பக்குவமானப் பேச்சு, பரந்துபட்ட சிந்தனை இதெல்லாம் யாருக்குமே அவ்வளவு எளிதில் வருவதில்லை. கட்டாயம் வாழ்க்கை ஒரு அனுபவப்பாடத்தைத் தெள்ளத்தெளிவாக நடத்திய பிறகுதான் இதெல்லாம் வருகிறது. குடும்ப அமைப்பைப் பொறுத்தவரை இவர் சரி இவர் தவறு என்று யாரையும் கை காட்ட இயலாது. ஏனெனில் அனைவரும் உறவினர்களாகப் போய்விடுகிறார்களே! அந்தச் சூழலில் யார் செய்த தவறு பெரியளவில் பாதிப்பை உண்டாக்குகிறதோ அவர் நம் பார்வையில் குற்றவாளி ஆகிவிடுகிறார். அப்போது அவரை மன்னிக்கவோ அவர் செய்த தவறை மறக்கவோ நம்மால் இயலாது. அந்த நேரத்தில் நமது சிந்தனை பரந்து விரிந்திருக்க நாம் ஒன்றும் கடவுளின் அவதாரங்கள் இல்லையே!
-வான்மதி
வீட்டில் புயல் அடித்து ஓய்ந்ததைப் போன்ற அமைதி. தனது அறைக்குள் கதவை அடைத்துக்கொண்டு அமைதியாய் விம்மிக்கொண்டிருந்தார் சங்கரி.
கத்தியும் அரிவாளும் வைத்து வெட்டினால்தான் வலிக்குமா என்ன? வார்த்தைகளால் தாக்கினாலும் வலிக்குமே! வல்லினம் மெல்லினம் இடையினமென எழுத்துகளை வேண்டுமானால் பிரிக்கலாம். கோபத்தில் உதிர்க்கப்படும் வார்த்தைகள் எந்த இன எழுத்தைக் கொண்டு பிறந்தாலும் அது வன்மையாகத்தானே தாக்கிவிடுகிறது.
மாஸ்கைக் கழற்றிவிட்டு அமர்ந்தவரின் கண்களில் கண்ணீரோடு சற்று முன்னர் நடந்த களேபரத்தின் காட்சிகளும் வரிசையாகப் படம் போல ஓடின.
பூபாலனோடு வீட்டுக்கு வந்த வான்மதி குளித்துச் சாப்பிட்டக் கையோடு தான் வந்த நோக்கத்தை அவனிடம் கூறினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அத்தைய நான் என் கூட சென்னைக்கு அழைச்சிட்டுப் போயிடவா பாலா?”
அவ்வளவுதான்! வெடிக்க ஆரம்பித்துவிட்டார் குணசேகரன்.

“என் பொண்டாட்டிய வச்சு பாத்துக்க எனக்குத் துப்பு இருக்கு. நான் என்ன உன்கிட்ட வந்து அவளைப் பாத்துக்கனு கெஞ்சுனேனா? உடம்பு சரியில்லாதவளை அங்க அழைச்சிட்டுப் போய் என்ன செய்யலாம்னு நினைக்குற? பணக்காரச்சீமாட்டிக்கு மூனு வேளை ஆக்கிப் போட அவ ஒன்னும் தெருவுல போறவ இல்ல. குணசேகரன் பொண்டாட்டி. செத்தாலும் அவ இந்த வீட்டுப்படிய தாண்டமாட்டா. கூட்டிட்டுப் போய் வச்சுக்குறாளாமே! அவ மேல துளி மரியாதை கிடையாது உனக்கு. நீ என்ன லெச்சணத்துல வச்சுப்பேனு எனக்கு நல்லா தெரியும்”
அடுத்து அவரது இலக்கு சங்கரி.
“மூனு வேளை ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு சொகுசாதானே இருக்க. அப்புறம் எதுக்கு இந்த ஆசை உனக்கு? புருசனும் மகனும் எப்பிடி போனா என்ன? மருமக கூட ஒட்டிக்கிட்டு மெட்ராஸ் போய் சொகுசா இருக்கணும். எவ்ளோ சுயநலம் உனக்கு?”
அவர் கத்தி ஓய்ந்த பிறகு பூபாலனிடம் திரும்பினாள் வான்மதி.
“நான் ஏதாச்சும் இப்ப தப்பா பேசுனேனா? அவர் வாய்க்கு வந்தபடி பேசிட்டுப் போறார். என் கிட்ட அத்தைய வேலை செய்ய அழைச்சிட்டுப் போறதா சொல்லி சண்டை. அவங்க கிட்ட மெட்ராஸ்ல போய் சொகுசா அலையப் போறியானு சண்டை. அவர் முன்னுக்குப் பின் முரணா பேசுறார்னு உங்களுக்குப் புரியலையா? இப்பவும் என் பொண்டாட்டிய பேசாதிங்கப்பானு ஒரு வார்த்தை சொல்லலைல்ல”
ஆதங்கத்தோடு அவள் பேச பூபாலனோ என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தான் ஒரு கணம்.
பின்னர் “அம்மாவுக்கு உன் கூட வர விருப்பமிருக்கணும் மதி. அப்பாவ மீறி அம்மா எதுவும் செய்யமாட்டாங்கனு உனக்கே தெரியும்” என்றான்.
“ஆக, அந்தம்மாவ இந்த வீட்டுலயே அடைச்சு வச்சு மனவுளைச்சலுக்கு ஆளாக்குவிங்களே தவிர, என் கூட அனுப்பி வைக்க மாட்டிங்க. அப்பிடித்தானே?”
“அப்பிடி இல்ல மதி…”
“பேசாதிங்க பாலா. நீங்க துளி கூட மாறல. அவர் வழக்கம் போல என்னை அசிங்கப்படுத்திட்டுப் போயிட்டார். நீங்க வழக்கம் போல அவருக்குக் கொடி பிடிக்கிறிங்க. இல்ல அப்பாவும் பிள்ளையும் திட்டம் போட்டு என்னை அசிங்கப்படுத்தலாம்னு பேசி வச்சு செய்யுறிங்களா?”
“ஏய் உன்னை அசிங்கப்படுத்துறதுல எனக்கு என்ன சந்தோசம் கிடைக்கப் போகுது? இந்தளவுக்குச் சீப்பான ஆளாவா என்னைப் பத்தி உன் மனசுல நினைச்சிருக்க?”
“இதை விட சீப்பான ஆளாதான் நினைச்சிருக்கேன். இனியும் நினைப்பேன். உங்களைப் போய் நம்பி என்னை இந்த வீட்டுக்கு அனுப்பி வச்சாரே என் அப்பா., அவரைச் சொல்லணும். தள்ளுங்க”
அவள் ஒரு மூச்சுக்குக் கத்திவிட்டு ஓய்ந்துவிட அனைத்தையும் கேட்ட சங்கரியால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? வீடு என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விடியலிலும் இன்று என்ன கலவரம் வருமோ என்று யோசித்தபடி விழித்தால் அது என்ன வாழ்க்கை?
சொந்த வீட்டிலேயே சங்கரிக்கு மூச்சு முட்டுகிற உணர்வு. கௌரவம் என்ற போர்வையில் மருமகளோடு தன்னை அனுப்ப மறுக்கும் கணவரின் பேச்சில் அன்போ அக்கறையோ இல்லை என்பது திண்ணம்.
இப்படியே அவர் ஓய்ந்துவிட, சில நிமிடங்கள் கழித்து கதவு தட்டப்பட்டது. மாஸ்கை மாட்டிக்கொண்டு திறந்த சங்கரி அங்கே மருமகளைக் கண்டதும் குற்றவுணர்ச்சியில் குன்றிப்போனார்.
“உள்ள போய் பேசலாம் அத்தை”
அவர் நகர்ந்து வழிவிட உள்ளே வந்தவள் கதவை உட்பக்கம் தாழிட்டாள்.
சங்கரி மெத்தையில் அமர்ந்துகொள்ள அவள் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.
சுற்றி வளைக்காமல் அவரிடம் நேரடியாகவே கேட்டாள்.

“என் கூட சென்னைக்கு வந்துடுறிங்களா? நான் உங்களை நல்லா பாத்துப்பேன். எனக்கு வார்த்தை ஜாலம் எல்லாம் வராது. ஆனா இங்க ஒரே ரூமுல நீங்க அடைஞ்சு கிடக்குற மாதிரி அங்க அடைஞ்சு கிடக்க வேண்டாம். அங்க உங்களைக் குத்தம் சொல்ல யாரும் இருக்கமாட்டாங்க. உங்களுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்”
அவள் தீவிரமானக் குரலில் கேட்க, அவளது அக்கறையில் சங்கரிக்குக் கண்கள் கரித்துகொண்டு வந்தது.
அவரது மௌனத்தை வான்மதி வேறுவிதமாகப் புரிந்துகொண்டாள்.
“நீங்களும் மாமாவ மாதிரி உங்களை வேலை செய்ய அழைச்சிட்டுப் போறேன்னு நினைக்குறிங்களா?”
“ஐயோ! அப்பிடில்லாம் இல்ல வானும்மா” எனப் பதறியவர் பின்னர் யோசனையோடு “என் கிட்ட இருந்து உனக்கு…” என்று தடுமாற
“அதெல்லாம் ஒன்னும் பரவாது அத்தை. உங்களை நான் நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கை இருந்தா என் கூட வாங்க. இங்க இருந்திங்கனா உங்களுக்கு உடம்பும் சரியாகாது, மனசும் சரியாகாது. என் கூட வாங்க. அங்க என் ஃப்ரெண்ட் ஜோதி இருக்கா. அவ பையன் பிபின் இருக்கான். உங்களுக்கு ஒரு மாறுதலா இருக்கும் அத்தை” என்றாள் அவரது கையைப் பற்றியபடி.
“உன் மாமாவ மீறி… பயமா இருக்கு வானும்மா”
“அவருக்கு உங்களைப் பத்தி எந்தக் கவலையும் இல்ல. உங்க மகனை நீங்கதான் பெத்திங்களா இல்ல தவிட்டுக்கு வாங்குனிங்களா? நான் உங்க கிட்ட நடந்துக்கிட்ட முறை தப்புனுதான் அவர் என்னைப் பிரியுற முடிவையே எடுத்தார். ஆனா இப்ப அதை விட மோசமா அவங்கப்பா உங்களை நடத்துறப்ப வாயை மூடிக்கிட்டு இருக்கார். ஒருவேளை சொந்த ரத்தமா இருந்தா அவமானப்படுத்துனாலும் கொடுமைப்படுத்துனாலும் கோவம் வராது போல உங்க மகனுக்கு”
சங்கரி இடை மறித்தார்.
“நீ நினைக்குற மாதிரி இல்லம்மா. பாலாவோட அன்புல பாகுபாடு இருந்ததில்ல. அவன் எங்களை எந்தளவுக்கு நேசிக்குறானோ அதே அளவு உன்னையும்… இல்ல இல்ல… எங்களை விட அதிகமா உன்னை நேசிக்குறான்”
“எந்த அம்மா தன்னோட மகனை விட்டுக் குடுத்திருக்காங்க?”
“அப்பிடி இல்ல வானும்மா. உன்னைப் பிரிஞ்சதால அவன் இழந்தது அதிகம்”
“அவர் என்னை விலக்கி வச்சதால நான் என்னெல்லாம் இழந்தேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அத்தை. அதெல்லாம் உங்க கிட்ட சொல்லி பரிதாபம் தேடிக்க விரும்பல. உங்களை நான் நல்லவிதமா நடத்துனதேயில்ல. அது எனக்குள்ள குற்றவுணர்ச்சியா மாறி நிக்குது. ப்ளீஸ்! அந்த வேதனைய என்னால தாங்க முடியல. இது ஒரு வகைல என்னோட சுயநலம்னு கூட வச்சுக்கோங்க.”
இதுவரை அவள் யாரிடமும் இவ்வாறு கெஞ்சியதில்லை. சங்கரியும் தலையைக் குனிந்து யோசித்தார்.
கதவு தட்டப்பட்டது. எழப்போனவரை அமருமாறு சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தாள் வான்மதி.
“அம்மா கிட்ட பேசணும்” என்றபடி நின்று கொண்டிருந்தான் பூபாலன்.
“என்ன பேசணும்? தாய்மை கருமை எருமைனு பேசி அவங்களை ப்ரெய்ன் வாஷ் பண்ணனுமா?”
சுள்ளெனக் கேள்வி வந்து விழவும் அவனும் கடுப்பானான்.
“நீயா ஒன்னை யோசிச்சு வச்சுக்கிட்டு என்னைத் திட்டாத”
வான்மதி நகர்ந்து வழிவிட உள்ளே சென்றவன் அன்னையின் அருகே அமர்ந்தான்.
“மதி கூட சென்னைக்குப் போறிங்களாம்மா?”

மகனே இவ்வாறு கேட்டதும் சங்கரிக்கு ஆச்சரியம்.
“என்னால அப்பாவ கண்டிக்க முடியலம்மா. சம்பாதிச்ச வரைக்கும் நீங்க எல்லாரும் மதிச்சிங்க. இப்ப ஆளாளுக்கு என்னைத் திட்டுறிங்களானு அவர் சில நேரம் புலம்புறார்மா. எனக்குக் கஷ்டமா இருக்கு. நீங்களும் இங்க கஷ்டப்படுறிங்க”
“இல்ல பாலு…”
“இல்லனு சொன்னாலும் அதுதான் உண்மைமா”
இப்போது அந்த அறையில் ஆழ்ந்த நிம்மதி.
வான்மதிக்குக் கூட பூபாலனின் இந்தப் பேச்சில் ஆச்சரியம்! இவனா இப்படி பேசுகிறான்? இடியே விழுந்தாலும் தன் பக்கம் உள்ள தவறை ஒப்புக்கொள்ளமாட்டான். தனது இயலாமையைப் பற்றி சிந்திக்கமாட்டான்.
சொந்த அன்னையின் துயரம் அவனை யோசிக்க வைத்திருக்கிறது போல. இவனோடு வாழ்ந்த காலங்களில் ஒருமுறை இப்படி எனக்காக யோசித்திருப்பானா?
‘மீண்டும் வரலாறைப் புரட்டிப் பார்க்கவேண்டுமா?’ வான்மதியின் மனசாட்சியின் கேள்வி இது. புரட்டுவதை நிறுத்தினாள்.
அமைதிக்குப் பிறகு நல்ல முடிவு எடுக்கப்பட்டது. ஆம்! சங்கரி மருமகளோடு சென்னைக்குச் செல்ல சம்மதித்துவிட்டார்.
குணசேகரனிடம் இத்தகவலைத் தானே சொல்லிவிடுவதாகப் பூபாலன் கூறிவிட்டான்.
“ட்ரஸ் மட்டும் எடுத்து வச்சிடுங்க அத்தை. நைட் எட்டு மணிக்கு நமக்கு பஸ்”
பூபாலன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.
“ஏற்கெனவே டிக்கெட் புக் பண்ணிட்டியா? அப்ப அம்மாவ அழைச்சிட்டுப் போற ப்ளானோடதான் இங்க வந்தியா?”
“ஆமா! ஆனா உங்களை நம்பி ப்ளான் பண்ணல. நீங்க எப்ப நான் சொன்னதைச் சரினு கேட்டிருக்கிங்க? நான் எங்க வீட்டுக்குப் போய் அம்மா அப்பாவ பாத்துட்டு வர்றேன். ரொம்ப ட்ரஸ் எல்லாம் வேண்டாம் அத்தை. அங்க போய் வாங்கிக்கலாம். டாக்டர் ஃபைல்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க. வேற டாக்டர் கிட்ட ஃபாலோ பண்ணிக்கலாம்”
மடமடவெனப் பேசிவிட்டுப் போனவளை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த பூபாலனிடம் “நல்லப்பொண்ணு பாலு. முன்கோபம் இருக்கு. அதையும் இப்ப குறைச்சிக்கிட்டா. மனசுல இருக்குறதை மறைக்காம பேசிடுறா. என்னை அவ நல்லபடியா பாத்துப்பா பாலு” என்றார் சங்கரி.
“அது என்னமோ உண்மை. கொரானா பீரியட்ல சில நேரம் அவ ஃப்ளாட்டுல டேரா போட்டிருக்கேன். அப்ப என்னை நல்லா பாத்துக்கிட்டா. அதுல்லாம் ஒரு காலம்”
மகன் பழைய நினைவுகளில் அழகானத் தருணங்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்க, அவனைத் தொந்தரவு செய்யாமல் தனது உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார் சங்கரி.
******
முத்தரசி இல்லத்தில் சங்கரியைத் தன்னோடு சென்னைக்கு அழைத்துச் செல்லப் போவதாக அன்னையிடம் கூறிக்கொண்டிருந்தாள் வான்மதி
“என்ன? உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா வானும்மா? அந்தம்மாக்கு டி.பி இருக்கு. அதை உன் கூட கூட்டிட்டுப் போனா உனக்கும் வந்துடும். அந்தம்மாவ பாத்துக்க அவங்க புருசனும் மகனும் இருக்காங்க. நீ உன் வேலைய பாரு” எனக் குறுக்கே மறித்தார் பகவதி.
“அவங்க சரியா கவனிக்காம விட்டதாலதான் நான் அழைச்சுட்டுப் போகப் போறேன்மா”
மகள் தீவிரக்குரலில் சொல்லவும் பகவதியின் முகம் மாறியது.
“உனக்கு உலகம் புரியல வானும்மா. அந்தம்மாக்கு நீ மட்டும்தான் மருமகளா? மூத்தவளுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு? நீ அவங்களை ராணி மாதிரி பாத்துக்கிட்டாலும் அவங்களுக்கு அப்புறம் அந்த வீட்டுல உனக்குப் பாதி உரிமைதான். எதுவுமே செய்யாம பாதி உரிமை அந்த ப்ரீத்திக்குப் போகும். என் மகளை அடுத்தவங்களுக்குச் சேவை பண்ண நான் பெத்துப் போடல”
வான்மதி அன்னையைக் கூர்ந்து கவனித்தாள். அவரது பேச்சிலிருந்த ஆதங்கம் நியாயமானதுதான். ‘ஒருத்தி தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறாள் என்பதற்காக நனும் தட்டிக் கழிக்க வேண்டுமா?’
முன்னரும் இதே காரணத்துக்காகத்தான் வான்மதியிடம் பேசி அவளது மூளையைச் சலவை செய்து சங்கரி மீது வெறுப்பு வரச் செய்தார் பகவதி.
வெறுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சொல்லவில்லை. தன் மகளை மட்டும் அந்தக் குடும்பத்தினர் அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம். அப்போது வான்மதியுமே அன்னையுடைய வார்த்தைகளால் மனம் மாறி சங்கரியை ஒதுக்கினாள்.
இப்போதோ அவள் மனம் தராசு முள் போல யார் பக்கமும் சாயாமல் நடுவில் நின்றது.
அன்னைக்குத் தன் மீது அன்பு இருக்கலாம். ஆனால் தனது புகுந்த வீட்டினரைப் பற்றி தவறாகப் பேச அவரை அனுமதிக்கக்கூடாது. அதிலும் சங்கரி போன்ற அப்பாவியைப் பற்றி தப்பித் தவறிக் கூட அவர் மோசமாகப் பேசக்கூடாது எனத் தீர்மானித்தாள்.

“யாரும் என்னை மேனிபுலேட் பண்ணிடக்கூடாதுனு நினைக்குறிங்க, ஆனா என்னை அதிகமா மேனிபுலேட் பண்ணுறது நீங்கதான்னு ஏன் உங்களுக்குப் புரியலம்மா?”
மகளின் நேரடியானக் கேள்வியில் வாயடைத்துப் போனார் பகவதி.
“அதில்ல வானும்மா… என் பொண்ணை… அவங்க”
“இந்தத் தடவை என் புத்தி முழிச்சிருக்கு. நீங்க பயப்படுற மாதிரி யாரலயும் என் மனசைக் கண்ட்ரோல்ல வச்சுக்க முடியாது. அடிக்கடி சொல்லுவிங்களே, காதலை விட சுயமரியாதை பெருசுனு. அதை நான் என் மனசுல அழுத்தமா பதிய வச்சிட்டேன். இனிமே என் புகுந்த வீட்டு ஆளுங்களைப் பத்தி நம்ம பேசிக்க வேண்டாம். அத்தைய என் கூட கூட்டிட்டுப் போற முடிவை நான் மாத்திக்கப்போறதில்ல. நீங்க அவங்களுக்கு எதிர்ல நின்னு பாக்குறதால என் மாமனாரோட நிழல்ல நிக்குறவங்க உங்க கண்ணுக்கு வில்லியா தெரியுறாங்க. கொஞ்சம் நகர்ந்து அவங்க பக்கமா போய் பாருங்க. அப்பாவி அவங்க. அவங்களுக்கு வேண்டியது ஆறுதலும் அன்பும். அதை என்னால குடுக்க முடியும். குடுப்பேன். என்னை நீங்க அப்பிடித்தான் வளர்த்திருக்கிங்க. முடிஞ்சா அவங்க கூட சகஜமா பேச முயற்சி பண்ணுங்க. அவங்க வயசு லேடீஸ் யார் கூடவும் பேசாம, பழகாம வீடே உலகம்னு இருந்து அவங்க ஒருவிதமான அழுத்தத்தோட வாழுறாங்க. என்னால அவங்களுக்குத் தற்காலிகமா குடுக்க முடிஞ்ச ஆசுவாசம் அவங்களை என் கூட வச்சுக்குறது மட்டும்தான்”
மகள் வந்த செய்தியறிந்து வீட்டுக்கு வந்த நரேந்திரன் மனைவியும் மகளும் பேசிக்கொண்டிருந்த முழு உரையாடலையும் கேட்டுவிட்டார். என் மகள் பக்குவமானவள் என்ற கர்வமும், அவள் வாழ்க்கை இனி செழித்துவிடும் என்ற நம்பிக்கையும் அவருக்குள் வேர்விடத் தொடங்கியது.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!