கார்ப்பயணத்தைப் பாதியில் நிறுத்திய ஆதித்யனைத் திகைப்பாய்ப் பார்த்தாள் நந்தினி.
“என்ன?”
அவளையே விழியகற்றாது பார்த்தான்; புன்னகைத்தான். சற்றும் எதிர்பாராவிதமாக நந்தினியின் தலையைப் பற்றி தனது தோளில் சாய்த்துக்கொண்டவன் தனது பெரிய கரத்தால் அவளது கன்னத்தில் தட்டிக்கொடுத்தான்.
மறுப்பு சொல்லி விலகவேண்டியவளின் மனதில் இத்தனை நாட்கள் விழுந்திருந்த திரை ஆதித்யனின் அக்கறையான செயலால் மெதுவாக மறைந்து போனது.
“நீ ரொம்ப நிம்மதியா உணருற தானே?”
அவனது சிம்மக்குரல் கிசுகிசுப்பாய் ஒலித்த விதம் அவளை அவஸ்தைக்குள்ளாக்கியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“குமரனை நினைச்சு நான் கலங்குனதுக்குக் காரணம் காதலைப் பறிகுடுத்த சோகம்னு இத்தனை நாள் நீங்க வச்சிருந்த மதிப்பீடு மாறிடுச்சு தானே?”
பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டுத் தனது மனதில் உண்டான மெல்லிய அதிர்வை மறைக்கப் பார்த்தாள் நந்தினி.
“அவனை நான் மிரட்டுனப்ப உன் கண்ணுல ஒரு பரவசம் தெரிஞ்சுதே, அப்பவே அந்த மதிப்பீடு மாறிடுச்சு நந்தினி… என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன வரைக்கும் காதலைப் பறிகுடுத்த சோகத்தை விட ‘இப்பிடி முட்டாளா இருந்துட்டோமே’ங்கிற கழிவிரக்கம்தான் உன்னைக் காயப்படுத்திட்டு இருந்திருக்கு. அந்தக் காயம் ஆறணும்னா அதை உண்டாக்குனவன் செஞ்ச தப்பை நினைச்சு ஒவ்வொரு நாளும் தவிக்கணும். அதுக்கான வேலைய நான் பாத்துட்டேன்”
சாய்ந்திருந்த வாக்கில் அவனது தாடி அடர்ந்த கன்னத்தைத் தாண்டி கோபம் மின்னிய விழிகளைப் பார்த்தாள் நந்தினி.
‘இவன் எனக்காகக் கோபப்படுகிறான். எனக்கு அநியாயம் செய்தவனைத் தண்டிக்க எண்ணுகிறான்’ என்ற எண்ணம் அவளுக்குள் இத்தனை நாட்கள் காதலைப் பற்றி இருந்த தயக்கத்தை உருக வைத்தது.
‘இந்த ஆதித்யன் எக்காரணத்தைக் கொண்டும் என்னைத் தனியே தவிக்க விடமாட்டான்’ என்ற நம்பிக்கை அவளுக்குள் உதயமானது.
அவளது மனவுணர்வுகளை அறியாதவனோ பேசிக்கொண்டே இருந்தான்.
“இனிமே குமரனோட நிலமை கஷ்டம் தான். இத்தனை நாள் அவனால உன்னைப் பத்தி மறைக்க முடிஞ்ச உண்மைகளை இனிமே அவனோட ஒய்ப் ஆராய்ஞ்சு கண்டுபிடிக்க நினைப்பா. எங்க தன்னோட குட்டு வெளிப்பட்டு வாழ்க்கை பாழாகிடுமோங்கிற பயம் அவனுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும். அதோட நீ உழைச்ச காசை எதுக்காக அனாமத்தா விடணும்? பணத்துக்கு பணமும் ஆச்சு. தப்பு செஞ்சவனுக்குத் தண்டனையும் ஆச்சு”
இந்நொடியில் நந்தினியின் ஆட்காட்டிவிரல் அவனது உதட்டைப் ‘பட்’டெனத் தொட்டது.
ஆதித்யன் ‘என்ன’ என்பது போல பார்த்தான்.
அவனது தோளிலிருந்து தலையை எடுத்துக்கொண்டாள் நந்தினி.
“இனிமே நம்மளைப் பத்தி பேசலாமே”
மை பூசிய விழிகளில் முதல் முறையாக மையலைப் பூசி உரிமையாக அவள் கோரிக்கை வைத்ததில் ஆதித்யனின் இதயம் மார்ப்புக்கூட்டை உடைத்துக்கொண்டு சிறகை விரித்துப் பறக்காதக் குறை!
“நம்மளைப் பத்தி பேச என்ன இருக்கு?” போலியான அசட்டைத்தொனி அவனது குரலில்.
அவளா இந்த விளையாட்டுத்தனத்தில் விழுவாள்!
“அதானே! இன்னும் நம்மளைப் பத்தி பேச என்ன இருக்கு?” யோசிப்பது போல நடித்தவள் “ம்ம்ம்… ஒரு விசயத்தை மறந்துட்டேன் பாருங்க. நீங்க என் கிட்ட ப்ரபோஸ் பண்ணிருந்திங்க. அதைப் பத்தி பேசவும் என்ன இருக்கு?” என்று விசமப்பார்வை பார்க்கவும் ஆதித்யனின் கண்களில் கலவரம்.
“அம்மா தாயே! இப்ப தான் மலையிறங்கி வந்திருக்க. உன்னை மறுபடியும் முருங்கைமரத்துல ஏறவைக்க நான் என்ன முட்டாளா? தெரியாம உன் கிட்ட விளையாடிட்டேன். சொல்லு! எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?”
படபடவென அவன் பேசியதில் பூவாய்ச் சிரித்தாள் நந்தினி.
“இப்ப தானே உங்க காதலை நான் ஏத்துக்கிட்டேன். அதுக்குள்ள கல்யாணமா? கொஞ்சநாள் லவ் பண்ணலாமா?”
ஆட்காட்டிவிரலின் நுனியை அளவாகக் காட்டி மூக்கைச் சுருக்கி சலுகையாய் அவள் கொஞ்சிய விதத்தில் ஆதித்யன் தன் வசமிழந்து போனான்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் இரு கரங்களால் அவனது கன்னங்களை ஏந்தியிருந்தான் அவன்.
இப்போது நந்தினியின் விழிகளில் கலவரம் மூண்டது.
“யாரோ காதலிக்கலாமானு கேட்டுட்டுக் கன்னத்தைத் தொட்டதுக்கே பதறுறாங்க?” நாவினால் உட்பக்கத்துக் கன்னச்சதையை உந்தி ஆதித்யன் குறும்புப்பார்வை பார்க்கவும் பேச வார்த்தை வராமல் தவித்தாள் அவள்.
“அது… காதல்னா இப்பிடியெல்லாம்…”
ஆதித்யன் அதிகம் யோசிக்காமல் தனது நெற்றியால் அவளது நெற்றியை முட்டி அப்படியே கண்மூடிக்கொண்டான்.
“நீ என்னோட காதலை ஏத்துக்குற வரைக்கும் கண்ணியம் காத்த மனசுக்கு, இப்ப கண்ணியத்துக்கு என்ன ஸ்பெல்லிங்னு கூட தெரியலயாம். இந்த நிலமை நீடிக்குறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல. கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் திகட்ட திகட்ட காதலிக்கலாம்டி”
கண்கள் மூடியிருக்க, ஆதித்யனின் நெற்றியோடு நெற்றி உரச, நாசிகள் அவ்வபோது தொட்டுக்கொள்ள, இதழ்களோ ‘இதோ இணையப்போகிறோம்’ எனுமளவுக்கு நெருக்கத்தில் இருக்க, சிலையாய்ச் சமைந்திருந்த நந்தினியின் தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் காதல் அரும்புகள் மலர்ந்து நறுமணம் வீசத் தொடங்கின.
“உங்க இஷ்டம்”
மென்மையாய் முணுமுணுத்தாள் நாணம் மேலிட.
அடுத்து என்ன? கல்யாணம் தான்!
பெரியவர்களைச் சம்மதிக்க வைக்க அதிகச் சிரமம் இல்லை. இருவீட்டாரும் விரும்பியது இளையவர்களின் இதயங்கள் இணையவேண்டும் என்பதையே!
“எங்க கம்பெனி இன்னைக்குச் சோசியல் மீடியால கொடி கட்டிப் பறக்குது. நாளைக்கே சோசியல் மீடியா வீழ்ச்சி அடைஞ்சுதுனா மருமகன் என்ன செய்வார்னு நீங்க பயப்படக்கூடாது அத்தை. என் ஃபோட்டோகிராபி என்னை எப்பவுமே கைவிடாது. அந்த வேலையையும் நான் செஞ்சுட்டிருக்கேன் அத்தை. இன்னும் கொஞ்சநாள்ல தனியா ஸ்டூடியோ ஆரம்பிக்கலாம்னு ஐடியா வச்சிருக்கேன்”
யுவராணி தனது பெண்ணின் வருங்காலம் பற்றி எண்ணி கவலைப்படக்கூடாதென ஆதித்யன் தனது தற்போதைய தொழில் மற்றும் வருங்கால திட்டங்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் அவரிடம் கூறிவிட்டான்.
அவருக்குமே யூடியூப் வீடியோக்களில், இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ்களில் பிரபலங்களை மருமகன் பேட்டி எடுப்பதில் அத்துணை பெருமை.
பெரிதாக எந்தத் தடையும் இல்லாததால் பெண் பார்க்கும் நிகழ்வும் நிச்சயதார்த்தமும் குழப்பமின்றி அரங்கேறி திருமண நாளும் அழகாய் விடிந்தது.
ஆதித்யனின் பிரத்தியேக விருப்பத்திற்காக திருமணம் இலஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரக்கு வண்ணத்தில் அடர்பச்சை பார்டரிட்ட பட்டு அணிந்து, மலர்வனமே அவள் உருவில் நடந்து வருகிறதோ என பார்ப்பவர் ஐயமுறும் வகையில் பாந்தமான அலங்காரத்துடன் நடந்து வந்து மணமேடையில் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த ஆதித்யனின் அருகே அமர்ந்தாள் நந்தினி.
கண்கள் எதேச்சையாக உயர்ந்து யுவராணியைப் பூரிப்போடு பார்த்தன. அவரோ மலர்விழியிடம் தங்களது பிள்ளைகளின் ஜோடி பொருத்தத்தைச் சிலாகித்துக்கொண்டிருந்தார். அருகே நின்ற மதியழகன் மகனிடம் ஏதோ சைகையில் சொல்லிக்கொண்டிருக்க நந்தினியின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.
அதே மகிழ்வுடன் ஆதித்யனை ஏறிட்டாள்.
ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்தபடியே அவள் பக்கம் சரிந்தவன் “கண்ணுல ரொமான்ஸ் சொட்டுது” என்றதும்
“என் புருசனை நான் பார்க்குறேன்” என்றாள் நந்தினி கர்வத்தோடு.
ஆதித்யனை அடியோடு சாய்க்க இந்தக் கர்வமொன்றே போதும்.
ஐயர் மாங்கல்யத்தை எடுத்துக்கொடுக்க, காதல் பெண்ணின் சம்மதத்தோடு அவள் கழுத்தில் அதைக் கட்டியவன் வகிட்டில் குங்குமம் வைத்துவிட்டு மருதாணி பூசிய அவளது கரங்களைத் தனது கரத்தால் பற்றிக்கொண்டான்.
“வாழ்த்துக்கள் திருமதி ஆதித்ய கரிகாலன்”
கன்னம் சிவக்க, கண்கள் கனிய அவனது வாழ்த்தை ஏற்றுக்கொண்டாள் நந்தினி.
“இப்பிடியே இருங்க தல! டேய் மகேஷ்! இந்த போஸ்ல ஒரு போட்டோ எடு”
தருண் சொல்ல, பவித்ரா நந்தினியின் நெற்றிச்சுட்டியைச் சரிசெய்துவிட ஆதித்யனின் பெரிய கரங்களுக்குள் தனது கைகளைப் பொதிந்துகொண்ட நந்தினியின் விழிகள் அவனது விழிகளுடன் கலந்தன.
பெண்ணவளின் கண்களில் தெரிந்த காதலை முதல் பார்வையிலேயே தனது இருதயப்பூவில் கண்டுகொண்ட நமது ஆதித்ய கரிகாலன் தனது நெற்றியை அவளது நெற்றியோடு முட்டிக்கொள்ள அந்தத் தருணம் அழகானப் புகைப்படமாகப் பதிவானது.
திருமணத்தில் இணைந்த ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இதயங்களில் காதல் மலர்ந்து மணம் வீசட்டும்! சம்சார சங்கீதம் இனிதே அவர்கள் வாழ்வில் இசைக்கட்டும்!
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


