ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை ஒருவித வெறுப்புடன் பார்த்தவர் மேற்கொண்டு பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார்.
அதே நேரம் பத்மாவதி அண்ணன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை அனுசரனையாக பேசவில்லையே என்ற வருத்தத்தோடு தன் கையிலிருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவர் மெதுவாக எழுந்து பூஜையறைக்குச் சென்றார். அங்கே இருந்த வெங்கடேச பெருமாளின் முன் அதை வைத்தவர் இரு கரம் கூப்பியவராய் “பகவானே! என் பையன் கையால கட்டுனது இவ்வளவு சீக்கிரமா கழுத்தைவிட்டு கழண்டிடுத்தேனு நேக்கும் ஆதங்கம் தான். நான் எதுவும் தப்பு பண்ணியிருந்தா அதுக்கான தண்டனையை நேக்கு மட்டும் குடுங்கோ! என் குழந்தேளை தண்டிச்சாடாதேள்! மாங்கல்யத்தை கழட்டிக் கொடுக்கச் சொன்னது அபசகுனம்னு நேக்கும் தெரியும். என் ஆத்திரம் அந்த நேரத்துல என் அறிவை மறைச்சிடுத்து. இதனால எதும் அபசகுனம் ஆகாம பார்த்துக்கோங்கோ” என்று கண்ணீர் மல்க வேண்டிவிட்டு தளர்ந்த நடையுடன் அவரது அறையை நோக்கிச் சென்றார்.
அறையிலோ வேங்கடநாதன் உள்ளே ஒரு ஜீவன் வந்ததை கூட கண்டுகொள்ளாதவராய் அமர்ந்திருக்க அவர் அருகில் சென்ற பத்மாவதி “ஏண்ணா” என்று எதுவோ சொல்ல வர அவர் கை உயர்த்தி நிறுத்துமாறு சைகை செய்துவிட்டு “இது தான் நீயும் நானும் பேசிக்கற கடைசி பேச்சு பத்மா. இனி நேக்கும் நோக்கும் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. உன் உணர்வுகளுக்கு மரியாதை குடுத்து தான் என் தோப்பனார் என் தங்கையை ஒதுக்கி வைச்சார். ஆனா அவா பெத்த குழந்தேள் உன்னை என்னை செஞ்சுட்டாள்னு நீ என் மருமாளுக்கு இப்பிடி ஒரு அநியாயத்தை பண்ணுன? உன் மனசுல எந்த அளவுக்கு வஞ்சம் இருந்தா செத்தும் என் தங்கையை அபவாதமா பேசுவ? போதும்டிம்மா! இந்த ஸ்ரீனிவாசவிலாசம் உன்னோட ராஜ்ஜியம் தான். நீ உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போடு. நாங்க யாரும் இனி அதை கண்டுக்கறதா இல்ல. எங்களை விட்டுடு” என்று கை கூப்பி கூறி விட்டு விறுவிறுவென்று அறையைக் காலி செய்தார்.
கணவர் சென்றதும் தரையிலேயே தொப்பென்று அமர்ந்த பத்மாவதியின் காதில் “நீங்க வாழற வாழ்க்கை என் அம்மா போட்ட பிச்சை” என்ற கிருஷ்ணஜாட்சியின் அழுத்தம் திருத்தமான குரல் கன்னத்தில் அறைவது போல ஒலிக்க காதைப் பொத்திக் கொண்டு கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்.
அதே நேரம் ஹர்சவர்தன் மன அமைதியின்றி அவனது அறையில் உலாத்திக் கொண்டிருந்தான். இன்று மட்டும் தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் நடந்திருக்க தலையைப் பிடித்துக் கொண்டவன் அறையிலிருந்து வெளியேறி வராண்டாவில் நிலை கொள்ளாமல் நடந்தான். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் எதிர்காலம் சூனியமானது போல தோன்றியது அவனுக்கு.
கிருஷ்ணஜாட்சியும் தானும் வாழ்க்கையில் சேரவே முடியாது என்பதை புரிந்து கொண்டு அவளிடமிருந்து விலகி வர்ஷாவை மிகுந்த சிரமத்துடன் மனைவியாக ஏற்றுக் கொள்ள தயாரானவனுக்கு அந்த வருத்தத்திலும் அதிர்ஷ்டம் அடித்தது போல கிருஷ்ணஜாட்சி மனைவியானதும் அவனை அறியாமல் உள்ளுக்குள் அவன் மகிழ்ந்து தான் போனான். ஆனால் வீட்டுக்கு வந்ததும் தாயின் ருத்திரதாண்டவத்துக்கு ஆளான கிருஷ்ணஜாட்சியை ஒரு கணவனாக தான் ஆதரிக்க தவறிவிட்டதை மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டான் அவன். எப்போதும் போல அன்னை இரண்டு வார்த்தைகள் பேசுவார், பின்னர் எல்லாம் சாதாரணமாகிவிடும் என்று நினைத்தவனின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டது போல பத்மாவதி தாலியைக் கழற்றித் தரக் கூறியதும் கிருஷ்ணஜாட்சியும் அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டாள். இனி அடுத்து என்ன என்று புரியாமல் ஹால் சோஃபாவில் சாய்ந்து கொண்டான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதற்கு மாறாக கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தன் என்பவனின் பெயரைச் சுத்தமாக வெறுத்தாள். நடந்த அநியாயங்களுக்கு அவன் பொங்கி எழ வேண்டாம், அவனால் முடிந்ததாக அவன் தாயை அமைதிப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஒரு கணவனாக திருமணமான ஒரு மணிநேரத்திலேயே அவனது மனைவியின் தாலி இறங்குவதைப் பார்த்த பிறகும் அவன் அசையாமல் சிலையாக தானே இருந்தான் என்ற வேதனை தான் அது. அவளது வாழ்நாளில் அவள் என்றுமே அவனை மன்னிப்பதாக இல்லை என்று உறுதியெடுத்துக் கொண்டாள்.
ஆனால் அவளது தங்கையோ அக்காவின் வாழ்க்கை கேள்விக்குறியான அதிர்ச்சியே அவளுக்குப் போகாத நிலையில் ரகுநந்தனின் வார்த்தைகள் அவளுக்கு உச்சகட்ட அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவள் தெளிவாக இருந்தாள். யாரெல்லாம் கிருஷ்ணஜாட்சிக்கு வேண்டாதவர்களோ அவர்கள் தனக்கும் வேண்டாதவர்கள் தான் என்று அவளுக்கு அவளே அறிவுறுத்திக் கொண்டாள்.
அவளது மனதின் அலைக்கழிப்புக்கு காரணமான ரகுநந்தனோ வீட்டின் குழப்பங்கள் ஒரு புறம் இருந்தாலும் அதில் எந்த காரணத்துக்காகவும் நீரஜாட்சியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதே நேரம் சகோதரனின் வாழ்க்கையைச் சீரமைக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் மேல் கடுப்பு ஒரு புறம் இருந்தாலும் கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை அவனோடு பின்னப்பட்டிருப்பதால் தான் ரகுநந்தன் அதைப் பற்றிக் கவலைப்பட்டான். ஆனால் என்ன செய்து அவர்களைச் சேர்த்து வைப்பது என்ற யோசனையிலேயே அவன் நாட்களைக் கடத்தினான்.
அதற்கு பின்னர் ஒரு வாரத்துக்கு இந்த அமைதி நீடிக்கவே கிருஷ்ணஜாட்சி வழக்கம் போல அவளது வேலைக்குச் செல்ல தயாரானாள். ஆனால் செத்தாலும் இனி ஹர்சவர்தனின் மேற்பார்வையில் வேலை செய்ய அவள் தயாராக இல்லை. அவளது ரெசிக்னேசனை ஈமெயிலில் அனுப்பிவைத்துவிட்டு காலையிலேயே கரோலினோடு அவளது பேக்கரிக்குச் சென்று விட்டாள்.
ஆனால் ஹர்சவர்தனோ அவள் ஹோட்டலுக்கு செல்வதாகத் தப்புக்கணக்கு போட்டவன் அவசரமாக அன்று ஹோட்டலை அடைந்தான். ஆனால் தலைமை செஃப் மட்டுமே சமையலறையில் இருக்க கிருஷ்ணஜாட்சியின் ஏப்ரனும, கேப்பும் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு அவனது அலுவலக அறைக்குச் சென்றவன் லேப்டாப்பில் மெயிலை பார்க்க அதில் கிருஷ்ணஜாட்சியின் ரெசிக்னேசன் லெட்டரைப் பார்த்து விட்டு அதிர்ந்தான். ஆனால் தன்னால் அவளை எதிர்கொள்ளவும் முடியாது என்ற உண்மை முகத்தில் அறைய அவனால் வருத்தம் மட்டுமே பட முடிந்தது.
அதே நேரம் ரகுநந்தனோ ஹர்சவர்தனின் திருமணம் முடிந்த அடுத்த நாளே கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு சென்றுவிட்டான். நீரஜாட்சிக்கு அவளது சகோதரி வாழ்க்கையை நினைத்து வருத்தம் இருக்கும் என்பதால் ஒரு வாரத்துக்கு அவளை விட்டுப்பிடித்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அன்று போன் செய்தான்.
போனை எடுத்தவள் “ஹலோ யாரு?” என்று கேட்டு வைக்க அப்போது தான் அவனுக்கு உரைத்தது தன்னுடைய போன் நம்பர் கூட அவள் வசம் இல்லை என்பது.
“நான் நந்து பேசறேன்! உனக்கு ஆபிஸ் வரணும்னு எண்ணம் இருக்கறதா இல்லையா? ஏதோ சோகத்துல இருப்பேனு உன்னை டிஸ்டர்ப் பண்ணல. இதுக்கு மேலயும் நீ லேட் பண்ணுனா நான் அவுட் ஹவுஸ் வந்து உன்னை அழைச்சிண்டு வர வேண்டியிருக்கும். அவ்ளோ கஷ்டத்தை எனக்கு குடுக்காம நீயே ஆபிஸ் வந்துடு” என்று கட்டளையிட்டு விட்டு போனை வைத்து விட்டான். அதன் பின் அவன் நிறுவனத்தின் இன்ஜினியர்களுடன் மீட்டிங்கை ஆரம்பித்து இப்போது என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அது என்ன நிலையில் இருக்கிறது மற்றும் சைட் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்துக் கொண்டான்.
நீரஜாட்சி அவனது பேச்சு ஏற்படுத்தி விட்ட எரிச்சலில் அலுவலகத்துக்கு தயாரானவள் அங்கே வந்ததும் நேரே அவனது அறைக்குச் செல்ல அங்கே அவன் இல்லை. வெளியே வந்தவள் பியூனிடம் “அண்ணா! எம்.டி எங்கே?” என்று கேட்க அவர் மீட்டிங் விஷயத்தைச் சொன்னதும் கீழ்த்தளத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள். நிறுவனத்தின் அனைத்து துறைகளும் கீழ்த்தளத்தில் தான் இயங்கி வந்தன. மீட்டிங் ஹாலும் அங்கேயே இருக்க அவன் மீட்டிங் முடித்து வரும் வரை காத்திருக்க தீர்மானித்தாள் நீரஜாட்சி.
அவளது பொறுமையைச் சோதித்துவிட்டு பன்னிரெண்டு மணியளவில் மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே வந்தவன் அவனுடன் நின்ற மோகனிடம் “அங்கிள் என்னோட பி.ஏ வந்துட்டாங்க. நீங்க இனிமே ஹோட்டலுக்குப் போகலாம்” என்று அவரை அனுப்பிவைத்தான்.
தன்னைக் கண்டு எழும்பாமல் இன்னும் இருக்கையில் அமர்ந்திருப்பவளை அடிக்கண்ணால் நோட்டமிட்டபடி “கம் டு மை கேபின்” என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றவன் நீரஜாட்சியின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்ததோடு அவளது பதிலுக்கு கூட காத்திருக்காமால் லிஃப்டை படியேறி நடக்கலானான்.
நீரஜாட்சி மனம் பொருமியவளாய் “போடா! நான் வந்ததே ரிசைன் பண்ணிட்டு போக தான்” என்று எண்ணியபடி அவன் ஏறிய படிக்கட்டுகளில் விறுவிறுவென்று ஏறினாள். அங்கே அவனது அறையின் கதவில் ஆட்காட்டிவிரலால் தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவனது முகத்தைக் கூடப் பார்க்க விரும்பாமல் “என்னோட ரெசிக்னேசன் லெட்டரை மெயில் பண்ணிட்டேன். செக் பண்ணிக்கோ. நான் கிளம்புறேன்” என்று அமர்த்தலாக மொழிந்து விட்டு வெளியேறப் போனவள் அடுத்த கணமே கைவளைவுக்குள் இருந்தாள்.
கண் இமைக்கும் நேரத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளது கரம் பற்றி இழுத்தி தனது கரங்களால் அரண் போட்டுவிட நீரஜாட்சியின் கண்ணில் இருந்து வந்த அக்னியில் அவன் வெந்து போகாமல் இருந்தது பத்மாவதி செய்த பிரார்த்தனையின் பலன் தான்.
“ஹவ் டேர் யூ டு டச் மீ? லீவ் மீ இடியட். இல்லனா…” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பியவளை விடுவிக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.
“இல்லனா என்ன பண்ணுவ? உன்னோட உடைஞ்சு போன பேட்டால என் மண்டையை உடைக்க டிரை பண்ணுவியா? முடிஞ்சா பண்ணிப் பாரு. ஆனா அதுக்கு நான் உன்னை இங்கே இருந்து ரிலீஸ் பண்ணனுமே” என்று நக்கலாக மொழிய
நீரஜாட்சியோ யாராவது இவனைப் பார்க்க வந்தால் தங்களின் நிலையைக் கண்டு என்ன எண்ணுவார்களோ என்ற பதற்றத்தில் அவனது கரத்தை விலக்க முயற்சித்தபடியே “ஆபிஸ்ல இப்பிடி அறிவு கெட்ட மாதிரி பிஹேவ் பண்ணாத நந்து! யாராச்சும் வந்தா என்ன நினைப்பாங்க?” என்றுச் சொல்லிவிட்டு விலக முயன்றாள்.
அவனுக்குமே அவளிடம் இப்படி நடந்து கொள்ள ஒன்றும் ஆசையில்லை. ஆனால் இதை விட்டால் அவளைத் தடுக்கும் வழியும் அவனுக்குப் புரியவில்லை. எனவே தனது கையணைப்பிலிருந்து அவளை விடுவிக்காமலே “ஐ டோண்ட் கேர் நீரு. நீ நல்ல பொண்ணா நடந்துகிட்டா நான் ஏன் இப்பிடி பிஹேவ் பண்ணப் போறேன் சொல்லு” என்றவாறு தனது கைவளையத்தில் முழுவதுமாக விலக்காமல் பதிலளித்தான்.
அவள் பதில் பேசாமல் இருக்கவே “லிசன்! இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே. சோ நீ லேட்டா வந்தது நோ பிராப்ளம். பட் டுமாரோ ஆன்வார்ட்ஸ் யூ ஹேவ் டு கம் விதின் த ரிப்போர்ட்டட் டைம். உனக்குனு ஆபிஸ் ரூல்ஸைலாம் சேன்ஜ் பண்ண முடியாது. அன்ட் ஒன் மோர் திங் நீ என்னை வாடா போடானு கூப்பிட இது ஒன்னும் நம்ம வீடு இல்ல. சோ சார்னு சொல்லி தான் கூப்பிடணும். ஓகேவா? சொல்ல வேண்டியதுலாம் சொல்லியாச்சு. இந்த ஃப்ளோர்ல எனக்கு எதிர் ரூம் தான் உன்னது” என்று சொல்லிவிட்டு அவளை முழுவதுமாக விடுவித்தவன் அவனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
நீரஜாட்சிக்கோ தான் வேலை வேண்டாம் என்று சொல்ல வந்தால் இவன் தன்னை பணியாற்ற சொல்கிறேனே என்ற எரிச்சல் சுருசுருவென்று ஏற “எக்ஸ்யூஸ் மீ நான் இங்கே உன் கிட்ட வொர்க் பண்ண வரலை. நான் ரிசைன் பண்ணிட்டுப் போக வந்தேன்” என்றுச் சொல்ல
அவனோ “இஸிண்ட்? நீ எத்தனை வருசம் இந்த கம்பெனியில வொர்க் பண்ணுணேனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றபடி அவள் கையெழுத்திட்ட பேப்பர்களை அவள் முன்னர் தூக்கிப் போட்டான்.
“பிளீஸ் ரீட் தெம்! அந்த ரூல்ஸ் படி இந்த கம்பெனியில யாராச்சும் ரிசைன் பண்ணனும்னா நோட்டிஸ் குடுக்கணும். அதோட பீரியட் ஆறு மாசம். பட் அந்த நோட்டிஸ் குடுக்கணும்னா கூட நீ இங்கே மினிமம் ஒன் இயர் வொர்க் பண்ணிருக்கனும். இதுல எதுவும் உனக்கு சாதகமா இல்ல நீரு. சோ கோ பேக் டு யூவர் சீட்” என்று ஆணையிட்டுவிட்டு அவனது கம்ப்யூட்டர் திரையை நோக்க ஆரம்பித்தான்.
நீரஜாட்சி கடுப்புடன் “இது எதையும் நான் படிக்க மாட்டேன். என்னால உன் கம்பெனியில வொர்க் பண்ண முடியாது. தட்ஸ் ஆல்” என்றுச் சொல்லிவிட்டு செல்ல முயல
அவளுக்குச் சிறிதும் சளைக்காத குரலில் “சரி போ! பட் இன்னும் ஒன் வீக்ல கம்பெனியில இருந்து லீகல் நோட்டிஸ் வரும். அதுக்காக நல்ல லாயரையும் பார்த்துட்டு போ” என்று அசராமல் கூற நீரஜாட்சிக்கு எல்லா பக்கமும் வழி அடைத்துப் போன உணர்வு. வேறு வழியின்றி அவனது மேஜையை நோக்கிச் சென்றவளிடம் அதே ஆணையிடும் குரலில் “இங்க பாருங்க மிஸ் நீரஜாட்சி மதிவாணன், இது ஒன்னும் உங்க அப்பாவோட கம்பெனி இல்ல. நீங்க இஷ்டத்துக்கு வர்றதுக்கும், பிடிக்கலனு சொல்லிட்டு போறதுக்கும். திஸ் இஸ் மை கம்பெனி. அன்ட் யூ ஆர் மை எம்ப்ளாயி. யூ ஹேவ் டு ஒபே டு மை ஆர்டர்ஸ். அண்டர்ஸ்டாண்ட்?” என்று கேட்க அவள் வேண்டாவெறுப்பாய் தலையாட்டி வைத்தாள்.
அவளது முகத்தை ஆராய்ந்தபடியே டேபிளினின் மீது ஒர் டேபை தூக்கிவைத்தவன் “டேக் இட். எதுவா இருந்தாலும் இதுல நோட் பண்ணிக்கோங்க. அன்ட் இப்போ என்ன பண்ணுறிங்க கம்பெனி மெயிலுக்கு மோகன் அங்கிள் ஒரு டாக்குமெண்ட் ஃபார்வேர்ட் பண்ணியிருக்காரு. அதை சம்மரைஸ் பண்ணி எனக்கு மினி லிஸ்டா பிரிப்பேர் பண்ணிக் கொண்டு வர்றிங்க. அதுவும் ஒன் ஓ கிளாக் முன்னாடி” என்று முதலாளியாய் அவன் கட்டளையிட பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவள் அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
அவள் சென்றபிறகு பெருமூச்சு விட்டவன் “நந்து! நீ இப்பிடியே இருடா! இல்லனா அவ சோகத்துல மூழ்கி வேற எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ணாம போயிடுவா” என்று தனக்குத் தானே அறிவுறுத்தியபடி வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.
அவன் சொன்னது போல ஒரு மணிக்குள் எல்லாம் அந்த லிஸ்டை அவளால் தயாரிக்கமுடியாது என்று அவளது கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அந்த டாக்குமெண்டை பார்த்துக் கொண்டிருந்த நீரஜாட்சிக்கு புரிந்துவிட்டது. பின்னே என்னவாம்! நானூறு பக்க டாக்குமெண்டை சுருக்கி கொண்டு வா, அதுவும் ஒரு மணி நேரத்துக்குள் என்று கட்டளையிட்டால் அவள் என்ன தான் செய்வாள்!
புலம்பியபடி வேலையைத் தொடர்ந்தவள் அவன் கூறிய நேரத்துக்கு அரை மணி நேரம் தாமதமாகத் தான் வேலையை முடித்தாள். ஒரு காப்பியை அவனுக்கு மெயில் செய்துவிட்டு பிரிண்ட் அவுட் எடுத்த லிஸ்டுடன் அவனது அறைக்குச் சென்று அவனிடம் கொடுத்தவள் “நான் லன்சுக்கு வீட்டுக்குப் போகணும்” என்றாள் மொட்டையாக.
ரகுநந்தன் புருவம் உயர்த்தியவன் “அப்பிடி ஒரு ரூல் இந்த ஆபிஸ்ல இல்ல. நீங்க பியூன் கிட்ட சொல்லுங்க. அவரு வாங்கிட்டு வருவாரு” என்றுவிட்டு அவனது வேலையில் கண்ணானான்.
நீரஜாட்சியோ முகம் சுளித்தவளாய் “நான் நம்ம ஹோட்டல் தவிர வேற எந்த ஹோட்டல்லயும் சாப்பிட மாட்டேன்” என்று பதிலளிக்க அவன் சாதாரணமாக “அப்போ மதியம் லன்சை மறந்துடுங்க. நோ பிராப்ளம். ஒரு வேளை சாப்பிடலனா ஒன்னும் ஆயிடாது” என்றுச் சொல்லிவிட்டு அவளை அவளது அறைக்குச் செல்லுமாறு சைகை காட்டினான்.
அதற்கு மேல் அவனிடம் கெஞ்ச அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவன் சொன்னது போல ஒரு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் ஆகாது என்று அவள் வயிற்றைச் சமாதானப்படுத்த தொடங்கினாள். சரியாக அரை மணிநேரத்தில் டேபில் கால் வர “சைட்டுக்குப் போகணும். கம் டு மை கேபின்” என்றவனின் குரலில் அவளுக்கு எரிச்சல் வந்தாலும் வேறு வழியின்றி அடுத்த சில நிமிடங்களில் அவனுடன் காரில் அமர்ந்தாள் நீரஜாட்சி.
அவர்களின் நிறுவனம் எடுத்திருக்கும் அப்பார்ட்மென்ட் கான்ட்ராக்டுக்கான சைட் அது. அங்கே சென்றவர்கள் வேலை எவ்வாறு நடைபெறுகிறது என்று அவன் மட்டும் மேற்பார்வையிடச் சென்று விட நீரஜாட்சிக்கோ பசி வயிற்றில் கபடி விளையாடியது.
மனதிற்குள் “அடேய்! உனக்கு என் மேல எத்தனை நாள் கோவமோ தெரியல. இப்பிடி பட்டினி போட்டுக் கொல்லுறியே! சரியான கல்நெஞ்சக்காரன். ஆளையும் மூஞ்சையும் பாரு” என்று அவனுக்கு அர்ச்சனை செய்தவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளிடம் திரும்பி வந்தவன் “சால் வீ கோ?” என்று கேட்க நீரஜாட்சி மனதிற்குள் “ஆமா என் கிட்ட கேட்டுட்டு தான் துரை கிளம்புவாரு! போடா டேய் என் சாபம் உன்னை சும்மா விடாது” என்று கறுவியபடி அவனைத் தொடர்ந்தாள்.
காரில் ஏறி அமர்ந்தவள் அடுத்து அலுவலகம் தான் என்று நினைக்க ரகுநந்தன் அவர்களது ஹோட்டலுக்குச் சென்று நிறுத்தவே திகைப்புடன் அவனைத் தொடர்ந்தாள். உள்ளே சென்று ஏ.சியில் அமர்ந்தவள் தனக்கு எதிரே இருப்பவனை முறைத்தபடி “இப்போ எதுக்கு நம்ம இங்க வந்திருக்கோம்…சார்” என்று கேட்க
அவனோ “ஹோட்டலோட செஃப் இன்னைக்கு லீவாம். சோ இன்னைக்கு ஒன் டே உன்னைச் சமைக்க வைக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்” என்று சாதாரணக்குரலில் கூற அவள் “வாவ்! வாட் அ ஹியுமர் சென்ஸ். பட் நான் இன்னும் ஒரு மாசம் கழிச்சு சிரிச்சுக்கிறேன்” என்றுப் பொய்யாக பாராட்டும் போதே பேரர் வந்துவிட இருவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்தான் ரகுநந்தன்.
நீரஜாட்சிக்கு சாப்பாட்டைக் கண்டதும் அவனும் மறந்து போனான், இந்த உலகமும் மறந்து போனது. அவளுக்கு இருந்த பசி அப்படி! திருப்தியாக சாப்பிட்டு விட்டு கை கழுவிவந்தவள் பில்லுக்கு ரகுநந்தன் பணம் கொடுக்கவே மனதிற்குள் “அவங்க ஹோட்டலுக்கே பணம் குடுக்கிறான், அவ்ளோ நல்லவனா நீ?” என்றபடி அவனிடம் சென்றாள்.
“எனக்கு ஒன்னும் நீங்க பே பண்ண வேண்டாம் சார். நானே குடுத்துப்பேன்” என்று அமர்த்தலாக மொழிய அவன் பில்லை அவள் புறம் நகர்த்திவிட்டு அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு அமர நீரஜாட்சி பில்லைப் பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள்.
“வாட்? முன்னூற்று ஐம்பது ரூபாயா?” என்று அவள் அதிர பேரர் தான் அவளை ஒரு மாதிரி பார்த்தார். என்ன செய்ய இது வரைக்கும் அவர்களின் ஹோட்டலில் பணம் கொடுத்துச் சாப்பிட்டது இல்லையென்பதால் விலை அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. நீரஜாட்சி முகத்தைச் சுருக்கிக் கொண்டு ஹேண்ட் பேகில் பார்க்க அவளிடம் அவ்வளவு பெரிய தொகை(?) இல்லை.
அவள் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டவன் தனது கார்டை கொடுத்துவிட நீரஜாட்சி “எதுக்கு காஸ்ட்லினு தெரிஞ்சும் இந்த ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தடா?” என்றுக் கேட்க
ரகுநந்தன் பொறுமையாக “நீ தானே சொன்ன நம்ம ஹோட்டல் சாப்பாட்டை தவிர வேற எங்கேயும் சாப்பிட மாட்டேனு” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேரர் கார்டுடன் திரும்பி வர அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் வெளியேறினர்.
அதன் பின் அலுவலகம் வந்த நீரஜாட்சிக்கு முதுகை முறிக்கும் அளவுக்கு அவன் வேலை கொடுக்கவே அவளாலும் அதன் பின் அதிக நேரத்துக்கு சோகமாகவோ கோபமாகவோ இருக்க முடியவில்லை. ரகுநந்தன் அவள் அறியாமல் அவளது அறையை நோட்டமிட்டவன் அவள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்க அதைக் கண்டு புன்னகைத்துவிட்டு தன் திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தனது அறைக்குத் திரும்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

