“கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பொதுமுடக்கம் நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் நிர்மூலமாக்கி விட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் Stringency Indexன் படி உலகிலேயே பொதுமுடக்கத்தால் மிக மிக மோசமான விளைவைச் சந்தித்த நாடு இந்தியா தான்”
-நேஷ்னல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரின் ஆராய்ச்சி மாணவி ரமிதா ஐயர்
ஜனவரி 5, 2022 அன்று மதியம், பாளையங்கோட்டை பழைய போலீஸ் குடியிருப்பு வளாக மைதானம்…
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்காக பாளை தினசரி சந்தையிலிருந்த காய்கறி, கனி மற்றும் இதர கடைகள் மாற்றப்பட்ட இடங்களில் அந்த மைதானமும் ஒன்று.
மதிய வெயில் இரக்கமின்றி பாதசாரிகளையும் ஆங்காங்கே கடை போட்டு அமர்ந்திருந்த வியாபாரிகளையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நேரம்.
“கொய்யாப்பழம் கிலோ முப்பது ரூவா… கடிச்சாலே மாவா இருக்கும் ஆர்.வி.எஸ் கொய்யா”
பனைமரத்தினாலான பெட்டியில் பாதியளவு நிரம்பியிருந்த கொய்யா பழங்களில் சிலதை கைகளில் ஏந்திக்கொண்டு விற்க முயன்று கொண்டிருந்தாள் பூமாரி.
உழைத்து உரமேறிய உடல் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தது. கதிரவனின் கதிர்களைச் சமாளிக்க புடவை முந்தானையால் முக்காடிட்டிருந்தாள்.
“எம்மா கிலோ முப்பது ரூவாங்கிறியே, அநியாய விலையால்லா இருக்கு?”
அங்கலாய்த்தபடி கொய்யாப்பழங்களை பார்வையிட ஆரம்பித்தார் ஒரு பெண்மணி.
பூமாரியோ எப்படியாவது பழத்தை விற்றாக வேண்டுமென்பதால் கொய்யாப்பழத்தின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்தாள்.
“நல்ல பழம்… எல்லாமே இன்னைக்குப் பறிச்சதும்மா… நம்ம ஆர்.வி.எஸ் தோட்டத்து பழம்”
“இருந்தாலும் முப்பது ரூவா ஜாஸ்தி… கிலோ இருவதுக்குக் குடேன்”
பழங்களைப் புரட்டிச் சோதித்துக் கொண்டிருந்தவரின் கைகளிலும் கழுத்திலும் காதிலும் டாலடித்த தங்கம் பூமாரியைக் கண்டு நகைத்தது.
“என்னை வாங்கும் போது கூட செய்கூலி சேதாரம் என பட்டியலிட்ட பணத்தை ஏன் எதற்கு என்று கூட கேட்காது நீட்டியவர் உன்னிடம் மட்டும் பேரம் பேசுவதை பார்த்தாயா?” என அவை கேட்பது போல மாயை.
நம்மில் பெரும்பாலானோர் இதை தானே செய்கிறோம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையாக நமது பேரம் பேசும் வித்தையை நாம் காட்டுவது என்னவோ கீரை விற்பவர், காய்கறி விற்பவர் மற்றும் நடைபாதை வியாபாரிகளிடம் தானே!
பூமாரிக்கு இது பழக்கப்பட்டது தான். ஆனால் பத்து ரூபாய் குறைப்பு என்பது அவளுக்குப் பெரிய இழப்பு. அதிகாலையில் கண் விழித்து ஆர்.வி.எஸ் தோட்டத்திற்கு என்று அன்றன்று பறித்த பழங்களை வாங்கிக் கொண்டு பாளை மார்க்கெட்டை அடைகையில் பேருந்து பயணச்சீட்டே அவளுக்கு முப்பது ரூபாய் ஆகிவிடும்.
அரசாங்கம் பெண்களுக்கு நகரப்பேருந்தில் இலவசம் என்று கூறியிருந்தாலும் அந்த இலவசப்பேருந்திற்கு அலை மோதும் கூட்டமும், சில பேருந்துகளில் பெட்டிகளை எடுத்துச் செல்ல நடத்துனர்கள் அனுமதிக்க மறுப்பதும் பூமாரி கட்டணப்பேருந்தில் வந்து செல்வதற்கு முக்கிய காரணங்கள்!
அப்படிப்பட்டவளுக்குப் பத்து ரூபாய் என்பது பெரிய விஷயம் தானே!
“சரிம்மா! உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம்… இருபத்தஞ்சு ரூவா”
பத்து ரூபாய் அடித்து பேசியதற்கு ஐந்து ரூபாயாவது குறைந்ததே என நிம்மதியுடன் அப்பெண்மணி சம்மதிக்க கொய்யாப்பழத்தை தராசில் நிறுத்து பின்னர் பாலிதீன் பையில் போட்டு நீட்டினாள் பூமாரி.
அவர் வாங்கி கொண்டு நகர அருகே அமர்ந்திருந்த இன்னொரு பழக்கார பெண்மணியான மங்கலம் என்பவர் பூமாரியிடம் சாப்பிடலாமா என்று கேட்டார்.
“நீங்க சாப்பிடுங்கக்கா… நான் இன்னும் கொஞ்சம் போணி ஆகட்டும்னு பாக்கேன்”
“ஏத்தா இதுக்கு மேலயும் பட்டினியா கெடந்தா கொடலு உலந்துடும் தாயி… ஒழுங்கா சாப்புடு” என்று மிரட்ட பூமாரி தனது பனையோலை பெட்டியில் தராசு மற்றும் அளவுக்கற்களை வைத்தாள்.
பக்கத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரிடம் “நாங்க சாப்பிட்டுட்டு வந்துடுறோம்ணே… அது வரைக்கும் கூடைய பாத்துக்கிடுங்க” என்று கூற
“சரிம்மா… நான் உள்ள எடுத்து வச்சிக்கிடுதேன்” என்றவர் தனது தள்ளுவண்டியில் கீழே இருந்த அடுக்கில் அவர்களன் கூடையை மறைவாக எடுத்து வைத்தார்.
பின்னர் இருவரும் ஜவஹர் திடலின் ஒரு ஓரமாக அமைந்திருந்த அம்மா உணவகத்தை நோக்கி நடந்தனர்.
அவர்களைப் போல அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்களுக்கு அந்த உணவகம் பெரிய வரப்பிரசாதம். இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த எவர்சில்வர் டிபன் பாக்சை நீட்டி “ஒரு தயிருசாதம், ஒரு தக்காளி சாதம்” என்க சுடச்சுட சாப்பாடு டிபன் பாக்சில் வைக்கப்பட்டது.
அதற்கான விலையைக் கொடுத்துவிட்டு வந்தவர்கள் ஒரு ஓரமாக நின்று சாப்பிட ஆரம்பித்தனர்.
“என்னத்தா கழுத்துல வெறும் கயிறு தான் கெடக்கு? தாலி செயினு எங்க?”
“அத ஏன் கேக்குறக்கா? போன லாக்டவுனுல என் நாத்தனா பொண்ணு சமைஞ்சுதுல்ல, அதுக்கு தாய்மாமன் சீர் செய்ய கையில துட்டு இல்லனு அந்த மனுசன் அலையா அலைஞ்சு பாத்தாரு… எனக்கு அவரை அப்பிடி பாக்க ஏளல… அதான் செயினை அடவு வச்சு சீர் செய்ய சொன்னேன்… மெதுவா மீட்டுக்கணும்கா”
“அட கூறுகெட்டவளே! அதுக்கு தாலி செயினையா அடவு வைப்ப? சித்தைக்காரன் (வட்டிக்குப் பணம் கொடுப்பவர்) கிட்ட அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கிருக்கலாம்ல?”
“என் மவளுக்கு ஆன்லைனு கிளாசுக்கு போனு வாங்க கையில துட்டு இல்லனு சித்தைக்காரன் கிட்ட தான் வாங்குனோம்… ஓயாம அவன் கிட்ட கேட்டா பழைய துட்டை எண்ணி வைய்யினு சொல்லுவான்… அதான் வேற வழியில்லாம அடவு வச்சோம்… இன்னும் வீடு ஒழுவுதுனு ஒக்கிடுததுக்கு வாங்குன கடன் வேற இருக்கு… ஒரு வருசம் வேலைக்குப் போகாம கெடந்ததால ஒரு கடனையும் அடைக்க வழியில்ல… என்னமோ இப்ப கொஞ்சநாளா வேலைக்கு வாரோம்… இத வச்சு கொஞ்சம் கொஞ்சமா கடனை கெட்டிட்டிருக்கோம்… எப்பிடியும் இன்னும் ஆறு மாசம் ஆவும்”
“என்னமோ போ மாரி… எல்லாரையும் இந்த லாக்டவுனு ஒரு வழியா தான் ஆக்கிட்டு பாத்துக்க… நம்மள மாதிரி தினசரி ஒழைச்சா தான் வீட்டுல அடுப்பெரியும்னு எத்தனை சனம் இருக்கும்? அந்தச் சனம் பூராவும் இதால சீரழிஞ்சு போயி தான் கெடக்குது… என்னமோ இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மூச்சு விடுதோம்… ஆனா பொங்கலுக்கு அடுத்து மறுவடியும் லாக்டவுனு போடப்போறதா பேசிக்கிடுதாவ… மறுபடியும் வீட்டோட கெடந்தா நம்ம கெதி என்னாவும்?”
“அந்த ஆண்டவன் நமக்கு காசு பணத்த குடுக்க வேணாம்கா… உழைக்குததுக்குக் காட்டுன வழிய அடைக்காம இருந்தா போதும்”
“அதுவும் சரி தான்… இப்பிடி வேலைக்குப் போவாம ரேசன் அரிசில கஞ்சி காச்சி அரைவயிரும் காவயிறுமா கெடக்குததுக்கு சீக்கு வந்து ஒரேயடியா போயிடலாம் மாரி… இந்த வாட்டி என்னால சமாளிக்க முடியாதுத்தா”
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் பயம் பெருந்தொற்றை எண்ணி அல்ல; அதன் காரணமாக முடக்கப்படும் தங்களது தொழில்களை குறித்தே என்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது.
பேச்சு வாக்கில் சாப்பிட்டுவிட்டு கை கழுவியவர்கள் மீண்டும் தங்கள் வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றார்கள்.
வைத்திருந்த கொய்யாப்பழம் அனைத்தையும் விற்று முடித்த பூமாரியின் மனம் நிறைந்திருந்தது. ஒரு வாரம் முழுவதும் விற்று சேர்த்த பணம் தொள்ளாயிரம் ரூபாயோடு அன்றைய தொகையும் சேர்ந்துவிட்டதால் மறுநாள் வட்டிக்காரருக்குக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் நாலைந்து சிறிய பழங்கள் மட்டும் கிடந்த பெட்டியைத் தலையில் தூக்கி வைத்தாள்.
அவளும் மங்கலமும் பக்கத்து ஊர்க்காரர்கள் தான். எனவே பேசிக்கொண்டே பாளை மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றனர்.
செல்லும் வழியில் அல்வா கடையைக் கண்டதும் மகள் நினைவு வந்தது பூமாரிக்கு.
“அக்கா என் மவளுக்கு அல்வாவும் மிச்சரும் ரொம்ப பிடிக்கும்… வாங்கிட்டு வந்துடுதேன்” என்றவள் கடையில் ஆவி பறக்க தயாராகி இருந்த அல்வாவில் நூறும், மிக்சர் கால் கிலோவும் வாங்கிக் கொண்டாள்.
அதற்கான பணத்தைக் கொடுத்தவள் அல்வா மிக்சரோடு சேர்த்து தனது பர்சை பழங்கள் வைத்திருந்த கூடையில் போட்டு அதன் மீது தராசையும் அளவுக்கற்களையும் வைத்து ஒரு துண்டினால் மூடினாள்.
பின்னர் பேருந்து நிலையத்தை அடைந்த போது மாணவர்கள் கூட்டமின்றி பேருந்து நிறுத்தம் காற்று வாங்கியது.
“பள்ளிக்கொடத்து பிள்ளையலு இல்லாம் பஸ் ஸ்டாண்டு வெறிச்சுனு கெடக்கு”
மங்கலம் சொல்லி முடித்து சில நிமிடங்களில் அவர்களைப் போலவே வேலைக்குச் சென்று திரும்பியவர்களால் பேருந்து நிறுத்தம் நிரம்பத் துவங்கியது. கட்டிட வேலைக்குச் செல்பவர்கள், காய்கறி விற்பவர்கள், ஆசிரியைகள் என அங்கே இருப்பவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினரே!
அவர்கள் ஊருக்குச் செல்லும் நகரப்பேருந்துகள் ஆறு மணியிலிருந்து ஆறே முக்கால் வரை தான் வரும். அவற்றை விட்டுவிட்டால் ஏழு முப்பதுக்குத் தான் அடுத்த பேருந்து கிடைக்கும்.
எனவே வருகிற பேருந்தில் ஏறிவிட வேண்டியது தான் என இருவரும் தீர்மானித்த போதே மக்கள் கூட்டம் பிதுங்கி வழிய வந்து நின்றது கிளாக்குளம் என்ற பலகையுடன் கூடிய நகர பேருந்து.
ஏற்கெனவே கூட்டத்தால் ஒரு பக்கம் சரிந்தாற்போல நின்ற பேருந்தின் படிக்கட்டுகள் வரை ஆட்கள் நிரம்பியிருக்க மங்கலமும் பூமாரியும் தங்களது கூடைகளுடன் பேருந்தில் ஏற ஓடினர்.
“படில நிக்காதீங்க… மேல ஏறுங்க, மேல ஏறுங்க… இல்லனா செக்போஸ்டுல வண்டிய நிப்பாட்டிருவேன்”
எச்சரிக்கையைக் கூட மிரட்டலாக சொல்லிக்கொண்டே அந்தக் கூட்டத்தில் நுழைய முடியாமல் பின் வாயில் வழியே இறங்கி முன்வாயிலில் ஏறினார் நடத்துனர்.
“ஜங்சன், முருகன்குறிச்சி ஏறுனவங்க டிக்கெட் எடுங்க” என்றவர் அங்கே ஏறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தைப் பார்த்து
“எம்மா கூட்டத்துல ஏறாதீங்க… பின்னாடி நாகல்குளம், கருங்குளம் ரெண்டும் ஃப்ரீயா தான் வருது… நின்னு பொறுமையா வாங்க” என்று கூற அதை காது கொடுத்து கேளாமல் சிலர் படிக்கட்டில் தொற்றிக் கொண்டனர்.
மங்கலமும் பூமாரியும் எவ்வளவோ போராடியும் அவர்களால் ஏற முடியவில்லை.
இதற்கு மேலும் பேருந்து நின்றால் இன்னும் சிலரும் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் நடத்துனர் “போட்டும் ரைட்” என்றபடி விசிலை ஊத பேருந்து சரிந்தபடியே நகர்ந்தது.
“அடுத்து நாகல்குளம் வருவான்… அதுல ஏறுவோம்… வாங்கக்கா”
இருவரும் அங்கே இருந்த பிள்ளையார் கோவிலின் வாயிலில் அமர்ந்தனர்.
இன்னும் மக்கள் கூட்டம் குறைவேனா என்றது. காரணம் அந்தப்பக்கத்து குக்கிராமங்களுக்கு மணி நேரத்தைப் பொறுத்து தான் பேருந்து வரும்.
சரியான பேருந்தை பிடிக்காவிடில் வீட்டிற்கு செல்ல தாமதமாகி விடும். அதன் பின்னர் இரவுணவு, பாத்திரம் துலக்கும் வேலையை முடித்துவிட்டு எப்போது உறங்குவது? இதுவே கூட்டம் படிகளில் தொற்றி செல்வதற்கு முக்கியக்காரணம்!
பூமாரியும் மங்கலமும் அமர்ந்திருக்க ஒருவழியாக அடுத்த பேருந்தும் வந்து சேர்ந்தது.
“ஏ நாகல்குளம் வந்துட்டு”
உற்சாக கூச்சலுடன் அந்த ஊர்க்காரர்கள் ஓட பெண்மணிகள் இருவரும் தங்கள் கூடைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அதிலும் கூட்டம் நிரம்பியிருக்க மற்றவர்கள் இடித்துத் தள்ளிவிட்டு ஏறியதில் மங்கலமும் பூமாரியும் தடுமாறினர்.
அப்போது நடத்துனர் வேறு பொறுமையிழந்தவராக “ஏம்மா! கூடைய பஸ்சுல ஏத்தாதீங்க…, இங்க ஆளு நிக்கவே இடமில்ல… உங்க கூடை நாலாளு இடத்த அடைக்கும்… ஒழுங்கா அடுத்து கருங்குளம் வருது… அதுல ஏறுங்க” என்று கத்திவிட்டு விசிலை ஊத அந்தப் பேருந்தும் அவர்களை ஏற்றாமல் நகர்ந்து சென்றது.
பூமாரிக்கோ நேரம் ஆக ஆக தவிப்பானது. அவளது பன்னிரண்டு வயது மகள் வீட்டில் தனியாக அல்லவா இருப்பாள்! அவள் கணவன் சுப்புசாமிக்கு வி.எம் சத்திரத்தில் தான் கட்டிட வேலை. ஆனால் வேலை முடிய இரவு எட்டு மணி ஆகிவிடும்.
பெண் பிள்ளை தனியே இருப்பாளே என்ற கவலை வேறு அவளது மனதில் பதற்றத்தை விதைக்க அடுத்த அரை மணி நேரம் அவளுக்கு அவதியாகவே கழிந்தது.
மங்கலமோ அவரது கணவரை எண்ணி வருந்தினார்.
“அந்த ஆளுக்கு என் கையால காப்பி குடிச்சா தான் எறங்கும்… இந்தப் பஸ்சுக்காரன் வார நேரத்த நெனைச்சா இன்னைக்கு ராச்சாப்பாட்டுக்குத் தான் நம்ம வீட்டுக்குப் போவோம் போலயே”
ஒருவரை வாய் விட்டுப் புலம்ப வைத்து, மற்றொருவரை அமைதியாக தவிக்க வைத்து அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது அடுத்த பேருந்து.
இந்த முறை எப்படியாவது ஏறிவிடவேண்டுமென உத்வேகத்துடன் அதை நெருங்கியவர்கள் வாயில் படியில் தொங்கவில்லை என்றாலும் அதிலும் கூட்டம் தான் என்பதை கண்டு திகைத்தனர்.
ஆனால் வேறு வழியில்லை! இதை விட்டால் இனி அடுத்த பேருந்து வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.
இருவரும் எப்படியோ அதில் ஏறிவிட்டனர். நடத்துனரும் வர பூமாரி தனது கூடையிலிருந்து பர்சை எடுத்தவள் “சேந்தவிளை ஒன்னு” என்க நடத்துனர் பயணச்சீட்டை நீட்டினார்.
கூடவே “எம்மா பொம்பளைங்களுக்கு டிக்கெட் கெடையாது” என்றதும் நினைவு வந்தவளாக பர்சில் பணத்தை வைத்து அதைக் கூடையில் வைத்தாள்.
பின்னர் கூடையை சற்று தள்ளி இருக்கைக்கும் தனது காலுக்கும் இடையே வைத்துக்கொண்டவள் மங்கலத்திடம்
“நல்லவேளைக்கா, கருங்குளத்துல ஏறுனோம்… நமக்கு பதினஞ்சு ரூவா மிச்சம்” என்று சொல்லி சிரித்தாள்.
அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் ஏறியது. மங்கலமும் பூமாரியும் வியாபாரத்தைக் குறித்து பேச ஆரம்பித்தனர்.
“நான் உரக்குழிக்குப் பக்கத்துல பனங்கெழங்கு விதைச்சேன் பாத்துக்க… நேத்து என் வீட்டாளு அதை புடுங்கி வச்சுது… நாளைக்கு அதை வியாபாரத்துக்கு கொண்டு வந்துடணும்… பொங்கல் நேரம் அதுக்குத் தான கிராக்கி” என்றார் மங்கலம்.
“ஆமாக்கா… எங்க வீட்டுலயும் பனம்பழம் போட்டு வச்சோம்… கெழங்கு விழுந்துச்சானு தோண்டி பாக்கணும்” என்றாள் பூமாரி.
இவ்வாறு பேச்சு வாக்கில் நேரம் செல்ல அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் இறங்கத் துவங்கினர். பூமாரிக்கும் மங்கலத்துக்கும் இருக்கை கிடைத்ததும் இருவரும் அவரவர் பனையோலை கூடையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தனர்.
“காலு நோவுதுத்தா மாரி” என்ற மங்கலம் எதேச்சையாக பூமாரியின் கூடையிலிருந்த அவளது துண்டு காணாமல் போயிருப்பதைப் பார்த்துவிட்டார்.
“ஏட்டி உன் கூடைல கெடந்த துண்டு எங்க?”
பதற்றமாக அவர் வினவ பூமாரியும் தனது கூடையை அப்போது தான் கவனித்தாள்.
வேகமாக கூடையை ஆராய்ந்தாள்.
நாலைந்து கொய்யாப்பழங்கள், தராசு, அளவுக்கற்கள், மகளுக்காக வாங்கிய அல்வா மற்றும் மிக்சர் பொட்டலங்கள் என அனைத்தும் இருந்தன, ஒரு வாரத்தில் வியாபாரம் செய்து சேர்த்த தொகையை வைத்திருந்த பர்சைத் தவிர.
பர்சை காணவில்லை என்றதும் பூமாரியின் முகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“மங்கலக்கா வியாபாரக்காசை வச்சிருந்த பர்சை காணும்”
அழுகை கலந்து ஒலித்தது பூமாரியின் குரல். மங்கலம் அதிர்ந்தவர் “என்ன சொல்லுத? டிக்கெட்டுக்கு துட்டு எடுக்குதப்ப கூட இருந்துச்சே” என்க
“அதுக்கு அப்புறம் நான் கூடைய கவனிக்கலக்கா… கூட்டத்துல யாரோ கவனிச்சு துட்டோட பர்சை எடுத்துட்டாவ” என்றாள் அவள் கண்ணீர் மல்க.
அவளின் அழுகையைக் கேட்டு அங்கே வந்த நடத்துனர் விசயம் அறிந்ததும் பரிதாபத்துடன் அவளை நோக்கினார்.
“எம்மா ஒரு வார காசையும் அதுலயா வச்சிருந்த? வீட்டுல வச்சிட்டு வந்திருக்கலாம்லா”
“இந்த அன்றாடகாச்சி கிட்ட யாரு களவாம்பாவனு மெதப்புல கொண்டு வந்துட்டேன் அண்ணாச்சி”
அழுது தீர்த்தாள் பூமாரி.
“இருக்குறவ எல்லாரையும் செக் பண்ணுவோமாத்தா?” என்றவரிடம் வேண்டாமென்றவள்
“இன்னுமா எடுத்தவன் பஸ்சுல இருப்பான்? அவன் எறங்கி போயிருப்பான் அண்ணாச்சி” என்றாள் கண்ணீர் மல்க.
அவர் வருத்தத்துடன் அங்கிருந்து நகர மங்கலத்திடம் புலம்பிக் கொண்டே வந்தாள் பூமாரி.
“நாளைக்கு சித்தைக்காரன் வருவான்… போன வாட்டியே மானங்கெட்ட கேள்வி கேட்டான் மங்கலக்கா… என் வீட்டாளு சம்பளம் வந்தாலும் அவனுக்குக் குடுக்க பத்தாதே”
மங்கலம் எதையும் யோசிக்காது தன்னிடமிருந்த பணத்தை நீட்டினார்.
“இத வச்சுக்க மாரி… சித்தைக்காரனுக்கு வட்டி குடுத்துடு… உனக்கு எப்ப திருப்பி தர முடியுமோ தா” என்றார் அவர்.
பூமாரிக்கு சோகத்திலும் ஒரு சிறு நிம்மதி. ஆனாலும் தன்னைப் போல அன்றாடம் உழைத்து தான் மங்கலத்தின் வீட்டிலும் அடுப்பெரியும் என்பதை அவள் அறிவாள்! மங்கலத்தின் கணவருக்கு உடல்நலம் சரியில்லை. இருவரும் நம்பி இருப்பது இந்த ஒற்றை வருமானத்தை தான்!
அதை வாங்கிக்கொள்ள பூமாரியின் மனம் ஒப்பவில்லை.
“வேண்டாம்கா… எங்களுக்கு சித்தைக்காரன் பேச்சு புதுசில்ல… கூட்டி குறைச்சு குடுத்து பேசி பாக்கோம்”
அடுத்து மங்கலத்தின் ஊர் வர அவர் இறங்கினார்.
அடுத்தது பூமாரியின் ஊரான சேர்ந்தவிளை. ஊரில் கால் வைக்கவே மனம் வலித்தது.
ஒரு வாரம் வெயிலில் நின்று அரைகுறை உணவுண்டு சேர்த்த பணம்! இப்படி காணாமல் போய் விட்டதே!
“சேந்தவிளை இறங்குங்க”
நடத்துனரின் குரல் கேட்டு எழுந்தவள் கூடையோடு இறங்கினாள். கையில் தம்பிடி காசு இல்லாத வெறுமை ஊரைச் சூழ்ந்திருந்த இருளைப் போல அவளை மருட்டியது. மனம் வலிக்க தன் வீட்டை நோக்கி நடந்தாள் அவள்.