வசதிவாய்ப்பும், செழுமையான வாழ்க்கையும் ஒரு மனிதனுக்குள் ‘சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சை’ விதைக்கவல்லவை. பணம் கூட கூட பணிவும், எளிமையும் வரவேண்டும் என்பார் என் தந்தை. வசதியில் குறைந்தவர்களின் கோபம் ஆதங்கமாக எடுத்துக்கொள்ளப்படும்போதே, பணக்காரர்களின் கோபத்தை பணத்திமிராகக் கருத்தும் இச்சமூகம். அதனாலேயே பணம் படைத்தவர்கள் கூடுதல் கவனத்தோடு சமுதாயத்தை அணுகவேண்டுமென சிறுவயதிலிருந்தே எங்களுக்குக் கற்பித்தார் அவர். அதன் காரணமாகவே எனக்குள் இயல்பாக இருந்த கர்வம் அடக்கிவைக்கப்பட்டது எனலாம்.
-வான்மதி
மறுநாள் இரயில் ஏற வேண்டிய நாள் என்பதால் தனது உடைமைகள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டோமா எனப் பார்த்துக்கொண்டிருந்தாள் வான்மதி.
சங்கரி இல்லாத வீடு நிசப்தமாக இருப்பது கூட ஒருவித அசௌகரியத்தைக் கொடுத்தது அவளுக்கு. அவர் இருந்தால் சமையலறையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
அவருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும் என்பதால் பூபாலன் எஃப்.எம் கேட்க வசதியாக வானொலிப்பெட்டி ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தான்.
எனவே ஏதோ ஒரு வானொலி நிலைய நிகழ்ச்சிகள், பாடல்கள் குறைந்த சத்தத்தோடு ஒலித்துக்கொண்டிருக்கும். சங்கரி இல்லாததால் அந்த வானொலிப்பெட்டிக்கும் வேலை இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வான்மதி அனைத்தையும் சரிபார்த்து முடித்ததுமே நரேந்திரனிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது.
“சொல்லுங்கப்பா. என்ன விசயம்?”

“சம்பந்தியம்மாக்கு உடம்பு எப்பிடி இருக்கும்மா?”
“ஐசொலேசன்ல இருக்காங்க. டாக்டரோட கண்காணிப்புல மருந்து மாத்திரை எடுத்துக்குறாங்க. நேத்து பாலா சமைச்சு எடுத்துட்டுப் போனார். இன்னைக்கு மானிங் ப்ரீத்தி அக்கா குடுத்து விட்டாங்களாம். மதியமும் அவங்க குடுத்துடுவாங்க. நைட் பாலா இட்லி வாங்கிட்டுப் போயிடுறேன்னு சொன்னார்”
“நீ அவங்களைப் போய் பாக்கலையா வானும்மா?”
“நான் மதியம் போகலாம்னு இருக்கேன்பா. சென்னை கிளம்புறதைச் சொல்லிட்டு வந்துடலாம்ல”
“நல்லதுமா. ஆனா…” என்று தயங்கிய நரேந்திரன் “சரிம்மா! நீ பாத்துக்க” என்று அரைகுறையாகப் பேச்சை நிறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
தந்தை என்ன சொல்ல வந்திருப்பார் என யோசித்து சில நிமிடங்களைக் கடத்திய வான்மதி பின்னர் சங்கரியைப் பார்க்க மருத்துவமனைக்குக் கிளம்பினாள். மறக்காமல் அவரது வானொலிப்பெட்டியை எடுத்துக்கொண்டாள்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அதிகநேரம் எல்லாம் இருக்க முடியாது. மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நோயாளியைப் பார்க்க அனுமதிப்பார்கள்.
பூபாலனிடம் நேரத்தை உறுதிபடுத்திக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றவள் சங்கரியைச் சந்தித்தபோது அப்பெண்மணியின் கண்களில் அத்துணை சோகம்.
நோயாளியைத் தொட்டுப் பேசக்கூடாது, மாஸ்கைக் கழற்றக்கூடாது என அறிவுறுத்தித்தான் செவிலி அவளை அனுப்பியிருந்தார். அதனால் ஆறுதலாக அவரது கையைக் கூடப் பற்ற முடியாத நிலை.
“நான் இல்லாம பாலு தனியா கஷ்டப்படுறான் போல. அவருக்கும் அவனுக்கும் கடைச்சாப்பாடு ஒத்துக்காது வானும்மா”
அவர் வாசித்த சோககீதத்தைக் கேட்டவள் “அப்ப அவங்களே சமைச்சுச் சாப்பிடட்டும்” என்றாள்.
‘இது நடக்கிற காரியமா?’ என்பது போல மருமகளைப் பார்த்தார் சங்கரி.
“நீங்க அவங்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கிங்க. அப்பிடி என்ன நாக்குருசி வேண்டியது இருக்கு? சில நேரத்துல பொம்பளைங்க சுயநலமா இருக்கக் கத்துக்கணும்” என்றாள் காட்டமாக.

சங்கரி சிரிப்பது அவரது கண்கள் சுருங்கிய விதத்தில் தெரிந்தது.
“சிரிக்காதிங்க. எனக்கு உங்க மேல வருத்தம் வரக் காரணமே இதுதான். உடம்பு முடியலனா கூட எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு நீங்க செஞ்சிடுவிங்க. பாலா அதை என் கிட்டவும் எதிர்பார்த்தார். என்னால முடியலங்கிறப்ப அது பெரிய வாக்குவாதமாச்சு. என் கோவம் உங்க மேல திரும்புச்சு. ஏன் இந்தம்மா தியாகச்சுடர் போல ட்ராமா போடுறாங்கனு கூட நான் நினைச்சிருக்கேன். இப்பவும் எனக்கு அந்தக் கோபம் இருக்கு அத்தை. டாக்டர் சொல்லுறபடி நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. உடம்பைக் கவனிச்சுக்கோங்க. வீட்டுக்குப் போனதும் எல்லா வேலையையும் இழுத்துட்டுப் போட்டுச் செஞ்சு மறுபடி ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்காதிங்க. உங்க புருசன், புள்ளை கிட்ட வேலை வாங்க கத்துக்கோங்க. நாளைக்கு ஈவ்னிங் எனக்கு ட்ரெயின். முடிஞ்சா அடுத்த சண்டே இங்க வர்றேன். அதுக்குள்ள நீங்க டிஸ்சார்ஜ் ஆகிடுவிங்கதானே?”
“ஆமா வானும்மா”
“சரி! ரெஸ்ட் எடுங்க. ஹான்! உங்களோட ரேடியோவ கொண்டு வந்தேன். நர்ஸ் கிட்ட குடுத்திருக்கேன். நேரம் போகலனா பாட்டு கேளுங்க. மதியமும் ப்ரீத்தி அக்கா சாப்பாடு குடுத்து விட்டுருவாங்க. வீணாக்காம சாப்பிடுங்க. வீட்டுல என்ன நடக்குமோனு யோசிக்காதிங்க. எல்லாருக்கும் வேலை பாக்க தெம்பு இருக்கு. வயிறு கூப்பாடு போட்டா தன்னைப் போல சமையல்கட்டுல அடுப்பு எரியும். நீங்க உடம்பைக் கவனிச்சுக்கோங்க”
கண்டிப்பும் கறாருமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றவளின் பேச்சில் துளி கூட சங்கரிக்கு வருத்தம் இல்லை. எப்போதுமே அவள் சொல்லும் வார்த்தைகள்தான் இவை.
அவருக்கு மொபைலோ சீரியலோ பார்க்கும் பழக்கமில்லை. ஒரே பொழுதுபோக்கு வானொலிப்பெட்டி மட்டுமே! மகன் கூட அதைக் கொண்டு வரவில்லை. மருமகள் கொண்டு வந்ததில் மகிழ்ந்து போனார்.
தன்னைக் கவனிக்கவில்லை என வருந்த இடம் கொடுக்காமல் மூத்த மருமகள் பத்தியச்சாப்பாடு சமைத்து அனுப்பியதும் அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
அந்தக் காலத்துப் பெண்கள் தன்னை வருத்திக் குடும்பத்துக்கு உழைத்தார்கள். அவர்களுக்கு வீடே உலகம் என்ற சூழல் அப்போது. படிப்பு, வேலை என அலையும் இந்தக் காலத்துப் பெண்களிடம் அதை எதிர்பார்ப்பது மடமை என்பது அவருக்குப் புரிந்தது.
எனவே மகன்களிடம் மருமகள்களைப் பற்றி புகார் சொல்லவில்லை. எப்போதுமே சங்கரி நல்லதை மட்டுமே பார்ப்பவர் என்பதால் சின்ன சின்ன குறைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்.
அவரது கலக்கம் எல்லாம் கணவரை எண்ணியே! அவருக்கு வகையாகச் சமைத்து வைத்தாலே ஆயிரம் குறை சொல்லுவார். இதில் ஹோட்டல் சாப்பாடு என்றால் கேட்கவேண்டாம். பூபாலனை அல்லவா படுத்தி எடுப்பார். அவனை நினைத்துதான் சங்கரிக்குக் கவலை.
‘ஸ்டூடியோவைக் கவனிப்பானா? மருத்துவமனைக்கு அலைவானா? வீட்டைக் கவனிப்பானா? பாவம் அவன்!’
அவர் எண்ணியதுபோலவே பூபாலன் ஏற்பாடு செய்த மெஸ் சாப்பாடு குணசேகரனின் தொண்டைக்குள் இறங்கவில்லை. வான்மதிக்கு என்னவோ சாப்பாடு நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது.
வயிற்றுக்கும் ஊறு விளைவிக்கவில்லை. பின்னே என்னவாம்?
வீட்டின் மருமகள் சமையலறையில் சமைத்தே தீரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு. அதை மகனிடம் சொல்லவும் வழியில்லை. இப்போதெல்லாம் அவர் என்ன சொன்னாலும் அவன் தலையாட்டுவதில்லை. யோசிக்க ஆரம்பித்துவிடுகிறான். எனவே வாயை மூடிக்கொண்டு திரிந்தார். அவ்வபோது தனது அதிருப்தியைக் காட்டத் தவறவில்லை.
வான்மதி வீட்டுக்குத் திரும்பியபோது புலம்பிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குணசேகரன்.
“இந்தக் குடும்பத்துக்காக மாடா உழைச்சதுக்கு வயசானக் காலத்துல இப்பிடி வெந்ததும் வேகாததுமா சாப்பிட்டுட்டிருக்கேன். ஒவ்வொருத்தன் மாதிரி எனக்குனு தனியா காசு சேர்த்து வச்சிருந்தா இந்த நிலமை வந்திருக்குமா?”
வான்மதி அவரை அலட்சியப்படுத்திவிட்டுத் தங்களது அறைக்குள் சென்றாள். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போனதும் குளித்துவிடுமாறு சொல்லித்தான் செவிலி அனுப்பிவைத்தார் அவளை.
குளித்து வேறு உடை அணிந்து சாப்பிட்டவளுக்கு மெஸ் சாப்பாடு அமிர்தமாக இருந்தது. வயதானப் பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நடத்தும் மெஸ் அது. வீட்டுச்சாப்பாடு சுவை அதில் இருக்குமென்பதால்தான் பூபாலன் மூன்று வேளையும் அங்கேயே சாப்பாட்டுக்குப் பணம் கட்டியிருந்தான். காலையில் மட்டும் அவனே வாங்கி வருவான். மதியமும் இரவும் அவர்கள் கேரியரில் கொடுத்துவிடுவார்கள்.
அந்தச் சாப்பாட்டையும் குறை சொல்கிறார் என்றால் இவருக்குப் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை எடுத்து வந்துதான் நீட்டவேண்டும் என வாய்க்குள் முனகியபடி சாப்பிட்டத் தட்டைக் கழுவிவைத்துவிட்டுத் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள் வான்மதி.
அதே நேரம் ஸ்டூடியோவில் திருமண ஆல்பம் ஒன்றை எடிட் செய்துகொண்டிருந்தான் பூபாலன். கவனம் வேலையில் இல்லை. ஒரு பக்கம் தாயாரின் நோவு, இன்னொரு பக்கம் நிலமையைப் புரிந்துகொள்ளாமல் பேசும் தந்தையின் சிறுபிள்ளைத்தனம். அவனுக்கு இருக்கிற அழுத்தத்தில் எங்கே அவரிடம் வெடித்துவிடுவோமோ என்ற பயம் வேறு!

ஒரு முறை கோபத்தில் வாய் விட்டு வான்மதியின் உறவைத் தொலைத்துவிட்ட பயம்! இன்னொரு முறை கோபத்தை வெளிப்படுத்தவே யோசனையாக இருந்தது.
தனிமைப்படுத்தப்பட்ட அன்னை வீட்டுக்கு வந்தாலும் அவரை வேலை செய்ய விடக்கூடாதென மருத்துவர் எச்சரித்திருந்தது இன்னும் தந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் அவரது தொந்தரவு அதிகமாகும்.
“மகாராஜநகர் ராமசுப்பு வீட்டுலதானே இந்த ஆல்பத்தைக் குடுக்கணும் அண்ணா?” என்று அதோடு பத்தாவது முறை கேட்டுவிட்டான் அவனது உதவியாளர்களில் ஒருவனான பிரபு.
“அண்ணா” என்று தோளை உலுக்கிய பிறகு திடுக்கிட்ட பூபாலன் “என்னடா?” என்க மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
“ஆமா! அவரோட மகன் ஹைதராபாத் போயிட்டார். அவங்கப்பா கிட்ட ஆல்பம், பென்ட்ரைவைக் குடுக்கச் சொல்லிட்டார். அவருக்கு போட்டோ எல்லாத்தையும் சாஃப்ட் காபியா மெயில் பண்ணிட்டியா?”
“பண்ணிட்டேன்ணா” என்றவன் பின்னர் கவலையோடு “மதினி கிளம்புறாங்கனு வருத்தமா?” என்று வினவ பெருமூச்சு விட்டான் பூபாலன்.
“எனக்கு இருக்குற வருத்தத்துல அதுவும் ஒன்னு. ப்ச்! மதிய போகாதனு சொல்ல முடியாது. இப்ப அவ புராஜெக்ட் மேனேஜர் வேற. என் நிலமைய காரணம் காட்டி இங்கயே இருனு சொல்லுற உரிமை இன்னும் எனக்கு வரல. என் கஷ்டத்தை நான்தானே பாக்கணும்?”
“புருசன் பொண்டாட்டிக்குள்ள என் கஷ்டம் உன் கஷ்டம்னு இருக்குதா அண்ணா? எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கலாமே?”
“பண்ணிக்கலாம்தான்! நான் பழைய பாலாவா, அவ பழைய மதியா இருந்தா மட்டுமே அது சாத்தியம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப மாறிட்டோம்டா. இனி எங்களுக்கான சுமைய நாங்க தனித்தனியாதான் சுமந்தாகணும்”
சொல்லும்போதே பூபாலனின் குரல் பிசிறடித்தது.
“நீ கிளம்பு. போறதுக்கு முன்னாடி ராமசுப்புவுக்குக் கால் பண்ணிட்டுப் போ. அவங்க வீட்டுல நாய் வளக்குறாங்க”
பிரபு கிளம்பியதும் கணினியின் திரையில் கண் பதித்தான்.
கணினி திரையில் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேருக்கான மாதச்சந்தா முடிவடையவிருப்பதாக அறிவிப்பு வந்தது.
முன்பெல்லாம் ஒரு முறை பணம் கட்டி வாங்கிவிட்டால் லைசென்ஸ் கீயுடன் சேர்த்து வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது அந்த மென்பொருள் நிறுவனமும் மாதாந்திர சந்தா, வருடச்சந்தா கோதாவில் இறங்கிவிட்டது.
அந்த மாதம் அவனுக்குக் கொஞ்சம் செலவு அதிகம் ஆகிவிட்டது. இன்னும் உதவியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும். ஸ்டூடியோ வாடகை, மின்கட்டணம், இணைய இணைப்புக்கானக் கட்டணம் என ஒவ்வொன்றாக மனக்கண்ணில் பட்டியலாக வரவும் தலை சுற்றியது.
மருத்துவச்செலவு வந்துவிட்டால் நடுத்தரவர்க்கத்துக்குத் தலை சுற்றிவிடுவது வாடிக்கையே. வான்மதி முன்பே கூறுவாள் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள் என்று.
“அவ பணக்காரி. அவங்கப்பா செய்யுற செலவை எல்லாம் நீயும் செய்யணும்னு எதிர்பார்ப்பா. மாசம் ஆயிரம் அதுக்கு ஏன் அழணும் பாலு? வருசம் முழுக்க கட்டுனாலும் அந்தத் தொகை திரும்பி வராது. அப்பிடி என்ன நோய்நொடி வந்துடப்போகுது?” என்று குணசேகரன் சொன்னதால் அதை அலட்சியம் செய்துவிட்டான் அவன்.
இப்போது தலையைப் பிய்த்துக்கொள்ளலாமா என்ற நிலை.
அன்றிரவு வீடு திரும்பியபோது நல்லவேளை குணசேகரன் உறங்கியிருந்தார். வான்மதி விழித்திருந்து அவளது மேலதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அவனைக் கண்டதும் சின்னதாக ஒரு படபடப்பு. அவ்வளவுதான்! பழையபடி பேச்சில் கவனமாகிப்போனாள்.
பூபாலன் குளித்துவிட்டுத் திரும்பியபோது கையில் ஏ.டி.எம் கார்டுடன் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்து அவனிடம் அதை நீட்டினாள்.
“வேண்டாம்! நீயே வச்சுக்க”

மறுத்துவிட்டுப் போய்ப் படுக்கையில் விழுந்தவனுக்குக் கண்ணுக்குள் அந்த மாதச்செலவுகள் வரிசை கட்டின. இருப்பினும் அவளிடம் வாங்கக்கூடாதெனப் பிடிவாதம். இது பிடிவாதம் இல்லை. வைராக்கியம்!
“உங்க வீட்டுக்கு உழைச்சுப் போடவா என் மகளைக் கல்யாணம் பண்ணிக்குடுத்தோம்? அவ சம்பளத்துல நீங்க எப்பிடி உங்க வீட்டுச்செலவைச் செய்யலாம்? உங்கப்பாக்கு ஈசி சேர் வாங்கணும்னா உங்க காசுல வாங்கி குடுங்க. என் மக முதுகு ஒடிய வேலை பாத்தக் காசு அவளோடது. பொண்டாட்டி காசுல குடும்பத்தை வளர்க்கலாம்னுதான் அவளைக் கல்யாணம் பண்ணுனிங்களா?”
இந்தப் பொன்னான வார்த்தைகள் உதிர்ந்தது பகவதியிடமிருந்து.
வான்மதி திருமணத்துக்குப் பிறகு முதல் மாத ஊதியத்தை அவனிடம் கொடுக்க அவனோ குணசேகரன் நீண்டநாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த சாய்வு நாற்காலியை வாங்கிக்கொடுத்துவிட்டான்.
அதைப் பகவதியிடம் பேசும்போது எதேச்சையாக வான்மதி சொல்லிவிட மறுநாளே அவனைக் கோவிலுக்கு வரச் சொல்லி பாடம் நடத்தி அனுப்பிவைத்தார் பகவதி.
அன்றிலிருந்து வான்மதியிடமிருந்து எந்தக் காரணத்துக்காகவும் பணம் வாங்கக்கூடாதென்ற வைராக்கியம் பூபாலனுக்குள் உண்டாகிவிட்டது.
அவன் தன்னிடம் வாங்கமாட்டான் என அவளுக்கும் தெரியும். ஆனால் அதிகமாகச் செலவாகியிருக்கிறதென வரவு செலவு டைரியில் அவன் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த பின்னரும் தனது வங்கிக்கணக்கில் கிடக்கும் பணத்தைப் பூதம் போல காக்கப் பிரியமில்லை வான்மதிக்கு.
அதனால்தான் ஏ.டி.எம் கார்டைக் கொடுத்தாள். அவன் மறுக்கவும் எனக்கென்ன என்று போக மனம் வரவில்லை அவளுக்கு.
“என் கிட்ட வாங்குனா ஆம்பளை கெத்து குறைஞ்சிடுமோ?”
நக்கலாகவேக் கேட்டபடி மெத்தையில் அமர்ந்தாள்.
“நீ இந்தப் பக்கம் கார்டைக் குடுத்துட்டு அந்தப் பக்கம் உங்கம்மா கிட்ட சொல்லுவ. அந்தம்மா குடும்பச்செலவுக்குப் பொம்பளை கிட்ட கை நீட்டுறனு என்னை அசிங்கப்படுத்துவாங்க. எதுக்கு இதெல்லாம்? உன் காசு உன் கிட்ட இருக்கட்டும். என் கை ஒன்னும் ஒடிஞ்சு போயிடல. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்”
வான்மதிக்கு எரிச்சலாக இருந்தது. இப்போது ஏன் பழைய கதையைப் பேசவேண்டும்?
“இன்னும் நான் அதே வான்மதியாதான் இருக்கேன்னு தெரிஞ்சும் எதுக்கு என் கூட வாழணும்னு நினைச்சிங்க? பழசைப் பேசாதனு எனக்கு மட்டும் ஆர்டர் போடுங்க. ஆனா நீங்க பழைய சம்பவங்களை ட்ரஸ்சா உடுத்திக்காதக் குறை. இவ்ளோ ரோசம் உள்ளவர் எதுக்கு என்னை இங்க அழைச்சிட்டு வரணும்?”
“என் அம்மா ஆசைப்பட்டாங்க. அவங்க வளர்ப்பு தப்பாயிடுச்சோனு கண்ணீர் விட்டாங்க. இல்லனா நான் எதுக்கு உன்னைத் திரும்ப அழைச்சிக்கப் போறேன்?”
வார்த்தையில் கவனமாக இரு என ஆயிரம் முறை மூளை அறிவுறுத்தியும் அடங்காமல் வார்த்தைகளை உதிர்த்துவிட்டது பூபாலனின் நாவு.
வான்மதிக்கு முகம் சுண்டிப்போனது. பெரியவர்களுக்காகத்தான் அவளும் அவனுடன் வாழச் சம்மதித்தாள். ஆனால் அவளது மனம் ஏனோ அதை ஒப்ப மறுத்தது. குறைந்தபட்சம் உன் மீது இன்னும் காதல் உள்ளதென அவன் கூறுவான் என்று எதிர்பார்த்தது அந்த அப்பாவி மனம்.
‘இப்படி நினைப்பதே பாவம்! அனைத்தையும் மறந்துவிட்டாயா நீ? இவனிடம் பழைய காதலை எதிர்பார்த்தால் நீ சிதைந்து போவாய் வான்மதி’
தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விளக்கை அணைத்தவளுக்குப் பாவம் உறக்கம்தான் வரவில்லை.
அதீதமாகப் பேசி அவளைக் காயப்படுத்திவிட்டோமோ என்ற கவலையில் அவளது கணவனும் அன்றிரவு உறங்கவில்லை.
PDF திருடாதீர்கள்!