கோபமாகவோ, காதலாகவோ தினமும் ஒரு முறை கூட உன்னைப் பற்றி யோசிக்காமல் என் நாட்கள் முடிவதில்லை. தவிர்க்க நினைத்தாலோ தவித்துப் போகிறது என் மனம். வெளிப்பார்வைக்கு அகம்பவக்காரன் என்ற முகமூடியை அணிந்துகொண்ட ஒவ்வொரு ஆணும் மனைவியைப் பிரிந்தால் இப்படித்தான் யோசிப்பானோ என்னவோ! ஆனால் பாருங்கள்! ஆணாகிப் போன ஒரே காரணத்தால் அழக் கூட இந்தச் சமூகம் எங்களை விடுவதில்லை. எனது ஆற்றாமை, இயலாமை, வேதனையைக் கொட்ட கண்ணீர் என்ற வடிகாலைக் கூட என்னால் தேட முடியாது! எவ்வளவு துரதிர்ஷ்டம்!
-பூபாலன்
திண்ணையில் அமர்ந்திருந்தார் குணசேகரன். இன்னும் மகன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்ற கவலை அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
விட்டது சனியன் என்று நான்கு ஆண்டுகள் மகனின் வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருக்கையில் மீண்டும் குறுக்கே புகுந்துவிட்டாளே இந்த வான்மதி!
எரிச்சலோடு அவர் காத்திருக்க, “மிக்சில ஏதோ பிரச்சனை. இன்னைக்கு நைட் இட்லிக்குச் சட்னி இல்ல. மதியம் வச்ச சாம்பார் சூடு பண்ணிருக்கேன். சாப்பிடுறிங்களா?” என்றபடி வந்தார் சங்கரி.
குணசேகரனுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.
“வேலை வெட்டிக்குப் போகாம வீட்டுலதானே இருக்கான், இவனுக்கு இது போதும்னு நினைச்சியோ? அம்மினு ஒன்னு எதுக்கு இருக்கு? வெள்ளைப்பூடு போட்டு துவையலா அரைச்சு வை. நான் எப்ப மதியம் வச்ச குழம்பை ராத்திரிக்குச் சாப்பிட்டிருக்கேன்?”
“அம்மி மழுங்கி போயிருக்குங்க. அதைக் கொத்தலைனா அரைக்காது”
“எல்லாத்துக்கும் ஒரு காரணத்தைத் தூக்கிட்டு வருவியே! மனுசன் சாப்பிடுவானா அந்தச் சாம்பாரை? அதை கொல்லைப்புறத்துல ஊத்து. இட்லிப்பொடி இருக்கா?”
“ம்ம்.. இருக்கு”
“அப்ப நல்லெண்ணெய்ல வெங்காயம் அரிஞ்சு போட்டு இட்லிப்பொடிய தாளிச்சு வை”
வெங்காயம் மதியம்தான் தீர்ந்து போயிருந்தது. அதைச் சொன்னால் இன்னும் நான்கு வார்த்தைகள் அதிகமாக வந்து விழும். பேசாமல் துவையலே அரைத்துவிடலாம்!
அதிகாரத்துக்குக் குறைவேயில்லை என்று மானசீகமாக நொடித்துக்கொண்டு போனார் சங்கரி.
அவர் போன சில நிமிடங்களில் பூபாலனும் வந்து சேர்ந்தான்.
“வா பாலு! போன இடத்துல வேலை அதிகமா?”
குத்தலாகத்தான் கேட்டார் குணசேகரன். அதுவும் உன்னை அவர்கள் வேலை செய்ய மட்டுமே அழைத்தார்கள் என்ற அர்த்தத்தில்.
பூபாலனுக்கு அது புரிந்தது. ஆனால் தந்தையிடம் விவரித்துப் புரியவைக்கும் பொறுமை இல்லை.
“எப்பவும் போலதான். நாளைக்கு முகூர்த்தம் ஏழு மணிக்கு. நான் அஞ்சரைக்கே கல்யாண மண்டபத்துல இருக்கணும்” என்றபடி வீட்டுக்குள் போக முயன்றான்.
“எல்லாருமா சேர்ந்து என்னையும் உன் அம்மாவையும் அசிங்கப்படுத்துன குடும்பத்தோட மறுபடி உன்னை ஒன்னு சேர்த்து வைக்க போராடுறாங்க பாலு”
தந்தையின் பேச்சில் வீட்டுக்குள் போகக் காலடி எடுத்து வைத்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
“அந்த ‘எல்லாரும்’ல அம்மாவும் அடக்கம்” என்றான் நிதானமாக.
“உன் அம்மா ஒரு கோட்டிக்காரி. அவளையும்தானே உன் பொண்டாட்டி எடுத்தெறிஞ்சு பேசுனா. சங்கரி அவளைச் சொந்த மகளாட்டம் பாத்துக்கிட்டா. அந்த நன்றி கூட இல்லாம”
“அப்பா!”
சற்று அழுத்தமாகக் குறுக்கிட்டான் பூபாலன். அந்தக் குரல் குணசேகரன் நாக்கைக் கட்டிப்போட்டது.
“பழசைப் பேசவேண்டாம்பா. அம்மா இதுவரை என் கிட்ட எதுவுமே கேட்டதில்ல. நான் ஒரு குடும்பமா வாழணும்ங்கிற ஏக்கம் அவங்களுக்குள்ள இருக்கு. ஒரு ஆம்பளை எப்பிடி இருக்கணும்னு உங்களைப் பாத்து நான் கத்துக்கிட்டேன்பா. ஆச்சி இருந்தவரைக்கும் நீங்க ஒருநாள் கூட அவங்க மனசு நோகுற மாதிரி நடந்துக்கிட்டது இல்ல. என் அம்மா மனசை நான் வருத்தப்படவைக்கக்கூடாதுல்ல”
குணசேகரன் அந்த இடத்தில் நிதானித்தார். பூபாலன் சொன்னது என்னவோ உண்மைதான்! அவரது தாயார் உயிருடன் இருந்தவரையில் எதற்காகவும் அவர் மனம் நோகிவிடக்கூடாதெனக் கவனமாக இருப்பார்.
அவரது அன்னை வயோதிகத்தில் படுக்கையில் விழுந்தபோது முகம் சுழிக்காமல் குழந்தையைப் போல கவனித்தவராயிற்றே!
அதைப் பார்த்து வளர்ந்த பூபாலன் அன்னையின் மீது உயிராய் இருப்பதை எதிர்ப்பாரானால் சந்தர்ப்பவாதியாகி போவார் அல்லவா! எனவே அம்மாவுக்காக என்று பூபாலன் சொன்னதும் அமைதியாகிப் போனார்.
“சரிதான்! இருந்தாலும் வரலாறு திரும்பிடாம பாத்துக்கப்பா. புகுந்தவீட்டுக்கு வந்த அப்புறமும் பிறந்தவீட்டைக் கட்டிக்கிட்டு அழுறதை இப்பவாச்சும் அவ நிறுத்துனா நல்லது. என்னைக் கேட்டா போனது போனதாவே இருக்கட்டும்னு சொல்லுவேன். பணம் பணத்தோட குணம் குணத்தோடனு எழுதி வச்சிருக்காங்க. நமக்கு ஏத்த குணவதியா…”
“அந்தப் பேச்சே வேண்டாம்பா. என்னால மதியைத் தவிர வேற ஒருத்தியைப் பொண்டாட்டி ஸ்தானத்துல வச்சுப் பாக்க முடியாது. கவலைப்படாதிங்க! அவ சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டிட மாட்டேன். முன்னாடி எங்களுக்குள்ள காதல் இருந்துச்சு. இப்ப அது இருக்குதா இல்லையானு தெரியல. அதனால நான் மதிமயங்கி போயிடமாட்டேன்”
மகன் இவ்வாறு உறுதியளித்ததும் குணசேகரனின் ஈகோவுக்குப் பெருந்தீனி இல்லையென்றாலும் நொறுக்குதீனி கிடைத்துவிட்டது. அது திருப்தியானது.
பூபாலன் வீட்டுக்குள் வந்தவன் அன்னையிடம் போய் தாம்பூலப்பையைக் கொடுத்தான்.
அவர் அம்மியில் இழுத்து இழுத்துத் துவையல் அரைக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கவும் “அதை இப்பிடிக் குடுங்க” என்று குழவியை வாங்கிக்கொண்டவன் அரைக்க ஆரம்பிக்க மெல்லிய ஆச்சரியத்தோடு மகன் கொடுத்த தாம்பூலப்பைக்குள் என்ன இருக்கிறதெனப் பார்க்கலானார் சங்கரி.

வழக்கம் போல சாக்லேட், வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம் வைத்திருந்தார்கள். அழகான சணல் பையின் உள்ளே ஒரு துணி வைத்து அதில் மணமக்களின் பெயர்களை அச்சிட்டிருந்தார்கள்.
“பாரேன்! சிலர் இந்த மாதிரி கல்யாண வீட்டுல குடுக்குற பைக்கு வெளிய பேர் இருக்குனு பயன்படுத்த யோசிப்பாங்க. அதுக்காக இந்த மாதிரி உள்ள துணி வச்சு அதுல பொண்ணு மாப்பிள்ளை பேர் போட்டிருக்காங்கனு நினைக்குறேன். நல்ல யோசனைல்ல?”
அவர் சிலாகிக்கவும் “இது மதி குடுத்த ஐடியானு பெரிய மாமா சொன்னார்” என்றான் அரைத்த துவையலை வழித்துக் கிண்ணத்தில் வைத்தபடியே.
சங்கரியிடம் மெல்லிய சிரிப்பு! வான்மதி புத்திசாலி என்பதில் அவருக்கு என்றுமே பெருமை உண்டு.
“வானுமா கிட்ட பேசுனியா?” ஆர்வத்தோடு வினவினார்.
“அவளுக்கு நான் அங்க போனதே பிடிக்கல” என்றவனின் குரலில் கசப்பு வழிந்தது. கூடவே “எனக்கும் அவ முறைச்சப்பவே பத்திக்கிட்டு வந்துச்சு. எல்லா தப்பையும் செஞ்சுட்டு முறைப்பு ஒன்னுதான் அவளுக்கும் அவ அம்மைக்கும் கேடு” என்று வெடித்தான்.
சங்கரி அவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
“இப்பிடில்லாம் பேசக்கூடது பாலு. அவ சின்னப்பொண்ணு”
அம்மியைக் கழுவிக்கொண்டிருந்தவனோ “க்கும்! என் கூட வாழ்ந்திருந்தானா இந்நேரம் ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா ஆகிருப்பா. அவ சின்னப்பொண்ணா?” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
அதே நேரம் மண்டபத்தில் தனியே வான்மதியை அழைத்து மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார் பகவதி.
“நீ இனிமே அவரோட வாழ்க்கையில இல்லனு சொன்னவர் இப்ப மட்டும் ஏன் வந்து நிக்குறார்னு யோசி வானுமா. உன் அப்பா, சித்தப்பா சொல்லுறாங்கனு மறுபடி போய் அந்தப் பாதாளத்துல விழுந்துடாத. அவங்க யாரும் உன் வாழ்க்கைய வாழப் போறதில்ல. நீயும் உன் புருசனும்தான் வாழணும்”
கவலையோடு அவர் சொல்லும்போதே வான்மதியின் இதழில் குறுஞ்சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“என்ன சிரிக்குற?”
“நீயே உன் வாயால பாலாவ என் புருசன்னு சொல்லிட்டம்மா. இத்தனை நாள் நீ இப்பிடி சொல்லி நான் கேட்டதில்ல. சோ உன் கிட்டவும் மாற்றம் வந்திருக்கு”
அதைக் கேட்டதும் கடுப்பானார் பகவதி.
“என் வாய்ல பினாயிலை ஊத்திக் கழுவணும். ஏதோ ஆர்வக்கோளாறுல அந்த வீணாப்போனவனை..” என்று உரத்தக்குரலில் சொல்லிக்கொண்டிருந்தவரின் கன்னத்தில் யாரோ பளாரென அறைந்தார்கள்.
அன்னையும் மகளும் அதிர்ந்து போக அங்கே கோபத்தில் முகம் கண்கள் எல்லாம் சிவக்க நின்று கொண்டிருந்தார் நரேந்திரன்.
பகவதிக்குக் கன்னம் எல்லாம் எரிந்தது. பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் கணவரிடம் அறை வாங்கிவிட்டோமே என்ற அவமானக்கன்றல் வேறு!
“வீட்டு மாப்பிள்ளைய உன் வாய்க்கு வந்தபடி பேசுவியா? அறிவில்ல உனக்கு? பெரிய மனுசிதானே நீ?”
நரேந்திரன் கத்தவும் “அப்பா ப்ளீஸ்! வெளிய கேட்டுடப்போகுது” என்று அவரை அடக்க முயன்றாள் வான்மதி.
“முதல்ல நீ வாயை மூடு. உன் புருசன் அவர். நீதானே அவரோட கையைப் பிடிச்சு என் கிட்ட கூட்டிட்டு வந்து இவரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்பானு சொன்ன. எங்க போச்சு அந்த அன்பும் நம்பிக்கையும்? ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் வானுமா. நீ முழிச்சுக்காத வரைக்கும் இவ உனக்கு வேப்பிலை அடிச்சு உன் வாழ்க்கையை வீணாக்குறதை யாராலயும் தடுக்க முடியாது. முதல்ல இவளுக்கு ஒரு வழி பண்ணுறேன்” என்று உறுமினார்.
பகவதிக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“அப்பாஆஆ!’ அதிர்ச்சியில் வான்மதி உறைந்து போனாள்.
நரேந்திரன் ஏதோ தீர்மானித்தவராக இருவரையும் கூரிய விழிகளால் கூறு போட்டார்.
“மாப்பிள்ளையும் நீயும் பிரிய காரணமான இவளை நான் ஒரேயடியா விலக்கி வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
முகத்தில் அத்துணை கடினத்தோடு அவர் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது பகவதிக்கும் வான்மதிக்கும்.
“என்ன பேசுறிங்கப்பா? இந்த வயசுல…”
“எந்த வயசா இருந்தாலும் குடும்பத்துக்கும் குடும்பத்துல உள்ள ஆளுங்களுக்கும் நல்லது நினைக்காதவங்களை ஒதுக்கிவைக்கலாம் வானும்மா” என்றவரின் குரலில் இருந்த அழுத்தம் சொல்வதைச் செய்வார் எனப் புரியவைத்துவிட பகவதி புடவை முந்தானையை வாயில் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“மா! என்னப்பா இது?”
யார் பக்கம் பேசுவதெனத் தெரியாமல் வான்மதி அல்லாடிப்போனாள்.
மகளின் கையைப் பிடித்த நரேந்திரன் “அவ முகத்தைப் பாரு வானும்மா. அதுல உனக்குப் பயமும் வருத்தமும் தெரியுதா? பேரன் பேத்தி எடுக்குற வயசுல புருசன் ஒதுக்கிவச்சிடுவாரோங்கிற எண்ணமே இவ்ளோ பயத்தைக் குடுக்குது இவளுக்கு. நீ வாழவேண்டியவ. உன் புகுந்தவீட்டு ஆளுங்களைப் பத்தி தப்பு தப்பா சொல்லி உன் மனசைப் பாழாக்கி இன்னைக்கு உன்னை வாழாவெட்டியா நிறுத்தி வச்சப்ப இந்தப் பயம் எங்க போச்சு இவளுக்கு? அப்ப ஏதோ ஒலிம்பிக்குல தங்கமெடல் வாங்குன மாதிரி திரிஞ்சாளே! பெத்த வயிறு ஒரு தடவை கூடவா பதறல? நீ முட்டாள் வானும்மா! நான் கோவக்காரன். என் கூட இத்தனை வருசம் உன் அம்மா வாழ்ந்துட்டிருக்கா. உன் அண்ணன் முரடன். மருமக அதுக்காக அவனை விட்டுட்டுப் போயிடல. இங்க எல்லாரும் அவங்களுக்குள்ள இருக்குற சின்ன சின்ன குறைய மறந்து சந்தோசமா தம்பதிகளா வாழுறாங்க. நீ மட்டும்தான் உப்புக்குப் பெறாதக் காரணத்துக்காக உன் வாழ்க்கையை தொலைச்சுட்டு வந்து நிக்குற. இன்னைக்கு மருமகன் வந்து நின்னது பெரியவங்க வார்த்தைய மதிச்சு. நீ என் வார்த்தைக்கு மரியாதை குடுக்குறவனா அவர் கூட பேசி சமரசம் ஆகப் பாரு. கல்யாணம் ஆகி பூமி இந்த வீட்டைப் போறப்ப நீ மாப்பிள்ளை கூட உன் புகுந்தவீட்டுக்குப் போகணும். இல்லனா உன் அம்மாவ விலக்கி வைக்குறதைத் தவிர எனக்கு வேற வழியில்ல”
தீர்மானமாகச் சொல்லிவிட்டு நரேந்திரன் போய்விட திக்பிரமை பிடித்துப் போய் நின்றார்கள் வான்மதியும் பகவதியும்.
பகவதிக்குக் கணவரின் கோபத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர் கோபத்தில் முடிவெடுத்தார் என்றால் கண்டிப்பாகச் செய்துவிடுவார்.
இந்த வயதில் கணவனால் ஒதுக்கிவைக்கப்பட்டால் எங்கே போய் நிற்பது என்ற பயம் அவரைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.
வான்மதி பூமிகாவுடன் படுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
திருமண மண்டபத்தின் கேரிடாரில் நின்று வானத்தை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.
அனைத்தும் ஆரம்பித்தது ஒரு திருமணத்தில்தான்! பூபாலனுடனான முதல் சந்திப்பு, அவர்களின் காதல், இருவீட்டாரின் ஒப்புதலுக்கானப் போராட்டம் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வர நினைவுச்சங்கிலியின் கடைசி கண்ணியான அவர்களின் பிரிவும் வந்து தொலைத்தது.
காதலும் புரிதலும் இருந்தால் வாழ்க்கை அமோகம் என்பார்கள். இவை இரண்டும் இருந்தும் அவர்களின் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியானது. அப்படி என்றால் மூன்றாவது ஏதோ ஒரு மறைமுகக்காரணி இருக்கிறது என்றுதானே அர்த்தம்! அது எது?
யோசனையில் ஆழ்ந்தவளை மறுநாள் முகூர்த்தத்துக்குப் பூமிகாவைத் தயார் செய்ய வேண்டும் என்பதால் உறங்க அழைத்துச் சென்றார் மிருதுளா.
சித்தியின் அருகே படுத்துக்கொண்டாலும் உறக்கம் வரவில்லை. மிருதுளாவுக்கு அது தெரிந்தது போல. திரும்பிப் படுத்து வான்மதியின் சிகையைக் கோதிவிட்டார்.
அத்துணை இதம் அதில்! வான்மதியின் கண்கள் மெல்ல கரிக்கத் தொடங்கியது.
“எல்லாம் சரியாகிடும் வானுமா. அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தங்கச்சினு எல்லாரையும் மறந்துட்டு மாப்பிள்ளைய பத்தி மட்டும் யோசி. அவரைக் காதலிக்குறப்ப எப்பிடி எல்லாத்தையும் மறந்துட்டு அவரை மட்டும் நினைச்சிட்டிருந்தியோ அந்தப் பழைய வான்மதியா இருக்கப் பழகு. நிறைய பிரச்சனைக்குத் தீர்வு கிடைச்சிடும். இப்ப தூங்கு. காலையில பாக்குறப்ப ஃப்ரெஷா இருக்கணும்ல”
ஆதுரமாகப் பேசி அவளை உறங்க வைத்தார்.
காலையில் எழுந்தவளின் மனம் நிர்மலமாக இருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் தங்கையின் திருமணத்துக்காகத் தயாரானாள்.
அன்றும் மிருதுளா அவளை அழகானப் பட்டுப்புடவை, அணிமணிகள் அணிந்து வலம் வர வைத்துவிட்டார்.
ஒரு பக்கம் பூமிகாவுக்கு மேக்கப் நடந்துகொண்டிருக்கையில் அவள் வெறும் வயிறாக இருக்கக்கூடாதென பழங்களைச் சிறுதுண்டுகளாக வெட்டி ஊட்டிக்கொண்டிருந்தாள் வான்மதி.
யாரோ ஒரு தூரத்து உறவுப்பெண்மணி “இந்தா வானு, நேத்து முழுக்க உன் வீட்டுக்காரரு மண்டபத்துல சுத்தி வந்தாவ. இப்ப என்ன ஆளையே காணும்?” என்று கேட்க
“மாமா அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க சித்தி. இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாங்க” என்று பூமிகா பதிலளிக்க
“அக்காவ கேட்டா தங்கச்சி கிட்ட இருந்து பதில் வருது” என்றார் அந்தப் பெண்மணி கேலியாக.
வான்மதி என்ன பதில் சொல்லவெனத் தெரியாமல் விழித்தாள்.
“அவளுக்கு அவ கல்யாணம் ஞாபகம் வந்திருக்கும். ஷப்பா! நம்ம ஊர்ல இருந்து மண்டபத்துக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சுல்லக்கா” என்று இன்னொரு பெண்மணி கூற
“ஆமா! இவளோடது லாக்டவுன் கல்யாணம் ஆச்சே” என்று அவர் சொல்ல அங்கே சிரிப்பலை.
வான்மதிக்கே சிரிப்புதான் வந்தது. பெருந்தொற்று காலத்தில் நடந்த திருமணம் அவளுடையது. அதிக நபர்கள் வரவில்லை. வந்தவர்களும் ஈ-பாஸ் என்ற அனுமதியை வாங்கிக்கொண்டு வந்தவர்களே! சிலருக்கு அது கிடைக்காததால் கலந்துகொள்ள முடியாமல் போன் மூலம் வாழ்த்து கூறினார்கள்.
நகைச்சுவை தருணங்கள் நினைவுக்கு வந்தபோதே அந்தத் திருமணத்தில் அன்னை முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு இருந்ததும் நினைவுக்கு வந்தது.
“லாக் டவுனை விலக்குனதுக்கு அப்புறமா நவம்பர்ல கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னதுக்கு உன் மாமனார் சம்மதிச்சாரா? நடந்தா இப்பவே நடக்கணும்னு பிடிவாதம். பாரு! நம்ம உறவுக்காரங்க வராம இப்பிடி ஆள் அம்பு இல்லாம கல்யாணம் நடக்குது. உனக்கு எப்பிடிலாம் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு நான் ஆசைப்பட்டேன் தெரியுமா? இல்லாதவங்க வீட்டுக்கல்யாணம் மாதிரி பண்ணுற சூழல் வந்துடுச்சே”
அவர் அன்றைய தினம் புலம்பியதும் ஞாபகத்துக்கு வந்தது. அன்றே எந்த வீட்டுப்பெரியவர்கள் பூபாலன் – வான்மதி தம்பதியின் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதென்ற போராட்டத்திற்கான முகவுரை எழுதப்பட்டது எனலாம்.
வான்மதி யோசிக்கும்போதே விறுவிறுவென மணமகள் அறைக்குள் நுழைந்தார் பகவதி.
“வானுமா! என் கூட வா”
முகம் மலர அவர் அழைக்கவும் வான்மதியும் அன்னையோடு கிளம்பினாள்.
“என்னம்மா விசயம்?”
“நீ வா முதல்ல”
மகளின் கையைப் பிடித்து ஆசையோடு அழைத்துச் சென்று ஒரு பெண்மணியின் முன்னே நிறுத்தினார் பகவதி.
அந்தப் பெண்மணியின் முகம் வான்மதியைக் கண்டதும் மலர்ந்தது. அவரருகே அமர்ந்திருந்த ஆடவனின் முகத்தில் தெரிந்த மெல்லிய ஆர்வம் அவளுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியது.
“என் மக வான்மதி. டெக்னோசிஸ் கம்பெனில ஒர்க் பண்ணுறா”
“நல்லா இருக்கியாம்மா?” என்று அந்தப் பெண்மணி முறுவலோடு கேட்க
“டெக்னோசிஸ் எந்த ப்ராஞ்ச்? என ஆர்வத்தோடு கேட்டான் அந்த ஆடவன்.
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நான் பரனூர் ப்ராஞ்ச்ல ஒர்க் பண்ணுறேன்” என இருவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுத்தாள் வான்மதி.
“நீயும் அங்க தானே முதல்ல ஒர்க் பண்ணுன ரவி?” என்று அந்த ஆடவனிடம் அவனது அன்னை கேட்க அவன் ஆமோதித்தான்.
“ரவி வான்மதி பேர் கூட எவ்ளோ பொருத்தம்! ரெண்டு பேரும் ஒரே புரொபசன்ல இருக்குறது ரொம்ப நல்லது பகவதி. வேலைய வச்சு சண்டை போட்டுக்கமாட்டாங்க” என அப்பெண்மணி பேசுகையில் வான்மதி குழம்பிப்போனாள்.
“என்னம்மா நடக்குது இங்க?” அன்னையின் காதைக் கடித்தாள்.
“வெங்கடேஷோட பெரியம்மா. இந்த ரவி உனக்கு நான் பாத்திருக்குற மாப்பிள்ளை” என்று சொல்லி அவளை அதிர வைத்தார் பகவதி.
“நேத்து நைட் அவ்ளோ நடந்தும்…” எனத் தடுக்க முயன்ற மகளைக் கையமர்த்தியவர் “எனக்கு உன் வாழ்க்கைய விட வேற எதுவும் முக்கியமில்ல வானும்மா. உன்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி நீ சந்தோசமா இருக்கணும்” என்றார் உறுதியானக் குரலில்.
“ம்மா…”
வான்மதி மறுப்பைப் பதிவு செய்யப்போன நேரத்தில் யாரோ அவளது தோளை அணைத்தார்கள். அவள் திகைத்து திரும்ப அங்கே ஆலிவ் வண்ண குர்தா மற்றும் வேஷ்டியில் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான் பூபாலன்.

பகவதியின் அதிர்ச்சியை விட வான்மதியின் திகைத்து விரிந்த விழிகளில்தான் அவனது கவனம் அதிகமாகப் பதிந்திருந்தது. அவளது தோளில் அவனது கரத்தின் அழுத்தம் அதிகமானபோதே “ஓஹ்! அடுத்த P.D.A மொமண்டா?” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள் வான்மதி.
கண்டிப்பாக அன்னையும் தானும் இப்போது பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்த பிற்பாடுதான் இவ்வாறு வந்து நின்றிருப்பான். என்ன எதிர்வினையாற்றுவானோ எனப் படபடக்க ஆரம்பித்தது அவளது இதயம்.