கோபத்தில் தவற விட்ட வார்த்தைகளை எண்ணி நான் வருந்திய நாட்கள் அனேகம். நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி பிரிவே நிரந்தரமென ஆகிவிட சாசனம் எழுதியவையாயிற்றே எனது வார்த்தைகள்! நிதானமாகப் பேசவும், அமைதியைக் கையாளவும் நான் முயலும் போதெல்லாம் எனையறியாது பழைய நாட்களின் பாதிப்பு ஊடு பாவாக நுழைந்து வரம்பு மீற வைத்துவிடுகிறது என் நாவை. உண்மையில் கோபத்தை அடக்குவதும், வார்த்தைகளை நிதானமாக உதிர்ப்பது கலைகளே! அதைச் சரிவரக் கற்றுக்கொண்டவர்கள் உறவிலும் சரி, உலகிலும் சரி ஜெயிப்பார்கள்.
-பூபாலன்
“எத்தனை தடவை சொன்னாலும் வானுமா கேக்கவே மாட்றா. நம்ம தகுதிக்குக் குறைவா ஏன் யோசிக்குறானு தெரியல”
உச்சுக்கொட்டியபடி வான்மதிக்காக செய்யச் சொன்ன தின்பண்டங்கள் நிரம்பிய பெரிய டப்பர்வேர் கொள்கலன்கள் அடங்கிய பையைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார் பகவதி.
“அச்சுமுறுக்கு இன்னொரு ஈடு செய்யச் சொல்லிருக்கலாம்” என்று அவரோடு சேர்ந்து முந்திரி கொத்து இருக்கு,ம் டப்பாக்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தார் மிருதுளா.
வழக்கமாக வான்மதி பொன்விளைக்கு வந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பும்போது செய்து கொடுக்கும் தின்பண்டங்களும், ஊறுகாய் தொக்கு வகைகளும் இம்முறையும் அவளது உடமை நிரம்பிய ரோலர் சூட்கேஸை நிரப்பாவிட்டால் அது தவறாயிற்றே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதை விட்டுவிடுவோம்! பகவதி சொன்ன தகுதிக்குக் குறைவானச் செயல் என்ன தெரியுமா? வான்மதியின் இரயில் பயணம். அது என்னவோ இரயில் என்றாலே அவருக்கு வேப்பங்காய். ஆனால் வான்மதிக்கோ இரயில் பயணங்கள் மீது அலாதி பிரியம்.
இத்தனைக்கும் ஏ.சி பெட்டிகளில்தான் அவள் பயணிப்பாள். அதே பகவதி அம்மையாருக்குத் தகுதி குறைவாம்!
“வேணும்னா உன் மதினிய ப்ரைவேட் ஜெட் ஒன்னு வாங்கி வீட்டுக் கொல்லைப்புறத்துல விடச் சொல்லு மகேந்திரா. மக மெட்ராசுக்குக் கிளம்புறப்ப அதுல ஏத்தி விடச் சொல்லு”
எரிச்சலோடு கூறிய நரேந்திரனின் குரல் பகவதியின் காதில் விழாமலா இருக்கும்? உதட்டைச் சுழித்தார் அவர்.
“எந்தத் தரமும் பாக்காம இவர் இருக்குற மாதிரி என் பொண்ணையும் மாத்திட்டார். ஏதோ நேசனாவது என்னை மாதிரி இருக்குறான் மிருதுளா”
அவனை மருமகள் மாற்றிவிட்ட விசயம் எல்லாம் இன்னும் அவருக்குத் தெரியாது.
“இன்னும் எவ்ளோ நேரம் எடுத்து வச்ச பாத்திரத்தை வேடிக்கை பாத்து நேரத்தைக் கடத்துவாளாம்? நேரமாகுது. ஏழே முக்காலுக்கு ட்ரெயின் கிளம்பிடும். வெறும் ஸ்டேசனைப் பாக்கவா அச்சு முறுக்கும், முந்திரி கொத்தும் செஞ்சு நிரப்புனது?”
நரேந்திரன் உத்திரத்தைப் பார்த்து சிடுசிடுக்கவும் வேகமாக எழுந்தார் பகவதி.
அடுத்தச் சில நிமிடங்களில் அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு கார் முத்தரசி இல்லத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்பை நோக்கி விரைந்தது.
வான்மதி தனது பெட்டி எதுவென அன்னைக்கு வாட்சப்பில் தகவல் சொல்லியிருந்ததால் இரயிலில் ஏறி அவள் அமர்ந்திருந்த பெட்டியை அடைவது இருவருக்கும் சுலபமாக இருந்தது.
பக்கவாட்டில் இருக்கும் இருக்கையில் மேல் இருக்கை அவளுடையது. ஆனால் கீழிருக்கைக்குரிய நபர் வராததால் ஷோல்டர் பேக்கை மட்டும் மேலே வைத்துவிட்டுக் கீழே அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள் வான்மதி.
மகள் தனியே இருப்பதைக் கண்டதும் பகவதிக்கு மனம் தாங்கவில்லை. எப்போதும் வீட்டிலிருந்து அவள் கிளம்புகையில் அவரும் நரேந்திரனும் துணையாக வருவார்கள். இப்போது பூபாலனோடு வந்திருப்பாள் என்று எண்ணியவருக்கு அவள் தனியே உட்கார்ந்திருந்த கோலம் எரிச்சலையூட்டியது.
“உலகத்துல இல்லாத மருமகர்னு தலையில தூக்கிவச்சு ஆடுவிங்களே! நம்ம பிள்ளை ஆள் அம்பு இல்லாதவ மாதிரி தனியா வந்து உக்காந்திருக்கா. இப்ப எங்க போனாராம் உங்க மருமகர்?”
இரு தினங்களில் பூபாலனை அவன் இவன் என்று சொன்னதற்காக நரேந்திரன் காட்டிய கடுமையில் மருமகன் கூட மருமகர் ஆகிவிட்டது. அதுவும் கேலிதான் என்று நரேந்திரனுக்கும் தெரியும்.
தங்களைக் கண்டதும் வான்மதி சிரித்ததில் மனைவிக்குப் பதிலடி கொடுக்கவேண்டியது முக்கியமாகப் படவில்லை அவருக்கு.
“இந்தா வானுமா” என்று டப்பர்வேர் அடங்கிய பெரிய பையை அவளிடம் கொடுத்த பகவதி அவளருகே அமர்ந்து கொள்ள இன்னொரு பக்கம் நரேந்திரன் அமர்ந்துகொண்டார்.

“நீ தனியாவா வந்த வானுமா?”
வான்மதி பதில் சொல்ல வாயெடுத்த கணத்தில் “அது எப்பிடி மதியை நான் தனியா விடுவேன்?” என்று பூபாலனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
அதைக் கேட்டதும் பகவதியின் மனதில் சின்னதாக நிம்மதி. இந்தளவுக்காவது என் மகள் மீது அக்கறை இருக்கிறதே!
“இதை வச்சுக்க”
சாப்பிட சப்பாத்தி மற்றும் குருமா அடங்கிய பார்சல், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்கள் கூடவே ஒரு மாதச் சஞ்சிகை அடங்கிய கவரை நீட்டினான் பூபாலன் அவளிடம். இரயில் பயணத்தில் புத்தகம் படிக்க வான்மதிக்குப் பிடிக்குமென அறிந்தவனாயிற்றே!
முந்தைய இரவில் அவன் உதிர்த்த வார்த்தைகள் கொடுத்த வலிக்கு இந்த அன்புச்செய்கை மருந்திடுவது போல இருக்கவும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் வான்மதி.
‘பார்த்தாயா என் மருமகனின் அன்பை’ என்று கர்வமாகக் கண்ஜாடை மூலம் பகவதிக்கு அங்கே நிகழ்ந்த காட்சியைச் சுட்டிக்காட்டினார் நரேந்திரன்.
பகவதி வேறு ஒன்றும் பேசவில்லை.
அருகில் இருந்த நீளமான இருக்கையில் அமர்ந்துகொண்டவனிடம் நரேந்திரன் சங்கரியின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார்.
“ஐசொலேசன்ல வச்சதுல இருந்து இருமல் குறைஞ்சிருக்குனு அம்மா சொல்லுறாங்க மாமா. ஆனா எனக்குப் பெருசா வித்தியாசம் தெரியல. எப்பிடியும் ஆறு மாசம் மருந்து மாத்திரைனுதான் ஓடும்”
“வருத்தப்படாதிங்க மாப்பிள்ளை. அவங்க சீக்கிரமே சரியாகிடுவாங்க. மதியும் கிளம்பிட்டானா உங்களுக்கும் சம்பந்திக்கும் சாப்பாடு?”

பூபாலன் வான்மதியைப் பார்த்தான். அவன் இடத்தில் வேறொரு ஆண் இருந்திருந்தான் என்றால் கட்டாயம் ஏளனம் செய்திருப்பான். வான்மதி சாப்பாடு பார்சலைப் பிரித்து தட்டில் வைப்பதற்கு மட்டும்தானே அவன் வீட்டுச் சமையலறைக்குள் நுழைவது. ஆனால் அவன் அப்படி செய்யவில்லை.
“பக்கத்துல மெஸ் இருக்கு மாமா. அங்க வீட்டுச்சாப்பாடு மாதிரியே சமைப்பாங்க. டேஸ்டும் நல்லா இருக்கும். வயித்துக்கும் பிரச்சனை வராது”
“நல்லது மாப்பிள்ளை. நான் வேணும்னா பாபு மூலமா குடுத்தணுப்பச் சொல்லட்டுமா?”
பாபு அவரது கார் ஓட்டுனர். பூபாலன் பணிவோடு மறுத்தான்.
“எதுக்கு மாமா சிரமம்? நான் பாத்துக்குறேன்”
நான்கு ஆண்டுகள் இருந்த இடைவெளி மெதுவாகத்தானே மறையும்.
நரேந்திரன் புரிந்துகொண்டார்.
“அதுக்காக அங்க வராமலே இருப்பேன்னு நினைச்சுடாதிங்க. அடிக்கடி வருவேன். மதி, மித்ரன் இல்லாதப்ப நான் தானே உங்களைக் கவனிச்சுக்கணும்?”
அவனது பேச்சின் எதிரொலியாக வான்மதியின் முகம் மலர பகவதியோ நம்பாதப் பாவனை காட்டினார். பூபாலனின் வரலாறு அப்படி.
திருமணமானப் புதிதில் மறுவீட்டுக்கு வந்ததோடு சரி! அதன் பின்னர் வான்மதி தனியாகவே முத்தரசி இல்லத்துக்கு வருவாள். அழைத்துச் செல்ல வருபவன் காபியோடு விருந்துபசாரத்தை முடித்துக்கொள்வான்.
“மாமனார் வீட்டுல அடிக்கடி கை நனைச்சா நம்மளை ஏப்பை சாப்பைனு நினைச்சுடுவாங்க பாலு. தங்குறது, விருந்து சாப்பிடுறதுலாம் வேண்டாம். அதுவும் உன் மாமனார் குடும்பம் பணக்காரங்க வேற” என்று அடிக்கடி அவன் காதில் ஓதி அதுதான் உண்மையெனப் பதியவும் வைத்திருந்தார் குணசேகரன்.
பகவதி கொஞ்சம் ஏறுக்குமாறு நடந்துகொண்டாலும் நரேந்திரன் ஒரு தந்தையின் பாசத்தோடுதான் அப்போதெல்லாம் அவனை அணுகுவார். அதைக் கூட அவன் இலட்சியம் செய்ததில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
அதனால்தான் பகவதிக்கு அவன்மீது நம்பிக்கையே கிடையாது.
வான்மதியின் பக்கம் பூபாலனின் கவனம் திரும்பியது.
“இப்ப குடு” சொன்னவனின் குரலில் இருந்த விசமம் வான்மதிக்குத் திக்திக் உணர்வை உண்டாக்கியது.
எதைக் கேட்கிறான் இவன் என அவள் குழம்ப அவளது பெற்றோரோ இது கணவன் – மனைவி இடையேயான இரகசியக் குறிப்புப் பேச்சு போல என்று புன்னகைத்தார்கள்.
“எதைக் கேக்குறிங்க?” சங்கடத்தோடு வினவினாள் வான்மதி.
“நேத்து நைட் எனக்குக் குடுக்குறதா சொன்னியே அதைத்தான்” என்றவன் கண் சிமிட்ட வேறு செய்ய, பகவதிக்குத் திகைப்பு.
“உங்க மருமகருக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே இல்ல. பெரியவங்க இருக்காங்களேனு கூச்சமில்ல” என்று நரேந்திரனின் காதில் முணுமுணுத்தார் அவர்.
பூபாலனுக்குக் கண்களால் வான்மதி காட்டிய சமிக்ஞைகள் அனைத்தும் வீணாயின.
“நீ குடுக்குறியா? இல்ல நானே எடுத்துக்கட்டுமா?” என்று அவன் எழுந்திருக்க
“என்ன பேசுறிங்க நீங்க? அதுவும் அப்பா அம்மா முன்னாடி?” என்று இரகசியக்குரலில் அவன் காதில் கிசுகிசுத்தாள் வான்மதி. அவளும் அவனோடு எழுந்து நின்றாள்.
“என்ன கேட்டேன்? நான் எதுவும் மோசமா கேட்டுடலையே” என்றவன் கை நீட்டினான்.

இப்போதும் வான்மதிக்குப் புரியவில்லை.
“ஏ.டி.எம் கார்ட் குடுங்க பொண்டாட்டி மேடம். இந்த மாசம் செலவு என் கையைக் கடிக்குது. நீங்க உதவுனிங்கனா நல்லா இருக்கும்”
வான்மதியால் அவளது கண்களையே நம்ப முடியவில்லை. நேற்றிரவு அவ்வளவு வைராக்கியமாக வேண்டாம் என்றானே! இப்போது ஏன் இந்த மாற்றம்?
அவள் குழம்ப, பூபாலனோ “குடுக்க மனசு வரலையா?” என்று கேட்க பகவதிக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
இவன் என் மகளைப் பணத்துக்காக மீண்டும் அவனது வாழ்க்கைக்குள் அனுமதித்திருக்கிறான் என்ற அவரது எண்ணம் இன்னும் உறுதியானது.
வான்மதி அவசரமாகத் தனது ஹேண்ட்பேக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டை எடுத்து அவனது உள்ளங்கையில் வைத்தாள்.
“தேங்க்ஸ் மதி” என்றவனின் குரலில்தான் அத்துணை சாந்தம். நேற்றிரவு இருந்த கோபம் கிஞ்சித்தும் இல்லை.
“இதை என்னை ஸ்டேசனுக்கு அழைச்சுட்டு வந்ததும் கேட்டிருக்கலாமே?”
“அப்ப கேட்டிருந்தா இப்ப உங்கம்மா முகம் மாறுற போக்கைப் பாத்திருக்க முடியாதுல்ல” கண்களால் பகவதியை அவன் காட்ட வான்மதி அவனை முறைத்தாள்.
“எதுக்கு முறைக்குற? ஒரு நாள்ல ஆயிரம் தடவை எங்கப்பாவ நீ குத்தம் சொல்லுற. நான் கேட்டுட்டுத்தானே இருக்குறேன். உன் அம்மா என்னைப் பண விவகாரத்துல பேசுன விதம் ரொம்ப மோசம். இப்ப அவங்க எதிர்ல உன் கிட்ட கார்ட் வாங்குனா அவங்களுக்குப் பாடம் கத்துக் குடுத்த நிம்மதி எனக்குக் கிடைக்குது. நீயும் இப்ப சந்தோசமா இருக்கல்ல? அது போதும்”
வான்மதியால் அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவளுக்குள் மெல்லியதாக ஒரு சந்தோசம் இதழ் விரித்தது என்னவோ உண்மை!
முன்பெல்லாம் அவன் பணம் வாங்க மறுத்தபோது அடிபட்ட அவளது நேசம் மெதுவாக எழுந்து நிற்க முயற்சி செய்தது அந்நொடியில்.
இரயில் கிளம்புவதற்கான ஒலி எழுந்ததும் மற்ற மூவரும் வான்மதியிடம் சொல்லிக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
பகவதியின் முகம் போன போக்கை இரசித்தவன், மறக்காமல் மனைவிக்கு டாட்டா காட்டினான். அவள் முகம் மலர்ந்ததில் அவனது இதயமும் புத்துணர்ச்சி கண்டிருந்தது.
நரேந்திரனும் பகவதியும் காரில் கிளம்பியதும் அவனும் தனது பைக்கைக் கிளப்பினான்.
வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம் அன்னையைக் காணச் சென்றபோது அவர் சொன்ன அறிவுரையே காதில் ஒலித்துகொண்டிருந்தது பூபாலனுக்கு.

“மதி உன்னோட பொண்டாட்டி. அவளுக்கு உன் மேல அக்கறை இருக்குறதாலதான் கார்டை நீட்டிருக்கா. அதுல என்ன ரோசம் உனக்கு? பழசைப் பேசி உன் வாழ்க்கைய ரொம்ப சிக்கலாக்கிக்காத பாலு. நம்ம வீட்டுல இருந்தவரைக்கும் அவளுக்கு மத்த விசயத்துல வருத்தம் இருந்திருக்கலாம். ஆனா உன் மேல அவ வச்ச அன்பை எதுக்காகவும் குறைச்சிக்கிட்டதில்ல. அவ ஏதோ ஆர்வத்துல அவங்கம்மா கிட்ட சொல்லி அதை அவங்க பெருசுப்படுத்துனதால நீ ஏன் அவளைக் காயப்படுத்துற? கணவன் மனைவிக்குள்ள ‘நீயெல்லாம் எனக்கு உதவணுமா?’ங்கிற எண்ணம் வரவேக்கூடாது பாலு. வயோதிகத்துல தள்ளாமை வந்தா நீங்க ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருந்துதானே ஆகணும். அப்ப அவ உதவி வேண்டாம்னு சொல்ல உன் உடம்புல தெம்பு இருக்காது. தெம்பு இருக்குறப்ப ஆம்பளை திமிரால அவ உண்மையான அன்போட செய்யுற எதையும் மறுக்காத. அது அவ அன்புக்கு நீ செய்யுற அநியாயம்:’
நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்து மகனுக்குப் பாடம் எடுத்திருந்தார் சங்கரி. அதன் பலனால் இப்போது மலர்ந்திருந்தன இரு இதயங்கள்!
இரயிலில் வான்மதியின் முகமும் கனிந்திருந்தது. இத்தனை நாட்கள் செய்யாத ஒரு காரியத்தை அவள் செய்யத் துணிந்தாள். மொபைலை எடுத்தவள் வாட்சப்பில் அவனது எண்ணுக்குச் செய்தி அனுப்ப எத்தனித்தாள்.
ஆனால் என்ன அனுப்புவது? நான்கு ஆண்டுகளில் பிரிந்திருந்தபோதும் ஒருவர் எண்ணை மற்றொருவர் அழிக்கவில்லை. ஏன் வைத்திருக்கிறோம் என்ற காரணம் தெரியாமல் இருவரது மொபைலிலும் அந்த எண்கள் உறங்கிக்கொண்டிருந்தன.
அவற்றின் உறக்கத்தை முதலில் போக்குவோமென வாட்சப்பைத் திறந்தவளுக்குத் தட்டச்சு செய்யத்தான் கை வரவில்லை.
யோசித்தாள்! யோசித்துக்கொண்டிருக்கையில் டி.டி.ஆர் வந்து அவளது பயணச்சீட்டு விவரத்தைச் சரிபார்த்துச் சென்றுவிட்டார்.
நகம் கடித்தாள். நெற்றியைத் தடவிக்கொண்டாள்.
“டச் விட்டுப் போச்சு. அதான் என்ன பேசணும்னு தெரியல” என்று தனது தடுமாற்றத்துக்குக் காரணமும் சொல்லிக்கொண்டாள்.
அதற்குள் கீழிருக்கை பயணி வரவும் மேலே இருக்கும் தனது இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டவள் தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக நேரத்தைக் கழித்தாள். இரயிலில் பிரயாணிகள் உறங்குவதற்காக விளக்குகளும் அணைக்கப்பட்டன. அவள்தான் செய்தி அனுப்பாமல் அல்லாடிக்கொண்டிருந்தாள்.
திடுமென அவளது வாட்சப்பில் ஒரு செய்தி முளைத்தது.
“ரொம்ப நேரமா எதையோ டைப் பண்ணுற போல. எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டுச் சாப்பிடு. நல்லா தூங்கு. ஆபீஸ் போகணும்ல. குட்நைட்”

அனுப்பியவன் அவள் கணவனே! அவள் இவ்வளவு நேரம் தொடுதிரை விசைப்பலகையில் ஆடிய தடுமாற்றத்துடனான ஆட்டத்தைப் பூபாலனின் வாட்சப் ‘typing..’ என்ற வாக்கியத்தைக் காட்டியதன் மூலம், போட்டுக் கொடுக்கும் எட்டப்பன் வேலை செய்துவிட்டதே!
வான்மதி ஏதோ முதல் முறையாக அவனிடமிருந்து செய்தி வந்தது போல உணர்ந்தாள்.
“குட் நைட் பாலா” என்ற வாக்கியத்தைத் தட்டச்சு செய்து அனுப்புவதற்குள் அவளுக்குள் அத்துணை தடுமாற்றம்!
“குட் நைட். சாப்பிடு. போன் பாக்காம படுத்து தூங்கு. மானிங் பேசலாம்” என்று அவன் செய்தி அனுப்பிவிடவும் சரியென்று வாட்சப்பிலிருந்து வெளியேறியவள் அவன் வாங்கி வந்த சப்பாத்தி குருமாவை விழுங்கிவிட்டுப் படுத்தாள்.
முந்தைய இரவு அவளது உறக்கத்தை யாருடைய வார்த்தைகள் கெடுத்தனவோ அவனுடைய வார்த்தைகளே அன்றிரவு அவளுக்கு நிம்மதியான நித்திரையைக் கொடுத்தன.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!