“நம்மளை சுத்தி இருக்குற மக்கள் ரொம்ப வினோதமானவங்க… உங்க கிட்ட ஜெயிக்கிறதுக்கான வழி இருக்குனு சொல்லிப் பாருங்க, உங்களைக் கவனிக்கமாட்டாங்க. உங்க கனவை அடையுறதுக்கான திறமை இருக்குனு சொல்லுங்க, அலட்சியப்படுத்துவாங்க. உங்க கனவுக்கான முதல் படியில ஏற முயற்சி பண்ணுங்க, அப்ப உங்களை மதிக்காம மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க, உங்க காலடியில வந்து விழுவாங்க… உங்களை மாதிரி ஒருத்தர் இல்லனு கோவில் கட்டி கும்பிடாத குறையா புகழ் பாடுவாங்க. இங்க இலக்கை ஜெயிக்குறவனுக்குத் தான் மரியாதை. தன்னோட இடத்தை தக்க வச்சுக்க ஜெயிக்கிறதுக்கான ரேஸ்ல முயற்சி பண்ணி ஓடுறானே அவனுக்கு இல்ல. Victory is more important than the survival in the race of winning”
-சாகர்
ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா…
குன்றுகளின் ராணியென அழைக்கப்படும் சிம்லாவின் அழகை ரிசார்ட்டின் மாடியில் நின்று சிறு மண்குடுவையில் நிரம்பியிருந்த தந்தூரி சாய் குடித்தவாறு ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஆறடிக்கும் அதிகமான உயரம், திடகாத்திரமான தேகத்தைக் கவ்வி வலிய புஜங்களில் சுருக்குகளாய் ஏறியிறங்கிய கறுமைவண்ண டெனிம் சட்டை, காற்றின் அடக்குமுறையால் அலையாய் புரண்டு கொண்டிருந்த கேசம், கன்னத்தில் ஆரம்பித்து தாடையில் ஓடி மோவாயில் மீசையோடு கூடி களிக்கும் ஸ்டபிள் பியர்டின் (stubble beard) ஆக்கிரமிப்பு, ரோமக்கூட்டத்தின் மத்தியில் சிவந்த உதடுகள், நீண்ட கால்களோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த கறுப்பு ஜீன்ஸ் – இப்படி அவனது தோற்றத்தை வர்ணிக்கும் போது உண்டாகும் ஆர்வம் ஏனோ அவனது வதனத்தைப் பார்த்ததும் ஜகா வாங்கிவிடும்.
இறுக்கமான வதனம் என்று ஒதுங்கவும் முடியாது. அசடு வழியும் முகம் என அலட்சியப்படுத்தவும் முடியாது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சிலரைப் பார்த்தாலே இவர்களிடம் அவ்வளவு எளிதில் பழகிவிடமுடியாதென தோன்றும். கண்ணுக்குப் புலப்படாத ஒரு வட்டத்தை அவர்கள் தங்களைச் சுற்றி போட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவன் அவன்.
அவன் கிருஷ்ணராஜசாகர். பார்க்கும் போது பின்னிருபதில் ஒன்றை வயதாக உடையவன் என தோன்றினாலும் இந்தாண்டின் இறுதியில் முப்பத்திரண்டை தொடப் போகிறான்.
அவன் இப்போது சிம்லாவுக்கு வந்திருப்பது ‘இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்’ கூட்டத்தில் வளரும் தொழில்முனைவன் என்ற வகையில் தனது ஐந்தாண்டு கால தொழிலனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக.
ஆம்! அவனுடைய இருபத்தேழாம் வயதில் கடும் போட்டிகளுக்கிடையே ஆரம்பித்த ‘ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டட்’ இன்று இந்தியாவின் அழகுசாதனப்பொருட்கள் மற்றும் சருமப்பாதுகாப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.
2020ஆம் ஆண்டில் போர்ப்ஸ் வெளியிட்ட ஆசியாவில் முப்பது வயதுக்குட்பட்ட தலைசிறந்த தொழில்முனைவோர்கள் பட்டியலிலும், கடந்தாண்டு ஃபார்சூன் இந்தியா வெளியிட்ட நாப்பது வயதுக்குட்பட்ட தொழில்முனைவோர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தவன்.
ஐந்தாண்டுகளில் இத்தகைய வளர்ச்சி எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு ஒரு செய்தி – அவனது தந்தை ஆனந்த்சாகர் ‘சாகர் குழும நிறுமங்களின்’ சேர்மன். பரம்பரையாகத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவனுக்கு இந்த வளர்ச்சி சாத்தியமே!
இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் கூட்டத்திற்கு இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் அவனது பரபரப்பான வேலை சூழலை விட்டு சிம்லாவில் இருப்பதற்கு இன்னொரு காரணம் கிருஷ்ணராஜசாகரின் அன்னை நர்மதா.
சிம்லாவில் ஜக்கு மலைச்சிகரத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவிலைப் பற்றி இணையத்தில் கண்டறிந்தவருக்கு அங்கே சென்று அனுமனை வழிபடும் ஆவல் பிறந்ததால் மகனின் தொழில்முறை பயணத்தைச் சாக்காக வைத்து அவனோடு கிளம்பி வந்துவிட்டார்.
இறைவழிபாடு எல்லாம் வெளியே பெருமைக்குச் சொல்லிக்கொள்ளும் காரணம். மெய்யான காரணத்தை கிருஷ்ணராஜசாகர் அறிவான். அவரது வேண்டுதல் நிறைவேறப்போவதில்லை என்பதையும் அறிவான். தாயாரிடம் கூறி அவரது மனதை வருத்த விருப்பமற்று தன்னோடு அழைத்து வந்திருந்தான்.
குளிர்ந்த காற்றுக்கு தந்தூரி சாய் இதமாக இருந்தது. அதை இன்னொரு மிடறு அருந்தும் போது மொபைல் இசைத்தது.
அலட்சியமாய் பார்த்தவன் தொடுதிரையில் அவனுடைய இளைய சகோதரன் சந்தீப் சாகரின் பெயர் தெரியவும் கண்டுகொள்ளாமல் தூரத்தில் தெரிந்த ஜக்கு மலைச்சிகரத்தைப் பார்த்தான்.
ஆரஞ்சு வண்ணத்தில் ஆஞ்சநேயர் சிலையின் தலை மட்டும் மலையுச்சியைத் தாண்டி தெரிந்தது. சுமார் நூற்றியெட்டு அடி சிலை. உலகிலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலையும் இது தானாம்.
அதை பார்த்தபடி அழைப்பு துண்டிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் நின்றவனின் பின்னே ஒரு குரல் கேட்டது.
“கோவிலுக்குப் போறதுக்கு டாக்சி வரச் சொல்லிட்டேன் சார்”
அந்தக் குரலுக்குரிய ஆடவனான இப்ராஹிம் கிருஷ்ணராஜசாகரின் உதவியாளன். சொந்தக் கார் இருக்க டாக்சி ஏன் என்ற கேள்வி அவனுக்குள்ளும் வியாபித்திருந்தது. கிருஷ்ணராஜசாகருக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது. எனவே அவன் சொன்ன வேலையைச் செய்து முடித்தான்.
“தேங்க்ஸ் இப்ராஹிம்… அம்மா ரெடியாகிருப்பாங்க.. எங்க கூட வர்றதுல உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” என புன்முறுவலோடு வினவினான்.
“இதுல ஆட்சேபிக்கிறதுக்கு என்ன இருக்கு சார்? நான் சந்தோசமா வருவேன்… இந்த நாட்டோட அரசியல்வாதிங்களுக்குத் தான் மதச்சகிப்புத்தன்மை இல்ல… நம்மளை மாதிரி சிட்டிசன்ஸ் யாரும் மதவேறுபாடு பாக்கிறதில்லையே”
புத்திசாலி. வெகு தீவிரமான விசயத்தைக் கூட இலகுவாகக் கூறிவிடுவான். அவனது அறிவுரைகள் சிலவற்றை கடைப்பிடிப்பதால் தான் தொழில்வளர்ச்சி கொடுத்த தலைக்கனம் கிருஷ்ணராஜசாகரின் தலைக்கு ஏறவில்லை என்பார் ஆனந்த்சாகர்.
இப்ராஹிம் மட்டும் இல்லையெனில் கிருஷ்ணராஜசாகரின் நிலை ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனின்’ நிலையாகியிருக்கும் என்று நர்மதாவும் கூறுவதுண்டு.
டீபாயில் கிடந்த மொபைலை இப்ராஹிம் அவனிடம் நீட்டினான்.
“சந்தீப் சார் கால் பண்ணிருக்கார்”
“தெரியும் இப்ராஹிம்… அவன் கிட்ட பேச எனக்கு எதுவுமில்ல… எதுக்காக யூ.எஸ் போனானோ அதை மட்டும் செஞ்சுட்டுத் திரும்ப சொல்லு”
இப்ராஹிமின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.
காற்று வாங்கியது போதுமென மாடியிலிருந்து இறங்கியவன் அன்னை தங்கியிருந்த அறைக்குச் சென்ற போது நர்மதா ஆனந்திடம் பேசிக்கொண்டிருந்தார்.
“சந்தீப் பேசுனது ரொம்ப அதிகம் தானே ஆனந்த்… கிரிஷ் பத்தி தெரிஞ்சும் நிஹாரிகா பேச்சைக் கேட்டு அவனைத் துச்சமா பேசிருக்கக்கூடாது”
மறுமுனையில் ஆனந்த்சாகர் ஏதோ கூறவும் நர்மதாவின் முகம் வாடியது.

“அதுக்குத் தான் கொடுப்பினை இல்லாம போயிடுச்சே… கிரிஷும் பெருசா அதை பத்தி யோசிக்கல… என் நம்பிக்கை முழுக்க நயனி மேல தான் இருக்கு… அவ அமெரிக்கால பாத்துட்டிருக்குற வேலைய உதறிட்டு இங்க வந்தா நிலமை மாறும்னு தோணுது”
கிருஷ்ணராஜசாகர் கர்வமாகச் சிரித்துக்கொண்டான். யார் வந்தாலும் எந்நிலையும் மாறாது. எனக்கு என்ன குறை?
எனக்காக நானே உருவாக்கிய வணிக சாம்ராஜ்ஜியத்தில் நான் முடிசூடா மன்னன். வணிகவுலகில் நான் சாதிக்க வேண்டிய சாதனைகளுக்கு இப்போது வரை முட்டுக்கட்டையாக எந்த செண்டிமெண்டும் இல்லை என்பதே எனக்குப் பெரிய வரம் தான். இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?
கணவரிடம் பேசிவிட்டுத் திரும்பிய நர்மதா மூத்த மைந்தனைக் கண்டதும் முகம் வாடினார்.
“என்னாச்சு நர்முக்கு?” என்றபடி அன்னையின் தோளை அணைத்தான் கிருஷ்ணராஜசாகர்.

“சொன்னா மட்டும் என் கவலை தீரவா போகுது? எல்லாம் உன்னைப் பத்தின கவலை தான்”
“எனக்கு என்ன குறை? நல்ல பேரண்ட்ஸ், நல்ல பிசினஸ், இருபத்து நாலு மணிநேரமும் பிசியா ஆக்டிவா சந்தோசமா தானே இருக்கேன்… என்னமோ நான் வாழ்க்கைய வெறுத்து டிப்ரசன்ல இருக்குற மாதிரியே பேசுறிங்க?”
நர்மதா எப்படி அவனுக்குப் புரியவைப்பார்? இதெல்லாம் ஒரு மனிதனுக்கு தற்காலிகமான சந்தோசம் தான் என இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பவனுக்காக அவரால் கடவுளிடம் வேண்டிக்கொள்ள மட்டும் தானே முடியும்.
அதையாவது செய்வோம் என எழுந்தவரின் மனதிலுள்ள நீண்டநாள் கோரிக்கையை அவரது மகன் பெரிதாக கருதவில்லை என்றாலும் தரிசிக்கப் போகும் ஆஞ்சநேயர் பெரிதாக நினைத்து நடத்திவைப்பார் என்ற நம்பிக்கை!
அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து ஜக்கு மலை சிகரம் ஒரு கிலோமீட்டர் தூரம் தான். கார் மூலம் மலைச்சிகரத்தின் சாலைகளில் பயணித்து கோவிலின் முன்னே இறங்கினால் இருநூறு படிக்கட்டுகளில் நடந்து கோவிலை அடைய வேண்டும்.
இப்ராஹிம் தேநீரோடு காலையுணவை முடித்துக்கொண்டு ரிசார்ட்டின் வாயிலுக்கு வர கிருஷ்ணராஜசாகரும் நர்மதாவும் வந்து சேர்ந்தனர்.
டாக்சியும் சொன்ன நேரத்தில் தயாராய் நிற்க மூவரும் அதில் ஏறி அமர்ந்தனர்.
டாக்சி அங்கிருந்து வெளியேறி மலைப்பாதையில் வேகமெடுத்தது. சில்லென்ற காற்று அங்கே ஓங்கியுயர்ந்து வளர்ந்திருந்த பைன் மரங்களின் கிளைகளைத் தீண்டிச் சென்றதை அவற்றின் குச்சிகுச்சியான இலைகளும் உருண்டை வடிவ பழங்களும் அசைவதில் இருந்து கண்டுகொள்ளலாம்.
கார் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் மலைச்சரிவில் கபே ஒன்று தெரிந்தது.
‘தி உட்பெக்கர் கபே’
ஹனுமன் தரிசனம் முடிந்த பின்னர் சாப்பிட்டுக் கொள்வதாக நர்மதா கூறியிருந்தார். அவனுமே தந்தூரி சாய் குடித்ததோடு சரி.
கோவிலுக்குச் சென்று திரும்பும் போது கபேயில் எளிமையாக காலையுணவை முடித்துக்கொள்ளலாம் என கிருஷ்ணராஜசாகர் மனதிற்குள் திட்டமிட்டான்.
கார் கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து நெளிந்து ஜக்கு அனுமன் கோவில் வாயிலை அடைந்த போது அங்கே ஓரளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பைன் மரங்களின் தயவால் தரையில் வெயில் பிடிக்கவில்லை.
காவி வண்ணப்பூச்சோடு துவாரபாலகர்கள் இருவர் மற்றும் சிங்கம் யானை சிலைகளோடு நின்ற அலங்கார வளைவு ஒன்று படிக்கட்டுகளில் ஏறி நடந்தே கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு நிழலாக நீண்டு சென்றது.
சேலை கட்டினால் படிகளில் ஏறுவதற்கு சிரமம் என்பதால் நர்மதா கொஞ்சம் பெரிய டாப்பும் பளாசோவும் அணிந்திருந்தார்.
காரிலிருந்து இறங்கியதும் அங்கே ரோப்கார்களுக்கான டிக்கெட்கள் வினியோகிக்கப்படுவதை அறிந்து அதில் செல்வோமா என கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“வேண்டாம் கிரிஷ்… நான் நடந்து போய் என் வேண்டுதலை ஹனுமன் கிட்ட வைக்கப்போறேன்… அவரோட அருளால இனியாச்சும் என் பசங்க வாழ்க்கையில நல்லது நடக்கணும்” என மறுத்தார் நர்மதா.
“உஃப்… உங்களை என்ன சொல்லுறதுனே தெரியல… வாங்க நடப்போம்”
மூவரும் இருநூறு படிகளையும் ஏறி களைப்பாய் நிமிர்ந்த போது ஆரஞ்சு வண்ணப்பூச்சோடு ஜக்கு ஹனுமன் ஆலயம் கம்பீரமாக நின்றது.
அவர்கள் நின்ற இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் பைன் மரங்களையும் தாண்டி நூற்றியெட்டு அடி உயரத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் கம்பீரமாக கதாயுதத்துடன் நின்றுகொண்டிருந்தார் அஞ்சனைபுத்திரன் ஹனுமன்.
பார்க்கும் போதே நர்மதாவுக்குப் புல்லரித்தது. வி.ஐ.பி என்ற போர்வையில் சொகுசு காரில் இங்கே வந்திறங்கி சிறப்பு தரிசனம் செய்திருந்தால் இந்தப் புல்லரிப்புக்கு இடமேது? அன்னையின் மனமறிந்த மைந்தனாகவே டாக்சியில் அவரை அழைத்து வந்திருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
ரோப்காரில் மேலே சென்றுவிடலாமென்ற எண்ணம் மட்டும் நிறைவேறவில்லை. அப்படி என்ன தான் வேண்டுதலோ என சலித்துக்கொண்டவன் அன்னையைத் தொடர்ந்து கோவிலை நோக்கி சென்றான்.
பரந்த வளாகத்தின் நடுவே ஆரஞ்சு வண்ணத்தில் அங்குள்ள கட்டிடக்கலை பாணியில் கோவில் மணியுடன் வரவேற்றது.
சுற்றியிருந்த இடங்களில் சிறிய சிறிய கட்டிடங்கள் ராமாயணத்தின் காட்சிகளைக் கொண்ட ஓவியங்களுடன் நின்றிருந்தன. கோவிலை நோக்கி நீண்ட பாதையின் இரு புறத்திலும் தடுப்புச்செயினோடு புல்வெளி தரை பசுமையாக விரிந்து கிடந்தது.
ராமாயணத்தில் சீதைக்காக நடந்த போரில் இலக்ஷ்மணன் காயமுற்ற போது அவருக்காக சஞ்சீவி மூலிகையைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த அனுமனை யாகு முனியவர் ஜக்குமலையில் தங்கும்படி பணித்தாராம். மூலிகை பறித்துவிட்டு திரும்பும் போது அங்கே வருவதாக வாக்களித்த அனுமன் நேரமின்மையால் அங்கே தங்காமல் சென்றுவிட ஜக்குமலையில் அனுமனின் திருவுருவத்தை உருவாக்கி கோவிலைக் கட்டினாராம் யாகு முனிவர்.
“மந்திர் மே பஹூத் பந்தர் ஹே” என்ற கார் ஓட்டுனரின் எச்சரிக்கையை அங்கே கூடியிருந்த குரங்குக்கூட்டத்தைக் கண்டதும் புரிந்துகொண்டனர் இப்ராஹிமும் கிருஷ்ணராஜசாகரும்.
நல்லவேளையாக கைகளில் தண்ணீர் பாட்டிலோ வேறெந்த பொருளோ கொண்டு வரவில்லை என நர்மதா நிம்மதியுற்றார்.
கோவிலின் வாயிலில் தொங்கிய மணியை அடித்துவிட்டு கர்ப்பகிரகத்தில் யாகு முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட அனுமனை வணங்கினர் மூவரும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஹனுமன் சாலிசா பாடியபடி கூட்டம் உள்ளே வர நெரிச்சல் அதிகமானது.
நர்மதா மனமுருகி ஆஞ்சநேயரிடம் வேண்ட ஆரம்பித்தார்.
“என் மூனு பசங்களும் தொழில்ல கொடி கட்டிப் பறக்குறாங்க… பணத்துக்கும் வசதிக்கும் பஞ்சமில்ல… ஆனா அவங்களோட சொந்த வாழ்க்கைய பத்தி யோசிக்க மாட்டேங்கிறாங்க… பணமும் காசும் தர்ற நிம்மதிய விட குடும்பம் குடுக்குற நிம்மதி எவ்ளோ மதிப்பானதுனு அவங்களுக்குப் புரிய வை… நாலு வருசத்துக்கு முன்னாடி என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம்… அதுக்கான தண்டனைய எனக்குக் குடுத்துடு… என் பசங்க சந்தோசமா இருக்கணும்… அவங்க பிள்ளைங்களை என் கையில வாங்கி கொஞ்சணும்… இதை தவிர வேற எதுவும் எனக்கு வேண்டாம் ஆஞ்சநேயா”
அவர் வேண்டுதல் வைத்துவிட்டு கண் திறந்ததும் அவரது கவனத்தில் விழுந்தது கிருஷ்ணராஜசாகரின் வியப்பு நிரம்பிய வதனம். அதில் சந்தோசம் துக்கம் வெறுப்பு என வேறெந்த உணர்வுகளின் கலப்படமும் இல்லை. வெறும் வியப்பு மட்டுமே!
அவன் எதை அப்படி வியந்து பார்க்கிறான் என சாய்ந்து நோக்கியவர் அங்கே நின்று கொண்டிருந்தவள் யாரென அடையாளம் தெரிந்ததும் பரிபூரண அதிர்ச்சிக்குள்ளானார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

