மனிதர்கள் விரோதத்தை மறந்துவிடுவார்கள். கசப்புணர்வை மறந்துவிடுவார்கள். இவ்வளவு ஏன்? எப்பேர்ப்பட்ட வெறுப்பும் ஒரு நாள் விருப்பமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துவிடும். அவர்களால் மறக்கவே முடியாத ஒன்று உண்டென்றால் அது நேசித்த நபரால் அவர்கள் அடைந்த இழப்பு மட்டுமே! இழப்பு கொடுக்கும் வேதனையும் சோகமும் காலத்தால் கூட ஆற்றவும் மாற்றவும் முடியாது.
-பூபாலன்
“உங்களுக்கு ஹீட்டர் போட்டுட்டேன்பா. நீங்க குளிங்க. நான் நல்லத்தண்ணி பிடிச்சு வச்சிடுறேன்”
தந்தையிடம் சொல்லிவிட்டுக் குடிநீர்க் குழாய் திண்டில் வரிசையாக இருக்கும் குடங்களை நிரப்ப ஆரம்பித்தான் பூபாலன்.

“ஹூம்! இதெல்லாம் நீ பண்ணனும்னு என்ன தலையெழுத்து? செய்ய வேண்டியவளை மெட்ராசுக்குப் பஸ் ஏத்தி அனுப்பிட்டு இப்ப நீயும் நானும் அல்லாடுறோம் பாலு” என்று புலம்பியபடியே குளிக்கச் சென்றார் குணசேகரன்.
அன்றோடு சங்கரி சென்னைக்குச் சென்று மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த மூன்று நாட்களில் வீட்டு வேலைகளைப் பூபாலன்தான் இழுத்துப் போட்டுச் செய்கிறான். முதலிரண்டு நாட்கள் அவன் வேலை செய்வதைப் பார்த்து எரிச்சலோடு கடந்த குணசேகரனால் அன்றைய தினம் எரிச்சலடைய முடியவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஏனெனில் வேலை செய்து சோர்வடைவது அவரது இரத்தமாயிற்றே!
“க்கும்! ஏதாச்சும் செய்யட்டுமா? நீ மட்டும் தனியா வேலை பாக்குறப்ப எனக்குக் கஷ்டமா இருக்கு”
இந்தக் கேள்வியைக் கேட்டவரைதான் குளிக்க அனுப்பிவைத்தான் அவன்.
குளித்துவிட்டு வந்தவர் மகனிடமிருந்து ஒவ்வொரு குடமாக வாங்கி சமையலறையில் வரிசையாக வைத்து மூடினார்.
“நீ தினமும் மெஸ்சுக்கு அலையவேண்டாம். காலைல நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன். அப்பிடியே ஹோஸ் ஒன்னு வாங்கிடு. எனக்கு வாசல் கூட்ட வராது. ஹோஸ் வச்சு தண்ணி பிடிச்சா வாசல் தெளிச்ச மாதிரி ஆகிடும். தெளிக்காத வாசல்ல மூதேவி வந்து நின்னு ஆடுவாளாம். உங்க ஆச்சி சொன்னது”
சாப்பிடும்போது அவர் கூற பூபாலனுக்கே ஆச்சரியம்தான்! அம்மா இருக்கும்போது ஒரு குண்டூசியை நகர்த்தியது கிடையாது. இப்போது வாசல் தெளிக்கும் வேலையைக் கூட தயங்காமல் செய்யட்டுமா எனக் கேட்கிறார்! இந்தத் தந்தை அவனுக்குப் புதியவராகத் தெரிந்தார்.
வீட்டுவேலையை ஆண்கள் செய்வதா என்று சிம்மக்குரலில் கர்ஜிக்கும் தந்தை இன்று பூனைக்குட்டி போல அமைதியாக அனைத்து வேலைகளையும் செய்யத் தயாராகிறார். காலத்தால் நிகழும் மாற்றங்களுக்கு எல்லா சம்பிரதாயங்களும், கோட்பாடுகளும், எண்ணவோட்டங்களும் அடிபணிந்தே ஆகவேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டுவிட்டான் அவன்.
எப்படி தந்தையிடம் இருக்கும் சில எண்ணவோட்டங்கள் இப்போது மாறியிருக்கின்றனவோ அப்படியே தன்னுடைய எண்ணவோட்டங்களும் மாறுதலுக்குட்படவேண்டும் என்ற சிந்தனையும் பூபாலனுக்குள் பிறந்தது.
அவனுக்கும் அன்னை இல்லாத வீட்டின் வெறுமை மனதைத் தின்றதுதான். கூடவே இருக்கும்போது அவரது அருமையைப் புரிந்துகொள்ளாத தந்தையும் அந்த வெறுமையை உணர்கிறார் என்று தெரிகிறது. அதுவே பல நேரங்களில் ஆற்றாமையாகவும் புலம்பலாகவும் வெளிவருகிறது போல.
அவர் உணரும் வெறுமையை ஒரு காலத்தில் உணர்ந்தவன்தானே அவனும்.
இங்கே யாரிடமும் வான்மதியில்லாத வாழ்க்கையின் வெறுமை பற்றி அவன் புலம்பியதில்லை. ஆனால் ஒன்றரை மாதத்திற்கு முன்னர் சென்னையில் ஒரு க்ளையண்டின் திருமணத்திற்கான புகைப்படம் எடுக்கும் பொறுப்பை அவன் ஏற்றிருந்தபோது அங்கே யாரிடமோ புலம்பியதாக ஞாபகம். வேண்டாம் வேண்டாமெனச் சொல்லியும் பிரபு கொடுத்த மதுவின் விளைவு அது.
யாரிடம் புலம்பினான் என்று கூட நினைவில்லாத அளவுக்குக் குடித்தாலும் புலம்பலின் போது உதிர்த்த வார்த்தைகள் மறக்கவில்லை அவனுக்கு.
“இதே போல மேரேஜ்..ல…தான் நான் அவளை முதல்ல பா…த்தேன்… என் கண்..ணும் கே…ம்…ம்..மராவும் அவளை விட்டு விலகவே..ல்ல தெரியுமா? தேவதை மாதிரி… அ…அப்பிடி ஒரு அழகு… காதலிச்சப்ப தேவதையா இருந்தவ கல்யாணத்துக்கு அப்புறம் எப்பிடி… எப்பிடி பிசாசா தெரிய… ஆரம்பிச்ச்சா??? நான்… நான் என் கோவத்தால… அவளை இழந்துட்…ட்டேன்… ரொ..ம்ப்ப்ப அசிங்கப்…படுத்திட்டே…ன்… இனி…மே அவ,… எனக்கு இல்ல”
கேட்டுக்கொண்டிருந்த நபர் ஆறுதலாக அவனது முதுகில் தட்டியது கூட நினைவிருக்கிறது.
“முயற்சி பண்ணி பாருங்க. அவ உங்களுக்குத் திரும்ப கிடைக்க வாய்ப்பிருக்கு”
“நோ… நோ…நோ.. அவ வரமாட்டாஆஆ… அவளை வரவிடமாட்டாங்க… இப்ப்…பிடியே வாழ்..ந்து த..னிமரமா… நான்.. செத்தாலும்… அவளை வரவிடமாட்டாங்க… எ…ன்னை… மன்ச்சிடுங்க…. பு…லம்பிட்டே…”
இதோடு அவன் சுயநினைவிழந்து போனான்.
இங்கே அனைவரிடமும் வான்மதியைப் பிரிந்ததால் எனக்கொன்றும் நஷ்டமில்லை என்று நடிக்க முடிந்தவனால் அவளை முதலில் சந்தித்தது போன்ற சூழலில் மீண்டும் சந்தித்ததும் நடிக்க முடியாமல் போனது.
நான்கு ஆண்டுகளில் எதேச்சையாக அவளை ஆங்காங்கே கண்டபோது கூட அவனது மனம் தனது இழப்பை நினைத்து வருந்தும். ஆனால் அதைக் காட்டிக்கொள்ள அவனது ஈகோ இடமளித்ததில்லை.
அந்தத் திருமணத்தில் கூட மதுவின் ஆதிக்கத்தால் மட்டுமே புலம்பித் தள்ளினான். இனி மதுவைத் தொடவேக்கூடாது என்ற சங்கல்பத்தை எடுத்துக்கொண்டதும் அங்கேதான்.
இப்போது அவர்கள் இணைந்துவிட்டார்கள். ஆனால் இயல்பான உரையாடல் கூட அவர்களிடையே பெரும் சவாலாக அல்லவா இருக்கிறது. ஒரு பொழுதில் மொபைல் அழைப்புகளும், வாட்சப் செய்திகளும் சந்தோசத்தைக் கொடுத்தாலும் சில நேரங்களில் பழைய சம்பவங்களை நினைவுறுத்தி வாக்குவாதங்களாக மாறிவிடுகின்றன.
சற்று முன்னர் அன்னையைப் பற்றி வாட்சப்பில் விசாரித்தான். சுமூகமாகத்தான் உரையாடல் சென்ற மாதிரி இருந்தது. எங்கே என்ன தவறு செய்தான் என்று புரியவில்லை.
“என்னமோ நான் உங்கம்மாவை இங்க அழைச்சுட்டு வந்து கொடுமைப்படுத்துற மாதிரி பேசுறிங்க. ப்ளீஸ் இன்னும் ரெண்டு நாளுக்கு எனக்குப் போனோ மெசேஜோ பண்ணாதிங்க”
கோபத்தோடு பதில் வந்திருந்தது வான்மதியிடமிருந்து.
என்ன நான் தவறாகக் கேட்டுவிட்டேன்? இப்போதும் ஆதங்கம் அவனிடம்.
குளித்து உடை மாற்றியவன் குணசேகரனும் வந்துவிட அவரோடு அமர்ந்து சாப்பிடலானான்.

அதே நேரம் வான்மதி அவளது ஃப்ளாட்டில் சோர்ந்த முகத்தோடு நிறுவனம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள்.
அதைக் கவனித்துவிட்டார் சங்கரி. இங்கே வந்த மூன்று நாட்களில் அத்துணை ஆசுவாசமாக உணர்ந்திருந்தார் அவர்.
காலையில் சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்தேயாக வேண்டுமெனக் கட்டாயமில்லை. அரக்க பறக்க சமைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எப்போது யார் குறை சொல்வார்களோ என்ற கவலை இல்லவேயில்லை. சுதந்திரமாக, நிம்மதியாகப் புதியதொரு பிறப்பெடுத்தது போல உணர்ந்தார்.
“உங்களுக்குக் காபி, ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் நானே பண்ணி வச்சிட்டுப் போய்டுறேன். நீங்க மருந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா மட்டும் போதும்” என்று சொல்லும் மருமகள் அவரது நாட்களை இலகுவாக்கியிருந்தாள்.
மதியவுணவை பிபினைக் கவனிக்க வரும் கேர்டேக்கர் பெண்மணி சமைத்துக் கொடுப்பார் சங்கரிக்கு. பிபினோடு ஓடி விளையாடும் வயதில்லை என்றாலும் அவன் சொல்லும் கதைகளைப் பிரமிப்போடு கேட்பார்.
மாலையில் மருமகள் வீட்டுக்கு வந்ததும் இருவருமாகச் சேர்ந்து பூங்காவில் வாக்கிங் செல்வார்கள். கூடவே ஜோதிர்மயியும் பிபினும் சேர்ந்துகொள்வார்கள்.
முந்தைய தினம் அருகிலிருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சங்கரியை அழைத்துச் சென்று அவரது மருத்துவ அறிக்கைகளைக் காட்டியிருந்தாள் வான்மதி. மாஸ்க் அணியவேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் இருமும் போது மட்டும் கைக்குட்டை அவசியம் என்றார்.
இனி அங்கேயே வாராந்திர செக்கப் மற்றும் மருந்துகள் வாங்கினால் போதும்.
மூச்சு முட்டிய நிலை மாறி நிம்மதியாகச் சுவாசிப்பது போல உணர்ந்த சங்கரிக்கு மலர்ந்த முகத்துடன் தனக்குப் பிடித்ததைச் செய்யும் மருமகள் மீது அன்பும் நன்றியுணர்ச்சியும் மிகுந்தது.
அவளது சோர்ந்த முகம் அவரை வருத்தியது.
மெதுவாக என்னவென விசாரித்தார்.
அப்போதுதான் வான்மதியின் கண்கள் கலங்கியிருப்பதைக் கவனித்தார்.
“என்னாச்சு வானும்மா? எதுக்குக் கண் கலங்கிருக்க? ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” எனப் பதறிவிட்டார்.
வான்மதி சட்டெனக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“ஒ…ஒன்னுமில்ல… அத்தை. ஐ அம் ஓ.கே” என்றவளின் உதடுகள் துடித்த விதம் அழுகையை அடக்குகிறாள் என்பதைக் கண்டுக்கொண்டார் அவர்.
“என்கிட்ட சொல்லலைனாலும் பரவால்ல. அழாத!” என்று அவளது சிகையை வருடிக்கொடுத்தவர் அவளை அனுப்பிவைத்தார்.
அறைக்குள் போன வான்மதி குளியலறையில் இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுதுத் தீர்க்க ஆரம்பித்தாள். அதிகநேரத்தை அழுகையில் கரைக்க முடியாது. வேலை இருக்கிறது.

கண்களைத் துடைத்துக்கொண்டவள் முகத்தைக் கழுவி அழுதது தெரியாதவண்ணம் கொஞ்சமாக ஒப்பனை செய்துவிட்டு அறைக்கதவைத் திறந்தாள்.
கவலையோடு இருந்த சங்கரியிடம் சொல்லிக்கொண்டு அலுவலகம் கிளம்பினாள்.
அவள் சென்றதும் பூபாலன் அவளுடைய மனம் கோணுமாறு எதுவும் பேசியிருப்பானோ என்ற சந்தேகத்தில் அவனது மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசினார் சங்கரி.
“நீ எதுவும் வானும்மாவைச் சொன்னியா பாலு? அவ முகமே சரியில்ல. எதுக்காகவோ அழுறா”
மறுமுனையில் பூபாலனுக்கோ வான்மதியின் திடீர்க்கோபத்தால் உண்டானக் குழப்பம் அவள் அழுதாள் என்றதும் இன்னுமே அதிகரித்தது.
“நான் எதுவும் சொல்லலைமா. என் கிட்ட காலையில கோவமா பேசுனா. இனிமே கால் பண்ணாதிங்கனு சொன்னா. ஏன் திடீர்னு இப்பிடி சொல்லுறாங்கிற குழப்பத்துல இருக்கேன் நான்”
“என்னமோ பாலு! இங்க வந்ததுல இருந்து பெத்த அம்மாவைக் கவனிக்குற மாதிரி என்னைக் கவனிச்சுக்குறா. அவ கண்ணுல கண்ணீரைப் பாத்ததும் மனசு ஆற மாட்டேங்குதுய்யா”
மனம் தாங்காமல் அவனிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர் வான்மதியின் அறைக்கதவு காற்றில் அங்குமிங்குமாக அடிக்கவும் அதைப் பூட்டச் சென்றார்.
ஜன்னல் வழியே வேகமாக வீசிய காற்றின் உபயத்தால் நர்த்தனமாடிய கதவை அடைக்கப் போனவர் தரையில் விழுந்து கிடந்த மருத்துவ அறிக்கை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
‘என்ன அது? ஒருவேளை தனது மருத்துவ அறிக்கையாக இருக்குமோ?’
உள்ளே போய் கையில் எடுத்துப் பார்த்தவருக்கு அதில் இருப்பது அனைத்தும் ஆங்கிலம் என்றதும் ஒன்றும் புரியவில்லை.
“பாட்டி”
பிபினின் குரல் கேட்டதும் அறிக்கையோடு வெளியே வந்தவர் அவனோடு நின்ற கேர்டேக்கர் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“இன்னைக்கு உங்களுக்கு வெஜ் புலாவ் பண்ணட்டுமா?” ஆர்வமாகக் கேட்டவரிடம் அந்த அறிக்கையைக் கொடுத்தார் சங்கரி.
“இது யாரோடதுனு படிச்சுச் சொல்லுறியாமா? எனக்கு இங்கிலீஸ் தெரியாது”
கேர்டேக்கர் பெண்மணி ரம்யா அதை வாங்கி படித்துவிட்டு “இது வான்மதி மேமோட ரிப்போர்ட்மா” என்க
“வானும்மாவோடதா? அவளுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? ஐயோ கடவுளே” எனப் பதற
“அதெல்லாம் ஒன்னுமில்ல சங்கரியம்மா. இது ப்ரெக்னென்சி ஸ்கேன் ரிப்போர்ட். நாலு வருசத்துக்கு முன்னாடி இதே தேதில எடுத்தது” என்று சொல்லவும் சங்கரிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது போல இருந்தது.
கருவுற்ற சமயத்தில் எடுத்த ஸ்கேன் அறிக்கையா? இது எப்போது நடந்தது? வான்மதியும் பூபாலனும் பிரிந்த சமயத்திலா?
அதிர்ச்சியைச் சமாளித்துக்கொண்டவர் “அ… அதுல என்ன போட்டிருக்குமா?” என்று கேட்க
“ப்ரெக்னென்சி கன்ஃபார்ம் ஆகிருக்குனு போட்டிருக்கும்மா. டெலிவரி டேட்டும் போட்டிருக்காங்க. இங்க பாருங்க, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போட்டோ கூட இருக்கு” என்று ரம்யா காட்டினார்.
சங்கரிக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
“அவர் என்னை விலக்கி வச்சதால நான் என்னெல்லாம் இழந்தேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அத்தை. அதெல்லாம் உங்க கிட்ட சொல்லி பரிதாபம் தேடிக்க விரும்பல” என்று மனக்கண்ணில் சொல்லிவிட்டுப் போனாள் வான்மதி.
அப்படி என்றால்? இந்தக் கருவுக்கு என்னானது? அறிக்கையை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு போய் வான்மதியின் அறை டேபிளில் வைத்த சங்கரிக்கு மனம் பதபதைத்தது.
“என் குடும்பத்து வாரிசு உண்டானது கூட தெரியல” என்று எண்ணி எண்ணி அன்றைய தினம் முழுவதும் மருகியவர் அவருக்காக ரம்யா செய்துகொடுத்த வெஜ் புலாவைக் கூட சரியாக உண்ணவில்லை.
மாலையில் சோர்வான முகத்தோடு வீடு திரும்பிய வான்மதியிடம் எடுத்தவுடன் அந்த அறிக்கை பற்றி கேட்க மனம் வரவில்லை சங்கரிக்கு.
காபி கலந்து கொடுத்தவர் அவள் கண் மூடி சோபாவில் சாய்ந்திருந்தபோது மெதுவாக அறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தார்.
“இது என்ன வானும்மா?” என நிதானமாக அவர் கேட்க வான்மதியின் முகத்தில் சோர்வோடு சோகமும் கலந்துகொண்டது.
“என்னோட ப்ரெக்னென்சி ரிப்போர்ட். நாலு வருசத்துக்கு முன்னாடி என்னைப் பாலா வேண்டாம்னு விலக்கி வச்சார்ல அதுக்கு அடுத்த நாள் ஹாஸ்பிட்டலுக்குப் போய் எடுத்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட் இது.”
நிதானமாகச் சொல்லிவிட்டுக் காபியை அருந்த முயன்றவளுக்குத் திரவமானக் காபியை விழுங்குமளவுக்குக் கூட தொண்டை ஒத்துழைக்கவில்லை.
சங்கரியின் கண்களில் கண்ணீர் இப்போது விழுந்துவிடுவேன் என்று செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.
“இப்ப இந்தக் குழந்தை இல்ல அத்தை. போயிடுச்சு”
காபியை வைத்துவிட்டு அறிக்கையோடு அறைக்குள் போனவள் உடை மாற்றி வந்தபோது கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தார் சங்கரி.
வான்மதி அவரது தோளைத் தொட்டாள்.
“போனதை நினைச்சு வருத்தப்பட்டு என்னாகப் போகுது அத்தை?”
“நீ வருத்தப்படல? இன்னைக்குக் காலைல இருந்து நீ அதை நினைச்சு வருத்தப்படுறதை என் கண்ணால பாத்துட்டிருக்கேன். வாய் வார்த்தையா சொல்லிட்டா நீ அதை நினைச்சு வருத்தப்படலனு ஆகிடுமா?”
வான்மதி அமைதியாய் அமர்ந்தாள். கண்களில் சோகம்! புத்திரச்சோகமாக இருக்கலாம். புத்திரி சோகமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் குழந்தையாக வளரும் முன்னரே கரைந்து போன கருவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாதே!
“நான் பாலாவ ரொம்ப விரும்புனேன் அத்தை. அந்தக் காதல்தான் என் குழந்தைக்குச் சமாதியா மாறிடுச்சு. அவரைப் பிரிஞ்சு வாழத் தெரியாம, அந்தச் சூழலை ஹேண்டில் பண்ணத் தெரியாம ஸ்ட்ரெஸ்சும், ப்ளட் ப்ரசரும் அதிகமாகி குழந்தைய இழந்துட்டேன்”
கண்ணீர் வராமல் சொல்லி முடிப்பதற்குள் வான்மதியின் இதயம் காயப்பட்டுப்போனது.
சங்கரி விசும்பி அழலானார். இத்துணை பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அதைச் சொல்லாமல் விட்டுவிட்டாளே என்ற கோபம் எல்லாம் இல்லை. மகன்மீது எவ்வளவு அன்பு இருந்திருந்தால் அவனது பிரிவு இவளை இந்தளவுக்குப் பாதித்திருக்கும் என்று எண்ணி அழுதார் அவர்.
முதல் குழந்தை என்பது கிட்டத்தட்ட ஒரு அழகானக் கனவு. இல்லறத்தின் இனிய அடையாளம். அதை இழந்த பெண்ணால் அவ்வளவு எளிதில் இழப்பை மறக்க முடியாது. வான்மதி சொன்ன இழப்பின் தீவிரம் சங்கரிக்குப் புரிந்தது.
மாமியாரைச் சமாதானம் செய்யும் தைரியமற்ற வான்மதி தனது அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் புகைப்படத்தில் பட்டாணி சைஸில் தெரிந்த உருவத்தைப் பார்த்தபடி கண்களை மூடியவளுக்கு மனக்கண்ணில் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு தருணமும் திரைப்படங்களாக ஓட ஆரம்பித்தன.
ஜோதிர்மயி – அனிருத்தின் திருமணம்! அங்கதானே அவள் முதன்முதலில் பூபாலனைச் சந்தித்தாள்.
தன்னை மட்டுமே வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தவனைத் திட்டவா அல்லது எச்சரிக்கவா எனத் தடுமாறிக்கொண்டிருந்தவளுக்கு ‘நீ முதலில் என்னை ஏறிட்டுப் பார்’ என்று சவால் விடாதக் குறையாக அங்கே ஓடியாடி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பூபாலனை எப்படி எதிர்கொள்வதெனப் புரியவில்லை.
இப்படியே மாலை வரை நேரம் ஓட வரவேற்பு நேரத்தில் பெரும் சப்தத்தோடு பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தபோது பூபாலனை மறந்து தனக்குள் அதீத ஒலி அலைகள் உண்டாக்கும் மாறுதல்களைச் சமாளிக்க முடியாமல் நின்றாள்.
இதயத்தசைகள் சுருங்கி விரிவது நின்றது போன்ற மாயை! இறுக்கமாக ஏதோ ஒன்று நெஞ்சில் அழுத்தி வலியை உண்டாக்கியது.
அங்கிருந்து வெளியேறிவிடலாமென யோசிக்கும் முன்னரே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி வரும் உணர்வு! அதே நேரம் மயக்கமும் கூட! குமட்டல் அதிகமாகிவிட கைகளால் வாயைப் பொத்திக்கொண்டாள்.
இன்னும் டொம் டொம் இசையுடனானப் பாடல் நிற்கவில்லை. வாந்தி வரும் உணர்வு! தலை சுற்றல்! இதயத்தசை இறுக்கம்! எல்லாம் சேர்ந்து அவள் சரிந்து விழப்போகையில் யாரோ பின்னே நின்று அவளது கையைப் பற்றி நிறுத்தினார்கள்.
திரும்பிப் பார்த்தவளுக்குக் கண்கள் நிறைய அக்கறையோடு நின்ற பூபாலன் தெரிந்தான்.

“ஆர் யூ ஓ.கே?” என்ற அன்பான அவனது விசாரிப்பில் தலை சுற்றி மயங்கி விழுந்தாள் வான்மதி.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!