“2021ல் இந்தியாவைக் கோரமாகத் தாக்கிய கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா சுகாதார துறையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2020 போல பொதுமுடக்கம் இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு தகர்த்து விட்டது. ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் மருத்துவமனை வாயில்களில் நின்ற மக்கள் கூட்டம், இடைவிடாத ஆம்புலன்ஸ்களின் சத்தம் என இரண்டாம் அலையின் கொடூர முகத்தை இந்தியா பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது”
-கிருஷ்ணா யாதவ் மற்றும் ஷிவானி யாதவ்வின் ஆராய்ச்சி கட்டுரை, 31 அக்டோபர் 2021.
ஜனவரி 5, 2022 அன்று காலை பொழுது, சுப்புசாமியின் வீடு…
“எப்பா கத்திரிக்கா இப்பிடி வெட்டுனா போதுமா?” என்று கேட்டபடி தட்டுடன் வந்து நின்றாள் சுமதி.
பூ போட்ட நைட்டி, இரட்டை பின்னல்கள், குழந்தைத்தனம் வழியும் முகம்!
கேஸ் அடுப்பில் உலைபானையைக் கவனித்துக் கொண்டிருந்த சுப்புசாமி மகளின் கையிலிருந்த தட்டை உற்று நோக்கிவிட்டு
“நல்லா இருக்குல… நீ வெங்காயம் அரிஞ்சு வை… நான் குழம்பை தாளிக்கேன்” என்றான்.
சுமதியோ “போப்பா! வெங்காயம் வெட்டுனா கண்ணு எரியும்” என்று தரையில் காலை உதைக்க
“என் கண்ணுல்ல… அப்பா குழம்பு தாளிச்சுட்டு தான் குளிக்க போவணும்… சோலிக்கு நேரமாவுதுல்லா” என்று மகளிடம் பணிந்து கேட்கவும் வழக்கமாக அப்பா சொல் தட்டாத குட்டி இளவரசியாக சுமதியும் வெங்காயத்தை உறித்து பொடி பொடியாக நறுக்க ஆரம்பித்தாள்.
சுப்புசாமி சோற்றினை எடுத்து வடித்தவன் அலுமினிய தட்டால் பானையை மூடி வைத்துவிட்டு மகள் நறுக்கிக் கொடுத்த வெங்காயத்தை வாங்கிக் கொண்டான்.
சுமதி சமையல் எண்ணெயிலில் குளித்தபடி குதித்துக் கொண்டிருக்கும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயக்கலவையின் தாளிப்பு வாசனையை நுகர்ந்தபடியே
“எப்பா அப்பளம் பொரிப்பியா?” என்று ஆசையாய் கேட்க சுப்புசாமி மகள் ஆசைப்பட்டுவிட்டாளே என்று அப்பளம் வைத்திருக்கும் டப்பாவைத் திறந்து பார்த்தான்.
அதில் பாதி நொறுங்கி கிடந்த அப்பளத்துண்டுகளை எடுத்தவன் “சரில… நான் பொரிச்சு வைக்கேன்… நீ யானத்த (பாத்திரம்) கழுவிருவியா?” என்று கேட்டான்.
“சரிப்பா” ஆர்வமாகத் தலையாட்டினாள் சுமதி.
சுப்புசாமியும் மகளுக்காக அப்பளத்தைப் பொரித்து காற்று புகாத எவர்சில்வர் டப்பாவில் அடைத்தவன் கழுவ வேண்டிய பாத்திரங்களை வீட்டின் வெளியே கட்டியிருந்த பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டுத் துண்டை எடுத்துக் கொண்டான்.
“அப்பா வாய்க்கால்ல குளிச்சுட்டு வாரேன்… நீ யானம் கழுவிட்டனா துணிய மடிச்சு வச்சிட்டு படிக்க உக்காரு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
சுப்புசாமி சென்றதும் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள் சுமதி. தேங்காய் நாரினால் தேய்க்க அவளுக்குப் பிடிக்கவில்லை. தோழிகளின் வீட்டில் எல்லாம் ஸ்க்ரப்பர் உபயோகிப்பதாக அன்னையிடம் கூறியிருந்தாள்.
“அவியளும் நம்மளும் ஒன்னாலா? கவர்மெண்டு உத்தியோகஸ்தரு வீட்டுல எல்லாம் வாங்குவாவ… ஏன் தேங்காநாருக்கு என்ன கொறைச்சலு? பிடி சாம்பலை தேங்காநாருல தொட்டு தேச்சா எப்பிடிப்பட்ட பாத்திரமும் பளபளனு மின்னும்… சும்மா ஸ்க்ரப்பரு ரப்பருனு புலம்பாம பாத்திரத்த தேச்சு வையி” என்று அவள் வாயை அடைத்துவிட்டாள் அவளது அன்னை பூமாரி.
“ஏன்லா என் மவளை ஏசுத? அந்த ஸ்கரப்பரு என்ன கோடி ரூவாயா விக்குது? ஒன்னத்த வாங்கி கையில குடுத்தா புள்ள சந்தோசமா பாத்திரத்த கழுவும்ல” என்று மகளுக்குப் பரிந்து கொண்டு பேசினான் சுப்புசாமி.
“க்கும்! உடனே மவளுக்கு ஏந்துகிட்டு வந்துடுவியே மகராசா… இன்னிக்கு இத கேப்பா… நாளைக்கே அவிய வீட்டுல ப்ரிட்ஜு இருக்கு, கரெண்ட் அடுப்பு இருக்குனு ஒவ்வொன்னா கேப்பா… அவ கேக்குறதலாம் வாங்கி குடுத்துட்டே இருந்தா கடனை யாருய்யா அடைக்குறது?”
“ஏட்டி ஒரு ஸ்கரப்பருல என்ன செலவு வரப்போவுது? இப்பிடி யோசிச்சிருந்தா நம்ம வீட்டுக்குக் கரெண்டு இழுத்திருப்போமா? இல்ல கேஸ் அடுப்பு வாங்கிருப்போமா? உன் சவுரியத்துக்கு மட்டும் நீ வாங்கலாம்… ஆனா என் மவ கேட்டா மட்டும் நொரநாட்டியம் பேசுவ”
தந்தைக்கும் அன்னைக்கும் இடையே நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தபடியே பாத்திரத்தைக் கழுவி முடித்தவள் அதை சமையலறையிலிருந்த ஷெல்ப்பில் அடுக்கி வைத்தாள்.
ஒருவர் மட்டுமே நின்று சமைக்க கூடிய சமையலறை, நடுத்தர அளவிலான நடுக்கூடம், அதன் ஓரத்தில் ஒரு ஸ்டீல் கட்டில், அந்த நடுக்கூடத்தில் ஒரு பகுதியில் சிறிய வண்ண தொலைக்காட்சிப்பெட்டி, அவர்களின் உடைகளை வைக்க சிறிய பீரோ, அன்றாட உடுப்புகளைத் தொங்கவிட நைலான் கயிற்று கொடி ஒன்று இவ்வளவு தான் அவர்களின் வீடு.
ஓட்டு வீடு என்பதால் பகலில் வெப்பம் இறங்கும். அப்போது காற்றாட படுத்துக்கொள்ள சமீபத்தில் தான் திண்ணையைக் கட்டியிருந்தான் சுப்புசாமி. திண்ணையோடு சேர்த்து பாத்திரம் கழுவுமிடத்தையும் மறைக்கும் விதமாக மேற்புறமும், பக்கவாட்டிலும் தென்னந்தட்டிகளால் தடுப்புகள் வைத்துவிட அதுவே காம்பவுண்ட் சுவர் போல ஆகிவிட்டது.
சுமதி அவளது ஆன்லைன் வகுப்புகளை வெளியே திண்ணையில் அமர்ந்து தான் கவனிப்பாள். பின்னர் சாப்பிட்டுவிட்டு கதவு போல அமைந்திருக்கும் தென்னந்தட்டியால் அடைத்துவிட்டு திண்ணையில் படுத்தாள் என்றால் மாலை தான் கண் விழிப்பாள்.
பின்னர் வீட்டுப்பாடமாய் கொடுத்ததை எழுதி வைத்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிப்பாள். மற்ற வேலைகள் என்றால் வீட்டைக் கூட்டிப் பெருக்கி அள்ளுவது, காய்ந்த துணியை மடித்து வைப்பது, மாலையில் வாசல் தெளித்து விளக்கேற்றுவது போன்றவையே!
இதையெல்லாம் முடித்துவிட்டு தொலைக்காட்சி முன்னே உட்கார்ந்து விட்டால் பின்னர் பெற்றோர் இருவரும் வந்த பிறகு தான் எழுந்திருப்பாள். காலை சமையலை தந்தையும் மகளும் சேர்ந்து முடித்து விடுவதால் இரவில் பூமாரி தான் சமைப்பாள்.
சமையலில் அவளுக்குக் கூடமாட உதவியபடியே தின்பண்டங்களைக் கபளீகரம் செய்வாள். இப்படி தான் ஒவ்வொரு நாளும் அந்தச் சிறிய குடும்பத்துக்குக் கழியும்
இன்றும் அப்படி தான் கழிய வேண்டுமா என்ன? நிச்சயமாக இல்லை!
குளித்து விட்டு வந்த சுப்புசாமி காலையுணவை மகளுடன் சாப்பிட்டுவிட்டு தனக்கான சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“தட்டிய பூட்டிக்கல… அப்பா வாரேன்”
அவன் கிளம்பியதும் தென்னந்தட்டியைச் சாத்தியவள் ஆன்லைன் வகுப்பிற்கான நேரம் ஆகிவிடவும் வீட்டுக்குள்ளே அமர்ந்து மொபைலை ஆன் செய்து பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
தினசரி வருகை பதிவுக்குப் பிறகு ஆரம்பித்த வகுப்பில் முந்தைய தின வீட்டுப்பாடத்தை புகைப்படம் எடுத்து அவர்கள் வகுப்பிற்கான வாட்சப் குழுமத்தில் அனுப்பிவிட்டாள். பின்னர் அன்றைய வகுப்பு ஆரம்பித்தது.
சுமதி பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தவள் அவற்றைக் குறிப்பெடுத்து முடிக்க நேரமும் கடந்தது. ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் நோட்டை எடுத்து அவளது பள்ளிக்கூட உடமைகள் இருக்கும் ஷெல்பில் வைத்தவள் சோம்பல் முறித்த போதே வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது.
யாரென அவள் எழுந்து வந்து எட்டிப் பார்க்கும் போதே கனத்த சரீரத்துடன் ஒரு பெண்ணுரு தென்னந்தட்டியை அலட்சியமாகத் திறந்துவிட்டு உள்ளே நுழைந்தது. வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த சுமதியை ஏறிட்ட அவ்வுருவம்
“என்னட்டி வாய் பாத்துட்டு நிக்க? வீட்டுக்கு யாரும் வந்தா வாங்கனு சொல்ல கூட உங்காத்தாக்காரி உனக்குச் சொல்லித் தரலியாக்கும்?” என்று முழங்கவும்
“வாங்கத்த” என்றாள் சுமதி.
“எல்லாம் கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு… இது தான் பொட்டப்பிள்ளைய வளக்குத லெச்சணம் போல… நாளைக்கு போற வீட்டுலயும் இப்பிடி வாய் பாத்துட்டு நில்லு, மாமியாக்காரி பொடதில தட்டி அப்பன் வீட்டுல போயி மரியாதைய படிச்சுட்டு வா கழுதனு அனுப்பி வைப்பா” என்று திட்டியபடி அவளைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த உருவம் சுப்புசாமியின் இரண்டாவது சகோதரி பொன்னம்மா.
சுமதியோ மௌனமாய் முகம் வாட தென்னந்தட்டியை மூடச் சென்றுவிட பின்னேயே “ஏட்டி என்னைய உள்ள அனுப்பிட்டு நீ எங்க போயி தொலைஞ்ச?” என்ற பொன்னம்மாவின் குரல் பாய
“தட்டிய மூடுனேன் அத்த” என்றபடி வீட்டுக்குள் வேகமாக சென்றாள் சுமதி.
அந்தப் பொன்னம்மா உதட்டைச் சுழித்தபடி சிமெண்ட் தரையில் அமர்ந்தாள். கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள்பை அவளருகே தரையில் சயனித்திருந்தது.
உள்ளே வந்த சுமதியைக் கண்டதும் “பீத்த தென்னந்தட்டிக்கு இம்புட்டு அலும்பா? உங்கப்பன் கிட்ட காம்பவுண்டு செவரு கட்ட சொல்லுட்டி… இப்பிடி தென்னந்தட்டிய அடைச்சு வச்சா வீட்டுல தரித்திரியம் (தரித்திரம்) தான் தாண்டவமாடும்” என்று குறைபட்டுக் கொண்டாள்.
“சரித்த” என்ற அச்சிறுபெண்ணிடம் அடுத்து எதைக் குத்திக் காட்டலாம் என அவளின் கண்கள் அந்த அறைக்குள் அலை பாய்ந்தது. அவர்களின் வீடு வேண்டுமானால் வசதி குறைவாக அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் அனைத்து பொருட்களும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். துணிமணிகள் நைலான் கொடியில் தொங்கினாலும் மடிக்கப்பட்டிருக்கும்.
பின்னே எங்கிருந்து குறை கண்டுபிடிக்க?
யோசித்தவளின் மூளை மீண்டும் தம்பி மனைவியின் வளர்ப்பைக் குத்திக் காட்ட குதித்துக் கொண்டு எழுந்தது.
“அத்தைக்காரி வந்தா வெறும் வயித்தோட தொரத்தி விட்டுருனு உங்காத்தா ஓதிட்டுப் போனாளாக்கும்? வேவாத வெயில்ல வெந்து வந்திருக்கேன்… ஒரு வாய் காபி, ஒரு ஜூஸு எதாச்சும் வேணுமானு கேட்டியா? என்னத்த வளத்தாளோ போ”
சுமதி நாக்கைக் கடித்துக் கொண்டு சமையற்கட்டை அடைந்தவள் அவளுக்குத் தெரிந்தளவில் பால் கலக்காமல் காபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள்.
“பால் இல்லியாக்கும்?”
“காலையிலயே காபிக்குக் காலி ஆயிட்டுத்த… மிச்சத்த உறை ஊத்தியாச்சு”
“இதுக்குத் தான் ஒரு ப்ரிட்ஜூ வாங்கணும்னு சொல்லுறது… உங்கப்பனும் உங்காத்தாக்காரி கூட சேர்ந்து வர வர கஞ்சப்பிசுநாரி ஆயிட்டான்… நான் சொல்லுறதுலாம் அவன் காதுல எங்க ஏறுது?”
குறை பட்டுக்கொண்டே காபியைக் காலி செய்தவள் ஏன் வந்திருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் அச்சிறுமியை அலட்சியப்பார்வையால் குளிப்பாட்டினாள்.
காபி தம்ளரை டங்கென்று தரையில் வைத்தவள் மஞ்சற்பையில் கை விட்டு இரண்டு வாடிப்போன வெற்றிலைகள் மற்றும் பாக்கை எடுத்து அதில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து சுமதியிடம் நீட்டினாள்.
அவள் என்னவென புரியாது மலங்க மலங்க விழிக்கவும் “என்னட்டி பாக்குற? வாங்கிக்க” என்கவும் சுமதி வேகமாக வாங்க கை நீட்டினாள்.
அவளது உள்ளங்கையில் அந்த வெற்றிலையை வைத்து அழுத்தியவள் “என் மவ சுகந்தி இன்னிக்கு காலையில சமைஞ்சிட்டா… உங்கம்மா தான தாய்மாமன் பொண்டாட்டி… அவ வந்து தான் தலைக்குத் தண்ணி ஊத்தணும்… நாளைக்கு சாயங்காலம் தண்ணி ஊத்துற சடங்கு வச்சிருக்கோம்… தாய்மாமன் சீரோட உங்கப்பனும் ஆத்தாவும் வந்துடணும்… அதான் முறையா வந்து நானே அழைச்சிருக்கேன்” என்றாள்.
சுமதி ஒன்றும் பேசாது நிற்கவும் “என்னட்டி மண்ணாந்த மாதிரி நிக்குற? அது சரி… கோயில் மாடு மாதிரி வயசும் பன்னெண்டு ஆவுது… இன்னும் உக்காராம இருந்தா என்னது மண்டைல உறைக்கும்? சுப்பு வந்ததும் நான் சொன்னதை சொல்லிடு” என்று எழுந்தாள் பொன்னம்மா.
சுமதி தலையை ஆட்டவும் “நான் வாரேன்” என்று கிளம்பினாள் அவள்.
வாசல் வரை வழியனுப்ப வந்த சுமதியிடம் சொல்லிக்கொண்டு விடைபெற எத்தனித்தவள் அப்போது அவர்களை நோக்கி வந்த சிறுவன் ஒருவனைக் கண்டதும் புருவம் சுருக்கினாள்.
வந்தவனோ தனது கையிலிருந்த கோனார் தமிழ் உரையை சுமதியிடம் நீட்டினான்.
“தேங்க்ஸ் சுமதி… நான் செய்யுள் கேள்வி பதில் எல்லாம் எழுதிட்டேன்… வேணும்னா மறுபடியும் வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தான்.
சுமதி கோனார் தமிழ் உரையோடு உள்ளே செல்ல திரும்பிய போது “நில்லுட்டி” என்று அதட்டலாய் ஒலித்தது பொன்னம்மாவின் குரல்.
இப்போது என்ன குறை கூறுவாளோ என்று மனதிற்குள் அஞ்சியபடி திரும்பினாள் சுமதி.
முகத்தைச் சுளித்த பொன்னம்மாவோ “அது என்னட்டி பொட்டக்கழுதைக்கு ஆம்பளைப்பய கூட பேச்சு வேண்டியிருக்கு? அதுவும் அப்பன் ஆத்தா இல்லாத நேரத்துல வீட்டுக்கு வார அளவுக்கு பழக்கமோ?” என்று அபவாதமாய் பேச அந்தப் பன்னிரண்டு வயது மொட்டிற்கு அவளது பேச்சின் உள்ளர்த்தம் புரியவில்லை.
இருப்பினும் அவள் போட்ட கூப்பாட்டினால் பக்கத்து வீட்டு திண்ணையில் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்மணிகள் திரும்பிப் பார்க்கவும் கண்களில் கண்ணீர் முட்டியது சுமதிக்கு.
“செய்யுறதையும் செஞ்சுட்டு அழுகாச்சி என்னட்டி வேண்டியது கெடக்கு? உன்னைய நம்பி தனியா வேற விட்டுட்டுப் போயிருக்காவல்ல அவிய ரெண்டு பேத்தையும் சொல்லணும்… இன்னைக்கோ நாளைக்கோ சமையப் போற பொட்டப்புள்ளைய வீட்டுல விட்டு பாளையங்கோட்டைக்குச் சீவி சிங்காரிச்சிட்டு போக உன் ஆத்தாக்காரிக்கு எப்பிடி மனசு வருதோ?”
இவர்களுக்குச் செய்து செய்தே சேர்ந்த கடன் சுமையைக் குறைக்க தான் பூமாரி வெயிலும் மழையிலும் நின்று உழைக்கிறாள் என்பது சுமதிக்கு நன்றாக தெரியும். ஆனால் அவளால் எதிர்த்துப் பேச முடியவில்லை. காரணம் இவ்வளவு நேரம் பொன்னம்மா குறை கூறிய பூமாரியின் வளர்ப்பு பெரியவர்களை எதிர்த்து பேசி மனம் வருத்தக் கூடாதென அறிவுறுத்தியிருந்தது தான்.
பொன்னம்மாவோ அதையெல்லாம் யோசிக்காது “ஒழுங்கா வீட்டுக்கு அடங்கி கெட… ஆம்பளப்பய கூட கூட்டு சேர்ந்து என் தம்பி மானத்த வாங்கிடாத… இப்பிடி கண்ட மாதிரி அலைய தான் பாளையங்கோட்டை பள்ளிக்கொடத்துல சொல்லி குடுத்தாவ போல” என்று கத்தி தீர்த்துவிட்டு கிளம்பினாள்.
அவள் அகன்றதும் பக்கத்துவீட்டுப்பெண்மணி அழுது கொண்டிருந்த சுமதியிடம் வந்தவர்
“ஏட்டி அவ சொல்லிட்டுப் போறதுக்கா அழுவுத? அவ கெடக்கா கூறுகெட்ட குந்தாணி… நீ அவ மவளை காட்டியும் நல்லா படிக்கல்லா, அந்தக் கேந்தி அவளுக்கு” என்று ஆறுதல் கூற அப்படியும் மனம் ஆறவில்லை அவளுக்கு.
மாலை வரை பொன்னம்மாவின் வார்த்தைகளை எண்ணி எண்ணியே அழுதவள் அந்தி சாய்ந்ததும் வாசலைத் தெளித்துவிட்டு விளக்கை ஏற்றினாள்.
எப்போதும் வீட்டுப்பாடம் செய்ய தவறாதவளுக்கு அன்று மனமில்லை. அன்னை வரும் வரை காத்திருந்தவள் வந்ததும் ஓவென்று அழுதபடி விவரத்தைப் பூமாரியிடம் கூறிவிட்டாள்.
“உன்னையவா உங்கத்த அப்பிடி ஏசுனா?”
பூமாரியின் நொந்து போன குரலோடு அவளின் இடிந்த தோற்றமும் சுமதியை உறுத்தியதும் விலகினாள்.
“சுகந்திக்கு நாளைக்கு தண்ணி ஊத்துறாங்களாம்மா… அதுக்கு நீயும் அப்பாவும் வரணும்னு அத்தை சொல்லிச்சும்மா”
பூமாரியோ பணத்தைத் தொலைத்துவிட்டு மனமுடைந்து போயிருந்தவள் அடுத்த செலவு தயாராய் நிற்கவும் நொந்து போனாள். அப்போது தான் சுப்புசாமியும் வீட்டுக்குள் வந்தான்.
அவனைக் கண்டதும் ஓடிச் சென்றவள் “பழவியாபாரத்துல சேர்த்து வச்ச துட்டை எவனோ பர்சோட களவாண்டுட்டான்யா… நாளைக்குச் சித்தைக்காரனுக்கு என்ன பதில் சொல்ல?” என்று கட்டிக்கொண்டு கதற சுப்புசாமியும் உடைந்து அழ ஆரம்பித்தான்.
இருவரும் அழுவதைப் பார்த்தபடி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்.
அழுகையினூடே சுப்புசாமி கூறினான் “எனக்கு இந்த வாரச்சம்பளம் வரல மாரி… மேஸ்திரியண்ணன் திங்கக்கெழமை பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு” என்று.
பூமாரி கண்ணீருடன் “அப்ப நாளைக்குச் சித்தைக்காரனுக்கு என்ன பதில் சொல்ல?” என்று அதிர
“சுகந்திக்கு எப்பிடி சீர் கொண்டு போவிங்க?” என்று சுமதி கேட்க சுப்புசாமியோ அடுத்து என்ன செய்யவென புரியாது சிலையாய் சமைந்தான்.