தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில நபர்களை யாரோ ஒருவர் என்று எண்ணி கடக்க முடியாது. அவர்களுடனான நமது முதல் சந்திப்பு நமக்குள் தீவிரமான பாதிப்பை உண்டாக்கிவிட்டால் நாமே நினைத்தாலும் அந்நபரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அந்நபர் நமக்கு நெருக்கமாவதைத் தடுக்கவும் முடியாது. அந்நபர் ஒரு கட்டத்தில் நமக்கு நண்பர் ஆகலாம். தோழி ஆகலாம். நலம்விரும்பியாகக் கூட ஆகலாம். அப்படி ஒருவரின் தாக்கம் நமது வாழ்க்கையை, நமது இயல்பை ஏதோ ஒரு விதத்தில் சின்னதாக ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது.
-வான்மதி
வான்மதி கண் விழித்துப் பார்த்ததும் எதிரே இருந்த பூபாலன் புன்னகைத்தான்.
“முழிச்சிட்டியா? இப்பிடி உக்காரு” என்று கை கொடுத்து அமர வைத்தான்.
அவன் முந்தைய தினம் அலுவலகத்தோழமைகளுக்காக வைத்த வரவேற்பின் போதும், திருமண முகூர்த்தத்தின் போதும் புகைப்படம் எடுத்தவன் என்று அடையாளம் கண்டுகொண்டதும், இப்போது ஒரு தனியறையில் அவனோடு இருப்பதை உணர்ந்ததும் பயத்தில் பேச்சு எழவில்லை அவளிடம்.
அவளது விழிகள் கலவரத்தோடு தன்னையும் கதவின் தாழ்ப்பாளையும் மாறி மாறி பார்ப்பதைக் கண்டுகொண்டான் பூபாலன். மென்மையாகச் சிரித்தவன்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உன் ஃப்ரெண்ட் அதான் கல்யாணப்பொண்ணு கேட்டுக்கிட்டாங்கனுதான் இந்த ரூம்ல நான் இருக்கேன். நீ யோசிக்குற மாதிரி தனி ரூம்ல ஒரு பொண்ணு கூட டர்ட்டியான எண்ணத்தோட இருக்குற ஆம்பளை நான் இல்லம்மா” என்று சொல்ல வான்மதியின் பதற்றம் தணிந்தது.
பூபாலன் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டவும் வாங்கி அருந்தினாள். இன்னும் வெளியே பாடல்கள் ஓயவில்லை. ஆனால் பூட்டியிருந்த கதவைத் தாண்டி வந்த போது ஒலியின் டெசிபல் குறைந்ததால் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
“கதை, மூவில வர்ற ஹீரோயின் மாதிரி என்னைப் பாத்ததும் எதுக்காக நீ மயக்கம் போட்டு விழுந்த?”
ஆர்வத்தோடு கேட்டான் அவன்.
“ஹைபராகுசிஸ்! என்னால சவுண்ட் வேவ்ஸ் அதிகமா இருக்குற இடத்துல ரொம்ப நேரம் இருக்க முடியாது. வாமிட்டிங் சென்சேசன், பேனிக் அட்டாக் மாதிரி வரும்”
“இது என்ன புதுமையான வியாதி?” ஆச்சரியப்பட்டவன் தன்னருகே அமர்ந்திருப்பது வான்மதிக்கு உறுத்தவும் அவசரமாக எழுந்திருக்க முயன்றாள்.
அந்தோ பரிதாபம் அவளது புடவை முந்தானை விரிந்து கிடந்ததில் அவனது கரம் அழுத்தியிருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. அவளது அவசரத்தை உணர்ந்தவன் “இன்னும் ஆட்டம் பாட்டம் எதுவும் வெளிய முடியல. நீ மறுபடி மயங்கி விழுந்துடுவ” என்றான் இதமாக.
கையை அவன் எடுத்துக்கொண்டதும் முந்தானையைத் தன் கைக்குள் அடக்கிக்கொண்டாள் வான்மதி.

“அதுக்காக எவ்ளோ நேரம் இந்த ரூம்லயே இருக்குறது?” அவன் முகம் பார்க்காமல் கேட்டாள்.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் வேலைய கவனிச்சிட்டிருக்காங்க. இப்பிடியே இங்க உன் கூட உக்காந்திருக்குறது சுவாரசியமாதான் இருக்கு”
வான்மதி தனது பெரிய கண்களை விரித்துச் சந்தேகமாகப் பார்த்ததும் சரண்டர் என்பது போல கைகளை உயர்த்தினான் பூபாலன்.
“நோ மோர் டர்ட்டி தாட்ஸ். பாக்க மட்டும்தான் செய்வேன்னு சொன்னேன்”
“ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளைப் பாக்குறதுகூட தப்பு”
“அப்ப எனக்கு அனுமதி குடேன் ப்ளீஸ்”
கண்களைச் சுருக்கி அவன் கேட்ட விதத்தில் சிரிப்பும் நாணமும் கலந்து வந்தது அவளிடம்.
“ஒரு பொண்ணைச் சைட் அடிக்க அவ கிட்டவே அனுமதி கேட்ட முதல் ஆள் நீங்களாதான் இருப்பிங்க”
“என்ன பண்ணுறது? இப்ப சட்டம் பொண்ணுங்க பக்கம்தானே இருக்கு. பசங்க சின்னதா தப்பு செஞ்சாலும் கம்பி எண்ண வச்சிடுவிங்களே!”
“அவ்ளோ பயம் இருக்குல்ல”
“ம்ம்! பயத்தோட இப்பிடி பாத்துக்கிட்டே இருக்குறது கூட நல்லாதான் இருக்கு. இங்க இருக்குற எல்லாரையும் விட நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்க”
“அப்பிடியா?” நம்ப முடியாத பாவனை வான்மதியிடம்.
“ப்ராமிஸ்” என்று அவளது கையில் தனது கையைப் பதித்தவன் அவள் முறைக்கவும் வேகமாகக் கையை விலக்கிக்கொண்டான்.
வான்மதி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவளாக “அப்பிடி என்ன நான் வித்தியாசம்?” என்று தனக்குள் எழுந்த குறுகுறுப்பை மறைத்துக்கொண்டு கேட்டாள்.
“எப்பிடி வித்தியாசம்? ம்ம்ம்” என்று யோசிப்பது போல அவன் நடிக்கவும் ‘அடப்போடா’ என்று எழுந்திருக்கப் போனாள்.
“ஹே வெய்ட் வெய்ட்!” என்று அமரச் சொன்னவன் “நீ நம்மளோட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்குற மாதிரி ட்ரஸ் பண்ணிருந்த. மொத்த கூட்டமும் லெஹங்கால பளிச் பளிச்னு மின்னுனப்ப கண்ணுக்குப் பாந்தமா காட்டன் சில்க்ல உன்னைப் பாத்ததும் என் கண்ணுக்கும் கேமராக்கும் உன்னைப் பிடிச்சுப் போச்சு. இந்த ரெண்டும் என் பேச்சைக் கேக்கவே மாட்டோம்னு அடம்பிடிக்குதுங்க.” என்று ரசனையோடு குறும்பையும் கலந்து சொன்ன விதத்தில் வான்மதியின் மனதிற்கு பட்டுப்பூச்சியின் சிறகுகள் முளைத்தன.
அந்த வயதும் பருவமும் எதிர்பாலினத்தவரின் பாராட்டுக்கும், கவனத்துக்கும் ஏங்கக்கூடிய உணர்வை நமக்குள் உருவாக்கிவிடும். அவை கிடைத்துவிட்டால் மாபெரும் அங்கீகாரம் கிடைத்தத் திருப்தியில் மனம் ஊஞ்சலாடும்.
விகல்பமில்லாமல் அதே நேரம் விசமத்தோடு பூபாலன் பேச பேச வான்மதியின் மனம் அவனை ரசிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அவளால் கூட அதைத் தடுக்க முடியவில்லை.
இடையே அபஸ்வரமாகப் பூபாலனின் மொபைல் ரிங்டோன் கேட்டதும் அவன் அழைப்பை ஏற்றான்.
“எங்க மேன் இருக்க நீ? சாப்பிட வா. பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட்டாச்சு. அவங்க சொன்னபடி எல்லா ஈவெண்டையும் கவர் பண்ணியாச்சு. சாப்பிட்டா இடத்தைக் காலி பண்ணிடலாம்” என்றான் அவனுடன் பணியாற்றும் சக போட்டோகிராபர் ஒருவன்.
பூபாலன் எழுந்தான்.
அவள் எழுந்திருக்க கை நீட்டினான்.
“எழுந்திருக்க முடியாதளவுக்கு நான் வீக் ஆகிடல” என்றபடி தானே எழுந்து நின்றாள் வான்மதி.
அவள் கதவைத் திறந்து வெளியேறப் போக “அவ்ளோதானா?” என்றவனின் குரல் அவளை நிறுத்தியது.
“வேற என்ன?”
“கீழ விழுந்து மண்டை உடையாமக் காப்பாத்திருக்கேன். அதுக்கு ஒரு தேங்க்ஸ் கூட இல்லையா?”
பேண்ட் பாக்கெட்டுக்குள் கை வைத்து ஸ்டைலாக நின்றபடி கேட்டான்.
வான்மதி நெற்றியைத் தேய்த்துக்கொண்டவள் “தேங்க்ஸ்” என்றாள் அமைதியாக.
“இவ்ளோ சிக்கனமா பேசணும்னு அவசியமில்ல. எனிவே உன் நம்பர், மெயில் ஐடி குடுத்துட்டுப் போ”
“இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?” புருவத்தை உயர்த்தி முறைப்போடு கேட்டவளிடம்
“உன்னை நேத்துல இருந்து நிறைய போஸ்ல போட்டோ எடுத்திருக்கேன்மா. அதெல்லாம் எப்பிடி அனுப்பி வைக்குறது?”
“நான் உங்களை எடுக்கச் சொன்னேனா? அதை நீங்களே வச்சுக்கோங்க”
“அப்ப அதை நான் தினமும் பாத்து ரசிக்குறதுல உனக்குப் பிரச்சனை இல்ல?”
அவன் கேட்ட விதத்தில் பதறியவளோ தனது மொபைல் எண்ணையும் மின்னஞ்சலையும் கொடுத்தாள்.
“பேமெண்ட் எவ்ளோ?” என்று சிரத்தையோடு கேட்டவளிடம்
“காசெல்லாம் வேண்டாம்”
“ஏன்?”
“என் கேமராவோட பசிக்கு ரொம்ப நாள் கழிச்சு நல்ல தீனி கிடைச்சிருக்கு. அதனால உனக்கு மட்டும் ஃப்ரீ”
வான்மதி அப்போதுதான் அவனது பேச்சில் தொனித்த ஒருமையைக் கவனித்தாள்.
“உனக்கா?” ஆச்சரியத்தோடு விழி விரித்தவளிடம்
“ஆமா! ஓஹ்! உங்களுக்குனு சொல்லணுமா? ப்ச்! ஏனோ அப்பிடி சொல்லணும்னு தோணல. எனக்குப் பசிக்குது. இது என்னோட கார்ட். ஸ்டூடியோ அட்ரஸ் இதுல இருக்கு. உன் போட்டோஸ் எல்லாம் ஸ்டூடியோல வந்து கலெக்ட் பண்ணிக்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கதவைத் திறந்துவிட்டு ஓடினான் அவன்.
‘நேரில் சென்று புகைப்படங்களை வாங்க வேண்டும் என்றால் எதற்காக எனது மொபைல் எண்ணையும் மின்னஞ்சலையும் வாங்கினான்?’
ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றவள் “இப்ப பரவால்லயா வான்மதி?” என்று கேட்டபடி வந்த ஜோதிர்மயியின் அன்னையுடன் சேர்ந்து சாப்பிடச் சென்றாள்.

“அந்த போட்டோகிராபர் பையன் இருக்கான்ல, அவன்தான் உன்னை விழாமத் தூக்கிட்டு வந்தான். விசாரிச்சா உங்க ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரன் போல! இன்ஜினியரிங் படினு அடம் பிடிச்ச அப்பாவ சரிகட்டி போட்டோகிராஃபி படிச்சானாம். கதை கதையா சொன்னான். ஜோதி ஏதோ கேட்டானு நான் கிளம்புனப்ப கூட உன்னைப் பாத்துக்குறேன்னு சொன்னான். வயசுப்பையனோட எப்பிடி தனியா விட்டுட்டுப் போகுறதுனு யோசிச்சப்ப என்னை நம்புங்கம்மா, எங்க ஊர்க்காரப்பொண்ணு கிட்ட நான் மரியாதைக்குறைவா நடந்துக்கமாட்டேன்னு சொல்லி அனுப்பி வைச்சான்”
ஜோதிர்மயியின் அன்னை கதை போல சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டு சாப்பிட்ட வான்மதியின் பார்வை என்னவோ எதிர்வரிசையில் அமர்ந்து தனது தோழமைகளுடன் வளவளத்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த பூபாலனின் மீதுதான் இருந்தது.
‘பக்கத்து ஊர்க்காரன் என்றால்? பொன்விளையைச் சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில் இவன் எந்த ஊர்க்காரன்? அந்தச் சுற்று வட்டாரத்தில் இவனைப் பார்த்ததாகக் கூட நினைவில்லையே!’
அவனைப் பற்றிய யோசனைகளுடன் சாப்பிட்டவளைப் பூபாலனும் கவனித்துவிட்டான். கண் சிமிட்டி அவன் என்னவெனக் கேட்ட விதத்தில் அவளுக்குப் புரையேறிக்கொண்டது.
அதைப் பார்த்து நகைத்தவன் சாப்பாட்டில் கவனமானான்.
அது என்னவோ தெரியவில்லை அங்கிருந்த ஆடம்பரச் சூழலில் எளிமையாக அதே நேரம் ஈர்ப்புச்சக்தியுடன் இருந்தவளை விட்டுக் கண்களை அகற்ற அவன் போராட வேண்டியதிருந்தது.
இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் அசட்டுத்தனமாகப் பேசுவதும், அவளது பார்வை தன்னை வலம் வருகையில் குறும்பாக அவளை ரசிப்பதும் அவனது வாழ்க்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!
அவன் எதிர்பார்த்தது போலவே ஸ்டூடியோவுக்கு வந்து நின்ற வான்மதியைக் கண்டதும் முன்பிருந்த குறுகுறுப்பும் ஆர்வமும் இன்னும் அதிகமாகிப்போனது பூபாலனுக்கு.
மொபைல் எண்ணையும் மின்னஞ்சலையும் வாங்கினானே தவிர அவளிடம் பேச அவனுக்குத் தோன்றவில்லை. முன்பின் தெரியாத பெண்ணிடம் இது என்ன அத்துமீறல் என்றுதான் தலையில் குட்டியது அவனது மூளை.
புகைப்படங்களை வாங்க அவள் எப்படியும் தன்னைத் தொடர்பு கொள்வாள்தானே! அப்போது பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணம்.
அவனது எதிர்பார்ப்பின்படி அவளே ஸ்டூடியோவுக்கு வந்து நின்றாள்.
‘ஈடன்’ அதுதான் பூபாலன் பணியாற்றிக்கொண்டிருந்த ஸ்டூடியோவின் பெயர்.
வான்மதி அங்கே வந்ததும் அவனது தோழமைகளுள் ஒருவன் ஓடிச்சென்று அடோப் லைட்ரூமில் புகைப்படங்களை எடிட் செய்துகொண்டிருந்த பூபாலனின் கையைப் பிடித்து இழுத்து வந்து அவள் முன்னே நிறுத்தினான்.
“ஹாய்” சினேகமாக முறுவலித்தவளுக்கு நாணத்தால் என்ன பேசவெனத் தெரியவில்லை. எந்த அசட்டுத்தைரியத்தில் அவன் முன்னே வந்து நிற்கிறாள் என அவளுக்கேத் தெரியவில்லை.
“ஹலோ!” கை நீட்டியவனிடம் மறுக்காமல் தனது கரத்தைக் கொடுத்தவள் “நீங்க என்னோட பக்கத்து ஊராமே! ஜோதியோட அம்மா சொன்னாங்க” என்று கேட்க
“அவங்க உன்னோட ஊர்ப்பேரைச் சொல்லலைனா எனக்குமே நீ நம்ம ஊர்ப்பக்கம்னு தெரிஞ்சிருக்காது” எனப் பதிலளித்தவன் காரியக்காரனாக அவளது கரத்தை விடுவிக்காமல் பேசிக்கொண்டிருந்தான்.
குட்டி குட்டியாய் ஐந்து ரோஜாக்கள் அடங்கிய மினி பொக்கே ஒன்றை யாரோ தனது கரத்தில் வைத்தது போல அத்துணை மென்மையாக ஐவிரல்களுடன் தன்னிடம் அடைக்கலமாகியிருந்த வான்மதியின் கரத்தை விடுவிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
“பூபாலன்! அதானே உங்க பேரு? கார்ட்ல பாத்தேன்”
“ம்ம்! அப்புறம்?”
“என் ஃபோட்டோசை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்”
“உன் ஃபோட்டோக்களைத்தான் எடிட் பண்ணிட்டிருக்கேன். வாயேன்! எப்பிடி பண்ணுறேன்னு பாரு”
“உங்க தொழில் ரகசியத்தை நான் கண்டுபிடிச்சிட்டேன்னா?”
“ரகசியமா செய்ய வேண்டிய வேலை எல்லாம் எப்பவோ முடிஞ்சாச்சு. இது ஃபினிஷிங் டஷ். பாத்தாலும் உனக்குப் புரியாது”
அவன் தனது கரத்தைப் பிடித்துச் சுவாதீனமாக அழைத்துச் செல்ல, ஏனோ மறுக்கத் தோன்றவில்லை வான்மதிக்கு.

நிறக்கலவை எல்லாம் வேறுவிதமாக மாற்றி அவன் எடிட் செய்திருந்த புகைப்படங்களில் தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகுடன் மிளிர்வதாகத் தோன்றியது அவளுக்கு.
பூபாலனின் நாற்காலி அருகே இன்னொரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து அவன் வேலை செய்வதைப் பார்த்தவளுக்குக் கொஞ்சமும் போரடிக்கவில்லை.
“எனக்கு ரங்கநல்லூர்” பேச்சுவாக்கில் அவன் சொல்லவும் வான்மதிக்கு ஆச்சரியம்.
“அந்த ஊரா? அங்க இருக்குற சந்தைக்கு வாரவாரம் வருவோமே! எப்பிடி உங்களை எனக்குத் தெரியாமப் போச்சு? அங்க ஒரு லைப்ரரி உண்டுல்ல. அதுல நானும் பூமியும் மெம்பர். லீவுக்கு ஊருக்குப் போனேன்னா கட்டாயம் லைப்ரேரியனைப் பாத்துப் பேசாம வரமாட்டேன்.”
“இந்தத் தடவை நீ ஊருக்குப் போய் நாளாச்சோ?”
“ஆமா! உங்களுக்கு எப்பிடி தெரியும்?”
“லைப்ரேரியன் வேலுசாமிக்கு ஹார்ட் அட்டாக் வந்து லைப்ரரிலயே இறந்துட்டார். உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல”
பூபாலன் சொன்னதும் வான்மதியின் முகத்தில் சோகம் குடியேறியது. கண்கள் எல்லாம் கலங்கி ஒரு மாதிரி ஆகிவிட்டாள்.
அதைக் கவனித்தவனுக்கோ தன் மீதே எரிச்சல்.
இத்துணை மென்மையான மனம் கொண்டவள் வான்மதி என்று அவனுக்கும் தெரியாதுதானே! பேச்சுவாக்கில் சொல்லிவிட்டான். பாவம்! கண்கள், மூக்கு நுனி எல்லாம் சிவக்க அழுகையை அடக்க அவள் கஷ்டப்படுவதைக் கண்டுகொண்டான்.
“ரெஸ்ட் ரூம் அங்க இருக்கு” என்று சொல்லித் தனது கைக்குட்டையைக் கொடுத்து அனுப்பினான்.
வான்மதிக்குமே இப்போது கொஞ்சம் கண்ணீர் சிந்தினால் தேவலை என்ற நிலைதான்.

நூலகர் வேலுசாமிக்குக் கிட்டத்தட்ட அவளுடைய சித்தப்பா மகேந்திரனின் வயது. இது இறப்புக்கான வயது இல்லை. ஒவ்வொரு முறையும் நூலகத்துக்குப் பூமிகாவோடு அவள் செல்லும்போதும் புதிதாக வந்த புத்தகங்களை அவளுக்காக எடுத்து வைத்திருப்பார். ஒரு நண்பர் போல் உரையாடுவார்.
ஏன் மரணம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது? இன்னும் அவரது குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கலாம். மனைவி பொருளாதாரீதியில் கஷ்டப்படலாம். தலைவனை இழந்து அந்தக் குடும்பம் எவ்வளவு சிரமத்தில் இருக்கும்? எவ்வளவு கொடுமையான நிலமை இது?
சில நிமிடங்கள் கண்ணீர் சிந்தி, முகம் கழுவிவிட்டு வெளியே வந்தவளிடம் “சாரி” என்றான் பூபாலன்.
“பரவால்ல” என்றவள் இன்னுமே தெளியவில்லை.
“நீங்க போட்டோவ…”
“எல்லாம் முடிஞ்சுது மதி. இந்தப் பெண்ட்ரைவ் வச்சுக்க. மெயில்ல சாப்ட் காப்பி அனுப்பி வைக்குறேன். ஐ அம் சாரி! நீ இதை இவ்ளோ சீரியசா எடுத்துப்பனு தெரியாது”

“பரவால்ல! அவர் கூட நானும் பூமியும் நல்லா பேசுவோம். ஃப்ரெண்ட் மாதிரி. அவர் இறந்தது கூட எனக்குத் தெரியல. ஊருக்குப் போனா அவரோட ஃபேமிலிய பாத்துப் பேசணும்”
தன்னைச் சமாளித்துக் கொண்டு அவள் பேச “ரிலாக்ஸ் மதி. டேக் கேர்” என்று சொல்லி வழியனுப்பிவைத்தான்.
ஆனால் அவனுக்கு அதன் பின்னர் மனம் கேட்கவே இல்லை.
பார்வைக்கு எளிமையாய், அழகாய் ஒரு பெண்! அவளிடம் பேசினால் சுவாரசியமாக இருப்பதைத் தாண்டி அவன் மனதில் பசக்கென ஒட்டிக்கொண்டாள் வான்மதி. இதற்குக் காரணம் எல்லாம் தெரியாது.
ஆனால் அவளிடம் போனில் பேசத் தயக்கம். இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கும் என்ற எண்ணம்.
அனைத்துத் தடைகளையும் மீறி அன்றைய தினம் கலங்கிய முகத்தோடு ஸ்டூடியோவிலிருந்து வான்மதி கிளம்பிய காட்சி அவன் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து போனது.
அவளை அழவைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் அவனால் சாப்பிடக்கூட முடியவில்லை.
வேறு வழியின்றி அன்றிரவு அவளது மொபைலுக்கு அழைத்தான் பூபாலன்.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!