“அரசாங்கம் கொடுத்த புள்ளிவிவரத்தின்படி 1996லிருந்து இது வரை சந்தித்திடாத பொருளாதார சரிவை நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா சந்தித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் மட்டுமே நாடு தழுவிய பொது முடக்கத்தால் ஏறத்தாழ 10 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசிடமோ சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாயிற்று என்பது குறித்த புள்ளிவிவரத்தை தயாரிக்கவே இல்லை. இரண்டாம் அலையின் போது அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்தாலும் அம்முயற்சி பலனளிக்கவில்லை”
-ஷ்ரேயான்ஷ் மங்கலா, தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஜூலை 11, 2021…
ஜனவரி 5, 2022 அன்று பிற்காலை பொழுது, வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர் பகுதி…
புதிய புதிய கட்டுமானங்களால் நிரம்பி வழியும் அப்பகுதியில் முடியும் தருவாயில் இருந்தது ஒரு வீடு. வெளிப்பூச்சு வேலை மட்டுமே பாக்கி.
மேஸ்திரி மேற்பார்வை செய்ய ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கொத்தனார்கள் பூச்சுவேலையைச் செய்து கொண்டிருந்தனர். வீட்டிற்கு வெளியே பூச்சு வேலைக்கான சிமெண்ட் மற்றும் மணல் கலந்த கலவை சாந்தை கிளறிக் கொண்டிருந்தான் சுப்புசாமி.
சிமெண்டையும் மணலையும் கலந்து அந்தக் கலவையைக் பிரமீடு வடிவத்தில் குவித்து அதன் நடுவே வட்ட வடிவ குழியை உண்டாக்கியவன் பக்கத்திலிருந்த இரும்பு ட்ரம்மிலிருந்து குழாய் மூலம் வரும் நீரை அந்த வட்ட வடிவ குழியில் ஊற்றினான்.
பின்னர் மண்வெட்டியால் சிறிது சிறிதாக மணல்+சிமெண்ட் கலவையை தண்ணீருக்குள் சரித்தான். கலவையை அவன் கிளறும் போதே சிமெண்ட் அவனது கால்களில் தெறித்தது.
பெரும்பாலான நாட்களிள் வெயிலில் தான் அவனுக்கு வேலை என்பதால் கதிரவனின் கரிசனத்தால் அவனது தோல் கருத்திருந்தது. கால் சருமமும் அவ்வாறே. அதில் ஆங்காங்கே தீற்றியிருந்த சிமெண்ட் கலவை எரிச்சலை உண்டாக்கியது.
தலைக்கு மேலோ சூரியபகவான் அவரது எல்லையற்ற வெப்பத்தை பாகுபாடின்றி வழங்கிக் கொண்டிருந்தார். தலையில் கட்டியிருந்த துண்டுக்குள் அடங்கியிருந்த சிகை வியர்வையில் குளித்திருக்க சுட்டெரிக்கும் வெயிலில் சிமெண்ட் கலவையை அதற்கான சட்டியில் அவன் அள்ளிப்போட இன்னொருவன் அந்தக் கலவையைக் கொத்தனாரிடம் எடுத்துச் சென்றான்.
கட்டிட வேலையில் இம்மாதிரி கலவை கிளறுவது, மணலை அரிப்பது, சாந்து ஊற்றுவது போன்ற வேலைகளை சித்தாள் என்பார்கள். சுப்புசாமியும் அவர்களில் ஒருவனே.
அந்தத் தொழிலில் அனுபவம் மிக்கவனே கொத்தனாராக தனித்து இயங்குவான். இன்னும் அத்தகைய அனுபவம் சுப்புசாமிக்குக் கிடைக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளலாம்.
வாரத்தில் ஆறு நாட்கள் இம்மாதிரி வேலைகள் இருக்கும். ஞாயிறன்று பூச்சு வேலைகள் முடிந்த இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வாறு ஊற்றினால் தான் சிமெண்ட் காறை பலம் பெறும். சீக்கிரம் விரிசல் விழாது.
அவனது சகத்தொழிலாளர்கள் ஞாயிறன்று சீட்டாட்டம், குடி என்று சென்றாலும் சுப்புசாமி அவ்வாறெல்லாம் கிளம்ப மாட்டான். அவனுக்கு குடும்பச்சுமை அதிகம்.
தந்தை காலத்தில் தமக்கைகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன், பின்னர் வருடாவருடம் அவர்களுக்கு ஒவ்வொரு விழாவின் போதும் செய்ய வேண்டிய சீர், அதன் பிறகு மகப்பேறுசெலவு, பிறந்த பெண் பிள்ளைகளுக்குக் காதுகுத்து, மூத்த தமக்கையின் மகள் பூப்பெய்தியதற்கு செய்ய வேண்டிய சீர் என அவன் வாங்கிய கடனுக்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
தினசரி உழைக்கும் பணம் அன்றாடச்செலவுக்கே சரியாகிவிட மற்ற அனைத்துக்கும் கடன் வாங்குவதை தவிர வேறு வழி அவனுக்கு இல்லை. இதற்கிடையே அவனுக்கும் திருமணமாகி மகள் பிறந்து இதோ அவளுக்கும் பன்னிரண்டு வயதாகி விட்டது.
இன்னும் மேற்சொன்ன கடன்களில் பிற்பகுதி இரண்டை இன்னும் அவன் செலுத்தி முடிக்கவில்லை. மகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பாளையங்கோட்டையில் பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளியில் சேர்த்திருந்தான்.
அங்கே அதிகம் செலவில்லை தான். புத்தகம் அரசாங்கத்தால் வழங்கப்படும். மதியவுணவும் பள்ளியில் தான். காலையும் மாலையும் பேருந்து பயணம் அரசு நகரப்பேருந்துகளில் இலவச பயண அட்டை வழியாக நடந்தது.
இருப்பினும் சீருடை, நோட்டுகள் இதர ஸ்டேஸ்னரி சாமான்களுக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்காதல்லவா?
ஹெச்.பி பென்சிலில் ஆரம்பித்து ஹீரோ பேனா வரை, இரட்டை வரி போட்ட தமிழ் கையெழுத்து நோட்டிலிருந்து முழுநீள கட்டுரை நோட்டு வரைக்கும் அனைத்துக்கும் ஆகும் செலவு அவனைப் போல விளிம்பு நிலை வருமானம் வரும் தகப்பனுக்கு அதிகமே!
மகளின் கனவுகளோடு அன்றாட செலவுகள் மற்றும் சாகும் வரை ஒரு ஆண்மகன் சில உறவுகளுக்குச் செய்தே தீர வேண்டிய சீர்ச்செலவுகளுமாய் சேர்ந்து சேமிப்பு என்றால் என்னவென்றே சுப்புசாமிக்குப் புரிய வைக்காத நேரத்தில் இடியாய் வந்து இறங்கியது தான் பொதுமுடக்கம்.
அந்த ஓராண்டில் பெரிதாக வேலையில்லாமல் கிராமப்புறங்களில் கிடைத்த கூலிவேலையைச் செய்து வந்தவனுக்கு ஒழுகுகிற வீட்டை செப்பனிடும் பணியும், மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல் வாங்கிக் கொடுக்கும் கடமையும் எழவே வேறு வழியின்றி வட்டிக்குக் கடன் கொடுப்பவரிடம் பணம் வாங்கினான்.
இதற்கிடையே உடல்நலக்கோளாறுகள், எதிர்பாரா செலவுகள் என சுப்புசாமியின் குடும்ப பொருளாதாரம் படுகுழிக்குப் போனது என்னவோ உண்மை.
இதோ கடந்த ஓராண்டு காலமாக தான் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி நிமிர்கிறான். அப்படியும் சில தவணைகள் தவறிவிட்டால் வட்டிக்காரர் பேசுகிற பேச்சைக் காது கொடுத்து கேட்க முடியாது.
அப்போதெல்லாம் கடன் வாங்குவதற்கு பதிலாக உயிரை விட்டு விடலாம் என்று கூட அவனுக்குத் தோன்றும். கடந்த வாரம் வட்டிக்காரர் பேசியபோது அப்படி எண்ணியவன் தான்.
ஆனால் அவனைச் சமாதானம் செய்தவள் அவன் மனைவி தான்.
“கடன் குடுத்தவன் கேக்க தான செய்வான்யா? அடுத்த வாரம் என் வியாபாரத்துல கொஞ்சம் துட்டு வரும்… உன் வாரச்சம்பளமும் சேர்ந்து வந்துச்சுனா வட்டிக்காசை குடுத்துடுவோம்” என நம்பிக்கை கொடுத்தவள் அவளே!
“இருந்தாலும் அந்த ஆளு என்னென்ன வார்த்தை பேசுறான் பாரு… கை நீட்டி காசு வாங்குனவனுக்கும் மான ரோஷம் இருக்கும்னு நினைக்க மாட்டானுவலா? வட்டிக்காசு குடுக்க வக்கில்லாதவனுக்குலாம் எதுக்குல பொண்டாட்டி பிள்ளைனு சொல்லுதான்… இத விட அசிங்கமா கேட்டான்லா… என்னால அதை வாய் விட்டு சொல்ல முடியல” என்று நொந்த குரலில் சொன்னவனுக்கு இப்போதும் அந்த வார்த்தைகள் காதில் ஒலித்தது.
அதை விலக்கியபடி வேலையில் ஆழ்ந்தான் சுப்புசாமி.
வேலையும் விறுவிறுவென நடைபெற்றது. கிட்டத்தட்ட மூன்று மணி வாக்கில் மதியவுணவுக்காக அமர்ந்தனர் அனைவரும்.
சுப்புசாமியும் தனது எவர்சில்வர் டிபன் பாக்சை திறந்தான்.
“சுப்பண்ணே! இன்னைக்கும் உன் சமையலு தானா? சாம்பாரு வாசம் தூக்குது” குறும்பாக கேட்டான் ஒருவன் அவர்களில் இளைஞன் ஒருவன்.
கொத்தனாரோ “என்னல பொட்டச்சி கணக்கா நீயே சோறு பொங்குத? உன் வீட்டம்மாக்கு ஒரு நாள் கூடவா சோறாக்குததுக்கு நேரமில்ல?” என்று தூண்டிவிட
“அவ விடியகாலையில ஆர்.வி.எஸ் தோட்டத்துல பழம் வாங்க போயிடுவாண்ணே… அவ வெறும் வயித்தோட போயி பழம் வாங்கிட்டு வந்து மார்க்கெட்டுக்கு கெளம்பி போகவே நேரம் சரியா இருக்கும்… அதான் எனக்கும் மவளுக்கும் நானே சோறு பொங்கிடுவேன்… என் மவ காய்கறி அரிஞ்சு தரும்… ரெண்டு பேரும் குழம்பு ஆக்கிருவோம்… என் மாரி பாவம்ணே! அவ வீட்டுல ராசாத்தியா வளந்தவ… மவளை வீட்டுல உக்கார வச்சு சோறு போட்டவரு அவ ஐயா… என் வீட்டுக்கு வந்து தான் அவளுக்கு இந்தச் சீரழிஞ்ச பொழைப்பு… நான் என் அக்காமாருக்கு சீர் செய்ய வாங்குன கடனுக்குத் தான மாரியும் நாயா ஒழைக்கா… அதை தாண்டி எல்லா வேலையையும் அவ தலையில கட்டுனா நான் மனுச சென்மமே இல்லண்ணே” என்றான் சுப்புசாமி அவரது தூண்டுதலை ஒதுக்கியவனாக.
“என்னமோ போ! நீ பொண்டாட்டி முந்தானைக்குள்ள பதுங்குன மாதிரி இவனுவளையும் கூறு கெடுத்துடாத”
தூரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மேஸ்திரி கேலியாக கூற அங்கே சிரிப்பலை. சுப்புசாமியும் சிரித்தான். அது அவரது ரசக்குறைவான ஹாஸ்யத்திற்காக அல்ல. இன்னும் மனைவிக்குத் துணையாக நிற்கும் ஆண்மகனை பெண்டாட்டிதாசன் முத்திரை குத்தும் அவர்களின் மடமையை எண்ணி தான்!
ஆனால் அவனது கருத்தை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. மேஸ்திரி தான் அவனுக்கு வேலை கொடுப்பவர். கொஞ்சம் கரடுமுரடான ஆசாமியும் கூட.
“என்னல என் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுதீயா?” என்று அவரது கணீர் குரலில் அதட்டினால் அவ்வளவு தான்!
எனவே மௌனமாக சோற்றை விழுங்கியவன் சாப்பிட்டு முடித்து கை கழுவினான். மறுபடியும் பழைய வேலை முதுகெலும்பை ஒடித்தது.
மாலையில் காபியும் வடையும் வர சில நிமிடங்கள் ஓய்வு கிடைத்தது. பின்னர் பூச்சுவேலை முடிவடைய பூச்சுவேலைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், கொள்கலன்களைக் கழுவும் வேலை நடந்தேறியது.
அனைத்தும் முடிந்ததும் “இன்னையோட வீட்டு வேலை முடிஞ்சிட்டு… இனிமே ஞாயித்துகெழமை தண்ணி ஊத்துத வேலைய நான் பாத்துக்கிடுதேன்” என்றபடி அங்கே நின்ற கொத்தனார் சித்தாள்களிடம் கூறினார் மேஸ்திரி.
பின்னர் கை கால்களை கழுவிக்கொண்டனர் அனைவரும். சுப்புசாமி சிமெண்ட் கலவையால் சாம்பல் வண்ணம் பூத்திருந்த கால்களைக் கழுவியவன் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டை கிழித்து கை கால்களில் தேய்க்கத் துவங்கினான்.
“ஏல ஒழுங்கா தேங்காண்ணய நல்லா தேச்சி விடுங்க.. இல்லனா காலு வங்கு பத்திடும்” என்று இளைஞர்களுக்கு அதட்டலுடன் அறிவுரை வழங்கியவன் துண்டையும் எவர்சில்வர் டிபன் பாக்சையும் வயர் கூடையில் வைத்துவிட்டு மேஸ்திரியிடம் வந்தான்.
“அண்ணே இந்த வாரக்கூலி…” என்று இழுத்தவனிடம்
“திங்ககெழமை வாங்கிக்கிடுதியா சுப்பு? இன்னும் எனக்கே சம்பளம் வந்து சேரல… சார் கிட்ட கேட்டதுக்கு ஞாயித்துகெழமை வாங்கிக்கனு சொல்லிட்டாருல… உங்க எல்லாத்துக்கும் திங்ககெழமை கண்டிப்பா வாரக்கூலி வந்துடும்” என்றார் மேஸ்திரி.
சுப்புசாமிக்குத் தலையில் இடி விழுந்தது போலானது. இந்த வாரக்கூலியை வைத்து தானே வட்டிக்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென அவனும் அவன் மனைவியும் திட்டமிட்டிருந்தார்கள். அதில் மண் விழுந்து விட்டதே!
இருப்பினும் சிறிய ஆறுதலாக மனைவியின் பழவியாபாரத்தில் அவள் சம்பாதித்த பணம் இருக்கும். அதை வைத்து எப்படியாவது வட்டிக்காரரைச் சமாளித்து விடலாமென எண்ணியவனுக்கு அடுத்த அடி விழுந்தது.
“அடுத்த வேலை இப்போதைக்கு இல்ல… பொங்கல் கழிச்சு நான் சொல்லி விடுதேன்… அப்ப எல்லாரும் வாங்க… அது வரைக்கும் உள்ளூருல எதாச்சும் கூலிவேலை பாத்துக்கிடுங்கல”
மேஸ்திரி இவ்வாறு சொன்னதும் அங்கிருந்த அனைவரின் முகமும் செத்துவிட்டது.
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த ஒரு வார சம்பளத்தை வைத்து தான் வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும், கரும்பு, காய்கறிகள் இன்னும் சில பொங்கல் சாமான்கள் வாங்க வேண்டுமென திட்டமிட்டிருந்தனர்.
அங்கே இருந்த இளைஞன் ஒருவனோ “என்னண்ணே இப்பிடி சொல்லுதிய? வாரக்கூலிய வச்சு தான் என் தங்கச்சிக்குப் பொங்கப்பிடி குடுக்கலாம்னு இருந்தேன்… போன வருசமே பொங்கப்பிடில அது இல்ல இது இல்லனு மாப்பிள்ளை வீட்டுல மூஞ்சிய தூக்குனாவ… இந்த வருசம் குடுக்கலனா என் தங்கச்சிய துரத்தி விட்டுருவான் அந்தக் கோட்டிக்காரன்” என்று தவிப்பாய் முடித்தான்.
அதைக் கேட்டுக்கொண்டே ஒரு லிட்டர் செவன் அப் பாட்டிலில் குடிதண்ணீரை நிரப்பினான் சுப்புசாமி.
ஆனால் மேஸ்திரிக்கே கட்டுமான நிறுவனத்திலிருந்து சம்பளம் வராத போது மற்றவர்களுக்கு அவர் எப்படி கொடுக்க முடியும்?
சோகத்துடன் கிளம்பிய சுப்புசாமியிடம் டி.வி.எஸ் 50யுடன் வந்து நின்றான் அந்த இளைஞன்.
“வாண்ணே! உங்க ஊருல எறக்கி விடுதேன்”
கூடையோடு அவன் பின்னே தொற்றிக்கொண்டான் சுப்புசாமி. வழிநெடுகிலும் என் கதையை நீ கேளு என்ற ரீதியில் இருவரும் புலம்பிக்கொண்டே வந்தனர்.
‘சேர்ந்தவிளை’ என்ற பெயருடன் பச்சைவண்ண போர்ட் தென்படவும் இறங்கிக்கொண்டவன் “நான் கெளம்புதேன் முத்து… பாத்து போல” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடந்து செல்லும் வழியில் தென்பட்டது சேர்ந்தவிளையின் கூட்டுறவு பால்பண்ணையும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும்.
வெளிப்பகுதியில் விளக்கெரிந்து கொண்டிருக்க கூட்டுறவு பால் பண்ணையின் வராண்டாவில் படுத்திருந்தது துணி மூட்டை போல ஒரு உருவம்.
சுப்புசாமி அதை நெருங்கியவன் “ஆத்தா நான் தான்” என்கவும் மெதுவாக கண்களை திறந்தது அவ்வுருவம்.
பஞ்சாய் நரைத்த தலை! சுருங்கிய தோல்! குழி விழுந்த கண்கள்! உலர்ந்த உதடுகள்! என்று வாங்கியது என்பதே தெரியாத அளவுக்கு கசங்கி சுருங்கிய புடவையைச் சுற்றிய உடல்!
“எய்யா சுப்பு” என்று நடுங்கிய குரலில் சொன்னபடி எழுந்து அமர்ந்த அந்த உருவம் ஒரு மூதாட்டி.
சுப்புசாமி தனது எவர்சில்வர் டிபன் பாக்சை திறந்து மாலையில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட உழுந்தவடையை அம்மூதாட்டியிடம் நீட்டினான்.
“சாப்பிடுத்தா… உன் தண்ணி கேனை குடு” என்று அவர் வைத்திருந்த பெரிய தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் அதில் தான் கொண்டு வந்த குடி தண்ணீரை நிரப்பினான்.
“காலைல வரைக்கும் இந்த தண்ணி போதும்லா” என்று கேட்டவனிடம்
“போதும்யா… எட்டு மணிக்கு மேல தெருவுல சொக்கலிங்கய்யா வீட்டம்மா சோறு போடுவா… அது போதும்… பெத்த பிள்ளை தெருவுல விட்டுட்டான்னு பிச்சை எடுத்துட்டு இந்த ஊருக்கு வந்தேன்… சொக்கலிங்கய்யா, உன்னைய மாதிரி நாலு பேரு இருக்கப் போய் என் சீவன் இன்னும் இருக்கு… நீ நல்லா இருப்பய்யா” என்று தனது நடுங்கும் கரங்களால் அவனை கையெடுத்துக் கும்பிட்டார் அந்த முதியப்பெண்மணி.
“நான் என்னத்த செஞ்சிட்டேன்? இம்புட்டோண்டு சோறும் வடையும் குடுக்கதுலாம் பெரிய விசயமாத்தா? நீ சாப்பிட்டுட்டு தூங்கு… எட்டு மணிக்கு சொக்கலிங்கய்யா வீட்டுக்குப் போ… நான் வாரேன்… வீட்டுல பாப்பா தனியா இருக்கும்” என்றபடி கிளம்பினான் சுப்புசாமி.
தினமும் அந்த மூதாட்டிக்கு தண்ணீரும் சோறும் கொடுப்பது அவனது வழக்கம். ஏனோ அவனுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. அதில் வாரக்கூலி வராததை கூட மறந்தவனாக தன் வீட்டை அடைந்தவனை கண்ணீருடன் வந்து கட்டிக்கொண்டாள் அவன் மனைவி பூமாரி.
“பழவியாபாரத்துல சேர்த்து வச்ச துட்டை எவனோ பர்சோட களவாண்டுட்டான்யா… நாளைக்குச் சித்தைக்காரனுக்கு என்ன பதில் சொல்ல?”
முத்துசாமியின் தலையின் அன்றைய தினம் விழுந்த மூன்றாவது இடி! அவனும் உடைந்து அழ ஆரம்பித்தான். வட்டிக்காரன் இப்போதே கண் முன்னே வந்து நின்று தாண்டவமாடுவது போல பிரமை.
பெற்றோர் அழுவதைப் பார்த்தபடி கண்ணீரில் தத்தளித்த விழிகளுடன் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் அவர்களின் மகள்!