NM Tamil Novels | Tamil Novels

வலிகளைக் கடந்தவள்
 
Share:
Notifications
Clear all

வலிகளைக் கடந்தவள்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin
“ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போ மஹி. இல்லனா ஸ்கூல்ல போய் படிப்புல கவனம் இருக்காது. பசிக்கும்டி”
 
பள்ளி வேன் வந்துவிடுமோ என்ற அவசரத்தில் தயாரான மஹிமாவிடம் கிட்டத்தட்ட கெஞ்சிக்கொண்டிருந்தேன் நான்.
 
“ப்ச்! வேண்டாம்மா. எனக்கு இட்லி பிடிக்காதுனு தெரியும்ல. ரெண்டு தோசை வார்த்து வைனு சொல்லிட்டுத்தானே குளிக்கப் போனேன். அவ்ளோ சொல்லியும் நீ இட்லியும் பொடியும் நீட்டுனா நான் சாப்பிடணுமா? என் க்ளாஸ்மேட்ஸ் அம்மா எல்லாம் வெரைட்டியா ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு குடுப்பாங்களாம். நீ லஞ்சுக்குக் கூட ஐந்து நாளும் ஷெட்யூல் போட்ட மாதிரி சாம்பார், புளிக்குழம்புனு வச்சுக் குடுக்குற. இட்ஸ் போரிங்மா. முன்னாடிலாம் எவ்ளோ சூப்பரா சமைப்ப. ரெண்டு மாசமா நீ அநியாயம் பண்ணுற. நீ அவிச்ச இட்லி எல்லாத்தையும் நீயே சாப்பிடு”
 
“என்ன மஹி இப்பிடி பேசுற? நானே ரெண்டு வாய் ஊட்டுறேன். சாப்பிட்டுட்டுப் போடி”
 
இட்லியை விண்டு நல்லெண்ணெய் ஊற்றிய இட்லிப்பொடியில் தொட்டு அவளுக்கு ஊட்டப் போன எனது கரத்தைத் தட்டிவிட்டாள் மஹிமா.
 
“சாப்பாட்டுல கூட எனக்குப் பிடிச்சதைச் சாப்பிடுற உரிமை இந்த வீட்டுல இல்ல. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடணும்? போம்மா”
 
“மஹி!”
 
ஹாலை அதிர வைத்தது என் கணவரின் குரல். மஹிமாவும் தூக்கி வாரிப்போடத் திரும்பினாள்.
 
“அம்மாக்குக் கொஞ்ச நாளா உடம்பு சரியில்லனு தெரியும்ல. அவ என்ன செஞ்சு குடுக்குறாளோ அதைச் சாப்பிடணும். உனக்காகத்தானே ஹெல்த்தைக் கூட கவனிக்காம காலையில அடுப்பு முன்னாடி நின்னு சமைச்சிருக்கா. அதை அலட்சியப்படுத்தாத”
 
எப்போதும் மகளுக்குச் செல்லம் கொடுப்பவர் அன்று அதட்டியதும் மஹிமா அவசரமாக இரண்டு இட்லிகளை விழுங்கி தண்ணீர் குடித்தாள்.
 
ஆனாலும் பிடிக்காத உணவைச் சாப்பிடவைத்துவிட்டோம் என்ற கோபம் எங்கள்மீது! லஞ்ச்பேக்கை எடுத்துக்கொண்டு பள்ளி வேனுக்காக ஓடிவிட்டாள்.
 
பதின்வயது பிள்ளைகளுக்குச் சும்மாவே சுதந்திர உணர்வும், தேர்வு செய்யும் குணமும், பிடிவாதமும் அதிகம். பிடித்ததைச் செய்யவிடாதப் பெற்றோரைக் கிட்டத்தட்ட விரோதியாய்ப் பார்க்கும் வயது அது! எங்கே மஹிமா எங்களிடமிருந்து விலகிவிடுவாளோ என்ற பயம் எனக்கும் அவருக்கும்!
 
“இன்னைக்கு ஈவ்னிங் டாக்டர் கிட்ட போகணும்ல. ரெடியா இரு மீனா. துணி எல்லாம் மிஷின்ல போட்டுட்டேன். ஓடி முடிச்சதும் எடுத்துக் காய போட்டுடு. பாத்திரம் எல்லாம் கிடக்கட்டும். ஈவ்னிங் மஹி வந்து கழுவட்டும்”
 
“அவ எதுக்குங்க? டியூசன் வேற போகணுமே?”
 
என்னைக் கண்டிக்கும் பார்வை பார்த்தார் அவர்.
 
“படிப்பு முக்கியம்தான். ஆனா பெத்த தாய்க்கு உடம்பு முடியாதப்ப கூட படிச்சு அவ அறிவுஜீவியாகி யாருக்கு எதை நிரூபிக்கப்போறா? பொண்ணுக்குச் செல்லம் குடுக்குறேன்னு என்னைக் குறை சொல்லுவியே! நீதான் அவளைச் செல்லம் குடுத்துப் பிடிவாதக்காரியா ஆக்கி வச்சிருக்க மீனா”
 
என் முகம் சோர்வதைக் கண்டதும் பேச்சை நிறுத்தியவர் என்னை ஆதுரமாக நாற்காலியில் அமர வைத்தார். கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது எனக்கு. எதற்காக இந்தக் கண்ணீர்? ஏன் இந்த மனச்சோர்வு? காரணம் என்னவருக்குத் தெரியுமே!
 
“ஒன்னுமில்ல மீனா! உன் மகளை நீ வேலை வாங்க வேண்டாம். நான் ஆபிஸ்ல இருந்து வந்து பாத்திரம் எல்லாத்தையும் கழுவிக்கிறேன். அட்லீஸ்ட் உலர்ந்த துணிய எடுத்து மடிச்சு வைக்கச் சொல்லு. எல்லா வேலையையும் நீயே இழுத்துப்போட்டுச் செய்யணும்னு அவசியமில்ல. நைட் டின்னருக்கு நான் ஏதாச்சும் செஞ்சுடுறேன். நீ ரெஸ்ட் எடு”
 
காலையில் என்னை அதட்டி உருட்டிச் சாப்பிட வைத்துவிட்டு அவர் அலுவலகம் போய்விட சோர்வோடு படுக்கையில் சாய்ந்தேன் நான். திடுமென ஆடையில் ஏதோ ஈரமாய்ப் படிவது போன்ற உணர்வு.
 
மேஜையின் இழுப்பறையில் வைத்திருந்த நாப்கினை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறைக்குள் பிரவேசித்தேன். குளிக்கவேண்டிய கட்டாயம்!
 
மாதாந்திர உபாதையின் பத்தாம் நாள்! மூன்று நாட்கள் கழித்து குறைந்த உதிரப்போக்கு மீண்டும் அதிகரித்துவிட்டது.
 
சில மாதங்கள் இதுவே வாடிக்கையாக இருக்கிறது! இப்படி ஆனதில்லையே எனப் போன மாதம் மருத்துவரிடம் பரிசோதனை செய்துவிட்டு வந்ததில் ‘ப்ரீமெச்சூர் மெனோபாஸ்’ என்று அறிக்கைகள் வந்தன.
 
மெனோபாஸ் ஆரம்பிப்பதற்கான வயதை நான் இன்னும் நெருங்கவில்லை. ஆயினும் அதற்கான அறிகுறிகள் எனக்கு ஆரம்பித்துவிட்டதாம். இதை மருத்துவ மொழியில் ‘ப்ரீமெச்சூர் மெனோபாஸ்’ என்பார்களாம்.
 
இனி மாதவிடாய் நாட்களில் உடல் சோர்வு, உணர்வுகளில் ஏற்ற இறக்கங்கள், உதிரப்போக்கு, உறக்கமின்மை இதெல்லாம் இருக்குமெனச் சொல்லி மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார் மருத்துவர்.
 
இத்தகைய மாறுதல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் எனது உடல் தடுமாறியதால் அன்றாட வேலைகளில் நிறைய குழப்பங்கள்! மகளுக்கு, கணவருக்கு எனப் பார்த்து பார்த்து சமைக்கும் என்னால் அதிக நேரம் நின்று சமைக்க முடிவதில்லை.
 
கை கால் மூட்டுகளில் வலி வந்துவிடுகிறது. எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதோடு அடிவயிறும் வலித்துத் தனது இருப்பைக் காட்டுகிறது.
 
மருத்துவரிடம் போய் வந்த பிறகு எனது கணவரால் என் உடல்நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மஹிமா குழந்தைதானே! அவளுக்கு இதெல்லாம் புரியவில்லை.
 
முன்பு அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அம்மாவை அவள் ‘மிஸ்’ செய்கிறாள் என்பதையே அவளது முன்கோபமும், சிடுசிடுப்பும் எனக்கு உணர்த்துகின்றன.
 
ஆனால் அவை அதீதமாகாமல் என் கணவர் பார்த்துக்கொள்கிறார் என்பதால் மனவுளைச்சலில் இருந்து தப்பித்துவிடுகிறேன்.
 
குளியலறையிலிருந்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்தபோது எனது மொபைல் சிணுங்கியது. தொடுதிரையில் ஓடிய எழுத்துகள் அழைப்பவர் எனது அன்னை எனக் காட்டவும் கட்டிலில் அமர்ந்து அழைப்பை ஏற்றேன்.
 
“வீட்டுக்குத் தூரம் நின்னுடுச்சா மீனா? டாக்டர் கிட்ட போனியா?” எடுத்ததும் யாரைப் பற்றியும் விசாரிக்காமல் எனது நலனை நாடிய அன்னையின் அன்பில் அடிவயிற்றில் கொக்கிப் போட்டு இழுத்த வலி மறந்து போனது.
 
“இன்னும் நிக்கலம்மா. டாக்டர் கிட்ட போன மாசம் போனோம். ப்ரீமெச்சூர்ட் மெனோபாஸ்னு சொன்னார். இதை ஒன்னும் செய்ய முடியாதாம். பட் மருந்து எழுதிக் குடுத்திருக்கார்”
 
“ரொம்ப சிரமமா இருக்காடி?”
 
ஆதுரமாய் வினவினார் அம்மா. ஏனோ கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அவரது மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவரின் விரல்கள் எனது தலையைக் கோதவேண்டுமென எதிர்பார்த்தேன் நான்!
 
ஆனால் முடியாதே! இப்போது இரயில் ஏறினாலும் அம்மா இங்கே வர நாளை காலை ஆகிவிடும். அன்னையின் அன்புக்கும் ஆதுரத்துக்குமான ஏக்கம் இந்த அதிகரித்த தூரத்தால் இன்னும் பூதாகரமாகத் தெரிந்தது எனக்கு.
 
“சரி மீனா! நீ தூங்கி ரெஸ்ட் எடு. நான் உன்னைத் தொந்தரவு பண்ணல”
 
அழைப்பைத் துண்டிக்கப் போனார் அம்மா.
 
“ம்மா! நீ என் கூட பேசிட்டு இரேன்”
 
எனக்குள் வெடித்த ஏக்கத்தின் துளிகள் எனது வார்த்தைகளில்! அதை உணர்ந்துகொண்ட அம்மாவும் அந்த வாரம் நடந்தது, என் அண்ணன் மகன் அடிக்கும் லூட்டிகளைச் சொல்லத் தொடங்க வலியும், உடற்சோர்வும் மங்கிப்போனது.
 
“உனக்குச் சாதாரணமா வீட்டுக்குத் தூரமானாலே வயிறு வலில துடிச்சிடுவ. பத்து நாள் ப்ளீடிங் ஆவுதுனு சொல்லுறியே. மனசு தாங்கல மீனா. நான் மட்டும் பக்கத்துல இருந்தேன்னா உன்னை என் கூட கூப்பிட்டு வச்சிப்பேன்டி”
 
“ம்மா!” தடுமாறியது எனது குரல். பின்னர் தொண்டையைச் செருமி சரி செய்துகொண்டேன்.
 
“அவர் என்னை நல்லா பாத்துப்பார்னு தெரியாதாமா? இப்ப கூட எந்த வேலையும் பாக்கக்கூடாதுனு கண்டிசன் போட்டுட்டுப் போயிருக்கார்”
 
“மாப்பிள்ளை தங்கம் மீனா. ஆனா அவருக்கும் ஆபிசுல வேலை இருக்கும்ல. மஹி குட்டி உதவுறாளா அவங்க அப்பாக்கு?”
 
“அவளா? அவளுக்கு ஸ்கூலுக்கும் டியூசனுக்கும் போகவே நேரம் சரியா இருக்கும்மா. படிக்கிற பிள்ளைய எப்பிடி வீட்டுவேலை செய்யச் சொல்லுறது?”
 
“அப்பிடியே நீ என்னை மாதிரி யோசிக்குற மீனா”
 
அம்மா இப்படி சொன்னதும் யாரோ சாட்டையால் என் இதயத்தில் அடித்த உணர்வு! என்ன இது? நான் சந்தோசமாகத்தானே உணரவேண்டும்!
 
எனக்கு எனது பதின்வயது நாட்களின் நினைவு வந்தது. நான் மேல்நிலை வகுப்புகளில் இருந்த சமயத்தில் அம்மாவுக்கு மெனோபாஸ் வந்த காலகட்டம் அது.
 
பல நாட்கள் அம்மா உடற்சோர்வோடு எனக்காகச் சமைத்துக்கொடுப்பார். அது வேண்டாம் இது வேண்டாமென நான் நிராகரித்திருக்கிறேன். அந்நாட்களில் சீக்கிரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மா பின்வாயில் திண்ணையில் இருக்கும் மரத்தூணில் தலையைச் சாய்த்து கண் மூடி அமர்ந்திருப்பார்.
 
பின்வாயிலில் மாதவிடாய் சமயத்தில் உடைகளைத் துவைக்கவென ஒரு கல் உண்டு. அதன் மீது அம்மா பயன்படுத்திய பருத்தியால் ஆன துணி துவைத்து பிழிந்து வைக்கப்பட்டிருக்கும். அதில் திட்டு திட்டாய் பழுப்பு வண்ணத்தில் உதிரத்தின் கறை வெளிறிப்போய் இருக்கும்.
 
இதை எல்லாம் சாதாரணமாகக் கடந்துவிடுவேன் நான். சட்டமாகக் காபி போட்டுக் குடித்துவிட்டுப் பாடப்புத்தகங்களுடன் அமர்ந்துவிடுவேன். அப்பாவும் அந்தக் காலத்து ஆணாயிற்றே! இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று ஒதுங்கிவிடுவார்.
 
அந்தச் சமயத்தில் என் அன்னை எங்கள் இருவரின் ஆதுரமான அன்பு செய்கைகளுக்கு ஏங்கியிருப்பார்தானே? நாங்கள் இருவரும் கொஞ்சம் யோசித்திருந்தால் அவருக்கு வேண்டிய ஓய்வை அந்நேரத்தில் கொடுத்திருக்கலாம்தானே!
 
இப்போது நினைத்தால் முழு சுயநலவாதியாக என்னை உணருகிறேன்! கள்ளமின்றி மொபைலில் பேசிக்கொண்டிருந்த என் அன்னைக்கு எப்போது துணையாக இருந்திருக்க வேண்டுமோ அப்போது புரிந்துகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக இருந்துவிட்டேனே என்று என் மனம் அரற்றியது.
 
“பிரகாஷுக்கு அந்தப் போட்டில ரெண்டாவது பரிசு மீனா. வீட்டுல வந்து ஒரே அழுகை”
 
“ம்மா….”
 
அழுகையில் தொண்டை கட்டிக்கொண்டது எனக்கு. எனது குரல் மாறுபாட்டைக் கண்டுகொண்டார் என் அன்னை.
 
“என்னாச்சு மீனா?” பதறினார்.
 
உடனே பதில் சொல்ல துணிவில்லை.
 
என் அன்னை தனியொருத்தியாகக் கடந்த அந்த வலியுடன் கூடிய பொழுதுகளில் அவருக்கு இருந்த மனவுளைச்சலை இதோ இப்போது உணர்கிறேன் நான்!
 
“சாரிம்மா”
 
துணிந்து கேட்டுவிட்டேன்.
 
“என்னடி சொல்லுற? நீ களைச்சுப் போயிருக்கனு தோணுது. ரெஸ்ட் எடு. நான் அப்புறமா பேசுறேன்”
 
“ம்மா! சாரி… நான் அப்ப உன்னைக் கண்டுக்காம இருந்ததுக்கு”
 
இப்போது அன்னையிடம் பதிலில்லை.
 
“கொஞ்சம் உனக்கு ஹெல்ப் பண்ணிருக்கலாம். நீ சமைச்சுக் குடுத்ததை அடம்பிடிக்காம சாப்பிட்டிருக்கலாம். எதுவும் இல்லனா கூட நீ பின்வாசல் திண்ணைல சாய்ஞ்சு உக்காந்திருப்பியே, அப்ப உன் கையைப் பிடிச்சு என்னம்மா செய்யுதுனு அக்கறையா பேசிருக்கலாம். நான் எதுவுமே பண்ணலையே!”
 
முடிக்கும் முன்னர் அழுதுவிட்டேன். மூட் ஸ்விங்காக இருக்குமோ!
 
நான் அழுதால் அன்னைக்குப் பொறுக்காது.
 
“ப்ச்! அதெல்லாம் விடு. அது பொம்பளைங்களுக்கு விதிக்கப்பட்ட வலி. எல்லாரும் அனுபவிச்சுதானே ஆகணும். அதுக்கு ஏன்டி சாரி எல்லாம்? நான் கோதண்டம் கிட்ட சொல்லி இந்தச் சனிகிழமை பஸ்சுல டிக்கெட் போடச் சொல்லுறேன். உடம்பு சரியில்லாமதான் நீ என்னென்னமோ பேசுற. இப்ப தூங்கி ரெஸ்ட் எடு. நானும் மரகதக்காவும் கோவிலுக்குப் போகணும். வச்சிடவா?”
 
இந்த அன்னையர்கள்தான் எவ்வளவு எளிதில் பிள்ளைகளின் சின்ன சின்ன சுயநலச்செய்கைகளை மன்னித்துவிடுகிறார்கள்!
 
என் அம்மா சொன்னது போல மாதவிடாய், மெனோபாஸ் எல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் விதிக்கப்பட்டதே! அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் குடும்பத்தின் இதர உறவுகள் அவர்களுக்குத் துணையாய் இருக்கலாமே! கொஞ்சம் அக்கறையும் ஆதுரமும் காட்டலாமே!
 
அப்படி இருந்தால் என் அன்னையைப் போல இன்னொரு பெண் அந்தக் காலகட்டத்தில் உண்டாகும் உடல் மற்றும் மனரீதியான வலிகளைத் தனியே கடக்கத் தேவையில்லை அல்லவா!
 
**********
 
ஹலோ மக்களே!
 
முன்னாடி எல்லாம் பிரதிலிபி டெய்லி டாபிக் வச்சு சிறுகதை எழுதுறது வழக்கம். ஜெயாக்கா ஆரம்பிச்சு வச்ச பழக்கம் இது. இடையில விட்டுட்டேன். இன்னைக்கு எழுதணும்னு தோணுச்சு. எழுதிட்டேன். தினசரி தலைப்புல இனி சுவாரசியமான, உணர்வுப்பூர்வமான தலைப்பு வந்தா சிறுகதை எழுத முயற்சி பண்ணுறேன். நன்றி!
 
 
1747672696-WhatsApp-Image-2025-05-19-at-220537_13320c14.jpg
Quote
Topic starter Posted : May 19, 2025 10:08 PM
ESWARI reacted
(@crvs2797)
Estimable Member Member

வலிகளைக் கடந்தவள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(சிறுகதை)

அம்மா மட்டுமில்லை, ஒவ்வொரு பெண்ணுமே இது மாதிரி வலிகளை கடந்து கொண்டேத் தான் இருக்கணும்.
நேற்றைக்கு அம்மா, இன்னைக்கு நான், நாளைக்கு மகள்... இதுவே தொடர்கதை தான். ஆண்களுக்கு இதைப் போல வலிகள் இருப்பதில்லை.
நாம் வரம் வாங்கி வந்தவர்கள் தான், அதே நேரத்தில் சபிக்கப்பட்டவர்களும் கூட. அதனால் தான் நமக்கு வரமாக கிடைத்த ஒன்றே, நமக்கு சாபமாகவும் திணிக்கப்பட்டு விட்டது. பிரசவ வலியும் இதைப் போல் தான்.

இதுவும் கடந்து போகும் என்று நினைத்து வலிகளையும் கடந்து செல்ல கற்றுக் கொள்கிறோமோ என்னவோ...?
அனைத்தையும் கடந்து போகலாம், ஆனால் நம் மனம் எதையும் மறந்து போகாது.

அருமையான கதை.

😴😴😴
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : May 19, 2025 10:54 PM
(@eswari)
New Member Member

Kutty kathai thaan aanaalum unarvuppoorvamaana varigal... yenakkum past la yen amma Ku nadanthathu mind la oduthu.... arumaiyana kathai da 👌 

ReplyQuote
Posted : May 20, 2025 7:59 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@eswari ella girls kum intha ennam life la oru kattathula varumka😒

ReplyQuote
Topic starter Posted : May 22, 2025 12:02 AM