிச்சுப் பாத்ததில்லனு எனக்கு நல்லா தெரியும். எங்க ரிலேசன்ஷிப்பைக் காப்பாத்த நான் ரொம்ப முயற்சி பண்ணுனேன். மதியோட அலட்சியத்தால உடைஞ்சு போன உறவை நான் எப்பிடி ஒன்னா சேர்க்க முடியும்? அவளோட அலட்சியம் இந்த நாலு வருசத்துல இன்னும் அதிகமா ஆகிருக்குனுதான் சொல்லுவேன். ப்ச்! நீங்க பூமியோட கல்யாணத்தைக் கவனிங்க சின்ன மாமா. எங்களோட விவகாரம் முடிஞ்சு போன ஒன்னு”
அந்த வார்த்தை மகேந்திரனைக் காயப்படுத்தியதோ இல்லையோ சங்கரியை விம்மி அழ வைத்துவிட்டது.
அவர் கண்ணீர் சிந்தவும் மகேந்திரனுக்குச் சங்கடமாகிப் போனது.
“அழாதிங்க சம்பந்திம்மா. மதிய விட மாப்பிள்ளை பொறுப்பானவர்னு எனக்குத் தெரியும். அவரோட கோவம் நியாயமானது. ஆனா மதியை விலக்கி வச்சதை நான் நியாயம்னு சொல்லமாட்டேன். எதுக்காக உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிட்டு இப்பிடி பிரிஞ்சிருக்கணும்? கொஞ்சம் இறங்கி வாங்க மாப்பிள்ளை. உங்களுக்குப் பிடிக்காதவங்களை மறந்துட்டு மதியை மட்டும் மனசுல வச்சு யோசிங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்லணும்னு தெரியல. மருமகன் கொடுமைக்காரனா இருந்தா எங்க வீட்டுப்பொண்ணுக்கு முறைப்படி விவாகரத்து வாங்கி குடுத்து இன்னொரு வாழ்க்கைய அமைச்சுக் குடுத்திருப்போம். ஆனா எங்க மருமகன் தங்கமாச்சே! எப்பிடி நாங்க அதை யோசிக்க முடியும்?”
“மதி அதுக்குச் சம்மதிக்கமாட்டா”
உறுதியாய், கர்வமாய்க் கூறினான் பூபாலன். இந்த நம்பிக்கையில் எல்லாம் குறைச்சல் இல்லை.
“ஆனா அதுக்கான முயற்சியும் நடந்திருக்கும்ங்கிறது என்னோட ஊகம்”
மகேந்திரன் திகைக்க, சத்தமாக நகைத்தான் பூபாலன்.
“மதியோட சம்மதம் கிடைச்சிருக்காது” இம்முறையும் அத்துணை கர்வம் அவனது குரலில்.
இதெல்லாம் பெரியவர்கள் கண்களுக்குத் தப்பவில்லை. சங்கரியின் கண்ணீர் நின்றுவிட அவர் எதையோ தீர்மானித்தவராக மகேந்திரனைப் பார்த்தார்.
“நீங்க போயிட்டு வாங்கண்ணா. என்னை நம்புங்க”
அவர் கரம் கூப்பினார்.
“எடுத்துச் சொல்லிப் புரியவைங்க. நானும் அண்ணனும் மதி கிட்ட பேசி அவ மனசை மாத்துவோம். நான் வர்றேன் சம்பந்திம்மா”
“அவ மனசு மாறுனா உலகம் அழிஞ்சிடாது?”
கிண்டலாய் வாய்க்குள் முணுமுணுத்த பூபாலன் அன்னையோடு வீட்டுக்குக் கிளம்பினான்.
அவரை வீட்டில் விட்டுவிட்டு ஸ்டூடியோ கிளம்பத் தயாரானவனிடம் சங்கரி பேசவேண்டுமெனச் சொல்லவும்
“மதி பத்தி பேசுறதா இருந்தா வேண்டாம்” என்று ஒரேயடியாக வெட்டிவிட்டு வண்டியைக் கிளப்பிப் போய்விட்டான் அவன்.
என்ன நடந்தாலும் இம்முறை அவனை இப்படியே விடக்கூடாதெனத் தீர்மானித்தவராக வீட்டுக்குள் போய்விட்டார் சங்கரி.
அதே நேரம் முத்தரசி இல்லத்தில் பின்வாயில் வராண்டாவில் அமர்ந்து மகளிடம் பேசிக்கொண்டிருந்தார் நரேந்திரன்.
“மாப்பிள்ளை வந்தப்ப உன் அம்மா எதுவும் முறை தவறி பேசுனாளா வானுமா?”

வான்மதி தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தாள். கடந்த நான்காண்டுகளாக அன்னைக்கும் தந்தைக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லை என்ற மனவுளைச்சல் அவளுக்கு உண்டு. இதில் தந்தை அன்னையை நம்பாமல் தன்னிடம் இவ்வாறு கேட்டதில் அவர்களின் உறவு இந்தளவுக்கு மோசமான நிலையைச் சந்தித்துவிட்டதா என்ற ஆச்சரியத்தில் மூளையே மரத்துப்போனது.
“அப்பிடியெல்லாம் இல்லப்பா. நீங்க ஏன் இங்க வந்திங்கனு மட்டும்தான் கேட்டாங்க” சுதாரித்துக்கொண்டு அன்னைக்காகப் பேசினாள் வான்மதி. அதுதானே உண்மையும்.
“அவர் இங்க வர்றதுக்கு எல்லா உரிமையும் உள்ளவர். அந்தக் கேள்வியே தப்பு வானுமா”
“ப்ச்! என்னாச்சுப்பா உங்களுக்கு? பாலாக்கு என்ன உரிமை இருக்குனு நினைக்குறிங்க? எல்லாம் முடிஞ்சுதுனு சொன்னவர் அவர்”
“அவரைச் சொல்ல வச்சது நீயும் உன் அம்மாவும். அதை மறந்துடாத”
“ப்பா! நீங்க பாலா செஞ்ச தப்பை மறந்துட்டிங்களா? அவர் நம்ம குடும்பத்தை அலட்சியப்படுத்துனதை என்னால மறக்கமுடியாதுப்பா. என்னமோ அவங்க குடும்பத்துக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்குற மாதிரியும், நம்ம எல்லாம் மரியாதை கெட்டுத் திரியுற மாதிரியும்… ப்ச்! அவர் என்னைக்காச்சும் நல்ல மருமகனா இருந்திருக்காரா? எப்பிடி உங்களால இப்பவும் அவரை மாப்பிள்ளைனு கூப்பிட முடியுதுனு தெரியல”
“நம்மளை விட அவங்க வசதில குறைஞ்சவங்கனு குத்திக் காட்டி அவரை அப்பிடி செய்யத் தூண்டுனது யாரு வானுமா? கொஞ்சம் யோசி. நியாயமா யோசி”
நரேந்திரன் மகளுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கையில் அங்கே வந்து சேர்ந்தார் பகவதி. அவரைக் கண்டதும் பேச்சை நிறுத்திக்கொண்டவர் “நிதானமா யோசி வானுமா. உன் மனசு இப்பவும் குழப்பத்துல இருக்குறதால நீ ஒருதலைபட்சமான நிலைப்பாட்டுல இருக்குற. அது சரியில்ல” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தார்.
பகவதியின் முகத்தில் ஒரு நொடி வேதனை மின்னி மறைந்தது. எத்தனை வயதானாலும் கணவனின் உதாசீனத்தைத் தாங்கும் வலிமை மனைவிக்கு வருவதில்லை.
தனது வேதனையை வழக்கம் போல திறமையாக மறைத்துக்கொண்டவர் மகளைத் தோட்டத்துக்கு அழைத்தார்.
“எதுக்குமா?”
“இங்க வச்சு பேசுனா மறுபடி உன் அப்பா வந்து உன்னோட மூளைய குழப்புவார்”
வான்மதி மறுபேச்சு பேசாமல் அன்னையோடு தோட்டத்திற்கு சென்றாள். பகவதி தேவையற்று பேச்சை வளர்க்காது நேரடியாகவே பூபாலனின் வருகை பற்றி மகளிடம் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.

வான்மதிக்கோ எரிச்சலாக வந்தது.
‘அவன் வந்ததற்கு நான் என்ன செய்வேன்? வந்தான், தேவையில்லாமல் இவரது மூளையைச் சூடாக்கிவிட்டுப் போய்விட்டான். தினமும் விசாரணைகுட்படுத்தப்படுவது நான்தானே!’
அதே எரிச்சலோடு “மறுபடி மறுபடி பாலாவ பத்தி பேச்சு எடுத்து என்னை வேதனைப்பட வைக்காதிங்கம்மா. அவரை நான் வரச் சொல்லலை. எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை நாலு வருசமா கிடையாது. ஊருக்கு வர்றப்ப எப்பவாச்சும் அவரைப் பாக்குற சிச்சுவேசன் வந்தா கூட ரெண்டு பேரும் தெரியாதவங்க மாதிரி க்ராஸ் பண்ணி போய்டுவோம். இப்ப மட்டும் ஏன்மா உங்களுக்கு இவ்ளோ டென்சன் வருது?” என்று கேட்டாள் பகவதியிடம்.
“ஏன்னா சமீபத்துல என் காதுக்கு வந்த எந்தச் செய்தியும் சரியில்ல. உன் ஃப்ரெண்டோட அப்பா இன்வைட் பண்ணுனார்னு எப்ப சென்னைக்கு மகேந்திரன் தம்பி போனாரோ அப்பவே என் நிம்மதி பறிபோயிடுச்சு. அங்க போயிட்டு வந்ததுல இருந்து அடிக்கடி பூபாலனோட பேர் உன் அப்பா சித்தப்பாவோட பேச்சுல அடிபடுது. அவங்க உன்னை மறுபடி அந்தக் கொடுமைக்காரக் குடும்பத்துல தள்ளி விட்டுருவாங்களோனு நான் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குறேன் வானுமா”
கவலையோடு சொன்னார் அவர்.
“அதுக்கும் நான் ப்ரெக்னெண்டா இருக்கேனானு நீங்க விசாரிச்சதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்மா? கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம…”
பேச்சை நிறுத்திவிட்டாள் வான்மதி.
“நீயும் அவரைச் சென்னைல சந்திச்சிருக்க வானுமா. உன் புத்தி விழிப்பா இருந்தாலும் உன் மனசு இன்னமும் பூபாலனுக்கு அடிமையா இருக்குனு எனக்குத் தெரியும். அதனால உணர்ச்சிவசப்பட்டு..”
ஒரு அன்னையாக மகளிடம் அவரால் சில விசயங்களை வெளிப்படையாகப் பேச முடியவில்லை. ஆனால் அவரது மனம் பரிதவிக்கிறதே!
அதீத உரிமையுணர்வு அவருக்கு வான்மதி மீது. என்னதான் நேசமித்ரன் மீது பாசமிருந்தாலும் வான்மதி என்றால் அவருக்கு உயிர். ஒவ்வொன்றையும் மகளுக்குப் பார்த்து பார்த்து செய்த அதீத அன்பும் உரிமையுணர்வும் கொண்ட அன்னைக்கு மகளுக்கேற்றவன் இல்லை பூபாலன் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு.
அதே நேரம் மகளுக்கு அவன்மீது பைத்தியக்காரத்தனமானக் காதல் என்பதையும் அறிந்தவராயிற்றே! அவனாக விலக்கித் தள்ளாவிட்டால் இன்னுமே வான்மதி அவனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகத்தான் இருந்திருப்பாள் என்பார் சில நேரங்களில்.
மகளின் காதலைப் பயன்படுத்திப் பூபாலனும் அவனது குடும்பமும் அவளை அடிமையாக வைத்திருந்தார்கள், அதிலிருந்து மகளை மீட்டிருக்கிறோம் என்ற கர்வத்துடன் வலம் வருபவருக்குத் திடுமென பூபாலனைச் சந்தித்த விபரத்தை மகேந்திரன் வாயிலாகக் கேட்டதும் மனதில் கலக்கம் சூழ்ந்து கொண்டது.
அன்றிலிருந்து ஆரம்பித்த பரிதவிப்பு அவரைக் கண்டபடி யோசிக்க வைத்ததன் பலன் பூபாலன் அவரைப் பதறடிக்கச் சொன்ன சிறு பொய் உண்மையாக இருக்குமோ என்ற குழப்பத்தால் மகளை விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்.
வான்மதியோ நான் என்ன அவ்வளவு பலவீனமானவளா என்று சீற்றம் கொண்டாள்.
“ஒரு காலத்துல நான் பாலா மேல வச்ச காதலால எதையும் கவனிக்காம இருந்திருக்கலாம். எப்ப அவருக்கு என்னை விட அவரோட குடும்பம் முக்கியம்னு சொன்னாரோ அப்பவே நான் முழிச்சிக்கிட்டேன்மா. உங்க மகளை அவ்ளோ சுலபத்துல இனிமே அவரால வீழ்த்த முடியாது. ரொம்ப யோசிக்காம பூமி கல்யாணவேலைய கவனிங்க. தூத்துக்குடில இருந்து உங்க சொந்தக்காரங்க வர்றதா சொன்னிங்கல்ல, அவங்களுக்கு எல்லா வசதியும் இருக்கானு பாருங்க. என்னை நினைச்சுக் கவலைப்படாதிங்க”
பகவதி யோசனையோடு அங்கிருந்து அகன்றுவிட இப்போது கலங்கிய குட்டையாய் மாறிப்போனதென்னவோ வான்மதியின் மனம்தான்.
பூபாலன் சொல்லிவிட்டுப் போன பொய் அவளையும்தான் பாதித்திருந்தது.
ஒரு காலத்தில் அவனது குழந்தையைச் சுமக்க ஆவலாய் இருந்தவள் அவள். அதனாலேயே மனதில் புதைந்திருக்கும் பழைய நினைவு ஒன்றில் சிக்கிக்கொண்டாள்.
அவளது வேலைக்காக ‘ப்ளாக் செயின்’ பற்றிய படிப்பில் மூழ்கியிருந்த நேரம் அது.
வான்மதியின் பணியின் தன்மையைக் கருத்தில் வைத்து பூபாலன் இப்போது குழந்தை வேண்டாமெனத் தள்ளிப் போட்டிருந்தான்.
சரியாக அந்தப் படிப்பு முடிந்து தேர்வில் தேர்ச்சியான மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொண்டபோது தனது குழந்தை ஆசையை வெளிப்படுத்தினாள் வான்மதி.

அவளைத் தன் மடியில் அமர்த்திக்கொண்ட பூபாலன் “நீயே குழந்தை மாதிரிதான் இருக்குற. உனக்கு ஒரு குழந்தையா? கொஞ்சநாள் ஆகட்டும் மதி. உன் கெரியர்ல நீ முன்னேற வேண்டிய சமயத்துல குழந்தை வந்துட்டுனா கஷ்டம். சரியா?” என்று பெரிதாகப் பாடம் நடத்தினான்.
அப்போதுமே அரைகுறையாகத்தான் சம்மதித்தாள் வான்மதி.
‘எத்துணை அன்னியோன்யமும், அன்பும் எங்களுக்குள் இருந்தது! எப்படி அதெல்லாம் காணாமல் போனது? எங்கே கோட்டை விட்டோம் நாங்கள்? என் காதல் பாலாவிற்கு போதவில்லையா? அல்லது அவரது சுயரூபம் தெரியாமல் நான்தான் தவறான ஒருவரை வாழ்க்கைத்துணையாகத் தேர்வு செய்துவிட்டேனா?’
இந்தச் சிந்தனை ஏதோ பூபாலனைக் கண்டதால் மட்டுமே அவளுக்குள் உதயமாகியதாக எண்ணிவிடவேண்டாம். கடந்த நான்காண்டுகளாக ஓய்வாக இருக்கும் நொடிகளில் எல்லாம் தன்னைத் தானே சுய அலசலில் ஈடுபடுத்த தவறுவதில்லை வான்மதி.
அந்தச் சுய அலசலுக்குத் தீர்வே கிடைக்கவில்லை இன்றுவரை. அதனால் ஓய்வில்லாமல் ஏதாவது வேலையைச் செய்துகொண்டே இருப்பாள். வேலையின் இறுக்கம் மனதை மரத்துப் போகச் செய்துவிடும் என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிப்பெண்ணுக்குச் செய்த தவறைத் திருத்திக்கொள்வோம் என்ற எண்ணம் மட்டும் வந்திருந்தால் இந்நேரம் திசைக்கொருவராக அவளும் பூபாலனும் நின்றிருக்கமாட்டார்கள்.