
“மோப்பக் குழையும் அனிச்சம்னா என்ன அர்த்தம் தாத்தா?”
பள்ளி வாகனம் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருக்க தனசேகரனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவைத்தான் பத்து வயது பிரவீன்.
“அனிச்சம்னு ஒரு பூ இருக்குடா கண்ணா... அது முகர்ந்து பாத்தாலே வாடிப் போயிடும்... அது தான் அர்த்தம்... இது திருக்குறள்ல உள்ள அடியாச்சே”
“நேத்து தமிழ் மிஸ் சொன்னாங்க தாத்தா... இந்த லைன் எனக்குப் புரியல... அவங்க கிட்ட கேக்க பயமா இருந்துச்சா அதான் உங்க கிட்ட கேட்டேன்”
அவனது தண்ணீர் பாட்டில், உணவு பாத்திரத்தை லஞ்ச் பேகில் எடுத்து வைத்த தனசேகரன் “அகிலா” என்று குரல் கொடுக்க
“இருங்க வர்றேன்” என்றபடி சோர்வுடன் வந்து நின்றார் ஒரு முதியப்பெண்மணி,
அவரது சோர்வைக் கண்ட தனசேகரன் என்னவென வினவ “புளிப்பு நின்னு அங்கங்க வலிக்குதுங்க... நேத்து உள்ளங்கால்ல குத்தலெடுத்துச்சு... இன்னைக்குக் கழுதுக்கு ரெண்டு பக்கமும் சுண்டி இழுக்குது” என்றபடி தனது தோள்பட்டையைத் தடவி விட்டுக் கொண்டார் அகிலா.
“இப்பிடியே உக்காந்து தைலத்தை தடவு,.. நான் பிரவீனை ஸ்கூல் வேன்ல ஏத்திவிட்டுட்டு வர்றேன்” என்று கூறினார் தனசேகரன்.
“பேம்! பேம்!” என்று பள்ளிவாகனத்தின் ஹாரன் அலற “வேன் வந்துடுச்சு... பிரவீன் மம்மிக்கு டாட்டா சொல்லு... போவோம்” என்று தனசேகரன் கூற
“டாட்டா பாட்டி, பை மம்மி” என்று கையாட்டிவிட்டு தாத்தாவுடன் வேகமாக ஓடினான் பிரவீன்.
அவன் செல்வதைப் பார்த்தபடி தைலத்தை தடவிய அகிலா சமையலறையிலிருந்து வியர்க்க விறுவிறுக்க வந்து நின்ற மருமகளைப் பார்த்துவிட்டார்.
“அம்மாடி ஜெயந்தி! புளிப்பு நின்னு அத்தைக்கு கழுத்து வலிக்குதும்மா... துளியூண்டு இஞ்சிய மிக்சில அரைச்சு சாறு எடுத்து தர்றீயா?” என்று வேண்டுகோள் வைக்க அவரது மருமகளும் பிரவீனும் அன்னையுமான வைஜெயந்தியின் விழிகளோ சுவர் கடிகாரத்தில் பட்டு மீண்டது.
எட்டு நாற்பத்தைந்து! இன்னும் கால் மணி நேரத்தில் குளித்து சாப்பிட்டுத் தயாராக வேண்டும். மாமியார் சொன்னபடி இஞ்சிச்சாறு எடுக்க அமர்ந்தால் கட்டாயம் இன்றும் வங்கிக்குத் தாமதமாகத் தான் செல்வாள்! இப்போது ஆண்டு இறுதி கணக்கு முடிவு நேரம் வேறு!
மேலாளர் எதுவும் சொல்லிவிட்டால் சங்கடமாகி விடும். என்ற பதற்றம்! இவ்வளவு நேரம் காபியில் ஆரம்பித்து காலை மற்றும் மதியத்திற்கு சமைத்த போது சொல்லியிருந்தால் செய்திருப்பேனே என்ற ஆதங்கம் வார்த்தையாய் வந்தது.
“என்னத்தை நீங்க? டைம் பாருங்க! எட்டே முக்கால், இப்போ கிளம்புனாலே நான் டிராபிக்ல சிக்கி பேங்குக்கு போக ஒன்பதரை ஆகிடும்... பத்து மணிக்கு முன்னாடி நான் அங்க இருக்கணும் அத்தை... எதுவா இருந்தாலும் காலையிலயே சொல்லிருக்கலாம்ல... போற நேரத்துல ஆளுக்கு ஒரு வேலை சொன்னா நான் எப்போ தான் வேலைக்குக் கிளம்புறது?”
தனசேகரனின் காதில் விழுந்துவிட்டது வைஜெயந்தியின் வார்த்தைகள்! மிகவும் பொறுமையான பெண் தான்! ஆனால் வங்கிப்பணியில் கணக்கு முடிவு மாதத்தில் அவள் கொஞ்சம் பதற்றமாகத் தான் காணப்படுவாள்! பணிச்சுமை வேறு! அதனால் தான் இந்த மறுப்பு!
அவருக்குப் புரிந்தது! ஆனால் அவரது மனைவிக்குப் புரியவேண்டுமே. அந்தோ பரிதாபம் அந்தப் பெண்மணி புளிப்பு படுத்திய பாட்டில் மருமகளிடம் கத்த துவங்கிவிட்டார்.
“இப்போ என்ன சொல்ல வர்ற நீ? நான் வேலை வெட்டி இல்லாம உனக்கு வீண் வேலை ஏவுறேனா? ஒரு துளி இஞ்சிச்சாறுக்கு இந்தப் பேச்சா? எனக்கு வலிக்கிற வலி எனக்குத் தான் தெரியும்”
“இல்லத்தை” என்று வைஜெயந்தி ஆரம்பிக்கும் போதே தனசேகரன் உள்ளே வந்துவிட்டார்.
“என்ன அகிலா இது? ஏன் அவளை கோச்சுக்கிற?”
“சும்மா இருங்க! ஃப்ரெண்ட் மகள்னு சீர் சினத்தி எதுவும் வேண்டாம்னு சொல்லி நம்ம மகனுக்குக் கட்டுனோம்ல, அதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... இவ பொறுப்புல நம்மளை விட்டுட்டு அவன் அக்கடானு வெளிநாட்டுல வேலை செய்ய போயிட்டான்... இங்க அவனை பெத்தவளுக்கு முடியாம போனா மருந்து குடுக்க ஆள் இல்ல”
வைஜெயந்தியின் முகம் கூம்பிப்போனது. ஆனால் இது மாமியாரின் குணம் இல்லை என்பதால் கையை பிசைந்தபடி நிற்க தனசேகரன் மருமகளுக்கு உதவ முன்வந்தார்.
“ஜெயந்திமா நீ இஞ்சிய எடுத்துக் குடுத்துடு... நான் தோல் சீவி மிக்சில போட்டு அடிச்சிடுறேன்”
“நீங்க துண்டு மட்டும் போட்டு வைங்க மாமா... நான் குளிச்சிட்டு வந்து சாறு எடுத்துடுறேன்” என்று கூறிவிட்டு குளிர்பதனபெட்டியிலிருந்த இஞ்சியை எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றாள் வைஜெயந்தி.
தனசேகரன் துண்டு போட்டு வைத்துவிட அவள் குளித்து உடைமாற்றி விட்டு வந்தவள் அதை மிக்சியில் அடித்து சாறு எடுத்து அகிலாவிடம் நீட்டினாள்.
அவர் அவளுடைய முகம் பார்க்காது வாங்கியவர் கண்ணை இறுக மூடிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தார். அவர் குடித்து முடித்ததும் “நான் கிளம்புறேன் மாமா... போயிட்டு வர்றேன் அத்தை” என்று தயாராய் இருந்த மதிய உணவு பாத்திரத்தை பேக்கில் வைத்துக்கொண்டு கிளம்பினாள் வைஜெயந்தி.
“ஜெயந்திம்மா நீ இன்னும் சாப்பிடலயே?”
“பரவால்ல மாமா.. வயிறு சரியில்ல”
முயன்று முறுவலித்துவிட்டு சென்றவளுக்கு உண்மையில் மனம் தான் சரியில்லை என்பதை தனசேகரன் புரிந்துகொண்டார். அங்கே அமர்ந்திருந்த மனைவியிடம்
“ஏன் அகிலா இன்னைக்கு இப்பிடி கத்துன? என்னைக்காச்சும் ஜெயந்தி நம்மளை மதிப்பு குறைவா நடத்திருக்காளா? வேலைக்கு போற அவசரத்துல ரெண்டு வார்த்தை பேசிட்டா... அதுக்குனு சீர் சினத்திய இழுத்து வச்சு பேசுவியா? நல்லா ஞாபகம் வச்சுக்கோ, அவ உழைக்கிற காசை இது வரைக்கும் இந்தக் குடும்பத்துக்குத் தானே செலவளிச்சிருக்கா... இத்தனை வருச சம்பளத்தை கணக்குப் போடு... நீ சொன்ன சீர் சினத்திய விட அதிகமாவே நம்ம மருமகள் கிட்ட நம்ம வாங்கிட்டோம்... அவளுக்கு என்ன தலையெழுத்தா நம்ம கூட கிடந்து அல்லாடணும்னு? அம்மா இல்லாம வளந்த பொண்ணு, அப்பாவையும் இழந்துட்டா... நம்மளை அப்பா அம்மா ஸ்தானத்துல வச்சு மதிப்பா நடத்துறா... அந்த உரிமைல தான் காலைல பேசிட்டா... அந்த ஒரு வார்த்தைல இதுக்கு முன்னாடி அவ நம்ம கிட்ட காட்டுன அக்கறை எல்லாம் காணாம போயிடுச்சா அகிலா? பாவம் நம்ம மருமகள்” என்று தண்மையாய் பேச
“எனக்கு இருந்த வலில கத்திட்டேன்ங்க... வயசாயிட்டுல்ல, அதான் வாய் இஷ்டத்துக்குப் பேசுது... நீங்க சொல்லலனா எனக்கு ஜெயந்திய பத்தி தெரியாதா? ஏதோ கோவத்துல கத்திட்டேன்” என்றார் அகிலா வருத்தத்துடன்.
“நீ சத்தம் போட்டதால தான் ஜெயந்தி இன்னைக்குச் சாப்பிடாம போயிருக்கா... அந்தப் பொண்ணு பாவம்... இனிமே கோவத்துல கூட இப்பிடிலாம் பேசாத” என்றார் தனசேகரன்.
அவரது நீண்ட அறிவுரையைக் கேட்ட அகிலாவின் மனம் குற்றவுணர்ச்சியில் சிக்கிக்கொண்டது. மருமகளை எண்ணி அன்றைய நாள் முழுவதும் அவருக்குக் கவலை! ஐயோ இந்தப் பெண் நான் திட்டியதில் மதியவுணவையும் தியாகம் செய்துவிட்டால் எப்படி வேலை செய்வாள் என்ற பதபதைப்பு!
அது மாலை வரை நீண்டது. மாலையில் வீடு திரும்பிய மருமகளிடம் மதியவுணவு சாப்பிட்டாயா என்று வேகமாக அவர் வினவ “சாப்பிட்டேன் அத்த.., கேக்குறீங்க?” என்று புரியாமல் கேட்டாள் வைஜெயந்தி.
அகிலா வருத்தத்துடன் “நான் சத்தம் போட்டதால நீ காலைல சாப்பிடல... மதியமும் சாப்பிடாம இருந்துட்டியோனு நினைச்சிட்டேன் ஜெயந்தி” என்று கூற வைஜெயந்தி அமைதியாகப் புன்னகைத்தாள்.
“சரி சிரிச்சிட்டே நிக்காத... நான் உனக்கு கீரை வடையும் காபியும் கொண்டு வர்றேன்... முகம் கழுவிட்டு வா” என்று கட்டளையிட
“அத்தை உங்களுக்கு வலி?” என்று இழுத்தாள் அவரது மருமகள்.
“நீ குடுத்த இஞ்சிச்சாறுல வலி போன இடம் தெரியல... இனிமே புளிப்பு ஐட்டம் சாப்பிடுறத குறைச்சிக்கணும்னு இருக்கேன்... சரி மசமசனு நிக்காம முகம் கழுவிட்டு வா... என்னங்க நீங்களும் பிரவீனும் வாங்க... எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு?”
படபடத்தபடி சமையலறைக்குள் செல்லும் மனைவியையும் அவரது பலாப்பழம் போன்ற அன்பை புரிந்துகொண்டவளாய் நகரும் மருமகளையும் பார்த்த தனசேகரனுக்கு மனம் நிறைந்தது.
இயல்பிலேயே அன்பானவளான மனைவியையும் பொறுமைசாலியான மருமகளையும் சிறிய மனஸ்தாபத்திலிருந்து வெளியே வரவைத்து பழையபடி இயல்பாய் உரையாட வைத்துவிட்ட சந்தோசம் அவருக்குள்!
காலையில் அகிலாவின் வார்த்தைகள் மருமகளை அனிச்சமாய் கூம்ப வைத்ததையும் இப்போது அவரது வார்த்தைகளே அவளை சூரியகாந்தியாய் முகம் மலர வைத்ததையும் பார்த்துவிட்டு பேரனுடன் மனைவி மருமகளுக்காக பிரத்தியேகமாக சமைத்த சிற்றுண்டியைச் சாப்பிட உணவுமேஜையை நோக்கி நடந்தார் தனசேகரன்.
**********
ஹலோ மக்களே 😍
பிரதிலிபி டெய்லி டாபிக்குக்காக3, ஜூன் 2021ல எழுதுன சிறுகதை இது.அடுத்த சிறுகதையோட அடுத்த சன்டே வர்றேன்
நன்றி🙏
நித்யா மாரியப்பன்🐝
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
'மோப்பக் குழையும் அனிச்சம்' என்பதற்கு பேரனுக்கு புரியற மாதிரி விளக்கத்தை கொடுத்துட்டு, மனைவிக்கு அதை விட ரொம்ப அருமையா அவளோட மனசு நோக விடாமல் எடுத்துச் சொன்ன தனசேகரன் ரொம்ப க்ரேட், அதை விட சிறப்பு அதை அத்தனை அழகா உடனே புரிஞ்சிக்கிட்டு செயல்படுத்திய அகிலா இன்னும் கிரேட்.
அருமையான கதை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமை, 👌👌👌👌
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



