“மஞ்சு மேகங்கள் மலைச்சிகரங்களை கொஞ்சும் அழகை காணுகையில் இதை விட அழகான தருணம் நம் வாழ்வில் இல்லை என்றே தோன்றும். பொதுவாக இயற்கைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. சோகமான மனநிலையைக் கூட ஆற்றும் தன்மை இயற்கைக்கு உண்டு. சந்தோச மனநிலையில் இருப்பவர்களை இன்னும் நெகிழச் செய்யும் அபாய குணமும் அதற்குண்டு. இன்று எனது மனநிலை கிட்டத்தட்ட நெகிழ்ந்து தான் போய்விட்டது. சிலுசிலுவென்ற காற்றில் நைனி ஏரிக்கரையில் இருக்கும் மால் ரோடில் அவனது தோளில் சாய்ந்தபடி புஜத்தைக் கட்டிக்கொண்டு நடக்கும் போது என்னவன் இவன் என்று கர்வம் கொண்டது என் மனம்”
-தக்ஷிண்யா
நைனாதேவி கோவில், நைனிடால்…
இந்தியாவில் இருக்கும் சக்தி பீடங்களில் சதியின் கண்கள் விழுந்த இடமாக நைனாதேவி ஆலயம் கருதப்படுகிறது. அங்கே தரிசனத்துக்காக வந்திருந்தனர் தக்ஷிண்யாவும் ருத்ரதேவும். கோவில் வளாகத்துக்குள் காவல் போல நெடிதுயர்ந்த பீபல் மரம் ஒன்று ஓங்கியுயர்ந்து வளர்ந்திருந்தது.
கர்ப்பகிரகத்தில் காளிதேவி மற்றும் வினாயகருக்கு நடுவே வீற்றிருந்த நைனாதேவியை தொழுதுவிட்டு அதே வளாகத்தில் ஏரியைப் பார்த்தபடி அமைந்திருந்த சிவபெருமானின் சிறு ஆலயத்திற்கு சென்றனர் இருவரும்.
நாகமொன்று குடைபிடிக்க அருள் பாலித்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தின் முன்னே கரம் கூப்பி நின்றான் ருத்ரதேவ்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தன்னருகே நிற்பவள் இந்த ஜென்மம் முழுவதும் தனது சரிபாதியாக தன்னுடன் இருக்கவேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டவன் அதற்கு அச்சாரமாக அங்கே பூஜை செய்த பண்டிதர் அளித்த குங்குமத்தை வாங்கி கண்கள் மூடி நின்ற தக்ஷிண்யாவின் நெற்றி வகிட்டில் வைத்தான்.
அவனது கரத்தின் ஸ்பரிசம் பட்டதும் திடுக்கிட்டு விழிமலர்ந்தவள் செவ்வண்ணத்துடன் இருந்த அவனது விரல்களைப் பார்த்ததும் உடனே தனது நெற்றி வகிட்டைத் தொட்டுப் பார்க்க அங்கிருந்த குங்குமம் அவளது விரல்களில் ஒட்டிக்கொண்டது.
ஆச்சரியத்தில் விழிகள் விரிய அவனை நோக்கினாள் தக்ஷிண்யா.
“இனிமேலாச்சும் நீ என்னை முழுசா நம்புவேனு நினைக்குறேன் தக்ஷி… தெய்வத்தோட சன்னிதானத்துல வச்சு எந்த மனுசனும் பொய்யான உறவுக்கு அடித்தளம் போடமாட்டான்… உன்னையும் என்னையும் யாரும், எதுவும் பிரிக்க முடியாது… என் வாழ்க்கைல உனக்கான ரீப்ளேஸ்மெண்டா யாரும் வரமாட்டாங்க”
அவனது குரலில் தெரிந்த உறுதி ‘அப்படி யாரேனும் வருவதற்கு நான் அனுமதிக்கவும் போவதில்லை’ என்பதை தக்ஷிண்யாவுக்கு அறிவிக்கவே, கண்கள் பனிக்க சுற்றம் மறந்து அவனை அணைத்துக்கொண்டாள் அவள்.
“இனிமே நான் உங்களை நம்பலைனா என்னையே நான் நம்பலனு அர்த்தம் ருத்ரா… ஐ லவ் யூ” என்று சொல்லிவிட்டு அவனை விட்டுப் பிரிந்தவள்
“இதை ஏன் கடவுள் சன்னிதானத்துல சொல்லுறேன் தெரியுமா? என் கூடவே வாழ்க்கை முழுக்க இருப்பாங்கனு நான் நினைச்ச சிலர் என்னை கைவிட்டப்ப இதே கடவுள் அதை வேடிக்கை மட்டும் தான் பாத்தார்… இப்ப எனக்காக உங்களை இவரே அனுப்பி வச்சதா நான் நம்புறேன்… அப்ப வேடிக்கை பாத்ததுக்குப் பரிகாரமா நீங்களும் நானும் இனிமே ஒன்னா வாழப்போற வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் வராம இவர் தான் பாத்துக்கணும்… இதை நான் இவருக்குப் போடுற ஆர்டர்னு கூட வச்சுக்கலாம்” என்றாள் அங்கிருந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே.
ருத்ரதேவ் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன் “அந்த ஆர்டரை நீ எனக்குக் கூட போடலாம்” என்று உரிமையாக கூற அவள் புன்னகைத்தாள்.
இருவரும் ஆலயத்தை விட்டு வெளியேறி மால் ரோடு நோக்கி நடந்தனர். நைனி ஏரியை ஒட்டிச் செல்லும் இந்தச் சாலையில் கடைகளுக்குப் பஞ்சமில்லை.
அந்தப் பகுதி மக்களால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், வாசனை மெழுகுவர்த்திகள், உல்லன் ஆடைகள், நாவில் எச்சிலூற வைக்கும் உணவுவகைகள் என கடைகள் நீண்ட வரிசையாகச் செல்லும்.
அங்கிருக்கும் கடைகளின் முன்னே வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என்பதால் பொடி நடையாக நடந்து வந்தனர்.
இருவரும் ஒரு கடையில் பால் மித்தாய் எனப்படும் கோவாவினால் செய்யப்படும் இனிப்பை வாங்கி சுவைத்தபடி ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தனர்.
“அந்தக் கடையில சிங்கோரி கிடைக்கும்… அப்புறம் அந்த லெப்ட் சைட்ல ரெட் போர்ட் வச்ச கடையில மோமோ சூப்பரா இருக்கும்… நானும் நவியும் எப்பவும் அங்க தான் சாப்பிடுவோம்”
தக்ஷிண்யா பேசுவதை கேட்டுக்கொண்டே நடந்தான் ருத்ரதேவ்.
“இந்த ஏரியாவ போட்டியா பஜார்னு (Bhotia bazaar) சொல்லுவாங்க… லோக்கல் லேடிஸ் செய்யுற கிராப்ட் ஐட்டம்ஸ் எல்லாம் இங்க கிடைக்கும்” என்றவள் அவனை ஒரு கடைக்குள் அழைத்துச் சென்றாள்.
“இங்க எதுக்கு வந்திருக்குறோம்?” என்றவனிடம்
“உங்களுக்குப் ப்ரபோஸ் பண்ணிட்டு கிப்ட் குடுக்கலைனா நல்லா இருக்காதுல்ல, அதான் இங்க வந்திருக்குறோம்” என்றவள் தங்களது எதிர்புறமிருந்த சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த உல்லனால் வடிவமைக்கப்பட்டிருந்த ட்ரீம் கேட்சர்களை (Dream Catchers) காட்டினாள்.
“ட்ரீம் கேட்சர்… குழந்தைங்க கெட்டக்கனவு கண்டு பயப்படக்கூடாதுனு இதை அவங்க ரூம்ல காத்து வர்ற ப்ளேஸ்கு நேரா தொங்கவிடுவாங்க… நான் என்ன குழந்தையா பேய்க்கனவு கண்டு பயப்படுறதுக்கு?” என்று கிண்டலாய் கேட்டான் ருத்ரதேவ்.
“கெட்டக்கனவை மட்டுமில்ல, கெட்ட எண்ணங்களையும் எதிர்மறை விசயங்களையும் கூட ட்ரீம் கேட்சர் தடுக்குமாம்… இதை பெட்ரூம்ல தொங்க விட்டா நம்மளை சுத்தி ஒரு பாசிட்டிவ் வைப் வரும் ருத்ரா” என்றவள் பல்வண்ணத்தில் பாசிமணி மற்றும் பறவை இறகுகளால் வடிவமைக்கப்பட்டிருந்த ட்ரீம் கேட்சர் ஒன்றை கடைக்காரப்பெண்மணியிடமிருந்து வாங்கினாள்.
பணம் செலுத்திவிட்டு அதை ருத்ரதேவிடம் நீட்டினாள்.
“இது உங்களுக்கு நல்ல ட்ரீம்சை வர வைக்கும்… அந்த ட்ரீம்ல நான் மட்டும் தான் வரணும்… வேற யாரும் வரக்கூடாது” என்று உத்தரவு போல கூறியவள் ருத்ரதேவின் முகம் மாறவும் தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள்.
“அடேங்கப்பா, அதிகாரமெல்லாம் தூள் பறக்குது… நீ எனக்கே ஆர்டர் போடுறியா?” என்று வேண்டுமென்றே கோபம் போல காட்டிக்கொண்டு கேட்டான் ருத்ரதேவ்.
ஒற்றைப்புருவத்தைத் தூக்கி மகாதேவிடம் பேசிய அதே தொனியில் ஹேசல்நட் விழிகள் மின்ன அவன் கேட்ட விதத்தில், தான் அதிகப்படி உரிமை எடுத்துக்கொண்டதில் அவன் கோபமுற்றுவிட்டானோ என தக்ஷிண்யா மருண்டு போனாள்.
கண்களை மலங்க மலங்க விழித்தபடி “அது… நீங்க தான…” என்று அவள் கூற வரும் போதே சத்தமாக நகைக்க ஆரம்பித்தான் அவன்.
திடீரென கோபம் கொள்கிறான்; திடீரென நகைக்கிறான்; என்ன மனிதன் இவன் என அவள் எண்ணமிடுகையிலேயே
“ஏன் இப்பிடி பயப்படுற? டேய் நீ தான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஆர்டர் போடுனு சொன்னனு என் காலரைப் பிடிச்சுக் கேக்கவேண்டாமா?” என்றான் அவன்.
“உஃப்” என பெருமூச்சு விட்ட தக்ஷிண்யா கடுப்புடன் அவனை நோக்கியவள் “ஹென்லே டீசர்ட்ல காலருக்கு நான் எங்க போவேன்?” என்று குத்தலாக கேட்க மீண்டும் நகைத்தான் அவன்.
“அப்ப டீசர்ட்டை கொத்தா பிடிச்சு கெத்தா கேக்கணும் மை டியர் ஒய்ப்” என்றவன் அவளை மையலோடு அணைக்க வர வேகமாக விலகியவள்
“தள்ளி நில்லுங்க… என்னை மிரட்டிட்டு இப்ப லவ்வாங்கியாக்கும்? மூனடி தள்ளியே வாங்க” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
“ஏய் தக்ஷி! நான் சும்மா ஃபன்னுக்குச் சொன்னேன்மா” என்றவாறு அவள் பின்னே ஓடிவந்தான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா அவனை முறைத்துவிட்டு “எல்லாம் சரி… அது என்ன ஒய்ப்?” என்று கேட்க
“ஆமா ஒய்ப்… நீ தான் என் ஒய்ப்… மிஸ்டர் சிவா முன்னாடி உன் வகிட்டுல குங்குமம் வச்சு எப்பவோ நான் உன்னை மிசஸ் ருத்ராவா மாத்திட்டேன் தக்ஷிமா” என்றான் அவன்.
கிடைத்த இடைவெளியில் மீண்டும் அவளைத் தோளோடு அணைக்க முயன்றவன் அவள் முறைக்கவும் விலகி நடந்தான்.
“இந்த ஊர் வழக்கப்படி சிந்தூர் வச்சாலே பொண்டாட்டினு தான் அர்த்தம்… நான் சொல்லலை… என் காதுப்பட மக்கள் பேசிக்கிட்டாங்க”
அப்பாவி போல அவன் கூறவும் “அஹான்! இந்த ஊர் வழக்கப்படி அக்னிய சுத்தி வலம் வந்து சப்தபதி எடுத்து வச்சா தான் அவங்களை புருசன் பொண்டாட்டினு ஏத்துப்பாங்க… இதுல்லாம் உங்க காதுல விழுந்திருக்காதே?” என்று கிண்டலாய் கேட்டவள், தானே வந்து அவனது தோள் வளைவுக்குள் புகுந்து கொண்டாள்.
ருத்ரதேவின் முகம் பிரகாசமுற்றது.
“இது நல்லப்பொண்ணுக்கு அழகு” என்றவன் “பை த வே, என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னைக்கு நமக்கு மேரேஜ் முடிஞ்சாச்சு… சோ நெக்ஸ்ட் நடக்க வேண்டியதை பத்தி பேசலாமா?” என அவளைச் சீண்ட
“நெக்ஸ்ட் என்ன நடக்கணும்?” என்றாள் அவனது சீண்டலைப் புரிந்து கொள்ளாதவளாக.
“ஒன்னும் தெரியாத மக்குப்பொண்ணா இருக்குறியே” என்று தலையிலடித்துக் கொண்டவன் “என் லவ் லைஃப் எப்பிடி இருக்கும்னு இப்பவே தெரியுதும்மா” என்கவும்
“ஹலோ! நீங்க என்னை ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க… எங்களுக்கும் ரொமான்ஸ் பண்ண வரும்” என்றாள் அவள்.
“நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட உனக்குப் புரியல… இதுல ரொமான்ஸ்ல பி.ஹெச்.டி பண்ணுன மாதிரி பில்டப் வேற”
“புரியாத மாதிரி பேசுறதுல நீங்க பிக்பாஸ் கமலுக்கு டஃப் குடுக்குறப்ப நான் ரொமான்ஸ்ல பி.ஹெச்.டி வாங்குன மாதிரி பில்டப் பண்ணுறது ஒன்னும் தப்பில்ல”
மாறி மாறி ஒருவரை ஒருவர் கேலி செய்தபடியே ருத்ரதேவ் ஆரோஹிக்கும் தக்ஷிண்யா நவ்யாவுக்கும் சின்ன சின்ன பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களது நைனிடால் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் ஷான்ஃபிக்குக் கிளம்ப ஆயத்தமாயினர்.
******
பிருந்தாவனம்…
மதியவுணவுக்காக வீட்டுக்கு வருவாரா என்று ராஜேந்திரனிடம் கேட்பதற்காக அவரது மொபைலுக்கு அழைத்தார் லலிதா. வழக்கமாக அவரது அழைப்பை நொடி கூட தாமதிக்காமல் ஏற்கும் ராஜேந்திரன் அன்று இரண்டு மூன்று முறைகள் அழைத்தும் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் விடவும் மனம் வலித்தது லலிதாவுக்கு.
இத்தனை ஆண்டுகள் திருமண வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. லலிதாவுக்கு ராஜேந்திரன் மீது எவ்வளவு காதல் என்பதை வார்த்தையால் விவரிக்க இயலாது.
மீனாட்சியும் பார்வதியும் சிறுபிராயத்திலேயே ராஜேந்திரனுக்கு லலிதா தான் என்று பேசி வைத்தது கூட அவரது அதீத காதலுக்குக் காரணமாக இருக்கலாம்.
ராஜேந்திரனும் லலிதா தன் மீது கொண்ட காதலை மதிப்பவர். யாரேனும் லலிதாவை சிறு சுடுசொல் கூறினாலும் அவரால் பொறுக்க முடியாது. லலிதாவின் மனம் வருந்தக்கூடாதென வாழ்க்கையில் கடினமான சில முடிவுகளைக் கூட எடுத்தவர்.
அப்படிப்பட்டவருக்கு லலிதா சர்வானந்திடம் மூர்க்கமாக நடந்துகொண்ட விதம் சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட அதன் பின்னர் தான் இந்தப் பாராமுகம்.
என்ன தான் மாணிக்கவாசகமும் சதாசிவமும் லலிதாவின் விசயத்தில் சமாதானம் பேசினாலும் அவரிடம் அடிபட்டது தனது மைந்தன் என்றதும் ராஜேந்திரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதற்காக லலிதாவைப் பேசி காயப்படுத்த விரும்பாதவர் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பார்வதியும் மீனாட்சியும் செய்த முயற்சி யாவும் வீணாகிவிட சசிகலாவோ லலிதாவின் திமிர்த்தனத்திற்கு அண்ணனின் பாராமுகம் சரியான தண்டனை தான் என்று அவர்கள் விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டார்.
லோகநாதன் தான் என்ன செய்வார்? சகோதரி லலிதாவுக்காகப் பேசுவாரா? அல்லது உயிர்த்தோழன் ராஜேந்திரனின் ஆதங்கத்துக்கு ஆதரவாக நிற்பாரா?
எப்படியோ அச்சம்பவத்தால் வீட்டில் ஒருவித அமைதி நிலவியது என்னவோ உண்மை. மகாதேவ் இதையும் அண்ணனிடம் கூறி அவனது நல்ல மனநிலையைக் கெடுக்க விரும்பவில்லை.
லலிதாவுமே ருத்ரதேவை இப்போது தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதே நேரம் மைந்தனும் ஒதுங்கிப் போக அவனது அன்பையும் இழந்துவிட்டோம் என மனதிற்குள்ளே குமைந்து ஒரே நாளில் ஒடுங்கிப் போய்விட்டார்.
இத்தனை முறை அழைத்தும் கணவர் அழைப்பை ஏற்காதது வலியை உண்டாக்கிவிட அவர் வருவதற்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.
ராஜேந்திரனும் லோகநாதனுடன் மதியவுணவுக்காக வீட்டுக்கு வந்தவர் அவருக்குக்காக ஹாலில் காத்திருந்த லலிதாவைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட லலிதா சகோதரனை பரிதாபமாகப் பார்த்தார்.
“கவலைப்படாத லல்லி… எல்லாம் சரியாகிடும்”
தலையாட்டிவிட்டு அவரோடு உணவு மேஜைக்கு வந்தவர் ராஜேந்திரன் அங்கில்லாததை கண்டதும் எங்கே என விசாரிக்க
“அவனுக்கு உடம்பு அலுப்பா இருக்குதாம் லல்லி… அதான் ரெஸ்ட் எடுக்கப் போயிட்டான்” என்றார் மாணிக்கவாசகம்.
உடனே சமையலறைக்கு விரைந்த லலிதா அலுப்புக்காக வழக்கமாக போடும் கஷாயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்கு விரைந்தார்.
அங்கே சோபாவில் சோர்வாய் அமர்ந்து நெற்றிப்பொட்டையும் முதுகையும் மாறி மாறி தடவிக்கொடுத்தபடி இருந்தார் ராஜேந்திரன்.
“இந்தக் கஷாயத்தைக் குடிங்க… அலுப்பு சரியாகிடும்” என்றவாறு கண்ணாடி தம்ளருடன் லலிதா அவரருகே அமரவும் எரிச்சலாக உச்சு கொட்டியபடி எழுந்தார் அவர்.
அவரது இச்செய்கையில் லலிதாவுக்குக் கண்ணீர் பொத்துக்கொண்டு வர விம்மல் ஒன்று வெளிப்பட்டது அவரிடமிருந்து.
உடனே திரும்பிய ராஜேந்திரன் “போதும் லல்லி… எதுக்கெடுத்தாலும் அழுது அழுது காரியம் சாதிக்கப் பாக்காத” என்று கடுமையாக கூற
“ஏன் இப்பிடிலாம் நடந்துக்கிறிங்க? எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா?” என்று கேட்டார் லலிதா.
ராஜேந்திரன் மீண்டும் நெற்றிப்பொட்டைத் தடவிக்கொண்டார்.
“இந்த வயசுல என்னோட பாராமுகம் உனக்கு இவ்ளோ வலிக்குதுனா சர்வாவோட வயசுக்கு நீ அவனைக் கண்டுக்காம ருத்ராவ தூக்கி வைக்குறது எவ்ளோ வலிக்கும்னு யோசிச்சுப் பாரு லல்லி”
லலிதா அறை வாங்கியது போல அதிர்ந்தார்.
“ருத்ரா என் மருமகன்ங்க… அவன் நான் பெறாத பிள்ளை”
“நான் அதை தப்பு சொல்லல… நேத்து சர்வா செஞ்ச காரியத்தை ருத்ரா சின்ன வயசுல செஞ்சப்ப நீ இவ்ளோ வயலண்டா பிஹேவ் பண்ணல… அப்ப நீயே அன்பு காட்டுறதுல பாகுபாடு காட்டுறனு தானே அர்த்தம்?”
லலிதா மௌனமாக கண்ணீர் உகுத்தார். உண்மை அவரது வாயைக் கட்டிப்போட்டுவிட்டது.
ராஜேந்திரன் பேச்சை தொடர்ந்தார்.
“நீ சர்வாவ அடிச்சதை விட அதுக்குச் சொன்ன காரணத்தை தான் என்னால தாங்கிக்க முடியல லல்லி… இத்தனை வருசம் ஆகிடுச்சு… இன்னுமா உன்னோட வெறுப்பு குறையல? அதை இப்பவும் உன்னால வெறும் போட்டோவா பாக்க முடியலையா? அந்தப் போட்டோல இருக்குறவளை பத்தி யாரும் பேசக்கூடாதுனு எங்களுக்கு ஆர்டர் போட்டுட்டு நீ மட்டும் இன்னும் அவளை மனசுல சுமக்குற லல்லி… அதனால தான் இப்பவும் உன்னால அதை வெறும் போட்டோவா பாக்க முடியல… அதை நீ அவளா நினைச்சுப் பாக்குற… உன்னோட அர்த்தமில்லாத பயமும் வெறுப்பும் எனக்கு எப்பவும் தொந்தரவா தோணுனதில்ல… ஆனா இந்த தடவை நீ பண்ணுன காரியத்தால எனக்கும் உன் மேல வருத்தம் தான்… அதை வருத்தம்னு மட்டும் சொல்ல முடியாது… இது ஒருவிதமான சலிப்பு… ச்சே இன்னும் இவ மாறலையேங்கிற ஆதங்கம்… இனிமேலும் இவ மாறமாட்டாங்கிற அவநம்பிக்கை… நாங்க எல்லாரும் உன்னை எவ்ளோ தாங்குனாலும் உன்னோட இந்தக் குணம் மாறாது லல்லி… எனக்கு இன்னைக்கு உடம்பு நல்லா தான் இருக்கு… மனசு தான் சரியில்ல… கொஞ்சம் என்னைத் தனியா விடுறியா?”
லலிதா கண்ணீருடன் சோபாவிலிருந்து எழுந்தவர் வாயிலை நோக்கிச் சென்றார். பின்னர் திரும்பியவர்
“என் மேல கோவம், அவநம்பிக்கை, சலிப்பு என்ன வேணும்னாலும் இருக்கட்டுங்க… அதுக்காக கஷாயத்தைக் குடிக்காம இருந்துடாதிங்க… ஏன்னா எனக்கு எப்பவும் உங்க மேல இருக்குற அன்பு மாறாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ராஜேந்திரன் ஆயாசத்துடன் மீண்டும் சோபாவில் அமர்ந்தவர் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி கண்களை அழுத்திக் கொண்டார். கண்களுக்குள் யார் யாரோ நிழலுருவாய் வந்து சென்றார்கள்.
“எவன் ஒருத்தனால தன்னைச் சார்ந்தவங்களோட மரியாதைய காப்பாத்த முடியலையோ அவனுக்கு வாழ்க்கை முழுக்க தனிமை மட்டும் தான் பரிசா கிடைக்கும்… அவனால உண்மையான அன்பை என்னைக்குமே அனுபவிக்க முடியாது”
தலையை உலுக்கிக் கொண்டார் ராஜேந்திரன்.
‘லலிதாவுக்கு என் மேல் இருப்பது உண்மையான அன்பு தானே! அவள், சர்வா இந்தக் குடும்பம் என அனைவரும் என்னைச் சுற்றி இருந்தாலும் என் மனதில் பீடித்திருக்கும் தனிமையை இவர்கள் யாராலும் ஏன் விரட்ட முடியவில்லை?’
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்பா”
கண்ணீருடன் யாரோ அழுது அரற்றும் குரல் கேட்க அதிர்ச்சியோடு கண்களைத் திறந்தார் ராஜேந்திரன்.
“எப்பிடி அவளை மறந்தேன்?”
தன்னைத் தானே கேட்டுக்கொண்டவரை வழக்கம் போல குத்திக் கிழிக்கும் வேலையை சரியாக செய்ய ஆரம்பித்தது அவரது மனசாட்சி. மனிதர்கள் தாங்கள் செய்த மாபெரும் தவறுகளை இவ்வுலகில் யாரும் கவனிக்கவில்லை என்ற மிதப்புடன் பல்வேறு சமயங்களில் உலாவுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மனசாட்சி எனும் நீதிமான் அநேக சமயங்களில் விழித்து அவர்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைப்பதை அவர்களால் தடுக்கவே
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


