“அவன் என் சுவாசத்தைத் திருடும் கள்வன் அல்ல; என் மூச்சுக்காற்றையே தனக்கானதாகச் சாசனம் எழுதிக்கொண்ட அரக்கன். தப்பிக்க முடியாத அந்த முரட்டு முத்தத்தில் நான் இறந்தேனா, இல்லை புதிதாய்ப் பிறந்தேனா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை.”
-வெண்பா
நேத்ரன் வந்துபோன பிறகு வெண்பாவின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம். ஏற்கெனவே வீட்டில் தந்தை இருந்தால் அமைதியாய் இருப்பவள் இப்போது இன்னும் அமைதியாய்த் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.
துர்காவுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடைபெறுவதற்கான நாளை அங்கயற்கண்ணியும், மனோன்மணியும் சேர்ந்து குறித்தபோதே குந்தவை அங்கயற்கண்ணியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகளை நேத்ரனுக்குப் பேசியே ஆகவேண்டுமெனப் பிடிவாதமாகப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டார்.
பெண் கோபிகா மதுரையில் ஒரு தனியார் நிதி நிறுவனமொன்றில் மேனேஜராகப் பணியாற்றிவருகிறாள். அவள் வேலைக்குச் சென்றாக வேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை. குடும்பத்தின் செல்வநிலை இன்னும் நான்கு தலைமுறைகளுக்குப் போதும். மதுரையில் பெரிய ஹோட்டல் குழுமம் அவர்களுடையது.
செல்வச்சிறப்பான இடத்தில் மகனுக்கு விரும்பிப் பெண்தர வந்தவர்களைத்தான் வெண்பாவுக்காக ஒதுக்கிவைத்தார்கள் அங்கயற்கண்ணியும் குந்தவையும். இப்போது வெண்பா மகனை மணக்க விரும்பவில்லை என்று கூறியதும் குந்தவைக்கு மனஸ்தாபம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
‘என் மகன் எந்த வகையிலும் உனக்குக் குறைந்தவன் இல்லை’ எனக் காட்டும் வெறி. அங்கயற்கண்ணியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகளிடமே மொபைலில் பேசிவிட்டார்.
“அங்கயற்கண்ணி அத்தை தாலி பிரிச்சுக் கோர்க்குற ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணிருக்காங்க ஆன்ட்டி. நானும் ஆபிஸ்ல லீவ் சொல்லிருக்கேன்” எனப் பொதுவாகப் பேசிய பெண்ணிடம் மைந்தனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசிவைத்தார்.
“அவங்களுக்குத்தான் ஆல்ரெடி கல்யாணம் பேசியாச்சுல்ல?”
“ம்ம்! ஆனா இப்ப அந்தப் பொண்ணுக்குக் கல்யாணத்துல விருப்பமில்ல. அதுக்காக நாங்க காத்திருக்க முடியுமா? அதான்…” என இழுத்தவர் கோபிகாவின் குரலில் தெரிந்த ஆர்வத்தை வைத்தே அவளை மருமகள் என விளித்துவிட அவளும் மனங்குளிர்ந்து போனாள்.
அங்கயற்கண்ணியிடம் இதைக் கூறவும் செய்தார் குந்தவை. தன் மகனுக்கேற்ற பெண் கோபிகாவே என அவர் கூற அங்கயற்கண்ணியோ உடனே சம்மதிக்கவில்லை. அவருக்கு நேத்ரனைப் பற்றித் தெரியும், பிடித்தவர்களை அத்துணை சுலபத்தில் விட்டுக்கொடுப்பவனில்லை அவன்.
“துர்காவோட தாலி பிரிச்சுக் கோர்க்குற ஃபங்ஷன் நல்லபடியா முடியட்டும் குந்தவை. ஃபங்ஷனுக்குச் சம்பந்தி வீட்டுக்காரங்க வருவாங்கல்ல. அப்ப வெண்பாவோட நிலைப்பாடு என்னனு பேசிடுவோம். அதுவரை இந்தப் பிரச்சனைய ஆறப்போடு”
அங்கயற்கண்ணி சொல்லிவிட்டதால் குந்தவையும் அமைதியாகிப்போனார். ஆனால் தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னரே மதுரையிலிருந்து தாய் தந்தையுடன் ராஜவிலாசத்துக்கு வந்து சேர்ந்த கோபிகாவைப் பார்த்ததும் அவரது மனம் உற்சாகமானது.
“வாம்மா மருமகளே!” என்று அவர் வாய் நிறைய வரவேற்றபோதே நேத்ரனின் புருவங்கள் சுழித்துக்கொண்டன.
தனியே மகனிடம் கோபிகாவைப் பற்றி அவர் பேச்சை ஆரம்பித்தபோதே “யார் வேணும்னாலும் உங்களுக்கு மருமகளா ஆகிடலாம். ஆனா எனக்குப் பொண்டாட்டியா ஆகப்போறவ வெண்பா மட்டும்தான். அதை மறந்துடாதீங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டான் அவன்.
துர்காவுக்கோ சின்ன மாமியாரின் செயல்களில் துளியும் பிடித்தமில்லை. ஆனால் அவருக்கும் வெண்பாவுக்கும் எங்கேயோ முட்டிக்கொண்டது மட்டும் புரிந்தது. புகழேந்தியிடம் புலம்பித் தள்ளினாள் அவள்.
“இப்ப என்ன? வெண்பாவுக்கும் நேத்ரனுக்கும் இடையில சித்தி யாரையும் கொண்டுவந்துடுவாங்களோனு பயமா இருக்குதா?” என அவன் வாஞ்சையாய்க் கேட்க ஆமெனத் தலையசைத்தாள் அவள்.
“பேசாம வெண்பாவ இப்பவே கூப்பிட்டு இங்க வச்சுக்க. நேத்ரனும் அவளும் அடிக்கடி பாத்துப் பேசிக்கிட்டாங்கனா அந்தப் பொண்ணு கோபிகாவுக்கு அவ ஒரு தேர்ட் வீல்னு புரிஞ்சிடும்.” என்று சொல்லிவிட்டான் அவன்.
அதன் பின்னர் துர்கா தாமதிப்பாளா என்ன? உடனடியாகத் தங்கையின் மொபைலுக்கு அழைத்துவிட்டாள்.
முதலில் முரண்டுபிடித்த வெண்பா பின்னர் செண்பகராமனும் உமையாளும் அதட்டியதும் ராஜவிலாசத்துக்குச் செல்லச் சம்மதித்தாள். எழிலனே அவனது காரில் கொண்டுபோய்விட்டான் அவளை.
துர்காவும் அங்கயற்கண்ணியும் அவளைப் பூரிப்போடு வரவேற்றார்கள். குந்தவை கடனே என்று பார்த்துவிட்டுப் போக அவர் பின்னே ஓடினாள் கோபிகா.
யாரந்த புதுப்பெண் எனத் துர்காவின் காதை வெண்பா கடித்தபோதே “ஹலோ டீச்சரம்மா!” என்று உற்சாகமாய் அழைத்தபடி அவளை வந்து கட்டிக்கொண்டாள் புவனா. கூடவே அவளது மகள் மதுஸ்ரீ.
“எப்பிடி இருக்கீங்க மதினி?”
“எனக்கென்ன? சூப்பரா இருக்கேன். வா! உள்ள போய்ப் பேசலாம்” எனத் தங்களோடு அழைத்துச் சென்றுவிட்டாள் வெண்பாவை.
குந்தவை, கோபிகா, கோபிகாவின் அன்னையைத் தவிர அனைவரும் வெண்பாவிடம் பழைய வாஞ்சையும் உரிமையும் மாறாமல் பேசினார்கள். மதுஸ்ரீ ஆகாஷைப் பற்றி விசாரித்தாள்.
நேரம் கடகடவெனப் போனதில் வெண்பாவுக்கு அந்த வீடும் அதன் மனிதர்களும் ஏதோ ஒருவிதத்தில் உரிமையானவர்களாக மனதில் பதிந்துபோனார்கள். எல்லாம் “ஐ சின்ன மாமா வந்தாச்சு” என்று மதுஸ்ரீ குரல் கொடுக்கும்வரைதான்.
அவ்வளவு நேரம் பெண்கள் கூட்டத்தோடு அமர்ந்து கதை பேசியவள் நேத்ரன் ஹாலுக்கு வரும் முன்னர் அங்கிருந்து நழுவித் தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள்.
அன்றைய மாமரத்தடி சம்பவத்துக்குப் பிறகு அவன் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்திகளுக்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தைப் பதில்களாகவே அனுப்பிச் சமாளித்திருந்தாள். அவனும் அவளது மனநிலையை உணர்ந்தவனாய்ப் போன் செய்து பேசவில்லை. ஆனால் அவன் ஒருவன் இருப்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பான்.
இப்போது அவனை நேருக்கு நேர் சந்திப்பதில் அவளுக்குத் தயக்கமும் சங்கடமுமான உணர்வு.
“இங்க இருந்து போறவரைக்கும் நேத்ரனைப் பாக்காம சமாளிச்சிடணும்” எனத் தனக்குத்தானே அவள் பேசிக்கொண்டபோதே அந்த அறைக்குள் குந்தவை வந்தார்.
வந்தவர் அவளைத் தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து பார்த்தவர் “இப்பதான் நேத்ரன் வந்தான். உடனே ரூமுக்குள்ள வந்து நிக்குற. அந்தளவுக்கு என் மகன் உனக்குப் பிடிக்காதவன் ஆகிட்டானா?” எனச் சீற பின்னோடு வந்துவிட்டாள் கோபிகாவும்.
அவள் வெண்பாவைப் பார்த்த பார்வையில் கொஞ்சமாய்க் கடுப்பு மிச்சமிருந்தது. பின்னர் என்ன. வந்ததும் வராததுமாய் நேத்ரன் புவனாவிடம் வெண்பாவைப் பற்றி அல்லவா விசாரித்தான்!
“டீச்சரம்மாவாம் டீச்சரம்மா! நீளமான முடியைத் தவிர உருப்படியா இவகிட்ட எதுவும் இல்ல” என மனதுக்குள் கருவிக்கொண்டவள் குந்தவையின் பின்னே வந்துவிட்டாள்.
குந்தவை சலிப்போடு தலையாட்டிவிட்டு வெளியேற கோபிகா மட்டும் அங்கேயே நின்று வெண்பாவைப் பார்த்தாள். அவளது விழிகளில் ‘இப்படி ஒருவனை நிராகரிக்கிறாயே பைத்தியக்காரி’ என்ற செய்தி பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது.
“உங்கத்தை போயாச்சு. நீங்களும் போகலாமே!” என்று வாசலைக் காட்டினாள் அவளுக்கு.
“எனக்குப் போகத் தெரியும். நீ தூக்கியெறிஞ்ச ஆள் இப்ப எனக்குச் சொந்தமாகப் போறார். அதைப் புரிஞ்சு நடந்துப்பனு நம்புறேன். தேவையில்லாம அவர்கிட்ட உரிமை கொண்டாடாத.” என்று அமர்த்தலாய்ச் சொல்லிவிட்டு வெளியேறினாள் அவள்.
கோபிகா அங்கிருந்து சென்றதும் சொல்லவொண்ணா எரிச்சல் மண்டியது வெண்பாவின் மனதில். அவள் எப்படி நேத்ரனைச் சொந்தமாக்கிக் கொள்வதாகச் சொல்லலாமென அவளது மனம் சீறியது.
‘நீதானே அவனுக்கும் உனக்கும் ஆகாது எனச் சொன்னவள். இப்போது என்ன திடீர் உரிமையுணர்வு? சரியோ தவறோ சொன்ன வார்த்தையில் ஸ்திரமாக இரு வெண்பா’
மனசாட்சி சொன்ன அறிவுரையைக் காப்பாற்றியவள் மாலையில் நேத்ரன் அங்கிருந்து செல்லும்வரை அறையிலிருந்து வெளியே வரவில்லையே! ஆனால் பின்னர் மதுஸ்ரீ அவளைப் பிடித்துக்கொண்டாள்.
“என்கூட ஐஸ்பால் விளையாட வாங்கத்தை” என்று கையைப் பிடித்து இழுத்துப்போனாள் தன்னோடு.
அவள், துர்கா, மதுஸ்ரீ, புவனா நால்வரும் ஐஸ்பால் விளையாடியதில் சுவாரசியமாய் நேரம் கழிந்தது.
இப்போது வெண்பாவின் முறை கண்களை மூடிக்கொள்வதற்கு. வீட்டின் தூண்களில் ஒன்று முகத்தைச் சாய்த்துக் கண்களைக் கைகளால் பொத்தியவள் பத்திலிருந்து நூறு வரை எண்ணத் தொடங்கினாள்.
“எண்பது, தொண்ணூறு, நூறு. நான் வரப்போறேன்” என்று ராகம் போலச் சொல்லிவிட்டு ஒவ்வொருவராகத் தேடிச் சென்றாள்.
பூனை போல சோஃபாவின் பின்னே பதுங்கிக் கிடந்த துர்காவைப் பார்த்ததும் “ஐஸ்பால்” என்று கத்திவிட்டு ஓடிப்போய்த் தூணைத் தொட்டவள் “இன்னும் ரெண்டு பேரை இப்பிடிங்குறதுக்குள்ள நான் கண்டுபிடிக்குறேன்” என்று சூளுரைத்த கையோடு திரைச்சீலையின் பின்னே ஒளிந்து நின்ற புவனாவைக் கண்டுபிடித்துவிட்டாள்.
அங்கே அவர்கள் விளையாடியதைச் சொந்தக்காரப் பெண்களொடு அமர்ந்திருந்த அங்கயற்கண்ணி புன்னகையோடு கவனிக்க “க்கும்! பள்ளிக்கூடத்துல சின்னப்பிள்ளைங்ககூட இருந்து தானும் சின்னப்பிள்ளைனு மனசுல நினைப்பு. அதான் வாய்த்துடுக்கா என்னென்னவோ பேச வைக்குது” என்று அங்கலாய்த்தார் குந்தவை.
“வயசுக்கேத்த மாதிரி மெச்சூர்டா நடந்துக்காம சைல்டிஷா நடந்துக்கிட்டாதான் எல்லாரோட கவனத்தையும் கவரமுடியும்னு சிலர் நினைக்குறாங்கத்தை. எல்லாம் சினிமா படுத்துற பாடு. அங்ககூட லூசுப்பொண்ணு ஹீரோயின்தானே டாமினேட் பண்ணுறாங்க” இது கோபிகா.
அதையெல்லாம் வெண்பா கண்டுகொண்டால்தானே? மதுஸ்ரீ தரைத்தளத்தில் எங்குமில்லை என்றதும் மேல்தளத்தில் அவளைத் தேடிச் சென்றாள்.
மாடி வராண்டாவிலிருந்து முதல் அறைக்குள் மெதுவாக நுழைந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தபடி தேடினாள் மதுஸ்ரீயை.
“டி மது! நீ இங்கதான் ஒளிஞ்சிருக்கனு எனக்குத் தெரியும். அவுட் ஆகிட்ட. வெளிய வா!”
அந்தப் பெரிய அறைக்குள் கண்களை ஓட்டியபடி சொன்ன வெண்பா தனது முதுகுக்குப் பின்னே கதவு மூடப்படும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிகொண்டு கதவின் முழு உயரத்துக்குமாய் ஒரு காலை மடித்து இன்னொரு காலை அழுத்தமாய்த் தரையில் ஊன்றி நின்றிருந்தான் நேத்ரன். பார்வையோ வலை விரித்து அவளை அதற்குள் வாரியிழுக்க முயல்வதாய்!
“நீ… நீங்களா?” என அவள் அதிர
“என் ரூம்ல நான் இருக்காம வேற யார் இருப்பாங்கனு நினைச்ச டீச்சரம்மா?” என்றான் அவன் கண்களில் ஒளிர்ந்த குறும்போடு
வெண்பாவுக்குத் தலை சுற்றாத குறை!
‘இவனது கண்களில் படவே கூடாதெனப் பிரயத்தனப்பட்டு நான் செய்த முயற்சிகள் யாவும் இந்தச் சிறுபிள்ளையோடு விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டத்தால் வீணாய்ப் போனதே! இது இவனது அறை எனத் தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன்’
மனதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமிக்கொண்டாள்.
“நாங்க ஐஸ்பால் விளையாடிட்டிருந்தோம். மது இங்க ஒளிஞ்சிருக்கலாமோனு நினைச்சு வந்தேன்” என்றாள் மெதுவாய்.
மனதுக்குள் சின்னதாய் படபடப்பு! அந்த வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் அறையில் அவள் தனியாய் நேத்ரனுடன் இருப்பது மட்டும் கீழ்தளத்தில் உறவுக்காரக் கூட்டத்தோடு இருக்கும் ஒருத்திக்குத் தெரியவந்தால் வெண்பாவின் கதி அதோகதியாகிவிடும்.
“நீங்க வழி விட்டா நான் போயிடுவேன்”
அவள் அப்படிச் சொன்ன பிற்பாடுதான் இன்னும் வாகாகக் கதவில் சாய்ந்துகொண்டான் நேத்ரன்.
“டீச்சரம்மாக்கு எப்பவும் சின்னப் பசங்ககூட கேம் விளையாடத்தான் பிடிக்குமோ? வயசுக்கேத்த மாதிரி பெரியவங்க கேம் ஒண்ணு விளையாடலாமா?”
வேண்டுமென்றே விஷமத்தோடு அவன் வினவ வெண்பாவின் கண்களில் பதற்றமும் பயமும் ஒருங்கே குடியேறின. மெதுவாய்ப் பூத்த வியர்வைப்பூக்களை அவனறியாவண்ணம் துடைத்துக்கொண்டாள்.
நேத்ரன் விஷமப் பார்வையோடு தலையைக் குனிந்தவன் “உதட்டுல காயம் ஆறிடுச்சு போலயே.” என்று சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
தலையை மறுப்பாய் ஆட்டி “நோ நேத்ரன்! கீழ… கீழ ஆளுங்க இருக்காங்க” என்று ஆட்காட்டிவிரலை எச்சரிக்கையாய் நீட்டவும் ஒரு கையை நீட்டி அவளது கைவிரலைப் பற்றிக்கொண்டான் அவன்.
வெண்பா மலங்க மலங்க விழிக்கவும் சுவாரசியம் கூடிப்போனது அவனது விழிகளில். அவளது கையை விடுவித்தான் பற்றிய வேகத்தில். உடனே அவளிடம் பெருமூச்சின் பிரவாகம்!
அதைக் கவனித்தவன் பொய்யாய் ஆச்சரியம் காட்டி இரு கரங்களையும் விரித்து “நான் ஒண்ணுமே செய்யலையே இன்னும். அதுக்குள்ள நீ வார்ன் பண்ணுற. இது தப்பில்ல?” என்றபடி அவளை நெருங்க வெண்பா வேகமாய்ப் பின்னடைந்தாள்.
அவளது பின்னடைவு அவனுக்கு உற்சாகமூட்டியது. சில நேரங்களில் நேசிப்பவளைச் சீண்டி விளையாடுவதும் சுவாரசியம்தானே! இருவரும் எலியும் பூனையுமாய் மாறிப்போன விளையாட்டு நேத்ரனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“இங்க வந்து நிக்குற வரைக்கும் என் மனசுல எந்த எண்ணமும் இல்ல. இப்ப நீ வார்னிங் குடுத்தது, பெருமூச்சு விடுறது, இதோ இப்பிடி முட்டைக்கண்ணை உருட்டி முழிக்கிறதெல்லாம் இங்க என்னமோ பண்ணுதே டீச்சரம்மா” என்று தனது இடப்பக்க மார்பில் கையால் குத்தியபடி அவளை நெருங்கினான் அவன்.
குத்துமதிப்பாய் என்னைப்
பார்த்தவளும் நீதானே!
குப்பைக்கூடை போல்
நெஞ்சைக் கலைச்சவ நீதானே!
மேலும் மேலும் அழகாய்
மாறிப் போனேன் நானே!
தன்னைக் காட்டி ராகமாய்ப் பாடியபடி கைகளால் தனக்கும் சுவருக்கும் இடையே ஒரு இடத்தை வெண்பாவுக்காக உருவாக்கினான். உருவாக்கிய இடத்தைப் பெரும்பகுதி அவனே ஆக்கிரமிக்கவும் செய்தான்.

“ஐ செட் நோ” தனக்கும் அவனுக்குமான இடைவெளி சில மில்லிமீட்டர்கள் ஆனதும் பதறிப்போய்ச் சொன்னாள் வெண்பா.
“உன்னோட நோ எல்லாம் எனக்கு யெஸ்னு மட்டும்தான் காதுல விழும்”
அதிகாரமாய்ப் பதிலளித்தவனை எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாமல் அவள் விழிக்கும்போதே நேத்ரன் அந்தச் சில மில்லி மீட்டர் இடைவெளியையும் துடைத்தெறிந்துவிட்டு நெருங்க இறுக்கமாய்க் கண்களை மூடிக்கொண்டாள் வெண்பா.
அடுத்த நொடி அவனது உதடுகள் அவளது நெற்றியில் முத்தமாய்ப் பதிந்தன. அனிச்சையாய் அவளது கரங்கள் உயர்ந்து நேத்ரனுடைய சட்டைக் காலரைப் பற்றிக்கொள்ள முத்தமிட்டவனின் இதழ்கள் முறுவலில் வளைந்தன.
அந்தப் பற்றுதலின் இறுக்கமும், அவளது உடலின் நடுக்கமும் நேத்ரனிடம் அவள் இழக்க விரும்பாத உரிமையைப் பறைசாற்றினாலும் குழப்பமான மனநிலையில் அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.
கண்ணீரைத் துடைக்க அவனது கரம் உயர்ந்தபோது சுதாரித்தவள் இதற்கு மேலும் பலவீனத்தைக் காட்டக் கூடாதெனத் தீர்மானித்தவளாய் நேத்ரனின் மார்பில் கை வைத்துத் தள்ளி நிறுத்தினாள்.
“போதும் நேத்ரன். நமக்குள்ள இது எதுவும் சரியில்ல. உங்கம்மா உங்களுக்குனு வேற ஒரு பொண்ணை…”
பேசிக்கொண்டே போனவள் அவனது பார்வையின் தீவிரம் தனது உதடுகளில் குவியவும் கப்சிப்பாகிப்போனாள்.
“எதை நீ தப்புனு மீன் பண்ணுறியோ அதை நான் கட்டாயமாச் செய்வேன் டீச்சரம்மா.” அழுத்தமாய்ச் சொன்னான் நேத்ரன்.
அவளது விழிகளில் சடுதியில் பாய்ந்தோடியது கழிவிரக்கமொன்று. இன்னும் சிறிது நேரம் நின்றால் நிச்சயம் இவன் தன்னைப் பலவீனமாக்கிவிடுவான் என்பது புரிந்தது. அவளது மனதிலுள்ள எண்ணங்களை முகமாற்றத்தாலேயே படித்துவிட்டவன் அடுத்த அடி எடுத்து வைக்காதவண்ணம் சுவரோடு சேர்த்து அவளை மீண்டும் தனது கரவளையத்துக்குள் கொண்டுவந்தான்.
“நம்ம ரிலேஷன்ஷிப்பை இவ்ளோ தூரம் நகர்த்தத் தெரிஞ்ச எனக்கு அம்மாவோட பிடிவாதத்தை மாத்தத் தெரியாதா என்ன? இது என் லைஃப். இதுக்குள்ள யாரை அனுமதிக்கணும்ங்கிற முடிவை நான் மட்டும்தான் எடுக்க முடியும். என் அம்மாவோ நீயோ இல்ல. இன்னொரு தடவை இன்னொரு பொண்ணு அது இதுனு நீ பேசுனா ஃப்ரெஷ்ஷா இருக்குற இந்த அழகான லிப்ஸ் மறுபடியும் காயப்படும். என்ன சொல்லுற?”
வெண்பா சீற்றத்தோடு அவனை முறைத்தாள்.
“என் பெர்மிஷன் இல்லாம நீங்க இப்பிடியெல்லாம் செய்யுறது…”
“பெர்மிஷன் மை ஃபூட்!” அலட்சியத்தோடு வெடித்தவனிடம் திமிராய் ஒரு புன்னகை.
“நீயும் நானும் இருக்குறது ரிலேஷன்ஷிப்ல. இது ஒண்ணும் கான்ட்ராக்ட் இல்ல, டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் அப்ளைடுனு புள்ளி வைக்குறதுக்கு. இதை நீ உன் மண்டையில நல்லா ஏத்திக்க.”
“முடியாதுனு சொன்னா…”
அவளது பார்வையில் சவால் தெரியவும் “உஃப்” என்றபடி அரணாய் இருந்த இரு கரங்களையும் விலக்கிக்கொண்டான் நேத்ரன்.
அவளை ஆழமாய்ப் பார்த்தவன் “பிடிவாதம்! ம்ம்ம்…” என்றபடி தனது மோவாயை வருடிக்கொண்டான். அவளை அங்கிருந்து போகுமாறு கையசைத்தான்.
நேத்ரனின் நெறிந்த புருவங்களும் இடுங்கிய தாடையும் வெண்பாவுக்கு அபாய அலாரமாய்த் தோன்றின. அவளது கால்கள் நகர மறுத்தன.
“உன்னைப் போகச் சொன்னேன்மா” திரும்பிப் பார்த்துச் சாந்தமாய் அவன் சொல்லவும் சரியெனத் தலையாட்டிவிட்டு அவனை விட்டு விலகி நடந்தாள்.
அவள் அறைக்கதவின் குமிழைத் தொட்டபோது நேத்ரனின் குரல் கேட்டது முதுகுக்குப் பின்னே!
“யூ ஆர் புஷ்ஷிங் மீ டு டூ திஸ் பேபி. என் மேல வருத்தப்படாத” என்று முன்னறிவிப்பு ஒன்றைக் கொடுத்தான் நேத்ரன்.
ஏன் இப்படிச் சொல்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. கதவுக்குமிழைத் திறந்து வெளியேறியவளுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. மறுநாள் துர்காவின் தாலி கோர்க்கும் நிகழ்வில் கலந்துகொண்ட செண்பகராமனிடம் நேத்ரன் தனியே போய்ப் பேசவும் மீண்டுமொரு அபாய அலாரம் அவளது செவிகளில்! அந்த அபாயம் என்னவென வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் புரிந்தும்போனது அவளுக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


