
தூக்கமின்மையால் எரிந்த கண்களை தண்ணீரை அடித்துக் கழுவினாள் அவள். ஏனோ இந்த நாள் வருகிறது என்றால் உறக்கம் அவளிடமிருந்து விலகிவிடுகிம். கடந்த மூன்றாண்டுகளாக இது வாடிக்கை தான்.
ஏனோ மூச்சு அடைப்பது போன்ற உணர்வு. மூளையின் சாம்பல்வண்ண செல்கள் வேலைநிறுத்தம் செய்து விட்டதோ? அவளுக்கு மட்டும் தான் அப்படி தோணுகிறதா?
இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக அவளது அறைக்கு வெளியே விசும்பல் சத்தம் கேட்டது. கூடவே “அழாத கமலா... நம்ம அழுதா நீலுவும் உடைஞ்சிடுவா” என்ற ஆண் குரல் ஒன்று சோர்வாய் ஒலித்தது.
பாறாங்கற்களைக் கட்டிவைத்தது போல கனத்தது கால்கள். இதயத்தின் பாரம் தான் கால்களில் இறங்கிவிட்டது போல என்று விரக்தியுடன் யோசித்தபடி அறைக்கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள் அவள், நீலிமா.
அவளைக் கண்டதும் அங்கே இருந்த இருவரில் கமலா என்றவர் கண்களை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார்.
“எழுந்துட்டியாமா? காபி குடிக்கிறியா?” அவளுக்காக மலர்ந்த முகமும் சிரித்த இதழும் நீலிமாவை இன்னும் கலங்க வைத்தது.
“இல்ல அத்தை... எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு... அதான் இங்க வந்தேன்” பரிதாபமாக உரைத்தவளின் விழிகள் அவர்களுக்கு எதிர்பக்க சுவரை ஏறிட்டது.
அங்கே வசீகரப்புன்னகையுடன் புகைப்படச்சட்டத்தில் அடங்கியிருந்தான் திவாகர், அவளது கணவன். அவளது பார்வை சென்ற திக்கில் மற்ற இருவரின் பார்வையும் செல்ல மூவருமே வாய் விட்டுச் சொல்லாது மனதிற்குள்ளேயே அழுது அரற்றிக்கொண்டனர். ஏனெனில் அன்று அவன் அவர்களை விட்டுப் பிரிந்த நாள்!
அன்றோடு அவன் மறைந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. இதே ஹாலில் தான் தோளில் பேக்குடன் “இந்தத் தடவை நாங்க போற ட்ரிப் வேற லெவல்ல இருக்கும் நீலு... நீ கன்சீவா இல்லனா உன்னையும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்” என்றவனும்
“அஹான்! எனக்கு இந்த ட்ரெக்கிங்லாம் சுட்டுப் போட்டாலும் வராது சாமி... நீங்க வழக்கம் போல என்ஜாய் பண்ணீட்டு வாங்க... நானும் உங்க பேபியும் உங்களுக்காக வெயிட் பண்ணுறோம்” என்று அவனை கேலி பேசி வழியனுப்பி வைத்த அவளும் நீலிமாவின் கண்முன்னே திரைப்பட பாத்திரங்கள் போல நடமாடினர்.
திடீரென யாரோ கால்களைக் கட்டிக்கொள்ளவும் திடுக்கிட்டவள் குனிந்து நோக்க “மம்மி” என்ற சிணுங்கலுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் அவர்களது மகன் கரண்.
அவனைத் தூக்கிக் கொண்டவள் “இப்போ தான் எழுந்தியா செல்லம்?” என்று கேட்க ஆமென தலையாட்டியவன்
“நீ இல்லயா, பயந்துத்தேன் மம்மி” என்று மழலையில் மிழற்றினான் அவன்.
“மம்மி எங்கயும் போகல... இன்னைக்கு சண்டே தானே... நம்ம குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு விளையாடுவோம்... சரியா?” என்று கேட்க சரியென்று தலையாட்டினான் கரண்.
அவனைக் குளிப்பாட்டி உடைமாற்றி கமலாவிடம் ஒப்படைத்துவிட்டு மாமனார் பரசுராமனிடம் வந்தாள் நீலிமா. சர்க்கரை நோயாளியான அவர் இன்னும் மாத்திரை போடவில்லை.
அதட்டி உருட்டி அவரை மாத்திரையை விழுங்க வைத்தவள் “நம்ம அழுறதால திவா திரும்பி வந்துடப்போறதில்ல மாமா... எனக்கும் கரணுக்கும் உங்களையும் அத்தையையும் விட்டா யார் இருக்கா? ப்ளீஸ் உங்க ஹெல்த் விசயத்துல அசட்டையா இருக்காதீங்க” என்றாள் வலியுடன்.
அவளது நினைவுகள் சிறகடித்துப் பறந்து சில ஆண்டுகளுக்கு முன்னே காலப்பயணத்தை நடத்தியது.
தாய் தந்தையற்று தொண்டு நிறுவனம் நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள் படித்து மென்பொருள் நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்த தினத்தில் தான் திவாகரைச் சந்தித்தாள். அவளது டீம் மேட் என்ற வகையில் எவ்வித கல்மிசமும் இல்லாமல் பழகியவன் அவளுக்கு நண்பனானான். பின்னர் அவர்கள் காதலிக்கவும் செய்ய பெற்றோரின் சம்மதத்துடன் அவளைக் கரம் பிடித்தான் திவாகர்.
அவர்களின் இனிய இல்லறத்தின் அடையாளமாக கரண் அவள் வயிற்றில் உதித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் திவாகர் ஒரு ட்ரெக்கிங் கிளப் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாகக் கூறினான்.
இம்மாதிரி குறிப்பிட்ட கால இடைவெளியில் ட்ரெக்கிங் செல்வது அந்தக் கிளப் மெம்பர்களுக்கு வழக்கம் தான். வழக்கம் போல எண்ணி அவனது பெற்றோரும் மனைவியும் திவாகரை வழியனுப்பி வைத்தனர்.
ஆனால் ஒரு நாள் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்திலும் வந்த செய்தி நீலிமாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது.
“தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர் அங்கே ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கித் தவிப்பு! உயிரிழப்பு பதினைந்தாக இருக்கலாம், வனத்துறை வட்டாரம் தகவல்”
அதை கேட்டதும் இடிந்து போய் அமர்ந்துவிட்டனர் நீலிமாவும் திவாகரனுடைய பெற்றோரும். யாருக்கு என்னவாயிற்றோ என்று தெரியாது பதறியவர்கள் ட்ரெக்கிங் கிளப்பிற்கு அழைத்து விசாரிக்க அதன் ஊழியர்களோ தேனி அரசு மருத்துவமனையில் தான் சடலங்கள் உள்ளது என்று மட்டும் தெரிவித்தனர்.
கமலாவும் பரசுராமனும் எவ்வளவோ தடுத்தும் அவர்களுடன் தானும் தேனிக்குச் சென்றவளுக்குத் திவாகரன் கிடைத்தான், கருகிய நிலையில்.
அன்று அவள் அழுத அழுகையைப் பார்த்து சுற்றி இருந்தவர்களின் இதயமே உறைந்து போனது எனலாம்.
மலையேற்றத்திற்கு அழைத்து வந்த க்ளப்பின் மீதும், வனத்துறை மீதும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது.
“நாங்க பெர்மிசனோட தான் ட்ரெக்கிங் போனோம்... எங்க கிட்ட ஃபீஸ் வாங்கிட்டு தான் ஆபிசர்ஸ் உள்ள அலோ பண்ணுனாங்க” என்றார் மலையேற்றக் குழுவினருடன் வந்திருந்த பொறுப்பாளர் ஒருவர்.
வனத்துறையினரோ “நாங்க சொன்ன ரூட்ல போகாம கொழுக்குமலை எஸ்டேட்டுக்கு ட்ரெக்கிங் க்ரூப் போயிருக்காங்க... அந்த வழில ட்ரெக்கிங் போறதுக்கு பெர்மிசனே கிடையாது... இது முழுக்க முழுக்க ட்ரெக்கிங் க்ளப்போட தப்பு” என்றனர்.
இன்னொரு பக்கமோ “இதுக்கு காரணம் அங்க இருந்த விவசாயிங்க தான்... அவங்க தான் தீ கொளுத்தியிருக்காங்க... அந்த தீ தான் மளமளனு பரவிடுச்சு” என்றனர் க்ளப் நிர்வாகத்தினர்.
குரங்கணி மலையடிவார கிராம மக்களோ “அவங்க இறங்குன இடம் மஞ்சப்புல் நிறைஞ்ச இடம்... அந்தப் புல்லு வெயில் காலத்துல காய்ஞ்சு போய் இருக்குங்க... அது ஒன்னோட ஒன்னு ஒரசுனா கூட தீப்பத்திக்கும்... எங்களுக்கும் புள்ளக்குட்டிங்க இருக்கு சாமி... நாங்க இப்பிடி ஒரு காரியத்த பண்ணுவோமா?” என்று பரிதாபமாக பதிலளித்தனர்.
இத்தனைக்கும் அந்த மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து தான் சிலரைக் காப்பாற்றியும் இருந்தனர்.
காட்டுத்தீயில் சிக்கி தப்பியவர்களோ “இந்த க்ளப்ல லாஸ்ட் டைம் ட்ரக்கிங் போனப்போவே ஒரு இடத்துல வைல்ட் ஃபயரை பாத்தோம்... அது ஒன்னும் அவ்ளோ பெரிய விசயமில்லனு நினைச்சிட்டேன்... இப்போ தான் அதோட தீவிரம் புரியுது” என்றனர்.
கொழுக்குமலை எஸ்டேட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதிரி ட்ரக்கிங் க்ளப்களுடன் இணைந்து பணத்திற்காக ஆபத்தான இடங்கள் பற்றி அக்குழுவினருக்குத் தெரியாமல் மறைக்கின்றனர் என்பதே அது.
அதே நேரம் வனத்துறையினரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்திய வனவியல் ஆய்வு மையம் அனுப்பிய தகவல்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தேனி மாவட்டம் போடிக்கு அருகில் வெப்ப ஒழுங்கின்மை நிலவுவதாக இந்திய வனவியல் மையம் அனுப்பிய தகவல்களை வனத்துறையினர் மெத்தனதுடன் கண்டுகொள்ளாததால் தான் உயிரிழப்பு அதிகரித்துவிட்டது என்றும் கூறப்பட்டது.
எது எப்படியோ யாரோ ஒரு சிலரின் அலட்சியமும் மெத்தனமும் பணத்தாசையும் அன்றைய தினம் பதினைந்து பேரை காவு வாங்கி இறந்த பதினைந்து பேரின் குடும்பங்கள் அன்று அல்லாடி அழக் கூட திராணியற்று போனது உண்மை.
அதில் சிலர் புதுமணத் தம்பதியினர்! ஒரு பெண்மணி தனது மகள் மற்றவர்களைக் காப்பாற்றிவிட்டு தீயில் சிக்கி இறந்துவிட்டதாகச் சொல்லி அழுதது இப்போதும் நீலிமாவுக்கு நினைவிருக்கிறது.
அந்நிகழ்வுக்குப் பின்னர் சில நாட்கள் பரபரப்பாக இச்செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. முதலமைச்சரே நேரடியாக அங்கே வந்தார் என்றனர். அலட்சியத்துடன் இருந்தவர்கள் வனத்துறையாக இருந்தாலும் சரி, ட்ரெக்கிங் கிளப்பாக இருந்தாலும் சரி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் தங்களவர்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்கொடிய நிகழ்வு கொடுத்த வலியுடன் காத்திருந்தனர்.
ஆனால் வழக்கம் போல குற்றம் சாட்டப்பட்ட ட்ரெக்கிங் க்ளப், வனத்துறை என்று யாருமே சட்டத்தின் முன்னே நிறுத்தப்படவில்லை. காலம் கடக்க கடக்க விபத்தின் தீவிரம் நீர்த்துப் போய்விட இறந்த நபர்களின் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் அதை மறந்தே விட்டனர்.
செய்தி தொலைகாட்சிகளுக்கு அடுத்தடுத்த பரபரப்பான செய்திகள் கிடைக்க குரங்கணி காட்டுத்தீ விபத்து மெல்ல மெல்ல அவர்களின் கவனத்திலிருந்து கலைந்தது.
இதோ மூன்றாண்டுகள் கழித்தும் நீலிமா அந்த விபத்து உண்டாக்கிய ரணத்துடன் வாழ்கிறாள்! பரசுராமனும் கமலாவும் பேரனையும் மருமகளையும் பார்த்து மகன் நினைவை ஆற்றிக்கொள்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு நீதி தான் கிடைக்கவில்லை! நீலிமா மகனுக்குச் சாதம் ஊட்டும் மாமியாரையும், நெஞ்சை நீவியபடி சாய்வுநாற்காலியில் கண் மூடி இருக்கும் மாமனாரையும் பார்த்துவிட்டுக் கண் கலங்கினாள்.
அவள் கண்கள் திவாகரனின் புகைப்படத்தை ஏறிட்டது. நீயும் இல்லை, நீதியும் இல்லை என்று முணுமுணுத்தது அவளது உதடுகள்!
***********
ஹலோ மக்களே!
2018ல நடந்த குரங்கணி காட்டுத்தீ விபத்து ரொம்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு.. அதை அடிப்படையா வச்சு பிரதிலிபி தினசரி தலைப்புக்கு இந்தச் சிறுகதைய ஜூன் 2021ல எழுதிருந்தேன்... இதனையடுத்து தமிழக அரசு அதுல்யா மிஸ்ரா தலைமையில ஒரு நபர் விசாரணைக்குழுவை அமைச்சதாகவும் அந்தக் குழு 3 மாத விசாரணை முடிவுல காட்டுத்தீக்கானக் காரணத்தைக் கண்டறியலனும் இண்டர்நெட்ல படிச்சேன்... சம்பவத்துக்கு காரணமானவங்களைச் சுட்டிக்காட்டத் தவறி, இனிமேல் இந்த மாதிரி சுற்றுலாக்களை எப்படி நடத்தணும்னு ஆலோசனையை மட்டுமே வழங்கி அந்த அறிக்கை பரிந்துரை செஞ்சதால தேனீய சேர்ந்த ராமகிருஷ்ணன்ங்கிற ஆர்.டி.ஐ ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமா கேள்வி கேட்டதும் தெரிய வந்துச்சு. அதுக்கு அப்புறம் இந்தக் கேஸ் பத்தி நெட்ல எந்தத் தகவலும் இல்ல. எது எப்படியோ நம்ம நாட்டுல நீதி கிடைக்குறது மட்டும் குதிரை கொம்புனு புரிஞ்சுது.
நன்றி
நித்யா மாரியப்பன்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
பாதிக்கப்பட்டவரகளுக்குத்தான் வலியும், வேதனையும்
Share your Reaction
@kothai-suresh ama aunty 😑 yaro silaroda kavanakuraivu yethana uyirgala kaavu vangiduchu
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
அட ராமா..! கடைசியில நீதியும் கிடைக்கலை, நிஜாயத்தும் கிடைக்கலையா....? அதானே, சட்டம் ஒரு இருட்டறைன்னு சும்மாவா சொன்னாங்க..? ட்ரக்கிங் போக சம்மதிச்சவனும் இல்லை, சம்பந்தப்பட்டவனும் இல்லை..ஆனால், தீக்கிரையானவங்களுக்கு சம்பந்தப்பட்டவங்க மட்டும் பாதிக்கப்பட்டு, இன்னைக்கும் உயிர்வதை பட்டுட்டிருக்காங்க போல. என்ன கொடுமையடா ?
😢😢😢
CRVS (or) CRVS 2797
Share your Reaction
😪😪😪😪
Share your Reaction
@crvs2797 இது நிஜமா நடந்த சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதுன கதை சிஸ்... எத்தனை பேர் இது போல கஷ்டப்படுறாங்களோ
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
@ananthi 😑 😑 😑
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



