“தனது ஆசைகள், சுயவிருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தி வெல்லக் கூடிய ஒருவரே நன்முறையில் பாரபட்சமற்ற ஆட்சியைத் தரத் தகுதியானவர்”
-சாணக்கியர்
சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மரணமும் அருள்மொழியின் அரசியல் பிரவேசமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து அரசியலில் பரபரப்பு அலைகளை உண்டாக்கியது.
சுந்தரமூர்த்தியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் அவரது தீவிரத் தொண்டர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நடந்தேறியது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இம்மாதிரி துக்கச் சம்பவங்கள் அதிகமாக நடந்துவிட ஆளுங்கட்சியின் குற்றசாட்டு மழையில் நனையத் துவங்கியது த.மு.க கட்சி.
அதிலும் சூழ்நிலையைக் கையாளத் தெரியாத தலைமை என யாழினி மற்றும் ராமமூர்த்தி மீது பகிரங்க குற்றசாட்டு வைக்கப்பட கட்சிக்குள் மெதுவாய் அதிருப்தி அலை பரவ ஆரம்பித்தது.
யாழினி இது குறித்து கட்சியின் உயர்மட்டக்குழுவை கூட்டி விவாதித்ததில் தீர்வு காணப்படாத நிலையில் இந்தியன் பொலிட்டல் கவுன்சிலுடன் அவர்களது சந்திப்பு உறுதியானது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தேர்தலுக்கான ஸ்லோகன் மற்றும் கேம்பெய்ன் சாங்கை அவர்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அந்தச் சந்திப்பு ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்தில் வானதியின் தலைமையில் நடக்கவிருந்தது.
அதில் பங்கேற்க அருள்மொழியையும் யாழினியுடன் அனுப்ப எண்ணினான் அகத்தியன். கூடவே ராமமூர்த்தியையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க சொல்வும் அதை கேட்ட யாழினியோ
“பூனைய பக்கத்துல வச்சுக்கிட்டே சகுனம் பாக்க சொல்லுறிங்களே” என்று பொருமினாள்.
“அவரைத் தவிர மத்த எல்லாரும் முட்டாள்னு நினைக்கிறார்ல, அவருக்கு நீங்க எல்லாரும் எவ்ளோ ஸ்மார்ட்னு தெரியணும் யாழி.. அதோட நீங்க அவரை விட்டுட்டுப் போனிங்கனா அத வச்சு பிரச்சனைய கிளப்புவார் மனுசன்… முதல்ல ஐ.பி.சி மீட்டிங் முடியட்டும்… அதுக்கப்புறம் கையில இருக்குற பிரச்சனைய கவனிக்கலாம்” என்றான் அகத்தியன்.
அவன் எதையும் யோசித்துத் தான் செய்வான் என்பதால் யாழினியும் ராமமூர்த்திக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவள் மிகவும் சிரமப்பட்டது அருள்மொழியைச் சம்மதிக்க வைக்க தான்.
“எலக்சனுக்கு முழுசா ஆறு மாசம் இருக்கு அக்கா… அதுக்குள்ள ஏன் என்னை கிரேட் லீடர்னு புரொஜக்ட் பண்ண நினைக்கிறீங்க? எனக்கு பிசினஸ்ல ஆயிரம் ப்ராப்ளம் இருக்கு.. அத விட்டுட்டு யூஸ்லெஸ் பாலிடிக்ஸ் அண்ட் அந்த சோ கால்ட் ஐ.பி.சியோட புரொபகேண்டால என்னால கால் வைக்க முடியாது” என யோசிக்காமல் மறுப்பு தெரிவித்தவனுக்கு இருந்த முக்கியக் கவலை தந்தை மற்றும் தமையனின் இழப்பால் துவண்ட தாயாரை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருவது தான்!
அதை தவிர வேறேதையும் சிந்திக்காதவனை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தினால் எரிச்சல் தானே கொள்வான்! அவனைச் சமாளிக்க மீனாட்சியால் மட்டுமே முடியும் என்பதால் அகத்தியன் நேரே அவரிடமே போய் நின்றான்.
“இப்ப நீங்க இருக்குற நிலமைல உங்க கிட்ட இத சொல்லுறது மனசாட்சியில்லாத காரியம் தான் அத்தை.. ஆனா தலைமை இல்லாம தள்ளாடுற கட்சிய மறுபடியும் ஸ்ட்ராங் ஆக்குறதுக்கு எனக்கு வேற வழி தெரியல… என்னால யாழி கட்சிய நினைச்சு கவலைப்படுறத பாத்துட்டுச் சும்மா இருக்க முடியாது… மாமா ஆதியோட இழப்பு உங்களுக்கு எவ்ளோ வலிக்கும்னு எனக்குப் புரியுது… ஆனா இப்ப நீங்க மாமாவோட கனவை பத்தி யோசிக்கணும்… அவர் ஆதிய நாற்காலில உக்கார வைக்கணும்னு ஆசைப்பட்டார்… ஆனா அது நடக்கல… இப்ப அருளை அங்க உக்கார வைக்கணும்னு யாழி நினைக்கிறா… அது தான் அப்பாவோட ஆசைக்குத் தான் செய்யுற நியாயம்ங்கிறது அவளோட ஒபீனியன்… அருள் உங்கள நினைச்சு தயங்குறான்… நீங்க இந்த மாதிரி நிலமைல இருக்குறப்ப அரசியல்ல மூழ்குனா அது தப்புனு அவன் மனசுல யாரோ உருவேத்தி விட்டுருக்காங்க.. நீங்க மட்டும் தான் அவனை சமாளிச்சு அரசியல்ல இறங்க வைக்க முடியும்”
மீனாட்சியும் அதன் பிற்பாடு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அது அவரது தந்தை உருவாக்கி வளர்த்து சுந்தரமூர்த்தியிடம் கொடுத்த கட்சி. அதன் இன்றைய தள்ளாட்டத்தை மகளோடு சேர்ந்து மருமகனும் எந்தளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்பதை அறியாதவரா அவர்!
இருவரும் குழந்தைகளோடு நேரம் செலவளிக்காது கட்சி அரசியல் என மூழ்கி கிடக்கையில் தான் மட்டும் துக்கத்தை தூக்கிச் சுமந்து அவர்களுக்குச் சுமையாய் இருக்க வேண்டாமென புரிந்து கொண்டவர் அருள்மொழியிடம் முழு நேர அரசியலில் இறங்குமாறு வேண்டினார்.
“உங்களை இப்பிடி ஒரு நிலமைல விட்டுட்டு என்னால பாலிடிக்ஸ்ல இறங்க முடியாதும்மா” என்று நிர்தாட்சணியமாக மறுத்தவனை சமாளிக்க அவர் பகீரத பிரயத்தனம் செய்தார்.
“எனக்கு என்னடா? உங்கப்பாவும் ஆதியும் போனாலும் நீ, யாழி, மாப்பிள்ளை எல்லாரும் துணையா இருக்கீங்க… என்ன தான் ராமமூர்த்தி சரியில்லனாலும் அப்பப்ப வருணாவும் வந்து பாத்துக்கிறா… அது போக பேரப்புள்ளைங்க வேற இருக்காங்க… அவங்க சிரிப்பை பாத்து நான் என் துக்கத்த மறந்துடுவேன் கண்ணா… ஆனா என்னைக் காரணம் காட்டி நீ இப்ப கட்சிய அம்போனு விட்டுட்டனா அது நம்ம கையை விட்டுப் போயிடும்டா… உங்கப்பாவோட இறப்பால துக்கம் தாங்காம தஞ்சாவூர்ல செத்துப் போன ஆளுங்களோட குடும்பத்துக்கு எதாச்சும் செய்யணும்னா அதுக்கு நீ அதிகாரத்துல இருக்கணும் அருள்… எனக்கு அரசியல் பத்தி அறிவில்லடா… ஆனா யாழியும் மாப்பிள்ளையும் அதுலயே ஊறிப் போனவங்க… அவங்க சொன்னா சரியா தான் இருக்கும்”
“பட் நீங்க…”
“நீ என்னை நினைச்சு கவலைப்படுற மாதிரி யாழினியும் அவளோட புள்ளைங்களை நினைச்சு கவலைப்பட்டு வீட்டுல வந்து உக்காந்துட்டா கட்சி காணாம போயிடும் அருள்… கொஞ்சம் விசாலமா யோசி கண்ணா”
அவருடன் நிகழ்ந்த நீண்ட உரையாடலுக்குப் பிறகு அரைமனதாகச் சம்மதித்தான் அருள்மொழி.
அவனும் தங்களுடன் வரப் போவதாக ராமமூர்த்தியிடம் கூறிய போது அவரது முகம் போன போக்கை வைத்தே மீனாட்சியைக் காரணம் காட்டி அருள்மொழியின் மனதைக் குழப்பியது யாரென்ற கேள்விக்கு விடை கண்டுவிட்டாள் யாழினி.
இந்த மனிதர் சுந்தரமூர்த்தியின் மகளிடம் சித்து விளையாட்டு விளையாடி பார்க்கிறாரா என எள்ளலுடன் எண்ணிக்கொண்டவள் மறுநாள் அவரும் அருள்மொழியும் உடன் வர ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்தை அடைந்தாள்.
காத்திருப்பிற்கு அவசியமின்றி அங்கே சந்திப்புக்கான ஏற்பாடுகள் கச்சிதமாகச் செய்யப்பட்டிருக்க மூவரும் மீட்டிங் அறையில் சென்று அமர்ந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஊடக தகவல் பிரிவினருடன் அங்கே பிரசன்னமானாள் வானதி. அவர்களுக்கு மரியாதை நிமித்தம் வணக்கம் கூறியவளின் கண்கள் ஒரு வினாடி நேரம் ஓரிடத்தில் நிலைத்தது. பின்னர் சுதாரித்து நடுநாயகமாய் கிடந்த இருக்கையில் அமர்ந்தவள் பிரசெண்டேசன் வாயிலாக விவரங்களை அளிக்கும்படி குழுவினருக்குக் கட்டளையிட தேர்தல் குறித்த பாடலை காண்பதிலும் ஸ்லோகன் குறித்து விவாதிப்பதிலும் நேரம் கடந்தது.

யாழினி அதை பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியவள் “இதுல ஃபுல்லா அப்பாவும் ஆதியும் மட்டும் தான் வர்றாங்க… நான் என்ன நினைக்கேன்னா அருளை வச்சு இதே சாங்கை ரெடி பண்ணுனா அவன் மக்கள் கிட்ட ரீச் ஆகுறது சுலபமா இருக்கும்” என்று கூற
“ஐ திங் சோ மேம்… பட் உங்க ஃபாதரும் ப்ரதரும் ரூலிங் பார்ட்டியோட குறைகளை தட்டிக் கேட்டு நிறைய நடைபயணம், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் குறைகேட்பு கூட்டங்கள்ல கலந்துக்கிட்டாங்க… அருள் சாரை நம்ம புரொஜக்ட் பண்ணணும்னா ஹீ ஆல்சோ ஹேவ் டு டூ த சேம்!” என்று வானதி தோளைக் குலுக்க இடையில் புகுந்தார் ராமமூர்த்தி.
“அருள் ஏ.சில பிறந்து வளந்த பையன்… அவனால இப்பிடி நடைபயணம் போகமுடியுமா? யாழினிமா நான் சொல்லுறத கேளு, இந்த மாதிரி கம்பெனிக்காரங்க துணையில்லாம எத்தனை தடவை நம்ம கட்சி ஆட்சிய பிடிச்சுதுனு எனக்குத் தெரியும்.. இது தமிழ்நாடு… இங்க எலக்சன்னா மக்களோட நியாபகத்துக்கு வர்றது பொதுமேடைல கம்பீரமா முழங்குற தலைவர்களும், வீதி வீதியா போய் ஓட்டுக் கேக்குற வேட்பாளர்களும் தான்… இவங்க சொல்லுற டிஜிட்டல் கேம்பெய்ன்லாம் நமக்குச் சரிபட்டு வராது”
வானதி அவரைக் கூர்ந்து கவனித்தவள் இறுகிய முகத்தை யாரும் கண்டுகொள்ளும் முன்னர் சரி செய்து கொண்டாள். சிரித்தபடியே ராமமூர்த்தியை நோக்கியவள்
“நீங்க சொல்லுறதுலாம் சரி தான் சார்… இப்போ நாங்க யாரும் பொதுக்கூட்டத்தையோ, வீதி வீதியா போய் ஓட்டு சேகரிக்கிறதயோ வேண்டாம்னு சொல்லலையே! அது ஃபீல்ட் லெவல்ல நடக்குற கேம்பெய்ன் ப்ளான்னா இது டிஜிட்டல் கேம்பெய்ன்… யங்ஸ்டர்ஸ் கிட்ட உங்க கட்சியோட யூத் லீடர் போய் சேரணும்னா அதுக்கு இது தான் வழி… இத பத்தி ஆதி சாருக்கு நல்ல ஐடியா இருந்துச்சு… இன் ஃபேக்ட் அவரோட பீரியட்ல தானே உங்க கட்சியோட ஐ.டி.விங் ஸ்ட்ராங் ஆச்சு… காலம் மாறுறதுக்கு ஏத்த மாதிரி நம்மளும் நம்ம வழிமுறைகளை மாத்திக்கணும் சார்… சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்னு டார்வினோட தியரி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதாவது காலமாற்றத்துக்கு ஏத்த மாதிரி வாழுறதுக்குத் தன்னை தகுதிப்படுத்துக்குற உயிரினம் தான் பூமில தொடர்ந்து வாழ முடியுமாம்… லைக்வைஸ், பாலிடிக்ஸ்ல நிலைச்சு நிக்கணும்னா கால ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி வர்ற மாற்றங்களை ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும்” என்று அழுத்தமும் தெளிவுமாகப் பதியவைத்தாள்.
யாழினி அதை ஆமோதிக்க வானதியே தொடர்ந்தாள்.
“இப்போ மிஸ்டர் சுந்தரமூர்த்தியோட டெத் ஏற்படுத்துன வேகண்ட் ஸ்பேச் மறையணும்னா அவரை போலவே ஸ்ட்ராங்கான லீடரா நம்ம ஒருத்தரை புரொஜக்ட் பண்ணணும்… நீங்க எல்லாருமா மிஸ்டர் அருள்மொழிய செலக்ட் பண்ணிருக்கீங்க… அப்ப நம்மளோட அப்கமிங் எலக்சன் ஸ்ட்ராடஜி எல்லாமே அவரை செண்டர் பாயிண்டா வச்சு தான் நகரணும்… எலக்சன் சாங்கை ரீ-ஷூட் பண்ணிடலாம்… அதுக்கு முன்னாடி மிஸ்டர் அருள்மொழி மக்களை நேர்ல போய் சந்திக்கணும்… அவர் மீட் பண்ணுறப்பவே எங்க ஃபீல்ட் டீம் அத ஷூட் பண்ணிடுவாங்க… அப்புறம் எந்தெந்த மாவட்டத்துல எந்தெந்த பிரச்சனைனு லிஸ்ட் அவுட் போட்டு வச்சிருக்கோம்… அது சம்பந்தமா அந்தந்த டிஸ்ட்ரிக்ட்ல பெரியளவுல பொதுக்கூட்டம் போடுறது மூலமா ரூலிங் பார்ட்டியோட குறைகள மக்கள் மனசுல பதிய வைக்கணும்… இந்தப் ப்ளான்ஸ் எல்லாமே சக்சஸ் ஆகுறது மிஸ்டர் அருள்மொழியோட கையில தான் இருக்கு”
வந்ததிலிருந்து யாருக்கு வந்த விருந்தோ என நடப்பவற்றை அசுவாரசியத்துடன் வேடிக்கை பார்த்த அருள்மொழியின் கண்கள் வானதியின் இந்த நீண்ட விளக்கத்தில் ஒரு கணம் பளிச்சிட்டது.
ஏன் இவளது கருத்தை தான் ஏற்றுக்கொள்ள கூடாது? அவனுக்கு எப்போதுமே புதிய புதிய களங்களில் இறங்கி ஜெயிப்பது பிடித்த விசயம் தான்! அப்படி இறங்கியது தான் மாதச் சஞ்சிகைகள் பதிப்பு மற்றும் ஐ.பி.எல் அணியை விலைக்கு வாங்கியது எல்லாம்!
ஏன் அரசியலை மட்டும் மிச்சம் வைக்க வேண்டும் என அவனது மூளை அவனிடம் கேட்டு வைத்தது.
“ரொட்டீன் ஒர்க்ஸ் போரடிக்கலயா அருள்? டூ சம்திங் த்ரில்… டூ சம் அட்வென்சர் மேன்”
மனமும் அது பாட்டுக்குச் சீண்டிவிட அருள்மொழியின் தலை ஆமோதிப்பாய் அசைந்தது. ராமமூர்த்திக்கு அதைக் கண்டதும் சுரீர் என்று இருந்தது.
இப்படியே போனால் இந்தப் பையன் களத்தில் இறங்கிவிடுவான் போல என்று பரிதவித்தவரின் விழிகள் வானதியை யோசனையுடன் உறுத்து நோக்கியது.
அவள் பார்வை தன் புறம் திரும்பவும் இறுகிய உதடுகளில் சிரிப்பை அணிந்தவர்
“இந்தச் சின்ன வயசுல அரசியலை இவ்ளோ ஆழமா புரிஞ்சு வச்சிருக்கியே, உன் நேம் என்னம்மா?” என்று வினவ
“வானதி மகேந்திரன்” என்று நறுக்கு தெறித்தாற் போல பதிலளித்தாள் அவள்.
“ஓ! நல்ல பேர்மா… அப்புறம் சொந்த ஊர்?” என்று இழுத்தவரிடம்
“மதுரை மேலூர்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் அவள்.
‘மதுரை மேலூர், மகேந்திரன்’
இந்த இரண்டு சொற்களையும் இணைத்துப் பார்த்த ராமமூர்த்தி யோசனைவயப்பட்டவராய் எழுந்தார்.
அவரை கேள்வியோடு ஏறிட்ட யாழினியிடம் “எனக்கு இவங்க சொன்ன ப்ளான் எல்லாம் ஓகே தான் யாழிம்மா… நீ பாத்து எது பண்ணுனாலும் இந்தச் சித்தப்பா உனக்குத் துணையா இருப்பேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற யாழினியும் அருள்மொழியும் தேர்தல் திட்டமிடுதல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது, அருள்மொழி தந்தையின் இறப்பால் மனமுடைந்து தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தைக் காண தஞ்சாவூர் செல்வதாக சொல்லும் வரை!
அதை அவன் சொன்னதும் வானதியின் முகம் பளிச்சிட்டது.
“வாவ்! இத விட பெஸ்ட் ஆப்பர்சூனிட்டி நமக்கு கிடைக்காது… நீங்க மட்டும் சம்பந்தப்பட்டவங்க ஃபேமிலிக்கு ஆறுதல் சொல்லுறத வீடியோவா ஷூட் பண்ணி பேக்ரவுண்ட்ல இந்த சாங்கை கனெக்ட் பண்ணிட்டா சிம்பதிக்காகவே ஓட்டு விழும்” என்றாள் அவள் உற்சாகமாக.
சொன்னதோடு அவனது தஞ்சாவூர் பயணத்தில் அவனுடன் இருக்க வேண்டிய ஃபீல்ட் வேலையாட்களுக்குக் கட்டளையிடும் படி நிதர்சனாவிடம் கூறியவளை எரிச்சலுடன் நோக்கினான் அருள்மொழி. யாழினிக்கும் அடுத்தவரின் இழப்பில் ஆதாயம் தேடுவதா என்ற எண்ணம்!
வானதியோ அதை கண்டுகொள்ளாது கட்டளையிட்டு அனைவரையும் அனுப்பி வைக்க அவர்கள் சென்றதும் கடுப்புடன் அவளிடம் பேச ஆரம்பித்தான் அருள்மொழி.
“லிசன் நான் மட்டும் தான் தஞ்சாவூருக்குப் போகப் போறேன்… அங்க உன்னோட டீம் யாரும் வரக்கூடாது… ஷூட்டிங்கும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது… உன்னோட இந்த ஐடியா எனக்குச் சுத்தமா பிடிக்கல”
யாழினி தனது கருத்தும் அது தான் என்பது போல அமைதி காக்க வானதி அவர்களை விசித்திரமாக நோக்கினாள்.
“புரியாம பேசாதீங்க அருள்மொழி சார்… நீங்க மட்டும் கால்நடையா நடந்தே போய் பாதிக்கப்பட்டவங்கள சந்திச்சு அவங்களுக்கு ஆறுதல் சொன்னிங்கனா அது உங்க மேல மக்களோட பார்வைய திருப்பும்… பெரிய பணக்கார வீட்டுல வளந்தவர் நமக்காக குடிசைக்கு வர்றார்னு மக்கள் உங்கள நினைச்சு பூரிக்கிற அளவுக்கு நாங்க அத அவங்க கிட்ட கொண்டு போய் சேர்ப்போம்”
அருள்மொழிக்கு இதை ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை இறுக மூடித் திறந்தவன்
“இப்ப தான் என் அப்பாவ அண்ணனை இழந்து நிக்குறேன்… இதே மாதிரி தானே அவங்களுக்கும் வலிக்கும்… அந்த வலிய வச்சு ஆதாயம் தேடச் சொல்லுற… உனக்கு அவங்க வேதனை புரியலயா?”
வானதி அவனை மீண்டும் விசித்திரமாக நோக்கியவள் “என்ன வலி, என்ன வேதனை… எதை பத்தியும் எனக்குக் கவலை இல்ல… எனக்கு வேண்டியது எல்லாமே நாங்க ப்ளான் பண்ணுனபடி உங்களை மக்கள் மத்தில ஒரு தலைவர் பிம்பமா உருவாக்குறது மட்டும் தான்… அதுக்காக நான் சில ஸ்ட்ராடஜி யூஸ் பண்ணுறேன்… இதுல எந்த தப்பும் இருக்குறதா எனக்குத் தோணல… அண்ட் ஒன் மோர் திங், அடுத்தவங்க வலிய என்னோட வலியா பாத்ததுலாம் ஒரு காலம்… இப்ப அப்பிடி இல்ல” என்று இறுதியாய் உறுதியாய் கூற யாழினி இருவருக்கும் நடக்கும் சொற்போரை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருள்மொழி நம்ப முடியாதவனாய் அவளை நோக்கியவன் “நீ நிறைய மாறிட்ட வானதி… நான் காலேஜ்ல பாத்த வானதி இல்ல நீ” என்று சொல்லிவிட்டு எழுந்து அந்த அறையை விட்டு விறுவிறுவென வெளியேறிச் சென்றுவிட்டான்.
யாழினி தம்பியின் பேச்சில் குழப்பம் அதிகமாகவும் வானதியை நோக்க அவளோ “தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கிட்ட எங்க டீமுக்கு ஒத்துழைப்பு குடுக்கணும்னு இன்ஃபார்ம் பண்ணிடுங்க மேம்… எல்லாமே ப்ரீ-ப்ளான்டா இருந்தா தான் டைமுக்கு வேலை முடியும்” என்றாள் சிரிப்புடன்.
யாழினி தலையசைப்புடன் எழுந்தவள் குழப்பம் தீராது விடைபெற அவள் சென்றதும் சுழல்நாற்காலியில் சாய்ந்து கொண்டாள் வானதி.
நீண்ட நெடும் பெருமூச்சொன்றை வெளியிட்டவள் கண்களை இறுக மூடிக்கொள்ள “இவனுக்கு என்ன தகுதி இருக்குனு என்னை எதிர்த்து சி.பி.எல் எலக்சன்ல நிக்குறான்? இவனே ஒரு வேஸ்ட் லக்கேஜ்… நீ என்ன இவனுக்குக் கூஜாவா?” என்று தன்னை நோக்கி எகத்தாளமாய் கேட்ட அருள்மொழியும் அவனுக்குச் சவால் விடுவது போல முறைத்துக் கொண்டு நின்ற அவளும் தான் வானதியின் மனத்திரையில் வந்து சென்றனர்.
தலையை உலுக்கி அதிலிருந்து விடுபட்டவள் “யெஸ்! நான் ரொம்ப மாறிட்டேன்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
எந்தவொரு மாற்றமும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அதே போல எந்தவொரு மாற்றமும் காரணமில்லாமல் ஏற்படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் மாற்றம் ஏற்பட காரணகர்த்தாவாக அமைவது வாழ்வில் ஒருவர் எதிர்கொள்ளும் சோதனைகளே! அத்தகைய சோதனைகள் பல நேரங்களில் அவர்களை வாழ்வின் விளிம்பு வரை எடுத்துச் சென்றுவிடுவதால் தான் மனிதர்களின் குணம் முழுவதுமாக மாறிவிடுகிறது. வானதி அடைந்த இம்மாற்றத்திற்கான காரணி எதுவென அருள்மொழி அறிய மாட்டான் அல்லவா!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!