மதி அடிக்கடி என்னிடம் கூறுவாள், வீட்டுப்பெண்களின் இரக்கச் சுபாவத்தையும் அன்பையும் ஆண்களாகிய நாங்கள் ‘taken to be granted’ ஆக எடுத்துக்கொள்கிறோமென. அது எனக்கு எப்போதும் உறுத்தலைக் கொடுத்ததில்லை. உடல்நிலை சரியில்லை என்றாலும் மாத்திரையை விழுங்கிவிட்டு எங்களுக்காகச் சமையல் செய்து தரும் அம்மா, கை கால் வலி என்றாலும் செவ்வாய் வெள்ளி என்றால் வீட்டைக் கழுவித் துடைத்து பிறகு மூவ் தடவிக்கொள்ளும் அம்மா, இரவில் உறங்க வேண்டிய நேரத்தில் கண் சொக்கி வந்தாலும் எனக்காகவும் அண்ணனுக்காகவும் சாப்பிடாமல் காத்திருக்கும் அம்மா – இப்படியே பார்த்து வளர்ந்த எனக்கு அந்தச் செயல்களின் பின்னே இருக்கும் உடல்நோவு பற்றிய புரிதல் வந்ததேயில்லை. அதே செயல்களை மனைவியிடம் எதிர்பார்த்து அவள் உடல்நோவைக் காரணம் காட்டும் போது கோபம் கூட வந்ததுண்டு. ‘எங்கம்மா இதைக் கூட பொறுத்துக்கிட்டு எங்களுக்காகச் செய்வாங்க’ என்று அவளிடம் சண்டை போட்டதும் உண்டு. நான் மட்டுமில்லை, ஒவ்வொரு இந்திய ஆணும் இவ்வாறு தான் இருக்கிறான். அன்னையோடு மனைவியை ஒப்பிட்டுத் தனது வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறான்.
-பூபாலன்
“டாக்டர் என்ன சொன்னாங்கம்மா?” என்று கேட்டபடி தட்டில் விழுந்த தோசையை விண்டுச் சட்னியில் தோய்த்துச் சாப்பிட்டவாறு கேட்டான் பூபாலன்.
“டெஸ்ட் ரிசல்ட் வந்ததும்தான் தெரியும். இப்போதைக்கு இருமலுக்கு மருந்து குடுத்திருக்காங்க”
பதில் வான்மதியிடமிருந்து வந்ததும் அவன் முகத்தில் சிறு திருப்தி.
“ம்ம்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனும் அவளும் இவ்வளவு சகஜமாகப் பேசுவது சங்கரிக்குச் சந்தோசம். குணசேகரன் காது கேட்காதவரைப் போல சாப்பாட்டில் கவனமாகியிருந்தார்.
அவர் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணம் பூபாலனுக்கும் அவனது அன்னைக்கும்.
இரவு சமையலுக்குப் பிறகு பாத்திரங்களைத் தான் சுத்தம் செய்வதாகச் சொல்லி அன்னையை உறங்க அனுப்பிவைத்தான் அவன்.
“இருமல் வந்தா இந்த வீட்டுல ராஜ உபச்சாரம் கிடைக்குது” என்று முனகியபடியே குணசசேகரன் திண்ணை பக்கம் நகர்ந்துவிட தனியே சமையலறையில் வேலை செய்பவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை வான்மதிக்கு.
திருமணமாகி வாழ்ந்த ஆறு மாத காலத்தில் வேலைகளை முடிந்தளவுக்குப் பகிர்ந்து கொண்டவர்கள் இருவரும்.
அதை மனதில் வைத்து சமையலறைக்குள் சென்றவளுக்குச் சில தேவையற்ற நினைவுகள் எழவும் வெளியே செல்ல எத்தனிக்க அவளது கால் கொலுசு சதி செய்துவிட்டதால் பூபாலன் திரும்பிப் பார்த்தான்.
‘என்ன’ என்பது போல புருவம் உயர்த்தியவனிடம் “தனியா வேலை செய்யுறிங்கனு வந்தேன்” என்றாள் அவள்.
“பாதி பாத்திரம் கழுவியாச்சு. நீ போ”
“வேற ஏதாச்சும் வேலை…”
“இதெல்லாம் செய்யப் பிடிக்காம ஒரு காலத்துல தர்ணா பண்ணுனவ நீ. மறந்துட்டியா?”
குத்திக்காட்டவில்லை அவன். சாதாரணத் தொனியில்தான் பேசினான். ஆனாலும் வான்மதிக்குச் சுருக்கெனத் தைத்தது. எல்லாம ஒரு நொடியே!
அவள் வேலை செய்யமுடியாதெனச் சொன்னதற்கு ‘பிடித்தமில்லை’ என்பது மட்டும் காரணமில்லை. அப்படி பிடிக்காதவள் ஏன் தொடக்கக் காலத்தில் அவனுடன் சேர்ந்து செய்தாளாம்?
“சமையல்கட்டுல ஆம்பளைங்க நுழையக்கூடாதுனு சட்டம் போட்டவர் யாரு? அதுக்குத் தலையாட்டிட்டு என்னை இங்க வேக விட்டது யாரு?”
அவளும் சூடாகவேக் கேட்டாள். இப்போது பூபாலனுக்குச் ‘சுருக்’ உணர்வு.
தவறுதான்! ஆண் வேலை இது பெண் வேலை இதுவெனத் தந்தை ஆணையிடும்போதே வான்மதியின் முகத்தில் புகைச்சல் உருவானதைக் கவனிக்காமல் விட்டது தவறுதான்!
பின்னாட்களில் அந்தப் புகைச்சல் தொடர்கதையானதும் அவள் மீது எரிச்சலுற்று சண்டையிட்டதும் தவறுதான்!
இதெல்லாம் சேர்ந்துதான் இந்த வீட்டில் தனக்கெனப் பேச யாருமில்லையென வான்மதிக்குத் தோன்ற வைத்திருக்கும். அதன் காரணமாகவேத் தனது மனக்குறையைக் கொட்டும் வடிகாலாகப் பகவதியை உணர்ந்திருப்பாள் அவள்.
“தெரியாமச் சொல்லிட்டேன். நீ போ”
இம்முறை அவனது குரலில் கேலித்தொனி இல்லை. வருந்துகிறான் போல!
அறைக்குள் வந்து படுக்கையில் அமர்ந்த வான்மதிக்குத் தான் செய்த தவறுகள் மனக்கண்ணில் வலம் வரத் தொடங்கின. இந்த வீட்டில் அவள் கொடுமைப்படுத்தப்படுவதாக அன்னையிடம் புலம்பியதுதானே அனைத்து அனர்த்தங்களுக்கும் காரணம்.
குணசேகரன் புலம்பல் கேசாக இருக்கலாம். பூபாலனும் சங்கரியும் அவள்மீது பிரியமாகத்தானே இருந்தார்கள். அவர்களையும் அல்லவா கொடுமைக்காரர்களாகச் சித்தரித்துவிட்டாள் அவள்.
தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் அறைக்கதவு தாழிடப்படும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.
பூபாலன்தான் அறைக்குள் வந்திருந்தான். நேரே குளிக்கப் போனவன் உடை மாற்றி சுவாதீனமாகப் படுக்கையில் அவளருகே படுத்துக்கொள்ள வான்மதிக்குப் பழைய நினைவுகளில் கண்கள் கலங்கின.

பொதுவாக வேலை முடித்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் சிறிது நேரம் வான்மதியின் மடியில் படுத்து அன்றைய தினம் நடந்த அனைத்தையும் அவளிடம் ஒப்பிப்பது பூபாலனுடைய வழக்கம் அப்போது.
மானசீகமாகத் தன்னையே கடிந்துகொண்டாள் அவள்.
‘என்ன இது? இன்று ஏன் அடிக்கடி பழைய நாட்களை நான் திருப்பிப் பார்க்கிறேன்?’
அதையேதான் பூபாலனும் யோசித்துக்கொண்டிருந்தான்.
“லைட் ஆப் பண்ணிடவா?” வான்மதி கேட்டதும்
“ஒரு காலத்துல இந்தக் கேள்வி ரொம்ப ரொமாண்டிக்கா தோணும். இப்ப நமக்குள்ள நடக்குற நார்மல் கான்வோ மாதிரி ஆகிடுச்சுல்ல?” எனப் பதிலுக்குக் கேட்டான் அவன்.
வான்மதி கூந்தலைக் கொண்டையிட்டபடியே “அப்ப நமக்கு ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு ஆர்வம் இருந்துச்சு. காதல் இருந்துச்சு. இப்ப அது இல்ல. ப்ச்! லவ் மேரேஜ், அரேஞ்ச்ட் மேரேஜ் எல்லாத்துலயும் கண்வன் மனைவிக்குள்ள கொஞ்சநாளுக்குத்தான் அந்த ஆர்வமும், ஸ்பார்க்கும் இருக்கும் பாலா. காலப்போக்குல இயல்பு வாழ்க்கை அந்த ஆர்வத்தையும் ஸ்பார்க்கையும் முழுங்கிடும்” என்றபடி விளக்கை அணைத்தாள்.
அது என்னவோ உண்மைதான்! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். கேட்பதற்கு அசூயையாக இருந்தாலும் அதுதானே அனைவர் வாழ்க்கையிலும் நிதர்சனம் ஆகிறது.
திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு ஒருவர்மீது மற்றொருவருக்கு இருக்கும் ஈர்ப்பும், ஆர்வமும், காதலும் காலப்போக்கில் தேய்மானம் அடைவது இயற்கை. அதை அவ்வபோது புதுப்பித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து தம்பதிகளுக்கும் அந்த எண்ணம் வருவதில்லை.
நிதர்சனம் சுறா மீனாய் மாறி அவர்களை இரையாக்கிக்கொள்ளும். ஆண்களுக்கு வேலைச்சுமை, அங்கிருக்கும் பதற்றம் எல்லாம் சேர்ந்து கொள்ளும். பெண்களுக்கோ புகுந்தவீட்டினரின் செயல்பாடுகளில் உண்டாகும் அதிருப்தி, பிரசவத்துக்குப் பின்னர் குழந்தைகள் மீது மொத்த கவனத்தையும் குவிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து கணவன்மீதான ஆர்வம் குறையத் தொடங்கும்.
இந்த இடத்தில்தான் நிறைய திருமணங்கள் தடுமாடுகின்றன. அந்தத் தடுமாற்றத்தைச் சமாளித்து தங்களுக்குள் உண்டான வெறுமையைப் போக்கி, உறவைப் புத்துணர்ச்சியாக்கிக் கொள்ளும் தம்பதிகள் பிழைத்துக் கொள்வார்கள். சிலர் வேறு வழியின்றி பிள்ளைகளுக்காக, சமுதாயத்துக்காக உறவைத் தொடர்வதும் உண்டு.
அதாவது ‘இந்த எந்திரத்தனமான பதற்றமான வாழ்க்கையைக் கூட நான் வாழ்ந்துவிடுவேன். ஆனால் எனக்கும் என் வாழ்க்கைத்துணைக்கும் இடையே பழைய அன்பும் அன்னியோன்யமும் தழைக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன். ஏன் நான்தான் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமா?’ என்ற மனப்போக்கு இருவருக்கும் வந்துவிடும்.
இதையெல்லாம் யோசித்தபடி இரவெல்லாம் கொட்ட கொட்ட விழித்தபடி இருந்த பூபாலன் எப்படியோ உறங்கிப்போனான்.
அவனருகில் படுத்திருந்த வான்மதியோ நீண்டநாட்களுக்குப் பிறகு அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். எப்போதும் அவளைத் தொடரும் கெட்டக்கனவுகளும், துன்பமான சொப்பனங்களும் அன்று வரவேயில்லை அவளுக்கு!
அடுத்த இரண்டு நாட்கள் இதே அமைதியோடு, குணசேகரன் ஏற்படுத்திய சிறு சிறு சலனங்களோடு கடந்தன. மூன்றாம் நாள் சென்னைக்குக் கிளம்ப அவள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள்.
அன்றைய தினம் சங்கரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரக்கூடிய நாளும் கூட. அம்மாவும் மகனும் மருத்துவமனைக்குச் சென்றுவிட வான்மதிக்குப் போரடித்ததால் அவள் பொன்விளைக்கு வந்துவிட்டாள்.
பூமிகாவும் வெங்கடேஷும் இரண்டாம் மறுவீடு வருவார்கள் என்று மொபைலில் பேசியபோது பகவதி கூறியிருந்தார். இளையவளைப் பார்க்க ஆசையாய் வந்தவளுக்கு முத்தரசி இல்லத்தில் வரவேற்புக்குக் குறைவில்லை.
மிருதுளாவும் பகவதியும் அவளுக்குப் பிடித்ததைச் சமைக்குமாறு சமையல்காரம்மாவிடம் சொல்லிவிட்டு அவளுடன் உரையாடலானார்கள்.
“அந்த வீடு மாறியிருக்குதா? இல்ல இன்னும் அதே கோலம்தானா?”
பகவதியின் கேள்விகள் கூட காரம் தடவாமல் வரவில்லை. வான்மதிக்கோ தந்தை அமர்ந்திருக்கையில் இந்த அம்மா இப்படி பேசவேண்டுமா என்ற சங்கடம்.
நரேந்திரனும் மகேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“சம்பந்தியம்மாக்கு உடம்பு சரியில்லனு மாப்பிள்ளை சொன்னார்மா. இன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்காங்களா?” எனப் பேச்சை மாற்றினார் மகேந்திரன்.
“ஆமா சித்தப்பா! அவங்களுக்கு விடாம இருமல் வருது. நான்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனேன். டெஸ்டுக்குக் குடுத்துட்டு வந்தோம். டாக்டர் டி.பியா இருக்கலாம்னு சொல்லுறார்”
அங்கிருந்த அனைவருக்கு சங்கரியை நினைத்துப் பரிதாபம் பிறந்த நொடியில் பகவதிக்குவ் வேறு பயம் பிறந்தது.
“என்ன சொல்லுற? டி.பி நோயாளிங்க இருமுனா அந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியா காத்துல பரவும்னு சொல்லுவாங்க. அவங்க கூட இருக்குறவங்களுக்கு அந்த நோய் தொத்திடுமே! இந்த நேரத்துல உன்னை அங்க கொண்டு போய்த் தள்ளிட்டாங்க பாரு! வானும்மா, நீ சென்னைக்கு இங்க இருந்து கிளம்பு. இப்பவே போய் உன் லக்கேஜை எடுத்துட்டு வந்துடு” என்று படபடத்தார்.
வான்மதி இதை எதிர்பார்த்திருந்தாள். தனக்கு ஒன்று என்றால் அன்னை பயந்துவிடுவார் என அவளுக்குத் தெரியும்.
மெல்லிய புன்னகையோடு “டாக்டர் அவங்களை மாஸ்க் கட்டாயம் போடச் சொல்லிருக்கார்மா. எப்பவும் கர்சீப் வச்சுக்கோங்கனு அட்வைஸ் பண்ணிருக்கார். அவங்களும் வீட்டுல மாஸ்க் மாட்டிக்கிட்டுத்தான் நடமாடுறாங்க. டி.பி நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாதவங்க, சுகர் உள்ளவங்களைத்தான் ஈசியா தொத்திக்கும். நான் ஹெல்தியா இருக்கேன்மா. அத்தையும் ரொம்ப கவனமா இருக்காங்க. இத்தனைக்கும் அவங்க ஹால்ல தனியாதான் படுக்குறாங்க” என்று அவள் சொல்ல
“இருந்தாலும் அந்தக் கிருமி வீட்டுக்குள்ளத்தானே இருக்கும்? டி.பி எல்லாம் வந்தா ரொம்ப…”
“ஒரு கஷ்டமும் இல்ல. டி.பி ஒன்னும் குணப்படுத்த முடியாத வியாதி இல்ல. நீ கண்டதையும் உளறாத. முதல்ல சம்பந்தியம்மாக்கு டி.பி இருக்குனு இன்னும் உறுதியாகல” எனக் கறாராகப் பேசி பகவதியை அடக்கினார் நரேந்திரன்.
இந்த வாக்குவாதங்கள் நீண்டு போகாமல் காக்கும் வகையில் பூமிகாவும் வெங்கடேஷும் வந்துவிட்டார்கள். புதுமணத்தம்பதியை வரவேற்கவும் உபசரிக்கவும் அனைவரும் மும்முரமானதால் சங்கரியைப் பற்றிய விவாதம் தள்ளிவைக்கப்பட்டது.
வெங்கடேஷ் நேசமித்ரனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பூமிகாவும் வான்மதியும் தனியே வந்தார்கள்.
“அத்தைக்கு இப்ப பரவால்லையா?” என்று பூமிகா நலம் விசாரிக்க
“இன்னைக்குத்தான் ரிப்போர்ட் வரும் பூமி. ப்ச்! பாவம் அவங்க. எந்நேரமும் புருசன்ங்கிற பேருல ஒரு ஜீவன் புடுங்கிக்கிட்டே இருந்தா என்ன செய்வாங்க? இந்தப் பாலா எல்லார் கிட்டவும் எகிறுவார். தகப்பனை அடக்கிவைக்கமாட்டார். சை! இதுதான் அந்த வீட்டுல எனக்குப் பிடிக்காத விசயம்” என்று சலித்துக்கொண்டாள் வான்மதி.
“யாராலயும் அப்பாவ அவ்ளோ சீக்கிரம் எதிர்த்துப் பேச முடியாதுல்ல வானுக்கா”
பூமிகா பூபாலனுக்கு ஆதரவாகப் பேசவும் “அதை விடு. நீ எப்பிடி இருக்க?” என்று அவளது நலனை விசாரிக்க ஆரம்பித்தாள் வான்மதி.

சகோதரிகளின் பேச்சில் நேரம் கழிய மதிய விருந்துக்குப் பிறகு பூமிகா கிளம்பியதும் வான்மதியும் கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்து பார்க்கையில் கிட்டத்தட்ட போர்க்களம் போல இருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த ப்ரீத்தி அவளைப் பார்த்ததும் சிரித்தாள்.
“எப்பிடி இருக்க வானு?” என்று சினேகமாய் விசாரித்தாள். நிரஞ்சன் கூட சித்தி என்று அவளிடம் வந்தான்.
“நான் நல்லா இருக்கேன்கா. நீங்க மாமா எல்லாரும்…” என்று வான்மதி பதில் சொல்லும்போதே குணசேகரனின் கத்தல் கேட்டது.
“எங்க போய் இந்தச் சீக்கை இழுத்துட்டு வந்தாளோ? குடும்பத்து மேல அக்கறை இருக்குற பொம்பளை தன்னைப் பேணி இருப்பா. இவளுக்குத்தான் அது மருந்தளவுக்குக் கூட இல்லையே. ஒரு வாரம் இவ ஆஸ்பத்திரில படுத்துக்கிட்டா நீயும் நானும் சோத்துக்கு என்ன பண்ணுவோம்?”
அவரைப் பூபாலன் சமாதானம் செய்வதும் கேட்டது. சங்கடத்துடன் ப்ரீத்தியைப் பார்த்தாள் வான்மதி.
அவளோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாயிற்றே!
“நிரஞ்சன் சின்னப்பையன். அவன் எங்க வீட்டுல வசதியா இருந்து பழகிட்டான் வானு. இங்க வந்தா பாத்ரூம் போகக் கூட யோசிக்குறான். வெஸ்டர்ன் டாய்லட்ல பழகிட்டானே! அத்தைய என் கூட வச்சுப் பாக்கவும் முடியாது. சின்னப்பையனுக்கு டி.பி தொத்திடுச்சுனா கஷ்டம் வானு”
அவள் அப்படித்தான் என்று தெரிந்ததால் வான்மதி தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.
அப்போது வீட்டுக்குள் இருந்து டென்சனுடன் வந்தான் பூபாலன்.
“அம்மாவ ஒரு வாரம் ஐசொலேசன் வார்டுல வைக்கணும்னு டாக்டர் சொல்லிருக்கார் மதி. அப்பா என்னடானா புரிஞ்சிக்காம..”
பாதியில் நிறுத்திவிட்டான் அவன். சலிப்பில் வார்த்தைகளைக் கூட கோர்க்க முடியவில்லை அவனால்.
“உங்கப்பாக்கு நீங்கதான் புரிய வைக்கணும். பொம்பளைங்க உடம்பு ஒன்னும் இரும்புல செஞ்சு வைக்கல. மனுசனா பிறந்த எல்லாருக்கும் நோய் நொடி வரும். அந்த நேரத்துல அனுசரணையா இருக்காம கண்ட பேச்சு பேசுறதைக் கேட்டா நாராசமா இருக்கு”
ப்ரீத்திக்கும் சேர்த்து குட்டு வைத்த வான்மதி பூபாலனிடம் சங்கரி எங்கே என வினவினாள்.
“ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அப்பா பேசுனதைக் கேட்டா அவங்க மனசு நொந்து போயிடும்”
“உங்கப்பா என்னைக்குப் பொம்பளைங்க மனசைப் புரிஞ்சு பேசிருக்கார்? என்னமோ புதுசா பேசுற மாதிரி சொல்லுறிங்க?”
பூபாலனுக்கும் கோபம் வந்துவிட்டது.
“ரெண்டு பிள்ளைங்களைப் பெத்தவரு வயசானக் காலத்துல மருமகளுங்க நம்மளைக் கவனிச்சிப்பாங்கனு நினைச்சிருப்பார். அவருக்கு ரெண்டு சைடுலயும் ஏமாற்றம். அதை இப்பிடி காட்டுறார்” என அவனும் கத்த ப்ரீத்தி, வான்மதி இருவரின் முகங்களும் கோபத்தைத் தத்தெடுத்தன.
ப்ரீத்தி ஏதோ சொல்ல வர அவளைக் கையமர்த்தினாள் வான்மதி.

கணவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள் “முதல்ல வீட்டுவாசல்ல நின்னு கத்துறது தப்புனு உங்க மண்டைல ஏத்திக்கோங்க. மருமகளுங்க தன்னை கவனிக்கணும்னு நினைக்குற மாமனார் அவங்களை மனுசியா நடத்தியிருக்கணும். உங்கப்பா அப்பிடியா எங்களை நடத்துனார்? நின்னா பணத்திமிரு, உக்காந்தா பணத்திமிருனு அவர் பேசுன பேச்சுல நாங்க எவ்ளோ அசிங்கப்பட்டிருப்போம்? அதெல்லாம் கணக்குல சேராதுல்ல” எனக் கடுமையாகப் பேசிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
அங்கே குணசேகரன் கத்திக்கொண்டிருந்தார். அவரை ஒரு ஆளாகக் கூட மதியாமல் தங்களது அறைக்குள் வந்து அமர்ந்துவிட்டாள் வான்மதி.
திண்ணை அருகே நின்று கொண்டிருந்த பூபாலன் சாட்டையால் அடி வாங்கியது போல சிலையாய்ச் சமைந்திருந்தான்.
ப்ரீத்தி தனக்காகப் பரிந்து பேசிய வான்மதிக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு நிரஞ்சனோடு இடத்தைக் காலி செய்தாள். அவள் வந்ததற்கு அடையாளமாக ஆப்பிளும், ஹார்லிக்ஸ் பாட்டிலும் நிரம்பிய பை திண்ணையில் கிடந்தது.
அதே நேரம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த சங்கரியின் மனம் வீட்டில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கும் என எண்ணி கலங்கிப் போயிருந்தது.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!