காதல் – மாபெரும் பிழைகளைக் கூட அலட்சியப்படுத்த வைக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையையும் தூசியாகக் கருத வைக்கும். இதெல்லாம் அந்தக் காதல் இரு நபர்களுக்குள் உயிர்ப்புடன் இருக்கும்போது மட்டுமே சாத்தியம். ஒரு முறை ஒரே ஒரு முறை அந்தக் காதல் குறைந்தால் மற்ற அனைத்தும் பூதாகரமாகத் தோன்ற ஆரம்பிக்கும். இந்த நபருக்காகவா நான் இதையெல்லாம் பொறுத்தேன் என்ற சலிப்பு நம்மை அறியாது நமக்குள் உதயமாகும். காதலின் இடத்தை அந்தச் சலிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிரப்ப ஆரம்பிக்கும். முடிவில் காதல் காணாமல் போய் சலிப்பு மட்டுமே எஞ்சி நிற்கும் சமயத்தில் உறவுகள் ஆட்டம் காண ஆரம்பிக்கும். பெரும்பான்மையான உறவுகளில் இதன் காரணமாகவே பிரிவுகள் நேர்கின்றன என்று என்னுடைய சைக்கியாட்ரிஸ்ட் சொன்னதாக ஞாபகம்.
-வான்மதி
“இவர்?” கேள்வி கேட்ட ரவியின் விழிகளிலும் அவனது அன்னையின் முகத்திலும் குழப்பத்தின் சாயல் தெரிந்தது.
பூபாலன் மனைவியை உரிமையாக அணைத்துக்கொண்டவன் “நான் யார்னு தெரியாதா? இவங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட சொல்லலையா?” என்று அப்பாவி போலக் கேட்டுவிட்டு வான்மதியின் வதனத்தை நோக்கினான்.
“மாமியாருக்கு என்னை எப்பவுமே பிடிக்காது. நீ கூடவா நான் யார்னு சொல்லலை?” என்று கேலியாகக் கேட்க பகவதியோடு சேர்ந்து ரவி மற்றும் அவனுடைய அன்னையின் முகமும் பரபரப்புக்குள்ளானது.
பகவதி அவனை மீறிக்கொண்டு ஏதோ சொல்லவந்தார்.
“நீங்க எதுவும் பேசவேண்டாம். ஆக்சுவலி உங்க மேல தப்பு இல்ல. தப்பு இதோ இவ மேலதான். மிசஸ் பூபாலனுக்கான எந்த அடையாளமும் இல்லாம நடமாடுனா யாருக்குத்தான் விசயம் புரியும்? இவ செஞ்ச தப்பைத் திருத்திக் கூட்டிட்டு வர்றேன்” என்றவன் அவளைத் தன்னுடன் வருமாறு கண்களால் கட்டளையிட வான்மதியோ முடியவே முடியாதென வேகமாக மறுத்தாள்.
அவளை விடாப்பிடியாக அணைத்துத் தன்னோடு அழைத்துச் சென்றவன் மண்டபத்தின் மேல்தளத்தில் இருக்கும் விருந்தினர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிடவும் வான்மதி அவனது கையைத் தள்ளிவிட்டு விலகி நிற்கவும் சரியாக இருந்தது.
மண்டிய எரிச்சலை மறைக்காமல் “உங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கிங்க? கொஞ்சமாச்சும் டீசண்டா பிஹேவ் பண்ணுங்க” என்று அவள் சீற
“டீசன்சி எல்லாம் அப்புறமா ஃப்ரீ டைம் இருந்தா கத்துக் குடு. இப்ப நீ செஞ்ச தப்பைக் கரெக்ட் பண்ணுவோமா?” என்று கேட்டபடி அவளை நெருங்கியவன் அவள் நகராமல் நிற்கவும் சிரித்தான்.

“கொஞ்சம் கூட பயம் இல்ல?” என்று கேட்கவும் செய்தான்.
“எதுக்குப் பயப்படணும்? முதல்ல உங்க கிட்ட நான் ஏன் பேசணும்? வழிய விடுங்க” என்றபடி அவனைக் கடந்து போக முயன்றவளின் கரம் அவனிடம் சிக்கிக்கொண்டது. அன்று போலவே இறுகிய பிடி ஒரு கட்டத்தில் வலியைக் கொடுக்கவும் முகம் சுழித்தாள் வான்மதி.
“வலிக்குது பாலா” கடித்த பற்களிடையே அவள் முணுமுணுத்த வார்த்தைகள் அவனது பிடியைத் தளர்த்தின.
“நாம் பிரிஞ்சிருக்கோம். ஆனா இன்னும் டைவர்ஸ் வாங்கல. சோ இப்பவும் நீ மிசஸ் பூபாலன்தான். எங்க நான் கட்டுன தாலி?” என்று நேரடியாகக் கேட்டுவிட்டு அவள் கழுத்தில் கை வைக்க அதைத் தட்டிவிட்டாள் வான்மதி.
“டோண்ட் டச் மீ” என்றவள் சீறவும்
“இங்க பாரு! நான் ஒன்னும் உன் கூட ரொமான்ஸ் பண்ண இங்க அழைச்சிட்டு வரல. எனக்கு அப்பிடி ஒரு கேவலமான ஆசை இந்த ஜென்மத்துல மறுபடி வராது. உன் அப்பா, என் அம்மா, குடும்பத்துல உள்ள மத்தவங்க எல்லாரும் நம்மள்ல யாரோ ஒருத்தர் இறங்கி வந்தா நம்ம உறவைக் காப்பாத்தலாம்னு நினைக்குறாங்க. அந்த ஒருத்தர் நானா இருக்கணும்னு அவங்க பிடிவாதம் பிடிக்க என்ன காரணம்னு உனக்கே நல்லா தெரியும்” என்றபடி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மூடிய கதவின் மீது சாய்ந்து நின்றான் பூபாலன்.
“எனக்குத் தெரியாது, தெரிஞ்சிக்கவும் விரும்பல. இன்னொரு தடவை உங்க கூட எந்த உறவையும் நான் புதுப்பிக்க விரும்பல. என் அப்பா, உங்கம்மாவோட ஆசைக்காக எல்லாம் என்னால உங்களை மறுபடியும் நம்ப முடியாது பாலா. நீங்க மனசை உடைக்குறதுல எக்ஸ்பர்ட். இன்னொரு தடவை என்னால ஏமாற்றத்தையும் வலியையும் தாங்கிக்க முடியாது. ஒவ்வொரு தடவையும் சைக்கியாட்ரிஸ்டைத் தேடி ஓட எனக்கு விருப்பமில்ல”
அவனைப் பார்க்க விரும்பாமல் கோர்வையாகச் சொல்லி முடித்தாள் வான்மதி. ஏனோ அவளது பேச்சு வாக்குமூலம் போலத் தோன்றியது பூபாலனுக்கு.
முகம் இறுகிப்போனான். அவள் மீதானக் கோபத்தினால் அல்ல! தன் மீது பொங்கிய கோபத்தில்! தனது முடிவால் அவள் அடைந்த பாதிப்பின் தீவிரத்தை அவளே சொல்லக் கேட்டு வந்த கோபத்தில்!
பெருமூச்சுவிட்டவன் “எல்லா தப்பும் உன் மேலதான்னு சொல்ல மாட்டேன். அதே நேரம் உன் மேல எந்தத் தப்புமில்லனு சொன்னா அது அநியாயம். ரெண்டு பேருமே தப்பு பண்ணுனோம். ஆனா உன்னை என் வாழ்க்கைல இருந்து தூக்கியெறிஞ்சவன் நான். அந்தத் தப்பைச் செஞ்சதாலதான் இப்ப நானே இறங்கி வந்து பேசிட்டிருக்கேன். இவனே வழிய வந்து பேசுறான், அப்ப நம்ம மேல தப்பில்லனு நீ நினைச்சுடக்கூடாது. என்னைப் பலவீனமானவன்னு முடிவும் பண்ணிடக்கூடாது. என்னாலயும் உன்னாலயும் இன்னும் முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு இதே மாதிரி தனித்தனியா வாழ்ந்துட முடியும். அந்த முப்பத்தஞ்சு வருசத்துல நம்மளைப் பெத்தவங்க பதினைஞ்சு வருசம் நம்ம கூட இருப்பாங்களா? அந்தப் பதினைஞ்சு வருசமும் அவங்க நம்மளை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கணுமா? இனி வரப் போற நாட்கள்ல அவங்க நிம்மதியா இருக்க என்ன வழி உண்டோ அதுல பயணிக்க நான் தயாரா இருக்கேன். இதுக்கு எந்தக் காதலும் தேவையில்ல. வெறும் கமிட்மெண்ட், பெத்தவங்க மேல இருக்குற அக்கறை மட்டும் போதும். இனி யோசிக்க வேண்டியது நீதான்” என்றபடி அவளை நெருங்கி வந்தான்.
இம்முறை அவளுக்குள் எந்தப் பதற்றமும் இல்லை. அவனது வார்த்தைகளில் இருந்த சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தவளின் கழுத்தை அவன் பரிசோதித்ததும், சேஃப்டி பின் கொண்டு உள்ளே தள்ளி மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அவன் வெளியே போட்டதும் அவளுக்கே தெரியாமல் நடந்து முடிந்தன.
“பாரு! இப்ப எவ்ளோ லெட்சுமிகரமா இருக்குற நீ” என்று அவளது மோவாயைக் கிள்ளிக் கொஞ்சியவன் கதவைத் திறந்து வெளியே போய்விட வான்மதியோ திக்பிரமை பிடித்தாற்போல நின்று கொண்டிருந்தாள்.
பூபாலன் போன அடுத்தச் சில நொடிகளில் பதற்றமும் பரபரப்புமாக அந்த அறைக்குள் ஓடோடி வந்தார் பகவதி.
“வானும்மா உனக்கு ஒன்னுமில்லையே?”
அவசரமாக அவரது விழிகள் மகளைப் பரிசோதித்தன. அந்த விழிகளில் மகளின் கழுத்தில் மின்னிய தாலி செயின் படவும் பற்றிக்கொண்டு வந்தது பகவதிக்கு.
பட்டென அதைப் பிடித்தவர் “இன்னும் இதைக் கழுத்துல போட்டுட்டு இருக்கியா?” என்று கேட்கவும் புயலால் உலுக்கப்பட்டவளைப் போல சுயத்தை அடைந்தாள் வான்மதி.
அன்னை கோபத்தோடு மாங்கல்யத்தைப் பற்றியிருப்பதைப் பார்த்ததும் பூபாலன் என்ன செய்துவிட்டுப் போயிருக்கிறான் என்பது புத்தியில் உறைத்தது.
அவனுக்கோ வான்மதிக்கோ தாலி செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது. ஆனால் அந்த மங்கலநாண் அவர்களுடைய உறவை இன்னும் இறுக்கமாகப் பிணைப்பதாக நம்பினார்கள். உறவே அறுந்து போனாலும் அவளால் அதை அறுத்து எறிய ஏனோ முடியவில்லை. அதே நேரம் அதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ‘லூசரைப்’ போல நடமாடவும் அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
எனவே உலகத்தின் பார்வைக்கு அகப்படாதவண்ணம் அதை மறைத்து அணிய ஆரம்பித்தாள். மகள் பூபாலனின் நினைவுகளை விலக்கி வைத்தது போல அவன் கட்டிய மாங்கல்யத்தையும் கழற்றியெறிந்திருப்பாள் என நிம்மதியாக இருந்த பகவதிக்கு அவளது கழுத்தில் மின்னிய பொற்தாலி அதிர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லைதானே!
சுவாதீனமாக அன்னையின் கரத்திலிருந்து மாங்கல்யத்தை விலக்கியவள் “கழட்டணும்னு தோணல. அதனால போட்டிருக்கேன்” என்றாள் சுருக்கமாக.
“அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு? இனிமே உன் வாழ்க்கைல அவர் இல்லனு ஆயாச்சு…”
“ம்மா!”
அன்னையின் பேச்சை இடைவெட்டினாள் வான்மதி. பகவதியும் பேச்சை நிறுத்தி மகளை ஏறிட்டார்.

“நாங்க பிரிஞ்சிருக்கோம். இன்னும் எங்களுக்கு டைவர்ஸ் ஆகிடல. இன்னும் நாங்க ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப்தான்மா. அடிக்கடி நீங்க அதை மறந்துடுறிங்கனு தோணுது. இன்னொரு தடவை மாப்பிள்ளை பாக்குறதா சொல்லி சிரமப்படாதிங்க. ஒரே ஒரு தடவை கல்யாணம் பண்ணுனதுலயே நான் நொந்து போயிட்டேன். இன்னொரு தடவை என்னால அதைக் கற்பனை பண்ணக்கூட முடியல. ப்ளீஸ்! என்னைச் சங்கடப்படவைக்காதிங்க”
பகவதி மகள் பேசபேச வாயடைத்துப் போனார். இத்தனை ஆண்டுகள் மகள் காட்டிய அமைதியைப் பூபாலன் மீதான வெறுப்பு என்று அர்த்தம் கற்பித்துக்கொண்டது தவறு என்று புரிந்தது அவருக்கு. ஆனாலும் அப்படியே விட மனமில்லை.
“நீதான் இப்பிடி சொல்லுற. அங்க உன்னோட மாமனார் உன் புருசனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க பொண்ணு தேடிட்டிருக்கார் ஒரு வருசமா. இந்தத் தகவலை உன் கிட்ட யாரும் சொல்லிருக்கமாட்டாங்க. எல்லாருக்கும் நான் மட்டும்தான் குடும்பத்தைப் பிரிக்குறவ. அந்தக் குணசேகரன் செய்யுற குட்டி கலாட்டா என்னைக்கு யார் கண்ணுல பட்டிருக்கு?”
வான்மதி தலையைப் பிடித்துக்கொண்டாள்.
“ப்ளீஸ்மா! யார் என்ன செஞ்சாலும் என் முடிவு இதுதான். இன்னொரு கல்யாணம்ங்கிற பேச்சுக்கு இனிமே என் வாழ்க்கைல இடமில்ல. பாலாவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்னால கல்யாண உறவுக்குள்ள நுழைய முடியாது. அவர் செஞ்சார்னு நானும் செய்யுறதுக்கு இது ஒன்னும் விளையாட்டு இல்ல. வாழ்க்கை! இதை நான் தனியா கழிச்சாலும் நிம்மதியோட கழிக்கணும்னு ஆசைப்படுறேன்”
தீர்மானமாக அவரிடம் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவள் மணமேடையில் போய் நின்றாள்.
எதேச்சையாக மகளைத் தேடிய நரேந்திரனின் விழிகளில் அவளது கழுத்திலிருந்த தாலி தென்படவும் சொல்லவொண்ணா நிம்மதியொன்று அவரை ஆட்கொண்டது.
மாங்கல்யதாரணத்தின்போது மணமக்களை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தார்கள் பூபாலனும் அவனுடைய குழுவினரும்.
அங்கே மின்னிய ஃப்ளாஷ்களும், ஆரவாரமும், அவள் மீது உதிர்ந்த அட்சதையும் வான்மதிக்கு இன்னொரு திருமணத்தை ஞாபகப்படுத்தியது.
அந்தத் திருமணத்தில்தான் அவள் முதல் முதலில் பூபாலனைச் சந்தித்தாள். கல்லூரி முடித்து கேம்பஸ் மூலமாக டெக்னோசிசில் அவள் பணிக்குச் சேர்ந்து புதிதில் நடந்தேறிய சம்பவம் அது
அச்சமயத்தில் அவளுக்கு நெருங்கிய தோழியாக இருந்தவள் புராஜெக்ட் மேனேஜருடன் காதலில் விழுந்து மூன்றே மாதத்தில் காதலானது திருமணத்தில் கனிந்திருந்தது.
காதல் என்றால் அழகானக் கனவு என்ற எண்ணம் வான்மதிக்குள்ளும் ஒருவித குறுகுறுப்பை உண்டாக்கியிருந்த சமயம் அது. கண்களில் பரவசமும், உடல்மொழியில் துள்ளலுமாகத் தோழியில் திருமணத்தில் கலந்துகொண்டாள் அவள்.
அடிக்கடி முகத்தில் ஃப்ளாஷ் அடிக்கவும் யாரடா அந்தப் போட்டோகிராபர் என எரிச்சலுடன் முறைத்தவளின் பார்வையில் மெரூன் வண்ண சட்டை ஜீன்சில் கேமராவுடன் நின்ற பூபாலன் பட்டான்.

அவனது பார்வையிலிருந்த அதீத ஆர்வமும் அவளது கவனத்தைக் கவர்ந்துவிட்டது. அவனது பார்வையும் ஃப்ளாஷ்களும் அவளைத் தொடர ஒரு கட்டத்தில் தனது முட்டைக்கண்களை உருட்டி வான்மதி கொடுத்த முறைப்பான போஸ்களைக் கேமராவால் விழுங்கிக்கொண்டான் பூபாலன்.
அது என்ன அவளுக்கு மட்டும் சிறப்பு கவனம்? அவனது இதயமும் அக்கணத்தில் கேட்டது. அதற்கான பதில் முந்தைய தினத்தில் நடந்தேறிய சங்கீத் நிகழ்வுதான்.
தென் தமிழகத்தில் பழமையில் ஊறிய தந்தையின் அடியொற்றி வளர்ந்த பூபாலனுக்குத் தமிழகத் திருமணச்சடங்குகள் மீது ஆர்வமும், மதிப்பும் அதிகம். அவன் புகைப்படக்கலை பயின்று தலைசிறந்த புகைப்படக்கலைஞர் ஒருவரிடம் பயிற்சிக்காகச் சேர்ந்ததுமே ‘வெட்டிங் போட்டோகிராபி’தான் தனது இலட்சியமெனத் தீர்மானித்திருந்தான்.
அழகானத் திருமணத் தருணங்களை கேமராவால் செதுக்கி அழகான நினைவுகளாகப் பரிசளிப்பது அவனுக்குமே பிடித்திருந்தது. அவனைச் சலிப்புக்குள்ளாக்கிய ஒரே விசயம், தமிழர் பண்பாட்டில் இல்லாத திருமண நிகழ்வுகளை தமிழ் திருமணங்களில் நுழைப்பதுதான்.
அது தனிமனிதச் சுதந்திரம், விருப்பமென அவனுக்கும் தெரியும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நம் மக்கள் வடக்கத்திய கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதில் விழுவதை அவனால் ஏற்க முடியவில்லை.
அப்படித்தான் அன்றைய சங்கீத் நிகழ்வைச் சலிப்போடு புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தான். சங்கீத், மெஹந்தி என அந்த நிகழ்வில் வடக்கத்திய கலாச்சாரத்தின் தீவிர நெடி அடித்ததோடு உடைகள் கூட லெஹங்காக்களாகவும், சென்னையின் கோடைக்கால சீதோஷ்ணத்துக்குச் சற்றும் ஒவ்வாத ஷெர்வானி, ப்ளேசர்களாகவும் அன்னியப்பட்டுத் தெரிந்தன.
அன்னியமானச் சூழலில் அவனுக்கு உண்டான ஒவ்வாமையைக் கிழித்தெறிந்தபடி சிவப்பும், பச்சையும் கலந்த எளிமையான மங்கலகிரி காட்டன் புடவையில் வந்து நின்றாள் வான்மதி. அவளுக்கு ‘ஜிகுஜிகு’வென மின்னும் ஆடைகள் என்றால் அலர்ஜி என்பதால் அந்த வகை உடைகள் பக்கம் அவள் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை.
தன்னை அறியாமல் தனது பிரசன்னம் ஒருவனின் கவனத்தை ஈர்த்ததை அந்த மாலைப்பொழுதில் அறியாதவள் மறுநாள் முகூர்த்தத்தில் அவனது பார்வை தன்னைக் கவ்வியதில் சலனமுற்று முறைத்தாள்.
அவளது முறைப்பையும் முறுவலோடு புகைப்படமாக்கினான் பூபாலன்!