வாழ்க்கை நமக்காகத் திறந்திருக்கும் இந்தக் கதவின் விளிம்பில் உறைந்து நிற்கிறேன்—உள்ளே நுழையவும் பயமாக இருக்கிறது, உன்னை விட்டு விலகிச் செல்லவும் என் மனதிற்குச் சம்மதமில்லை.
குடும்பத்தினரின் செயல்பாடுகள் வெண்பாவை மட்டுமில்லை, நேத்ரனையும் யோசனையில் ஆழ்த்தின. பெண் பார்க்க வந்தது எல்லாம் சும்மா ஒரு ஃபார்மாலிட்டி என்பது அவனுக்கே தெரியும்.
புகழேந்திக்கு துர்காவைப் பிடித்துப்போனது, அவளுக்கும் அவனிடம் பேசத் தடையில்லாமல் போனதே திருமணத்தை நிச்சயிக்கப் போதுமானதாய்! இருப்பினும் வழக்கங்களை மாற்ற வேண்டாம் என்ற பெயரில் பெரியவர்கள் ஏற்பாடு செய்தது இங்கே வரும் முன்னர் அவனைப் பொறுத்தவரைக்கும் ஒரு ‘கெட்-டு-கெதர்’ மட்டுமே!
இப்போது பெரியப்பாவும் தந்தையும் ஏதோ பொடி வைத்தாற்போல பேசுவது அவனுக்குச் சற்று திகைப்பாய்!
“பிசினஸ்ல இருந்த ஆர்வத்தை விட அரசியல்ல நிறைய ஆர்வம் அதிகம். அதான் எனக்குப் பிறகு அரசியல் வாரிசா நேத்ரனை நான் தேர்ந்தெடுத்தேன். போன தடவை நான் ஜெயிச்சதுல எனக்கு இளைஞர்கள் ஓட்டு விழுந்ததுல இவனோட பங்கு அதிகம். விளையாட்டுப் பையன் மாதிரி தெரிவான். ஆனா பொறுப்பானவன்.”
ராஜவேலு சொல்லச் சொல்ல வெண்பாவின் தந்தை செண்பகராமனின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கவனித்தவன் மெதுவாய் தங்கையின் காதைக் கடித்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இங்க என்ன நடக்குது? புகழண்ணாவ பத்தி பேசுறதுக்குப் பதிலா என்னோட மெரிட்ஸ் அண்ட் டிமெரிட்ஸ் பத்தி ராஜூப்பா ஏன் பேசிட்டிருக்காரு?”
நிருபமா நமட்டுச் சிரிப்போடு அவன் காதருகே குனிந்தாள்.
“உன் வருங்கால மாமனாருக்கு உன்னைப் பத்தி தெரிய வேண்டாமா?”
“வாட்? லூசா நீ?” அடிக்குரலில் நம்பாத பாவனையில் கேட்டாலும் நேத்ரனின் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் காட்டவில்லை.
“ஓஹ்! உனக்கு விசயம் தெரியாதுல்ல? எல்லாம் பெரியம்மாவோட ஐடியாதான். துர்காண்ணியோட சேர்த்து வெண்பாண்ணியையும் நம்ம வீட்டுக்கு பேக் பண்ணிட்டு வந்துடலாம்னு ரெண்டு லேடீஸும் முடிவு பண்ணிருக்காங்க.”
நிருபமா சொன்னதை மெய்யாகவே நேத்ரனால் நம்ப முடியவில்லை.
“காம்போ ஆஃபரா இது? சுத்தம்.” தலையிலடித்துக்கொள்ளாத குறையாகப் பார்வையை உயர்த்தியவன் சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து தனது அன்னையிடம் பேசிக்கொண்டிருந்த வெண்பாவை நோக்கினான்.
முதல் முறை பார்த்தபோதே அவனை வசீகரித்தவள்தான். ஆனால் வசீகரம் ஒன்றே போதுமா என்ன திருமண உறவுக்கு?
“ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டுக்குத் தான் கிளாஸ் எடுக்குறேனத்தை. டீச்சிங் பிடிக்கும். எந்தக் கிளாசுக்கு எடுத்தா என்ன?”
தான் கொடுத்த ரேபானைக் கையில் வைத்துச் சுழற்றியபடியே இயல்பாய், எவ்வித போலியான நாணமும் இல்லாமல் அவள் உரையாடிய விதம் அவனுக்குமே பிடிப்பதாய்!
“என்ன? பாக்கப் பாக்க பிடிக்குது போல,” நிருபமா கிண்டல் செய்ய,
“அவளைப் பாத்ததுமே எனக்குப் பிடிச்சுப் போச்சு,” எனத் தங்கையின் கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் நேத்ரன்.
கூடவே “பிடிச்சா மட்டும் போதுமா? ரொம்ப ரொட்டீனா தோணுது,” என்றான் சின்ன யோசனையோடு.
அப்போது அங்கயற்கண்ணியின் குரல் அறையில் கணீரென ஒலித்தது.
“புகழும் துர்காவும் கொஞ்சம் தனியா பேசிட்டு வரட்டும். அழைச்சிட்டுப் போ ஹேமா.”
ஹேமா துர்காவையும் புகழேந்தியையும் அழைத்துச் சென்ற பிறகு மெதுவாய்த் தொண்டையைச் செருமினார் அவர்.
“நாம முன்னாடியே பேசிக்கிட்டதுதான். புகழுக்கு துர்கானு முடிவு பண்ணிட்டோம். அப்பிடியே வெண்பாவுக்கும் நேத்ரனுக்கும் பேசி முடிச்சிட்டோம்னா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில வச்சுக்கலாம்.”
அவர் சொன்னதுதான் தாமதம், வெண்பாவின் முகம் பரிபூரண அதிர்ச்சியைத் தத்தெடுத்துக்கொண்டது. அதே அதிர்ச்சியில் விரிந்த விழிகள் நேத்ரனிடம் பயணிக்க அங்கே அவள் கண்டது என்னவோ ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற பாவனையைத்தான்.
ரேபான் சுழற்றப்படுவது நின்றுபோக நேத்ரன் தனது அன்னையை நோக்கினான்.
குந்தவையின் முகத்தில் வாடாத புன்னகையொன்று வீசியது.
“புகழ் கல்யாணத்தைப் பத்தி பேசிக்கிட்டப்பவே எம்.எல்.ஏவா பதவி ஏற்குறப்ப பொண்டாட்டி கூட இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னான் என் மகன். கடைசில அதுதான் நடக்கப்போகுது.”
குந்தவை சொன்னதைக் கேட்டு மற்ற மூன்று பெண்களும் மனம் நிறைய முறுவலித்தார்கள். அப்போது இடையிட்டாள் புவனா.
“நாமளே பேசிக்கிட்டா ஆச்சா? வெண்பாவும் நேத்ரனும் பேசணும்ல. நாம அவங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இவ்ளோ நேரம் மறைச்சு வச்சிட்டோம். அவங்க தனியா போய் பேசிட்டு வரட்டுமே.”
வெண்பா தனது அன்னை, தந்தை, அண்ணனைப் பார்த்தாள்.
‘ஏன் என்னிடம் சொல்லவில்லை?’
அதைப் புரிந்துகொண்டவனாய் எழிலன் தங்கையின் காதருகே குனிந்து நிலவரத்தைச் சொன்னான்.
“முதல்ல பேசுனது பெரியத்தை ஐ மீன் அங்கயற்கண்ணி அத்தைதான். அம்மாவோட வாட்சப் ஸ்டேட்டஸ்ல போன வாரம் நீயும் அம்மாவும் நெல்லையப்பர் கோவில் போன போட்டோவ வச்சிருந்தாங்க. அதைப் பாத்துட்டு நேத்ரனுக்கு உன்னைப் பொண்ணு கேட்டாங்க பெரியத்தை. சின்னத்தைக்கு உன்னை மருமகளாக்கிக்க ரொம்ப ஆசை. நானும் அப்பாவும் நேத்ரனைப் பத்தி விசாரிச்சோம். ஜாலியான பையன். ஆனா சின்னதா ஒரு கெட்ட பழக்கம் கூட இல்ல. அரசியல் பிடிக்குமாம். நல்ல சம்பந்தத்தை விடவேண்டாமேனு சரின்னு சொல்லிட்டோம். உன்கிட்ட சொல்லாம இருந்தது உனக்குச் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னுதான். இது துர்காவோட வேலை.”
“எதுல சர்ப்ரைஸ் குடுக்கணும்னு அவசியமில்லையாண்ணா?”
எழிலனின் முகத்தில் யோசனைக் கோடுகள்!
“போய் நேத்ரன் கூட பேசு. பிடிக்கலனா அவன்கிட்டவே சொல்லிட்டு வந்துடு. யாரும் உன்னை வற்புறுத்தி மணமேடைல உக்கார வைக்கப்போறதில்ல வெண்பா.”
“புரியுதுண்ணா! ஆனா ஒரு வார்த்தை கூட சொல்லாம…”
அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே நேத்ரன் எழுவது தெரிந்தது. அவனது பார்வையிலிருந்த அழுத்தம் அவளையும் தானாய் எழுந்து நிற்க வைத்துவிட்டது.
“நாங்க போர்டிகோல நின்னு பேசிக்கிறோம்” என்று பெரியவர்களிடம் சொன்னவன் அவள் பக்கம் திரும்பினான்.
“டீச்சரம்மா” அவன் அழைத்ததும் வெண்பாவும் தலையாட்டியபடி அவனோடு செல்வது பெரியவர்களுக்குப் பூடகமாய் ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவதாய்!
ஆனால் போர்டிகோவைத் தாண்டிய சிறு மண்டபத்தில் இருவரும் எதிரெதிரே நின்றபோது வெண்பாவிடம் மிஞ்சியது என்னவோ அதிருப்தி மட்டுமே!
“என்னைப் பிடிக்கலனு சொல்லிடுங்க,” முகத்தைச் சுளித்தபடி அவள் சொல்லவும் நேத்ரனிடமிருந்து விளையாட்டுப் பாவனை விடைபெற்றது.
“அப்பிடி சொன்னா நான் பொய் சொல்லுறேன்னு அர்த்தம் டீச்சரம்மா.”
நிதானமாய் தலை சரித்துச் சொன்னவனைத் திணறலோடு ஏறிட்டாள் வெண்பா.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலனு சொல்லச் சொன்னேன்.”
“எதுக்காக அப்பிடி சொல்லணும்? யாரையும் லவ் பண்ணுறியா? பண்ணுனா சொல்லு, நானே பேசி…”
“அப்பிடி எந்தக் காதலும் எனக்கு இல்லங்க. ஆனா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.” புடவை நுனியிலிருந்த டேஜல்களைத் திருகியபடி அவள் சொன்னதும் நேத்ரனுக்கு அவளது தயக்கத்துக்கான காரணம் புரிவதாய்!
திடுதிடுப்பென திருமணப்பேச்சை எடுத்தது அவனுக்கே கொஞ்சம் திணறல்தான் என்கையில் வெண்பாவும் பாவம்தானே!
“உன்னோட தயக்கம் புரியுது டீச்சரம்மா. ஆனா எடுத்ததும் வேண்டாம்னு சொல்லாம வேற மாதிரி இந்தப் பேச்சை சுமுகமா முடிச்சு வைப்போம்.”
“எப்பிடி? இங்க பாருங்க, எனக்கு நடக்காத ஒன்னைச் சொல்லி பொய் நம்பிக்கை குடுக்குறது பிடிக்காது. இப்பவே உடைச்சுச் சொல்லிட்டா பெஸ்ட்,” என்றாள் வெண்பா கறாராய்.
நேத்ரன் கண்கள் சுருங்க அவளைப் பார்த்தவன், “ம்ம்! சரி! நீயே போய் சொல்லு,” என்கவும் வெண்பா தடுமாறினாள்.
“நானா? நான் எப்பிடி சொல்லுவேன்? நான் சொல்ல மாட்டேன்பா.”
மறுப்பாய் தலையசைத்தாள் வேகமாய்.
நேத்ரனின் கண்களில் மெல்லிய பளபளப்பு.
“புரிஞ்சு போச்சு உன் ஐடியா! நீ நல்ல பொண்ணுனு எல்லார் கிட்டவும் பேர் வாங்கணும். ஆனா நான் மட்டும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசி அவங்க மனசை வருத்தப்பட வைக்கணும். எவ்ளோ செல்ஃபிஷா இருக்க நீ?”
“நான் செல்ஃபிஷா?” எனச் சீறிக்கொண்டே அவனை நெருங்கியவள்,
“என்ன? சவுண்ட் ஏறுது, ஹான்?” என மணிக்கட்டில் கிடந்த வெள்ளி ப்ரேஸ்லெட்டை ஏற்றிவிட்டபடி அவனும் நெருங்கவும் சட்டென நின்று வாயை மூடிக்கொண்டாள்.
நேத்ரன் ஒரு பக்கமாய் உதட்டை இழுத்துக் கோணல் சிரிப்பு சிரித்தான்.
“அவ்ளோ பயம் இருக்குல்ல. அப்புறம் என்ன வாய் உனக்கு?”
“நான் செல்ஃபிஷ் இல்லனு சொல்ல வந்தேன். எனக்கு பெரியவங்ககிட்ட இல்ல முடியாதுனு சொல்லவே வராது,” என்றவளின் தயக்கத்தை நேத்ரனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா?” வேண்டுமென்றே அவன் சீண்டவும் மிரண்டுபோய் வேண்டாமென மறுப்பாய் தலையாட்டினாள் வெண்பா.
“இந்த சர்ப்ரைஸ் எல்லாம் எனக்கும் ஷாக்தான். ஆனா நீ எனக்கு ஒய்ஃபா செட் ஆவியா ஆகமாட்டியானு தெரியாம நான் ஏன் இந்த அரேஞ்ச்மெண்டை உடைக்கணும்? யூ ஆர் அன் எலிஜிபிள் யங் லேடி. உன்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இந்த வாய்ப்பை மிஸ் பண்ணனுமானு யோசிக்குறேன். அதே மாதிரி நானும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர். என்னை மிஸ் பண்ணிட்டா நீ பின்னாட்கள்ல வருத்தப்படுவ.”
அமர்த்தலாய் இடுப்பில் கையூன்றியபடி நேத்ரன் சொல்லவும் வேண்டுமென்றே “ஹ்க்கும் ஹ்க்கும்” என கிண்டலாய் இருமிக் காட்டினாள் வெண்பா.
“என்ன? பயத்துல தொண்டை அடைச்சிடுச்சா? விக்ஸ் வேணுமா?”
பதிலுக்குப் பதில்! கேலிக்குக் கேலி! சரியாய்ப் போயிற்று!
“எனக்குப் பாலிடிக்ஸ், பொலிடிசியன்ஸை சுத்தமா பிடிக்காது. எப்பவும் உங்களை மிஸ் பண்ணிட்டேன்னு நான் நினைக்க மாட்டேன்.”
அலட்சியமாய்ச் சொல்லிவிட்டு எங்கோ பார்த்தவளின் முகத்துக்கு நேரே விரலைச் சொடுக்கினான் நேத்ரன்.
“டீச்சரம்மா! யூ ஆர் புல்லிங் த ராங் ஸ்ட்ரிங். இவ்ளோ அலட்சியம் ஆகாது. முக்கியமா என்கிட்ட வேலைக்கு ஆகாது. ஒருத்தர் என்கிட்ட அலட்சியம் காட்டுனா நான் என்னோட முழு பிடிவாதத்தையும் அவங்ககிட்ட காட்டிடுவேன். க்ரீன் ஃப்ளாகா இருக்குறவனை ரெட் ஃபாரஸ்ட் கேக்கா மாத்திடாத, சொல்லிட்டேன்.”
“என்ன செஞ்சுடும் இந்த ரெட் ஃபாரஸ்ட் கேக்?” கண்களை உருட்டி அவள் கேட்ட விதத்தில் பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டான் நேத்ரன்.
“என்ன வேணும்னாலும் செய்யும். இப்பவே போய் கல்யாணத்துக்குச் சம்மதம் கூட சொல்லும். உனக்குத்தான் பெரியவங்ககிட்ட இல்ல, பிடிக்காதுனு சொல்லத் தெரியாதே.”
வெண்பாவின் முகம் சோர்ந்துபோனது.
“இப்ப நான் என்னதான் செய்யுறது?” சலித்துப் போன குரலில் கேட்டாள் அவள்.
“இது நல்ல பிள்ளைக்கு அழகு. எப்பவும் ஒரு முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி டிஸ்கசன் முக்கியம். எதேச்சாதிகாரமா எனக்குப் பிடிக்கல, அதனால நீயும் வேண்டாம்னு சொல்லுனு அதிகாரம் பண்ணக்கூடாது. அது ரிலேசன்ஷிப்புக்கு நல்லதில்ல,” எனப் பேராசிரியர் போல அவன் பாடம் எடுக்கவும் வேறு வழியின்றி கேட்டுக்கொண்டு தலையாட்டினாள்.
“நமக்குள்ள ஒத்து வருமா இல்லையானு நமக்கே தெரியல. அதனால உடனே சம்மதம், மறுப்பு எதைச் சொன்னாலும் அது சரியா வராது. அதனால அவங்க கல்யாணம் வரைக்கும் டைம் கேப்போம். அப்புறம் நமக்குள்ள செட் ஆச்சுனா கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன சொல்லுற?”
நேத்ரன் புருவத்தை உயர்த்திக் கேட்கவும் வெண்பாவுக்கு இது சரியாக வருமா என்ற சந்தேகம். ஏனென்றால் இந்த ஏற்பாடு எல்லாம் பெரியவர்களுக்குப் பிடிக்காது என்பது அவளுடைய அனுமானம்.
சரி, வேண்டாம் – இவை தவிர வேற எந்தப் பதிலையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றே எண்ணினாள். அதை அவனிடம் வெளிப்படையாகச் சொல்லவும் செய்தாள்.
“நீயே அப்பிடி நினைச்சுக்கிட்டா என்ன அர்த்தம்? அவங்க திடீர்னு சொன்ன மாதிரி நாமளும் அவசரமா சம்மதிச்சோம்னா அது நம்ம லைஃபுக்கு நாம செய்யுற அநியாயம். நமக்கு டைம் வேணும்னு சொல்லுவோம். தட்ஸ் ஃபைனல்,” என்றான் அவன் முடிவாக.
வெண்பா தனது பெரிய விழிகளால் அவனை அளவிட்டாள். அதில் கோபம், மறுப்பு எல்லாம் இல்லை. மாறாய் அவனைப் புரிந்துகொள்ள விரும்பும் பாவனை மட்டுமே!
“இப்பவும் நீங்க எடுத்த முடிவை என் மேல ஃபோர்ஸ் பண்ணுற மாதிரிதான் இருக்கு,” என்றாள் அவள்.
“உனக்குச் சூழலுக்குத் தக்க முடிவெடுக்கத் தெரிஞ்சா நான் ஏன் ஃபோர்ஸ் பண்ணப்போறேன்?”
“ம்ம்! அதுவும் சரிதான்! உங்க முடிவுக்கு நான் சம்மதிக்குறேன். இதைப் பெரியவங்ககிட்ட எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டியது உங்க கடமை. நான் சும்மா உங்க பக்கத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டுறேன்.”
“அதாவது நீ எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம பொறுப்பை என் பக்கம் தள்ளிவிடுற. நீ ஒரு எஸ்கேப்பிஸ்ட் டீச்சரம்மா.”
வெண்பா தோள்களைக் குலுக்கிப் பெருமிதமாய்ச் சிரிக்கவும் அவனது இதழ்களும் முறுவலித்தன.
கண்கள் கனிய அவளது உயரத்துக்குக் குனிந்தவன் “உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லனு இப்பவே நான் சொல்லக்கூட தயார்தான். அதுக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணணும்,” என்றான் சிரிப்போடு.
“என்ன செய்யணும்?” – ஆர்வம் பூவாய் விழிகளில் மலர வினவினாள் வெண்பா.
“எலக்சன்ல எனக்கு ஓட்டு போடுவேன்னு ப்ராமிஸ் பண்ணு. இப்பவே கல்யாணத்தை நிறுத்துறேன்.”
சீண்டலாகக் கேட்டுவிட்டு நாவினால் கன்னத்து உட்பக்கச் சதையை உந்தியவனை ஆயாசமாய்ப் பார்த்தாள் வெண்பா.
“அதுக்கு நான் உங்களைக் கல்யாணமே பண்ணிட்டுப் போயிடுவேன்,” என்றாள் கடுகடுப்போடு.
“எனக்கு ஓட்டு போடுறதை விட என்னைக் கல்யாணம் பண்ணிக்குறது பரவால்லனு சொல்ல வர்ற. ஏன் இந்தக் கடுப்பு என் மேல?”
“பின்ன? எலக்சன் காம்பெய்ன் பண்ணுற இடமா இது? கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுகிட்ட ‘நீ ஓட்டு போடு, கல்யாணத்தை நிறுத்துறேன்’னு சொன்ன முதலும் கடைசியுமான பொலிடீசியன் நீங்களாதான் இருப்பீங்க. இதெல்லாம் எலக்சன் கமிசன்ல கம்ப்ளைண்ட் பண்ண முடியாதா?”
படபடவெனப் பொரிந்தவளின் உதட்டுக்கு நடுவே விரலை வைத்து “மூச்” என்றான் அவன்.

வெண்பா அமைதியானதும் கண்கள் கனியப் புன்சிரிப்போடு அவளை ஒரு நொடி ரசித்தான்.
பின்னர் நெடிய பெருமூச்சுடன் “எனக்கு என்னோட உள்ளுணர்வு மேல நம்பிக்கை உண்டு. அது என்ன சொல்லுது தெரியுமா? நான் எம்.எல்.ஏ ஆன கையோட உன் கையைப் பிடிப்பேன்னு சொல்லுது. அதுக்குள்ள உனக்கும் என்னைப் பிடிக்க ஆரம்பிச்சிடும்னு சொல்லுது,” என்றான் நம்பிக்கையோடு.
வெண்பா ஒரு நொடி அவனது கண்கள் காட்டிய கனிவில் மெய்மறந்து போனவள் பின்னர் இயல்புக்கு மீண்டாள்.
“எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க,” என்றாள் மெதுவாக.
“ஓகே! நான் பேசிடுறேன். உனக்கு இந்தச் சிட்டுவேசனை ஹேண்டில் பண்ண டென்சனா சங்கடமா இருக்குனா இங்கயே இரு. நான் உள்ள பேசிட்டு அவங்களைச் சம்மதிக்க வச்சிட்டு உனக்குக் கால் பண்ணுறேன்,” என அவன் சொன்னது அவளுக்கும் சரியானதாகத் தோன்றியது.
“நல்ல ஐடியா! என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க.”
தனது மொபைல் எண்ணை நேத்ரனிடம் கூறினாள் அவள்.
“நான் உள்ள போய் பேசுறேன்.”
அவளிடம் ‘தம்ஸ்-அப்’ அடையாளம் காட்டிவிட்டு பங்களாவை நோக்கி விரைபவனை முதல் முறையாக நேர்மறை உணர்வோடு பார்க்கத் தோன்றியது வெண்பாவுக்கு.
உள்ளே சென்றவனும் இருவீட்டாரிடம் தங்களது முடிவைப் பற்றி விளக்கினான். திடுமென திருமணம் என்றால் தங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள அவகாசம் வேண்டுமென எடுத்துக் கூறினான். கூடவே அந்தக் கால அவகாசத்தில் வெண்பாவுக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்றால் அவளை வற்புறுத்த வேண்டாமென அவன் சொல்ல, எழிலனின் முகத்தில் முறுவல்!
“அப்ப சின்ன மாப்பிள்ளைக்குக் கல்யாணத்துல விருப்பம். அப்பிடித்தானே?”
“நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க மாமா,” எனச் சமாளித்தாலும் அவன் மனதினோரமாய் இத்திருமணத்துக்கான சம்மதக்குரல் கேட்கத்தான் செய்தது. ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கத் தயாரில்லை அவன்.
அவனது எண்ணவோட்டத்தைப் பெரியவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் எழிலன், ஹேமா, புவனா மூவருக்கும் இவர்களது திருமணம் முடிவானது போலத்தான் எண்ணம்.
பெரியவர்கள் தங்களது முடிவை ஏற்றுக்கொண்டதும் தனது மொபைலிலிருந்து வெண்பாவின் எண்ணுக்கு அழைத்தான் நேத்ரன்.
“இப்ப நீ உள்ள வா டீச்சரம்மா.”
அவன் பேசிய சில நொடிகளில் உள்ளே வந்தவளை “இப்பவே நேத்ரன் வார்த்தைக்கு மரியாதை குடுக்குறா” என்று சிலாகித்தார் அங்கயற்கண்ணி.
துர்கா – புகழேந்தியின் திருமணம் அங்கே உறுதியானது. நிச்சயதார்த்த தேதியும் குறிக்கப்பட்டது.
ராஜவேலுவின் குடும்பத்தார் மகிழ்ச்சியோடு விடைபெற்றார்கள் அங்கிருந்து.
நேத்ரன் வெளியேறும்போது அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “தேங்க்ஸ்” என்றாள் வெண்பா.
“எதுக்கு?” அவளைப் போலத் தணிந்த குரலில் வினவினான் அவன்.
“நான் சங்கடப்படக்கூடாதுனு நீங்களே எல்லாத்தையும் பேசி முடிச்சதுக்கு.”
நேத்ரனிடம் ஒரு நமட்டுச் சிரிப்பு வெடித்தது.
“எனக்கு அட்வான்டேஜ் இல்லாத காரியத்தை நான் பண்ணுனதேயில்ல. நானே அவங்களைச் சமாளிச்சதுலயும் எனக்கு ஒரு அட்வான்டேஜ் இருக்கு.”
“என்ன?”
“சும்மா கேட்டா நீ உன் மொபைல் நம்பர் குடுத்திருப்பியா? நானே பேசிட்டுக் கூப்பிடுறேன்னு சொன்னதும் நீயே முன்வந்து நம்பர் குடுத்தல்ல. தட்ஸ் மை ஸ்மார்ட் மூவ். வரட்டுமா டீச்சரம்மா! பை.”
தனது மொபைல் எண்ணை அவனுக்குத் தானே விரும்பித் தரவைத்த நேத்ரனின் சாமர்த்தியத்தை மெச்சுவதா அல்லது அவன் நினைத்த காரியத்தைத் தன்னை வைத்தே செய்துகொண்டான் என்று கோபம் கொள்வதா எனத் தெரியாமல் திகைத்துப்போய் நின்றாள் வெண்பா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


