எதிர்பார்ப்பில்லா அன்பு யாரிடமிருந்து கிடைத்தாலும் வேகமாகப் பற்றிக்கொள்கிறது மனம். விளக்குக்குத் திரியும் எண்ணெய்யும் போல மனதுக்கு அன்பு அத்துணை அத்தியாவசியம்! உண்மையான அன்பெல்லாம் அரிதாகி குறுகி வரும் இந்நாட்களில் எங்கிருந்தோ கிடைக்கும் துளி அன்புக்காகத் தாகம் கொண்ட காகமாகக் காத்துக் கிடக்கிறது மனித மனம். கொடுப்பவருக்கும் இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை அந்த மனம் உணரத் தவறிவிட்டால் கிடைத்த அன்பும் கைதவறிப் போய்விடும்.
-வான்மதி
“ப்ராஜெக்டைக் கம்ப்ளீட் பண்ணுனதுக்கு அப்புறம் க்ரிட்டிக்கல் பாத் அரைஸ் ஆகுறது இதுதான் முதல் தடவை. முடிஞ்சதை விடுங்க. லெட்ஸ் ஃபோகஸ் ஆன் த ரூட் காஸ். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் இதைச் சால்வ் பண்ணி ப்ராஜெக்டுக்கான டைம் ஃப்ரேம்குள்ள இதை முடிச்சாகணும். நான் இதைப் பத்தி க்ளையண்ட் கிட்ட பேசிடுறேன். ஆல் ஆப் யூ மே கோ நவ்”

தனது குழுவிலிருக்கும் உறுப்பினர்களுக்கு அடுத்துச் செய்யவேண்டிய வேலைகள் என்னவெனப் பட்டியலிட்டுவிட்டு சீனியர் புராஜெக்ட் மேனேஜரைச் சந்திக்க அவனது கேபினுக்குச் சென்றாள் வான்மதி.
அன்றைக்குக் காலையில்தான் சென்னையில் வந்து இறங்கியிருந்தாள். ஓய்வெடுக்க நேரமில்லை. அவளது பொறுப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புராஜெக்ட் முடியும் தருவாயில் சின்னத் தகராறு. அதை நிவர்த்தி செய்வதற்கும், க்ளையண்டான நிதி நிறுவனத்திடம் நிலமையை எடுத்துச் சொல்லவும் அவள் அங்கே இருந்தாகவேண்டிய கட்டாயம்.
சீனியர் புராஜெக்ட் மேனேஜரான ஏகான்ஷுடன் சேர்ந்து தனியார் நிதிநிறுவன அதிகாரிகளிடம் நிலமையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நமக்கு டைமும் கம்மி, ரிசோர்ச்சும் கம்மி வான்மதி. அதை மைண்ட்ல வச்சுக்கோங்க. இதுவரை உங்க கிட்ட ஒப்படைச்ச எந்த புராஜெக்டும் லேட் ஃபினிஷ் ஆனதில்ல”
“ஐ வில் டூ மை பெஸ்ட் ஏகான்ஷ்”
நேரே தனது அலுவல் அறைக்கு வந்தவளுக்கு அன்றைய தினத்தில் நேரம் விமானம் ஏறி பறந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
மதியவுணவுக்காக அனைவரும் கிளம்பிய பிற்பாடு அவளது அறையின் கண்ணாடிக்கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள் ஜோதிர்மயி. அதே புராஜெக்டில் சீனியர் சிஸ்டம் இன்ஜினியராகப் பொறுப்பு வகிக்கிறாள்.
இருவரும் அந்நிறுவனத்தில் கேம்பஸ் மூலம் தேர்வாகி வந்தவர்கள். நான்கு வருடங்களில் எண்ணற்ற மாற்றங்கள் இருவர் வாழ்க்கையிலும். ஜோதிர்மயியின் திருமணத்தில்தான் வான்மதி பூபாலனைச் சந்தித்தாள் என்பது உபரித்தகவல்.
“இதோ வர்றேன்டி”
தனது இருக்கையிலிருந்து எழுந்தவள் அவளோடு ஃபுட் கோர்ட்டுக்குச் சென்றாள்.
“அம்மா உனக்காக முந்திரி கொத்து குடுத்துவிட்டாங்க. வீட்டுக்குப் போனதும் எடுத்துத் தர்றேன்”
ஜோதிர்மயியிடம் சொன்னபடி உணவை வாங்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தாள் வான்மதி.
“முந்திரி கொத்தை விடு. உன் ‘அவர்’ எப்பிடி இருக்குறார்? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறதா முடிவெடுத்ததுல நானும் அனிருத்தும் செம ஹேப்பி. எங்க பிபின் குட்டிக்குச் சீக்கிரமா கேர்ள் ஃப்ரெண்ட் பிறக்கட்டும்னு வேண்டுதல் கூட வச்சிருக்கோம்”

அனிருத் அவளது கணவன். இதே டெக்னோசிஸ் நிறுவனத்தின் மைசூர் கிளையில் பணிபுரிகிறான். ஜோதிர்மயியும் அவர்களின் ஒரே புதல்வனான பிபின் சந்திராவும் மட்டும் வான்மதி வசிக்கும் அதே அப்பார்ட்மெண்டில் அவளுக்கு அடுத்த ஃப்ளாட்டில் வசிக்கிறார்கள்.
பூபாலனும் தானும் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்ததை முதலில் வான்மதி பகிர்ந்து கொண்டது ஜோதிர்மயியிடமே.
தங்களது திருமணத்தில் சந்தித்து காதலித்து மணந்தவர்களின் பிரிவில் அவளுக்கும் அனிருத்துக்கும் மிகவும் வருத்தம். அவர்கள் மீண்டும் இணையப்போவதை அறிந்ததும் மகிழ்ந்து போனார்கள்.
வான்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.
“எனக்குள்ள இன்னும் ஏகப்பட்ட வருத்தம், கலக்கம் எல்லாம் உயிரோட இருக்கு ஜோதி. என்னால இந்தத் தடவை பாலாவோட நல்லபடியா வாழ்ந்துட முடியும்னு நினைக்குறியா?”
ஜோதிர்மயி சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தோழியைப் பார்த்தாள்.
“அதுல என்ன சந்தேகம்? போன தடவை செஞ்ச தப்பை இந்தத் தடவை தவிர்த்தா போதும் மதி. நான் எப்பவும் சொல்லுறதுதான். அம்மா பொண்ணா மட்டுமே யோசிக்காம கொஞ்சம் பாலாவோட மதியா யோசிச்சு எந்தக் காரியத்தையும் செய்”
“கண்டிப்பா” என்ற வான்மதியின் முகத்தில் யோசனை ரேகைகளின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை.
ஆதுரமாக அவளது கையை அழுத்தினாள் ஜோதிர்மயி.
“முடிஞ்சதை நினைக்காத. உங்க ரெண்டு பேருக்கும் இன்னொரு நபரை வாழ்க்கைத்துணையா தேர்ந்தெடுக்குற அளவுக்குத் தைரியம் கிடையாதுனு நான் முன்னாடியே சொன்னேன். உனக்கு அந்த ஐடியாவே கிடையாதுனு நீ பிடிவாதமா நின்ன. நடந்த எல்லாம் உன் மனசுல உண்டாக்குன வெறுமைய காதலால நிரப்பு மதி”
“வெறுமை என் மனசுல மட்டும்தானா ஜோதி?”
வான்மதியின் தொண்டை கட்டிக்கொண்டது. கண்கள் கூட கலங்கிப் போயின.
“ப்ச்! அசட்டுத்தனமா எதையும் யோசிக்காத. முடிஞ்சதை விடு. அம்மா முந்திரி கொத்து மட்டும்தான் குடுத்து அனுப்புனாங்களா?”
மெல்லச் சிரித்தாள் வான்மதி.
“பிரண்டை தொக்கு இருக்கு. அச்சு முறுக்கு, நெல்லிக்காய் ஊறுகாய்னு எல்லாம் இருக்கு. ஈவ்னிங் உன் பங்கை வாங்கிக்க தாயே”
நல்ல தோழமைக்கு அழகு இன்பத்தில் உடன் சிரிப்பது மட்டுமில்லை. துன்பத்தில் வரும் கண்ணீரைத் துடைத்து மனதைத் திசை திருப்புவதும்தான்.
வான்மதி மதியவுணவைச் சாப்பிட்ட அதே நேரத்தில் பூபாலனின் ஸ்டூடியோவின் முன்னே நின்றது நரேந்திரனின் கார். இறங்கிய ஓட்டுனரின் கையில் டிபன் கேரியர்.
“மாப்பிள்ளை” என்று புன்னகை முகமாய் அழைத்தவரைப் பூபாலனுக்கும் தெரியும் என்பதால் இன்முகத்துடன் அழைத்து அமர வைத்தான்.
“உங்க மாமா குடுத்து விட்டாவ. மாப்பிள்ளை வேண்டாம் எதுக்குச் சிரமம்னு சொல்லுவாப்ல. காலி கேரியரோடதான் நீ வீட்டுக்கு வரணும்னு முதலாளி கண்டிசனா சொல்லிட்டாவ” என ஆரவாரமாகச் சொன்னவரிடம் அவனால் மறுப்பு கூற முடியவில்லை.
“தம்பி நீங்களும் வாங்க” என்று பிரபுவையும் அழைக்க இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
கையோடு கொண்டு வந்திருந்த வாழை இலையை விரித்துச் சாப்பாடு பரிமாறியவரிடம் “நாங்க எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுக்குறோம். உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” என்றான் பூபாலன் சங்கடத்தோடு.
“எங்கவீட்டு மாப்பிள்ளைக்குப் பரிமாறுறதுல எனக்குச் சின்னதா சந்தோசம். நீங்களே வேலை செஞ்சு களைச்சுப் போயிருப்பிய”

சாப்பாடு என்னவோ தடபுடல்தான்.
“இன்னைக்குச் சோமவாரம்னு மதினி சைவம் சமைக்கச் சொல்லிட்டாவ. புதன்கிழமை உங்களுக்காக மீன் எடுக்கச் சொல்லிருக்காரு முதலாளி”
நரேந்திரனின் அன்பு எத்தகையதென அப்போதுதான் புரிந்தது பூபாலனுக்கு. மாப்பிள்ளை முறுக்கிலும், ஆண்பிள்ளை என்ற கர்வத்திலும் மாமனாரிடம் ஒட்டாமல் நின்ற தருணங்கள் மனத்திரையில் தோன்றி அவனைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தின.
சாப்பிட்டு முடித்து இலையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிய போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது பூபாலனுக்கு.
பாபு கிளம்பியதும் “உங்க மாமா தங்கமான மனுசன் அண்ணா” என்றான் பிரபு.
“ப்பா! சாம்பார் வாசனை இன்னும் கையை விட்டுப் போகல” என்றபடி அவன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.
பூபாலன் தந்தையின்’ல்.;/ எண்ணுக்கு அழைத்துச் சாப்பிட்டாரா என விசாரித்தான்.
“சாப்பிட்டுட்டேன் பாலு. நீ சாப்பிட்டியா? டையத்துக்குச் சாப்பிடுய்யா. வயித்தைப் புண்ணாக்கிடாத”
குணசேகரனின் அக்கறை அவனது மனதை நெகிழ்த்தியது.
“இன்னைக்கு நைட் நமக்கு மெஸ் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன்பா. உங்களுக்கு ஜானகிராம்ல சாப்பிட பிடிக்கும்ல? அங்க போவோம்”
மறுமுனையில் குணசேகரனும் மகனை எண்ணி உருகித்தான் போனார்.
“சரிப்பா. வேலைய பாரு” என்று அழைப்பைத் துண்டித்தவர் இளையவனுக்கு இருக்கும் பாசத்தில் கொஞ்சமாவது மூத்தவனுக்கு இருந்திருக்கலாமென அங்கலாய்க்கத் தவறவில்லை.
இரு மகன்களும் அன்பில் குறைந்தவர்கள் இல்லை. பூபாலனின் சூழல் வேறு, மணிவண்ணனின் சூழல் வேறு என்று புரிந்துகொள்ளும் பக்குவம் அவருக்கு எப்போது வருமோ!
******
மாலையில் தோழிகள் இருவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். இருவரும் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் செங்கல்பட்டில் இருக்கிறது. இரு படுக்கையறைகளுடன் கூடிய செமி ஃபர்னிஷ்ட் ப்ளாட் அது.
வேலைக்குச் சேர்ந்த புதிதில் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி அருகே பி.ஜி ஒன்றில் தங்கியிருந்தவர்கள் பின்னர் வீட்டினரின் அறிவுறுத்தலால் ஜாகை மாறிய இடம்தான் அந்த அப்பார்ட்மெண்ட். நான்கு ஆண்டுகளாக எந்தத் தொந்தரவுமின்றி வசிக்கிறார்கள்.
குழந்தைகள் விளையாட மினி பார்க் வசதி இருப்பதால் பிபினுக்கும் பொழுது நன்றாகப் போகிறது.
பிபினைக் கவனிக்க ‘கேர் டேக்கர்’ பெண்மணி ஒருவரைப் பகுதி நேரமாகப் பணியில் அமர்த்தியிருந்தாள் ஜோதிர்மயி.
இருவரும் அப்பார்ட்மெண்ட் தரிப்பிடத்தில் தத்தமது ஸ்கூட்டிகளை நிறுத்திவிட்டு வந்தபோது பூங்காவில் அந்தக் கேர்டேக்கரோடு விளையாடிக்கொண்டிருந்த பிபின் கவனித்துவிட்டு அவர்களை நோக்கி ஓடிவந்தான்.
அவனது மழலை மாறாதப் பேச்சு இரு பெண்களுக்கும் வேலையில் உண்டானத் தலைவலிக்கு இதமாய் இருந்தது.
கேர்டேக்கர் பெண்மணிக்கு ஊரிலிருந்து கொண்டு வந்த பலகாரங்களில் கொஞ்சம் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தாள் வான்மதி.
“எனக்கு எனக்கு” என்று பரபரவெனச் சுற்றி வந்த பிபினின் கையில் அச்சு முறுக்கு ஒன்றைக் கொடுத்து ‘இதுக்குப் பேர் ரோஸ் குக்கீஸ்” என்று அவள் சொல்ல அவனும் நொறுக்க ஆரம்பித்தான்.
ஆளுக்கு ஒரு கோப்பை தேநீரோடு இரு தோழியரும் பால்கனியில் அக்கடாவென அமர்ந்தார்கள். கொறிக்க ஒரு சிறு தட்டில் முந்திரி கொத்துகளும் அச்சு முறுக்குகளும் அருகே!
“சோ பாலாவோட அம்மாக்கு உடம்பு சரியில்லனு தெரிஞ்சும் நீ இங்க வந்திருக்க” ஜோதிர்மயி பேச்சை ஆரம்பித்தாள்.
“நான் என்ன செய்ய முடியும்? என் வேலை அப்பிடி. இன்னைக்கு வந்ததுக்கே ஏகான்ஷ் என்னைத் திட்டாதக் குறை” சலித்துக்கொண்டாள் வான்மதி.
“அவனால எனக்கு ஒட்டுமொத்த பெங்காளிகள் மேலயும் வெறுப்பு வந்துடுமோனு பயமா இருக்குடி. நீ எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்டுத்தான் போன. கிரிட்டிக்கல் பாத் ஐடெண்டிஃபை பண்ணுனதுக்கு அப்புறமா அவனே டீமுக்கு இன்ஸ்ட்ரக்சன் குடுத்திருக்கலாம். இது ரொம்ப அபூர்வமா வர்ற சிச்சுவேசன். நான் கவனிச்ச வரைக்கும் அவன் பெர்ஃபாமன்ஸ் அப்ரைசல் கூட உனக்குச் சரியா குடுத்த மாதிரி தெரியல. அவனோட புரோபசலை நீ மறுத்தல்ல. அதுக்குப் பழிவாங்குறானோ?”
வான்மதி சத்தமாகவே நகைத்தாள்.
“பழிவாங்குறதால என்ன கிடைச்சுடப்போகுது அவனுக்கு? கம் ஆன்!”
“அது ஆம்பளை ஈகோ. அவன் மேல உன் டீம்ல இருக்குற பொண்ணு ஒருத்திக்குக் கண்ணு. டெஸ்டர் அமாயாக்கு அவனைப் பாக்குற நேரம் எல்லாம் முகத்துல பல்பு எரியும். இப்பிடிப்பட்ட ஒருத்தனை நீ ரிஜெக்ட் பண்ணிருக்க. அந்தக் கடுப்பை இப்பிடியெல்லாம் காட்டுறான்”
“என்னமோ போ! அவனோட ஒர்க் ப்ளேஸ் பாலிடிக்சைப் பத்தி யோசிக்கக் கூட நேரமில்ல எனக்கு. டீம் ஒர்க் மேல எந்தக் குறையும் சொல்லிடக்கூடாது. அதுக்காக இந்தப் பிரச்சனைய தீர்த்தே ஆகணும்”
தங்களது பணியைப் பற்றிய உரையாடலில் வான்மதி ஆழ்ந்திருந்தபோது அவளது எண்ணுக்கு அழைப்பு வந்தது பூபாலனின் பெயரைத் தாங்கி.
அழைப்பை ஏற்றவளிடம் அன்னையின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கூறினான் பூபாலன்.
“நல்லது பாலா” சுருக்கமாக முடித்துக்கொண்ட போது பிபின் ஓடோடி வந்து எதையோ பேச மறுமுனையில் பூபாலன் யாரெனக் கேட்டான்.

“பிபின்! ஜோதியோட பையன்” என்றாள் வான்மதி.
“ஜோதிக்குப் பையன் இருக்கானா?” ஆச்சரியமாக அவன் கேட்க
“நமக்கு முன்னாடியே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” என நினைவுபடுத்தினாள் அவள்.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. பட் ஐ.டில ஒர்க் பண்ணுற பொண்ணு கெரியரைப் பத்தி யோசிக்காம குழந்தை பெத்துகிட்டது எல்லாம் ஆச்சரியமா இருக்கு”
பூபாலன் இவ்வாறு சொன்னதும் வான்மதிக்குச் சுருக்கெனத் தைத்தது.
“இப்ப என்ன சொல்ல வர்றீங்க நீங்க?” என்றவளின் குரலில் ஏறியிருந்த உஷ்ணத்திற்கானக் காரணம் புரியாமல் அவன் திகைத்துப் போனான்.
ஜோதிர்மயி அவளது கையை அழுத்தினாள். ‘நிதானமாகப் பேசு’ என்ற செய்தி அந்த அழுத்தத்தில்!
வான்மதியும் நிதானித்தாள்.
“குழந்தை பெத்துக்குறதுக்குப் பொண்ணுங்க தயங்க காரணம் அதைச் சாக்கா வச்சு குழந்தை சம்பந்தப்பட்ட எல்லா பொறுப்பையும் பொண்ணுங்க தலையிலயே ஆம்பளைங்க கட்டுறதுதான். அனிருத் பேரண்டல் ரெஸ்பான்சிபிளிட்டிய ஷேர் பண்ணிக்கத் தயாரா இருந்தார். அதனால ஜோதி தயங்காம பிள்ளை பெத்துக்கிட்டா. ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் கெரியர் முக்கியமா? பொம்பளைங்களுக்கும் முக்கியம். கொஞ்சம் ஆம்பளைங்க மாறுனா எல்லாம் மாறும்”
மறுமுனையில் பூபாலன் கப்சிப்பாகிப் போய்விட அவள் குரலும் இறங்கியது.
“உங்கம்மாவ கவனிச்சுக்கோங்க. முடிஞ்சா நான் வீக்கெண்ட்ல அங்க வர்றேன்”
சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொண்டாள் வான்மதி.
ஜோதிர்மயிக்கு அவளுடைய நிலை புரிந்தது. பிபினை அவளது மடியில் அமரவைத்தவள் “பழசை நினைக்காத மதி. பாலாவும் இப்ப மாறிருப்பார். நீங்க காதலிச்ச நாட்களை நினைச்சுப் பாரு. உன் மனசுல உள்ள வேதனை மறைஞ்சிடும்.” என்றாள்.
“நானும் அதை ஞாபகப்படுத்திப் பாத்துக்குறேன். ஒரு நேரம் பாலாவ நினைச்சா என்னையறியாம சந்தோசம் வருது. இன்னொரு நேரம் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது. ரெண்டுங்கெட்டான் மனநிலைல இருக்குறேன். அவரும் கிட்டத்தட்ட என்னை மாதிரிதான் இருக்கார். வீ நீட் டைம் டூ ஹீல்”
சொன்னவளின் கரங்கள் பிபினின் சிகையைக் கோதிக் கொடுத்தன.

“ரோஷ் குக்கீ வேண்மா?” மழலை மிச்சமிருந்த பாஷையில் கேட்டு அவளுக்கு ஊட்டியும் விட்டான் அந்த மூன்று வயது சிறுவன்.
அன்புக்கு ஏங்கிய இதயத்திற்கு அது யாரிடமிருந்து கிடைத்தாலும் மொத்தமாகப் பறித்துப் பத்திரப்படுத்திக்கொள்ளும் பழக்கம் இருக்கும். அந்த அன்பை மதிக்கவும் தெரியும். அன்பின் வாசனையைத் தனக்குள் நிரப்பிக்கொண்டு பிபினை உச்சி முகர்ந்தவளின் மனம் கொண்ட ஏக்கம் தற்காலிகாகக் குறைந்து போயிருந்தது.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!