காணும் யாவற்றிலும் உன் பிம்பம்!
வீசும் காற்றுதனில் உன் ஸ்பரிசம்!
விழி மூடும் தருணத்தில் உன் நினைவு!
என்ன மாயம் தான் செய்தாயோ என்னவனே!
ஏ.ஆர்.திருமண மஹால்…
கதிரவனின் பொற்கதிர்களால் குளித்த மாலைவேளை மங்கி, இப்போது மெல்லிய கருநிற வண்ணம் பூசிய வானத்தின் அழகோடு அலங்கார விளக்குகளும் சேர்ந்துகொண்டு அந்த மண்டபத்தைச் சொர்க்கலோகமாய் மாற்றிக்காட்டிக் கொண்டிருந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இரு பெரும் நகை மாளிகை அதிபர்களின் புத்திரச் செல்வங்களின் நிச்சயதார்த்தம் அல்லவா! எங்கு நோக்கினும் செல்வ வளம் தெறிக்கும் தோற்றமும், விலையுயர்ந்த ஆடை அணிகலன்களுடனுமாய் விருந்தினர்கள் நிறைந்திருக்கத் திருமண மண்டபத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
தேவையே இல்லாமல் மணமகளின் அழைப்பு என்ற பெயரில் தனுஜாவின் வற்புறுத்தலால், சங்கவி மதுரவாணியை மதுசூதனனின் பாதுகாப்பில் விட்டவள், நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வீடு திரும்புமாறு அன்புக்கட்டளையிட்டுச் சென்றுவிட்டாள்.
அவளும் வேறு வழியின்றி சங்கவி கொடுத்த ஆடைகளையும் எளிய அணிகலன்களையும் மதுசூதனனின் இல்லத்துக்குச் சென்று மாற்றிக்கொண்டு, அவனுடனே திருமண மண்டபத்துக்கு வருகை தந்திருந்தாள். செல்லும் முன்னர் மைதிலி நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்து அனுப்பி வைத்ததில் அன்னையின் நினைவு வந்துவிட, அதே யோசனையுடன் காரில் ஏறியவள் மண்டபத்திலும் அந்த மனநிலையுடனே அமர்ந்திருந்தாள்.
மதுசூதனன் ஓரிரு முறை வந்து அவளிடம் வளவளத்துவிட்டுச் சென்றதில் கொஞ்சம் இயல்புக்குத் திரும்பி நிச்சய நிகழ்வைக் கவனிக்க ஆரம்பித்தாள். தனுஜாவின் அப்பா சங்கரநாராயணன், அவரது நண்பரும் சம்பந்தியுமான ஸ்ரீவத்சனுடன் வாயெல்லாம் பல்லாகக் காட்சியளித்தவர், பட்டாடை பூண்டு வைரத்தால் இழைத்தச் சிலை போல தனுஜா வரவும் பெருமிதமாக மகளைப் பார்த்தார்.
ஒருவழியாக மகளுக்கு அவரது அந்தஸ்தில் உள்ள தகுதியான ஒருவனுடன் மணமாகப் போகும் சந்தோஷம் அவரது உடலின் ஒவ்வொரு ஜீனிலும் கர்வத்தைப் புகுத்த, திருமண ஏற்பாட்டை எடுத்திருந்த மதுசூதனனையும் அவனது நண்பர்கள் மற்றும் ஊழியர்களையும் அலட்சியத்துடன் ஒருமுறை பார்த்துவிட்டு நிச்சயத்தில் கவனமானார். ஸ்ரீவத்சன் மனைவியுடன் அமர்ந்திருக்க, சங்கரநாராயணனும் செல்வநாயகியும் புன்னகை முகத்தினராய் மகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
மதுரவாணி இந்நிகழ்வுகளை யாருக்கோ வந்த விருந்து என வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அவளருகே வந்து அமர்ந்தான் மதுசூதனன். இப்போதும் அவன் முகத்தில் வருத்தத்துக்கான அறிகுறியே இல்லை. அதுதான் மதுரவாணியைத் திகைக்க வைத்தது. இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்ற ஆச்சரியம் அவளுக்கு. கூடவே சற்று முன்னர் யாரிடமோ போனில் பேசிவிட்டு வந்தவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.
அதைக் கண்டுகொள்ளாது, “உன் எக்ஸ் லவ்வர் சரியான சைக்கோ… உனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சும் இப்பிடி உன்னையே அவ கல்யாணத்துக்கு வேலை செய்ய வைக்கிறாளே! அவளைச் சொல்லி ஒரு தப்பும் இல்ல… நீ ஏன் இந்த டீலை ஒத்துக்கிட்ட? முடியாதுனு சொல்லிருக்கலாம்ல” என்று ஆற்றாமையுடன் கேட்டவளுக்கு முறுவலித்தபடியே,
“ஏன் முடியாதுனு சொல்லணும்? இதால நம்ம கன்சர்ன் நேம் எலைட் கிளாஸ் பீப்பிள் மத்தியில பிரபலமாகும் வாணி… எனக்கு அதுதான் முக்கியம்… ஐ அம் நாட் அ செண்டிமெண்ட் இடியட்… பட் உனக்கு இவ்வளோ வருத்தமா இருக்கிறதால ஒன்னு வேணும்னா செய்யலாம்… நம்ம மேரேஜோட முதல் இன்விடேஷனை தனுஜாவுக்குக் குடுப்போம்… அதுவும் ஜோடியா போய் குடுப்போம்… டீல் ஓகேவா?” என்று கேட்க, அவன் எண்ணியது போலவே மதுரவாணி அமைதியாகிவிட்டாள்.
லக்ன பத்திரிகை வாசித்து முடிக்கும் தருவாயில் மண்டபத்துக்குள் சளசளப்பு கேட்க, அவள் திரும்பிப் பார்க்கையில் அங்கே காவல்துறை அதிகாரிகள் வரவே மதுரவாணி தன்னிச்சையாகத் தலையைக் குனிந்து கொண்டாள். உள்ளுக்குள் திக்திக்கென்று இருக்க, அவர்களின் ஷூ கால்கள் நகரும் திக்கையே அவளது விழிகள் வெறித்துப் பார்த்தது. அவர்கள் அவள் இருக்கும் வரிசையைத் தாண்டிச் சென்ற பிறகு தலையுயர்த்தியவள், அவர்கள் வேறு யாரையோ தேடி வந்துள்ளதை உணர்ந்து நிம்மதியுற்றாள்.
அவர்கள் ஸ்ரீவத்சனிடம் சென்று தாங்கள் அஜய்யைக் கைது செய்ய வந்திருப்பதாகச் சொல்ல, அவரது முகம் கோபத்தில் சிவந்தது. அவர் அந்த அதிகாரிகளுடன் வாதம் செய்ய, அவர்களில் ஒருவர் போனை எடுத்தார்.
“சார் நாங்க எவ்வளோ கேட்டும் ஸ்ரீவத்சன் சார் அடம் பிடிக்கிறாரு… நீங்க வந்தாதான் அரெஸ்ட் பண்ண முடியும்னு நினைக்கிறேன்!”
“ஓகே சுதாகர்… அந்த ஹைகிளாஸ் கிரிமினலை அரெஸ்ட் பண்ண நானேதான் வரணும்னு அவனைப் பெத்தவரே ஆசைப்படுறப்போ நான் வராம இருக்க முடியுமா?” என்று சொல்லிவிட்டுப் போனை தனது சீருடையின் பாக்கெட்டில் வைத்தவன் வேறு யாருமல்ல, ஸ்ரீதரேதான்!
வழக்கமாகக் குற்றவாளியைக் கைது செய்ய இணை ஆணையர் வரவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸ்ரீவத்சனின் செல்வாக்கு பற்றி அறிந்திருந்ததால் ஆணையர் அவனையே அனுப்பி வைத்திருந்தார். வேறு வழியின்றி அவனும் மண்டபத்தினுள் அடியெடுத்து வைத்தான்.
அவன் உள்ளே வரவும் மதுரவாணியின் கண்கள் விரிய, அவனோ நேரே மேடையை நோக்கிச் சென்றான். மதுசூதனன் இவை அனைத்தையும் புருவச் சுழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தானேயன்றி, வேறு எதுவும் செய்ய அவன் தயாராய் இல்லை.
ஸ்ரீதர் அஜய்யைச் சுட்டிக்காட்டி, “அக்யூஸ்டை அரெஸ்ட் பண்ணுறத யாராவது தடுத்தீங்கனா, எங்க கடமையைச் செய்யவிடாம தடுத்தீங்கனு அவங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கும்… என்ன சுதாகர் வேடிக்கை பாக்குறீங்க? அரெஸ்ட் ஹிம்” என்று அழுத்தமாய் ஆணையிட, அஜய் திமிறி எழுந்து அங்கிருந்து தப்பிக்க முயல அவனது பிடி ஸ்ரீதரிடம் மாட்டிக்கொண்டது.
வெறுமனே அவன் பிடித்திருந்த விதத்திலேயே கரம் தனியாய் கழன்றுவிடும் போல வலிக்க முகம் சுளித்த அஜய், “என் லெவல் தெரியாம விளையாடுறீங்க டி.சி.பி சார்?” என்று அந்நேரத்திலும் திமிராய் மிரட்ட, ஸ்ரீதர் சுதாகருக்குக் கண் காட்டினான்.
கூடவே, “என்னடா உன்னோட லெவல்? லவ் பண்ணுன பொண்ணைக் கைவிட்ட அயோக்கியன், அவளை பிளான் பண்ணி மர்டர் பண்ணுன ஹை கிளாஸ் கிரிமினல் தானே! அக்யூஸ்டுக்கு இவ்வளோ மரியாதை அதிகம்” என்று உறுமியபடி சினந்த பார்வையுடன் அவன் நோக்கவும், அஜய் முகம் வெளிற வாயடைத்து நின்றான்.
சுதாகர் அவனது கையில் விலங்கை மாட்டவும், ஸ்ரீவத்சன் கோபாவேசத்துடன் ஸ்ரீதரை நெருங்கியவர், “என் பையனை என்னால ஜாமீன்ல எடுக்க முடியும் டி.சி.பி சார்… அவனை நீங்க தரக்குறைவா நடத்துனதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்” என்று கர்ஜிக்க,
“ஜாமீனா? அதுக்குலாம் வாய்ப்பே இல்ல மிஸ்டர் ஸ்ரீவத்சன்… உங்க மகனுக்கு எதிரா ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் இருக்கு… இவனுக்கு எவ்வளோ தைரியம் இருந்தா என்னையே கொல்லுறதுக்கு ஆள் செட் பண்ணி அனுப்புவான்? இப்பிடி ஒரு கிரிமினலை பிள்ளையா பெத்துட்டு உங்களுக்கு இவ்வளோ பேச்சு ஆகாது… எதுவா இருந்தாலும் இவனை நாங்க கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுவோம்… அப்போ பாத்துக்கோங்க… எழுதி வச்சுக்கோங்க, உங்க மகனுக்கு ஜாமீன் இந்த ஜென்மத்துல கிடைக்காது… ஏன்னா அவன் என்னைச் சீண்டியிருக்கான்” என்று பதிலுக்கு அழுத்தம் திருத்தமாய்ப் பதிலளித்தவன் அஜய்யைக் கைது செய்து இழுத்துச் சென்றான்.
செல்லும் போதே சிலையாய் சமைந்து நின்ற மதுரவாணியையும், அவளருகில் தன்னைப் பார்த்துக் குறுநகை புரிந்த மதுசூதனனையும் பார்த்தவன், அவளைக் கண்ணால் சுட்டிக்காட்ட, மதுசூதனனோ அவளுக்கு வேறு வேலை இல்லை என்றான் சைகை மொழியில். பின்னர் கையசைத்து விடைபெற்றவன் அஜய்யைக் கைவிலங்கோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
மொத்த திருமண மண்டபமும் இக்காட்சியை வேடிக்கை பார்க்க, மேடையில் அலங்காரபூஷிதையாய் நின்று கொண்டிருந்த தனுஜாவின் முகம் பேயறைந்தாற்போல மாறிவிட்டிருந்தது. அவளது தந்தையோ வாழ்க்கையில் இப்படி ஒரு தலைகுனிவைச் சந்தித்துப் பழக்கம் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நிற்க, தாயார் வாயைப் பொத்திக்கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டார்.
தனுஜாவின் விழிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்த மதுரவாணியிடமும் மதுசூதனனிடமும் படிந்து மீள, இவர்கள் முன்னிலையில் அவமானப்பட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் கண்ணீர் கரைபுரண்டு வர, அங்கிருந்து மணப்பெண் அறையை நோக்கி ஓடினாள் அவள். அவள் பின்னே இத்தனை நாட்கள் அவளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த தோழியர் யாரும் ஓடவில்லை. ஏனெனில் அஜய்க்கும் தனுஜாவுக்கும் திருமணம் பேசியிருந்த சூழலில், அஜய் செய்த குற்றம் தனுஜாவுக்கும் தெரிந்திருக்கலாம்; இப்போது அவளுடன் சென்றால் எங்கே தாங்களும் அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுவோமோ என்ற பயம் அவர்களை நகரவிடாது தடுத்தது.
மதுரவாணிக்கோ இத்தனை அவமானம் தனுஜாவுக்கு நேரத் தான் காரணமாகிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு எழ, அவள் ஓடிய திக்கை நோக்கிச் செல்ல முற்பட்டவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் மதுசூதனன்.
“எங்க போற வாணி?”
“நீ பாத்தல்ல, அந்தப் பொண்ணு அழுறா மது… பாவமா இருக்கு.”
கையிலிருந்த குடையை அடுத்தவருக்குத் தாரை வார்த்துவிட்டு மழையில் நனைந்து சென்றவளின் இரக்கச் சுபாவத்தைக் கண்கூடாக அறிந்தவனாயிற்றே அவன்! ஆனால், அந்த மனிதர்களும் தனுஜாவும் ஒன்றல்ல என்பதை இவளுக்குப் புரியவைத்தாக வேண்டும்!
“நீ இரக்கப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கல… இதே அஜய்யைப் பத்தியும் அவளோட பிரண்ட்ஸ் பத்தியும் நான் எத்தனை தடவை வார்ன் பண்ணிருப்பேன் தெரியுமா? அப்போ அவ என் பேச்சை கேக்கவே இல்ல… இவ்வளோ ஏன் அவ என்கிட்ட மேரேஜ் ஆர்டர் குடுத்தது, உன்னை என்கேஜ்மென்ட்ல கலந்துக்கணும்னு கட்டாயப்படுத்துனது எல்லாமே நம்மளை எரிச்சல்படுத்திப் பாக்கத்தான் வாணி! விடு! அவளுக்கு அவளோட அப்பா அம்மா ஆறுதல் சொல்லுவாங்க.”
அவனது பேச்சைக் கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை! அவன் கையை உதறியவள் செல்ல முற்பட, “வாணி, அவளை விட முக்கியமான மனுஷங்க நம்ம லைஃப்ல இருக்காங்க… சொன்னா கேளு… அவளை கன்சோல் பண்ணுறேனு போய் அசிங்கப்படாத” என்று இறுகிய குரலில் எச்சரித்தவனைச் சட்டை செய்யாது, மதுரவாணி அங்கிருந்து நேரே மணமகள் அறையை நோக்கிச் சென்றாள்.
அங்கே தனுஜா மட்டும் அழுது கொண்டிருக்க, உள்ளே வந்தவள் தொண்டையைச் செறும, தனுஜா வேகமாக கண்ணீரும் கம்பலையுமாக எழுந்தவள், “நான் எவ்வளோ கஷ்டப்படுறேனு பாத்து ரசிக்க வந்தியா? பாரு! என் வாழ்க்கை இன்னைக்கு எல்லார் முன்னாடியும் கேலிக்கூத்தா மாறிடுச்சு… இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று அழுகையுடன் கேட்க,
“இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு உனக்கு நல்லாவே தெரியும்… ஆனா நீ கோவத்துல பேசுற… உனக்கு என்னால சொல்ல முடிஞ்ச ஒரே விஷயம் நானும் மதுவும் லவ் பண்ணல… அன்னைக்கு நடந்தது வெறும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்… உனக்கு அது தெரிஞ்சிருந்தும் ஏன் நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டனு எனக்குப் புரியல… நான் உன்னோட கஷ்டத்தை வேடிக்கை பாக்க வரல… நீ உன் கையில இருந்த வைரத்தை உன்னோட இன்செக்யூர் பீலிங்கால இழந்துட்ட… இனியாச்சும் புரிஞ்சு நடந்துக்கோனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்தாள்.
அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையெனத் தனுஜாவுக்கும் தெரியும். இனி என்ன செய்ய முடியும்? கண்ணீர் பெருக அவளது மூளை வேகமாக யோசித்தது. உடனே மதுரவாணியின் கரத்தைப் பற்றியவள், “ப்ளீஸ்! மதுவ நான் பாக்கணும்… அவனை இங்க கூட்டிட்டு வா… நான் பண்ணுன எதையும் மனசுல வச்சுக்காம எனக்காக அவனை ஒரே ஒரு தடவை கூட்டிட்டு வா” என்று அழ ஆரம்பிக்கவும் அவள் பதறிப்போனாள்.
“அழாத ப்ளீஸ்! நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன்” என்று கிளம்பியவளை அறை வாயிலில் வழிமறித்தார் தனுஜாவின் தந்தை. அவரைக் கண்டதும் தனுஜா விழிக்க, மதுரவாணி வழக்கமான அலட்சியத்துடன் வெளியேற முயல, அவளைத் தடுத்து நிறுத்தியது அவரது குரல்.
“கொஞ்சம் நில்லும்மா! அந்த மது இங்க வரக்கூடாது… அப்பிடி அவன் வந்தான்னா நான் பேச மாட்டேன்…” என்று மிரட்டியவரின் கையில் துப்பாக்கியைக் கண்டதும் தனுஜாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனால், மதுரவாணி இதற்கெல்லாம் அஞ்சுபவள் இல்லையே!
“பொம்மை துப்பாக்கி வச்சு மிரட்டுறத உங்க பொண்ணோட நிறுத்திக்கோங்க சார்… நான் சின்ன வயசுல இருந்து இத பாத்து வளர்ந்தவ தான்… இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்” என்றவளின் பதிலடியில் சற்று தயங்கியவர், துப்பாக்கியைத் தனது நெற்றிப்பொட்டில் வைத்தார்.
“அவனை ஏன் நான் கொல்லணும்? நானே செத்துப் போயிடுறேன்… என் அந்தஸ்துக்குக் குறைஞ்சவனை மருமகனா ஏத்துக்கிறதுக்குப் பதிலா நான் சந்தோஷமா செத்துப் போவேன்” என்று சொன்னவரின் பிடிவாதக் குரலில் மதுரவாணி சற்று தளர்ந்துதான் போனாள்.
“சார் இந்த மாதிரிலாம் பண்ணாதீங்க ப்ளீஸ்.”
“அப்போ அவனை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடு… இந்த நிச்சயதார்த்தம் நின்னதைச் சாக்கா வச்சுக்கிட்டு என் பொண்ணை மறுபடியும் அவன் வலைல விழ வைக்க ட்ரை பண்ணுனான்னா நான் நிஜமாவே செத்துப் போயிடுவேன்.”
சங்கரநாராயணனின் குரலில் இருந்த தீவிரம் மதுரவாணியைத் தயங்க வைத்தது. தனுஜாவின் கண்ணீரைக் கண்டு பாவப்பட்டு மதுசூதனனை அழைத்து வந்தால், இந்த மனிதர் சொன்னபடியே செய்துவிட்டால் என்ன செய்வது என்று புரியாதவளாய் வெளியேற எத்தனித்தவளை, தனுஜாவின் இறைஞ்சும் விழிகள் கெஞ்சியது என்னவோ உண்மை!
ஆனால், அதைப் பார்த்தால் தேவையின்றி ஒரு மனித உயிர் பலியாகும்! எனவே வேகமாக மதுசூதனனிடம் வந்தவள், “என்னை வீட்டுல விட்டுடு மது” என்று அவசரமாக உரைக்கவே, அவனும் மறுபேச்சின்றி அவளுடன் காரில் ஏறிவிட்டான். காரில் ஏறியவன் புளூடூத்தைக் காதில் மாட்டிக்கொண்டபடியே, நண்பர்களிடம் திருமண மண்டபத்தில் அனைத்தையும் ஒழுங்குபடுத்திவிட்டு வரும்படி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

