உன் கனவுகளுக்குச் சிறகு தர, என் வசந்தத்தையே நான் விலையாகக் கொடுத்தேன்; என் மௌனத்தை வெறுப்பென்று எடைபோடாதே, அது உனக்காக நான் இருக்கும் ஆழமான தவம்!
-நிலவன்
அதிகாலையின் பனித்திரை இன்னும் முழுமையாக விலகாத நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது. ‘வி.வி அக்ரோ புராடக்ட்ஸ்’ விவசாயப் பண்ணையில் அன்றைய நாளுக்கான அறுவடை சுறுசுறுப்பாகத் தொடங்கியிருந்தது. பச்சைப் பசேலென்ற அந்தப் பரந்த நிலப்பரப்பிற்குள், செம்மண் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சீறிப் பாய்ந்து வந்து நின்றது நிலவனின் கறுப்பு நிற மஹிந்திரா தார் ஜீப்.
வழக்கமாய் அணியும் தூய வெண்ணிற வேஷ்டியும், முழங்கை வரை மடித்துவிடப்பட்ட கத்தரிப்பூ நிற லினன் சட்டையுமாய் வண்டியிலிருந்து இறங்கினான் நிலவன். அதிகாலையிலேயே பண்ணை ஆட்கள் எக்சாட்டிக் காய்கறிகளைப் பறிப்பதும், அதைப் பேக்கிங் யூனிட்டிற்கு மாற்றுவதுமாகப் பண்ணையே ஒரு தேனீக்கள் மொய்க்கும் கூட்டைப் போலப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
வழக்கமாக எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு ரிப்போர்ட் சொல்லும் அக்ரோனமிஸ்ட் கார்த்திக், இன்று முகத்தில் லேசான பதற்றதோடு நிலவனை நோக்கி ஓடி வந்தான்.
“குட் மார்னிங் அண்ணா…”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன கார்த்திக்? முகமெல்லாம் இவ்வளவு டென்ஷனா இருக்கு? ஈல்டுல எதுவும் பிரச்சனையா? இல்ல லோடு வண்டி எதுவும் பிரேக்டவுன் ஆகிடுச்சா?” என்று நிலவன் அடுக்கடுக்காக விசாரித்தான்.
எப்போதும் அறுவடையிலோ பொருட்களை அனுப்பும் வண்டியில் உண்டாகும் பழுதோ அன்றாட வேலையைபபாதிக்காதவண்ணம் அல்டர்னேடிவ் ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டிருப்பான் கார்த்திக்.
அப்படி என்றால் இங்கே பிரச்சனை வேறு ஏதோ!
கார்த்திக் அந்த அதிகாலைக் குளிரிலும் தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.
“அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லண்ணா. உங்களைத் தேடி ஒருத்தங்க வந்திருக்காங்க.”
“என்னைப் பாக்கவா? இந்த நேரத்துலயா? யாரு?”
“ஆபீஸ் ரூம்ல தான் வெயிட் பண்ணுறாங்க. நீங்களே போய்ப் பாருங்க பாஸ்,” என்று சொல்லிவிட்டு கார்த்திக் நழுவ, நிலவனுக்கு லேசான குழப்பம்.
வேஷ்டி நுனியை வலது கையால் லேசாகப் பிடித்தபடி, நெற்றியில் விழுந்த முடியைக் கோதிவிட்டுக்கொண்டு பண்ணையின் நடுவே அமைந்திருக்கும் தனது அலுவலகத்தை நோக்கி நடந்தான் நிலவன்.
அலுவலகத்தின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் கால்கள், அங்கே ஒரு காட்சியைக் கண்டதும் ஒரு கணம் அப்படியே உறைந்து போயின.
அங்கே அவனது சுழலும் நாற்காலியில், மிகச் சாதாரணமாக அமர்ந்திருந்தாள் நியதி! வெளிர் மஞ்சள் நிறத்திலான ஒரு சுடிதார் அணிந்து, கலைந்த கூந்தலை அலட்சியமாக அள்ளி முடிந்து, நீண்ட பயணத்தின் சோர்வு முகத்தில் தெரிந்தாலும், அவளது கரிய விழிகளில் அத்தனை துள்ளலோடு அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
சென்னையில் அவளது வீட்டில் இறுதியாய் பேசியபோது கூட அத்துணை பிடிவாதமாய் ஊருக்கு வரமுடியாதெனக் கூறினாளே! அவள் நேராகத் தன்னிடம் வருவாள் என்பது கற்பனையில்கூட எட்டாத ஒன்று. அவளது பிடிவாதத்தின் ஆழம் அவனுக்குத் தெரியுமாதலால், அவள் இங்கு வரமாட்டாள் என்றுதான் மிக அழுத்தமாக நம்பியிருந்தான். ஆனால், அவளே நேரில் வந்து நிற்பதைப் பார்த்ததும் அவனது மூளை ஒரு நொடி செயலிழந்து நின்றது.
அவனைப் பார்த்ததும் முகமெல்லாம் பூத்த சிரிப்போடு இருக்கையிலிருந்து எழுந்தாள் நியதி. அவளுக்குப் பின்னால் நின்றிருந்த கார்த்திக்கை, பார்வையாலேயே வெளியே போகச் சொன்னான் நிலவன்.
கதவு சாத்தப்பட்டதும், நீண்ட காலடிகளோடு அவளை நோக்கி வேகமாக வந்தான் நிலவன். அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் எரிமலையாகக் குமுறின.
‘எப்படி இவளது மனம் மாறியது? ஏன் இவள் வந்தாள்? இப்போது யார் யாரைப் பதறடிக்கக் காத்திருக்கிறாள்? இவளது வைராக்கியம் என்னவாயிற்று?’
அத்தனையும் கேட்கத் துடித்தாலும், வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன.
நியதியோ நிதானமாக, கண்களில் வழியும் காதலோடு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“என்ன நிலன், நான் இங்க வந்ததுல உங்களுக்கு சந்தோசம் இல்லையா? ஏன் இப்படிப் பாக்குறீங்க? அன்னைக்கு நீங்க கேட்டீங்கல்ல ‘நம்ம காதலுக்காக நீ இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க?’னு. நீங்க போன அப்புறம் நான் நல்லா யோசிச்சுப் பாத்தேன் நிலன். நான் எதுவும் பண்ணல தான். என்னோட சூழல், மனநிலை எல்லாம் அப்ப வேற மாதிரி இருந்துச்சு. அப்ப நான் உங்களைத் தேர்ந்தெடுக்கல. இப்ப உங்களைத் தவிர வேற எதையும் தேர்ந்தெடுக்கப் பிடிக்கல. அதான் வந்துட்டேன்” என்றாள் மிக இயல்பாக.
அவளது அந்த ஒற்றைப் பதிலில், அவனுக்குள் உறைந்திருந்த அதிர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விலகி நிதானம் திரும்பியது. அவன் உதடுகளில் ஒரு ஏளன முறுவல் வந்து ஒட்டிக்கொண்டது.
“ஓஹோ! சரி, எத்தனை நாளுக்குத் தங்குறதா உத்தேசம்? எப்ப மறுபடியும் பெட்டியக் கட்டிக்கிட்டு ஓடுவ?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவள் சற்றும் சளைக்காமல், “எல்லாத்தையும் நான் இப்பவே சொல்லணுமா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
அவன் சலிப்போடு தலையை அசைத்தான்.
“சரி, இங்க எதுக்கு வந்த? நீ நேரா உங்க வீட்டுக்குத்தானே போயிருக்கணும்?”
“நான் வந்தது உங்களுக்காக நிலன். அப்ப உங்ககிட்டதானே வர முடியும்? வேற யாரைப் பத்தியும் எனக்குக் கவலை இல்ல,” என்றாள் தீர்க்கமாக.
நிலவனுக்கு அவளது நிலைமை புரிந்தது. அவளது குடும்பத்தில் அவளுக்கான இடம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். ஒரு நீண்ட நெடிய பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.
“நியதி! என்னால உன்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. நீ பழையபடி ஏதாவது பிரச்சனையைப் பண்ணி, இடையில கிளம்பிப் போனா, என் அப்பா அம்மா மனசு ரொம்பக் கஷ்டப்படும். இத்தனை வருஷத்துல இப்பதான் அவங்க கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. உன் ஆட்டத்துக்கெல்லாம் அவங்களைப் பலிகடா ஆக்க முடியாது,” என்றான் உறுதியாக.
“நான் போறதைப் பத்திப் பேசவே இல்ல நிலன். நீங்கதான் அடிக்கடி அதையே சொல்லிட்டு இருக்கீங்க,” என்றாள் நியதி.
நிலவன் அமைதியானான். அவனது தயக்கத்தைப் பார்த்த நியதியின் கண்கள் யோசனையில் சுருங்கின.
“ஏன் நிலன், என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனா, அங்க இருக்குற உங்க உடன்பிறப்பு நெஞ்சு வெடிச்சிடும்னு பயப்படுறீங்களா?” என்று நிலாவைக் குறிப்பிட்டு அவனைக் குத்தலாகக் கேட்டாள்.
அதுவரை அமைதியாக இருந்தவனுக்குச் சுரீரென்று கோபம் தலைக்கேறியது.
“இப்ப ஏன் அவளை இழுக்குற? அவளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சீறினான்.
“சம்பந்தமில்ல தானே? அப்ப என்னைக் கூட்டிட்டுப் போய் அந்த மாதிரி எதுவும் இல்லனு நிரூபிங்க!” என்று அழுத்தமாகச் சொல்லி அவனுக்குச் சவால் விட்டாள் நியதி.
அவளது பிடிவாதத்திற்கு முன் தான் தோற்பதை உணர்ந்தவன், “சரி… வந்து தொலை,” என்று சலித்துக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அலுவலக அறையிலிருந்து பண்ணையின் நுழைவாயிலை அடைவதற்குள், நிறையப் பண்ணையாட்கள் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இதுநாள் வரை நிலவனைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அந்த அலுவலகத்திற்குள் வந்ததில்லை.
“யாரு தம்பி இந்தப் பொண்ணு?” என்று ஒரு வயதானவர் நிலவனிடம் விசாரிக்க, நிலவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நின்றான்.
ஆனால், நியதி அத்தனை பேருக்கும் கேட்கும்படி, முகத்தில் பெரிய சிரிப்போடு பதில் சொன்னாள்.
“இவரோட சம்சாரம் நான் தாங்க! இவ்வளவு நாள் படிக்கிறதுக்காக மெட்ராஸ்ல இருந்தேன். இப்ப படிப்பு முடிஞ்சதும் என் புருஷன் கூடவே இருந்துக்கலாம்னு வந்துட்டேன்,” என்றாள் எந்தத் தயக்கமுமின்றி.
அவள் சொன்னதைக் கேட்டதும், அத்தனை பண்ணையாட்களும் மகிழ்ந்து போய், “ரெண்டு பேரும் நல்லா இருங்கம்மா…” என்று சிரித்துக்கொண்டே வழியனுப்பி வைத்தார்கள். நிலவனுக்கு அவளது இந்த அதிரடி மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. பேசாமல் அவளைத் தொடரச் சொல்லிவிட்டு, மஹிந்திரா தார் ஜீப்பில் ஏறினான். அவளும் அவன் அருகிலேயே ஏறி அமர்ந்துகொண்டாள்.
ஜீப் அம்பாசமுத்திரத்தில் உள்ள அவனது வீட்டை அடையும் வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை. நியதிக்கு இரண்டாண்டுகளில் அம்பாசமுத்திரம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறதெனப் பார்ப்பதில் ஆர்வம் பிறந்துவிட வேடிக்கையில் அவளது கவனம் பதிந்துபோனது.
பத்தே நிமிடத்தில் நிலவனின் வீட்டிற்கு அவளைக் கொண்டு போய் விட்டது
வாசலின் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்த வைத்தியலிங்கத்திற்குச் சூடாகக் காபி கொடுத்துவிட்டு நிமிர்ந்த வசந்தா, ஜீப்பிலிருந்து இறங்கி நிலவனோடு உள்ளே வரும் நியதியைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றார். கையில் இருந்த காபி தம்ளர் கூட ஒரு கணம் நடுங்கியது.
வீட்டிற்குள் நுழைந்த நியதி, தலைகுனிந்து நின்றாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே வீட்டின் முற்றத்தில் நின்று அவள் பேசிய வார்த்தைகளும், ஆடிய ஆட்டங்களும் அவளையே இப்போது சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. அத்தனை குற்றவுணர்ச்சி அவளைக் கூனிக்குறுக வைத்தது.
“என்னப்பா இது? இந்தப் பொண்ணு எதுக்கு இங்க வந்திருக்கு?” என்று வசந்தா பதற்றத்தோடு கேட்க, வைத்தியலிங்கம் அவரை அமைதியாக இருக்கும்படி கண்ணால் சைகை காட்டினார்.
பின்னர், மிக அமைதியான குரலில் தன் மகனைப் பார்த்து, “நீ உன் ரூமுக்கு மருமகளைக் கூட்டிட்டுப் போ தம்பி,” என்றார்.
நியதி வேகமாகத் தலையை உயர்த்தி அவரைப் பார்த்தாள். அந்த ஒற்றை வார்த்தையில் இருந்த அரவணைப்பு அவளது கண்களில் கண்ணீரைப் பொங்க வைத்தது. கையில் வைத்திருந்த லக்கேஜ் பேக்கை அப்படியே தரையில் போட்டுவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பி அவருக்கு முன் நின்றாள்.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா…” என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்லும்போது, அவளது வைராக்கியம் முழுவதும் அந்த மன்னிப்பில் கரைந்து காணாமல் போனது.
வைத்தியலிங்கமும், வசந்தாவும் ஒரு கணம் கண் கலங்கி நின்றார்கள்.
“எதுக்கும்மா மன்னிப்பு அது இதெல்லாம்? போங்க… உள்ள போங்க…” என்று தழுதழுத்தபடியே கையசைத்தார் வைத்தியலிங்கம்.
நிலவன் அவளது பேக்கை எடுத்துக்கொண்டு, அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் மாடிபபடிகளில் ஏறிச் செல்வதைப் பார்த்த வசந்தா, கணவனிடம் தன் கவலையைக் கொட்டினார்.
“இதெல்லாம் எப்படிங்க சரியா வரும்? இந்தப் பொண்ணு எப்ப என்ன முடிவெடுக்கும்னே தெரியாது. இது நிலாவுக்குத் தெரிஞ்சா, சம்பந்திக் குடும்பத்துக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடுமே…” என்று கலங்கினார்.
வைத்தியலிங்கம் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார்.
“இந்த ரெண்டு வருஷத்துல நம்ம நிலவன் எப்படி இருந்தான்னு நீ பார்த்தல்ல வசந்தா? எனக்கு இது வேணும்னு அவன் நம்மகிட்ட கேட்டது ரெண்டே விஷயம்தான். ஒன்னு நம்ம நிலம், இன்னொன்னு நம்ம மருமக நியதி. அவனுக்கு அந்தப் பொண்ணு மேல பாசம் அதிகம். அதனாலதான் அவளை இழக்கவும் துணிஞ்சான். என்னமோ அந்தப் பொண்ணுக்கு இப்பப் புத்தி வந்து திரும்பி வந்திருக்கு. நிலா வந்தா நாமதான் பக்குவமாப் பேசிப் புரியவைக்கணும். இது நிலவனோட வாழ்க்கை. இதுல முடிவெடுக்க அவளுக்கு எந்த உரிமையும் இல்ல,” என்று ஒரு தந்தையாக, தன் மகனின் காதலுக்கும் வாழ்க்கைக்கும் அரணாக மிகக் கறாராகச் சொல்லிவிட்டார்.
அதே நேரம், மாடியில் உள்ள தன் அறைக்குள் நியதியை அழைத்துச் சென்றான் நிலவன்.
அறைக்குள் நுழைந்ததும், அவளது கண்கள் நேராக அந்த மொட்டை மாடியை நோக்கியே அலைபாய்ந்தன. ஜன்னல் கதவுப் பக்கம் சென்று நின்றாள் அவள்.
இதே வீட்டில், இதே மொட்டை மாடியில் அவனுக்குத் தெரியாமல் அவனையே ரசித்தது, அவன் அருகே படுத்துக்கொண்டு முத்துக்குமாரின் கவிதைகளைப் பேசியது என அத்தனை அழகான காதல் தருணங்களும் அவளுக்குள் அலையலையாய் வந்து மோதின.
அந்த நினைவுகளின் ஈரம் அவளை அறியாமல் அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரைய, பின்னால் நிலவன் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“நான் இனிமே இங்கதான் இருக்கப் போறேன் நிலவன். என்னோட படிப்பு இன்னும் முடியல. ஃபைனல்ஸ் இருக்கு. இங்க இருந்தே அதைப் படிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன். அப்புறம்…”
அவளது பேச்சு பாதியிலேயே நின்றது. காரணம், நிலவன் அவளுக்கு மிக அருகில் வந்து நின்றிருந்தான்.
“அப்புறம்?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்து வினவினான்.
அவனது நெருக்கம் அவளுக்குள் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சினாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “அப்புறம்… எனக்கு இங்க ஏதாவது வேலை வேணும்,” என்றாள்.
நிலவனுக்குச் சுறுசுறுவெனக் கோபம் ஏறியது. ‘வந்ததும் வராததுமா வேலையா?’ என்று தோன்றினாலும், இத்தனை நாள் அவள் கஷ்டப்பட்டுப் படித்த படிப்பு வீணாகக் கூடாது என்ற எண்ணமும் அவனுக்குள் இருந்தது.
“ம்ம்! பாக்குறேன்,” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவன் விலகிப் போக முற்பட்டான்.
சட்டென அவசரமானவளாய், அவனது சட்டைக் காலரை இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துத் தன்னை நோக்கி முழுவதுமாக இழுத்தாள் நியதி. அவன் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அவனது உதடுகளில் தன்னுடைய உதடுகளை அழுத்தமாகப் பதித்தாள்.

அந்தத் திடீர் தீண்டலில் நிலவன் அப்படியே சிலையென உறைந்து நிற்க, சில நொடிகள் கழித்து அவனை விடுவித்தாள் நியதி.
“இது நான் செஞ்ச எல்லா தப்புக்கும், உங்களை நான் படுத்துன கஷ்டத்துக்கும். என்னை மன்னிச்சிடுங்கனு கேக்குறது ரொம்ப ட்ராமடிக்கா இருக்கு நிலன். அதுவும் உங்க கிட்ட. முடிஞ்சா மன்னிச்சிடுங்க. முடியலனா என்ன தண்டனையா இருந்தாலும் உங்க கூடவே இருந்து அனுபவிக்க நான் தயாரா இருக்கேன். ஐ ப்ராமிஸ்”
உணர்ச்சி மேலிட பேசியவளது கண்களில் இப்போது எந்தத் தயக்கமும் இல்லை; தீர்க்கமான காதலும் பிடிவாதமும் மட்டுமே!
“போன தடவை, நான் எனக்காக எல்லார் கூடவும் சண்டை போட்டேன். ஆனா இந்தத் தடவை, உங்க கூட வாழுறதுக்காக யார் கூட வேணும்னாலும் சண்டை போட நான் ரெடியா இருக்கேன். யாருக்காகவும் சப்போர்ட் பண்ணி நீங்க என்கிட்ட இருந்து விலகிப் போகமாட்டீங்கனு நான் நம்புறேன்,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
பின் அவனது பிடியிலிருந்து விலகி, தன் பேக்கில் இருந்த ஒரு டவலை எடுத்துக்கொண்டு, “நான் குளிக்கப் போறேன். ட்ரெயின்ல வந்தது ரொம்பக் கசகசனு இருக்கு,” என்று சொல்லிவிட்டு மிக இயல்பாகக் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.
நடந்தது எதுவும் நிஜமா, இல்லை தன் மனதின் அதீத கற்பனையா என்று புரியாமல், நியதியின் அதிரடியான வருகையையும், அந்த முத்தத்தின் வெப்பத்தையும், அவள் வீசிவிட்டுப் போன சவாலையும் எப்படி எடுத்துக்கொள்வது என்று குழம்பித் தவித்தபடி, அந்த அறையின் நடுவே சிலையாய் நின்றிருந்தான் நிலவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


