“அவனது அதிகாரத்தின் கீழ் இந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியமும் இருக்கலாம்; ஆனால், யாருக்கும் பணியாத அவனது மிடுக்கு என் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி நிற்கும்போது, இந்த உலகத்தின் ஆகப்பெரிய பேரரசி நான் தான் என்ற கர்வம் என்னைத் தழுவிக்கொள்கிறது.”
– வெண்பா
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் பரபரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சென்னை விமானத்திலிருந்து வந்து இறங்கிய நேத்ரனை வரவேற்க, தூத்துக்குடி மாவட்ட ‘தமிழ்நாடு முன்னேற்றக் கழக’ நிர்வாகிகளும், அவனது ஆதரவாளர்களும் வெளியே காத்து நின்றனர். முகத்தில் எந்தச் சலனமுமின்றி வெளியே வந்தவனைச் சூழ்ந்துகொண்ட கட்சி நிர்வாகிகள், அவனுக்கு மாலை அணிவிக்க முற்பட, அதைத் தடுத்து நிறுத்தினான் நேத்ரன்.
“இப்ப மாலை மரியாதையெல்லாம் வேணாம். நிலைமை ரொம்ப டென்ஷனா இருக்கு. முதல்ல என்னை ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க,” என்று மிடுக்காகக் கூறிவிட்டு, அவனுக்காகத் தயாராக நின்றிருந்த இன்னோவா காரில் ஏறிக்கொண்டான்.
முந்தைய தினம் இரவில் கட்சித்தலைமையிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. நள்ளிரவில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் அவனது தொகுதியில் தீயாய் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையைப் பற்றி கூறி அதை முடித்து வைக்குமாறு கட்டளையிட்டிருந்தார்.
முன்னரே நிகிலன் சொன்ன பிரச்சனை தான். இவ்வளவு தூரம் போகுமென நேத்ரனும் நினைக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“முருகனோட விசயம் பெருசாகிடுச்சுடா. அந்தப் பொண்ணு ஹேமாவோட அப்பா அம்மா கிட்ட பேச நானும் எவ்ளோவோ முயற்சி பண்ணுனேன். ஆனா அவங்க போராட்டம் பண்ணுறதுல பிடிவாதமா இருக்காங்க.” என்றிருந்தான் அவன்.
“நான் சொல்லுறபடி செய்! அவங்க சொல்லுறதுக்காக முருகனை அரெஸ்ட் பண்ணுனா அவன் வாழ்க்கையே போயிடும்.” என்று நண்பனிடம் ஒரு உபாயம் சொன்னவன் “இதைச் செஞ்சிட்டோம்னா முருகனை யாராலயும் தப்பு சொல்ல முடியாது. நான் வர்ற வரைக்கும் அவன் மேல எஃப்.ஐ.ஆர் ஃபைல் ஆகாம பாத்துக்க, முக்கியமா அவன் போட்டோ ப்ரஸ்சுக்கு போகக்கூடாது” என்று கட்டளையிட்டிருந்தவன் விமானம் ஏறி தூத்துக்குடிக்கு வந்தும் விட்டான்.
கார் இப்போது செல்வது தூத்துக்குடி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி.
அந்த இடம் போராட்டக்காரர்களின் முற்றுகையில் ஸ்தம்பித்துப் போயிருந்தது. ஹேமா படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள், அவளது உறவினர்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் என ஒரு பெரிய கூட்டமே அங்கே கூடியிருந்தது. மாநிலம் முழுவதும் செய்திகளில் இதுதான் இப்போது ஹாட் டாபிக். ஆளுங்கட்சியின் மீது விழப்போகும் விமர்சனத்தைத் தடுக்கவும், நிலைமையைச் சமாளிக்கவும் கட்சித் தலைமை உடனடியாக நேத்ரனை அங்கே அனுப்பி வைத்திருந்தது.
கார் காவல் ஆணையர் அலுவலகத்தை நெருங்க நெருங்க, போராட்டக்காரர்களின் முழக்கங்கள் நேத்ரனின் காதுகளில் தெளிவாக விழுந்தன.
“குற்றவாளியைக் கைது செய்! போலீஸே, போக்ஸோவில் கைது செய்!”
காரை விட்டு இறங்கிய நேத்ரனை, பத்திரிகையாளர்களின் கேமராக்கள் மொய்த்துக்கொண்டன. மைக்குகள் அவன் முகத்தை நோக்கி நீள, அவைகளை விலக்கியபடியே கூட்டத்தின் முன்பாக வந்து நின்றான். அந்தப் பரபரப்பான சூழலிலும் அவனது முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. ஒரு எம்.எல்.ஏவுக்கான ஆளுமையோடு அந்தச் சிக்கலை அணுகினான்.
“எம்.எல்.ஏ சார், இந்தக் கேஸ்ல உங்க கட்சிக்காரங்க தலையீடு இருக்குனு சொல்றாங்களே? குறிப்பா நீங்க குற்றவாளியைக் காப்பாத்தப் பாக்குறீங்களா?” என்று ஒரு நிருபர் கூச்சலிட்டார்.
நேத்ரன் கைகளை உயர்த்தி அமைதிப்படுத்தினான்.
“யாரையும் காப்பாத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும். நான் முதல்ல பொண்ணோட பேரன்ட்ஸ்கிட்டப் பேசுறேன்.”
அப்போது கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
“உங்க ஸ்பான்சர்ல விளையாடுற கபடி டீம் பையன் தான் இதுல அக்யூஸ்ட், அவனைக் கைது பண்ண, போலீஸ் ஏன் சார் தயங்குது? உங்க இன்ஃப்ளூயன்ஸ்லதான் இதெல்லாம் நடக்குதா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் நேத்ரன் கூட்டத்தை நோக்கித் தன் கூர்மையான பார்வையைத் திருப்பினான்.
அந்தப் பார்வையின் கூர்மையே இந்தக் கேள்வியைக் கேட்ட நிருபரைக் கூறு போட போதுமானதாய்!
‘எங்கே நீ அடுத்த கேள்வியைக் கேள்!’ எனும் சவால் அந்தப் பார்வையில் தெரியவும் கப்சிப்பென கேள்வி கேட்ட வாய் மூடிக்கொண்டது.
அங்கே, அந்த ஆசிரியர்கள் கூட்டத்திற்கு நடுவே, கையில் பதாகையோடு நின்றுகொண்டிருந்த வெண்பாவைப் பார்த்தான். அவனது கண்கள் ஒரு கணம் அவளை நிலைத்துப் நோக்கினாலும், அடுத்த நொடியே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பார்வையை விலக்கிக்கொண்டான்.
“நீங்க சொல்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்னு நான் உறுதி குடுக்குறேன். வாங்க, உள்ள போய்ப் பேசுவோம்,” என்று ஹேமாவின் பெற்றோரையும், பள்ளி நிர்வாகத்தில் ஒருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
நிகிலன் அவசரமாக ஓடிவந்து நேத்ரனின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். கமிஷனர் அறையில், நேத்ரன், காவல் ஆணையர் , விசாரணை அதிகாரி மற்றும் ஹேமாவின் பெற்றோர் அமர்ந்திருந்தனர். ஹேமாவின் தந்தை கண்ணீரும் கோபமுமாக வெடித்துக் கொண்டிருந்தார்.
“என் பொண்ணு மைனர் சார். அந்த முருகன் பையன்தான் என் பொண்ணைக் காதலிக்குறேன்னு சொல்லித் தேரிக்காட்டுக்கு வரவச்சுருக்கான். அங்க வச்சு அவன்கூட வந்தவனுங்க என் பொண்ணை மோசமாத் தொட்டு, பாலியல் சீண்டல் குடுத்து, அவளை அடிச்சிருக்கானுங்க. அவ கத்திக் கூச்சல் போட்டதும் அவங்க கிட்ட இருந்து காப்பாத்துற மாதிரி பஸ் ஏத்திவிட்டுட்டு அந்தப் பையன் திருச்செந்தூருக்கு ஓடிருக்கான். என் பொண்ணோட உசுரே போயிருக்கும் சார். அந்த முருகனையும், அவன்கூட வந்தவனுங்களையும் உடனடியா போக்ஸோல அரெஸ்ட் பண்ணுங்க!” என்று அவர் கதறினார்.
நேத்ரன் அமைதியாக, ஆனால் அழுத்தமாகக் கேட்டான்.
“உங்க கோபம் நியாயமானதுதான். ஆனா, முருகன் தான் இதைச் பண்ணுனான்னு நீங்க எப்பிடி அவ்ளோ உறுதியா சொல்றீங்க? அதுக்கான ஆதாரம் என்ன?”
“என் பொண்ணே சொல்றா சார். அவன்தான் வரவச்சான்னு! இதைவிட வேறென்ன ஆதாரம் வேணும்?” என்று கொதித்தார் ஹேமாவின் அப்பா.
நேத்ரன் நிகிலனைப் பார்த்தான். நிகிலன் தன் கையிலிருந்த ஒரு ஃபைலை நேத்ரனிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த நேத்ரன், காவல் ஆணையரிடம் ஒரு பார்வையை வீசிவிட்டு, ஃபைலை மேசை மீது வைத்தான்.
“இது கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த மெடிக்கல் ரிப்போர்ட் அண்ட் டி.என்.ஏ அனாலிசிஸ் ரிப்போர்ட். உங்க பொண்ணை யாரும் ரேப் பண்ணலை. ஆனா, அத்துமீறி முத்தம் கொடுக்கவோ, வற்புறுத்தவோ ட்ரை பண்ணிருக்காங்க. அந்தப் போராட்டத்துல, எதிரியோட முடி, நகக்கீறல், உமிழ்நீர் (Saliva) எல்லாம் உங்க பொண்ணோட உடம்புல இருந்திருக்கு. அதை வச்சு எடுத்த டி.என்.ஏ ரிப்போர்ட்… முருகன் டி.என்.ஏ-வோட மேட்ச் ஆகல!” என்று நேத்ரன் மிகத் தெளிவாகக் கூறினான். அந்த அறையே ஒரு நிமிடம் அமைதியானது.
“இதை நாங்க நம்ப மாட்டோம்! நீங்க முருகனைக் காப்பாத்தப் பாக்குறீங்க!” என்று சீறினார் ஹேமாவின் அம்மா.
“நான் யாரையும் காப்பாத்தல. மெடிக்கல் சயின்ஸ் பொய் சொல்லாது. இந்த ரிப்போர்ட்டை வச்சுக்கிட்டு முருகனைக் கைது பண்ண முடியாது. உண்மையான குற்றவாளி வேற யாரோ. அதை உங்க பொண்ணு ஹேமாகிட்டயே கேட்டுடலாம். அவளை வரச்சொல்லுங்க,” என்றான் நேத்ரன் தீர்க்கமான குரலில்.
சிறிது நேரத்தில், முகத்தில் காயங்களோடும், கைகளில் பேண்டேஜோடும், பயந்துபோன பார்வையோடும் ஹேமா அங்கே அழைத்து வரப்பட்டாள். அவளைப் பார்த்ததும் பெற்றோரின் அழுகை அதிகமானது.
நேத்ரன் அவளருகே சென்று மிகவும் கனிவாகப் பேசினான்.
“ஹேமா! பயப்படாமச் சொல்லும்மா. அன்னைக்கு நடந்தது என்ன? உன்னை வரவச்சது முருகனா? இல்ல, வேற யாராவதா? மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் வேற மாதிரி வருது.”
ஹேமா நடுங்கியபடி தன் பெற்றோரைப் பார்த்தாள். கமிஷனரும், நேத்ரனும் அவளுக்கு நம்பிக்கையளிக்க, அவள் மெல்லிய குரலில் அழுதபடியே பேச ஆரம்பித்தாள். அவள் பேசி முடித்தபோது அரசு மருத்துவரும் அங்கே வந்து தனது அறிக்கையின் உண்மை தன்மையை விளக்கினார்.
ஹேமாவின் பெற்றோர் இடிந்துபோய் நின்றனர். ஹேமாவின் தந்தை பதற்றத்தோடும், கையறு நிலையோடும் நேத்ரனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.
“எம்.எல்.ஏ சார்! உங்களுக்குப் புண்ணியமாப் போகும், என் பொண்ணு இப்ப சொன்னது இந்த நாலு சுவத்தோட இருக்கட்டும். இது வெளிய தெரிஞ்சா, என் பொண்ணோட மானம் போயிடும். ஊருக்குள்ள நாங்க தலைகாட்ட முடியாது.” என்று அவர் மன்றாடினார்.
ஒரு தந்தையின் தவிப்பைப் புரிந்துகொண்ட நேத்ரன், ஆழ்ந்த பெருமூச்சுடன் தலையசைத்தான்.
“நீங்க கவலைப்படாதீங்க. ஹேமா சொன்னது எதுவுமே மீடியாவுக்குப் போகாது. இங்க இந்த அறைக்குள்ள நடந்த எதையும் எங்கள்ல யாரும் வெளிய சொல்லமாட்டோம். ஒரு பொண்ணோட டிக்னிட்டி சம்பந்தப்பட்ட விசயம் இது. நிச்சயம் வெளிய போகாது. கமிஷனர் சார், கேஸை ரொம்ப சென்சிட்டிவா ஹேண்டில் பண்ணுங்க. முருகனோட பேர் இதுல இனிமே இன்வால்வ் ஆகக்கூடாது. இது என்னோட பெர்ஷனல் ஆர்டர்” என்று உத்தரவிட்டான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, நேத்ரனும் கமிஷனரும் வெளியே வந்தனர். ஹேமாவின் பெற்றோரும் தலைகுனிந்தபடி பின்னால் வந்தனர். பத்திரிகையாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
மைக்ரோபோனுக்கு முன்னால் கம்பீரமாக நின்ற நேத்ரன், “இந்த வழக்கு சம்பந்தமா நாங்க முழுமையான விசாரணை பண்ணிட்டோம். டி.என்.ஏ ரிப்போர்ட் படியும், முறையான விசாரணையிலயும், இந்தச் சம்பவத்துக்கும் கபடி ப்ளேயர் முருகனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு உறுதியாகியிருக்கு. உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுட்டாங்க. அவங்களைக் காவல் துறை சீக்கிரமே கைது செய்யும். முக்கியமா இதுல எந்த அரசியல் தலையீடும் இல்லை,” என்று சுருக்கமான, தெளிவான அறிக்கையை அளித்தான்.
அதைத் தொடர்ந்து ஹேமாவின் அப்பாவும் மைக்குக்கு முன்னால் வந்து, மிகுந்த சோர்வோடு, “முருகனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளிகளைப் போலீஸ் கண்டிப்பாப் பிடிப்பாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நாங்க போராட்டத்தைக் கைவிடுறோம்,” என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.
கூட்டம் கலையத் தொடங்கியது. ஆனால், அங்கிருந்த வெண்பாவின் முகத்தில் ஏமாற்றம் கவிழத் தொடங்கியது.
அவள் சென்னையிலிருந்து அவசரமாக வந்ததே காணாமல் போன தங்கள் பள்ளி மாணவி ஒருத்தியை அவளது காதலன் ஆசை வார்த்தைகள் பேசி அவனது நண்பர்களோடு பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய செய்தியைக் கேட்டுத்தான்.
அவர்களின் பள்ளி சார்பாக மாவட்ட கல்வி அலுவலகத்தை நோக்கி செல்ல வேண்டிய போராட்டம் காவல்துறை பக்கம் திரும்பக் காரணமே அந்தப் பையன் முருகனைக் கைது செய்யாமல் காவல்துறை இழுத்தடித்ததே!
ஆனால் பிரச்சனை நேத்ரனின் கவனத்துக்குப் போனது என தெரிந்ததும் வெண்பாவுக்குள் அழுத்தமாய் ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்புதான், அவளுடன் இருந்த ஆசிரியை அமுதாவிடம், “எனக்கு நேத்ரன் மேல முழு நம்பிக்கை இருக்கு அமுதா மிஸ். குற்றவாளி யாரா இருந்தாலும், முருகனாவே இருந்தாலும் சரி, அவர் கண்டிப்பாய்க் கைது பண்ணுவார். நியாயம் கிடைக்கும்,” என்று நம்பிக்கையோடு வாதிட்டிருந்தாள் வெண்பா.
ஆனால் இப்போது? ஹேமாவின் பெற்றோர் உள்ளே செல்லும்போது இருந்த ஆவேசம், வெளியே வரும்போது காணாமல் போயிருந்தது. உண்மையை மூடிமறைக்க அவர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது போலத்தான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றியது. அமுதா அவளைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தாள்.
“பாத்தியா வெண்பா? நான் அப்பவே சொன்னேன்ல? இந்த அரசியல்வாதிங்க எல்லாருமே ஒரே மாதிரி தான். தங்களுக்கு வேண்டியவங்களை எப்பாடுபட்டாவது காப்பாத்திடுவாங்க. பாதிக்கப்பட்ட அந்தச் சின்னப் பொண்ணையும், அவ குடும்பத்தையும் மிரட்டி எப்பிடிப் பொய் சொல்ல வச்சு, கேஸை மூடி மறைச்சுட்டாங்க பாரு. நேத்ரனும் இதுக்கு விதிவிலக்கில்லை. கபடி டீமுக்கு ஸ்பான்சர் பண்ணுறவர், அந்த முருகனைக் காப்பாத்தாம இருப்பாரா? அதிகாரத்துல இருக்குறவங்க எதை வேணாலும் மாத்தலாம்,” என்று அமுதா கசப்போடு சொன்னாள்.
அமுதாவின் வார்த்தைகள் வெண்பாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவளது மனம் அமுதாவின் வாதத்தை நம்பவும் மறுத்தது; ஆனால், கண்கூடாக நடப்பதைப் பார்க்கும்போது, நேத்ரன் மீது அவளுக்கு இருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை இன்று முதல் முறையாக ஆட்டம் கண்டது.
‘அரசியல் அதிகாரம் ஒரு சாமானியப் பெண்ணுக்கு நடந்த குற்றத்தின் உண்மையானப் பக்கத்தை இத்துணை சுலபமாக வளைத்துவிடுமா? கடைசியில் நேத்ரனும் நீதி நியாயம் எல்லாம் என்ன விலையெனக் கேட்கும் சராசரி அரசியல்வாதி தானா?’
வெண்பாவின் கண்கள் ஏமாற்றத்தோடும், சொல்ல முடியாத வலியோடும், அதையும் தாண்டிய கோபத்தோடும் நேத்ரனையே வெறித்தன.

தூரத்தில் காரில் ஏறுவதற்காகச் சென்றுகொண்டிருந்த நேத்ரன், கூட்டத்திலிருக்கும் வெண்பாவைப் பார்த்து ஒரு மெல்லிய, இதமான புன்னகையை வீசினான். தான் ஒரு குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டோம் என்ற திருப்தி அவனது புன்னகையில் இருந்தது.
ஆனால், வெண்பாவின் கண்களில் இருந்த அந்த அந்நியத் தன்மையையும், அப்பட்டமான கோபத்தையும் பார்த்ததும் அந்தப் புன்னகை அப்படியே உறைந்துபோனது.
காதலின் இதமான தென்றல் வீசிய அந்த உறவுக்குள், இப்போது சந்தேகத்தின் கடும்புயல் முதல்முறையாக மையங்கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்தப் புயலில் அவளது தர்க்கங்கள் மீண்டும் உயிர் பெற்றெழ, அரசியல்வாதி நேத்ரன் மீது ஒரு சாமானியப் பெண்ணாக, ஒரு ஆசிரியையாக வெண்பாவிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


