பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே,
“அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா!” என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர், மருமகளின் முகம் இன்னும் இளகாததைக் கண்டு மனம் வெதும்பினார்.

“என்னோட பேத்திகளுக்கு இடம் இல்லாத வீட்டில நானும் இனி தங்கப்போறதில்ல. நீயும் கிளம்புடிம்மா. நமக்கு நம்ம பேத்திகள் இருக்கா. இனி அவாதான் நமக்கு எல்லாமே” என்றபடி நடுங்கும் கரங்களால் பேத்திகளின் சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு அவரது மனைவியுடன் வெளியேறத் தொடங்கினார் பட்டாபிராமன்.
வீட்டை விட்டு வெளியேறி நடந்தவர், கனத்த இதயத்துடன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் கிருஷ்ணன் சிலையோடு கூடிய நீருற்றின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்தார். அவர் அருகில் அமர்ந்த சீதாலெட்சுமி அவரின் முகவாட்டத்தைக் கண்டுகொண்டு,
“ஏண்ணா எதும் பண்றதா உங்களுக்கு? நான் வேணும்னா ஜலம் கொண்டு வரவா?” என்று பதறிப்போய்க் கேட்க,
அவர் மனைவியையும் பேத்தியையும் அர்த்தபுஷ்டியோடு பார்த்தபடி,
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நேக்கு ஒன்னுமில்லடி சீதே! வயசாயிடுதோன்னோ, அதான் சரீரம் என்னோட பேச்சைக் கேக்காம அடம்பிடிக்கறது. அது மட்டுமில்லாம லட்டு போல பேத்திகள் கண் முன்னே நிக்கறச்ச அவாளை விட்டுட்டு அவ்ளோ ஜல்தியா போய்ச் சேர்ந்துட மாட்டேன்டி நான்” என்று மனைவிக்கும் பேத்திகளுக்கும் தைரியம் சொல்ல, அவர்கள் முகம் தெளியவும் வீட்டினுள் இருந்து பத்மாவதி வெளியே வரவும் சரியாக இருந்தது.
வந்தவரின் முகத்தில் வயதான மாமனார் மாமியாரின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு தெளிவாகத் தெரிய, இரு பெண்களையும் முறைத்தவாறே மாமனாரின் அருகில் நின்றவர்,
“அப்பா ஆத்துக்குள்ளே வாங்கோ. நான் இனி உங்க பேத்திகள் ரெண்டு பேரையும் எதுவும் சொல்லப்போறது இல்ல” என்றுச் சொல்ல, சீதாலெட்சுமிக்கே ஆச்சரியம். அவருக்குத் தெரிந்த பத்மாவதிக்குத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றுச் சொல்லும் அளவுக்குப் பிடிவாதம் உண்டு.
‘தன் மருமகளா இது?’ என்றபடி பார்வையை அவள் முகத்தில் பதிக்க, மாமனாரின் மீது வைத்திருக்கும் மரியாதை அதில் தெளிவாகத் தெரியவே சீதாலெட்சுமி தன் கணவரிடம்,
“உங்க மாட்டுப்பொண்ணு தான் சொல்றாளோன்னோ! பிடிவாதம் பிடிக்காதேள்ணா!” என்று கணவரைச் சமாதானம் செய்ய முயன்றார்.
பத்மாவதி இரு பெண்களையும் கூரிய விழிகளால் அளவிட்டபடியே, “ஆனா இவா ரெண்டு பேரும் அந்த ஆத்துக்குள்ள வரப்படாது. இவா நம்ம அவுட் ஹவுஸிலேயே தங்கிக்கட்டும். என்னால அவ்ளோ சுலபமா இவாளோட அம்மா பண்ணுன காரியத்தை மறக்க முடியாது. நம்மாத்துல தங்குனா நானே இவா மனம் கோணுறபடி ஏதும் சொல்லி அதால குழந்தேள் மனசு கஷ்டப்பட்டுடக் கூடாது பாருங்கோ” என்று தன் மனநிலையைத் தெளிவாக எடுத்துரைக்க, மூத்தவளுக்கு இது நன்றாகவே புரிந்தது.
தாத்தாவின் காலடியில் அமர்ந்தவள், “தாத்தா, மாமி தான் இவ்ளோ தூரம் சொல்லுறாங்கள்ல. நீங்களும் பாட்டியும் உள்ளே போங்க. நானும் நீருவும் அவுட் ஹவுஸிலேயே இருந்துப்போம். எங்களுக்குப் பயம் ஒன்னும் இல்ல” என்று பெரியவருக்குத் தைரியம் சொல்ல, அவருக்கும் மருமகள் மற்றும் பேத்திகளின் மனநிலை புரிய, மருமகளின் அந்த முடிவுக்கு அவரும் கட்டுப்பட்டார்.
பத்மாவதியின் முகத்தில் ஒரு நிமிடம் ஜெயித்ததற்கான சிரிப்பு வந்ததோ என்று கிருஷ்ணஜாட்சிக்குத் தோன்றினாலும் அதை அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய பாட்டனாரும் மருமகளின் முகத்தில் தோன்றிய மாற்றத்தைக் கவனிக்கவில்லை. ஒருவேளை இருவரில் ஒருவர் அதைக் கண்டிருந்தால் பிற்காலத்தில் நிகழப்போகும் பல மோசமான சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ!
பத்மாவதி உள்ளே சென்றதும் கிருஷ்ணஜாட்சி தாத்தாவின் கையைப் பிடித்துத் தூக்கிவிட, எழுந்தவர் நீரஜாட்சியைப் பார்த்து,
“குழந்தே! உன் அக்கா கஷ்டம்னாலும் யார்கிட்டவும் சொல்லிக்க மாட்டா. ஏன்னா என் பொண்ணு மதுரவாணி அப்படித் தான். ஆனா நீ ரொம்ப தைரியமான பொண்ணு தானே! இங்கே யார் உன்னை எதுவும் சொன்னாலோ, இல்ல கிருஷ்ணாவைத் திட்டினாலோ அதை உடனே தாத்தா பாட்டி கிட்டச் சொல்லிடன்ணும். சரியா?” என்றுச் சொல்ல, அவள் தலையை மேலும் கீழுமாக ஆட்ட,
சீதாலெட்சுமி அவளது கூந்தலைக் கண்டு கேலியாக,
“உங்க தாத்தா உன்னை முதல் தடவை பார்த்துட்டு உன்னைப் பத்தி என்கிட்ட சொல்லுறச்ச என்ன சொன்னார் தெரியுமோ? மதுராவோட ரெண்டாவது பொண்ணு பையனா பிறக்க வேண்டியவன்னார். நேக்கு அது இப்ப புரியறது” என்றுச் சொன்னபடி அவளது தலையைக் கலைத்துவிட, அவள் முடியைச் சிலுப்பிக்கொண்டாள்.

“ஸ்ஸ்.. சித்து சும்மா சும்மா என்னோட முடியில கை வைக்காதே” என்று மூக்கைச் சுருக்கிக்கொண்டு அவள் சொன்ன விதம் கணவன் மனைவி இருவரையும் கவர்ந்துவிட,
சீதாலெட்சுமி, “என்னதுடிம்மா? சித்துவா? இதுவரைக்கும் என் ஆத்துக்காரர் கூட என்னை இப்பிடி கூப்பிட்டதில்லடி” என்றுச் செல்லமாக அங்கலாய்க்க, பட்டாபிராமன் இளைய பேத்தி மனைவிக்கு வைத்த செல்லப்பெயரை நினைத்துச் சிரித்தார்.
“நன்னா சிரிங்கோ! நாளைக்கே உங்களுக்கும் ஒரு செல்லப்பேரை வைக்கப்போறா உங்க பேத்தி” என்று பதிலுக்குக் கணவரைக் கேலி செய்ய,
நீரஜாட்சி அவரை குறும்புடன் பார்த்து, “நான் ஆல்ரெடி வச்சிட்டேன் சித்து. தாத்தாவோட ஷார்ட் நேம் பட்டு” என்றுச் சொல்லிவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிக்க,
பட்டாபிராமன், “நீ வைச்சுக்கோடி ராஜாத்தி. நீ வைக்காம வேற எந்தக் கொம்பன் எனக்குப் பேர் வச்சு அழைக்கப்போறான்?” என்று சின்னப் பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும்போதே ராயல் என்ஃபீல்டின் சத்தம் அந்த வீட்டுக் காம்பவுண்டுக்குள் கேட்க, சீதாலெட்சுமிக்கு வருவது யாரென்று அப்போதே புரிந்துவிட்டது.
அந்தச் சத்தம் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்று நிற்கவும், சில கண இடைவெளியில் தட்தடென்ற காலணியின் சத்தத்துடன் யாரோ வரும் அரவம் கேட்க, கிருஷ்ணஜாட்சி கழுத்தை வளைத்துத் திருப்பிப் பார்த்தாள். அங்கே வந்து கொண்டிருந்தவன் அந்த வீட்டின் சிறிய இளவரசன் ரகுநந்தன்.
வெள்ளை நிற ஸ்போர்ட்ஸ்வேரில் அவன் அண்ணனைப் போன்ற உயரம், அவனைப் போன்ற நிறம் என்று தோற்றத்தில் ஒரு குறைபாடும் சொல்ல இயலாது.
கல்லூரி முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதால் கல்லூரி மாணவர்களுக்கே உரித்தான கண்மூடித்தனமான ஃபேஷனை கடவுள் புண்ணியத்தால் அவன் அளவோடு பின்பற்றியதாலோ என்னவோ அவனது தலைமுடி தப்பித்துவிட்டது. கிளீன் ஷேவ் முகத்துடன் சிகரெட் அறியா உதடுகளுடன் தங்களை நோக்கி நடந்து வருபவன் யாரென்ற கேள்வி கிருஷ்ணஜாட்சிக்குள் எழ, நீரஜாட்சியோ அவள் பாட்டுக்குத் தாத்தா பாட்டியிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள்.
ரகுநந்தன் அவர்கள் இருவரையும் நோட்டமிட்டபடி, “யாரு இந்தப் பொண்ணும், குட்டிப்பையனும்? இவா ஏன் தாத்தா பாட்டி கூட நின்னுண்டிருக்கா?” என்று தனக்குள் கேட்டபடி வந்தவன், நேரே தாத்தாவின் எதிரில் சென்று நின்றான்.
“தாத்தா இவா ரெண்டு பேரும் யாரு? இந்தப் பொண்ணு முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி தோணறது! ஆனா இந்த குட்டிப்பையன் யாரு?” என்று நீரஜாட்சியைத் தலையிலிருந்து கால் வரை பார்க்க, அவள் முகம் கோபத்தில் மிளகாய்ப்பழம் போல் சிவக்க, அதைக் கண்டதும் ஒரு கணம் ஜெர்க் ஆகி நின்றான்.
நீரஜாட்சி கோபத்துடன், “யாருடா பையன்? நானா? அதுவும் குட்டிப்பையனா? நான் ஒன்னும் குட்டிப்பையன் இல்ல. எனக்கு இந்த செப்டம்பர் வந்தா சிக்ஸ்டீன் இயர்ஸ் வரப்போகுது” என்றுச் சண்டைக்கோழியாய்ச் சீற, அவன் வாயில் கைவைத்து ஆச்சரியப்பட்டான்.

பின்னர் கேலியாய் அவளைப் பார்த்தபடி, “அப்ப உனக்கு பையன்னு சொன்னது பிரச்சனை இல்ல, குட்டிப்பையன்னு சொன்னது தான் பிரச்சனையாக்கும்?” என்று இன்னும் அவளைச் சீண்டிவிட, அவள் எதுவும் சொல்லி அவர்களுக்குள் கலகம் மூள்வதற்குள் பட்டாபிராமன் இரு பெண்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
“இவா ரெண்டு பேரும் நோக்கு அத்தங்கா! இது மூத்தவா கிருஷ்ணஜாட்சி. இது இளையவா நீரஜாட்சி“ என்று அவர்களை அறிமுகப்படுத்த,
அவன் தலையைத் தட்டி யோசித்தபடி, “ஞாபகம் வந்துடுச்சு. மதுரா அத்தையோட பொண்ணுங்களா இவா? ஓகே ஓகே. சரி வெளியே ஏன் நின்னுண்டிருக்கா? உள்ளே அழைச்சிண்டு வர வேண்டியது தானே!” என்று அவனைப் பெற்ற புண்ணியவதி இவ்வளவு நேரம் ஆடிவிட்டுச் சென்ற தாண்டவத்தை அறியாமல் சாதாரணமாகக் கூற, பட்டாபிராமன் அவர்கள் சிறிது காலத்துக்கு அவுட் ஹவுஸில் தங்குவார்கள் என்று மட்டும் சொல்லவே, அவன் சரியென்று தலையாட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
நேரே மாடிக்குச் சென்றவன், மாடியோர வராண்டாவில் நின்றபடி கீழே தோட்டத்தில் நின்று தாத்தா பாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்ததும், அவன் அருகில் சென்று அவன் காதுக்குள் “ஓ” என்று கத்த, அவன் பதறியவனாய் விலகி நின்றான்.
ஒரு கணம் அவன் இதயம் நின்று துடிக்க, தன்னைப் பார்த்து விழுந்து விழுந்துச் சிரிக்கும் தம்பியை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டான் ஹர்சவர்தன்.
“என்னடா அண்ணா பயந்துட்டியோன்னோ?” என்று கேலி செய்தபடி அண்ணனின் பார்வை இன்னும் அந்தப் பெண்களின் மீதே இருப்பதைக் கண்டதும், “டேய் அண்ணா! நம்ம அத்தை பெத்த பூங்குயில்களை ரசிச்சிண்டு இருக்கியா?” என்று கேலி செய்தபடி அவனும் அவர்களை நோட்டம் விட ஆரம்பித்தான்.
ஹர்சவர்தன் அவன் தோளில் கை வைத்தபடி யோசிக்க ஆரம்பிக்க, ரகுநந்தன், “ப்ச்.. தப்பா சொல்லிட்டேன்டா. அத்தை பெத்தது ஒரே ஒரு பூங்குயில் தான். இன்னொன்னு சரியான ஆங்ரி பேர்ட். அது கிட்ட மனுஷன் பேசுவானா? ஃபர்ஸ்ட் அதை நான் பையன்னு நெனைச்சிண்டேனா பார்த்துக்கோ” என்றுச் சொல்ல,
ஹர்சவர்தன், “பார்த்துடா! தாத்தா காதுபட சொல்லிடாதே. காத்தாலே இந்தப் பொண்ணுங்க வந்ததுலே இருந்தே அவர் சரியில்ல“ என்றான் யோசனையாக.
ரகுநந்தன், “அதை விடுடா அண்ணா. நான் நம்ம அத்தையை போட்டோல மட்டும் தானே பார்த்திருக்கேன். ஆனா அவங்களைப் பார்த்தா ஏதோ இன்டெலெக்சுவல் மாதிரி தெரிஞ்சது. பட் இந்தப் பொண்ணுங்களோட பேர் விஷயத்துல அத்தை ஒரு தப்பு பண்ணிட்டாங்க. பொண்ணுக்குப் பையனோட பேரான கிருஷ்ணாவை வச்சிருக்காங்க! ஆனா அந்தப் பையனுக்குப் பொண்ணு பேரான நீரஜாவை வச்சிருக்காங்க. நம்ம அத்தை அவா ரெண்டு பேருக்கும் பேர் வச்ச விஷயத்துல பெருசா சொதப்பிட்டாங்கப் போல” என்று கேலி செய்த ரகுநந்தனுக்குச் சிரித்தபடி ஹை-பை கொடுத்தான் அவனது அண்ணன் ஹர்சவர்தன்.

பின்னர், “அவங்க அவுட் ஹவுஸில் இருக்கறதுக்குத் தாத்தாவும் ஒத்துண்டார். ஆனா இவாளால நம்மாத்துல எதும் பிரச்சனை வருமோங்கிறது தான் நேக்கு டவுட்” என்றான் சந்தேகம் நிறைந்த குரலில்.
ரகுநந்தன் அவனைத் தோளோடு அணைத்தபடி, “அதுங்க ரெண்டும் அப்பிராணிங்கடா அண்ணா. அவாளுக்கெல்லாம் அவ்ளோ சீன் இல்ல” என்று சொல்ல, அப்போதைக்கு அதைத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டாலும் அவன் மனம் நிம்மதியடையவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

