“உங்களுக்கு வேற ஃபோட்டோகிராபரே கிடைக்கலையா சித்தப்பா?”
மகேந்திரனிடம் இறுகியக் குரலில் பேசிக்கொண்டிருந்தவளின் பார்வை என்னவோ பூபாலனைத்தான் தழுவியிருந்தது. பார்த்தாள் என்று சொல்வது அநியாயம். தனது பெரிய கருவிழிகளை அவன்மீது நிலை குத்தி முறைத்தாள் என்று சொல்வதே பொருத்தம்.
புகைப்படக்கருவியைக் கையில் சுமந்தபடி நின்றவனின் இதழ்க்கடையில் மெல்லிய புன்னகை உதயமானது. பார்வையில் விசமம் கூட அவன் கண் சிமிட்டி முத்தமிடுவது போல உதடு குவித்து சைகை காட்டவும் அவளது விழிகள் பதற்றத்தில் இமை கொட்டின.
சுற்றியிருப்பவர்கள் கவனித்திருப்பார்களோ என்று அவசரமாகக் கண்களை அலைபாயவிட்டவள் யாரும் கவனிக்கவில்லையென உறுதியானதும் பூபாலனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தாள்.
அவர்களிடையே நடந்த இந்தப் பார்வை பரிமாற்ற விளையாட்டை யாரும் கவனிக்கவில்லை, மகேந்திரன் உட்பட.
“நம்ம ஊருல இருக்குற போட்டோகிராபர் யாருக்கும் சரியா போட்டோ பிடிக்க வரலனு உன் தங்கச்சிதான் பாலு தம்பிய புக் பண்ணுனா வானுமா” என்றார் அவர்.
வான்மதி மானசீகமாகப் பூமிகாவைக் கடிந்துகொண்டாள்.
‘பொன்னேரியில் போட்டோகிராபர் சரியில்லை என்றால் திருநெல்வேலி அல்லது பாளையங்கோட்டையில் யாரையாவது புக் செய்திருக்கலாமே! தேடி தேடி இவனையேதான் புக் செய்ய வேண்டுமா? கஷ்டகாலமே!’
தலையிலடிக்காதக் குறையாக அவள் யோசிக்கையிலேயே “பூமி தயாராகிட்டாளானு பாத்துச் சொல்லுறிங்களா மாமா?” என்ற பூபாலனின் குரல் காதில் விழுந்து வான்மதியின் யோசனையைக் கலைத்தது.
உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. ‘எந்த உரிமையில் என் சித்தப்பாவை இவன் மாமா என அழைக்கிறான்?’
மனதுக்குள் அவனைக் கரித்துக்கொட்ட, மகேந்திரன் பூமிகாவை அழைக்கப் போய்விட்டார்.
புகைச்சலை அடக்கச் சிரமப்பட்டுக்கொண்டு நின்றவளை நெருங்கிய பூபாலனின் பார்வையில் அவளைச் சீண்டும் பாவனை உறைந்திருந்தது.
“கல்யாண மண்டபத்துல சென்ட்ரல் ஏ.சினு கேள்விப்பட்டேன். ஆனா இப்பிடி கொதிக்குதே”
கையைக் காற்றில் அலைந்தபடி அவன் சொல்லவும் சீற்றத்தோடு முறைத்தாள் வான்மதி.
சட்டென இதயம் வலிப்பது போன்ற பாவனையைக் கொடுத்தவன் “என்னோட நிலா இப்பிடி தணலா கொதிக்குறது இங்க வலிக்குது” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டவும்
“இந்த மாதிரி என் கிட்ட நக்கல் நையாண்டியா பேசுற வேலை வச்சுக்காதிங்க பாலா” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி எச்சரித்தாள் அவள்.
அவளது விரலைச் சட்டெனத் தட்டிவிட்டவன் “நான் என்ன பேசணும் எப்பிடி பேசணும்ங்கிறதை நீ எனக்குச் சொல்லித் தரவேண்டாம்” என்று சொல்ல
“எதுக்கு வந்திங்களோ அந்த வேலைய மட்டும் பாத்தா நல்லது. வாங்குற காசுக்கு உழைக்கணும்னு நினைங்க. பொண்ணுங்க கூட வெட்டிப்பேச்சு பேசுறதுக்கு உங்களை நாங்க புக் பண்ணல. வேலையில சுத்தம் இல்லனா பத்து பைசா கூட குடுக்கவிடமாட்டேன் நான்” என்று பதிலடி கொடுத்துவிட்டு அவனது பேச்சைச் செவிமடுக்க விரும்பாதவளாக அங்கிருந்து வெளியறியபோதே பூபாலன் தொட்ட ஆட்காட்டிவிரலை நீவிக்கொண்டாள் வான்மதி.
அவனுடைய விசமப்பார்வையும், குறும்பானப் பேச்சும், இதமான ஸ்பரிசமும் இன்னும் அவளை விதிர்விதிக்க வைக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியபடி அவனது பார்வையிலிருந்து மறைந்தவளுக்குப் பூபாலனின் முகம் கறுத்து இறுகியதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
அவள் சென்றதும் தாடை இறுக நின்றவன் “இன்னும் பணத்திமிரு குறையல இவளுக்கு. கூடவே பிறந்த குணத்தை யாரால மாத்த முடியும்?” என்று எரிச்சலோடு முணுமுணுத்துக்கொண்டான்.
**********
ஹலோ மக்களே!
இது வானின் பூபாளம் – சந்தம் பாடும் தென்றல் கதைக்கு அடுத்து இந்தக் கதை வரும் மக்களே! இது ஃபேமிலி நாவல்தான். ஜூலைல இந்தக் கதைய நம்ம சைட்ல எதிர்பாக்கலாம். அதுக்கு முன்னாடி சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க.
ஓகே, ஓகே... வீ ஆர் ஆல்வேஸ் வெயிட்டிங் சிஸ்.
😆 😆 😆
CRVS (or) CRVS 2797