குடும்பம் சார்ந்த பிரச்சனைகளில் பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஆண்களுமே மனரீதியானப் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்களின் மன அழுத்தத்தைப் பிரச்சனைக்குரிய சூழலில் இருந்து தப்பிப்பதன் மூலம் வெளிப்படுத்துவார்கள். சில நேரங்களில் தங்களது மனவுணர்வுகளை மறைத்துக்கொண்டு நடமாடுவார்கள். இதெல்லாம் உலகத்தின் பார்வையில் ‘ஆண் என்றால் சந்தர்ப்பவாதி’ என்ற தோற்றத்தை உருவாக்கிவிடும்.
-பூபாலன்
சங்கரியின் தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்து அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். கட்டாயம் ஆறு மாதங்களுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.
அவரது உடல் தேறுவதற்கு காலம் எடுக்கும் என்பதால் அதிகவேலைகள் எதையும் செய்யவைக்கக்கூடாதெனக் குறிப்பிட்டுக் கூறினார்.
சங்கரியின் உடல் எடையும் மளமளவெனக் குறைந்து போயிருந்தது சமீப நாட்களில்.
வீட்டுக்கு வந்ததும் ஆதுரமாகக் குணசேகரன் நலம் விசாரிப்பார் என்ற சிறு நம்பிக்கை அவரிடமிருந்தது. ஆனால் எந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதுதான் மிச்சம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வந்துட்டியா? ஹூம்! மகராசி ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்திருப்ப. இங்க வீட்டுல போட்டது போட்டபடி கிடக்குது. போய் அதெல்லாம் பாரு” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தார் அவர்.
அதே தினம் மாமியாரைப் பார்க்க கணவனோடு வந்த ப்ரீத்தியின் கண்களில் இக்காட்சி பட்டுத் தொலைத்துவிட்டது.
மணிவண்ணனும் பூபாலனும் வழக்கம்போல தந்தையிடம் நிலமையை எடுத்துச் சொல்லிப் புரியவைக்காமல் அமைதியாய் நிற்பதை எரிச்சலோடு பார்த்தாள் அவள்.
“அவங்களை டாக்டர் வேலை செய்யக்கூடாதுனு சொன்னதை இன்னும் மாமா கிட்ட சொல்லாம இருக்கிறது நல்லதில்ல கொழுந்தனாரே! என்ன சொல்லிட்டுப் போனாருனு கவனிச்சிங்கல்ல?”

“இது எங்க வீட்டுச் சமாச்சாரம். நான் பாத்துக்குறேன் மதினி” என்று சொல்லி அவளது வாயைப் பூபாலன் அடைத்துவிட்டான். ஆனால் தந்தையிடம் சொல்ல அவனுக்குத் தயக்கமே!
வீட்டில் சங்கரிக்குத் தனி அறை கொடுக்கவேண்டுமென மருத்துவர் கூறியிருந்தார். தனது அறையில் அன்னையின் உடைமைகளை முந்தைய தினமே கொண்டு வந்து வைத்துவிட்டான்.
அதற்கெல்லாம் குணசேகரன் எதுவும் சொல்லவில்லை. தன்னோடு ஒரே அறையில் இருந்தால் அவரது நோய் தனக்குத் தொற்றிக்கொள்ளும் என்ற எண்ணம். தனியே இருந்தால் நல்லதுதான் என்று அமைதியாகிப்போனார்.
சங்கரி அந்த அறைக்குள் போய் முடங்கிக்கொண்டார். வெளியே நடக்கிற உரையாடல்கள் அவரது காதில் விழாமல் இல்லை. இத்தனை ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் சின்னதாய் ஒரு அக்கறை, ஆதுரமானப் பேச்சு இதெல்லாம் குணசேகரனிடமிருந்து அவருக்குக் கிடைத்ததேயில்லை. மனைவியிடம் அன்பை வெளிப்படையாகக் காட்டுவது ஆண்பிள்ளைத்தனமில்லை என்ற குணசேகரனின் எண்ணம் அதற்கு ஒரு காரணம்.
மனைவிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்யும் அளவுக்கு அவரது சூழலும் இல்லை. குடும்பத்துக்காக ஓடியவர் அவர். பழமைவாதம், பிடிவாதம் என ஆயிரம் குறைகள் சொன்னாலும் குடும்பத்தின் தேவைக்கென உழைத்து ஓய்ந்தவர் என்பதில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.
தனக்கெனத் தனியே எந்தச் சேமிப்பும் வைத்துக்கொள்ளாமல் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் தேவை, வீட்டுச்செலவு என மொத்தச் சம்பாத்தியத்தையும் குடும்பத்துக்கே கொட்டியவர்.
வெளியிடங்களில் சாப்பிட்டால் செலவாகுமே என்று வீட்டுச்சாப்பாட்டோடு நின்று கொள்வார். மொத்தமாகக் கெட்டவர் என்று சொல்லிவிட முடியாத, கடமைகளாலும், பொறுப்புகளாலும் உணர்வுகளைக் காட்ட மறந்து போய் உழைத்துக் கொட்டிய சராசரி நடுத்தரக் குடும்பத்து தலைவர் அவர்.
ஒரேயடியாக அவரைக் குற்றம் சாட்டவும் சங்கரிக்கு மனமில்லை. அவர் என்ன கடிந்துகொண்டாலும் பொறுத்துப்போவது எந்தக் கட்டாயத்தின் காரணமாகவும் இல்லை. கடிந்துகொள்வது புருசனின் குணம், மனைவியானவள் அதைப் பொறுத்து, தனது தேவைகளைச் சுருக்கிக் குடும்பத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டத் தலைமுறையைச் சேர்ந்தவர்.
இந்த உறுதி, தெம்பு எல்லாம் இளமைக்காலத்தில், நோய் நொடியற்று வாழ்ந்த நாட்களில் உயிர்ப்போடு இருந்தன. இப்போது வந்திருப்பது கிட்டத்தட்ட பாடாய்ப்படுத்தி உருக்குலைக்கும் நோய். இச்சமயத்தில் கணவர் கொஞ்சம் கனிவாய் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு சங்கரிக்குள் எழுந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் பதிலாய்க் கிடைத்ததும் அவரால் ஏற்க முடியவில்லை.

“இந்தப் பிறவில எனக்கு வாய்ச்ச வாழ்க்கை இதுதான். வெந்தததைத் தின்னுட்டு விதி வந்தா செத்துத் தொலைஞ்சிடணும்” என மனதுக்குள் குமுறியவரின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வார்கள்?
மணிவண்ணனும் ப்ரீத்தியும் போய்விட்டார்கள். பூபாலன் மெதுவாகத் தந்தையிடம் அன்னையின் நிலையைப் பற்றி கூறினான்.
“இந்த நேரத்துல அவங்க அதிகமா வேலை செய்யக்கூடாதுப்பா. நீங்க கொஞ்சம் அவங்க கிட்ட ஆறுதலா பேசி இருங்க. சாப்பாட்டுக்கு மெஸ் இருக்கு. வீட்டை நான் கவனிச்சிக்கிறேன்” என்று விளக்கிப் புரியவைக்க முயன்றான்.
“எல்லாம் சரிதான். அவ கிட்ட நான் என்ன பேசுறது?”
தந்தையின் இக்கேள்வியில் திகைப்பு மட்டுமே மிஞ்சியது அவனுக்கு.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சாதாரணமான உரையாடல்கள் கூட அனாவசியமாக மாறிப்போகும் ஒரு கட்டத்தில் என்ற நிதர்சனம் அவனது முகத்தில் அறைந்தது.
எல்லா நிதர்சனங்களையும் ஏற்றாகவேண்டும் எனக் கட்டாயம் இல்லைதானே! கொஞ்சம் மாற்ற முயற்சிக்கலாமே!
“இங்க பாரு பாலு! நான் அந்தக் காலத்துலயே அனாவசியமா உங்கம்மா கிட்ட பேச்சு வச்சுக்கமாட்டேன். எல்லாத்தையும் பொம்பளைங்க கிட்ட சொல்லிட்டா அவங்க பிறந்தவீட்டுல சொல்லிடுவாங்கய்யா. ஆம்பளை நமக்கு ஆயிரம் தலைவலி இருக்கும். அதெல்லாம் சொன்னா கூட இவங்களுக்குப் புரியாது. நம்ம வேலைய பத்தி இவங்க கிட்ட சொன்னாலும் என்ன புரியப்போகுதுனு நான் அவ கிட்ட பேசுனதில்ல. எனக்குப் பாசத்தைக் கொட்டுறேன்னு பம்மாத்து பண்ணவும் தெரியாது” என்று சொல்லிவிட்டுப் போனவரை எந்தக் கணக்கில் சேர்ப்பதென அவனுக்குத் தெரியவில்லை.
அன்பும், அன்னியோன்யமும் இளமைக்காலத்தில் மட்டும் கணவன் மனைவிக்குள் உயிர்ப்போடு இருந்தால் போதுமா? அப்படி என்றால் மிச்சமீதி நாட்கள் வெறுமையுடன் கழியுமா? ஒரு இயல்பான உரையாடல், ஒன்றாய் சேர்ந்து பொடிநடையாய் அருகிலிருக்கும் கோவிலுக்குப் போய்வருவது இப்படி கூட அன்னியோன்யத்தை வளர்த்துகொள்ளலாமே வயோதிகத்தில்!
அன்பைக் காட்டத் தெரியாதத் தந்தையை எண்ணி அவனுக்குப் பரிதாபம் பிறந்தது. அன்னை பாவம்தான் என்று தோன்றியது.
இருவருக்கும் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு அவனும் சாப்பிட்டு ஸ்டூடியோவுக்குக் கிளம்பவே நேரம் சரியாக இருந்தது.
அன்றைய தினம் அவனுக்கு ஒரு ‘ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்’ இருந்தது. அதற்காக அவனும் பிரபுவும் இலஞ்சியில் இருக்கும் மணமக்களின் உறவினருக்குச் சொந்தமான சாமந்திப்பூக்கள் பயிரிடப்பட்ட தோட்டத்திற்கு சென்று போட்டோஷூட் செய்வதாக ஏற்பாடு.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உபயத்தால் ‘நோ மேக்கப்’ மேக்கப் லுக்கில் மணமகள் – மணமகன் தயாராக இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த போஸ்களில் எல்லாம் போட்டோஷூட்டை முடித்த பிற்பாடு தங்கள் உறவினர் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தார்கள்.
சாப்பிட்டு முடித்துக் கிளம்பிய தருவாயில் வான்மதியிடமிருந்து அழைப்பு வந்தது.
முந்தைய தினம் சங்கரியின் டிஸ்சார்ஜ் பற்றி அவளிடம் வாட்சப்பில் பேசியிருந்தான் பூபாலன். வீட்டின் சூழல் எவ்வாறு இருக்கிறதென அவனிடம் விசாரிக்க அழைத்திருந்தாள்.
அழைப்பை ஏற்றவன் அசுவாரசியத்துடன் பேசவும் எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டாள் வான்மதி.
“அப்பாவோட அக்கறைக்காக அம்மா ஏங்குறாங்க. அவரைப் பத்தி உனக்குத் தெரியுமே! அன்பை வெளிப்படையாக் காட்டத் தெரியாது அவருக்கு”
“அன்பை வெளிப்படையாக் காட்டுறது ஆணோட பலவீனம்னு நினைக்குறவர் உங்கப்பா. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு பாலா” எனத் திருத்தினாள் வான்மதி.
“ம்ம்! அதுவும் சரிதான். ஓ.கே! நீ உன் வேலைய கவனி”
அவன் அழைப்பைத் துண்டித்துச் சில நிமிடங்களில் வேறொரு எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. முன்பின் தெரியாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால் அத்துணை சீக்கிரம் அவள் அழைப்பை ஏற்பதில்லை.
தனது வேலைகளே தலைக்கு மேல் இருக்கவும் அந்த அழைப்பை அன்றைய தினம் மறந்தே போனாள் வான்மதி.
வீட்டுக்குச் சென்று உடை மாற்றியதும் மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, இந்த முறை அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள்.
“யார் பேசுறிங்க?”
“ஹலோ வானு!” ப்ரீத்தியின் குரல் கேட்டது மறுமுனையில்.
“சொல்லுங்க அக்கா! சாரி! உங்க நம்பர் என் கிட்ட இல்ல. அதனாலதான் உங்க கால்ஸ் எதையும் நான் அட்டெண்ட் பண்ணல”
“இட்ஸ் ஓ.கே. நான் கால் பண்ணுனது அத்தைய பத்தி சொல்லுறதுக்காக தான்”
“பாலா கிட்ட மதியம் பேசுனப்ப சொன்னார்க்கா”
“அவர் எப்பிடியும் முழுசா உன் கிட்ட எதையும் சொல்லிருக்கமாட்டார். அண்ணனும் தம்பியும் அதுல ஒரே மாதிரி”
“ஏன்கா? அத்தைக்கு எதுவும் பிரச்சனையா?”
குணசேகரன் சங்கரியிடம் நடந்துகொண்ட விதம் பற்றி சொல்லிவிட்டாள் ப்ரீத்தி.
“பாவம் அவங்க. என்னால அவங்களை என் கூட வச்சுக்க முடியாது வானு. அம்மா ஹார்ட் பேஷண்ட். குழந்தை வேற இருக்கான். அவங்களுக்கு ஈசியா டி.பி தொத்திக்கும். கொழுந்தனார் சும்மா வாய்ப்பேச்சு பேசுறாரே தவிர அவங்கப்பாவ அடக்க மாட்டார். அந்தப் பெரிய மனுசி கண்ணீரோட நின்னதை என்னால பாக்க முடியல. உன்னால முடிஞ்சா அவங்களுக்கு உதவி பண்ணு. நான் எங்க வீட்டுல மாடியில வச்சு பாத்துக்கவானு அம்மா கிட்ட கேட்டேன். அவங்க பயப்படுறாங்க. நானே அவங்க கூட தான் இருக்கேன். என்னால அவங்க முடிவைத் தட்டவும் முடியல வானு”
“என் கிட்ட பாலா இதெல்லாம் சொல்லவேல்லக்கா. நான் எங்கப்பா மூலம் ஏதாச்சும் பண்ண முடியுதானு பாக்குறேன்”
அழைப்பைத் துண்டித்தவள் நரேந்திரனிடம் தனக்காகப் பூபாலனின் வீடு வரை சென்று சங்கரியின் நிலமை என்னவென அறிந்து வருமாறு கேட்டுக்கொண்டாள்.
“நீ சொல்லலைனாலும் நான் இந்த வாரம் போய் அவங்க உடம்பு சரியாகிடுச்சானு விசாரிக்கலாம்னு இருந்தேன். நானும் உன் சித்தப்பாவும் நாளைக்கே போய் என்ன நடக்குதுனு பாத்துட்டு வர்றோம்” என்றார் அவர்.
மறுநாள் சொன்னது போல அவர்கள் பூபாலனின் வீட்டிற்கு சென்றபோது குணசேகரன் சங்கரியைக் கோபத்தோடு கடிந்துகொள்வதைக் கேட்க நேர்ந்தது.
“நல்லா தானே இருக்க. சும்மா அந்த ரூமுல போய் படுத்துக்குற. நாளைக்கு வெள்ளிக்கிழமை. வீடு மூதேவி அடைஞ்ச மாதிரி துடைக்காம கிடக்குது. விளக்கு எல்லாம் தேய்ச்சு ஒரு மாமாங்கம் ஆகுது. எதையுமே செய்யாம வீட்டுல பொம்பளைனு ஒருத்தி இருந்து என்ன பிரயோஜனம்?”
தொண்டையைச் செருமிக்கொண்டு நரேந்திரனும் மகேந்திரனும் வீட்டுக்குள் நுழையவும் அவரது பேச்சு நின்றது.
அவர்கள் தன் வீட்டுக்கு வருவார்கள் என அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை போல. அத்துணை அதிர்ச்சி குணசேகரனின் முகத்தில்.
பூபாலனின் அறை வாயிலில் நின்று கொண்டிருந்த சங்கரியின் முகத்தை வேண்டுமானால் மாஸ்க் மறைத்திருக்கலாம். ஆனால் அவரது விழிகளில் ததும்பிய கண்ணீரை எதுவும் மறைக்கவில்லை.
“வாங்க!” குணசேகரன் இருவருக்கும் நாற்காலிகளை எடுத்துப் போட்டார்.
“பாலு மெஸ்சுக்குப் போயிருக்கான். சாப்பாடு வாங்குறதுக்கு. ஹூம்! வீட்டுல பொம்பளைங்களுக்கு நோய் நொடி வந்துடுச்சுனா நமக்கும் நாக்கு செத்துப் போயிடணும்” என்று குறை சொன்னபடி தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

சங்கரியால் அவர்களை வரவேற்க முடியாத நிலை. நோய் நோய் என்று சொல்லி சொல்லி அவருக்கே தன்னால் அனைவரும் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
“இப்ப உடம்பு பரவால்லையா சம்பந்தியம்மா?” மகேந்திரன் விசாரிக்க
“பரவால்லண்ணா! மாத்திரை மருந்து எடுத்துக்கிட்டா சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டார்” என்றார் சங்கரி அழுகையை விழுங்கியபடி.
நரேந்திரன் குணசேகரனிடம் தன்மையாகப் பேச ஆரம்பித்தார்.
“நான் வேணும்னா வீட்டு வேலைய செய்ய ஆள் தேடச் சொல்லட்டுமா சம்பந்தி?”
“வேலையாளுங்க வச்சுக்குற அளவுக்கு நான் வசதி படைச்சவன் இல்லையே சம்பந்தி. வீட்டுல பொம்பளைங்க இருக்குறப்ப எதுக்கு ஆளுங்க வச்சு வேலை பாக்கணும்? அதெல்லாம் வேண்டாம். அந்தச் செலவும் பாலு தலையிலதான் விழும்” என நாசூக்காக மறுத்தார் குணசேகரன்.
பூபாலனின் சம்பாத்தியத்தோடு மணிவண்ணனும் வீட்டுச்செலவுக்குப் பணம் கொடுக்கிறான். இரு மகன்களும் மனது வைத்தால் வேலையாள் ஒருவரை வைத்து வீட்டைக் கவனிக்கலாம். ஆனால் குணசேகரன் ஒத்துகொள்ள வேண்டுமே!
பேச்சு பொதுவாக நகர்ந்தது. மருமகள்களைப் பற்றி சென்றதும் குணசேகரன் பேச்சைத் தவிர்த்துவிட்டார்.
வீட்டைப் பொறுப்பாகக் கவனிக்காமல் இரண்டு மருமகள்களும் சுயநலத்துடன் ஒதுங்கிக்கொண்டார்கள் என்ற எண்ணம் அவருக்கு. நம் வீடு என்ற எண்ணத்தை அவர்களுக்கு வரவிடாதது தன் தவறு என்பதை மட்டும் வசதியாக மறந்து போனார்.
நேரடியாக நரேந்திரனிடம் அவரது மகளைப் பற்றி குறை கூற ஒரு மாதிரியாக இருந்தது. இப்போது பூபாலனும் முன்பு போல் இல்லை என்பதால் அடக்கி வாசித்தார்.
நல்லவேளையாகப் பூபாலனும் சாப்பாட்டு பார்சல்களுடன் வந்துவிட்டான்.
நரேந்திரனையும் மகேந்திரனையும் முகமலர்ச்சியோடு வரவேற்றவன் இருவருக்கும் காபி போடச் செல்ல “அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. சம்பந்தியம்மாவ பாத்து விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தோம். அவங்க உடம்பு சரியாகுற வரைக்கும் வேலைக்கு ஆள் வச்சுக்கலாமேனு சம்பந்தி கிட்ட சொன்னோம். அது சரிபடாதுனு சொல்லுறார்” என்றார் நரேந்திரன்.
பூபாலனும் தந்தையின் கருத்தையே ஆமோதித்தான்.
“குறைஞ்சது ஐந்தாயிரம் சம்பளம் கேப்பாங்க மாமா. அது என் வருமானத்துக்குக் கட்டுப்படி ஆகாது. இருந்த சேமிப்பு எல்லாம் அம்மாவோட ஹாஸ்பிட்டல் செலவுக்குச் சரியா போச்சு. மூனு மாசத்துக்கு முன்னாடி ஸ்டூடியோவ கொஞ்சம் விரிவுபடுத்துனேன். அதுக்கும் செலவு அதிகமாகிடுச்சு. இந்த நிலமைல வீட்டுவேலைக்கு ஆள் வைக்குறது சிரமம்”
இதற்கு மேல் அவர் என்ன சொல்ல முடியும்? மருமகன் போட்டுக் கொடுத்த காபியை அருந்திவிட்டுத் தம்பியுடன் கிளம்பிவிவிட்டார்.
காரில் செல்லும்போதே மகளின் எண்ணுக்கு அழைத்து விபரத்தைக் கூறிவிட்டார்.
“அந்த மனுசனுக்குக் கொஞ்சம் கூட அறிவு கிடையாதுப்பா. இந்த நிலமைல போய் அவங்களை வீடு துடை, விளக்கு தேய்னு சொல்லுறாரா?” என வெடித்தாள் வான்மதி.

“ப்ச்! அவர் அந்தக் காலத்து மனுசங்க மாதிரி யோசிக்குறார் வானுமா. அதுக்காகப் பெரியவங்களை இப்பிடி பேசக்கூடாது”
“நீங்களும் அவரோட ஜெனரேசன்தானே! நீங்களும் சித்தப்பாவும் இப்பிடியா நடந்துக்குறிங்க? என்னமோ போங்கப்பா. எனக்கு அத்தைய நினைச்சா பாவமா இருக்கு. எல்லார் கிட்டவும் நல்லதை மட்டுமே பாக்குற மனுசிக்கு ஆறுதலா பேசக் கூட யாருமில்ல” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் வான்மதி.
அன்றைய தினம் முழுவதும் அவளுக்கு மனமே சரியில்லை. மனதுக்குள் கரையானாய் அரித்தது குற்றவுணர்ச்சி. கொஞ்சம் நஞ்சமா அவளும் சங்கரியைப் பேசியிருக்கிறாள்! குணசேகரனாவது அவரது கணவர். ஆனால் அவள்?
வீட்டுக்கு வாழப்போன மருமகள், மகளாய்த் தன்னை நடத்திய மாமியாரைப் பேசக் கூடிய வார்த்தைகளையா அவள் பேசினாள்?
தன்மீதே வெறுப்பு வந்தது வான்மதிக்கு. ஆழ்ந்து யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
வாரயிறுதியில் திருநெல்வேலிக்குப் பயணமாகும் முடிவுதான் அது. இரயிலில் பயணச்சீட்டு இல்லை. அனைத்தும் ஆர்.ஏ.சிகளாகவும் வெயிட்டிங் லிஸ்டுகளாவும் இருந்தன.
“தட்கல்ல ட்ரை பண்ணி பாரு மதி” என்று ஜோதிர்மயி சொல்ல
“தட்கல் புக்கிங் மேக்சிமம் எனக்கு ஃபெயில் ஆகிடும் ஜோதி. நான் பஸ்ல போகலாம்னு இருக்கேன்” என்றபடி பயணச்சீட்டு புக் செய்யும் ஆப் ஒன்றில் தனக்கானச் சீட்டைப் புக் செய்தவள் தீர்மானித்தபடியே ஞாயிறு காலையில் திருநெல்வேலியில் சென்று இறங்கினாள்.

அவளை அழைக்கப் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்தான் பூபாலன். அவனது பைக்கில் ஏறியமர்ந்தவள் தான் வந்ததற்கானக் காரணத்தைச் சொல்லவும் யோசனையோடு பைக்கைக் கிளப்பினான் அவன்.
PDF திருடாதீர்கள்!