“ஒரு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட மனிதன் பொதுமுடக்கத்தின் போது சிறியளவில் காய்ச்சலோ இருமலோ தாக்கினால் மருத்துவரைச் சந்திக்கிற போது அம்மருத்துவர் அவனுக்கு கோவிட் பரிசோதனையுடன் தனிமைப்படுத்துதலை பரிந்துரைப்பார். இத்தகைய தனிமைப்படுத்துதலின் போது சுற்றியுள்ளவர்கள் அவனை ஒதுக்கும் விதம், தன்னிடமிருந்து நோய் தனது குடும்பத்தினருக்குப் பரவி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். இத்தகைய மன அழுத்தம் அவனை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடும். அத்துடன் பொதுமுடக்கத்தால் வருமானத்திற்கு வழியின்றி வறுமையில் தள்ளப்பட்டது, பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மந்தநிலை, வருவாய் மற்றும் வாங்கும் சக்தியில் உண்டான சரிவு, வேலையின்மை, கழுத்தை நெறிக்கும் கடன் இவையனத்துமாகச் சேர்ந்து அனேக மக்களிடம் தற்கொலை எண்ணத்தை விதைத்து விடும்.
-விஷ்ணு வர்மா, தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ், 28 ஆகஸ்ட், 2021…
ஜனவரி 6, 2022, (சம்பவங்கள் அனைத்தும் நடந்த நாளுக்கு மறுநாள்)…
பணத்தைப் பறி கொடுத்த துக்கத்தில் பூமாரிக்கும், சம்பளம் வர தாமதமான சோகத்தில் சுப்புசாமிக்கும் முந்தைய இரவு உறங்கா இரவாகவே விடிந்தது.
சிறிது கண்ணயர்ந்தாலும் கனவில் சந்தனபாண்டி வட்டிப்பணம் கேட்டு மிரட்டும் காட்சி வந்தது. அடுத்தோ தன் மகளுக்கு மட்டும் தாய்மாமன் சீர் செய்ய வலிக்கிறதா என்று கேட்டபடி பொன்னம்மா ருத்ர தாண்டவமாடும் காட்சி தோன்றியது.
இத்தகைய பொல்லாத கனவுகளுக்கு மத்தியில் எப்படி அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்? இருவரும் கட்டிலில் படுத்துறங்கும் சுமதியைப் பார்த்தபடி ஆளுக்கொரு மூலையில் முடங்கிக் கிடந்தனர்.
பொழுது விடிந்ததும் சுமதியை மெதுவாய் எழுப்பினாள் பூமாரி. ஆனால் அவளோ விழிக்கவில்லை. பூமாரி பதறிப் போனவளாக மகளின் கழுத்தில் கைவைத்துப் பார்க்க உடலோ அனலாய் கொதித்தது.
உடனே பயந்தவளாக அறையின் மற்றொரு மூலையில் அமர்ந்திருந்த கணவனிடம்
“புள்ளைக்கு உடம்பு அனலா கொதிக்குதுய்யா” என்றாள் தவிப்புடன்.
சுப்புசாமி வேகமாக வந்து மகளின் நெற்றியில் கை வைத்து பார்த்தவன் “ஆமா மாரி… திடீர்னு ஏன் காச்சல் அடிக்கு?” என்று புரியாமல் திகைக்க
“எல்லாம் உன் அக்காக்காரியால வந்தது தான்… பச்சப்புள்ளைய வாய்க்கு வந்தபடி ஏசிட்டுப் போயிருக்காய்யா” என்றாள் பூமாரி குமுறலுடன்.
“அக்கா ஏன் சுமதிய ஏசுனா? வெளங்குத மாதிரி பேசுலா” என்றவனிடம் முந்தைய நாளிரவு மகள் கூறியவற்றை ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள் அவள்.
“படிக்கிற பிள்ளையலுவோ பொஸ்தகத்த மாத்தி மாத்தி படிக்கது வழக்கம் தானய்யா… அத உன் அக்காக்காரி கேவலமா பேசுவாளா? அவ மவ வயசு தான நம்ம சுமதிக்கும்… கொஞ்சமாச்சும் நெஞ்சுல ஈரம் இருந்தா என் மவளை இப்பிடி பழிச்சொல் சொல்லிட்டுப் போயிருப்பாளா? இனிமே அவளுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் கெடையாது பாத்துக்க… அக்கா மவ சமைஞ்சதுக்குத் தாய்மாமன் சீருனு கெளம்புனியோ நான் மனுசியா இருக்க மாட்டேன்… அப்பிடி போய் தான் தீருவேன்னா என்னையும் என் மவளையும் எங்கய்யன் வீட்டுல கொண்டு போய் விட்டுட்டுக் கெளம்பு… இனிமே அவ வீட்டை நான் மிதிச்சா என் மவளை அவ பேசுனதுலாம் உண்மைனுலாம் ஆகி போவும்”
வயிறெரிய பூமாரி கூற சுப்புசாமியாலும் எப்போதும் சொல்லும் சமாதானத்தை இப்போது சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் பூமாரியைத் தனது தமக்கைகள் இடித்து பேசும் போது கூட அவள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சுமதியைப் பேசியது மாபெரும் தவறல்லவா!
எத்தனை நாட்களுக்குத் தான் இரத்தப்பாசத்துக்காக கட்டிய பந்தத்தையும் பெற்ற மகவையும் சமாதானம் செய்வது? இம்முறை பொன்னம்மாவின் தீநாக்கு உதிர்த்த வார்த்தைகளால் சுப்புசாமிக்கே மனம் விட்டுப்போனது.
சென்ற வருடம் வேலையின்றி மூன்று வேளையும் ரேஷன் அரிசியைக் கஞ்சி காய்ச்சி ஊறுகாயுடன் உண்ட போது எட்டிக் கூட பார்க்காத மூத்த சகோதரிகள் பொங்கல்படி, மகளின் பூப்புனித நீராட்டுவிழா என்றால் மட்டும் வாசற்படி ஏறுவது ஏன்? சகோதரப்பாசத்தாலா?
இல்லவே இல்லை! உடன் பிறந்துவிட்டான் அல்லவா! அவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன! கடன் வாங்கியாவது நமக்கு சீர் செய்யட்டுமே என்ற சுயநலம் மட்டுமே!
ஆனால் இன்று கொடுக்க வேண்டிய வட்டிப்பணத்தைத் திருப்பியளிக்கக் கூட அவனிடம் நயா பைசா இல்லையே!
பூமாரி மளிகை ஜாமான்கள் வைத்திருந்த ப்ளாஷ்டிக் டப்பாக்களை உருட்டிப் பார்த்து சில்லறைகளை எடுத்து வந்து கணவனிடம் நீட்டினாள்.
“அண்ணாச்சி கடைல காச்சல் மாத்திரை வாங்கிட்டு வா… நான் பிள்ளைய எழுப்புதேன்” என்றாள்.
சுப்புசாமியும் அண்ணாச்சி கடை என்றழைக்கப்படும் அந்த ஊரின் மளிகைக்கடையை அடைந்தான்.
“காச்ச மாத்திரை ஒன்னு குடுங்க அண்ணாச்சி”
மாத்திரை பட்டியிலிருந்து ஒன்றை மட்டும் கத்தரிக்கோலால் வெட்டி அவனிடம் நீட்டிய அண்ணாச்சியோ “யாருக்கு காச்சல் அடிக்கு சுப்பு? சாதாகாச்சல் தானேனு லேசுல விடாதல… இன்னிக்கு மாத்திரை போடட்டும்… அப்பிடியும் காச்சல் விடலனா கருங்கொளம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிடுல… மறுபடியும் நோய் பரவுதுனு டிவில சொல்லுதானுவ” என்றார் அக்கறையுடன்.
சரியென தலையாட்டிவிட்டு நடந்தவன் வீட்டை அடைந்த போது அங்கே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பக்கத்து வீட்டினர் வேறு வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். என்னவாக இருக்குமென வேகநடை போட்டு அங்கே சென்றவனின் கண்களில் மண்ணில் அமர்ந்து அழுது அரற்றிக் கொண்டிருந்த பூமாரி பட்டுவிட்டாள்.
“இந்த ஒரு தடவை பொறுத்துக்கோங்கய்யா… சித்தைக்காசு மொத்தமும் பர்சோட திருடு போயிட்டு… இல்லனா குடுத்திருக்க மாட்டோமா?”
அவள் அருகே நின்றிருந்தார் சந்தனபாண்டியன். அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு. வட்டிக்குக் கடன் கொடுப்பது அவரது பிரதான தொழில்.
சுப்புசாமியின் குடும்பம் அவசர உதவிக்கென அடிக்கடி கடன் வாங்குவது அவரிடம் தான்! அதை கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அளித்துக் கொண்டும் இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமுடக்கம், வேலையின்மையின் காரணமாக சில செலவுகளுக்குக் கடன் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம்.
அதை திருப்பி அளிக்கும் போது தான் அடிக்கடி வேறு செலவுகள் வேறு ரூபத்தில் வந்துவிட்டது. இது வரை இரண்டே இரண்டு தவணைகள் தான் தவறிவிட்டது.
வழக்கமாக ஞாயிறென்றால் வட்டிப்பணத்தை வாங்குவதற்கு மாயாண்டியை அழைத்துக் கொண்டு வருபவர் அன்றும் தவறாமல் ஆஜராகி விட்டார். பூமாரி அடுத்த வாரம் கொடுப்பதாகக் கூறியதும் வசைமாரி பொழிய ஆரம்பித்தார் அவர்.
கூடவே மாயாண்டியும் சேர்ந்து கொள்ள பூமாரிக்கு அவமானம் தாங்க முடியவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் சந்தனபாண்டி உரத்த குரலில் மோசமான வார்த்தைகளால் தாக்கிப் பேச அண்டைவீட்டார் அவரது பேச்சைக் கேட்டு வீட்டு முன்னே கூடிவிட்டனர்.
“வட்டிக்காசை தர வக்கில்லாதவளுக்கு டி.வி ஒரு கேடு… ஏல மாயாண்டி அத எடுத்து வீசுல”
சந்தனபாண்டி கட்டளையிட மாயாண்டி வீட்டிக்குள் அடியெடுத்து வைக்கச் சென்ற தருணத்தில் “ஐயா வேண்டாங்கய்யா” என்று அலறியபடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடினான்.
வந்தவனை துச்சமாகப் பார்த்த மாயாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க முயல அதற்குள் பக்கத்துவீட்டு ஆண்கள் சிலர் அவனைத் தடுக்க வந்தனர்.
“ஏய்! சும்மா இருல மாயாண்டி, அவிய பிரச்சனைக்குள்ள நீ புகுந்து ரவுடித்தனம் பண்ணாத” என்றபடி சிலர் குரல் உயர்த்தவும் அவன் தயங்கி நின்றான்.
உடனே சந்தனபாண்டிக்கு வந்ததே கோபம்! கண் மண் தெரியாமல் மோசமான வார்த்தைகளை அள்ளி விட ஆரம்பித்தார்.
“ரெண்டு தவணை கட்டாம என்னைய ஏமாத்த பாக்குத நாயிக்கு ஏந்துகிட்டு வாரியலாக்கும்? சரில அப்ப உங்கள்ல ஒருத்தன் அவன் எனக்குத் தர வேண்டிய சித்தைக்காசை குடுத்துங்க… நானும் வாங்கிட்டுப் போறேன்… முடியாதுல்ல, அப்ப ஓரமா நிக்கணும்… இடையில புகுந்து நாட்டாமை பண்ணக்கூடாது”
அவரது உறுமலில் மத்தியஸ்தம் பேச வந்த ஊர்ப்பெரியவர்களுக்கு வாய் அடைபட்டுவிட்டது.
சுப்புசாமி கரம் கூப்பி கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தான்.
“உங்களுக்குக் குடுக்கலாம்னு வச்சிருந்த காசை, நேத்து மாரி பஸ்ல வாரப்ப எவனோ களவாண்டுட்டான்யா… எனக்கு திங்ககெழமை தான் வாரக்கூலி தருவாங்க… தந்ததும் உங்க கிட்ட கொண்டாந்து குடுத்துடுறேன்யா… இந்த ஒரு வாட்டி பொறுத்துக்கோங்க சாமி”
அவனும் அவன் மனைவியும் கெஞ்சிய காட்சி காண்பவர்கள் மனதை துளைத்தது. கூடவே காய்ச்சலில் சிவந்த முகத்துடன் அவர்களின் மகள் சுமதி திண்ணையில் அமர்ந்திருந்ததோ அங்கிருந்த பெண்களை பரிதாபத்தில் ஆழ்த்தியது.
அவர்கள் எல்லாம் இரக்கப்பட்டு என்ன பலன்? இரங்க வேண்டிய மனிதர் இன்னும் பாறை போல நிற்கிறாரே!
“திங்ககெழமைனா நாளைக்குத் தானல… ஒழுங்கு மரியாதையா நாளைக்கு வட்டிக்காசை குடுக்கணும்… இல்லனா உன் மான மரியாதைய சந்தி சிரிக்க வச்சிருவேன் பாத்துக்க”
ஆட்காட்டி விரலை நீட்டி மிரட்டிவிட்டு மாயாண்டியுடன் இடத்தைக் காலி செய்தார் சந்தனபாண்டி.
“ரெண்டு தவணை கட்டாததுக்கு இந்த ஆட்டம் ஆடுதாரே மனுசன்”
ஊர்ப்பெரியவர் ஒருவர் புலம்ப அவர்களில் இளைஞன் ஒருவனோ ஆற்றாமை தாங்காமல் வெடித்தான்.
“அந்தாளு கிட்ட கை நீட்டி காசு வாங்குனா என்ன வேணாலும் செய்வானா? ஆம்பளை இல்லாத நேரத்துல வீட்டுக்குள்ள ஆளை அனுப்புறான்… பேசாம அவன் மேல போலீசுல கம்ப்ளெய்ண்டு குடு சுப்புண்ணே”
உடனே அவனது தோளில் பலமாக அறை விழுந்தது. அடித்தவர் அவனது தந்தையே!
“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்காதல… சந்தனபாண்டி ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவன்… நீ போலீஸ் ஸ்டேசன் இல்ல, சீமைக்கே போயி அவன் மேல கேசு குடுத்தாலும் எவனும் எடுத்துக்க மாட்டான்… என்ன செய்யணும்னு சுப்புக்குத் தெரியும்… நீ சும்மா இரு”
மெதுவாக கூட்டம் கலைந்தது. சுப்புசாமியும் பூமாரியும் மட்டும் அழுதவண்ணம் மண் தரையிலேயே அமர்ந்திருந்தனர்.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்களோ சுப்புசாமியின் பட்டன் மொபைல் அழைக்கவும் அழுகையை நிறுத்தினர்.
சுப்புசாமி அழைப்பை ஏற்றவன் அழுகையை விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
பேசியவர் மேஸ்திரி தான்!
“சுப்பு! நம்ம மொதலாளிக்கு ஏதோ பணமுடையாம்… நாளைக்குச் சம்பளம் போடுறது கஷ்டம்ங்கிறாருல… வீட்டுக்காரங்க ஃபைனல் பேமெண்டு குடுக்க லேட் பண்ணுதாங்களாம்… அவங்க குடுத்த காசை ரொட்டேஷன்ல விட்டு மணலு, ஜல்லி, சிமெண்டு வாங்கியாச்சு… ஆபிஸ் ஆளுங்களுக்குக் கூட பொங்கல் கழிஞ்சு தான் போனஸ் குடுக்கணுங்காரு… அதான் நம்ம பயலுவளுக்குப் போன் பண்ணி விசயத்த சொன்னேன்… தப்பா நெனைச்சுக்காத சுப்பு… அண்ணன் சொன்ன வார்த்தைய காப்பாத்த முடியாம நிக்கேன்யா”
சுப்புசாமிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத நிலை! மேஸ்திரியும் தன்னைப் போல தொழிலாளி தான்!
“பரவால்லண்ணே! பாத்துக்கிடலாம்”
சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் சந்தனபாண்டி நாளை ஆடவிருக்கும் ஆட்டத்தை எண்ணி குறுகிப் போனான்.
தெருவில் யாரோ பேசிக்கொண்டு செல்வதும் கேட்டது.
“நேத்து நியூஸ்ல சொல்லிட்டான்ல, லாக் டவுனு வரப்போவுதாம்… போன வாட்டி மாதிரியே ஆலமரத்தடில குத்த வச்சு ஆடுபுலியாட்டம், தாயக்கட்டம்னு ஆட வேண்டியது தான்”
“அப்ப சோத்துக்கு என்னல வழி?’
“போன வருசம் என்ன ஆச்சோ அதே தான்ல… நான் வேற ஒரு லட்ச ரூவா சீட்டு போட்டு என் வீட்டை சரி பாத்தேன்… சீட்டுப்பணம் கட்டாம விட்டா என் சோலி முடிஞ்சுது… இந்தச் சீரழிஞ்ச பொழைப்புக்கு நோய் வந்தே செத்துடலாம்ல”
பூமாரிக்கும் சுப்புசாமிக்கும் எதிர்காலம் மருட்டியது. அந்த எதிர்காலம் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் வரப்போகும் காலமில்லை. நாளை என்பதே அவர்களின் கண்களுக்குப் பெரும் சோதனையாய் தெரிந்தது.
“மேஸ்திரி நாளைக்குச் சம்பளம் வராதுனு சொல்லிட்டாரு மாரி… இன்னும் ஒரு வாரம் ஆவுமாம்”
கேட்டதும் பூமாரி விக்கி விக்கி அழ ஆரம்பிக்க சுமதியோ திண்ணையில் சாய்ந்து விட்டாள்.
சுப்புசாமி மனைவியையும் மகளையும் பார்த்தவன் இதற்கு மேல் எந்தச் சோதனையையும் சமாளிக்கும் தெம்பின்றி போனான்.
“நாளைக்கும் சித்தைக்காரன் வருவான்… நம்ம மானத்த வாங்குவான்… அப்பிடி மான ரோசத்த விட்டுட்டு அவன் கிட்ட கெஞ்சுனாலும் அடுத்தடுத்து வேலை வருமானு தெரியல… கையில காசு இல்லாம பொண்டாட்டி பிள்ளைய நாலு பேரு முன்னாடி மதிப்பா வாழ வைக்காம நான் ஏன் உசுரோட இருக்கணும்?”
அவனது புலம்பல் திசை மாறிப் போவதை பூமாரி கவனிக்கவில்லை. சுப்புசாமி மெதுவாய் எழுந்தவன் வீட்டின் வெளியே அவசரத்திற்கு உதவட்டும் என கட்டி வைத்திருந்த சிறிய சிமெண்ட் அடைப்பை திறந்தான். அதில் விறகடுப்பு ஒன்றும், ஒரு பெரிய கேனில் மண்ணெண்ணெயும் இருந்தது.
எதையும் யோசிக்காமல் மண்ணெண்ணெய் கேனை எடுத்தவன் அதிலிருந்த எண்ணெய் முழுவதையும் உடலில் ஊற்ற ஆரம்பித்தான்.
இதை அரைமயக்கத்திலிருந்த சுமதி கவனித்துவிட்டாள்.
“எப்பா”
அலறலுடன் எழுந்தவளின் குரலில் பூமாரி பதறிப் போய் பாக்க அங்கே தீப்பெட்டியை உரச தயாராய் இருந்தான் சுப்புசாமி.
உடனே வேகமாக ஓடிப்போனவள் “என்னய்யா பண்ணுத? நீ இல்லாம நாங்க மட்டும் எப்பிடி வாழமுடியும்?” என்ற கதறலுடன் தீப்பெட்டியைப் பிடுங்க முயல
“எப்பா குடுப்பா” என்று அழுதபடி கை நீட்டினாள் சுமதி.
இருவரது அழுகை குரலும் அண்டை வீட்டாரின் செவிகளில் விழ அங்கே மீண்டும் கூட்டம் கூட, கூடவே சில ஆண்கள் வந்து சுப்புசாமியைப் பிடித்துக்கொண்டனர்.
பூமாரி மகளை அணைத்தபடி கால் மடங்க அமர்ந்தவள் தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“இப்போ சாவுத அளவுக்கு என்னல ஆயிட்டு?”
பெரியவர்கள் அதட்ட சுப்புசாமியோ “காது கூசுத வார்த்தைய கேட்டு மனசு ரணமாயிட்டுய்யா.. கோடி கோடியா கடனை வாங்குனவன்லாம் வெளிநாட்டுக்கு ஓடிப் போறான்… நான் ரெண்டு தவணை கட்டாததுக்கு என்ன மானங்கெட்ட பேச்சுல்லாம் கேக்கேன் பாத்தியலா? இதுக்கு மேல உசுரோட இருந்து என்னத்த கிழிக்கப் போறேன்?” என்று கதற எப்படியோ ஊரார் அவர்களை சமாதானம் சொல்லி அமைதிப்படுத்தினார்கள்.
பக்கத்து வீட்டுப்பெண்மணி ஒருவர் சுமதிக்குக் காய்ச்சல் இருப்பதை அறிந்து “புள்ளைக்கு காச்சல் போல… நான் மாத்திரை குடுத்து என் வீட்டுல தூங்க வைக்கேன்… நீங்க ரெண்டு பேரும் கூறு கெட்டத்தனமா யோசிக்காம அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க” என்று சொன்னதோடு குழந்தையைத் தன்னோடு அழைத்துச் சென்று விட கூட்டமும் மெதுவாக கலைய ஆரம்பித்தது.
அனைவரும் சென்ற பிறகு “சுப்பு” என்ற குரல் கேட்க கணவனும் மனைவியும் ஒன்றாய் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே அந்த மூதாட்டி ராசம்மா நின்றிருந்தார். கையில் வைத்திருந்த மூட்டையுடன் அவர்களை நெருங்கினார்.
இருவரும் நின்ற கோலத்தைப் பார்த்தபடியே மூட்டைக்குள் கைவிட்டவர் ஒரு சுருக்குப்பையை எடுத்தார்.
அதனுள் இருந்து வெளியே வந்த அவரது கரங்களில் அமர்ந்திருந்தன இரு ஜோடி வளையல்கள்.
அதை அவர்களிடம் நீட்டினார் ராசம்மா.
“இது அந்தக் காலத்து தங்கம்… என் வீட்டாளு என்னைய விட்டுட்டுப் போறதுக்கு முன்னாடி ஆசாரிய வச்சு செஞ்சு குடுத்தாவ… தகடு மாதிரி போட்டா என் கைக்கு நல்லா இருக்காதுனு கனமா செய்யச் சொன்னாவ… ஆனா இத கையில போடுததுக்கு முன்னாடியே நான் மூளி ஆயிட்டேன்… என் மவனும் என்னைய வச்சு பாக்க முடியாதுனு துரத்தி விட்டுட்டான்… அங்க இருந்து நான் கொண்டு வந்த துணிமணியோட இந்த வளையலையும் எடுத்துட்டு வந்துட்டேன்… நான் ரோட்டத்தோரத்துல அனாதையா செத்துக் கெடந்தாலும் என்னை எரிக்கவோ புதைக்கவோ செய்யுறவியளுக்கு இந்த வளையல் போய் சேரட்டும்னு இவ்ளோ நாளா பத்திரமா வச்சிருந்தேன்… இந்த ஊருக்கு வந்தப்புறம் நான் செத்துப் போனா நீயும் சொக்கலிங்கய்யாவும் என்னைய எடுத்துப் போடுவியனு நம்பிக்கை வந்துச்சுய்யா… அப்ப நீங்க செலவுக்குக் கஷ்டப்படக்கூடாதுனு வச்சிருந்தேன்… நீ இப்ப ஏச்சு பேச்சு வாங்கிட்டு நிக்குறத பாக்க எனக்கு பொறுக்கல… இத வச்சுக்க… டவுனுல தங்கநகை கடை நிறைய இருக்கும்… அங்க வித்து சந்தனபாண்டிய்யா கடனை அடைச்சிடு”
பூமாரியும் சுப்புசாமியும் பதில் பேச வாய் வராமல் கண்ணீருடன் அமைதியாய் நிற்க ராசம்மாவோ நீட்டிய கையை மடக்கினார் இல்லை.
“வாங்கிக்கய்யா… எத்தனை நாளு முகம் சுளிக்காம சோறு போட்டிருப்ப நீ? உன்னை இன்னைக்கு அந்த மனுசன் பேசுன பேச்சு என்னால கேக்கவே முடியல… நீ அவரு கடனை தீர்த்துடு… அப்புறம் கால்வயித்து கஞ்சிய கூட மானத்தோட குடிக்கலாம்யா”
சுப்புசாமிக்கு மனம் நெகிழ்ந்தது. உடன் பிறந்த சகோதரிகள் கூட அவனது வறுமையைப் பற்றி யோசித்ததில்லை. ஆனால் சற்றும் சம்பந்தமற்ற இம்மூதாட்டி தங்களது நிலையை எண்ணி வருந்துகிறாரே!
கண்ணைத் துடைத்தவன் “இல்லத்தா… நீ சொன்னதே போதும்… இந்த வட்டிப்பிரச்சனைய நான் பாத்துக்கிடுதேன்” என்றான்.
பூமாரியும் அதையே கூற ராசம்மாவுக்கு மனம் வலித்தது.
“அப்ப நீங்க ரெண்டு பேரும் என்னைய ஆத்தானு கூப்புட்டது வெறும் வாய் வார்த்தை தான்… இந்த ஊர்க்காரவிய மாதிரி நீங்களும் என்னைய பிச்சைக்கார கெழவியா தான நினைக்கிய”
உடைந்த குரலில் அவர் கூறவும் “ஐயோ அப்பிடில்லாம் இல்லத்தா” என்றனர் கணவன் மனைவி இருவரும் ஒருமித்த குரலில்.
“அது தான் நெசம்னா வளையலை வாங்கு சுப்பு”
பூமாரியைத் தவிப்புடன் பார்த்தவன் வேறு வழியின்றி வாங்கிக் கொண்டான்.
ராசம்மாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. இதோடு அவரது கடமை முடியவில்லையே! சுப்புசாமியின் பிரச்சனை பணம் மட்டுமில்லை, அவனது மனமும் தான்! ஏனெனில் அந்த மனதில் தற்கொலை எண்ணம் கால் பதித்திருக்கிறதே! ஒரு முறை ஒருவர் மனதில் தற்கொலை எண்ணம் உதயமானால் அடுத்தடுத்த சிறு பிரச்சனைகளுக்குக் கூட அது ஒன்று தான் தீர்வு என்று அவர்களின் மூடமதி எண்ணிக்கொள்ளும்.
எனவே அவனது மனதை நேராக்கவும் விரும்பினார் ராசம்மா.
“என் வீட்டாளும் நானும் எங்க மவனை ஆசையா வளத்தோம்யா… கடைசி காலத்துல அவன் எங்களுக்கு ஆதரவா இருப்பான்னு எந்தச் சேமிப்பையும் வச்சுக்கல… ஆனா அவரு போனதுக்கு அப்புறம் அவனால என்னைய கவனிக்க முடியலனு வீட்டை விட்டு துரத்துனான்… எனக்குப் போக்கிடம் எதுவுமில்ல… ரோடு ரோடா இந்த மூட்டையோட அலைஞ்சேன்… சில இடத்துல இரக்கப்பட்டு காசு குடுப்பாங்க… சில இடத்துல திருட வந்தியானு அடிச்சுக் கூட அனுப்பிருக்காங்க… எந்தச் சூழ்நிலையிலயும் உசுரை விடணும்னு நான் யோசிச்சது இல்ல… கடவுள் குடுத்த உசுரை எடுக்க அவருக்கு மட்டும் தான் உரிமை இருக்கு… நம்மளை படைச்சவன் நமக்கு வழியும் காட்டுவான்யா… எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை முடிவு இல்ல… மனுசனா பிறந்தவன் எல்லாருக்கும் பிரச்சனை வரும்… அதை தீர்க்குததுக்கு நெஞ்சுல உறுதி வேணும் சுப்பு…
நீ போய் சேர்ந்துட்டா சந்தனபாண்டிக்கு எந்த நஷ்டமும் இல்ல… உன் வட்டிக்காசை உன் பொண்டாட்டி கட்டுவா… வருமானம் இல்லாம படிக்கிற பிள்ளைய வேலைக்கு அனுப்புற நிலமை வரும்… அப்பிடி அவளால சமாளிக்க முடியலனா அவளும் உன்னை மாதிரியே தப்பான முடிவுக்கு வருவா… உன்னை நம்பி இருக்குற பொண்டாட்டி பிள்ளைய தவிக்க வச்சிட்டுப் போறது பெரும்பாவம்யா… தற்கொலை பண்ணணும்னு முடிவெடுக்குறவிய கொஞ்ச நேரம் அவிய மேல பாசம் வச்சிருக்கவிய கதி என்னாகும்னு நிதானிச்சு யோசிச்சா அந்த முடிவால எத்தனை பேருக்கு ஆயுசு முழுக்க வேதனைய குடுத்துட்டுப் போறாவனு புரியும்… என்னைப் பொறுத்தவரைக்கும் தற்கொலை செய்யணும்னு நினைக்கவன் கோழை மட்டுமில்ல, தான் மேல பாசம் வச்சிருக்கவியளை தவிக்க விட்டுட்டுப் போற சுயநலம் பிடிச்ச சென்மம்… நீ அப்பிடி ஆகிடாதய்யா”
கரம் கூப்பியபடி அவர் சொன்னது சுப்புசாமியின் புத்தியில் உறைத்தது. கடன் பிரச்சனையால் தான் தற்கொலை செய்து கொண்டிருந்தால் பூமாரியும் சுமதியும் எவ்வளவு அவதிக்கு ஆளாகியிருப்பார்கள்? இனி எந்தச் சோதனை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை முடிவை மட்டும் எடுத்துவிடக் கூடாது! தனக்குப் பின்னர் பூமாரியும் சுமதியும் கஷ்டப்பட தானே காரணமாக இருந்துவிடக்கூடாது.
அவனது கண்கள் எதிரே நின்றிருந்த ராசம்மாவை நன்றிப்பெருக்குடன் நோக்கின. அவரை விடவா அதிக சோதனைகளைச் சந்தித்துவிட்டோம்?
தனது தற்கொலை எண்ணத்தை மாற்றியதோடு அவரது இறுதிசடங்குக்கு வைத்திருந்த வளையலை தன்னிடம் அளித்துவிட்ட அவரது பெருந்தன்மைக்கு முன்னே உருகிப் போனான் சுப்புசாமி.
வளையலை பூமாரியிடம் கொடுத்தவன் ராசம்மாவிடமிருந்து அவரது மூட்டையை வாங்கிக் கொண்டான். அவர் புரியாமல் விழிக்கவும்
“நீ எனக்கு எவ்ளோ பெரிய உபகாரம் பண்ணிருக்கனு உனக்குத் தெரியாது ஆத்தா… உன்னோட ஆதாரமா இருந்த வளையலை என் கிட்ட குடுத்து, பொண்டாட்டி பிள்ளைய அனாதரவா விட்டுட்டுப் போறது தப்புனு எனக்குச் செருப்பால அடிச்ச மாதிரி புரிய வச்ச உன்னை இனிமேலும் இந்த ஊர்க்காரவிய பிச்சைக்காரகெழவினு கூப்புட அனுமதிச்சேன்னா நான் மனுச சென்மமே இல்ல… நீ எங்க கூட இந்த வீட்டுலயே இரு… நான் மனசார உன்னைய ஆத்தானு கூப்புட்டேன்ல, நீயும் என்னை உன் மவனா நினைச்சுக்கோ… மாரி தான் இனிமே உனக்கு மருமவ… சுமதி உன்னோட பேத்தி… இனிமே நீ ஆதரவில்லாம பால்பண்ணைல முடங்க வேண்டாம்…. உரிமையா இந்த மவன் கூட இருத்தா” என்றான் சுப்புசாமி.
பூமாரியும் அதை ஆமோதிக்க ராசம்மாவின் கண்கள் பனித்துவிட்டது. அவர்களின் பாசமான வேண்டுகோளை ஏற்ற அம்மூதாட்டி பூமாரி சுப்புசாமியுடன் அவர்களின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்.
தக்க சமயத்தில் உதவி தற்கொலை எண்ணத்தை மாற்றி இனி வரும் காலங்களில் எந்தப் பிரச்சனை வந்தாலும் நெஞ்சுறுதியுடன் அதை எதிர்கொள்ள வேண்டுமென போதித்த ராசம்மாவை தங்களது உறவாக மாற்றிக்கொண்ட திருப்தி சுப்புசாமிக்கும் பூமாரிக்கும்!
இனி அவர்கள் வாழ்வில் கஷ்டங்களே வராது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் வரும் கஷ்டங்கள் அனைத்தையும் ராசம்மா கற்பித்த நெஞ்சுறுதியுடன் அவர்கள் கடப்பார்கள் என்பது நிச்சயம்!
இனிதே முடிவுற்றது!