கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே சுவாசித்து வாழ்ந்த என் நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். ஜர்னல் ரைட்டிங்கின் போது வண்ணப் பேனாக்களாலும், அழகான ஸ்டிக்கர்களாலும் அலங்கரிப்படும் ஜர்னலின் பக்கங்களைப் போல அத்துணை அழகாய், நேர்த்தியாய் அந்நாட்கள் நகர்ந்திருக்கின்றன என்பதை மானசீகமாக அசை போடுவதில் கூட எத்துணை சுகம்! அந்நாட்களின் நினைவு கொடுக்கும் ஆசுவாசத்திற்கு அடிமையாகித் தவிக்கிறேன். இயந்திர வாழ்க்கையிலிருந்து என்னைப் பிரித்தெடுத்துத் தலை கோதும் அந்நாட்களின் நினைவுகள் பழங்கதையாகிவிட்டாலும் எனக்குப் பொக்கிஷமாய் மாறிவிட்டன.
-வான்மதி
“நோ ப்ராப்ளம் சார். இன்னும் ஒன் வீக்ல நான் சென்னைக்கு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் என்ன பிரச்சனைனு பாத்து சரி பண்ணிக்கலாம். கண்டிப்பா இந்தத் தடவை க்ளையண்ட் அதிருப்தி ஆகமாட்டாங்க”
மடிக்கணினியின் திரையில் தெரிந்த உருவத்திடம் உறுதி கொடுத்துவிட்டு வீடியோ கான்பரஸ் அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்தாள் அவள்.

“வானுமா! உன் மேனேஜர் கிட்ட பேசிட்டனா வாடா! பூமி ரொம்ப நேரமா உனக்காகக் காத்திருக்கா. கோவிலுக்குக் கூட்டம் வர்றதுக்கு முன்னாடி போயிட்டு வந்துடுவோம்”
அவள் அமர்ந்திருந்த மேல்தளத்தை நோக்கிக் கேட்டது வானு என்று அழைக்கப்பட்ட வான்மதியின் அன்னையான பகவதியின் குரல்.
மடிக்கணினியை ஷட்டவுன் செய்துவிட்டு விரல்களை முறித்துக்கொண்டே அதை எடுத்தவள் அறைக்குள் வைத்துவிட்டுத் தனது உடையலங்காரத்தைக் கண்ணாடியில் சரி பார்த்தாள்.
திருத்தமான அழகு, மெல்லிய மேனி என்பார்களே அப்படி ஒரு உடல்வாகு! என்ன சாப்பிட்டாலும் எடை போடாது, பாம்பு வயிறு என்பார் பகவதி.
ஊதா நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த போச்சம்பள்ளி புடவை, மேலே மட்டும் முடி எடுத்து க்ளட்ச் க்ளிப் மாட்டிய கூந்தல் அலங்காரம், கைகள், காதுகளில் மின்னிய சின்ன வைரங்களுடனான பார்வையை உறுத்தாத தங்க ஆபரணங்கள், நெற்றியில் குட்டியாய் பொட்டு!
தோற்றத்தில் திருப்தியானவள் இதற்கு மேல் காத்திருக்க வைத்தால் தங்கை பூமிகாவின் பொறுமை காற்றில் கரைந்துவிடும் என்பதால் அறையை விட்டு வெளியேறினாள்.
விறுவிறுவென படியிறங்கி கீழ்த்தளம் வந்தவள் தனக்கு முன்னரே தயாராகி நின்ற கல்யாணப்பெண்ணான பூமிகாவின் பொய்க்கோபத்தைக் கண்டுகொண்டாள்.
“சீனியர் புராஜெக்ட் மேனேஜர் கிட்ட இருந்து கால். அவாய்ட் பண்ண முடியாது பூமி”
வான்மதி புராஜெக்ட் மேனேஜராக தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறாள். ஐந்தாண்டுகளாகச் சென்னை வாசம்! படித்ததும் காம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி பயிற்சி பெற்று, ப்ளாக் செயின் தொழில்நுட்பம் குறித்த படிப்பை வேலையின் நடுவே முடித்து கடினமாக உழைத்ததன் விளைவு இன்று அவள் ‘புராஜெக்ட் மேனேஜர்’.
நிலை உயர்ந்தால் பொறுப்பு உயரும். பணிச்சுமையும் அதிகரிக்குமே! தங்கையின் திருமணத்துக்காகப் போராடி விடுப்பு எடுத்துப் பிறந்த ஊரானப் பொன்விளைக்கு வந்தவள், அவளின் தலைமையில் ஒரு வாரத்துக்கு முன்னே முடிவுற்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்கான ப்ளாக் செயின் அப்ளிகேசன் புராஜெக்டில் சிறு பிரச்சனை எழுந்ததால் சீனியர் புராஜெக்ட் மேனேஜருக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்!
இன்னும் இருநாட்களில் திருமணம்! அதற்கு முன்னர் குடும்பமாகக் குலதெய்வக்கோவிலுக்குப் போய் வேண்டுவது குடும்ப வழக்கம்! அதற்காகத்தான் தயாராகியும் இருந்தாள் அவள்! அதற்குள் வீடியோ கான்பரன்ஸில் இணையவேண்டிய கட்டாயம்!
வான்மதி பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு காது மடல்களைப் பிடித்தவள் முன்ஜாமீன் வாங்கிக் கொண்டாள், மன்னிப்பின் வாயிலாக.
பூமிகாவின் முகமும் மலர்ந்தது. வான்மதியின் கைகளைக் கோர்த்துக்கொண்டவள் “நான் சும்மா விளையாடுனேன்கா. நம்ம ரெண்டு பேரையும் கிளம்புங்க கிளம்புங்கனு அவசரப்படுத்திட்டு இன்னும் அம்மாவும் பெரியம்மாவும் ரெடியாகல பாரேன்” என்றாள் சிரிப்போடு.
வான்மதியின் அன்னை பகவதி பூமிகாவுக்குப் பெரியம்மா முறை. இருவரது தந்தையரும் உடன்பிறந்தவர்கள். மூத்தவர் நரேந்திரன் – பகவதி தம்பதிக்கு நேசமித்ரன் மூத்த வாரிசு. அவனுக்கு மணமாகி மனைவி சாத்விகாவுடன் பெங்களூருவில் வேலை நிமித்தமாக வசிக்கிறான். அவர்களுக்குப் பிறந்த சமிக்ஷாவுக்கு இரண்டரை வயது.
இளையவரான மகேந்திரன் – மிருதுளாவிற்கு பூமிகா ஒரே பெண்ணாக நின்று போனாள்.
அண்ணனும் தம்பியும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசிப்பதால் பூமிகாவுக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்ற ஏக்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள் வான்மதியும் நேசமித்ரனும்.
“வந்துட்டியா வானு? ஹேர் பின் எடு பூமி. இவ வெறும் தலையா நிக்குறா பாரு” என்று படபடத்தபடி வந்த மிருதுளாவின் கரத்தில் பந்து போல கட்டிய மல்லிகைச்சரம் சிரித்தது.
“பூ வேண்டாம் சித்தி. தலை வலிக்கும்” என்ற வான்மதியை முறைத்தவர்
“பொண்ணுங்க பூ வேண்டாம்னு சொல்லக்கூடாது வானு” என்று கடிந்தவாறு பூமிகா கொடுத்த ஹேர்பின்னால் மல்லிகைச்சரத்தை வான்மதியின் கூந்தலில் சூடிவிட்டார்.

“கல்யாணப்பொண்ணு நானு! ஆனா கவனிப்பு உனக்கு. ரொம்ப நல்லா இருக்கு”
கல்யாணப்பெண் சொல்ல அந்நேரத்தில் அங்கே வந்தார்கள் நரேந்திரனும் மகேந்திரனும்.
“கோவிலுக்குப் போகலாமா? நேரம் ஆகுது. இன்னும் கொஞ்சநேரத்துல சவுண்ட் சர்வீஸ்காரங்க வந்துடுவாங்க. சாமியானா, பந்தலுக்கு வேற சொல்லியாச்சு. எவ்ளோ நேரம்?”
படபடவென மொழிந்தார் மகேந்திரன். அவரருகே நின்று கொண்டிருந்த நரேந்திரனின் விழிகளில் மட்டும் திருமணத்தின் உற்சாகத்தைத் தாண்டிய ஒரு மெல்லிய கலக்கம். அந்தக் கலக்கத்தின் காரணியான மகளை ஆதங்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவரின் கரத்தை அழுத்தினார் மகேந்திரன்.
“எல்லாம் சரியாயிடும்ணா! நான் இருக்குறேன்ல”
நரேந்திரனின் உதடுகளில் மெல்லியச்சிரிப்பு!
பட்டுப்புடவையை நீவியபடி பகவதி அங்கே வரும் வரை அந்தச் சிரிப்பு நிலைத்திருந்தது.
“இந்தத் தட்டுல தேங்கா, மாலை எல்லாம் வச்சுக்க சாத்விகா. பூ, பழம், வெத்தலைப்பாக்கு எல்லாம் ரெடியா இருக்கா?”
மருகள் சாத்விகாவிடம் பேசியபடி அங்கே வந்தவரின் முகத்தில் பணத்தின் செழுமையோடு கொஞ்சம் கர்வமும் ஒட்டியிருந்தது. அந்நொடியில் நரேந்திரனின் முகத்தில் கடுமை குடியேறியது.
அங்கே நிற்க பிடிக்காமல் அவர் வெளியேறிவிட பகவதி அதை அலட்சியம் செய்துவிட்டு மகளை அதிருப்தியாய் நோக்கினார்.
“இதை விட மெல்லிசா உனக்குச் செயின் கிடைக்கலையா? இல்லாதவங்க வீட்டுப் பொண்ணுங்க கூட கழுத்து நிறைய கவரிங்குல அள்ளிப் போட்டுக்குறாளுங்க. வைரமும் தங்கமுமா பாத்து பாத்து வாங்குன நகை எல்லாம் பீரோல தூங்குது”
“நைசா வெளிய ஓடிடுவோம்கா. அடுத்து பெரியம்மா என்னைத்தான் டார்கெட் பண்ணுவாங்க”
அன்னையிடம் ஏதோ சொல்லப்போன வான்மதியின் காதைக் கடித்து அவளை வெளியே இழுத்துப் போய்விட்டாள் பூமிகா.
“க்கும்! நல்லது சொன்னா யாரு கேக்குறாங்க? பாரு, உன் மக கல்யாணப்பொண்ணு மாதிரியா இருக்குறா? எவ்ளோ பட்டுப்புடவை இருக்கு?” என்று மிருதுளாவிடம் அடுத்து பாட்டை ஆரம்பித்தார் பகவதி.
மிருதுளாவைக் காப்பாற்ற ஆபத்பாந்தவளாக இடையில் புகுந்தாள் சாத்விகா.
“இந்தக் காலத்துப்பொண்ணுங்க சிம்பிளா இருக்க விரும்புறாங்கத்தை. விடுங்க, பூமி கல்யாணத்துல இப்பிடியே நடமாட முடியுமா? அப்ப கழுத்து நிறைய உங்க மகளுக்கு நகை பூட்டி அழகு பாருங்க” என்று சொல்லி பகவதியைச் சமாதானம் செய்து இரு மாமியார்களையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்துவிட்டாள்.
தயாராக நின்ற கார்களில் ஒன்றை ஏற்கெனவே வீட்டின் மூத்த ஆண்மகன்களும் அவர்களின் புதல்வியரும் ஆக்கிரமித்தாயிற்று!
“இந்தக் கார்ல ஏறிக்கோங்கமா”
அன்னையும் சித்தியும் அமரக் கார்க்கதவைத் திறந்துவிட்டான் நேசமித்ரன்.
“ஆச்சி இங்க வா” என்று காரின் பின்னிருக்கையில் இருந்து மழலையில் கொஞ்சிய பேத்தியை மடியில் அமரவைத்துக்கொண்ட பகவதியோடு மிருதுளாவும் ஏறியதும் கார் பொன்விளைநாதர் கோவிலை நோக்கி விரைந்தது.
பொன்விளைநாதர் – பொன்விளை என அந்த ஊருக்கு நாமகரணம் ஏற்படக் காரணமான ஈசன். அவரது பாதியான உமையுடன் குடிகொண்டிருக்கும் கோவிலுக்குப் பல தலைமுறைகளாக நரேந்திரனின் குடும்பத்தினர்தான் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்கள். இப்போது மகேந்திரனிடம் அப்பொறுப்பு உள்ளது. நரேந்திரன் அப்பொறுப்பை மகேந்திரனிடம் கொடுத்தன் பின்னே உள்ள காரணத்தை அவரும் அந்த ஈசனும் மட்டுமே அறிவார்கள்!
வானுயர கோபுரத்துடன் நின்ற கோவிலின் முன்னே போய் இறங்கியதும் கரத்தைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டார் நரேந்திரன்.
“இந்தத் தடவையும் நான் உன்னைப் பாக்க விரும்பல! எப்ப என் மகளுக்கு நீ வழி காட்டுறியோ அப்ப உன் கோவிலுக்குள்ள நான் காலடி எடுத்து வைப்பேன்”
நரேந்திரன் கோவிலுக்குள் வரமாட்டார் என்று முன்பே தெரிந்ததாலோ என்னவோ பகவதி அவரைக் கண்டுகொள்ளவில்லை.

“தம்பி அவர் வரமாட்டார்ங்கிறது தெரிஞ்சதுதானே? சின்னவளுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன். வீட்டுக்கு மூத்தவளா என் பேச்சுக்கு நீங்க கட்டுப்படுவிங்கனு நம்புறேன். தம்பிய கூட்டிட்டு உள்ள வா மிருதுளா” என்று சொல்லிவிட்டுப் பூமிகா, சாத்விகா, நேசமித்ரனோடு தனது பேத்தி சமிக்ஷாவைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குள் போய்விட்டார் அவர்.
மகேந்திரன் தமையனை ஏக்கத்தோடு பார்க்க அவரோ உள்ளே போகுமாறு சைகை காட்டினார்.
வான்மதி தந்தையிடம் ஆதங்கத்தோடு வந்து நின்றாள்.
“ஏன்பா? நீங்க கோவிலுக்குள்ள போகாம இருக்குறதால எதுவும் மாறப்போகுதா? வாங்கப்பா”
.இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வைராக்கியத்துடன் வாழப்போகிறார்? படைத்தவனிடமே வைராக்கியத்தைக் காட்டுவது முறையாகுமா?’
“உள்ள இருக்குறவன் என் அப்பன் ஈசன். அவன் நினைச்சா சிலரோட பிடிவாதம், அகந்தை, கண்மூடித்தனமானக் கோவத்தை உடைச்சுருக்க முடியும். அவன் செய்யலையே! என் கோவத்தை என்னால எப்பிடி காட்ட முடியும் வானுமா? என்னைக்கு அவன் மனசு மாறி எல்லாரோட மனசுலயும் அமைதிய குடுக்குறானோ அன்னைக்கு நான் கோவிலுக்குள்ள வந்து உரிமையா அவனைக் கும்பிடுவேன். நீ போ”
கண்டிப்பும் கறாராமுமாக உரைத்த தந்தையை வழக்கம் போல சமாதானம் செய்ய முடியாமல் தோற்றுப்போனாள் வான்மதி.
தலையாட்டிவிட்டுக் கோவிலுக்குள் சென்றாள். அவளுக்கு மட்டும் இந்தக் கோவிலுக்குள் வருவது அத்துணை எளிதாகவா இருக்கிறது?
அங்கிருக்கும் ஒவ்வொரு சிலையும், ஒவ்வொரு தூணும் அவளுக்குள் கிளறும் நினைவுகளின் சுமையில் ஒவ்வொரு முறையும் மனம் கனத்துப் போகிறாள். ஆனாலும் அவளால் அந்தக் கோவிலையும் அதில் வாசம் செய்யும் ஈசன் உமையையும் புறக்கணிக்க முடியாது. அவளுள் இன்று இருக்கும் அமைதியும் தெளிவும் அவர்கள் கொடுத்ததாயிற்றே!
அது பழங்காலக் கோவில்! சின்ன சின்னதாய் ஆங்காங்கே தெய்வங்களுக்குச் சன்னதிகள்! நவகிரக சன்னதி! ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த ஸ்தலவிருட்சமான பலா!
ஒவ்வொன்றையும் பக்தியோடு ரசித்தபடியே சுவாமி சன்னதியை நோக்கி விரைந்தாள்.
அங்கே அன்னையும் சித்தியும் ஐயரிடம் தாம்பாளத்தைக் கொடுத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
மகேந்திரன் வந்து சேர்ந்த பிற்பாடு பூஜையும் ஆரம்பித்தது.
மனம் உருகக் கண் மூடினாள் வானதி.
என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை. எப்போதுமே கோவிலுக்கு வந்து எனக்கு இது வேண்டும் அது வேண்டுமென வேண்டிகொள்வதில் அவளுக்கு உடன்பாடில்லை.
கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்பது என்ற எண்ணம். ‘நான் உனக்குப் பூவும் பழமும் வைத்து வேண்டுகிறேன், நீ எனக்கு இதைச் செய்’ என்று இறைவனிடம் பேசுவதற்கு பக்தி ஒன்றும் வியாபாரம் இல்லை என்பாள் அவள்.
அழுகின்ற பிள்ளைக்குத்தான் தாய் முன்னுரிமை கொடுப்பாள்! வேண்டி இறைஞ்சும் பக்தனைத்தானே இறைவனும் முதலில் ஆசிர்வதிப்பான்! வான்மதிக்கு இதை யார் புரியவைப்பது?
எப்போதும் போல ‘எனது கடைசி காலம் வரை யாரையும் சார்ந்திருக்காது உழைத்து வாழ்வதற்கான உடல்நலனையும் மனநலத்தையும் மட்டும் கொடு’ என்று மட்டும் கேட்டுக்கொண்டாள்.
பூமிகா – வெங்கடேஷின் திருமணம் எவ்விதக் குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டு வெளியே வந்தபோது நேசமித்ரனுக்கு மொபைல் அழைப்பு!
“ஆமா! வீட்டு வாசலல் ஒரு ஸ்பீக்கர் வச்சிட்டிங்களா? குட் குட்! அப்பிடியே தெரு முக்கு எல்லாத்துலயும் ஒவ்வொன்னு வைக்கணும். ஊர் முழுக்க சீரியல் பல்ப் போட்டுடுங்க. எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு ஊரே ஜொலிக்கணும்”
பேசிக்கொண்டிருந்த கணவனின் புஜத்தைச் சுரண்டினாள் சாத்விகா.
“ப்ச்! என்னடி?” எரிச்சலாய்க் கேட்டவனை முறைத்தாள்.
“சவுண்ட் கம்மியா வைக்கச் சொல்லுங்க” என்றாள்.
“சவுண்ட் சர்வீசை வரச் சொல்லிட்டு கம்மியா சவுண்ட் வைக்கணுமாம். போடி இவளே! ட்ரெண்டிங்கில உள்ள எல்லா பாட்டையும் போட்டே ஆகணும்னு அவன் கிட்ட கண்டிப்பா சொல்லிருக்கேன். போ போ! பிள்ளைய பாரு”
“ஆளூம் மூஞ்சியும் பாரு! நீயெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? ஸ்பீக்கர் வச்சு பாட்டு போட்டு எல்லார் தலையையும் வெடிக்க வைக்கப் போறான் பட்டிக்காட்டான்|’
“போடி போடி! இந்தப் பட்டிக்காட்டானைத்தான் ஒத்தைக்கால்ல நின்னு பிடிவாதம் பிடிச்சு நீ கட்டிக்கிட்ட”
அண்ணன் மதினியின் சண்டையை நமட்டுச்சிரிப்போடு பார்த்தபடி காருக்குள் ஏறினார்கள் வான்மதியும் பூமிகாவும்.
கார் அவர்களின் பூர்வீக வீடான ‘முத்தரசி இல்லத்தில்’ வந்து நிற்கையில் சவுண்ட் சர்வீஸ் உபயத்தால் அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது.
அதன் டொம் டொம் இசையைக் கேட்டபடி அனைவரும் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போய்விட்டார்கள்.
வான்மதிக்குத்தான் இதயத்தசைகள் சுருங்கி விரிவது நின்றது போன்ற மாயை! இறுக்கமாக ஏதோ ஒன்று நெஞ்சில் அழுத்தி வலியை உண்டாக்கியது.
வீட்டு வாயில் முற்றம் அத்துணை பெரியது! பொறுமையாகக் காலடி எடுத்து வைத்தவள் வீட்டுக்குள் செல்லும் முன்னரே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி வரும் உணர்வு! அதே நேரம் மயக்கமும் கூட!
வேகமாக நடந்து வீட்டுக்குள் போய்விடலாமென முயன்றவளுக்குக் குமட்டல் அதிகமாகிவிட கைகளால் வாயைப் பொத்திக்கொண்டாள்.
இன்னும் டொம் டொம் இசையுடனானப் பாடல் நிற்கவில்லை.
வாந்தி வரும் உணர்வு! தலை சுற்றல்! இதயத்தசை இறுக்கம்! எல்லாம் சேர்ந்து அவள் சரிந்து விழப்போகையில் யாரோ பின்னே நின்று அவளது கையைப் பற்றி நிறுத்தினார்கள்.
கூடவே அவளது இரு தோள்களையும் பலமான கரங்கள் அழுத்துப் பிடித்ததில் வலி எடுக்க, அதற்கு முன்பாக அந்தக் கரங்களின் ஸ்பரிசத்துக்குச் சொந்தக்காரன் யார் என்று மூளை அலர்ட் செய்ததில் வான்மதி திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அவளெதிரே ஆராய்ச்சிப்பார்வை வீசிய இடுங்கிய கண்களும், இறுகிய மோவாயும், எள்ளலா குறும்பா என வகையறிய முடியாதச் சிரிப்புமாக நின்றிருந்தான் அவன்.

வான்மதியின் இதயத்தசைகள் இறுகிய வலியை இன்னும் கூட்டியது அவன் நின்ற விதம்.
“வானுமா”
அந்நேரத்தில் கோபமாக ஒலித்தது பகவதியின் குரல். அன்னையின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது வான்மதிக்கு.
வேகமாக அவனது பிடியை அவள் உதற, நின்றவனின் விழிகளிலோ கோபத்தின் சீற்றம்!
அதற்குள் பகவதியும் அங்கே வந்துவிட்டார்.
மகளை இழுத்துத் தன்னருகே நிறுத்திக்கொண்டவர் “எவ்ளோ தைரியம் இருந்தா எங்க வீட்டுக்கு வந்திருப்பிங்க?” என்று கோபத்தோடு ஆரம்பிக்கவும்
“உஷ்! எதுக்குக் கத்துறிங்க? ஆல்ரெடி ஸ்பீக்கர் சத்தம் வேற காதைச் செவுடாக்குது” என்றவன் சுண்டுவிரலால் காதுமடலைத் தீண்டிக் காட்டப் பொறுமையிழந்தார் பகவதி.
“வெளியே போங்க”
“என் கிட்ட அப்புறமா கத்துங்க பகவதியம்மா! முதல்ல உங்க பொண்ணைப் பாருங்க” என்றான் அவன்.
வான்மதி ஏற்கெனவே தலைச்சுற்றலும் குமட்டலுமாக நின்றவள் அன்னை ஆராய்ச்சிப்பார்வை பார்த்ததும் “நான் வீட்டுக்குள்ள போறேன்மா” என அவஸ்தையுடன் சொல்ல
“உனக்கு என்ன பண்ணுது வானும்மா?” எனப் பதறினார் அவர்.
வான்மதி பதில் சொல்லும் முன்னரே குறுக்கிட்டது அங்கே நின்றவனின் குரல்.
“புள்ளத்தாச்சி பொண்ணுக்கு என்ன பண்ணுமோ அதெல்லாம் பண்ணுது அவளுக்கு. பாத்துப் பத்திரமா அழைச்சிட்டுப் போங்க”
கிண்டலாய்ச் சொன்னவன் நாக்கினால் உட்பக்கத்துக் கன்னத்தசையை உந்திக் காட்ட வான்மதியோ பதறிப்போனாள்.
“வானு! என்ன சொல்லுறாரு இவரு?” எனப் பகவதி பதற
“ம்மா…” என்றவளுக்குக் குமட்டல் அதிகமாக வாயைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
பகவதி பேயறைந்த முகத்தோடு நிற்க அவரது கண் முன்னே சொடக்கு போட்டான் அவன்.
அவர் திகைக்கவும் “வந்த வேலை முடிஞ்சிடுச்சு பகவதியம்மா. நான் கிளம்புறேன்” என்று கிண்டலாய்ச் சொல்லிவிட்டுக் கரங்களை மேலே உயர்த்திச் சோம்பல் முறித்தபடி அங்கிருந்து கிளம்பினான் அவன்.
வீட்டின் முற்றத்தைத் தாண்டி நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளெண்டரில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பியவனின் விழிகள் அனிச்சையாக மேல்தளத்தை ஏறிட்டன.

அங்கிருக்கும் அறைக்கான ஜன்னல் வீட்டின் முற்றத்தை நோக்கி இருக்குமென அறிந்தவன் அவன்! அந்த அறை யாருடையது என்பதையும் அறிந்தவன் அவன்!
இதோ இப்போது ஜன்னல் கம்பிகளினூடே தெரியும் உருவம் யாருடையது என்பதையும் அறிவான்! எல்லாம் அறிந்தவன் அறியாமல் விட்ட விசயமும் ஒன்று உண்டு.
அதை அவன் மட்டுமா அறியாமல் போனான்? இதோ ஜன்னல் வழியே அவனை எவ்வித உணர்ச்சிகளுமின்றி வெறிக்கிறாளே வான்மதி அவளும்தானே அறியாமல் போனாள்!
“வீட்டோட இளவரசி, மகாராணினு சொல்லுவாங்க. ஆனா அவளுக்கு எதுல்லாம் ஒத்துக்காதுனு கூட தெரியல. இந்தக் குடும்பத்துக்காகத்தானே எல்லா பிரச்சனையும் பண்ணுனா? இப்ப அனுபவிக்கட்டும்!”
கோபமும் வெறுப்புமாகச் சொல்லிவிட்டுப் பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பினான் பூபாலன்! ஒரு காலத்தில் வான்மதியின் பாலாவாக இருந்தவன்!